ஜே.எம்.சாலி

 

ஜே.எம்.சாலி (பிறப்பு: ஏப்ரல் 10 1939), சிங்கப்பூர் தமிழ் இஸ்லாமிய எழுத்தாளர். எரவாஞ்சேரியில் பிறந்த இவர் தற்போது யசும் தெருவில் வசித்துவருகின்றார்.2015ம் ஆண்டின் சிறந்த தென்கிழக்கு ஆசிய இலக்கிய விருது பெற்றவரும், சிங்கப்பூர் தொலைக்காட்சி செய்தி ஆசிரியரும், பன்னூலாசிரியரும், பத்திரிகையாளரும், பல்வேறு இதழ்களில் சிறுகதைகள், தொடர்கதைகள், கட்டுரைகளை எழுதியவரும், இஸ்லாமியத் தமிழிலக்கியக் கழகத்தின் வெளிநாட்டுத் தொடர்பாளருமாவார்.

எழுதிய நூல்கள்

  • கனாக் கண்டேன் தோழி
  • விலங்கு
  • அலைகள் பேசுகின்றன
  • தமிழகத்துத் தர்க்காக்கள்
  • மாநபி கண்ட மருத்துவம்
  • குத்துச் சண்டை வீரர் முகம்மது அலி
  • புரூஸ்லி
  • வெள்ளைக் கோடுகள்
  • நோன்பு

உட்பட 40க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார்.

பெற்ற விருதுகளும் கௌரவங்களும்

  • தென்கிழக்கு ஆசிய இலக்கிய விருது 2015
  • கண்ணன் சிறுவர் இதழ் நடத்திய நாவல் போட்டிப் பரிசு
  • தமிழக அரசின் பரிசு (இருமுறை)
  • காரைக்காலில் நடைபெற்ற 3ம் ஆண்டு இலக்கியப் பெருவிழாவில் பாராட்டு விருது

சில அலைகள்

சிங்கப்பூர் பின்னணியில் எழுதிய சிறுகதைகளையும் தொடர்கதைகளையும் நூலாக வெளியிடும்படி பிரியமுள்ள பலர் சில ஆண்டுகளாகத் தூண்டி வந்தார்கள். இயற்பெயரிலும் சில புனைப்பெயர்களிலும் சிங்கப்பூர், மலேசிய, தமிழக இதழ்களில் இந்த வட்டாரப் பின்னணியில் கணிசமாகவே எழுதியிருக்கிறேன்.

1964 ஆம் ஆண்டில் தமிழ் முரசில் பணிபுரியத் தொடங்கிய போது ஆசிரியர் தமிழவேள் கோ. சாரங்கபாணி ஞாயிறு முரசில் எழுதிக் கொண்டேயிருக்க வேண்டும்’ என்று பணித்தார்.

1971 ல்ஆனந்த விகடன் ஆசிரியர் குழுவில் சேர்ந்ததும் வேலையாக சிங்கப்பூர் பின்னணியில் தொடர்கதையை ஆரம்பிக்கச் சொன்னார் அப்போதைய துணை ஆசிரியர் மணியன். ‘பேசுகின்றன’ தொடராக வந்து வரவேற்பைப் பெற்றது. அதுவே நூலாக பல பதிப்புகளாக வெளிவந்தன. கதாசிரியர் 72 பக்கத்தில் கதையை காவிய அந்தஸ்துக்கு உயர்த்திவிட்டார் என்று இலக்கிய எழுத்தாளர் ந. பிச்சமூர்த்தி அந்த நூலுக்கு தினமணி பத்திரிகையில் மதிப்புரை வழங்கியது மனதில்பசுமையாக இருக்கிறது. சிங்கப்பூர் வானொலியும்அந்தமான்வானொலி நிலையமும் அந்தக்கதையை சொந்தமாகவே நாடகமாக்கி ஒலிபரப்பியதை நினைக்கும் போது இனிக்கிறது.

பதச் சோறாக இதைச் சொல்கிறேன். சுயப்பிரதாபமாக அல்ல. எழுத்தாளன், படைப்பாளன், இலக்கியவாதி என்ற பரிமாணங்கள்கனமானவை. அந்தக்கனத்தை நான் அவற்றுக்கு அப்பாற்பட்டு பார்வையாளன் என்று கூறிக் கொள்வதில் சுகம் இருக்கிறது. சுவை இருக்கிறது. சுமை இருக்கவில்லை. நல்ல பார்வையாளன் பார்த்ததைப் பகிர்ந்து கொள்ள முற்படுவன். உணர்ந்ததை உணர்த்த விரும்புவான். எழுதுகோலை அனிச்சையாக அப்போது எடுக்க வேண்டிய கட்டாயம் அவனுக்கு. எழுதுகிறான். படைக்கிறான்.

அவன் எழுத்தாளனா ,படைப்பாளியா, என்பதை படிப்பாளிகள்தான்முடிவு செய்ய வேண்டும். என்று நான் குறிப்பிடுவது வாசகர்கள், இலக்கிய ஆர்வலர்கள், விமர்சகர்கள், திறனாய்வாளர்கள். அங்கீகாரம், பட்டயம், பாராட்டு, விருதுகள்அவர்களிடமிருந்து கிடைப்பவை என்பது அபிப்பிராயம்.

அலைகளாக சில உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ள ஆவல் இருக்கிறது. சொல்வதைச்சுருக்கமாகச் சொல்வதே ஆரோக்கியம். அந்த வகையில் இந்தத் தொகுப்பைப் பற்றி சிலவரிகளைச் சொன்னால் போதும். காவிரி மண்ணில் பிறந்து சிங்கப்பூரில் வாழ்வது எனக்குக் கிடைத்த ஒரு பேறு. காவிரி தீரத்தைச் சுற்றியும் கதை படைக்கலாம். சிங்கப்பூர்ஆற்றங்கரைப் பின்னணியிலும்கதை தொகுப்பாக வழங்கும் நேரம் வந்திருக்கிறது.

‘இத்தொகுப்பிலுள்ள ‘வேலி’ 28 ஆண்டுகளுக்கு விகடனில் பிரசுரமான சிறுகதை. சிங்கப்பூர் பத்திரிகைச் படைக்க இயலும். அவ்வப்போது சிங்கப்பூர் உணர்வுடன் அக்கரை, இக்கரை இதழ்களில் எழுதிய சில சிறுகதைகளை இப்போது தான் கிடைத்திருக்கிறது.

செய்திகளைக் கதையாக்கி விகடனில் சில சிறுகதைகளை 1971 ல் எழுதினேன். காயம், தீர்ப்பு ஆகியவை அவற்றில் அடங்கும். குங்குமம், தினமணி கதிர், கல்கி, தமிழ் முரசு முதலான இதழ்களிலும் அவ்வப்போது சிங்கப்பூர் பின்னணியில் எழுதும் வாய்ப்பு கிடைத்தது. அவற்றில் சிலவற்றைத் தொகுத்து கவிதா வெளியீடாக தமிழுலகுக்கு வழங்கும் உரிமையாளர் திரு. சொக்கலிங்கம் அவர்களுக்கும், ஆற்றுப்படுத்திய கோவை விஜயா பதிப்பக நண்பர் மு.வேலாயுதம் அவர்களுக்கும் நன்றி பாராட்டுகிறேன். இந்த முயற்சிக்குத் தூண்டுகோலாக அமைந்த அனைவருக்கும் என்அன்பை உரிமையாக்குகிறேன். என்றும் இனிய அன்புடன்,

ஜே.எம்.சாலி
சிங்கப்பூர்
13.12.1998

இந்த நூல் – ஜே.எம்.சாலியின் சிறுவர் கதைகள், முதற் பதிப்பு: பெப்ரவரி 2011, தமிழ்க் கலை அச்சகம், சிங்கப்பூர்.

ஏப்ரல் 1955.

கலைமகள் அலுவலகத்திலிருந்து கண்ணன் இதழுடன் 5 ரூபாய் மணி ஆர்டர் வந்தது. ‘எங்கள் பகுதி’யில் பிரசுரமான பரிசுக் கடிதத்திற்குரிய அன்பளிப்பு எனக் குறிப்பிட்டு ஆசிரியர் ஆர்வி.(ஆர்.வெங்கட்ராமன்) கையெழுத்திட்டிருந்தார்.

அந்த நாள் பத்தாம் வகுப்பு மாணவனுக்கு ஐந்து ரூபாய் பரிசு பெரியது.

கலைமகள் குடும்பத்தின் குழந்தை இதழான ‘கண்ணன்’ நான் படிக்கத் தொடங்கிய முதல் பத்திரிகை. ஐந்து வருடம் வாசகனாக இருந்தேன். முந்திய இதழைப் பற்றிய அரைப் பக்க விமர்சனக் கடிதம் பரிசைத் தேடித் தந்ததால், தொடர்ந்து எழுத முடிவு செய்தேன்.

பாலர் கவியரங்கத்துக்கு கவிதை அனுப்பினேன்.

“உன் கவிதை கிடைத்தது. கண்ணனில் பிரசுரமாகும். உன் ஊக்கம் வளர்க…” தபால் கார்டில் நீல நிற பென்சிலால் எழுதியிருந்தார் ஆர்வி.

தாஜ்மஹால் என்ற கவிதைக்கு 3 ரூபாய் அன்பளிப்பு வந்தது. அடுத்தடுத்து சில மூன்று ரூபாய் கவிதைகள்.

கதை எழுதினால் அன்பளிப்பு அதிகமாகக் கிடைக்கும் என்ற ஆர்வத்துடன் ‘தேர்தல்’ என்ற சிறுகதையை அனுப்பினேன்.

அந்த முதல் கதைக்கு 10 ரூபாய் அன்பளிப்பு வந்தது. உற்சாகம் கரை புரண்டது. இனி கவிதை வேண்டாம் என முடிவு செய்து கதைகளை எழுதி அனுப்பினேன். முதல் ஆண்டிலேயே பல சிறுகதைகள் பிரசுரமாயின. எந்தக் கதையும் திரும்பி வரவில்லை. நாட்டுப்புற மாணவனான என்னை அடையாளம் கண்டு, அரை அணா தபால் கார்டு மூலம் உற்சாகப் படுத்தி வந்தார் ஆசிரியர் ஆர்வி.

பள்ளிப் பருவத்திலேயே பல இதழ்களையும் வரி விடாமல் படித்து வந்தேன்.

அடுத்து, 1956 முதல் கும்பகோணத்தில் கல்லூரிப் படிப்பு, அந்த 4 ஆண்டுகளில் கண்ணன் எழுத்தாளர் அணியில் முக்கிய இடம் கிடைத்தது. தீபாவளி மலருக்கு சிறுகதை கேட்டு கடிதம் வரும். எழுத்தாளர் அறிமுகப் பகுதியில் மறக்க முடியாத அரைப்பக்க வாசகம்.

“கிராமத்து சூழ்நிலையில் அழகான தமிழ் நடை கொண்டு எழுதப்பட்ட ஜே.எம்.சாலியின் சிறுகதைகள் மாதுளம் பழத்து முத்துக்கள் போன்றவை. அத்தனை கட்டுக்கோப்பாகவும் கனிரசம் கொண்டதாகவும் இருக்கும்… அவர் தொடர்ந்து எழுதி. சமுதாயத்தில் ஒளிவிளக்காகத் திகழ வேண்டும் என்பதே நம் ஆசை…”

அந்த நல்லாசியை ஏற்று, பல பத்திரிகைகளுக்கு எழுத முற்பட்டேன். கண்ணனுடன் கல்கண்டு, கரும்பு. மாணவர் குரல் சிறுவர் இதழ்களிலும் எழுதி வந்தேன்.

1958-ல் ஆனந்தவிகடன் மாணவர் திட்டத்தில் சிறுகதை எழுதினேன்.

1959-ல் கண்ணன் நடத்திய தொடர்கதைப் போட்டியில் ‘இரு கண்கள்’ பரிசு பெற்றது. 1961-ல் கலைமகள் காரியாலயம் அதை நூலாக வெளியிட்டது. விலை 75 காசு.

குழந்தை எழுத்தாளர் சங்கம் 1961-ல் நடத்திய புதினப் போட்டியில் பரிசு பெற்றேன். அது ‘தங்கக் கிளிகள்’ தொடர்கதையாக கண்ணன் இதழில் இடம் பெற்று, பின்னர் நூலாக வெளிவந்தது.

1955 முதல் 1962 வரை குழந்தை – சிறார் இதழ்களில் தொடர்ந்து எழுதி வந்தேன். அந்த நாளில், மாணவப் பருவத் தில், நாட்டுப் புற வாசத்தில், எழுதிய சிறுகதைகளின் ஒரு தொகுப்பே இந்த நூல். கதைகளுக்கு அப்போது வரையப்பட்ட ஓவியங்களும் இத்தொகுப்பில் இடம்பெறுவது மகிழ்ச்சிக் குரியது.

– ஜே.எம். சாலி

முன்னுரை – ஓரு கிளைப் பறவைகள், சிறுவர் நூல், முதற் பதிப்பு: ஆகஸ்ட் 2009, பூம்புகார் பதிப்பகம், சென்னை.

ஏப்ரல் 1955,

கலைமகள் அலுவலகத்திலிருந்து ‘கண்ணன்’ இதழுடன் 5 ரூபாய் மணிஆர்டர் வந்தது. ‘எங்கள் பகுதி’யில் பிரசுரமான பரிசுக் கடிதத்துக்குரிய அன்பளிப்பு எனக் குறிப்பிட்டு, ஆசிரியர் ஆர்வி கையெழுத்திட்டிருந்தார்.

அந்த நாள் பத்தாம் வகுப்பு மாணவனுக்கு ஐந்து ரூபாய் பரிசு பெரியது..

‘கலைமகள்’ குடும்பத்தின் குழந்தை இதழான ‘கண்ணன்’, நான் படிக்கத் தொடங்கிய முதல் பத்திரிகை. ஐந்து வருடம் வாசகனாக இருந்தேன். முந்திய இதழைப் பற்றிய அரைப் பக்க விமர்சனக் கடிதம் பரிசைத் தேடித் தந்ததால், தொடர்ந்து எழுத முடிவு செய்தேன்.

‘பாலர் கவியரங்க’த்துக்குக் கவிதை அனுப்பினேன்.. ‘உன் கவிதை கிடைத்தது. கண்ணனில் பிரசுரமாகும். உன் ஊக்கம் வளர்க..

‘தபால் கார்டில் நீல நிற பென்சிலால் எழுதியிருந்தார், ஆர்வி.

‘தாஜ்மஹால்’ என்ற கவிதைக்கு 3 ரூபாய் அன்பளிப்பு வந்தது. அடுத்தடுத்து, சில மூன்று ரூபாய்க் கவிதைகள்..

‘கதை எழுதினால் அன்பளிப்பு அதிகமாகக் கிடைக்கும் என்ற ஆர்வத்துடன், ‘தேர்தல்’ என்ற சிறுகதையை அனுப்பினேன்.

அந்த முதல் கதைக்கு (1955 ஆகஸ்ட்) 10 ரூபாய் அன்பளிப்பு வந்தது. உற்சாகம் கரை புரண்டது. ‘இனி கவிதை வேண்டாம்’ என முடிவு செய்து, கதைகளை எழுதி அனுப்பினேன்.

முதல் ஆண்டிலேயே பல சிறுகதைகள் பிரசுரமாயின. எந்தக் கதையும் திரும்பி வரவில்லை!

பள்ளியில் படித்துக் கொண்டிருந்த நாட்டுப்புற மாணவனான என்னை எழுத்தின் மூலம் அடையாளம் கண்டு, அரை அணா தபால் கார்டு மூலம் உற்சாகப்படுத்தி வந்தார் ஆசிரியர் ஆர்வி.

பள்ளிப் பருவத்திலேயே பல இதழ்களையும் வரி விடாமல் படித்து வந்தேன்.

அடுத்து, 1956 முதல் கும்பகோணத்தில் கல்லூரிப் படிப்பு. அந்த 4 ஆண்டுகளில் கண்ணன் எழுத்தாளர் அணியில் முக்கிய இடம் கிடைத்தது. தீபாவளி மலருக்குச் சிறுகதை கேட்டுக் கடிதம் வரும். எழுத்தாளர் அறிமுகப் பகுதியில், மறக்க முடியாத அரைப்பக்க வாசகம்:

‘கிராமத்துச் சூழ்நிலையில் அழகான தமிழ் நடை கொண்டு புனையப்பட்ட ஜே. எம். சாலியின் சிறுகதைகள் மாதுளம் பழத்து முத்துக்கள் போன்றவை. அத்தனை கட்டுக் கோப்பாகவும் கனிரசம் கொண்டதாகவும் இருக்கும்….அவர் தொடர்ந்து எழுதி, சமுதாயத்தில் ஒளிவிளக்காகத் திகழ வேண்டும் என்பதே நம் ஆசை…’

ஆர்வியின் அந்த நல்லாசியை ஏற்று, பல பத்திரிகை களுக்கு எழுத முற்பட்டேன். கண்ணனுடன் கல்கண்டு, கரும்பு, மாணவர் குரல் சிறுவர் இதழ்களிலும் எழுதி வந்தேன்.

1958இல் ஆனந்தவிகடன் மாணவர் திட்டத்தில் சிறுகதை எழுதினேன்.

1959இல் கண்ணன் நடத்திய தொடர்கதைப் போட்டியில் ‘இருகண்கள்’ பரிசு பெற்றது.

ஆகஸ்ட் 1961இல் கலைமகள் காரியாலயம் அதை நூலாக வெளியிட்டது. விலை 75 காசு!

ஆசிரியர் ஆர்வி மனம்விட்டு எழுதிய பதிப்புரை வாசகங்களை மறக்க முடியுமா?

‘ஜே. எம். சாலிக்கு அறிகமும் தேவையில்லை. அவர் குழந்தை இலக்கிய உலகில் பிரபலமானவர். கண்ணன் பத்திரிகையில் பல ஆண்டுகளாகப் பல சிறுகதைகள் எழுதி, வாசகர்களுடைய அன்பையும் பாராட்டையும் ஒருமுகமாகப் பெற்றவர். இவருடைய கதைகள் கற்பனையழகும் தெள்ளிய நடையும் பொருந்தியவை. இளம் மனத்துக்கு இனிக்கும் அமுதமான கதைகள் எழுதும் இவர் இப்போது எம். ஏ. இறுதியாண்டு படித்து வருகிறார்.

கண்ணன் பத்திரிகை ஆண்டுதோறும் நடத்தும் தொடர்கதைப் போட்டியில் இந்தக் கதையான இருகண்கள் பரிசு பெற்றது. பத்திரிகையில் தொடர்ச்சியாக வெளிவந்த போது, சிறுவர் மட்டுமென்ன, பெரியோர்களும் இதை ஆவலோடு விரும்பிப் படித்தார்கள். ஆற்றொழுக்குப் போன்ற கதையோட்டமும் நடையும் அத்தனை பேரையும் ஒருங்கே கவர்ந்து விட்டன. நிகழ்ச்சிகளின் ஒழுங்கும் உரையாடல் களின் உயிர்த்துடிப்பும் படிப்பவரைப் பரவசப்படுத்தும் என்று உறுதியாகக் கூறலாம்…

குழந்தை எழுத்தாளர் சங்கம் 1961இல் நடத்திய புதினப் போட்டியில் என் ‘தங்கக்கிளிகள்’ பரிசு பெற்றன. அது, கண்ணன் இதழில் தொடர்கதையாக இடம் பெற்று, பின்னர் நூலாக வெளிவந்தது.

1955 முதல் 1962 வரை சிறார் இதழ்களில் தொடர்ந்து எழுதி வந்தேன். அந்தநாளில், மாணவப் பருவத்தில், நாட்டுப்புற வாசத்தில், எழுதிய கதைகளின் தொகுப்பே இந்த நூல்.

முப்பது ஆண்டுகளுக்கு முன் 1978இல் ‘கனாக் கண்டேன் தோழி’ (விகடன் தொடர்கதை) நூலை வெளியிட்டு தமிழக அரசின் சிறந்த புதினத்திற்குரிய பரிசைப் பெற உதவிய பூம்புகார் பிரசுரம் பதிப்பகத்தாருக்கும், நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்நூலையும் வெளியிடுவது அவர்களோடு உறவு விளையுமாறு உதவிய சகோதரர் இலக்கியவீதி இனியவனுக்கும் சிறப்புக்குரியது. அரிய, இனிய அங்கீகாரமாகக் கருதி மகிழ்கிறேன்.

கண்ணன் இதழ் மூலம் ஆர்வி. அவர்கள் என்னை எழுத்தாளனாக்கி விட்ட 53-ஆம் ஆண்டு நிறைவை நினைவுகூர்ந்து நெகிழ்கிறேன்.

என்னையும் இலக்கியவீதி இனியவன், சாருகேசி எஸ்.விஸ்வநாதன், லெமன், மாயூரன், ரேவதி – ஹரிஹரன், தே.பார்த்தசாரதி, ஜோதிர்லதா கிரிஜா, பூரம், விமலா ரமணி உள்ளிட்ட நூற்றுக்கு மேற்பட்ட எழுத்தாளர் அணியை, ஒரு கிளைப் பறவைகளை உருவாக்கிவிட்ட ஆசான் ஆர்வி அவர்களுக்கு இந்த ஒரு கிளைப் பறவைகளைச் சமர்ப்பிக்கிறேன்.

ஜே.எம்.சாலி
சிங்கப்பூர்
1.10.2008

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *