ஆளுக்குத் தகுந்த சாட்சி

0
கதையாசிரியர்: ,
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: November 13, 2025
பார்வையிட்டோர்:
 
 

(1981ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

கண்ணப்பன் என்பவனிடம் விலை உயர்ந்த இரத்தினக்கல் ஒன்று இருந்தது. ஒருமுறை அவன் தேசாந்திரம் செல்ல வேண்டியிருந்தது. இரத்தினக் கல்லைத் தனக்குத் தெரிந்த நண்பனான சாமிக்கண்ணு என்பவனிடம் கொடுத்து, “நண்பா நான் தேசாந்திரம் போகிறேன். வருவதற்குப் பல மாதங்கள் ஆகும். அதுவரை இந்த இரத்தினக் கல்லைப் பத்திரமாக வைத்திருந்து நான் வந்ததும் கொடு” என்றான் கண்ணப்பன். 

சாமிக்கண்ணும் அந்த இரத்தினக் கல்லை வாங்கிக் கொண்டான். 

பல மாதங்கள் சென்றன. 

கண்ணப்பன் தேச சஞ்சாரம் செய்து முடித்து விட்டு ஊருக்குத் திரும்பி வந்தான். வந்தபின் ஒரு நாள் சாமிக்கண்ணுவின் வீட்டிற்குச் சென்று தன் இரத்தினக் கல்லைத் திரும்பக் கொடுக்குமாறு கேட்டான். 

“உன்னுடைய இரத்தினக் கல்லை நான் அப்பொழுதே திருப்பிக் கொடுத்து விட்டேனே” என்றான் சாமிக்கண்ணு. 

கண்ணப்பன் மரியாதைராமனிடம் சென்று  முறையிட்டான். 

கண்ணப்பன் எப்படியும் மரியாதைராமனிடம் செல்வான் என்பது சாமிக்கண்ணுவுக்குத் தெரியும். எனவே கண்ணப்பன் சென்றதும் தன் நண்பர்களான சவரத் தொழிலாளி, சலவைத் தொழிலாளி, மண்பாண்டத் தொழிலாளி ஆகிய மூவரிடமும், “இதோ பாருங்கள், கண்ணப்பனிடம் நான் இரத்தினக் கல்லைத் திருப்பிக் கொடுக்கும் போது நீங்கள் பார்த்ததாக மரியாதைராமன் சபையில் சாட்சி சொல்ல வேண்டும்” என்று முன் கூட்டியே சொல்லி வைத்து விட்டான். 

கண்ணப்பன் மரியாதைராமனிடம் தன் வழக்கைக் கூறியதும் மரியாதைராமன் சாமிக்கண்ணுவை அழைத்து வரச் சொன்னார். 

சாமிக்கண்ணு வந்ததும், “இவருடைய இரத்தினக் கல்லை நான் அப்பொழுதே திரும்பக் கொடுத்து விட்டேனே!” என்றான். 

“நீ இவரிடம் கொடுக்கும் போது சாட்சிகள் யாராவது இருந்தார்களா?” என்று கேட்டான் மரியாதைராமன். 

“என் வீட்டுக்கு வழக்கமாக வரும் சலவைத் தொழிலாளியும், சவரத் தொழிலாளியும், மண்பாண்டத் தொழிலாளியும் நான் இரத்தினக் கல்லை இவரிடம் கொடுக்கும் போது இருந்தார்கள். அவர்களைக் கூப்பிட்டுக் கேட்டால் உண்மையைச் சொல்வார்கள்” என்றான் சாமிக்கண்ணு. 

மரியாதைராமன், சாமிக்கண்ணு சொன்ன மூன்று பேரையும் அழைத்து வரச் சொன்னான். மூன்று பேரையும் தனித்தனி அறைகளில் சிறை வைக்கச் சொன்னான்: மூவரிடமும் அவர்கள் பார்த்ததாகச் சொல்லும் இரத்தினக் கல்லைப் போல் களி மண்ணில் செய்து காட்ட வேண்டும் என்று உத்தரவிட்டான். 

மூன்று பேருமே இரத்தினக் கல்லைப் பார்த்தறியாதவர்கள். இருந்தாலும் மூவரும் தங்களுக்குத் தெரிந்த பொருள்களைப் போல் களிமண்ணால் செய்தனர். 

சவரத் தொழிலாளி சவரக் கத்தி தீட்டும் சாணைக் கல்லைப் போலவும், சலவைத் தொழிலாளி துணி துவைக்கும் கல்லைப் போலவும், மண்பாண்டத் தொழிலாளி வண்டி சக்கரம் போலவும், களிமண்ணால் செய்தார்கள். 

இவைகளைப் பார்த்த மரியாதைராமன் அவர்கள் பொய் சாட்சி கூறுகிறார்கள் என்பதை புரிந்து கொண்டான். 

“சாமிக்கண்ணு, உன்னுடைய சாட்சிகள் சொல்வதிலிருந்து அவர்கள் இரத்தினக் கல்லையே பார்த்திராதவர்கள் என்று தெரிகிறது. உன் வாயால் நீ உண்மையைச் சொல்லாவிடில் உனக்குக் கடுந்தண்டனை தருவேன்” என்றான் மரியாதைராமன். 

சாமிக்கண்ணு தன் குற்றத்தை ஒப்புக் கொண்டு இரத்தினக் கல்லைத் திருப்பிக் கொடுத்து விட்டான். 

மரியாதைராமன் ஏமாற்றுக்கார சாமிக்கண்ணுவுக்கும், பொய்சாட்சி கூறிய மூவருக்கும் ஆளுக்கு ஐம்பது கசையடிகள் கொடுக்கச் சொல்லி உத்தரவிட்டான். 

– மரியாதைராமன் கதைகள், முதற் பதிப்பு: ஏப்ரல் 1981, கண்ணப்பன் பதிப்பகம், சென்னை.

பதிப்பாசிரியர் முகவுரை (மரியாதைராமன் கதைகள் - பதிப்பியல் நோக்கில சில குறிப்புகள்)  மரியாதைராமன் கதைகள் இப்பொழுது இரண்டாம் பதிப்பாக வெளிவருகிறது. இவ்வேளையில், முதற்பதிப்பு வெளிவந்த காலத்திற்குப்பின் இக்கதைகள் தொடர்பாக என்னால் தொகுக்கப்பெற்ற சில அரிய குறிப்புகளை இங்குப் பதிவுசெய்கிறேன். அவற்றோடு இப்பதிப்பினைக் குறித்தும், மரியாதைராமன் கதைப்பதிப்புகள் குறித்தும் குறிப்பிடத் தக்க செய்திகளையும் இங்கே அளிக்கின்றேன். இச்செய்திகள் இக்கதையிலக்கிய ஆர்வலர்க்கும் அன்பர்களுக்கும் பயன்மிக நல்கும் பான்மையனவாகும்.  புகழ்மிகு கதையிலக்கியங்கள் :  விக்கிரமாதித்தன்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *