கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 2, 2026
பார்வையிட்டோர்: 4,241 
 
 

ராஜன் எப்போதும் தன் தாயை சாதாரணமாகவே கருதினான். “அம்மாவுக்கு என்ன தெரியும்? படிக்காத பழைய காலத்து ஆள்,” என்று அவமதிப்பான். தன் உத்தியோக உயர்வு, அதிக சம்பளம், எல்லாம் தன் தனிப்பட்ட திறமையால் வந்தது என்று நினைத்தான். தன் தாய், அப்பா இறந்து விட்ட நிலையில் , தனி ஆளாய் உழைத்து, தன்னை படிக்க வைத்ததை அவன் ஒரு பொருட்டாய் நினைக்கவில்லை.

ஒரு நாள், வெளிநாட்டில் நடக்கும் ஒரு பெரிய தொழில்நுட்ப மாநாட்டில் பேசுவதற்கான வாய்ப்பு ராஜனுக்கு கிடைத்தது. அலுவலகத்தில் பல போட்டிகளுக்கு நடுவில் அவனுக்கு இந்த வாய்ப்பு கிடைத்தது.

தனக்கு கிடைத்த வாய்ப்பை எண்ணி மிகவும் மகிழ்ந்து போனான். ஆனால், கடைசி நிமிடத்தில் அவன் அந்த கூட்டத்தில் பேசுவதற்காக, பெரும் முயற்சி செய்து தயாரித்திருந்த தொழில்நுட்ப ஆராய்ச்சி கருத்துக்கள் அடங்கிய கோப்பு காணாமல் போனது.

என்ன செய்வது என தெரியாமல் குழம்பிக் கொண்டிருந்தான்

வீட்டிற்கு வந்த ராஜன் மிகவும் சோகமாய் அமர்ந்திருந்தான். என்னப்பா தலை வலிக்கிறதா ? இந்த காஃபியை குடி என அன்போடு கொண்டு வந்த காபியை வாங்கி, வீசி எறிந்தான்.

அவன் அம்மாவிற்கு ஒன்றுமே புரியவில்லை. “என்ன ராஜா ஏன் இப்படி இருக்கிறாய்? என்ன ஆச்சு.? ஏதாவது சொன்னால் என்னால் உதவ முடியுமா என பார்ப்பேன்.”

“போய் தொலை. உன் மரமண்டைக்கு என்னோட கஷ்டம் எப்படி புரியும். வெளிநாட்டில் நடக்கும் மாநாட்டில் பேசுவதற்கு தயாரித்திருந்த எனது ஆராய்ச்சி கோப்பை காணவில்லை என நான் மண்டையைப் பிய்த்துக் கொண்டிருக்கிறேன்.”

தாய் யோசித்தாள். உடனே மகன் அன்று மறந்து விட்டு சென்ற அலுவலகக் கோப்பை தான் பத்திரமாக எடுத்து வைத்திருந்தது நினைவு வர, “இதுவா தம்பி” என காண்பித்தாள்.

“நான் அன்று, பைலை மறந்துவிட்டு போகிறாயே எனக் கேட்டதற்கு, போய் குப்பையில் போடு என்றாயே. நான் எதற்கும் இருக்கட்டும் என பத்திரமா எடுத்து வைத்தேன்”.

அந்தக் கோப்பைப் பிரித்த ராஜன் அதிர்ந்து போனான். நேற்றில் இருந்து தேடிக் கொண்டிருந்த அதே ஆராய்ச்சி கட்டுரை. அன்றுதான் அவனுக்குப் புரிந்தது. அம்மா படிப்பறிவில்லாதவராக இருக்கலாம், ஆனால் எத்துணை பத்திரமாக, கவனமாக, அதை எடுத்து வைத்துள்ளார். நான் அன்று கோபத்தில் கூறியதைக் கேட்டு, குப்பையில் எறிந்து இருந்தால், இன்று என் நிலை என்னவாயிருக்கும்.

தன் தவற்றை உணர்ந்து, வெட்கி தலை குனிந்து, கண்ணீர் மல்க தன் தாயின் கைகளைப் பற்றி “என்னை மன்னிச்சிடும்மா. நீ படிக்காத மேதையம்மா” எனக்கூறி விம்மி விம்மி அழுதான்.

இரா.கலைச்செல்வி இவர் வீரமங்கை வேலு நாச்சியார் அரசாட்சி செய்த, சிவகங்கை சீமையில் பிறந்து, வளர்ந்து, கல்லூரி படிப்பை சிவகங்கையில் முடித்து, திருமணத்துக்குப் பிறகு சென்னை வந்து, தலைமை செயலக அரசு பணியில் அமர்ந்து, பல அரசுத் துறைகளில் பணிபுரிந்து, தற்போது ஓய்வு பெற்றுள்ள ,உயர் அரசு அதிகாரி. இவரது கணவர் மத்திய அரசு  நிறுவனத்தில் , தலைமை விஞ்ஞானியாக பணியாற்றி, ஓய்வு பெற்றவர். ஒரே மகன் மென்பொருள் நிறுவனத்தில் திட்ட மேலாளராய் பணி புரிகிறார்.…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *