அப்புசாமியும் பாரதி நாற்காலியும்




(1999ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
காட்சி – 1

‘அப்புசாமி மார்கழி மாதத்துப் பன்னிரண்டு டிகிரி ஸெல்ஸியஸ் அக்மார்க் பனிக் குளிரில், சக்தியில்லாத சக்தி முற்றப் புலவர்போல் கையது கொண்டு மெய்யது பொத்தி, மெய்யதுகொண்டு கையது பொத்தி, காலதுகொண்டு கழுத்தது பொத்தி, மூக்கதுகொண்டு தோளது பொத்தி இன்னும் பலதுகொண்டு பலது பொத்தி, ப்ரேக் டவுன் ஆன மரவட்டை மாதிரியும், வீணாய்ப் போன விஷ்ணு சக்கரம் போலவும், சற்றே பிரிந்தும் பிரியாமலும், விரிந்தும் விரியாமலும், சில பாகங்கள் தெரிந்தும் தெரியாமலும் வெடவெடத்துக் கொண்டிருக்கிறார்.
ஒரு ஷோலாப்பூருக்கோ, பின்னிக்கோ அவர் ஆசைப்படவில்லை. தனது நாலு முழ லுங்கியைக்கூடப் போர்வையாக்கிக் கொள்ளமுடியாத சூழ்நிலையைச் சீதாப்பாட்டி உருவாக்கிவிட்டிருந்தாள்
பங்களாக் கதவு தேங்காய் சீனிவாசன் பாஷையில் ‘பச்சக்’ என்று இறுக்கமாக மூடி, நச்சக் என்று பெரிய பூட்டைத் தொங்கவிட்டுக் கொண்டிருக்கிறது.
பெண்டாட்டிக்குக் கோபம் வரவேண்டியதுதான். அதற்கென்று ஓர் அளவுகிடையாதா?
அப்புசாமி தொடர்ந்து வெடவெடத்துக் கொண்டிருக்கிறார்.
இரும்புக் கேட்டை யாரோ திறக்கிறார்கள். மசமச வென்று வெள்ளையாக ஓர் உருவம் அவர் கண்ணில் நிழலாடுகிறது. வருவது யார்? ‘குளிரால் வாடிய மயிலுக்குப் போர்வை ஈந்த வள்ளல் பேகனின் ஆவியா?
‘பேகானோ பாராய்… கிருஷ்ணா நீ பேகானோ பாராய்…!”அதிகப்படிக் குளிரில் மூளை குழம்பின மாதிரி அப்புசாமி படுத்தவாறே பாடுகிறார். உருவம் இன்னும் நெருங்குகிறது. கண்களின் முன்னே அலை அலையாகத் தெரிந்த டெலிவிஷன் டிஸைன்களினூடே உருவத்தை மறுபடி கூர்ந்து பார்க்கிறார்.
அப்புசாமி: யார்? யாரது? வள்ளல் பேகனா? சீக்கிரம் போர்த்தித் தொலைடாப்பா. புண்ணியமாப் போகும்.
உருவம்: தாத்தாவ்! என்ன இங்கே ஜாலியாகப் படுத்துக்கொண்டு?
அப்புசாமி: தாங்கள்.. தாங்கள். பேகன்தானே?
உருவம்: பேகனுமில்லே, ரீகனுமில்லே. ரசகுண்டு தாத்தா. தெரியலையா? பாட்டி மேலே ஏதாவது கோபம்னா இப்படியா வந்து வெளியே படுக்கறது? குளிர்க்காலத்திலே தம்பதிகளுக்குள் கோபமே வரக்கூடாது. அப்படியே வந்தாலும் வீட்டைவிட்டு வெளிநடப்புச் செய்து வெளியே வரக்கூடாது. அட்ஜஸ்ட் பண்ணிகிட்டு உள்ளேதான் படுக்கணும். சின்ன விஷயம் உங்களுக்கு புரியலையே.
அப்பு : நீ…நீ… ரசகுண்டா…? டேய் ரசம்! நான்… நான் செத்துப் போயிடுவேன் போலிருக்குதுடா…பயமா இருக்குதுடா.
ரசகுண்டு : தாத்தாவ் (கர்ஜிக்கிறான்) யார்கிட்டே என்ன பேசறீங்க?
அப்பு : உன்கிட்டேதான் பேசறேன். நீ ரசம்தானே?
ரசம் : ரசம், குழம்பு, சாதம் எல்லாம் நான்தான். நானே ப்ரஹ்மம் ப்ரஹ்மமே நான். அஹம் ப்ரஹ்மாஸ்மி. அச்சமில்லை. அமுங்கதலில்லை, யார்க்கும் அஞ்சோம். எதர்க்கும் அஞ்சோம், எங்கும் அஞ்சோம், எப்பொழுதும் அஞ்சோம். கீழோர்க்கு அஞ்சேல்! குன்றென நிமிர்ந்து நில்.
அப்பு : முடியலையேடாப்பா.
ரசம் : தாத்தாவ்! விடுதலையைப் பெறடா… நீ விண்ணிலே நிலைபெறடா. கெடுதலை ஒன்றுமில்லை. கீழ்மை உதறிட்டா.
அப்பு : டேய் ரசம்! நீயும் அவள் கோஷ்டியில் சேர்ந்துட்டியா? அடாபுடான்னு என்னன்னவோ சொல்றியே.
ரசம் : நான் சொல்லலை தாத்தா. பாரதியார் சொல்கிறார்.
அப்பு : பாரதியாரா? யாரு அவர்?
ரசம் : ஐயகோ! பாரதியார் நூற்றாண்டிலே போய், பாரதியார் யாருன்னு கேட்கறீங்களே தாத்தா.
அப்பு: பார்! அதி மயக்கமா இருக்குடா. ஒண்ணுமே புரியலை. என் வயிற்றைப்பார்.
(ஜிப்பாவைத் தூக்கி வயிற்றைக் காட்டுகிறார். வயிறு உள்ளடக்கி உட்டியாணா போஸ் தருகிறது. சிறு குடலின் மடிப்புக்கள் மினி சைஸ் எம். இ. எஸ். டிரான்ஸ்ஃபார்மர் வளைவுகளின் தோற்றம் தருகின்றன.)
ரசம் (பதறியவனாக) : தத்திரிகிட! தத்திரிகிட தித்தோம்! வெறும் சோற்றுக்கோ வந்ததிந்தப் பஞ்சம்! தாத்தாவ்! தனிமனிதனுக்குணவில்லையெனில் இந்த ஜெகத்தினை அழித்திடுவோம். பாட்டி மறுபடி உங்கக் கிட்டே ராங் பண்ணிச் சாப்பாடு போடலியா? தாத்தா. தேவி பராசக்தி ஆணை உரைத்தேன். உங்களுக்குச் சாப்பாட்டுக்கு நான் வழி பண்றேன். பாரதி என்ன சொன்னான் – வயிற்றுக்குச் சோறிடவேண்டும். இங்கு வாழும் மனிதருக்கெல்லாம்……
அப்பு : யாருக்கோ தெரியுது. சீதேக் கிழவிக்குத் தெரியலையே. இரண்டு நாளாகக் குலைப்பட்டினி. அதை விடக் கொலைக் குளிர்.
