கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 1, 2025
பார்வையிட்டோர்: 344 
 
 

(2006ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

நிலாவின் மேற்பரப்பில் காணப்படும் நீர்த்திவலைகள் போலிருந்தன அவளின் முதுகுப்பகுதியில் காணப்பட்ட நீர்த்துளிகள். இப்போதுதான் குளித்துவிட்டு வீட்டுக்குள் நுழைகிறாள் அவள். தோளின் ஒரு முனையில் ஈரத்துணிகள் அவளை அட்டைபோல ஒட்டிக்கொண்டிருக்க, இறுக்கிக்கட்டப்பட்ட அந்த கருப்பு நிற உள்ளாடை அவளின் கணவனைப்போல அவளைக் கட்டிக்கொண்டிருந்தது. உடம்பிலிருந்தும் உடையிலிருந்தும் விழுந்த நீர்த்துளிகள் சொர்க்கத்தை அனுபவித்து விட்டதைப் போன்று ஆனந்தம் கொண்டாடின.

கன்னிப்பெண்ணைக் கண்டதும் கால் பின்னால் ஓடிவரும் அழையா இளைஞர்களின் கண்கள் போல அவளின் காலடியோடு ஒட்டிக் கொண்டு வந்தன கொல்லைப்புரத்து செம்மணல்கள் வீட்டுக்குள் நுழையுமுன் அவள் தன் கால்களிலிருந்த மண்ணைக் கால் துடைப்பானில் தட்டிவிட்டாள். காதலி இகழ்ந்த காதலன் போல அவை மனமுடைந்து வாழ்க்கை வெறுத்து விருப்பமற்று விடுதலை பெற்றன.

அவள் உள்ளே நுழைந்த நேரம், சொல்லிவைத்தாற்போல் வந்தான் அந்த சொர்க்கத்துக்குச் சொந்தக்காரன். அவன் வந்து அவள் பெயர் சொல்லிக் கூப்பிட்ட விதமே நமக்கு அதை உறுதிப்படுத்தியது. அவனுக்கு இப்போதுதான் கல்யாணமாகி இருக்கவேண்டும் என்பதை! பெயரைக் கூப்பிடுவது பிரியமானவன் என்பது அவளுக்கும் தெரிந்துவிட்டது. அது அவள் வெட்கத்தோடு வந்து கதவைத் திறந்த விதம் நமக்குச் சொல்லியது.

திறந்தவன் முகத்தில் தென்றலோடு கூடிய மலரைக் கண்ட மயக்கம். வண்டாய் மாற வாஞ்சை கொண்டான். முகத்திலும் ஆங்காங்கே முற்றுப்புள்ளியாய் நீர்த்துளிகள். மஞ்சள் கொண்ட முகத்தில் மருதாணி நிறம் வெட்கமாய் வந்து விட்டுவிட்டு நின்றது.

வெட்கம் சிந்தும் மான் விழிகளைக் கண்டு வேங்கை ஒன்று வெறுப்புற்று விடுமோ? தலையில் கட்டிய ஈரத்துண்டும் நெஞ்சை நனைத்திருக்கும் ஈரத்துணிகளும் பொங்கிப்பாயும் புது நிற வெட்கமும் புத்தம் புதிய மஞ்சள் நிலவாய் புன்னகை பொலியும் பூமகள் முகமும், வந்தவன் கண்களைப் போதையாக்கி அவனின் மனதைப் பேதையாக்கின.

“குளிச்சியா…”

ஆமென்று தலையாட்டித் திரும்பிக்கொண்டது சொர்க்கம்.

கட்டிக்கொண்டவன் அவளைக் கட்டிக்கொண்டான். இரவறிந்த அவளுக்குப் பகலறிவது புதுசு. வேண்டாமென விட்டு விலகினாள். ஈரத்துணிகள் அவனை இம்சை செய்தன. பின்னாலிருந்து பிடித்த அவனுக்கு மேடுகள் பள்ளமாகின. பள்ளங்கள் மேடாகின. முயற்சியின் தோழமையோடு முயன்ற அவனுக்கு வெற்றியின் கிண்ணமாய் அது கையில் பட்டது. சட்டென்று அதை எட்டி அவிழ்த்தான். விடுதலை பெற விரும்பியது அது. விடாமல் அதை கைக்குள்ளே இழுத்து விடுதலை தவிர்த்து தன் விருப்பமின்மை சொன்னாள் அவள்.

