காலமும் நானும்
கதையாசிரியர்: இளையவேணி கிருஷ்ணா
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு:
சமூக நீதி
கதைப்பதிவு: January 31, 2026
பார்வையிட்டோர்: 3,532
காலம் என் தோள்
தொட்டு
கொஞ்சம் திரும்புகிறேன்…
என் கன்னங்களில் வழியும்
கண்ணீரை பார்த்து
துடிதுடித்து போய்
என் கண்ணீரை துடைத்து
வாரியணைத்துக் கொண்டது அதன் நெஞ்சோடு…
சிறிது நேர அந்த ஆசுவாசப்படுத்தலில்
நான் ஆறுதல் அடைந்து
அதன் அணைப்பில்
இருந்து விலகுகிறேன்..
ஏன் கண்மணி என்றது
விழிகளால்…
ஒன்றும் இல்லை என்று
சிறிது சிரிக்கிறேன்…
என்னிடம் சொல்ல என்ன தயக்கம்…
நான் உன் காதல் அல்லவா என்றது…
ஆம்…அது மாபெரும் உண்மை என்றேன்
அழுகையில் குரல் கம்மியபடியே…
பிறகென்ன என்னிடம் சொல் என்றது காலம்…
ஆறுதலாக என் கைகளை பிணைத்துக் கொண்டு…
என் கண்ணீரால்
நான் எனது அகங்காரம் வலியை கரைத்து
வெளியேற்றுகிறேன்…
வேறொன்றும் இல்லை என்றேன்…
என்ன உன்னிடம் அகங்காரமா என்று
மெல்ல சிரித்தது…
ஆம்…. நான் என்று
நினைக்கும் போது தானே
இத்தனை கண்ணீர் என்றேன்…
காலம் புரிந்துக் கொண்டு
என்னை மேலும் ஆறுதலாக அணைத்துக் கொண்டு
மெல்லமாக சொன்னது…
இதோ அதை நான்
உன்னில் இருந்து
எனக்குள் கடத்திக் கொண்டேன்…
நீ நிம்மதியாக இரு என்றது…
அது சொன்ன அடுத்த நொடி
நான் இலேசாக உணர்ந்தேன்…
இங்கே காலத்தை தவிர
என்னை சரியாக புரிந்து கொள்பவர் எவர் என்று
நினைத்தபடி…