ரசம் : என்ன ஆச்சு தாத்தா?
அப்பு : அந்த மூலையைப் பார்! எல்லாம் இதனால் வந்த வினை.
(ரசகுண்டு அப்பு காட்டிய திக்கைப் பார்க்கிறான். ஒரு பழைய நாற்காலி. பிளாஸ்டிக் நாரினால் பின்னப் பட்டது. உட்காருமிடத்தில் உள்ள நார்கள் சந்திர மண்டலத்து எரிமலை வாய்போலக் கிழிந்து பள்ளமாய்க் கிடக்கிறது. அதில் யாரோ உட்கார்ந்து தானும் விபத்துக்குள்ளாகி அதையும் விபத்துக் குள்ளாக்கியிருக்கிறார்கள் என்பதை ஊகிக்கிறான் ரசகுண்டு)
ரசம் : என்ன நடந்தது தாத்தா?
அப்பு: பால் கமிஷன் ரிப்போர்ட் மாதிரியெல்லாம் விசாரிக்காதேடா. எனக்குப் பசி மயக்கம். (குழறுகிறார்) என் ‘பன்’னல்லவா? இரண்டு கண் வாங்கிட்டு வாடா. (மயக்கமுற்று விழுகிறார்.)
ரசம் (பதறி) : பஞ்சமோ பஞ்சம் என்றே – நிதம் பரிதவித்தே உயிர் துடிதுடித்துத் துஞ்சிமடிகின்றாரே இவர் துயர்களைத் தீர்க்கவோர் வழியிலையே (எழுப்புகிறான்) தாத்தா, தாத்தா, இதோ இரண்டு பன் வாங்கி வர்ரேன். ப்ளீஸ் செத்துகித்துப் போயிடாதீங்க. உங்களைத்தான் நம்பி வந்திருக்கிறேன் ஒரு காரியத்துக்கு.
(அப்புசாமியின் மயக்க நிலையிலும் அவர் கை வின்ஸ்டன் சர்ச்சிலின் புகழ்பெற்ற ‘வி’ சமிக்ஞைபோல இரண்டு விரல்களைக் காட்டிக் கொண்டிருக்கிறது.)
ரசம் : தாத்தா! இரண்டு பன்னென்ன, இருபத்து நாலு பன் வாங்கி வருகிறேன்.
(பக்கத்திலுள்ள டீக்கடைக்கு ஓடி பன்களும் டீயும் வாங்கி வந்து அவருக்குச் சிறிது சிறிதாக ஊட்டுகிறான். அப்புசாமி கண்ணை மூடியவாறே கண்ணிழந்த கார்ப்பரேஷன் வண்டிக் காளை மாதிரி பன் துண்டுகளை அசை போடுகிறார். அவர் கண் சிறிது சிறிதாகத் திறக்கிறது.)
ரசம் : ஒளிபடைத்த கண்ணினாய் வா வா வா… உறுதி கொண்ட நெஞ்சினாய் வா.. வா.. வா… தெளிவு பெற்ற மதியினாய் வா வா…வா… சிறுமை கண்டு பொங்குவாய் வா… வா.. வா…
அப்பு (நன்றாகக் கண்விழித்து): நான் எங்கிருக்கிறேன். தெல்லாம் என்ன ஒரே பன்னும் டீயும் பெருக்கெடுத்து ஓடறது?
ரசம் : தாத்தா; திடீர்னு நீங்க மயக்கமாயிட்டீங்க. பன்னும் டீயும் தந்தேன். முழிச்சிகிட்டீங்க… குளிரால் வெடவெடன்னு நடுங்கிட்டிருந்தீங்க. என் லுங்கியை அவிழ்த்து மேலே போர்த்தியிருக்கேன்.
(அப்புசாமி மெதுவாக எழுந்து உட்காருகிறார். உடம்பில் தெம்பு பிறக்கிறது.)
அப்பு : ரசம்? எந்த மாதிரியான இக்கட்டிலே வந்து நீ கைகொடுக்கிறே. ஆகா. உன் பேர் ரசமில்லைடா. ரவி சாஸ்திரி!
ரசம் : தாத்தா! சாதிகள் இல்லையடி தாத்தா! என்னை வெறும் ரவி என்று கூப்பிட்டாலே போதும். பாரதியாருக்குச் சாதிகளெல்லாம் பிடிக்காது.
அப்பு: பாரதியார்? எங்கோ கேள்விப்பட்ட பெயரா இருக்குடா…
ரசம் : தாத்தா! உங்களுக்கு இப்பத்தான் சுயநினைவு கொஞ்ச கொஞ்சமா வருது. பாரதியாரைத் தெரியாது, நம்ம பாரதியாரை? மெதுவா நினைச்சுப்பாருங்க. ‘நாம் இருவர்’ சினிமாவிலே பேபி கமலா டிரம் மேலே ஆடுவாளே டான்ஸ். ஞாபகம் வருதா? வெற்றி கொண்டே சங்கு ஊதுவமே. நாமிருக்கும் நாடு நமதென்பதறிந் தோம்… பெரிய டிரம் மேலே… பேபி கமலா ஆடுவாளே… அப்போ பாடற பாட்டு… அந்த பாரதியார்.
அப்பு (சடாரென்று நிமிர்ந்து எழுந்து நின்று உணர்ச்சிவசப்பட்டு) : வந்தே மாதரம்! வந்தே மாதரம்! தேசிய மகாகவி பாரதியாரைத்தானே சொல்கிறாய்?
ரசம் (அப்புசாமியைக் கபாலென்று இறுகக் கட்டிக் கொண்டு) : தாத்தா. உங்களுக்குச் சுய உணர்வு பூரா திரும்பிடிச்சி! ஜய ஜய பவானி! ஜய ஜய பாரதம்! ஜய ஜய மாதா! ஜய ஜய துர்க்கா! வந்தே மாதரம்! வந்தே மாதரம்! அதிரத மன்னர்காள்! துரகதத்ததிபர்காள்! எதிரிகள் துணுக்குற இடித்திடு பதாதிகள்! வேலெறி படைகாள்! சூலெறி மறவர்காள்! (அவன் பேசப் பேச அப்புசாமி படிப்படியாக நிமிர்ந்து நின்று விறைப்பாகிறார்.
அப்புசாமி: போதும்டா! போதும்! இதற்கு மேல் பாடாதே என் நரம்பெல்லாம் டொய்ங் டொய்ங்னு முறுக்கேறிக்கிட்டே போவுது! முறுக்கு! டேய் ரசம்! உடனே போயி நாலு முறுக்கு வாங்கிட்டு வா! அதைத் தின்னுட்டு அந்தக் கிழவியை உண்டு இல்லைன்னு ஆக்கிடறேன். டியேய் சீதே! என்னையாடி குளிரில் தள்ளி, கொலைப்பட்டினி போட்டே?
ரசம் : தாத்தா! சபாஷ்! இந்த மாதிரி வலிவு மிகுந்த தாத்தாவைத்தான் தேடிவந்தேன். எடுத்த காரியம் யாவினும் வெற்றி, எங்கு நோக்கினும் வெற்றி! இதோ போய் முறுக்கு வாங்கிட்டு வர்ரேன். பட்டர் முறுக்கா? ஆர்டினரி முறுக்கா? கை முறுக்கா?
(அப்புசாமி உணர்ச்சிவசப்பட்டு அம்ஜத்கான் மாதிரி சிரித்துக்கொண்டு)
அப்பு : முறுக்கு! கை முறுக்கு! கால் முறுக்கு! எந்த முறுக்காகினும் எவ்வளவு வேண்டுமானாலும் கொண்டு வந்திடடா! புல்லியர் கூட்டத்தினைப் பூழ்தி செய்திடறேன்.
(ரசகுண்டு மீண்டும் டீக்கடைக்கு ஓடிச்சென்று பத்து முறுக்குகளும் இரண்டு கப் டீயும் வாங்கி வருகிறான். அப்புசாமி அவற்றை அட்டகாசமாகத் தூளடித்து விழுங்கி, இரண்டொரு ஏப்பங்களைக் கர்ஜிக்கிறார்.)
ரசம் : தாத்தா! இப்பத்தான் நான் தேடிவந்த புரட்சித் தாத்தாவாக நீங்க இருக்கீங்க.. உங்களைத் தேடி வந்தது எதற்குன்னு கேட்கலியே?
அப்பு : ரசம்! எனக்கு நீ உயிரைக் கொடுத்தே. நீ என்ன கேட்டாலும் இதோ தந்தேண்டா.
ரசம் : தாத்தா! அப்படியானால் உடனே கிளம்புங்கள் என்னுடன்
அப்பு : எங்கேடா?
ரசம் : கேள்வி கேட்காதீங்க…
அப்பு : இரு. அந்த நாற்காலியைக் கையோடு எடுத்து வந்துடறேன். அதுலேதான் விவகாரமே இருக்கு. இப்ப நாம் எங்கே போறோம்?
ரசம் : எங்க வீட்டுக்கு.
காட்சி – 2
ரசகுண்டுவின் வீடு. பீமாராவ், அரைபிளேடு அருணாசலம், ஆகியோர் அப்புசாமியை அலங்கரித்துக் கொண்டிருக்கிறார்கள். அப்புசாமிக்குப் பாரதியார் மேக்கப் நடந்துகொண்டிருக்கிறது. பக்கத்தில் கிழிந்து போன நாற்காலி போட்டிருக்கிறது. அப்புசாமி முகத்தில் ஒரே சோகம்.
அரைபிளேடு : வாத்யாரே! நம்ம பூரதியார் இப்போ ருந்தார்னாகண்டி ஒன்னை மாதிரியேதான் இருப்பாரு வாத்யாரே. படா சோக்காகீது பூரதியார் வேசம்!
ரசம் (எரிச்சலுடன்) : யோவ் அரைபிளேடு! இன்னொரு வாட்டி பூரதியார்னு சொன்னே?… படா ரகளையாயிடும் ஆமா…
அரைபிளேடு : இன்னாயா ராங்கு! புரச்சிக்கவி பூரதியார்னா இன்னா ரைம் வரும். அம்சமா கீது. டைட்டில் அப்படித்தான் வைக்கணும். பைனான்சியர்ங்கற மொறையிலே சொல்றேன்.
ரசம் : யோவ் பிளேடு! பணம் போட்டதுக்காக உன் தலைப்பை எல்லாம் ஒப்புக்கணும்னு இல்லே.தெரிஞ் சுக்கோ. நான் டைரக்டர். நம்ம கையிலே ராங்வச்சுக்காதே. நான் அக்கினிக்குஞ்சு! தத்திரிகிட தத்திரிகிட தித்தோம்.
பீமாராவ் : ரசா! ஏனப்பா ரகளை? இன்னும் முதல் ரிகர்சலே ஆகலே. பைனான்ஸ் ஆகினவ ஹேளுதே கரெக்ட்டு, கெலசவ நோடப்பா.
அப்பு ( சங்கடத்துடன்) : டேய் ரசம்! உன்னோட பாரதி பக்தியை நான் பாராட்டறேண்டா. ஆனாலும் எனக்குப் பயமா இருக்குதடா… சீதேக் கியவி இங்கே வந்து மெரட்ற மாதிரி! ஆமாம்.. நாற்காலி விஷயம் கவனிக்கி றேன்னியே… அதை முதல்லே கவனிடா… ஒரே நடுக்கமா இருக்கு.
ரசம் : தாத்தா, நீ ஒளி! நீ சுடர்! நீ புகழ்! நீ வீரம்.
அப்பு : டேய் ரசம்! உணர்ச்சி ஏறமாட்டேங்குதுடா. பாரதியாராவெல்லாம் என்னால் நடிக்க முடியுமா? பாரதியார்னா எவ்வளவு வீரமா நடக்கணும், வாட்ட சாட்டமா வரணும், போகணும். பீமாராவ் இருக்கானே, இவனைப் போடு, பிரமாதமா இருக்கும்.
ரசம் : தாத்தா, அதையும் ட்ரை பண்ணினேனே. அவன்கிட்டே மொழிப்பற்று அதிகமா இருக்கு ‘வாழ்க தமிழ் மொழி, வாழ்க தமிழ்மொழி, வாழிய வாழியவே’ன்னு ஓபனிங் ஸாங் பாடுடான்னா ‘வாள்க நென்ன கன்னட மொளி வாள்க நென்ன கன்னட மொளி, பாளிய பாளியவே’ன்னு பாடறான்.
அப்பு : டேய் ரசம்! பேசாமல் நீயே பாரதியாரா நடிச்சிடுடா…நல்லா உணர்ச்சியாப் பேசறே, பாடறே. ஆடறே, ஓடறே?
ரசம்: நான் ரொம்பக் குள்ளம். பாரதியார் புகழ் என்னால் குறையக்கூடாது தாத்தா!
அப்பு : அப்போ அரை பிளேடையே போட்டுடு, அவன் நல்ல உயரம்.
ரசம் : அவனையும்விட்டு வைக்கலை. ட்ரை பண்ணினேன். ‘சுட்டும் விழிச் சுடர்தான் கண்ணம்மா’ பாடச்சொன்னேன். அவன் பாடறான். ‘சுட்டும் வியிச் சுடர்தான் கண்ணம்மா… தே.. இந்தாமே ஒன்னியேதான்… சூரிய சந்திரரோ’ என்கிறான். ‘சொந்தமாவெல்லாம் சேர்த்துப் பாடாதேடா’ என்றால் ‘நான் பைனான்ஸியர். அப்படித்தான் சேர்த்துப்பேன்’ என்கிறான்.
அரை : நைனா! எதுலேயும் நடுவுலேநாலு சொருவு வுடணும். நைனா… சொராப் புட்டு கணக்கா அப்பத்தான் சொகுசா இருக்கும். இந்தக் கஸ்மாலத்துக்கு எங்கே பிரியுது?
அப்பு : டேய் ரசம்! வசனமெல்லாம் மறந்து போயிடு மோன்னு பயமா இருக்குதுடா…இந்த பேஜாரெல்லாம் எனக்கு வோணாம். எப்படியாவது என் நாற்காலி சமாசாரத்தைக் கவனிச்சுட்டியான்னா போதும்டா…
அரை : யோவ் வாத்யாரே! நீ இன்னாயா சாவு கிராக்கியாகீறே? மறுபடி மறுபடி நாற்காலி, நாற்காலின்னுகிட்டேறே? ஆயிரம் ரூபாபோட்டு நாடகம் நடத்தி ஒரு நூறு இருநூறு லாபம் பார்க்கலாம்னு செட்டப் பண்ணினா, காரியத்தையே கெடுத்துப் பூடுவே போலிருக்குதே.. இன்னாயா கஸ்மாலம் ஒன் நாக்காலி!
அப்பு : ரசம்! இந்த அரை சொல்றானேன்னு அலட்சியமா இருந்துடாதே. எப்படியாவது நாற் காலியைத் தள்ளிவுட்டு என்னைக் காப்பாத்துடா…
அரை : யோவ்! பூரதியாரா லெச்சணமா நாலு டயலாக் பேசுய்யான்னா நாஸ்டாவைத் தின்னிட்டு நாக்காலி நாக்காலின்னுட்டே உசிரை வுடறே? ஊர் உலகத்திலே இல்லாத நாக்காலி! (நாற்காலியை எட்டி ஓர் உதை விடுகிறான். ஏற்கெனவே நலிந்த நிலையிலிருந்த நாற்காலி, முக்காலியாகிறது.)
அப்பு : ஐயோ! ரசம்! போச்சே என் நாற்காலி! என்னடா பண்ணுவேன்.
ரசம் (ஆத்திரத்துடன்) : பீமா! எரிதழல் கொண்டு வா! அரை பிளேடின் கையினை எரித்திடுவோம்! யோவ் பிளேடு! பைனான்ஷியர் என்கிற திமிரிலே இன்னா வோணும்னாச் செய்யறதா?
அரை : இன்னாபா! வாயி கீயுது! திமிர் கிமிர்னே பெண்டு நிமிர்ந்துடும் நைனா…
பீமா : கோப பேடாப்பா சமாதானா… சமாதானா…
ரசம் : தாத்தாவ்! மேக்கப்பைக் கலைங்க. எடுத் தெறிங்க. மீசையை! கழற்றிக் கடாசுங்க தலைப்பாகையை!
அப்பு : என்னடா.. ரசம்.. என்னடா சொல்றே?
ரசம் (ஆவேசத்துடன்) : தாத்தா! அடிமைக்குத் தளையில்லை யாருமிப்போது! இடிபட்ட சுவர்போலே விழுந்தான். கிருத யுகம் எழுக மாதோ! தாத்தா! இந்த அரைபிளேடு இனி அனாவசியம்! பூமியில் எவர்க்கும் இனி அடிமை செய்யோம்.. நமக்கு வேண்டாம் இந்த நாடகம்.
அரை : போங்கடா பொறுக்கிக் கஸ்மாலங்களா… நான் இன்னித் தேதிலே நினைச்சேன்னா குய்யூ வரிசைலே கொணாந்து குவிப்பேண்டா பூரதியாருங்களை… வேசம் கட்டவா ஆளில்லை? நம்ம நாஸ்டாவைத் தின்னுட்டு நம்ம கைலே வேலை காட்டறீங்க…டாய்!
பீமா (அரைபிளேடின் கையைப் பற்றிக்கொண்டு) : பேடாப்பா நீவு எவ்வளவு தொட்டு மனுஷரு! ரகளை பேடாப்பா…ரசகுண்டு சிக்கு ஹுடுவா… தாத்தா தொட்டு ஹுடுவா… மன்னிச்சுடு ரெண்டு பேரையும்…
அரை : உன் மூஞ்சிக்காகப் போறேன்… இன்னாவோ கவி கவிங்கறாங்களே. நாமும் பூந்து புறப்பட்டு எதுனாச்சும் தேத்தலாம்னா கஸ்மாலங்க காரியத்தைக் கெடுத்துட் டாங்க. கொண்டாய்யா மீசை, தலைப்பாவை…
(அப்புசாமியிடம் ஒட்டிக் கொண்டிருந்த பாரதி மீசையையும் தலைப்பாகையையும் பறித்துக் கொண்டு வெளியேறுகிறான்.)
அப்பு : ரசம்! ரசம்! எப்படியாவது என் நாற்காலி விஷயத்தைக் கவனிடா…
ரசம் : தாத்தாவ்! ஏமாறுகிறதற்கும் ஓர் அளவு உண்டு. இந்த பழைய நாற்காலியை எவனாவது நூறு ரூபாய்க்கு வாங்குவானா தாத்தா! ஏன் வாங்கினீங்க? அறிவு வேணாம்? ஒரு பொருளை வாங்கறது சுலபம். விற்கறதுதான் கஷ்டம். செல்வ முற்றிழந்துவிட்டாய்! தருமா! தேசமுங் குடிகளும் சேர்ந்திழந்தாய் (இடிந்து உட்காருகிறான்).
அப்பு : ரசம்! என்னடா காற்றைப் புடுங்கி விடறே? நீயே இடிஞ்சு போயிட்டா நான் என்னடா செய்வேன்… நூறு ரூபாய்க்கு இதை நான் எப்படிடா விற்றுத் தேத்துவேன்… (ரசத்தின் தோள் அருகில் பெருமூச்சு விடுகிறார்.)
ரசம் : தாத்தாவ்! நான் ஏற்கெனவே எரிச்சல்லே இருக்கேன். தோள்மேலே வந்து உங்க தூக்கப் பெருமூச்சை விடாதீங்க. நீங்க கொஞ்ச நேரம் பாரதியாரா வேஷம் போட்டீங்களே அந்தக் கொஞ்ச நேர வீரமாவது உங்களுக்கு இருக்க வேணாமா? அப்படி நாற்காலியிலே உட்காருங்க…
(அப்புசாமி ஜாக்கிரதையாக மூணு கால் நாற்காலி யில் போய் உட்காருகிறார். ரசம் அவர் உட்கார்ந்திருப் பதையே கொஞ்சநேரம் பார்த்துக் கொண்டிருக்கிறான். திடீரென்று அவன் முகமும் மூளையும் பிரகாசமாகிறது. நரம்புகளில் சுறுசுறுப்பேறுகிறது.)
ரசம் : ஆகா! தாத்தா ஐடியா! வெற்றி கூறுமின் வெண் சங்கூதுமின்!
அப்பு : எதை வேணுமானாலும் ஊதறேன். நாற்காலி விஷயத்தை மட்டும் கவனிச்சுடுடா.
ரசம் : தாத்தா! எந்த நாற்காலியாலே உங்களுக்கு அவப்பெயர் வந்ததோ அந்த நாற்காலியாலே நீங்க புகழை அடையப் போறீங்க பாருங்க!
பீமா : ஏனப்பா திட்டம்? கொஞ்சம் விவரமா ஹேளப்பா.
ரசம் : தாத்தா! இந்த நாற்காலி சாதாரண நாற்காலி இல்லை. பாரதியார் உட்கார்ந்த நாற்காலி! நீங்க பாரதி யாராக் கொஞ்சநேரம் இருந்தீங்க இல்லையா? நீங்க உட்கார்ந்தீங்க இல்லையா? ஆகவே பாரதியார் உட்கார்ந்த நாற்காலி! இதை வெச்சுத்தான் ஐயாவோட பிளான்.
(அப்புசாமியிடமும் பீமாவிடமும் தன் திட்டத்தை விவரிக்கிறான். திட்டத்தைக் கேட்ட வுடன் அப்புசாமி ஆடுகிறார்.)
அப்பு : ஆடுவோமே, பள்ளுப் பாடுவோமே. சப்பாஷ்டா ரசம். சப்பாஷ். அடியே சீதே! விண்டு போயிட்டேன்னு நினைச்சுக்காதேடி வித்தாரக்கள்ளி! வெட்ட வெட்டத் துளிர்க்கும் கட்டப் புளியமரம்டி நான்.
ரசம் : பீமா! ஜரூரா எல்லாக் காரியத்தையும் சுவனிக்கணும்.
அப்பு : ஏண்டா ரசம், சீதேக்கியவி ஏதாவது சதி பண்ணிடுவாளா? திட்டமெல்லாம் நல்லா நடக்குமா?
ரசம் : தாத்தாவ்! தத்திரிகிட தத்திரிகிட தித்தோம்! உறுதி! உறுதி! உறுதி! உறுதிக்கேயோர் உடையுண்டாயின் இறுதி! இறுதி! இறுதி! நம்ம திட்டம் நிச்சயம் வெற்றித் திட்டம் தாத்தா.
காட்சி – 3
(அப்புசாமி சுற்றி வந்து பாடுகிறார். சீதாப்பாட்டி ஒரு வாரத்து பெங்களூர் விசிட்டைமுடித்துக் கொண்டு திரும்பிச் சில மணித் துளிகளே ஆகியிருந்தன.)
அப்பு : அடி வாஹ்டி என் கப்பேக் கிழங்கே! அடி வாஹ்டி அடி வாஹ்டி! பாடாதே வாயைத் தெறந்து… அடி வாஹ்டி… அடி வாஹ்ஹ்டி!
சீதாப்பாட்டி (எரிச்சலும் அருவருப்புமாக) : நிறுத்துங்க. என்னது இது பார்பேரிக்காகச் சுற்றிச் சுற்றி வந்து ஆடறீங்க?
அப்பு : அடி வாஹ்டி! அடி வாஹ்டி! அடி கூடு கட்டுற குயிலே! புது மேடை கட்டற மயிலே!
சீதா : ஏதாவது ஹிஸ்டீரியாவா? ஓவர் குளிரால் மூளையிலே கோளாறு ஏற்பட்டுட்டுது போலிருக்கு.
அப்பு (வாயில் விரலை வைத்து ‘விஷ்’ என்று விசில் அடிக்கிறார்) : ஏண்டி கிய்வி! மொகத்தை ஏண்டி மொகஞ்சதாரோ பொம்மை மாதிரி வெச்சிக்கீறே! என் ரூமிலே போட்டுக்கறதுக்காக ஏலக் கடையிலே நூறு ரூபாய்க்கு ஒரு நாற்காலி வாங்கிட்டேன்னு என்னை என்ன கொடுமை பண்ணிட்டே? அந்த நாற்காலியிலே, உன்னைப் பார்க்க வந்த பா. மு. கழகக் குண்டச்சி ஒருத்தியை நீயே உட்காரச் சொல்லிட்டு, கிழவி தொபுகடீர்னு விழுந்தா, அது என் பொறுப்பா? அதுக்கு நான் ஏண்டி தண்டனை அனுபவிக்கணும்? (வாஹ்டி என் கப்பேக் கிழங்கேயை ‘ஹம்’ செய்தவாறு சுற்றி வருகிறார்).
சீதா : என் கழகத்தின் ஆனரபிள் மெம்பர் உங்க ஓட்டை நாற்காலியிலே உட்கார்ந்து விழுந்தப்போ கையைக் கொட்டிச் சிரிக்கலை நீங்க? டீஸன்ஸிக்கும் உங்களுக்கும் ரொம்பத் தூரம்.
அப்பு : பொம்பிளைதாண்டி சிரிச்சாப் போச்சு! ஆம்பிளை நல்லாச் சிரிக்கலாம்டி
சீதா : நான் வீட்டைப் பூட்டிக்கொண்டு போன ஒரு வாரமும் சிரிப்பாய்ச் சிரிச்சிருப்பீங்களே? நாற்காலியை எந்த ஆக்ஷன் கடையிலே வாங்கினீங்களோ அதே ஆக்ஷன் கடையிலே ரிடர்ன் பண்ணி நூறு ரூபாயை வாங்கிட்டு வாங்க. இல்லையானால் இந்த வீட்டிலே உங்களுக்கு போர்டிங்கும் கிடையாது லாட்ஜிங்கும் கிடையாது!
அப்பு : பெப்பரப்பே! இதைப் பாருமே!
(ஒரு துண்டு நோட்டீசைப் பாட்டி முன் டான்ஸ் ஆட வைக்கிறார். சீதாப்பாட்டி வெடுக்கென்று பறித்துப் படித்துப் பார்க்கிறாள்.)
சீதா (படிக்கிறாள்) : பெருந்திரளாக வருக! வருக! வந்து காணுங்கள். பாரதியார் உட்கார்ந்த நாற்காலி!
(தலையை நிமிர்த்தி) அட்ரோஷியஸ்! இது என்ன கோல்மால்?
அப்பு : மேலே படிமே சும்மா!
சீதா : அமைச்சர் திறப்பு விழா செய்கிறார். ஓ! மை குட்னஸ்! ஒண்ணா நம்பர் ஃபிராட் ஆக எப்போ மாறினீர்கள்? திஸ் இஸ் கோயிங் டு பி எ ஸீரியஸ் அஃபர்! கேரள மார்க் ஸ்கேண்டலைவிடப் பெரிய ஊழலா யிருக்கும் போலிருக்கே. பாவம். அப்பாவியான ஒரு மந்திரியை வேறு இன்வால்வ் பண்ணியிருக்கீங்க.
அப்பு : மந்திரி திறந்து வெச்சிடுவார். முதலில் சில பேருக்கு இலவசமாகப் பார்க்க விடுவோம். அப்புறம் காசு வாங்கிட்டு அனுமதிப்போம். பார்க்கறதுக்குப் பத்துப் பைசா உட்கார்றதுக்கு ஒரு ரூபா.
சீதா : நான்ஸென்ஸ்! ‘இதுதான் பாரதியார் உட்கார்ந்த நாற்காலிங்கறதுக்கு புரூஃப் என்ன’ எல்லாரும் ப்ளாக் ஹெட்டா?
அப்பு : கெக்கே! அதுக்குத்தான் மந்திரியைக் கொண்டு தெறந்து வைக்கிறது. புரியுதாமே? மந்திரியே திறந்து வெச்சாச்சுன்னா ஆதாரமில்லாமல் இருக்கு மான்னு அவனவனுங்க வந்து விழுவானுங்க – ஆனி மாசத்து ஈ அல்வாக் கடையிலே வந்து விழற மாதிரி.
சீதா : உங்க மாதிரி மோசடியாச் சில பேர் செய்யற காரியத்தாலே அசலாக பாரதியார் உட்கார்ந்த நாற்காலியை அசலாக யாராவது வெச்சிருந்தால் அவங் களுக்குக்கூடக் கெட்டபெயர். பாரதி ஸென்ட்டினரி இயர்லே இந்தமாதிரி நடந்துகொள்ள ஆர் யு நாட் அஷேம்ட்?
அப்பு : நம்ம நடு ஹாலிலே கிழிந்த நாற்காலியை வெச்சு சும்மா ஜல்னு அதுமேலே ஒரு பாரதியார் படம்! ஒரு ரோஜா மாலை! ஒரு கட்டு ஊதுபத்தி! அவ்வளவு தான் செலவு, அப்புறம் க்யூ வரிசைதான். வரவு அயிட்டம் தான். வசூலாகிற பணத்துலே என்ன பண்ணப் போறேன் தெரியுமாடி கியவி! ஒன்பது ஷோலாப்பூர் போர்வையை வாங்கிட்டு அடுக்கடுக்காய்ப் போர்த்திட்டு தூங்கப் போறேன். உனக்கு வேணுமானாலும் பிச்சையா ஒண்ணு போத்தறேன்.
சீதா : ஊம்… மேன் ப்ரபோஸஸ். காட் டிஸ்போஸஸ்…
அப்பு: எல்லாரும் உட்காரதுக்கு ஒரு ரூபான்னா நீ உட்காரப் பத்து ரூபா.
சீதா (யோசித்துவிட்டு ஒரு புன்னகையுடன்) திறப்பு, விழா ஃபங்க்ஷனுக்கு என்னுடைய பரிபூர்ண விஷ்ஷஸ்.
அப்பு : எதுனாக் கடைசி நிமிஷக் கோல்மால் பண்ணிக் கவுத்துடலாம்னு மட்டும் கெனாக் காணாதேடி கெய்வி!
சீதா : ஒய் ஷுட் ஐ? ஐ ஹாவ் காட் பெட்டர் திங்க்ஸ் டு டூ ஒரு மினிஸ்டர் நம்ப வீட்டுக்கு வருகிறார்னா எனக்கு மட்டும் அது பெருமையில்லையா?
அப்பு : அடியே கில்லாடி! இன்னாவோ மாதிரி சிரிச்சிகினு சொல்றே! ஒரு வார்த்தை சொல்லி வைக்கிறேன். எதுனா மிஷ்டீக் பண்ணிக் கவுத்துடலாம்னு மட்டும் பார்க்காதே… ரசகுண்டு பாடினாப்போல… உறுதி உறுதி.. உறுதி… உறுதி போனால் இறுதி. இறுதி.. இறுதி…
காட்சி- 4
இரவு 12 மணி. அமைச்சரின் பிரம்மாண்டமான (வாடகை) இல்லம். கீழ்த்தளத்தின் முன்பகுதியில் சின்ன ஹால். காரியதரிசி ராஜாபாதரின் அறை. ராஜாபாதர் கடியாரத்தைப் பார்த்துக் கொட்டாவி விட்டவாறே முணு முணுத்துக்கொண்டு ஏரைக் கட்டிக்கொண்டிருக்கிறார் சற்றே அவசரமாக. மனக்கண் முன் புது மனைவி சிணுங்கு கிறாள். ‘இன்னாங்கோ… ஒரு நாளப் போல ராத்திரி ஒரு மணிக்கும் ரெண்டு மணிக்கும் வந்துகிட்டு அடி, மினிஸ்டர் கிட்டே செக்ரெட்ரின்னு தெரிஞ்சுதானே கட்டிக்கிட்டே? இப்ப உழைச்சு நல்ல பெயர் எடுத்தா அமைச்சர் என்னை ஸ்பெஷல் பி. ஏ. வாகப் பண்ணிக் கொண்டுவிடற சான்ஸ் இருக்குது…’
போன் ‘கிர்…’ என்று அழைக்கிறது. எடுக்கிறார்.
காரியதரிசி : ஹலாவ்!
குரல் : நான் மொட்டைக் குரல் பேசறேன்.
காரி : மொட்டைக் குரலா? யார்ரா நீ? அயோக்கியக் கழுதை! இது மினிஸ்டர் வீடு… வை போனை.
குரல்: எச்சரிக்கை பண்றேன். உங்க அமைச்சருடைய நாளையப் புரோக்ராம் என்ன? நீ காரியதரிசி ராஜாபாதர் தானே? நோட் இட் டவுன்…நாளைப் பிற்பகல் ஷார்ப்பா இரண்டு முப்பத்தைந்துக்கு அவருக்கு என்ன புரோக்ராம் ஷெட்யூல் வெச்சிருக்கிறே?
காரி : அதைக் கேட்க நீ யார்? முதலிலே நீ யார்ன்னு சொல்லு. போலீஸ்லே இன்ஃபார்ம் பண்ணனும். அறிவு கெட்ட ராஸ்கல்…
குரல் : உங்க மினிஸ்டர் நாளைக்கு பாரதியார் உட்கார்ந்த நாற்காலியைத் திறந்து வைக்கிறார் இல்லியா?
காரி : ஆமாம். அதற்கென்ன?
குரல் : எச்சரிக்கிறேன். அந்த ஹாலிலே வெடிகுண்டு வெச்சிருக்கு.
காரி : வெடி குண்டா? டூப் அடிக்கிறாயா? யார்ரா நீ மடையா…யார்? யார்?
(மறுமுனையில் டெலிபோன் வைக்கப்படுகிறது.)
காரியதரிசி ராஜாபாதர் உடம்பெங்கும் சுறுசுறுப்பு கன்னா பின்னாவென்று பரவுகிறது. கொஞ்சநேரம் பித்துப்பிடித்த பிள்ளையார் எறும்புபோலப் பர பரப்புடன் அறைக்குள் சுற்றிச்சுற்றி வருகிறார். பெரிய காரியதரிசிக்கு டயலைச் சுழற்றலாமா? சங்கதியைக் காலையில் சொல்லிக் கொள்ளலாமா? நடவடிக்கை எடுக்க முன்கூட்டியே ஏன் சொல்லலை என்று கோபிப்பாரோ? வேண்டாம். கிரெடிட்டை ஒரேடியாக நாமே தட்டிக்கொள்வது நல்லது… தீர்மானிக்கிறார். விடிகாலையில் ஒரு ஜீப் சகிதம் சில செக்யூரிடிகளுடன் தானே ஸ்தலத்துக்குப் போவது. தர்ரோ செர்ச். குண்டு மட்டும் மாட்டினது கண்டி… நியூஸைஃபிளாஷ் பண்ணி அப்போதே ரிப்போர்ட்டர் மார்ட்டினுக்கு ஒரு சுழற்றுச் சுழற்றிட்டா ஆசாமி கொன்னுருவான்… ‘காரியதரிசியின் சமயோசித புத்தியால்’ என்கிறது சின்ன டைட்டில் ‘அமைச்சர் உயிர் தப்பினார் பெரிய தலைப்பு. நல்ல இம்பாக்ட்
காட்சி – 5
விடிகாலை நாலு மணி. சீதாப்பாட்டியின் வீட்டு வாசல் வழியே ஒரு மார்கழி மாத பஜனைக் கோஷ்டி செல்கிறது. சில வினாடிகளில் பின்னாடியே ஒரு போலீஸ் ஜீப் வருகிறது. வாசலில் விழா வேலைக்காகக் காகிதம் ஒட்டிக்கொண்டிருக்கிறார்கள் ரசகுண்டுவும் பீமாவும் அப்புசாமியும். வெளியிலிருந்து விஷமிகளைவிட்டு சீதாப் பாட்டி ஏதாவது ரகளை செய்துவிடுவாள் என்கிற முன் ஜாக்கிரதையுடன் பாரதி நாற்காலி போடப்பட்டிருந்த ஹாலை வெளிப்பக்கம் பூட்டியிருக்கிறார்கள். ஜீப் வந்து நிற்பதைக் கவனிக்கின்றனர்.
ரசகுண்டு : தாத்தாவ்! போலீஸ் ஜீப்!
அப்புசாமி : ஐயோ! போலீஸா? ஏண்டா காலங் காலையிலே?
பீமா : போலீஸ் முகத்திலே காலையிலே முளி குடுதப்பா. பேஜாரு. கடவுளே, ஏனு சங்கட?
அப்பு : டேய்! கியவி ஏதோ வெச்சிட்டா போலிருக் குதுடா வெடி.
ரசம் (உணர்ச்சியுடன்) : தத்திரிகிட தத்திரிகிட தித்தோம்! தாத்தா அச்சம் தவிர்! நொந்தே போயினும் வெந்தே மாயினும்…
நந்தேசத்தவர்… உவந்தே
சொல்வது வந்தே மாதரம்!
ஜெய் வந்தே மாதரம்!
ஜெய் பாரதி! ஜெய் பவானி!
தாத்தா! போர்! போர்! வீரப்போர்! அறப்போர்! வெற்றி கூறுமின்! வெண் சங்கூதுமின்!
அப்பு : டேய் ரசம்! லாத்தியோட போலீஸ் காரங்கடா…(நடுங்குகிறார்.)
ரசம் : நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலை கெட்ட மனிதரை நினைத்துவிட்டால், சிப்பாயைக் கண்டு அஞ்சுவார்! ஊர்ச்சேவகன் வருதல் கண்டு மனம் பதைப்பார். துப்பாக்கி கொண்டு ஒருவன் வெகு தூரத்தில் வரக்கண்டு வீட்டிலொளிவார்.
அப்பு : நான் அப்பவே சொன்னேன்டா….. (காரியதரிசி ராஜாபாதர் போலீஸ் அதிகாரி பின்தொடர மிடுக்குடன் வருகிறார்.)
அதிகாரி : கதவைத் திற மேன்!
ரசம் : ஏன் திறக்கவேண்டும் கதவு? எதற்குத் திறக்க வேண்டுத் கதவு?
அதிகாரி:திறங்கடா கதவையின்னா… கட்டபொம்மன் வசனமா பேசறே? (ரசகுண்டுவின் பிடரியில் ஒரு தட்டுத் தட்டுகிறார்.)
ரசம் (வீறுபெற்று எழுந்தது) :
நாடு காப்பதற்கே – உனக்கு
ஞானம் சிறிதுமுண்டோ?
வீடு காக்கப் போடா – அடிமை
வேலை செய்யப் போடா!
காரியதரிசி : ரொம்ப அல்ட்டுறானே! ஆபீசர்! நீங்க உள்ளே போங்க. தர்ரோ செர்ச் பண்ணுங்க.
(அப்புசாமி விழுந்தடித்துக் கொண்டு மாடிக்கு ஓடுகிறார். பாட்டியை எழுப்புகிறார்.)
அப்பு : சீதே! சீதே! அடிப் பேயே! போலீஸ் வந்து உடைக்கிறதடி நம்ம வீட்டுக் கதவை! எழுந்தேலோ ரெம்பாவாய்!
சீதா : என்னை ஏன் டிஸ்டர்ப் பண்ணுகிறீர்கள்? போலீஸா? வீட்டை உடைக்கிறார்களா? காலையிலே வந்து என்ன உபத்திரவம் பண்ணுறீங்க?
அப்பு : கியவி! நீதாண்டி ஏதோ சில்மிஷம் பண்ணி யிருக்கணும்.
சீதா : மை குட்னஸ்! நான்பாட்டுக்கு கோல்ட் பிடிச்சுப் படுத்துக் கிடக்கேன். ஆமாம். போலீஸ் எப்படி நம்ம வீட்டு லாக்கை உடைக்கலாம்? (கீழே இறங்கி வருகிறாள் மிடுக்காக.)
சீதா (புன்னகையுடன்) : ஐயம் ஸாரி ஆபீசர்! நீங்க செய்வது அனாதரைஸ்ட் என்ட்ரி! காட் எனி வாரண்ட்? நீங்க என்ன ரெய்டுக்கு வந்த ஐ. டி. பீபிளா? இன் தட் கேஸ்… இதோ இவர்கிட்ட பூட்டின ஹாலுடைய சாவி இருக்கு. திறந்து நல்லாப் பாருங்க. உள்ளே ஹாலிலே பாரதியார் உபயோகித்த நாற்காலி எக்ஸிபிட் பண்ணி யிருக்கு தட்ஸ் ஆல்.
காரி : நாங்கள் தர்ரோ செர்ச் பண்ணணும்…ஒரு மர்மமான டெலிபோன் வந்திருக்கிறது,
சீதா : தாராளமாகப் பாருங்க. (அப்புசாமியிடம்) உங்களைத்தானே? ஹாண்ட் ஓவர் ஹிம் யுவர் கீ.
ரசம் : (பிடரியில் வாங்கிய அடியின் வலியினூடே) : தாத்தாவ்! சாவியைத் தராதீங்க… நரி வகுத்த வலையினிலே தெரிந்து சிங்கம் நழுவி விழும்; சிற்றெறும்பால் யானை சாகும்; வரி வகுத்த உடற்புலியைப் புழுவுங் கொல்லும்; வருங்காலம் உணர்வோரும் மயங்கி நிற்பர். கொடுத்துடா தீங்க சாவியை!
அப்புசாமியிடமிருந்து சாவியை லபக்கென்று அதிகாரி பறித்து ஹாலைத் திறக்கிறார்…ஹாலில் நடுவே ஒரு பிய்ந்த நாற்காலி. அதில் ‘பாரதி உட்கார்ந்த நாற்காலி’ என்ற கொட்டை எழுத்தில் எழுதியிருக்கிறது. அருகே டெலிவிஷன் செட் அதில் ‘பாரதி உபயோகித்த டெலிவிஷன்’ என்று எழுதியிருக்கிறது. அதற்கும் அருகே வீடியோ செட் அதில் ‘பாரதி உபயோகித்த வீடியோ’ என் று எழுதியிருக்கிறது. டெலிபோன் கருவி மீது ‘பாரதி உபயோகித்த டெலிபோன்’ என்று எழுதியிருக்கிறது. அதிகாரி எல்லா இடமும் தர்ரோவாகத் தேடுகிறார்.) அதிகாரி: எவனோ குண்டு விட்டிருக்கிறான் காரிய தரிசி சார்!
சீதா : வாட் இஸ் த மேட்டர்!
காரி (ஏமாற்றத்துடன்) : இங்கே ஏதோ குண்டு இருப்பதாக ஒரு மர்மக் குரல் நடு ராத்திரியில் எனக்கு வந்தது.
சீதா : நான்தான் பேசினேன்.
காரி (அதிர்ச்சியுடன்) : நீங்களா? நீங்க என்னத்துக்குப் பெரீமா அப்படிப் போன் போட்டீங்க? வெள்ளாடறீங்களா?
சீதா : பெரீமா பொரீமான்னு அப்ஸர்டாக் கூப்பிடாதீங்க. அட்ரஸ் மி மேடம்! உங்க வீடு இருக்கிற தெருவோரத்தில் புட்டு விற்கிற ஆயாக் கிழவின்னு நினைச்சுட்டீங்களா என்னை… .இது பாரதி ஸாகா…நான் பாரதியுகத்துப் புதுமைப் பெண். அண்டர்ஸ்டாண்ட்? நீங்க செக்ரட்ரியா வந்து எத்தனை மாசமாகுது?
காரி : ஒரு வருஷம் ஒரு மாசம் கம்ப்ளீட்டட்!
சீதா : என்ன பிரயோசனம்? யார் கிட்டே எப்படிப் பேசறதுன்னு தெரியலை. ஐ ஹாவ் டன் யூ எ நைஸ் திங். என்மேலே வள்னு வுழறீங்க?
ராஜா : ஸாரிங்க மேடம்.. என்ன நன்மைன்னு புரியலீங்க.
சீதா : ஐ ஷல் எக்ஸ்ப்ளெயின், உங்க மினிஸ்டர் ன்னிக்கு இரண்டு மணிக்கு வந்து ஓபன் பண்ணப் போறாரே… பாரதி உட்கார்ந்த நாற்காலி? இந்த ஹாலிலே இன்னும் பாரதியார் உபயோகித்த சாமான்களை யெல்லாம் பார்த்தீங்களா? குண்டைத் தேடினீங்க. அது கிடைக்கலை. அவ்வளவுதானா?
ராஜா : புரியலீங்க மேடம்!
சீதா : புரியாதால்தான் நீ இன்னும் பிரமோஷன் இல்லாம இருக்கிறே! பாரதி உபயோகித்த டி. வி. பாரதி உபயோகித்த வீடியோ அப்படீன்னெல்லாம் அட்டை தொங்குதே! அப்ஸர்டாத் தெரியலை? பாரதி காலத்தி லேயே மெட்ராஸுக்கு டி. வி. வந்துட்டுதாக்கும்? இதை அரேஞ்ச் பண்ணின மிஸ்டர் அப்புசாமி பாரதி மேலே அதிகப்படியான பித்துப்பிடித்தவர்.. ஏறக்குறைய பாரதி பைத்தியம். தன்கிட்டே எது கிடைத்தாலும், தான் எதைப் பார்த்தாலும் பாரதி உபயோகித்தது என்று சொல்லுவதில் அவருக்கு ஒரு வெறி, உங்க அமைச்சரை இப்படி ஒரு பித்துக்குளித்தனத்தில் இன்வால்வ் பண்ண வச்சுட்டீங்களே?
ஸ்பாட்டுக்கு முன்கூட்டியே நீங்க வந்து பார்க்கணும்னு தான் ராத்திரி அப்படிப் போன்லே பேசினேன்.
(ராஜாபாதர் தடாலென்று சீதாப்பாட்டி காலில் விழுகிறார்.)
காரி : இப்பவே ஓடிப்போய் ப்ரோக்ராமைக் கான்ஸல் பண்றேன். மேடம்! என்னைக் காப்பாற்றினீங்க…
(எழுந்து போகிறார்.)
அப்பு : அடி நீலி! நாங்கள் நாற்காலியிலே மட்டும் தானே ‘பாரதி உட்கார்ந்தது’ன்னு எழுதி வைத்தோம். நீ அங்கிருந்த எல்லாச் சாமான்களிலும் எழுதி வைத்து எங்க திட்டத்தையே அம்பேல் பண்ணிட்டியேடி… ரசம்! நான் அப்பவே சொன்னேனில்லையாடா?
ரசம் : சீ! போங்க தாத்தா அப்பாலே! (சீதாப் பாட்டியைச் சுற்றி வந்து கும்பிடுகிறான்.) யாதுமாகி நின்றாய் காளி எங்கும் நீ நிறைந்தாய். தீது நன்மை யெல்லாம் நின்றன் செயல்களன்றியில்லை! ஆதிசக்தி தாயே! என்மீது அருள்புரிந்து காப்பாய்!
(அப்புசாமி மயக்கமடித்து விழுகிறார்.)
– அப்புசாமியும் பாரதி நாற்காலியும், முதற் பதிப்பு: 1999, பூம்புகார் பதிப்பகம், சென்னை.