இரண்டாவது மூளை





“சொல்லுங்க மாமா. நீங்க என்ன சொன்னாலும் கேட்குறேன். இந்த போட்டித்தேர்வில நான் முதல் 3 இடத்துகுள்ள வரணும்” என்றேன் நான்.
என்னால் மாமா என்றழைக்கப்பட்ட மருதமூர்த்தி அறுபதுகளின் தொடக்கத்தில் இருந்தார். என் அப்பாவும் அவரும் பால்ய காலத்து நண்பர்கள் என்பதாலும், என் அப்பா அகால மரணமடைந்த பின்னர் தாயும் இல்லாமல் தனி மரமாக நான் நின்ற போது என் படிப்பிற்கான முழு செலவையும் செய்தவர் அவர் என்பதாலும் அவர் மீது எனக்கு முழு மரியாதை உண்டு. மற்றவர்கள் அவரை அங்கிள் என்று விளித்தபோதும் மாமா என்று கூப்பிடுவது என்னவோ எனக்கு அவரை மிக நெருக்கமாக உணர்த்தியதால் எனக்கு மாற்றத் தோன்றவில்லை.
மருதமூர்த்தி மாமா ஒரு சராசரி அறிவியல் ஆராய்ச்சியாளனுக்குரிய எல்லா இயல்புகளையும் கொண்டிருந்தார்; சரியான உடை உடுத்தாதது, முக்கியமான விசயங்களை மறந்து போவது என்று. அவரது சகா கிருஷ்ணகுமாருடன் இணைந்து ஏதோ ஒரு ராணுவ தளவாடங்களைக் குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தார் என்பதாக நினைவு. கிருஷ்ணகுமார் அங்கிளும் அப்பாவின் நண்பர்தான்.

நான் மருதமூர்த்தி மாமாவிடம் பேசிக் கொண்டிருந்தது அடுத்த வாரம் நடக்க இருக்கும் முக்கியமான போட்டித் தேர்வைப் பற்றி. அதில் வெற்றி பெற்றால் எனக்கு மேற்படிப்புக்கான அமெரிக்க நுழைவு சுலபமாக இருக்கும், அதன்பின் என் கனவான நாசாவில் நுழைவதற்கு எனக்கு எந்த தடையும் இருக்காது. ஆனால் அந்த தேர்வுக்கு நான் படித்த முதுகலை இன்சினியரிங் மிகக் குறைந்த அளவே உதவப் போகிறது. அது பற்றி ஏற்கனவே அவரிடம் சொல்லியிருக்க, அது பற்றி பேச என்னை பார்க்கிற்கு அழைத்திருந்தார்.
“ஒரு வழி இருக்குப்பா. ஆனா அது 100% இல்லீகல்” என்றார்.
“என்ன வழி மாமா?” அவரை அவசரப்படுத்தினேன்.
“நான் என்ன ஆராய்ச்சி பண்ணிட்டு இருக்கேன்னு உனக்குத் தெரியுமா?”
“ஏதோ ராணுவத்துக்காக அதிநவீன கருவிகள் சம்பந்தமான்ற அளவுக்கு தெரியும் மாமா. ராணுவம் சம்பந்தப் பட்டதா இருக்குறதால நான் இதைப்பத்தி மீரா கிட்டக் கூட எதுவும் கேட்கிறதில்லை” மீரா அவரது அழகான திருமணமாகாத மகள். என் சிறுவயதுத் தோழி. அவள்தான் ஆராய்ச்சியாளர்கள் இருவருக்குமான ஒரே உதவியாளினி. நான் அவரை மாமா என்றழைப்பதற்கு அவளும் ஒரு காரணம்.
“அந்த ஆராய்ச்சி நான், கே.கே.கூட சேர்ந்து பண்றது. அடிப்படையில நான் உயிரியல் விஞ்ஞானின்றதால மூளையைப் பத்தியும் ஆராய்ச்சிப் பண்ணிட்டிருக்கேன். இது வெளிய யாருக்கும் தெரியாது. கே.கே.க்குக் கூட முழு விவரம் தெரியாது”
“ஓ..”
“ஒரு மனுசனோட மூளையோட திறனை அதிகரிக்கறது எப்படின்றதுதான் என்னோட ஆராய்ச்சி, மூளைக்கு ரெண்டு விதமான திறமைகள் இருக்கு, கம்ப்யூட்டர் மாதிரியே, ஒண்ணு தகவல்களை சேமிச்சிக்குற மெமரி பவர், இன்னொன்னு சேமிச்சத் தகவல்கள தேடற ப்ராசசிங் பவர், கம்ப்யூட்டர் ப்ரோக்ராம் மாதிரின்னு வெச்சிக்கேன்”
“ம்”
“என்னோட ஆராய்ச்சியின் மூலமா நான் இது ரெண்டையுமே அதிகப்படுத்தறதுல வெற்றியடைஞ்சிட்டேன்னுதான் சொல்லணும்”
“வாவ்…க்ரேட்”
“இத வெளிய சொல்றதா வேணாமான்னு இன்னும் முடிவு பண்ணல. ஏன்னா இது எவ்வளவுக்கு எவ்வளவு நல்லதோ அவ்வளவுக்கு அவ்வளவு கெட்டதும் கூட”
அமைதியாக அவரைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.
“நீ படிச்சி முடிச்ச உடனே என்கூட என் ஆராய்ச்சியில சேர்ந்துடுவன்னு நெனச்சேன். ஆனா உன்னோட லட்சியம் வேறயா இருக்கு. பரவாயில்ல. இந்த புதுகருவியின் மூலமா உனக்கு நல்லது நடந்தா எனக்கு சந்தோசம்தான். ஆனா நீ ஒரு விசயத்தை மறந்துடக்கூடாது”
கேள்விக்குறியுடன் அவரைப் பார்த்தேன்.
“என்னோட இந்தக் கருவி இப்போதைக்கு 100% சரியா வேலை செய்யுது. ஆனா இதுவரைக்கும் நான் மனுசங்ககிட்ட உபயோகிச்சதில்லை. குரங்குகள்கிட்ட மட்டும்தான் உபயோகிச்சிருக்கேன். அதனால நான் என்னோட ஆராய்ச்சிக்கு உன்னை பயன்படுத்திக்கிறேன்னு நினைச்சிடக் கூடாது.”
“புரியுது மாமா. நான் இந்த விசயத்துல எந்த அளவுக்கும் ரிஸ்க் எடுக்கத் தயாரா இருக்கேன். இது எப்படி வேலை செய்யுது மாமா?”
“நான் இந்த கருவியை உன் தலைக்குள்ள ஆபரேசன் பண்ணி பொருத்திடுவேன். இது தனியா செயல்படுற சின்ன கம்ப்யூட்டர் மாதிரின்றதால வெளிய இருந்து எந்த சிக்னலும் இதுக்குத் தேவை இல்ல. இதோட அளவும் ரொம்ப சின்னதா இருக்குறதால ஸ்கல்ல ஓபன் பண்ண வேண்டிய அவசியமே இல்லை. சின்னதா ஒரு ஓட்டையிலயே வேலை முடிஞ்சிடும், ஒரு மணி நேர ரெஸ்ட்க்கு பின்னால நீ எல்லா வேலையும் செய்யலாம். இதுல 6 GB அளவுக்கு மெமரி இருக்கு அது மட்டும் இல்லாம ஒரு சின்ன ப்ரோகிராமும் இருக்கு. டெஸ்ட்டுக்கு முதல் நாள் நான் இதை உன் தலையில வெச்சிடுவேன், உன் டெஸ்ட்டுக்குத் தேவையான எல்லா விசயங்களோட.”
“அது மறுபடியும் எப்ப எடுப்பீங்க மாமா?”
“தேவையே இல்லை. இது சரியா 24 மணிநேரம்தான் வேலை செய்யும், அதுக்கப்புறம் தானா கரைஞ்சிடும், கரையாத பாகங்கள் எல்லாம் உன்னோட கழிவுகள் வழியா வெளியேறிடும். அதுக்கப்புறம் நீயே சத்தியம் பண்ணி சொன்னாலும் எந்த கொம்பனாலயும் நிரூபிக்க முடியாது”
“அட்டகாசம் மாமா. என்னால நம்பவே முடியலை”
அமைதியா சிரித்தார் மருதமூர்த்தி மாமா.
