நாடோடிக்கதை வரிசை-23

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: August 10, 2012
பார்வையிட்டோர்: 10,617 
 
 

நாடோடிக்கதை வரிசை-23 ஹரியானா மாநிலம்

அந்த விவசாயி தன் தொழிலின் மேல் மிகவும் ஆர்வம் கொண்டவர். எந்த நேரமும் வயல்காடே கதி என்று கிடப்பார். தன் வயல், தோட்டம் ஆகியவற்றின் ஒவ்வொரு அங்குலமும் அவருக்கு அத்துப்படி.

விவசாயத்தில் புதிது புதிதாக ஏதாவது செய்துகொண்டே இருப்பார். வெவ்வேறு இரண்டு பயிர்களை கலப்பு இன முறைப்படி சேர்த்து புதிய வகை தாவரத்தை உருவாக்குவார்.

ஒரு முறை தன் தோட்டத்தில் அவர் தர்ப்பூசணி பயிரிட்டு இருந்தார். பெரிய தர்ப்பூசணி விளைய வேண்டும் என்று தனக்குத் தெரிந்த விவசாய முறைகளை எல்லாம் பயன்படுத்தி தர்ப்பூசணித் தோட்டத்தில் வேலை பார்த்தார்.

விவசாயியின் உழைப்பும் பரிசோதனை முறையும் வீண்போகவில்லை. சாதாரண அளவைவிடப் பெரிய பெரிய தர்ப்பூசணிகள் விளைந்தன. அவற்றை எல்லாம் நல்ல விலைக்கு விற்றார்.

ஒரே ஒரு தர்ப்பூசணி மிகப் பெரிதாக இருந்தது. அது அளவில் இன்னும் வளரும் என்று விவசாயிக்குத் தோன்றியது. அந்த தர்ப்பூசணி வளர்ந்திருந்த கொடியை கவனமாகப் பராமரித்து வந்தார்.

ஒருநாள், மாறுவேடத்தில் நகர்வலம் வந்தார் மன்னர். மிகப்பெரிய தர்ப்பூசணியைப் பார்த்த அவருக்கு ஆச்சரியமாகிவிட்டது. விலைக்குக் கேட்டார். விற்க மறுத்தார் விவசாயி.

‘‘இதை நான் மன்னருக்குப் பரிசாகக் கொடுக்கவே வளர்க்கிறேன்’’ என்றார் விவசாயி.

‘‘மன்னர் வாங்கிக்கொள்ள மறுத்துவிட்டால்..?’’ என்று கேட்டார் மாறுவேடத்தில் இருந்த மன்னர்.

‘‘வீணாகப் போ’’ என்று சொல்லிவிட்டு வந்துவிடுவேன்’’ என்றார். மன்னர் போய்விட்டார்.

சில நாட்கள் கழித்து பழத்தோடு அரண்மனைக்குப் போனார் விவசாயி. மன்னரைப் பார்த்ததுமே அடையாளம் தெரிந்துபோயிற்று. ஆனாலும் காட்டிக்கொள்ளவில்லை.

‘‘மன்னா, என் அன்பளிப்பை ஏற்றுக்கொள்ளுங்கள்’’ என்று பணிவாகச் சொன்னபடி தர்ப்பூசணிப் பழத்தைக் கொடுத்தார்.

மன்னர் அதை வாங்கவில்லை. விவசாயியையே உற்றுப் பார்த்தபடி, ‘‘உன் அன்பளிப்பை நான் ஏற்கவில்லை என்றால்…’’ என்று நிறுத்தினார்.

சிரித்தபடியே ‘‘என் பதில் உங்களுக்கே தெரியும் மன்னா’’ என்றார் விவசாயி.

வெளியான தேதி: 01 டிசம்பர் 2006

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *