நோன்புக் கஞ்சி





(1967ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

வடிந்த மூக்கைத் தனது அழுக்குப் பாவாடையினால் துடைத்து விட்டுக்கொண்டாள் மறியம். அப் பாவாடை மேலும் அழுக்காகியது.
தொடர்ந்து அடித்த பெருமழை அவளுக்குக் கடுமையான ஜலதோசத்தை ஏற்படுத்தா விட்டாலும் மூக்கை உறிஞ்சும் நிலையிலாவது அவளை ஆக்கித்தான் வைத்திருந்தது.
எண்ணெய்யை மூன்று நாட்களாகக் காணாததால் சிக்குப் பிடித்துப் போயிருந்த தனது தலையை மெலிந்த விரல்களால் பிறாண்டி அதில் ஒரு இன்பத்தையும் கண்டாள்.
எட்டு வயதுதான் அவளுக்கு… அவளது தோற்றத்தில் ஆறு வயது நோயாளியின் சாயல் இருந்தது. அவளது உடலிலோ மெலிந்த கோழிக் குஞ்சின் சாயல் இருந்தது.
துறுத்திய எழும்புகளுக்கு இடையே சிக்குண்ட தோல் கீறியும் சுருங்கியும் பார்க்கவே அசிங்கமாய்…
பிறந்ததும் ‘பளிச்’ சென்று இருந்தாளாம்… இப்போது பொது நிறமும் போய்க் கறுத்து… மேலெல்லாம் வெள்ளை வெள்ளையாக சொறிபோற் படர்ந்து…
சஹருக்கு எழுந்து நோன்பு நோற்றாள். மூன்று வருடமாக அவள் நோன்பு நோற்று வருகிறாள். பொதுவாக நோன்பெல்லாம் பட்டினி நோன்புதான். தலைநோன்பை ஓரளவு சமாளித்தாலும் மற்றய நோன்புகளை ஒரு துண்டுப் பாணுடன்தான் கழித்து விடுவாள் அவள்.
இம்முறை… வறுமை அவர்களைப் பயங்கரமாகப் பிடுங்கித் தின்றது. அத்துடன் அரசாங்கத்துடன் கையாலாகத்னத்தின் விளைவு, அரிசியும் ஒரு கொத்தாய் ஆனது. இதெல்லாம் சேர்ந்து இம்முறை நோன்பு நோற்க இயலுமா என்ற சந்தேகத்தையே ஏற்படுத்தியது, ஆனா எப்படியோ இந்த முறை நோன்பு நோற்கவேண்டும் என்ற ஆவலும் ஈடேறியது.
விறகு வெட்டி விற்பதுதான் அவளது தந்தையின் தொழில், உழைத்து உழைதது உடலும் உருக்குலைந்து விட்டது. ஏதோ,.. கிடைக்கும் சிறு வருமானத்தில்தான் குடும்பம் மெதுவாக ஊர்ந்து சென்றது.
மூத்தவள்தான் மறியம். தொடர்ந்து, ஐந்து.. அந்த வேலை மட்டும் ஒழுங்காக நடைபெற்றது. பிள்ளைகள்… பிள்ளைகளா அவைகள்… முடக்குவாதம் பிடித்தவைபோல்…
வளைந்து, நெளிந்து, உருகி, உருக்குலைந்து…
முன் துருத்திய முட்டிகளுடன் கைகளும் கால்களும் கறுத்துஓடியல் குச்சிகள் போல்…
பென்னம் பெரிய குரோட்டன் தலையுடன் குண்டூசி உடலுடன் காற்றுக்குத் தள்ளாடும் பரிதாபம்…
பஞ்சைகள். எப்படி யெப்படியோ வயிற்றைக் கட்டி வாயைக் கட்டிக் காலத்தைத் தள்ளினர்.
இருந்தும் இன்று நோன்பு நோற்றே விட்டாள்.
அதிகாலை மூன்று மணிக்கே எழுந்து உம்மாவை எழுப்பி விட்டாள் மறியம், மாலையில் வாங்கிய இறைச்சியை ஒரு வழியாகச் சமாளித்தனர்.
வீட்டில் மூவர் நோன்பு-வாப்பா, உம்மா’ மறியம்…
மறியம், மறியம்…
உம்மாவின் குரல்தான். நடக்கவே சக்தியற்று துவண்ட தோற்றத்தில் இருந்த மறியம் ‘ஏம்மா’ என்று கேட்டவாறு தாயாரிடம் சென்றாள்.
தலை நோன்பு களைப்பை அதிகம் படுத்தியது:
குசினிக்குள் பானை வெந்து கொண்டிருந்தது.
“நோன்பு காலத்தில் கூடப் பகலில் சமைக்க வேண்டித்தான் ஈக்கி” உம்மாவின் புலம்பல்.
பாலம்! பிஞ்சுக் கன்றுகள் ஐந்தும் என்ன செய்யும்?
மறியம் தாயுடன் ஒத்துழைத்தாள், மாலையாயிற்று.
மறியத்தின் மனதில் ஒரு விவரிக்க முடியாத இன்ப உணர்ச்சி பீறிட்டது இன்னும் ஒரே ஒரு மணித்தியாலம் மட்டுமேதான் இருக்கிறது. அதன் பின்… நோன்பு திறக்கலாம்.
அதைப்போன்ற சந்தோசம் எங்கிருக்கிறது.
நாள் முழுக்கப் பட்டினி கிடந்துவிட்டு மாலையில் உணவு கொள்வதே ஒரு தனி இன்பம்தான்.
ஆனாலும் அவளுக்கு வருடா வருடம் குடியிருப்புப் பள்ளியில் காய்ச்சப்படும் கஞ்சிதான் நோன்பைத் திறப்பதற்கு உதவும் திறவுகோல்.
சென்ற வருடம் கூட அதே பழைய துருப்பிடித்த ‘ஜக்’கைக் கையில் எடுத்துக்கொண்டு உல்லாசமாய்ப் பாய்ந்து சென்றாள் குடியிருப்புப் பெரியபள்ளியை நோக்கி.
‘கியூ’ வோ கத்தரிக்காயோ ஒன்றுமில்லை. வலுத்தவன் கை வாசிதான்.
குழந்தைகளும் குட்டிகளும் முட்டி மோதியவாறு கஞ்சிக் சட்டிக்குள் விழுந்துவிடக் கூடியநிலை;
ஹாஜியாரின் கைராசி, பையன்களின் முகராசியைப் பொறுத்தது.
தோ அவளுக்கு இரண்டு அகப்பை கிடைத்தது.
அதுகூட, வெளியே சிந்தி அவளது ஜக்கின் மேற்புறத்தில் வழிந்து வடிவதுபோக மீதி.. ஒரு அகப்பை கூடினால் ஒன்றரை அகப்பைக் கஞ்சிதான் மிஞ்சும்.
“மறியம்…ஏய் மறியம்”
மறியம் வெளியே எட்டிப்பார்த்தாள். ஜலீலா நின்றிருந்தாள். அவளது கையிலே ஒரு பெரிய கேத்தல்.
“கஞ்சிவாங்க வரலையா மறியம்” இது என்ன கேள்வி.
”கொஞ்சம் பொறுத்துக்கோ… வர்றேன்” குசுனிகுள் பாய்ந்தாள் மறியம்.
உம்மா சோகத்துடன் (சோர்வுடன்) அமர்ந்திருந்தாள்.
“உம்மா நான் கஞ்சி வாங்கிட்டு வாறம்மா.” தாய் பெருமுச்சுடன் கூடிய புன்னகையொன்றை உதிர்த்தாள்.
“கண்ணு போயிட்டு வாம்மா.”
இரண்டாவது வாண்டு அசங்கியச் சட்டையைக் கடித்தபடி தயாராய் நின்றான்.
”ராத்தா…நானும் வார்ரேன்”
அவனது முட்டி அவளது தொடையில் மோதியது.
“நீ வேடாம்டா சட்டையெல்லாம் ஊத்தை”
“கண்ணு மறியம் நெயமா வாங்கிட்டு வா. வாப்பாக்குப் பினநேரம் ஓண்டுமே இல்லை”
“சரிம்மா'”
“இணடைக்கு பீல்லை, ஹாஜி, யார்டமுறையோ அல்லது ஈவப் ஹாஜியார்டமுறையோ தெரியாது… எதுக்கும் ஒரு பெரிய ஏனமாவே கொண்டு போம்மா”
மறியம் ஆவலுடன் நோக்கினாள் அதே துருப்பிடித்த ‘ஜக்’.
நீர் ஒழுகும் அளவுக்குச் சிறு கிறு ஓட்டைகள் அது தான பெரிய ஏனம்.
அதல் பாதிக்குத்தானே ஒவ்வொரு வருடமும் அவளுக்குக் கஞ்சி கிடைக்கிறது.
‘பெரிய’ மனுசர் வீட்டுக்கும் ஹாஜியார்கள் வீட்டுக்கும என்றால் வாளி வாளியாக அனுப்பப்படும் கஞ்சியைப் பற்றி நியாயம் கேட்கக் கூட ஆள் இல்லை. பயம்.
வெளியே சத்தம் கேட்டது.
தோழிகள் எல்லாரும் அவளைத் தேடிவந்து விட்டார்கள் போலும்.
ஜலீலா, பஸீறா,காமிலா,சக்கீனா, மூமினா, றிசானா…
“இருங்கடி வந்துர்றேன்”
ஜக்கைக் கைகளினால் எடுத்தாள். அந்தக் கை வெந்து சுருங்கி இருந்தது.
பழைய சம்பவம். பகமரத்தாணி.
‘ஜக’கைத் தொட்டதுதான் தாமதம் அந்தச் சம்பவம் விஸ்வரூபம் எடுத்தது’
‘ஜக்’கைக் கைகளில் ஏந்தியவாறு பிரமை பிடித்தவள் போல் நின்றாள் மறியம்.
மறக்க முயன்ற அச்சம்பவம் வெடித்துக் கொண்டு இதயத்தை விட்டு வெளிக்கிளம்பியது கண்ணுக்குள் புதைத்த விதை மண்ணைக் கிளறிக்கொண்டு வெளிப்படுவது போல்…
சென்ற வருடம்.
வழமைபோல் நெருங்கி வழிந்த கூட்டத்தின் நடுவே இடிபட்டு, நெரிபட்டு, அடிபட்டு, உதைபட்டு….
‘எனக்குத் தாங்கோ’
‘எனக்குத் தாங்கோ’
“ஆண்டவனே… என் கால் கால்…”
“தள்ளி நில்லுங்கடா, ஹரான் குட்டியளா. கீழ்சாதி நாய்கள்”
ஹாஜியார் அபுசாலி கர்ஜித்தார். அன்று அவரது முறைதான் விளம்பரம் வேண்டி நேரடியாகவே இறங்கி விட்டார்.
மன்னாரின் புகழ்பெற்ற பாலுணவு ஏஜன்டான அவரிடம் ‘கறுப்புச் சந்தை’ என்ற சொல் தண்ணீர்பட்ட பாடு. இரண்டு முறை மக்கா வேறு சென்றிருக்கிறார். போலீசின் கண்ணிலிருந்து தப்ப முடியாவிட்டாலும் அவர்களின் கைகளிலிருந்து தப்பும் ஆற்றல் அவரது இரும்புப் பெட்டிக்கு நிறைந்து வழிந்தது.
பாலர்கள் கூட்டம் நெருங்கியது.
‘சீநாயே தள்ளுங்கடா”
ஹாஜியார் உறுமியபடி அகைப்பையால் அள்ளித் தெளித்த கஞ்சி…
“உம்மா… ஆ !…”
மறியம் வீரிட்டு அலறினாள்.
மறியத்தின் கையில் கொட்டிய அக் கொதி நீர் கை பொசுங்கிப் பொங்கியது
சுருண்டு விட்டாள் குழந்தை.
குழந்தைகளின் நடுவே கூச்சல், குழப்பம்.
ஹாஜியார் வெறிபிடித்தவர் போல் அலறினார் “கீழ் சாதி நாய்களே! விலகுங் கடா”
ஆனால்… ஆனால்…
ஆனால் என்ன? மறியத்தின் கை அவிந்து வெந்தது தான்.
“வாங்கடி போவம்”
மறியத்தின் தலைமையில் ‘கஞ்சிக் கோஸ்டி’ பள்ளிவாசலை நோக்கிச் சென்றது.
மூக்கை உறுஞ்சியபடி ‘நியூமூர் ஸ்ட்ரீட்’ வழியாகக் குடியிருப்புப் பெரிய பள்ளியை நோக்கித் துள்ளு நடை போட்டாள் மறியம், மனதில் ஆயிரம் ஆயிரம் எண்ணக் கோட்டைகளைக் கட்டியபடி.
பள்ளியை நெருங்க உற்சாகம் கரை புரண்டோடியது.
“இண்டைக்கு இன்னொரு கை அவிஞ்சாலும் சரி. கணகக் கஞ்சி வாங்கிட்டுத்தான் வருவேன். உம்மாக்கு ரெம்ப சந்தோசமாயிருக்கும்…”
மனககோபுரம் உயர்ந்தது.
பள்ளிவாசலை நெருங்கிவிட்டார்கள்.
ஆனால் அங்கென?
மூக்கைத் துளைக்கும் வாசத்தையும் கஞ்சிச் சட்டியைச் சுற்றி நினறு நெருக்கியடித்துக் கொண்டு கூச்சலிடும் சிறுவர் கூட்டத்தையும்.. எதிர்பார்த்த அவளுக்கு ஏமாற்றம்… பெருத்த ஏமாறநம்தான்.
வெறும் சூனய வெளிதான் காட்சி தந்தது.
ஒரு வேனை கஞ்சி பகிர்ந்து முடிந்து விட்டதோ?
‘என்னடி இது. ஒன்னையும் காணோம்”
மறியத்தின் விழியோரத்தில் இரண்டு சொட்டு கண்ணீர்த் துளிகள் தேங்கி…
அடுப்போ… அல்லது எரிந்த விறகோ, சாம்பலோ…
ஊஹும்… ஒன்றுமேயில்லை
கஞ்சி காச்சும் சட்டிகூட…
என்ன இது?
லெப்பை ஒருவர் குழந்தைகளிடம் வந்தார்.
“தங்கச்சி மார்களே, இன்னைக்குக் கஞ்சியில்லை”
“ஏனாம்” மறியந்தான் வினவினாள், விம்மலிநூடே.
“போனமுறை அரிசியும் செலவும் தந்த எஸ். எம் முதலியாருக்கு இந்த முறை தர ஏலாதாம். அரிசியெல்லாம் விலை கூடிட்டாம். பணமும் இல்லையாம்.”
போகட்டும்.
”அப்ப நாளைக்கு வரவா”
ஏமாற்றத்தனால் ஏற்பட்ட உணரிச்சிப் பிரவாகம் விம்மலாகத் தெறித்தது.
“நாளைக்கா… ஏன்”
லெப்பை கேலியாகச் சிரித்தார். குழந்தைகளின் முகத்திலே பீதி குடிகொண்டன.
“சரிபுத் தீன் ஹாஜியாரிலிருந்து ஏ.கே. எஸ். வரைக்கும் கையை விரிச்சிட்டாங்கம்மா ரவூப் ஹாஜியார் கூடத்தான்”
விம்மி வெடித்த ஆத்திரத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டு குழந்தைகள் கூச்சலிட்டனர்.
“அப்ப எப்பதாள் கஞ்சி போடுவாங்க”
லெப்பை மீண்டும் கேலியாகச் சிரித்தார்.
“எப்பவுமே கிடைக்காது இனி ஆண்டவனே நேரில் வந்து கஞ்சி ஊத்தினாத்தான். இங்கேயுள்ள முதலாளி மார்கள்ட ‘கப்ப’லெல்லாம் கடலில் கவுன்டல்லா போயிட்டாம். சரி.. சரி வீட்டுக்குப் போங்க. உம்மா வாப்பு எல்லோரும் எதிர்ப் பார்த்துக்கிட்டு இருப்பாங்க… இம்”
நாடி தளர்ந்து தொய்ந்து அவ்விடத்திலேயே அமர்ந்திருந்தாள் மறியம்.
அவளை ஆவலுடன் எதிர்பார்த்திருந்த அவளது வாப்பாவும் உம்மாவும் வேறு மனக் கோபுரங்களை கட்டிக் கொண்டிருந்தனர்.
– 29-12-1967, இன்ஸான் முஸ்லீம் வாரப் பத்திரிகை.
– ஒரு வெள்ளி ரூபாய் (சிறுகதைத் தொகுதி), முதற் பதிப்பு: செப்டம்பர் 1982, மன்னார் வாசகர் வட்டம் வெளியீடு, இலங்கை.