“மாமா, நான் ஒரு விசயம் சொல்லணும். உங்க கூட இருக்குற எங்களுக்குத்தான் தெரியும் நீங்க எவ்வளவு உழைக்கிறீங்க, எவ்வளவு திறமையானவர்னு. ஆனா உங்களோட பல வெற்றிகள் கே.கே. அங்கிளுக்குத்தான் போகுது. நீங்க வேலை செய்றீங்க ஆனா அவர் பேர் தட்டிட்டுப் போறாரு. “
மாமாவின் முகம் மாறியது, கண்டிப்பாக அவர் இதை எதிர்ப்பார்க்கவில்லை என்பது அவர் முகத்தில் இருந்தே தெரிந்தது.
“மன்னிக்கணும் மாமா. அப்பா இருந்தவரைக்கும் பலதடவை இதைப்பத்திப் பேசியிருக்காரு, நீங்க ரெண்டு பேருமே அவருக்கு நல்ல நண்பர்களா இருந்தாலும். ஏதோ சொல்லணும்னு தோணுனது அவ்வளவுதான் மாமா”
“ஹே..மை பாய்… இதெல்லாம் பத்திக் கவலைப்படாதே. வர வியாழக்கிழமை சாயங்காலம் என் ஆய்வுக்கூடத்துக்கு வந்துடு. அதுக்கு முன்னால இன்னிக்கு வீட்டுக்குப் போன உடனே எனக்கு உன்னோட ஸ்டடி மெட்டீரியல் எல்லாத்தையும் மெயில் அனுப்பிடு”
“கண்டிப்பா மாமா. மீராவை கேட்டதா சொல்லுங்க. பை”
எல்லாம் எதிர்பார்த்தபடி சென்றது. எந்த பிரச்சினையும் இல்லாமல் ஆபரேசன் முடிந்தது. அங்கேயே ஒருமுறை சாம்பிள் டெஸ்ட் எழுத எல்லா கேள்விகளுக்கும் சரியான பதில் வந்து விழுந்தது, மந்திரத்தில் மாங்காய் விளைந்தது போல.
மறுநாள் போட்டித்தேர்விலும் அட்டகாசமாக எழுதினேன். கண்டிப்பாக முதல் இடம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. வெளியே வந்து முதல் வேலையாக மாமாவிற்கு போன் செய்தேன். மாலை வந்து பார்க்குமாறு கூறினார்.
சந்தோசமாக வந்து பைக்கை எடுத்த போது கண்கள் இருண்டது.. எல்லாமே இருட்டாக மயங்கி விழ ஆரம்பித்தேன்.
கண் விழித்த போது ஏதோ ஒரு அழுக்கான எட்டுக்கு எட்டு அறையின் கட்டாந்தரையில் மல்லாந்து இருந்தேன். ஒன்றும் புரியாமல் சுற்றும் முற்றும் பார்க்க அதிர்ந்தேன். அது ஒரு லாக் அப்.
தட்டுத் தடுமாறி எழுந்து அமர, கம்பிக்கு வெளியே வந்து நின்ற கான்ஸ்டபிள்
“ங்கொய்யா… உன்னப் பத்திதான்டா இன்னிக்கு பேப்பர்ல முதல் பக்கத்துல போட்டிருக்கு. படி. ஒழுங்கு மரியாதையா ஏன் பண்ணினன்னு சொல்லு”
என்றவாறே அன்றைய நாளிதழை எறிந்தார். நடுங்கும் விரல்களால் அதை பிரிக்க, அதில் இருந்த உண்மை முகத்தில் அறைந்தது.
“கல்லூரி மாணவனால் விஞ்ஞானி கிருஷ்ணக்குமார் கொலை: கொலைக்கான காரணத்தைப் போலீஸ் துப்புத் துலக்குகிறது”
– ஜூன் 2008, சிறில் அலெக்ஸின் அறிவியல் சிறுகதைப் போட்டிக்கான முதல் இடுகை