வீட்டுக்குள்ளே ஒரு போர் நடந்தது. பிடித்ததும் துடித்ததும் அவளின் நிலை. பிடித்ததால் பிடித்தது அவனின் நிலை.

எப்படி இருப்பினும் அவள்தான் ஜெயிக்கணும் என்றொரு நிலையில் அவள் இருந்தாள்.

சத்தமாய் கொஞ்சம் குரலை உயர்த்தி ‘சொன்னாக் கேளுங்கோ’ என்று கிணற்றுத்தவளைக் குரலில் சொன்னாள்.

அடங்காத மனது அடம் பிடித்தது. நேரங்காலம் தெரியாமல் காலை வாரி விட்டது. கொஞ்சம் ரோஷமாய் தள்ளி வந்தது. இம்சை கலந்த விடுதலையை எண்ணி வேல்விழியாள் உள்ளறைக்குச் சென்றாள்.

உடை மாற்றி அவள் வெளிவந்த போது கயிற்றுக்கட்டிலில் படுத்திருந்தான் அவன்.

“கோபமா…?”

“சரி.. சாப்பிடலாம் வாங்க…”

“சாப்பாடு வேணாம்….”

“என்னாச்சி உங்களுக்கு……?”

“சொன்னாத்தான் தெரியுமோ?”

“ஏன் இப்படி நடந்துக்கிறீங்க….?”

“எப்புடி நடக்குறாக?”

“சரி.. பேசாம வந்து சாப்பிடுங்க… மத்ததெல்லாம் அப்புறம் பாக்கலாம்.”

“அப்புறம் எதையும் நா பாக்க விரும்பலே.’

“சின்னக்கொழந்தை மாதிரி அடம் புடிக்காதீங்க.”

மெல்ல அவன் அருகினில் வந்து கைகளைப் பிடித்து சாப்பிட அழைத்தாள். இழுத்து வராததைக் கொடுத்து வரவைக்கலாம். உச்சந்தலையில் அழுத்திக்கொடுத்து தலை கோதி அவன் கைகளைத் தொட்டாள். கைகளைத் தொட்டதால் வந்தது வினை. உறங்கிப் போயிருந்த மதில் பூனை படக்கென்று ஏறி அவள் மார்புக்கு வந்தது.

கொஞ்சமாய் எரிச்சலும் கொஞ்சமாய் அவஸ்தையும் அவளைக் குழப்பிக்கொண்டிருக்க, எதிரியைத் தாக்க இதுதான் நேரம் என்பது அவனுக்குத் தெரிந்திருந்தது.

சட்டென்று பற்றி சடுதியில் அவளை அழுத்தினான். கிட்டிய மகிழ்ச்சியில் முட்டிக்குதித்தான். மாட்டிய எலியாய் உடல் தடுமாற மனமது அவளை மயக்கித் தள்ள, யாரும் வந்து கதவைத் தட்டினால் எல்லாம் போய்விடும் என்றே பயந்தாள்.

இப்போது எல்லாம் சுமூகமாக நடக்கிறது.


வீட்டிற்கு வெளியே கொல்லைப்புறத்தில் ஒரு மாமரம். மாமரத்திற்கு அடியில் ஒரு மரக்கட்டில். கட்டிலில் கிடந்தாள் அவள். மகனுக்கு, தான் மரித்துப்போவதற்கு முன் திருமணம் செய்து பார்க்க ஆசைப் பட்டவள்.

கணவன் காட்டுக்குப்போய் இருபது வருடங்கள் ஆகின்றன. நன்றாகத்தான் போனார், இருபது ஆடுகளுடனும் நாலு மாடு களுடனும்! திரும்பி வரும்போது கட்டிலில் தூக்கி வந்தார்கள். வரும்போதே அவர் பாதி இல்லை. கடைசியாய் அவளிடம் அவள் கண்களைப் பார்த்துச் சொன்னார், ‘எப்புடியாவது நீ பொழச்சிருட்டிடீ. நா இல்லையின்னு வருத்தப்படாதே.. செரியா…’

புருஷன் பரமேஷ்வரன். சொன்ன வார்த்தை காக்கும் பெண்கள். கோலமங்களம் பெரிய பெரிய வீட்லெ பெரியவுக வேலைக்குக் கூப்பிட்டாக. சென்றாள். வேலையைத்தான் பார்த்தாள். பெரியவுக வேலையை மட்டும் பார்க்கவில்லை. மத்ததெல்லாத்தையும் பாத்தாக. மனசுக்குள் வலி வந்துவிட்டது.

உடம்பு சரியில்லை என்று வெளியே வந்துவிட்டாள். வெட்டு வெட்டப்போனாள். கூலிக்கு மண் சுமந்தாள். இறக்கும்போது அவர் கருவையும் கொடுத்துவிட்டுச் சென்றது ஒருவிதத்தில் சந்தோச மாகவும் மறுபக்கம் வேதனையாகவும் இருந்தது.

இறந்த எட்டாவது மாதத்தில் வெளியே வந்தான் அவன். அப்படியே அப்பனை உரித்து வைத்தமாதிரி. அதனால் ஊர் வாயில் இருந்து தப்பித்தாள். முந்தானைக்குள் வளர்த்தாள்; முடிந்தவரை உழைத்தாள்; சாணி பொறுக்கினாள்; சுள்ளி எடுத்து விற்றாள்; கடலை மிட்டாய் செய்தாள்; பள்ளி வாயிலில் விற்றாள். அதையும் அவன் சொல்லி அழுதபோது வேண்டாம் என்று விட்டாள். மீண்டும் மண் வேலை!

அப்பனைப்போல கெட்டிக்காரன். அசராமல் படித்தான். ஏதோ அவனே பிரியப்பட்டு படித்துவிட்டு உள்ளூர் கூட்டுறவு நிலையத்தில்

600 ரூபாய் சம்பளத்தில் வேலை. பெண்ணையும் அவனே தான் பார்த்தான். ஏனோ இதிலெல்லாம் அவளைக் கேட்க வேண்டும் என அவனுக்குத் தோணவே இல்லை.

மண்வெட்டியபோது அது காலையும் சேர்த்து வெட்டியது. நல்ல காயம். இரும்புநீர் சேர்ந்து கொண்டது. பெரிதானது. சீழ் வடிந்தது. ‘இந்த வேலைக்கெல்லாம் ஒன்னை யாரு போகக் சொன்னா சனியனே!’ என்றான் எடுத்த எடுப்பில் அவன்.

எல்லாம் எரிந்தது அவளுக்குள். படுத்த படுக்கையானாள். அவனின் ஆசைப்படி காதலித்தவளை மணந்துகொண்டான். அவளின் மற்ற ஆசைகளை மறந்துவிட்டான். எப்படியும் மூணு மாதமாவது ஆகலாம். இல்லை ஆறு மாதம்.

அவளின் கால் கட்டைவிரல்களைக் கட்டெறும்புகள் குத்தகை எடுத்திருந்தன. கொஞ்சம் கொஞ்சமாய் அதைத் தின்று முடித்தன.

ஒற்றைத்துணி உடலை போர்த்தியிருக்க அவளைச் சுற்றி உறவுக் கூட்டமாய் ஈக்கள்.

கண்கள் வெறித்திருக்க….,

ஒன்றுக்கும் இரண்டுக்கும் ஒன்றாய் போனாள்.. படுத்த படுக்கையில். ‘உயிரின் கடைசி அவஸ்தை அவளிடம்! வாய்க் குள்ளிருந்து வந்தது. “ச்செ, எப்படியாவது ஒரு பேரக்குழந்தையை பாத்துட்டு போயிட்டா.. அப்பா?”

எப்போதோ சோறு போட்ட நாய் இப்போது அவளை நோக்கி வந்தது. ஒற்றைத் துணித்திரையை நாக்கால் தள்ளி, வேண்டியதை மட்டும் நக்கிக்கொண்டது.

– மருதம், முதற் பதிப்பு: டிசம்பர் 2006, எம்.கே.குமார் வெளியீடு, சிங்கப்பூர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *