கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: September 16, 2022
பார்வையிட்டோர்: 15,679 
 

(1991ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

பாகம் ஒன்று | பாகம் இரண்டு

இது போல் இன்னும் எவ்வளவோ நீண்ட ஞாபகங்களின் ஆதாரமாய் இருக்கிற இந்த அத்தை வீட்டில் நுழையும்போது கிட்டத்தட்ட இருட்டிவிட்டது. இருட்டைவிட இப்படிக் கிட்டத்தட்ட இருட்டுகிற நேரத்துக்கு எப்போதுமே உரிய அழகுடன் எல்லாமே இருந்தது. மிகச் சிக்கனமாக ஏற்றப்பட்ட விளக்குடன் இருந்த அந்த வீட்டுக்குள்ளேயே சின்னுவும் இருக்கலாகாதா என்று எனக்குத் தோன்றியது. இப்படி ஒரு இருட்டில், இப்படி ஒரே ஒரு விளக்கை ஏற்றிக் கொண்டு தானே சின்னு தனியாக இருப்பாள் பாவம்.

ஆனால் தினகரிக்கு இந்த நரையிருட்டுப் பிடிபடவில்லை போல, என்னுடன் ஒட்டிக்கொண்டாள். என் இடது முழங்கையைப் பற்றிக் கொண்டாள். அவளுடைய உலகம் வெளிச்சங்களால் நிரம்பியது. ஒரு வீட்டிற்குள், குளியலறைக்குள், தலைவாரும் கண்ணாடி முன்கூட அனிச்சையாக மின் வெளிச்சம் தேட ஆரம்பித்துவிட்ட உலகம் அது. தாயின் மார்புக்காம்பிற்கும் மின்பொத்தானின் அமைப்புக்குமான ஒற்றுமையின் தூண்டுதல் கூட இதற்குக் காரணமாக இருக்கலாம். நிஜமான வெளிச்சம் என்பதை தினகரியோ அவள் வயது பிள்ளைகளோ அறிந்திருப்பதாகத் தெரியவில்லை . விடிகிற, அடைகிற இதுபோன்ற நேரத்தின வெளிச்சத்தை மிக நிச்சயமாக அறிந்திருக்க வில்லை. காலை என்பது என்ன என்ற கேள்விக்கான பதில்கள் அவர்களிடம் சூரியனைச் சம்பந்தப்படுத்தித் துவங்குமா என்பதே சந்தேகம். நிறையச் சம்பந்தங்களில் இருந்து அவர்கள் விடைபெற்றுக் கொண்டிருக்கிறார்கள்.

தினகரி கையைப் பிடித்துக்கொண்ட நேரத்துக்குள் இவ்வளவும் தோன்றிவிட்டது. கையை பிடித்துக்கொண்ட விதத்தின் அடிப்படையான மகிழ்ச்சியில், எனக்கு வலது பக்கமாக வந்து கொண்டிருந்த தினகரியின் அம்மாவுடைய கையைச் சற்றுப் பிடித்துக் கொண்டேன். வளையல்கள் உரசுகிற, சேலைத் தலைப்பு படுகிற கை. என் கையைவிடச் சிறு கை. வெதுவெதுப்பானது. என்ன என்று உதறாமல் விரல்களே பரிவுடன் புரிந்து கொண்டது போல், சற்று நேரம் என் பிடிக்குள் முழுக் கையையும் இருக்க அனுமதித்து, சற்று விடுவித்து மீண்டும் என் கையைத்தன் விரல்களுக்குள் வைத்துக்கொள்கிறது. இது எல்லாம் நடப்பதற்கு அதிகபட்சம் ஒரு நிமிடம் ஆகியிருக்காது. ஆனாலும் அந்த நீர்த்த இருட்டும் இடது கையிலும் வலது கையிலும் புதைந்த விரல்களுமாக நன்றாக இருந்தது. சட்டென்று ஒருத்தருக்கொருத்தர் வாழ்க்கை முழுவதையும் பரிமாறிக்கொண்டது போலிருந்தது. இருட்டுக்குள் வெளிறலாக அசைந்த செடிகள் – இந்த இடத்தில் ரொம்பகாலமாக அத்தை வீட்டில் கனகாம்பரச் செடிகள் உண்டு – கூடுதலான ஒரு அழகைத் தந்துவிட்டிருந்தது. அந்தச் செடி இல்லாவிட்டால் இந்தப் பற்றுதல் இவ்வளவு நுட்பம் அடைந்திருக்காது என்றெல்லாம் தோன்றியது. தினகரி கை அப்படியே இருக்க, இவளுடைய கை விடுவித்துக் கொண்டது.

தூரத்தில் வீட்டின் கடைசிக் கட்டுக்குள் இருந்து சிறு சிம்னி விளக்குடன் மங்காயி அத்தை வந்துகொண்டிருந்தாள். அந்த வீட்டுக்குள்ளோ பக்கத்து வீடுகள் ஒன்றிலோ யாரோ தோசைக்கு அரைத்துக் கொண்டிருக்க வேண்டும். ஆட்டுரலில் குழவி புரள்கிற கடகடா, எனக்கு கற்களையும் பாறைகளையும் ஞாபகப்படுத்தி விட்டது. மங்காயி அத்தை அங்கிருந்து ஒவ்வொரு நிலைப்படியாகத் தாண்டித் தாண்டி வர, மயங்கி மயங்கி மல்லாந்து கிடக்கிற இருளின் பாறையிடுக்குகளில் இருந்து அத்தை வருவது போல இருந்தது. பறவை எச்சங்களும், மிருகங்களின் முதுகு உராய்வுகளும், கவிந்து கிடந்த மரம் தணிந்து தணிந்து கிளை உரசின பச்சையும் வெயிலும் மழையும் கண்ட வழுவழுப்பான பாறைகள் விலகி வழிவிடுவது போல அத்தை வந்து கொண்டிருந்தாள்.

மங்காயி அத்தையாக ஒரு முறையும் சின்னுவாக மறுமுறையும் எனக்குத் தோன்றிக் கொண்டிருந்தது. சின்னுவாக வந்து சின்னுவாக வந்து கடைசியில் அத்தைதான் நின்றாள். ‘எல்லோரும் குனிந்து வாங்க’ என்றாள். கையிலிருந்த குருவிலைட்டை வெளியில் இருந்த மரப்பெஞ்சில் வைத்தாள். நாங்கள் மூன்று பேருமே செருப்பைக் கழற்றிக் கொண்டிருந்தோம். என் பெயரைச் சொல்லி ‘ நீதான் முக்கியமாக குனிந்து வரனும்’ என்றதும் தினகரி என்னை அண்ணாந்து பார்த்து ‘அப்பா நான்’ என்பது போலச் சிரித்தாள்.

நாங்கள் உள்ளே கால் வைக்கும்போது, விளக்கு மாடத்தில் இருந்து விளக்கு எரிந்து கொண்டு அதன் கதவுக்குரிய கம்பிகளின் நிழல்கள் தரையில் அசைந்து கொண்டிருந்தன. இரண்டு தூண்களின் பச்சை வர்ணங்களுக்குள் புகுந்து விட முடியாமல் வெளிச்சம் தவித்துக்கொண்டே பளபளத்தது. மங்காயி அத்தை மின்விளக்கைப் போட்டாள். மிஞ்சிப் போனால் 25 வாட்ஸ் இருக்கும். பெரிய மாற்றங்களை அது ஒன்றும் தந்து விடவில்லை. விளக்கு வெளிச்சத்திற்குச் சற்றும் கூடிவிடக்கூடாது என்ற திட்டமிருந்தது அதில். நான் தூணில் சாய்ந்து கொண்டேன். தாங்குவதற்கு என்பது மாதிரியே சாய்வதற்கும் சேர்த்தே தூண்கள் கட்டப்படுகின்றன. அதுவும் இந்த வீட்டுத் தூண்களில் சாயாத தலையிருக்குமா.

மங்காயி அத்தை எங்களை உடகாரச் சொல்லிவிட்டு உள்ளே போய் உட்பக்கம் வைக்கப்பட்டிருந்த இன்னொரு சிம்னி லைட்டுடன் அடுப்படிக்குள் போனாள். ‘ஒண்ணும் செய்ய வேண்டாம். எட்டிப் பார்த்துவிட்டுப் போகலாம் என்று வந்தோம்’ என்று இவள் எழுந்திருந்தாள். சின்னு வீடு இங்கேதானே இருக்கிறது. அவள் இன்னும் அதே வீட்டில்தான் இருக்கிறாளா என்று கேட்டுக்கொள். அத்தைக்குத் தெரியாமல் இருக்காது என்று சொன்னேன். சரி என்கிறது போல எழுந்தாள். உன்னைவிட எனக்கு அக்கறையிருக்கிறது என்பதாக அப்பார்வையிருந்தது. எழுந்தபோது “நீயும் வாட்டி. அப்பா ஒத்தையில கிடக்கட்டும்’ என்று சிரித்தாள். கள்ளச் சிரிப்பாக இருந்தது. தினகரி பின்னால் எழுந்து போனது.

ஏதோ இப்படித் தூணில் சாய்ந்து கொண்டு மங்காயி அத்தை வீட்டில் உட்கார்ந்திருப்பதற்காகப் புறப்பட்டு வந்தது போல நான் மட்டும் தனியாக இருந்தபோது மீண்டும் மீண்டும் ஆர்.கண்ணனின் ஞாபகம் வந்தது. அவனுடைய சிரிப்பும் ‘முதலாளி’ என்ற சொல்லும் ஞாபகம் வந்தது. ‘என்னைக் காப்பற்றுங்கள் என்னைக் காப்பாற்றுங்கள்’ என்று கடைசியில் ஆஸ்பத்திரியில் தவித்ததாகச் சொன்னது, இந்த இடத்தில் கேட்டது. அவனுடைய குரலின் தவிப்பின் பதட்டத்தில் இந்த வெளிச்சம் நலுங்கி அசைந்து நிழல்களைச் சிலிர்த்து உதறிக் கொண்டது போலிருந்தது. தூண்களிலிருந்து சரிந்த நிழல்கள், சரிவின் அகலத்துடன் ஒரு கனத்த கம்பளிப் போர்வையென கண்ணனின்மேல் விழுவது போலவும் அப்படித் தன்மேல் விழுந்துவிடும் முன்னரே ஆக்ரோஷத்துடன் இரண்டு கைகளாலும் அப்புறப்படுத்திக் கைக்கு வந்த திசையில் வீசுவது போல இருந்தது. வீச்சில் மயங்கி மயங்கி எல்லாத் திசைகளிலும் மடிந்து மடிந்து இருட்டுக் குவிய, ஆயாசத்துடனும், பிரயாசையின் தோல்வியில் ஏற்படுகிற சோர்வுடனும் ஆர். கண்ணன் தளர்ந்து கட்டிலில் சரிய வலை போன்று ஆனால் சுருக்கமற்ற ஒரு தடித்த போர்வை அவன் மேல் எழுந்திருக்க இயலாதபடி விழுந்து விட, இப்போது போர்வையின் கீழ் கண்ணன் மூக்குத் துருத்தலும் கீழ்பகுதியில் நிமிர்ந்திருக்கிற கால் விரல்களும் ஏற்படுத்துகிற சுருக்கங்கள் தவிர, பாளமான கருப்பாகக் கட்டில் கிடக்க, இதோ இதில் அமர்ந்திருப்பது யார்? சின்னுவா! சின்னுவுக்கு மூச்சு இருக்கிறதா, சின்னு ஏதாவது உடுத்தியிருக்கிறாளா, சின்னுவிடமிருந்து ஆர்.கண்ணன் இல்லையென்றால் அனைத்தையுமா அகற்றிவிடவேண்டும்.

மேல் துணி ஒன்றுமில்லாது இப்படி இருப்பதை எல்லோருமா பார்க்கிறார்கள். நான் மட்டும் இருக்கிறேனா. என் கையில் கசங்குவது எது? அவள் உடுத்திய புடவையா, உடுத்துவதற்காக நான் எடுத்து வைத்திருக்கும் புடவையா, இந்தப் புடவையைச் சின்னு எப்போது உடுத்தியிருந்தாள்! முதன் முதல் அவளைப் பார்த்தபோதா, எத்தனையோ சமயங்களில் எந்த சமயத்தின் சேலை இது என் கைக்கு வந்திருக்கிறது. வரையப்பட உட்கார்ந்திருப்பது போல் அந்த கட்டிலில் இருக்கிற சின்னுவையே பார்க்கிறேன். ஒரு வேளை ஆர்.கண்ணன் தனியாகக் கடைபோட்டு நடத்திக் கொண்டிருந்த சமயம், அவனுடைய வற்புறுத்தலில் வீட்டுக்குப் போய்ச் சின்னுவைப் பார்த்தோமே, என்னை மட்டும் தனியாக விட்டுவிட்டு சின்னுவும், இவளும் உள்ளே ரொம்ப நேரமாகப் பேசிவிட்டு ஈரக்கண்ணோடு வந்தார்களே அன்றைக்கு கட்டியிருந்த துணிதான் இதுவா. துக்கத்தின் மத்துச் சுற்றலில் திரளும் போதெல்லாம் சின்னு அணிவது இதைத்தானா. சின்னு அப்படியே இருந்தாள். சின்னுலின் கீழ் உட்கார்ந்திருந்த போர்வையின் கீழ் ஆர்.கண்ணன் மூக்கு இருந்த இடத்திலும் கால் பெருவிரல்கள் நிமிர்ந்த இடத்திலும் மட்டும் சுருக்கங்கள் இருக்க, சுருக்கங்கள் தவிர எந்த அடையாளமும் அற்று ஆர்.கண்ண ன் போனது எவ்விதம்.

தூணில் சாய்ந்து கொண்டிருக்கும்போது திரி கருகுகிற வாசனை வந்தது. எண்ணெய் சரசரத்து, பத்திக் கங்கு போல திரியின் கனல் இரண்டு பொட்டுகளாக மின்னிச் சுருங்கின. பூனையின் கண்கள் இடுங்கி விரிவது போல, கங்குச் சிவப்புச் சுருங்கி, காற்றின் நகரலில் கனிந்தது. மீண்டும் சிவப்புத் துண்டம், நெளிகிற புகை, இருட்டுக்குள் புகைநெளிவும் தெரிந்தது. திரியும் எண்ணெயும் கருகின நெளிவு பார்த்துக் கொண்டிருக்கும்படியாக இருட்டு என்னைத் தூணோடு சாய்த்துவிட்டு, கொஞ்சம் கொஞ்சமாக கனலைத் தின்று விழுங்கியது. இருட்டின் ஒரு பகுதியை, வெளியே மரப்பெஞ்சிலிருந்த குருவி லைட் வெளிச்சம் கவ்விக் கவ்வி இழுப்பது போலிருந்தது. ஒரு பெரிய மிருகத்தை இடித்துத் தள்ளி காலால் நகராமல் பற்றிக்கொண்டு, கோரைப் பற்களால் கிழித்து, தசையின் ரத்த நசநசப்புடன் கூடிய தலையசைப்புடன் இங்குமங்கும் ஆட்டி இழுப்பது போல இவ்வளவு இருட்டையும் அந்த சிறு விளக்கின் வெளிச்சம் இழுத்து வெளியே போட முயன்றது.

ஏன் இப்படி வேட்டையாடலும், கோரைப் பல்லும் ரத்த நசநசப்பும், கவ்வி இழுத்தலும் என்றெல்லாம் தோன்றுகிறது. இருட்டையும் மிருகமாக்கி வெளிச்சத்திற்கு தாக்கி அறையும் நகமும் பாதமும் வால் சுழற்றலும் கொடுத்ததும் சற்று நேரத்திற்கு முன் தாத்தா தாமரைப் பூவுடன் கரையேறுவதை நினைத்துச் சிலிர்த்துக்கொண்டதும் ஒரே மனதுதானா. எப்படிக் கலைந்து சிதைந்து சிதைந்து வளர்ந்து கொண்டிருக்கிறது. இந்தச் சிறு வெளிச்சத்தை கரையில் மோதுகிற நுரையாகவும் அலையாகவும் ஏன் நினைக்க முடியவில்லை . மேகங்களுக்குள் உறுமி உறுமிப் பெரிதாகிற ஏரோப்பிளேன் சத்தமாக ஏன் விரித்துக் கொள்ள முடியவில்லை . விமானம் என்று ஆரம்பித்து மேகத்திற்கு மாறி, இன்னும் இத்தனை வருசத்திலும் ஒன்றைப் போல இன்னொன்றைப் பார்க்க முடியாத மேகத்தின் தனித்தனி முகங்களின் அமைப்பினில் போய் நிற்க ஏன் முடியாது போயிற்று. அன்றும் சரி, இன்றும் சரி மேகங்கள் எல்லாம் தடாகங்கள் போலவும் தகடு போன்ற நீர்ப் பெருக்காவும் அதன் ஓரம் கவிந்திருக்கிற பெயர்களற்ற மரங்களாவும்தானே படுகிறது. அந்த தடாகம் பொத்துக் கொட்டிப் பெருகுவது போல, அவ்வளவு ஏன்? ஒரு டம்ளர் தண்ணீர் கொட்டிப் பெருகுவது போல ஏன் இந்த வெளிச்சம் உணரப்படவில்லை. கொம்புகளும் ஒன்றை ஒன்று துரத்தலுமாக மனம் ஏன் இப்படிக் கானகத்தில் திரிகிறது.

வெளிச்சம் கண்ணுக்குப் பழகப் பழக இன்னும் வெளிச்சமாகிவிட்டது. இருட்டுத் துலங்க ஆரம்பித்தது. சுவரோரம் தொங்குகிற மூங்கில் கழிக்கொடியில் ஒரு குடையும், ஒரு குடைக் கம்பும் தொங்குகின்றன. மங்காயி அத்தை வீட்டு மாமா ஞாபகங்கள், மழைத்தண்ணீர் மாதிரிக்கு அந்தக் குடைக்கம்பியில் பட்டு வழுகிச் சொட்டாக கீழே விழுந்து அந்த மூலையில் தெறிப்பது போலத் தெறித்துக்கொண்டிருந்தன. ஒரு சொட்டாக விழுந்து பத்துச் சொட்டாகத் தெறிக்கிற அந்த கற்பனை எவ்வளவோ பரவாயில்லை. சாயந்திரம் மங்காயி அத்தை வீட்டு மாமாவை அவருடைய பசுக்களை எல்லாம், சின்னுவைக் கூட மறந்துவிட்டு, அவ்வளவு நேரம் யோசித்த காரியத்துக்கு இவ்வளவு நேரம் ஒரு உருவம் தேடியலைந்துவிட்டு, இப்போது இதில் அடைந்து விட்டாயிற்று. இதுபோல அது என்றால் என்ன. அதுபோல இது என்றால் என்ன. இரண்டும் ஒன்றுதானே.

‘என்ன இப்படி இருட்டுக்குள்ளேயே உட்கார்ந்துவிட்டே, விளக்கு குளிர்ந்து போச்சு என்றால் அடுப்படிக்கு வந்திருந்தால் எல்லோரும் அங்கேயே உட்கார்ந்து பேசிக்கிட்டு இருந்திருக்கலாமே’ – அத்தை சொல்லிக்கொண்டு ஒரு ஈயத்தட்டில் ஏதோ தின்பண்டமும் கொடுத்தாள். மிகவும் கெட்டியாக இருந்த ஈயத்தட்டும் அந்தத் தின்பண்டமும் அத்தையின் கையிலிருந்த சிமினி லைட்டால் ஒரு பெரிய சாயலை அடைந்திருந்தன. எத்தனை சிமினி லைட்டுத்தான் அத்தை வைத்திருப்பாள். மாமா போன பிறகு சிமினியைத் துடைத்துக்கொண்டு, திரியைப் போட்டுக் கொண்டு, மண்ணெண்னெய் ஊற்றிக்கொண்டே அத்தை நாளைக்கழித்து வருகிறாளா. சதா வெளிச்சம் மார்புச் சேலையில் பட, இந்த வீட்டின் நெடுகிலும் அலைந்து அலைந்து தனி ஆளாக மங்காயி அத்தை எதைத் தேடுகிறாளாக இருக்கும். மின்சாரம் இருந்தும் மின்விளக்கை நாடாத இடத்திற்கு அத்தை ஏன் சென்றாள். இருட்டும் இருந்து வெளிச்சமும் அல்லது முழு இருட்டு இல்லாமல் இது கொஞ்சம் அது கொஞ்சமுமாக ஒன்றில் ஒன்றைக் கரைத்துக்கொண்டு, ஒருவேளை அதுதான் சரியோ. வெளிச்சம் இருள் பற்றிய சரியான கலவையை அத்தைதான் அறிந்திருந்திருக்கிறாளோ.

தட்டு காலியாகிவிட்டிருந்தது. வெண்கலத் தம்ளர், அண்ணாந்து குடித்த சமயம் கைகளுக்குள் திண்ணமாக உறுதியாகக் குளிர்ந்தது. இந்த ஈயத்தட்டும் வெண்கல தம்ளரும் அதன் அதன் காரியத்தையே செய்தன எனினும், இதுவரை எந்த எவர்சில்வர் டம்ளரும் தட்டும் தராததை இது தந்துவிட்டது போலிருந்தது. சின்னு சின்னு என்று புறப்பட்டதென்ன. இப்படி கருகருக்கிற நேரம் தாண்டி இருட்டுக்குள் உட்கார்ந்து கொண்டு யோசனையின் விசித்திரமான இண்டு இடுக்குகளில் நுழைந்து புறப்பட்டுக் கொண்டு இருப்பது என்ன, இதைத் தினகரியிடம் சொன்னால் ஒருவேளை அவள் ரசிக்கக் கூடும். இன்னும் கற்பனைகளுக்குரிய விசாலங்களுடன் தான் அவள் இருப்பாள். மரங்களையும் புதிர்களையும் விடுவிக்கிற ஆர்வமும், கனவுகளில் வினோதமான புதையல்களைத் தோண்டி எடுக்கிற உற்சாகமும், அப்படி அவள் தோண்டும்போது அவள் உள்ளங்கைகளில் அள்ளி வெளியே எறிகிறவற்றை நான் வாங்கிக் கொண்டால் அதில் சந்தோஷம் அடைகிறவளாக அவளே இருக்கிறாள். பைத்தியக்காரத்தனமாக இட்டுக் கட்டிச் சொல்கிற அத்தனை கதைகளுக்கும் அகல விரிக்கிற கண்கள் அவளுடையதாக அல்லவா இருக்கின்றன. தினகரியின் இந்த பனிரெண்டு பதிமூன்று வயது முகம் இன்னும் சில வருடங்களில் போய்விடும். அவளும் ஒருநாள் தாவணி போடுவாள். இன்னோரு நாள் கதைப் புத்தகங்கள் படிப்பாள். கண்ணாடி முன் நின்று முகம் திருத்துவாள். எனக்கோ அம்மாவுக்கோ கூட இடமில்லாத அனுமதி, எப்போதாவது அவள் நினைத்தால் மட்டுமே கிடைக்கிற உலகத்திற்குள் போய்விடுவாள். தினகரியும் ஒரு குட்டித் தினகரி அம்மாவாகிவிடுவாள்….

அம்மாவும் மகளும் ஏகராசி ஆகிவிடுவார்கள். அப்புறம் நான்? நிழல்களாக உள் அறைகளிலிருந்து நகர்ந்து என் பக்கம் அடுத்திருக்கிற அறையிலுள்ள வெளிச்சத்தில் உருவம் பெற்று மறுபடியும் இருட்டில் செருகி நிழல்களாகி தினகரியும் இவளும் என்னை நெருங்கிக் கொண்டு நின்றார்கள், இவளுடைய கால்மெட்டியின் உலோக நிறம் மட்டும் கண்ணில் நின்றது. கனகாம்பரத்தை எடுத்துத் தினகரியின் தலையில் வைத்துக் கொண்டு, மங்காயி அத்தை என்னிடம் சொன்னாள். ”அதெல்லாம் சரிதான்”

ஒன்றும் புரியவில்லை. ஏறிட்டுப் பார்த்தேன். பேச்சை அப்படித் துவங்க அத்தை தீர்மானித்து விட்டிருந்தாள் போல.

“உன்மகள் இன்றைக்கு உட்காருவாளோ? நாளைக்கு உட்காருவாளோ. அது நம்ம கையில இல்லை. இருந்தாலும் நாளும் கிழமையுமா எதற்கு நாலு காற்றும் படுகிற இடத்தில் அலையணும். பேசாமல் நான் சொல்வதைக் கேளுங்க. மூன்று பேருமா நேரே வீட்டுக்குப் போங்க. பொழச்சுக் கிடந்தால் நாளைக்குப் பார்த்துக்கிடலாம். யாரும் ஓடிப்போயிடப் போறதில்லை. மங்காயி அத்தை அப்படியென்றால் என்ன சொல்கிறாள். என்னை வசியம் பண்ணுகிற மாதிரியாக ஒரு குரலையும் பார்வையையும் வைத்துக்கொண்டு இவ்வளவு நேரம் சொன்னது எல்லாம் சின்னுவைப் பார்க்காமல் வீட்டுக்குப் போங்கள் என்பதுதானே. ஓவல்டின் டப்பாவில் வாதாங்கொட்டை பொறுக்கி வைத்துக் கொண்டு வருகிற போகிற நேரம் எல்லாம் கொடுத்த அத்தை தானோ இது. மாமா போனதோடு எல்லாம் போய்விட்டதா, அல்லது வயதாக வயதாகப்புத்திக்கெட்டுப் போய்விட்டதா. இல்லாவிட்டால் எலக்ட்ரிக் லைட் இருக்கும்போது இப்படி கட்டுக்குக் கட்டு சிம்னி லைட்டைப் பொருத்திக்கொண்டு அலைவாளா.

தினகரியைப் பார்த்தேன் – தினகரி அம்மாவைப் பார்த்தேன். மாறாத முகத்துடன் தினகரி இருந்தாள். எப்போது பார்த்தாலும் அப்பாவை பார்க்கிறோம் என்று அவளுக்கும் ‘இது என் பெண்’ என்று எனக்கும் பளிச்சென்று தெரிகிற அதே பார்வை. சின்னஞ்சிறு உயிர்களின் ஒவ்வொரு அசைவும் எவ்வளவு இயல்பாக ஒன்றுடன் ஒன்று ஒத்துப்போகின்றன. பழுத்த நிறத்தில் சிறு பூச்சி ஒன்று பறந்து பறந்து அத்தை கையிலிருந்த விளக்குப் பக்கம் போக தினகரி அதை விரட்டிக் கொண்டே நிற்கிறாள். அப்படி விரட்டும்போதே என்னைப் பார்க்கிறாள். ஒளிவு மறைவும் பூடகமும் அற்றதாகவே அந்தப் பார்வையிருக்கிறது. எந்த பதட்டமுமில்லை,

அடுத்த கதவைத் திறக்கும்போது எந்த ஆபத்துமின்றி உள்ளே போய் கூடத்தில் உட்காரலாம் என்பது போன்ற உத்தரவாதம் சொல்கிறதாகவோ தினகரி அம்மாவுடையது இருக்கிறது. என்பார்வையையே தவிர்த்துக் கொண்டு ‘ஆச்சிக்கிட்டே சொல்லிகிட்டு வா தினகரி’ என்று சொல்லிக் கொண்டு, ‘இருட்டுக்குள்ளே செருப்பு எங்கே கிடக்குண்ணு தெரியலையே’ என்று, இந்த இடம் விட்டு முன்னகர்ந்து வாசலுக்குப் போய் —

‘பிள்ளையை கூப்பிட்டுக் கொண்டு நேராக வீட்டுக்கு போங்க எல்லாரும்’ மங்காயி அத்தை மீண்டும் சொன்னாள். அப்படியென்றால் சின்னு வீட்டிற்குப் போகக்கூடாதா. நான் சின்ன வயதில் விளையாடிய, ஜவஹர் ராஜும் திலகா அக்காவும் இருந்த வீட்டில் எந்தப் பூதம் இருந்து தினகரியைப் பிடித்துக் கொள்ளப் போகிறது. சின்னு என்கிற பெண்ணும் அவளுடைய மகளும் மகனும் என்ன தீமையை எங்களுக்குச் செய்துவிட முடியும்.

‘அதெல்லாம் சரிதான்’ – மீண்டும் திருப்பித் திருப்பி அதையே அத்தை ஏன் சொல்கிறாள். இவ்வளவு நேரம் அத்தையும் இவளும் எதைப் பற்றி உள்ளே உட்கார்ந்து பேசினார்கள். என்ன காரியம். அவர்களாகவே ஒரு முடிவு செய்து கொண்டு முடிவை நிர்ப்பந்தமாக என்னிடம் திணிப்பது மாதிரி வீட்டிக்குத் திரும்பிப் போ என்று சொல்வது எப்படிச் சரியாகும். மங்காயி அத்தைக்குப் பசுமாடு தவிர வேறு எது தெரியும். மாமாபோய்விட்ட பிறகு அதுவும் போய்விட்டது போல. இப்படிச் சிம்னி லைட்டைத் தூக்கிக் கொண்டு அலைகிறவளுக்கு சின்னுவைப் பற்றி என்ன தெரியும். நாற்காலியையோ வெற்றிலைப் பெட்டியையோ இங்கேயிருந்து அங்கே நகர்த்தி வைக்கிறது போல, என்னை ஒரு பொருட்டும் இன்றி, மங்காயி அத்தை நகர்த்தி விடலாம் என்று நினைத்தால் இவளுக்கு எங்கே போயிற்று. இவளும் புத்தியைக் கடன் கொடுத்து விட்டாளா, இந்த மங்காயி அத்தை வீட்டுக்குள் காலடி எடுத்து வைக்கிறவரை சின்னு சின்னு என்று இவளும் உருகிக்கொண்டுதானே நின்றாள்.

‘நாங்க முன்னால நம்ம வீட்டுக்குப் போய் கொண்டிருக்கிறோம். நீங்க நின்னு வருகிறீர்களா’ – தினகரியைக் கூப்பிட்டு நடந்தாள். இது ஒருவகையானயுக்தி, யோசிக்கவும் யோசித்ததைக் காரியப்படுத்தவும் அவகாசம் தராமல் ஆணைத்திசை திருப்பி வலுக்கட்டாயப்படுத்துகிற பெண் சாமர்த்தியம். யுக்திகளையும் சாமர்த்தியங்களையும் பிரயோகிக்காத அற்புதமான மனுஷியாகத் தானே சாயந்திரம் வரை இவள் இருந்தாள். சூலமும் ஈட்டியுமாக இவ்வளவு விரைவாக ஆயுதங்களைச் சேகரித்துக் கொள்ளும் அளவுக்கு என்ன நிகழ்ந்துவிட்டது அப்படி.. விடியற்காலம் ஆற்றங்கரை ஓரமாக மணலில் நடந்துகொண்டு போவது போலிருந்த அந்தக் கைப்பிடிப்பும் கள்ளச் சிரிப்பும் எங்கு தொலைந்தது. இந்த அவசரத்திற்கும் பத்திரப்படுத்துதலுக்கும் என்ன அவசரம்.

அவர்களுடன் உடனடியாகப் புறப்பட முடியாமலும் மங்காயி அத்தையிடம் நல்ல விதமாக விடைபெற முடியாமலும் ஆனால் பாவம் தனியாக இருட்டில் போய்க் கொண்டிருக்கிறார்களே என்ற அவசரத்தில் வாசலுக்கு வந்தபோது, சட்டென்று வௌவால் ஒன்று அதன் நீளவட்டத்தில் தாழ்ந்து வந்து என் முகத்தில் மோதுவது போல விலகி மேலே ஒட்டுக்கூரை வரை போய் மறுபடியும் அப்பிக் கொண்டு, தப்பி வர முடியாமல் திணறுவது போல மீண்டும் மீண்டும் அது கூரைப் பக்கம் போய் திரும்பி வந்தது. அறுபது வருஷ மழையும் பாசியும் கண்ட அருமையான ஒடுகள். ஓட்டைத் தாண்டி, இன்னொரு எதிர்வீட்டுக் கட்டிடத்தில் மூலை மடங்கலுக்கு இடையில் தெரிந்த வானத்தில் வைரம் மாதிரி நட்சத்திரங்கள். ஒரு நட்சத்திரம் அதில் குளுகுளுவென்று, அப்படியே கண்ணில் ஒற்றடம் கொடுக்கிற மாதிரி நீல இருட்டிலிருந்து வெடித்துச் சிதறி அமைதியுடன் மினுங்குகிற இன்னும் சில நட்சத்திரங்கள், பார்க்கப் பார்க்கக் கொத்துக் கொத்தாய் நட்சத்திர மஞ்சரிகள்.

வாழ்வின் இந்த இடம்தான் ருசிகரமானது. மிகவும் இக்கட்டும் சஞ்சலமும் நிறைந்த நேரத்தில் மிகவும் அற்புதமும் நுட்பமும் நிறைந்த விஷயங்கள் எதிர் வருவது. அருவித்தடாகத்தில் மூழ்கி இறந்த சிநேகிதனுடைய உடலை மூங்கில் கழிகளால் துளாவித் துளாவி வெளிப்படுத்த, வெளிவந்த உடம்பின் மிதப்பின் மேல், மேலிருந்து அருவி விழுந்து உள் அமிழ்த்த, உடல் உள் அமுங்கிக் கொண்டிருக்கிற பதைப்புக்குள், அதே அருவியின் விசிறலில் ஏழு நிறத்தையும் காட்டிக் கொண்டு வெயிலின் இழைகளுக்கிடையே ஒரு வில். இது ருசிகரமோ, அபத்தமோ இப்படிச் சொல்லும்படியாக நிறைய நிறைய அங்கங்கே நடக்கவே செய்கின்றன.

சின்னுவைப் பார்க்க வேண்டாம் என்று தீர்மானம் எடுத்துக் கொண்டு, அதன் காரணங்களை எனக்கு அறிவிக்காத புறக்கணிப்பின் மத்தியில் நானிருக்க, இதோ இப்படி நட்சத்திரம் வாரியிறைக்கிற வானம் கண்ணில் படுவது அப்படித்தான். நட்சத்திரம் எந்தச் சூழ்நிலையில் பார்த்தாலும் நட்சத்திரங்கள் ஆகவே இருக்கும். தீராத அழகுடன் அந்த ஒற்றைக்கல் மூக்குத்தி மினுங்கிக் கொண்டே இருந்தது.

மங்காயி அத்தை வாசல் வரை வந்து நான் தினகரியுடனும் இவளுடனும் போய் சேர்கிறவரை எங்களையே பார்த்துக்கொண்டு இருந்தாள்.

நான் மங்காயி அத்தையிடம் சொல்லிக்கொள்ளவில்லை. சொல்வேன் என்று அத்தையும் எதிர்பார்க்க மாட்டாள். கோபம் வந்தால் மிஞ்சி மிஞ்சி போனால் ஆண்பிள்ளை என்ன செய்வார்கள். வெளியே போகும்போது சொல்லிக்கொள்ளாமல் போவார்கள். அல்லது சாப்பாடு வேண்டாம் என்று படுத்துக் கொள்வார்கள். இதைத் தவிர வேறு புதிதாக ஒன்றும் செய்துவிடமுடியாது என்று அவளுக்குத் தெரியாதா, அதிலும் மங்காயி அத்தை பார்க்க நான் நெட்டலிங்கக் கொட்டை பொறுக்கி வாய்க்காலில் வீசிக் கொண்டிருந்த பையன். என்னைப் பற்றி அவளுக்கு நிறைய முடிவுகள் எடுக்க முடிவதில் ஆச்சரியமில்லை . ஆனால் இவளும் அல்லவா கட்சி மாறிவிட்டாள். மாறினதும் அல்லாமல் எனக்கு முன்னால் போய் அந்தத் தந்தி போஸ்ட் வெளிச்சத்தில் நிற்கிற அவசரம் என்ன. போய்விட வேண்டியதுதானே வீடு வரைக்கும். ஒன்று இருட்டில் போகப் பயம். அதைவிட இன்னொரு பயம். எங்கே நான் மட்டும் சின்னுவைப் பார்க்கிறேன் என்று கிளம்பிடுகிறேனோ என்று.

அப்படிச் சொல்லியிருந்தால்கூட நன்றாக இருக்கும். ‘இவ்வளவு தூரம் வந்துவிட்டீர்கள். நீங்கள் வேண்டுமானால் போய்ப் பார்த்துவிட்டு இருக்கிறாளா இல்லையா என்று விசாரித்துவிட்டு வாருங்கள். இன்னோரு நாள் சௌகரியமாகப் பகலில் எல்லோருமாக வருவோம்’. இப்படி எல்லாம் சொல்லத் தெரியாதவளா இவள்.

இந்தத் தெருவின் இந்த முடுக்கில் நடக்கத்தானே கற்றை கற்றையாகப் பழைய ஞாபகங்கள் எல்லாம் புரண்டு கொண்டு வந்தன. போனது வந்தது என்று துண்டு துண்டான கண்ணிகளை எல்லாம் நினைவுபடுத்திக் கோர்த்துத் தருவதாக இருந்த அதே இடம் இப்போது மெழுகிவிட்டு போட்டிருக்கிற சாணித்துணி மாதிரிச் சப்பென்று கிடந்தது எதிரில். மனதின் குதூகலங்களுக்கு ஏற்பவும் தொய்வுகளுக்கு ஏற்பவும்தான் தெருவின் லட்சணங்களும் இருக்கும் போல.

நான் போய்ச் சேர்ந்து கொள்ளலாம் என்று வேகமாகப் போக, என் வேகமாகச் செல்லல் அவசரப்படுத்தியது போல, நான் அவளை அடைவதற்குள் தினகரியை அழைத்துக் கொண்டு மேலும் அவசரத்துடன் புறப்பட, ஒரு வாகனத்திற்கும் இன்னோரு வாகனத்திற்கும் இடையிலுள்ள விபத்துத் தடுப்புத் தூரத்தை உறுதிப்படுத்திக்கொண்டே அவள் தினகரியுடன் போய் விட்டிருந்தாள்.

இது வாகனச் சட்டம் அன்றி வேறு என்ன. விபத்தை நடுரோட்டில் தவிர்த்துவிட்டு வீட்டுக்குள் போய் மோதிக் கொள்கிற நாகரிகமான வாகனச் சட்டம். இந்த சட்டதிட்டம் எல்லாம் அறியாத ஒரு வெற்றுப் பந்து போல போய்க் கொண்டிருக்கும்போதே எனக்கு முன்னால் வலது பக்கச் சுவரிலிருந்து இடது பக்கச் சுவருக்குக் குதித்துவிட்டுப் பூனை நான் அந்த இடத்தைக் கடக்கும் வரை அசையாமல் காத்திருந்தது. பூனைகளாவது காத்திருக்கிறது. குறைந்த பட்சம் கடந்து செல்லும் வரையிலாவது.

இப்படிப்பூனைகள் வரை அனுதாபத்துடன் காத்திருக்க, நான் அதன் அனுதாபத்திற்கு முழுவதும் உட்பட்டவனாக நடந்து கொண்டிருக்கும் போது வாழைக்காய்க் கடை சூரி அண்ணாச்சி வந்து கொண்டிருந்தார். என் பதினைந்து வயதில் அவருக்கு இருபத்தி ஐந்து இருக்கலாம். இதேபோல் மஸ்லின் ஜிப்பாதான் அப்போதும்.

என் சின்ன வயதில் அழகாய் இருக்கிறதாக உணர்ந்தவர்களில் அண்ணாச்சியும் ஒருத்தர். இன்னோருத்தி பங்கஜத்து அக்கா. பங்கஜத்து அக்கா எங்கிருக்கிறார்கள் என்றே தெரியவில்லை. ஆனால் இதோ சூரி அண்ணாச்சி வந்து கொண்டிருக்கிறார். எங்கள் தெருவின் குப்பைத் தொட்டிக்கு அருகில் உட்கார்ந்து எழுந்திருக்காமல் சூரி அண்ணாச்சி வீட்டுக்குள் நுழைவதே இல்லை. இந்தச் சிறு அருவருப்பைத் தவிர அவரைப் பார்ப்பதே அருமையாக இருக்கும். ‘நிறைய தண்ணி போடுவார்’ என்று சொல்வார்கள். அதெற்கெல்லாம் அப்போது என்ன அர்த்தம் என்றே தெரியாது. ஒல்லியான உடம்பும் சுருள் சுருளான முடியும் தளரத் தளர ஜிப்பாவும், ஒருபோதும் நான் பார்க்க மடித்துக் கட்டியிராத வேட்டியுமாக, கிட்டத்தட்ட மணிக்கணக்கு தவறாமல் மார்க்கெட்டில் இருந்து வருகிற அண்ணாச்சியைப் பார்ப்பதற் காகவே, பொன்னையாப்பிள்ளை வீட்டு தங்கத்து அக்கா தெருப்பம்பில் தண்ணீர் பிடிக்க குடத்தை தூக்கிக் கொண்டு வருவதாகச் சொல்வார்கள். அதென்னவோ, பகல் முழுவதும் அந்த அடிபம்ப் வற்றி கிடப்பது போலவும் இந்த ஏழு ஏழரை மணிக்குத்தான் அதிலிருந்து ஊற்று பொங்குவது போலவும் தங்கத்து அக்கா, கிழக்கும் மேற்குமாகத் தண்ணீர் எடுத்துக் கொண்டு அலைவாள். சூரி அண்ணாச்சி கதைக்கும் இதற்கும் சம்பந்தம் உண்டா என்று தெரியவில்லை. எவ்வளவோ விஷயங்களில் சொல்ல முடிவது போல இருக்கலாம், இல்லாமலும் இருக்கலாம்.

ஆனால் சூரி அண்ணாச்சி அந்த நேரத்தில் தான் வருவார் என்பதும், அப்படிக் குப்பைத் தொட்டி பக்கத்தில் சிறுநீர் கழித்துவிட்டு, ஒரு சிகரெட் பற்றவைத்துக் கொண்டு, அந்தத் தெரு முனையில் சற்று நேரம் புகைத்துவிட்டு நின்ற பிறகே வீட்டுக்குள் நுழைவார் என்பதும், என்னை மாதிரி யாராவது அந்தப் பக்கம் போனால், ‘ஏய் படிக்கிறியா’ என்று கேட்பதும் எல்லாம் உண்மை . சூரி அண்ணாச்சி குரல் கரகரவென்று நன்றாக இருக்கும். சிகரெட் வாசனைகூட குரலைப் போல எனக்கு அப்போதே பிடித்திருந்தது, இப்படி எங்களைக் கூப்பிடுகிற ‘ஏய்’ வேறு. வீட்டுக் கதவைத் தட்டிக்கொண்டு சூரி அண்ணாச்சி அவர்களுடைய வீட்டு மதினியைக் கூப்பிடுகிற ‘ஏய்ய்’ வேறு. ஒரு சிறு குழைவில் சூரி அண்ணாச்சி கூப்பிடும் அக்குரலுக்கு பொன்னையாப்பிள்ளை வீட்டுத் தங்கத்து அக்கா என்ன, வைரத்தக்கா என்ன, யாராக இருந்தாலும் அப்படியே ஓடி வரத்தான் தோன்றும்.

சூரி அண்ணாச்சி பக்கத்தில் வந்து ‘சுந்தரம் எப்போ வந்தே’ என்றார்கள். இருபது வருஷத்துக்கு அப்புறம் பார்க்கிறது மாதிரியும் கூப்பிடுகிறது மாதிரியும் இல்லை . அன்றைக்கு மாதிரியே இருந்தது. வில்ஸ்பில்டர் வாடை கம்மென்று அடித்தது. ஜிப்பாவின் சைடு பாக்கெட்டில் ஒரு கை ரொம்ப அழகாகப் புதைந்து இருந்தது. வாழ்ந்து வாழ்ந்து, வியாபாரத்துடன் மல்லுக்கட்டி, பல வெற்றி கண்டு, வெற்றி அலுத்து, ஏதோ ஓர் சிறுசோகம் சிறு திட்டு முகப்பில் அப்பியிருக்க, ‘ஃபாமிலியோடதானே வந்திருக்க. இருந்தா ஒரு நாளைக்கு கூட்டிக்கிட்டு வா ஊருக்கு போகிறதுக்கு உள்ள’ என்றார். சூரி அண்ணாச்சி என்னுடன் இவ்வளவு பேசுகிறவரே அல்ல. சூரி அண்ணாச்சி வீட்டு மதனி இன்னார் என்றுகூட எனக்குத் தெரியாது. வரட்டுமா என்று சொல்லிவிட்டு லேசாகத் தோளில் கைவைத்துச் சிரித்தார். சிரிப்பில் வலி இருந்தது. அந்த திட்டு இருந்தது. சூரி அண்ணாச்சிக்குப் பிள்ளை இல்லை என்று சொல்வார்கள். இன்னுமா இல்லை. அந்த சிகரெட் வாசனை மட்டும் அங்கிருந்தது. எல்லாம் இப்படித் தானிருக்கிறது.

சூரி அண்ணாச்சி என்னவென்றால் இப்படி இருக்கிறார். சின்னு என்னவென்றால் அப்படி இருக்கிறாள். தினகரியை பிடித்துக் கொண்டு விடுவிடுவென்று நடந்த இவளோ இன்னோரு மாதிரி இருக்கிறாள். மங்காயி அத்தையோ சிமினி லைட்டைத் தூக்கிக் கொண்டு அலைகிறாள்.

சின்னுவை இன்று கண்டிப்பாக பார்த்துவிடுவேன் என்று நினைத்தேன். அது இன்றில்லை. ஆனால் சூரி அண்ணாச்சியை நினைத்துக்கூட பார்க்கவில்லை. இந்த முப்பது வருடமும் இதே தெருவில் இதே வீட்டில் இருக்க முடியும் என்று கூட எதிர்பார்க்கவில்லை . ஆனால் இருக்கிறார். கூப்பிடுகிறார். பிள்ளையையும் வரச் சொல்கிறார்.

உங்களுக்குச் சேரவேண்டியதை என்னிடமும், எனக்குச் சேர வேண்டியதை அவர்களிடமும், அவர்களுக்குக்குரியதை இவளிடமுமாக மாற்றி மாற்றிக் கொடுத்துக் கொண்டே செல்கிற இந்த வாழ்க்கையில் அவரவர்களுக்குரியதை அவரவர்களிடம் சேர்த்து விட முடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். முடிந்தால் நன்றாக இருக்கிறதா முடியாததால் நன்றாக இருக்கிறதா. முடிந்தால் சந்தோஷப்படுவதற்கும் முடியாவிட்டால் கோபப்படுவதற்கும் எல்லாம் இதில் எந்த முகாந்திரமாவது உண்டா . நான் கடப்பதற்காக உட்கார்ந்திருக்கிறது என்று நினைத்துக் கொண்டிருந்த பூனை, இன்னும் அங்கேயே உட்கார்ந்திருக்கிறது என்று தெரியவந்தால், நான் அடைய வேண்டியது துக்கமா சந்தோஷமா? சின்னு,பூனை தினகரி எல்லோரும் வேறு வேறு என்று நினைப்பதை விட ஒன்று என்று நினைப்பதில் என்ன குறைந்துவிடப் போகிறது.

நான் சற்று பிந்தி நின்று, இவ்வளவு யோசித்துக்கொண்டு, சூரி அண்ணாச்சியிடம் பேசிக்கொண்டு வருவதற்குள் அவ்வளவு ஒன்றும் அதிக நேரம் ஆகியிருக்காது. அந்த நட்சத்திரம் பார்த்தால் நேரம் சொல்லுமா. இப்போது தெரியும் வானத்தின் இன்னோரு பாத்தியில் அந்தக் கூடுதல் மினுக்கத்தை காணோம். ஆனாலும் மேலும் அதிகமான நட்சத்திரங்களுடன் இருந்தது அது.

தினகரியும், தினகரி அம்மாவும் அங்கேயே வாசல் நடையில் நின்று கொண்டிருந்தார்கள். ஒரே கருங்கல்லில் இடைவெளியற்று செதுக்கிய சிற்பங்கள் போல அவர்கள் இருந்தார்கள். தினகரி தன்னுடைய அம்மாவின் இடுப்பைச் சுற்றிக் கொண்டு தன் வளர்ந்த முகத்தை அம்மாவின் தோளோரம் வைத்திருக்க இவள் இடது கை கொண்டு தலையைச் சுற்றித் தினகரியின் கழுத்தை அணைத்திருந்தாள். முகம் தெருவில் வருகிற என்னைப் பார்த்திருந்தது.

இதை எதிர்பார்க்கவே இல்லை. திடுக்கென்றது. ‘நடையிலேயா இவ்வளவு நேரம் நிற்கிறீர்கள்?’ என்று கேட்க நினைத்துக் கேட்க முடியவில்லை. ‘நான்தான் வந்துவிடுவேனே’ என்று சொல்லிக் கொண்டோடியேறும்போது, தினகரிக்குத் தெரியாமல் என்னுடைய கையைப் பிடித்துக் கொண்டது இவளுடைய கை. பார்த்தால் அழுது கேரண்டிருந்தாள். ‘சீ! கிறுக்கு’ என்றேன். என் கைமேல் இன்னும் கை இறுகியது. முகம் என் புஜத்தில் புரண்ட து. ‘கிறுக்கு’ என்றுதான அவளிடம் மீண்டும் சொல்ல முடிந்தது.

எத்தனை வருடங்களுக்கு முன்போ கட்டிய வீடு. நூறு வருடங்களாக நின்ற மரத்தை அறுத்து அம்பது வருடங்களுக்கு முன்பாக செய்திருக்கவேண்டிய கட்டில். பெல்ஜியத்திலிருந்து கண்ணாடி மட்டும் வந்ததா, சட்டமும் சேர்த்து வந்ததா என்று கேட்கத் தோன்றுகிற நிலைக்கண்ணாடிகள் இரண்டு. ஒரு மிக அகலமான விசிறி. அதன் அதன் ஆதி உறுதியுடனும் அழகுடனும் எல்லாம் இருந்தன. இன்னும் தொந்தரவில்லாமல் பாடிக் கொண்டிருக்கிற பழைய ஹாலண்ட் பிலிப்ஸ் ரேடியோ, அது பாடுகிற பாட்டு இன்றைக்குரியது எனினும் பழைய வருடங்களிலிருந்து புறப்பட்டு வருகிற மாதிரி இருந்தது. எல்லையப்பர் கோபுரத்தின் பல நூற்றாண்டு கலசங்களுக்கு மேல் போன தடவை குஞ்சு பொரித்த மாதிரி, பழசின் மடியிலிருந்து செல்லம் கொஞ்சுகிற புதிதுக்குரிய அழகுடன் ரேடியோ பாடியது. நெல் மூட்டைகள் இருப்பது மாதிரியும், நீண்ட வளையங்கள் உள்ள தண்ணீர் அண்டாக்கள் இருப்பது போலவும், இந்த வீட்டின் பழசினும் பழசான என் ஞாபகங்கள் எவை எவையெல்லாமோ அவையெல்லாம் இங்கிருப்பது போலவும் எல்லாம் நினைத்துக் கொண்டு எல்லாவற்றையும் இன்னும் பழசாக்கிக் கொண்டேன். என் தாத்தாவின் அப்பா உபயோகித்த திருநீற்றுப்பையும் திருநீற்று மாலையும் இதோ என் வலது ஜன்னலில் இருக்கிறது போலப் பிரமையை உண்டாக்கிக் கொண்ட பின் ரொம்பப் பத்திரமாக இருப்பது போலிருந்தது. கோயில் பிரகாரத்தில், யாவிகள் காலுயர்த்திக் கொண்டிருக்க, யாளிகளின் பாதுகாப்பில், தரையில் கல்லில் செதுக்கியிருக்கிற தாமரைப் பூக்களின் இதழ் விம்மல்களை வருடிக்கொண்டு நடுவிலிருக்கிற குழிவின் குளிர்ச்சியில் லயித்திருப்பது போல இருந்தது. இந்த ரேடியோவின் பாடல் கூட என்ன பாஷை என்று தெரிகிறது. அதுவும் அழிந்து, குழுக்களாகவும் இனங்களாகவும் பிரிவதற்கு முன்புள்ளவர்களின் சேர்ந்திசை போல ஒரு பாடல் கேட்டால் நன்றாக இருக்கும். மூங்கில்களுக்கும் மூங்கில்களுக்கும் இடையே ஆடிக் கால் மாற்றிக் கொண்டு கனத்த ஆபரணங்களுடன் பாடுகிற அந்த மலை ஜாதியினரின் பாட்டுக் கேட்டால் கூடப் போதும் இதமாக இருக்கும். இந்த தினம் வேண்டாம். இந்த தினம் என்றால், ஒரு குரல் ஆசை காட்டும். வா சின்னுவை பார்த்துவிடலாம் என்று கூப்பிடும். இன்னொன்று சிம்னியை தூக்கி கொண்டு வந்து போகாதே என்று சொல்லும். என்ன ஏது என்று விபரம் சொல்லாமல் வீட்டுக்குப் போகலாம் என்று அவசரப்படுத்தும். தனியே விடும். தனியே போகும். தனியே அழும். தனியே நடையிலே நிற்கும். வேண்டாம் இந்த பழமையுடனேயே இருக்கிறேன். கடைந்து கடைந்து இந்த கட்டில் கால்களை செய்து முடித்திருக்கிற தச்சு ஆசாரியின் மூச்சு இங்கே கேட்காமலா இருக்கும். அவரின் இழைப்புளியைத் தேய்த்துக் கூர்மைப் படுத்துகிற சமயம் எழும்பும் சத்தத்தை விடவா இந்த ரேடியோ பாட்டு கூடுதலாக இருக்கிறது. இந்தக் கண்ணாடியைப் பார்த்துக் கொண்டிருப்பேன். சட்டத்தின் பூவேலையை பார்த்துக் கொண்டிருந்தாலே விடிந்து விடும். இந்த நிலைக் கண்ணாடியை கீழ்ப்பக்கம் தாங்குகிற இரண்டு டானா ஆணிகளில் இதுவரை எத்தனை ஆயிரம் குருவிகள் உட்கார்ந்திருக்கும். தனியாக துணையாக எல்லாம் கண்ணாடியைக் கொத்தி கொத்தி எவ்வளவு விளையாடி இருக்கும். கண்ணாடியை உற்றுப் பார்த்தால் அலகு அலகாகக் கொத்தின சுவடு இல்லாமலா போகும்.

அந்த ஆணியில்தான் அப்பா சட்டை அநேகமாகக் கிடக்கும். எப்போதாவது சட்டை போடுகிற அப்பா அணிந்த சட்டை பெரும்பாலும் நிலைக்கண்ணாடியின் ஆணியில் தொங்கித்தான் பார்த்திருக்கிறேன். ஒரு ஆணியில் தொங்குகிற வெள்ளைச் சட்டையில் என்ன இருந்துவிடமுடியும். அப்பா என்கிற முழு ஆகிருதியை அது, ஆனால் அப்படியே நேரில் கொண்டு வந்து நிறுத்தும். அப்படி அப்பாவின் சட்டை ஆணியில் கிடந்ததைப் பார்த்துவிட்டு நான் பயங்கரமாக அழுதது. அப்பாவின் காரியத்திற்காக அழுததை விடவும் கூடுதலாக இருந்தது. அப்பா எப்பேர்ப்பட்ட மனிதர். அப்பாவின் அருமை எல்லாம் நமக்கு வயது முதிர முதிரத்தான் தெரியுமோ என்னவோ. நிலைக் கண்ணாடிக்குள் அப்பா தெரிகிறாரா என்று பார்த்தேன். அதெப்படித் தெரிவார். சின்னுவும் தெரியமாட்டாள். முற்றிலும் இருட்டாக இருந்து விடக்கூடாது என்பது போல எங்கிருந்தோ தப்பின வெளிச்சம் எல்லாம் அங்கங்கே ஒன்றுடன் ஒன்று மோதித் தாறுமாறாக விழுந்திருந்தது. ரேடியோ மட்டும் இன்னும் பாடிக் கொண்டிருந்தது.

ஏணிப்படியின் மேலே ஏறிவருகிற சப்தம் கேட்டது. அந்த ஏணியும் இந்தக் கட்டில் மாதிரி இன்னொரு அருமை. அவ்வளவு நேர்த்தியான மரம். அவ்வளவு நேர்த்தியான வேலை. அகல அகலமான படிகள். கருகருவென்று மெழுகிவிட்டது மாதிரி ஒரு யானைக் குட்டியைப் படி வழியாக ஏற்றிக் கூப்பிட்டுக் கொண்டு வந்தாலும் தாங்கும்: இதையெல்லாம் விட என்ன ஆச்சரியம் என்றால் ஒவ்வொரு படியையும் சுருதி சேர்த்து வைத்திருக்கிறானோ பாவி என்று தோன்றும்.

பூனை ஒரு கால் வைத்து இன்னொரு காலில் தவ்வுகிற சப்தம் கூடக் கேட்கும். இரண்டு பூனைகள் வந்தால் இது எந்தப் பூனையுடையது. இன்னொன்று எந்தப் பூனையுடையது என்று பிரித்துச் சொல்லும்படி இருக்கும். அந்த ஏணிப்படியின் மேலிருந்து இரண்டாவது படியில் உட்கார்ந்து கொண்டால், தண்ணீரில் உடகார்ந்து கழுத்தை மட்டும் நீட்டிக் கொண்டு பாடுவது போல, மச்சில் உள்ளவர்களுக்கு என் தலை மட்டும் தெரியும். அடுப்படியில் உள்ள பெண் பிள்ளைகள் வேலை செய்துகொண்டே என்னிடம் பேசுவதற்கு பதிலும் சொல்லிக் கொள்ளலாம்.

இப்போது ஏறிவருகிறது தினகரி இல்லை , இவள். இரண்டு பேருமாகப் படியேறி வருகிற காலடிச் சத்தங்கள் மிருதங்கம் தட்டுவது போல இன்னொரு வகையில் ஒலிக்கின்ற அந்த வருஷங்கள் எவ்வளவு நன்றாக இருந்தன. இவளுடைய சத்தம், பூனை மாதிரி இவள் வந்து நிற்பதெல்லாம் எவ்வளவு அருமையாக இருக்கும்.

நிறையப் பூவாசனை மேலே வந்து விழுந்து புதைந்தது. வெவ்வேறு வகையான பூக்களை ஒரே நேரத்தில் அதிகமாக வைக்கிறதன் இணக்கமற்ற வாசனையாக அது இருந்தது. அதுவும் இந்த கனகாம்பரம் ஒட்டாமல் தொந்தரவு செய்தது. மேலே வந்து அப்பின கையில் ஈரம் இருந்தது. வளையல்களில் குளிர்ச்சி. ஏதோ ஒரு பகுதி துணியில் பகை வாடை. வேண்டாம் என்று சொல்லவேண்டாம் என்று தோளில் கை விழுந்தது. முதலில் இதைக் கேள். அப்புறம் எல்லாம் சொல்கிறேன் என்பது போல முகத்தில் இறங்கியது. இமையில் பொதிந்தது. விடமாட்டேன் என்று எடுத்துக் கொண்டது. இதையும் தாண்டிப் போகப் போகிறேன். இதுவல்ல நான் சொல்ல வந்தது என்று மலை மலையாகத் தூக்கிப்போனது. மேகத்தில் இறக்கியது. இறக்கை முளைத்த மேகம். சில மேகங்கள் எங்களைக் கடக்க சில மேகங்களை நாங்கள் கடக்கச் சரசரவென்று வானம் அகன்று கொண்டே போயிற்று. என்ன விசாலம் என்ன அமைதி. அந்த ஒற்றை நட்சத்திரம் மாத்திரம் மினுங்கியது.

நட்சத்திரமல்ல. ரேடியோவின் கண் என்று தெரிந்தது. நிகழ்ச்சிகள் முடிந்த பிறகு அடிக்குரலில் வண்டு உறுமுவது போல உறுமுகிற சப்தம் கேட்டது. கட்டிலில் கனகாம்பரக் கொத்து மாத்திரம் தனியாப் பிரிந்து கிடந்தது. தலையில் இருந்து வாடி விழுந்த பூக்களை ஏனோ தொடமுடிவதில்லை. அதுவும் இந்த கனகாம்பரங்களுக்குக் கொஞ்ச நஞ்சம் இருக்கிற அழகும் போய்விடுகிறது. மேலும் இது மங்காயி அத்தை வைத்துவிட்ட கனகாம்பரம்.

கூந்தல் முழுவதும் கழுத்து வழியே முன் பக்கம் வந்தது. சிக்கிக் கிடந்த பூவையெல்லாம் எடுத்து எடுத்து ஜன்னலில் வைத்துக்கொண்டிருந்த அந்த முகத்தைப் பார்த்துக் கொண்டே இருந்தேன். குளித்துவிட்டு வந்த மாதிரி இருந்தது. இவள் இப்போது பேசமாட்டாள். ஆனால் இன்னும் சற்று நேரத்தில் பேசுவாள் என்று தெரியும்.

அதற்குள் மாடியின் கதவைத் திறந்து வைப்பாள். மேல் ஜன்னல்களை கீழ் ஜன்னல்களைத் திறந்து வைப்பாள். வாசலுக்கு நேரே எல்லாவற்றையும் விரித்துவிட்டு ‘இங்கே காற்று நல்லா இருக்கு’ என்று உட்கார்ந்து மொத்தக் கூந்தலையும் ஒரு மாதிரித் தூக்கிப் பிடரியிலுள்ள வியர்வையை ஒற்றிக்கொண்டு சற்று நேரம் இருப்பாள். அந்த சற்று நேரத்துக்குள் கட்டிலில் இருந்து இறங்கி அங்கே போய் படுத்துக்கொள்ளவோ உட்காரவோ வேண்டும். அப்புறம் சொல்ல ஆரம்பிப்பாள்.

என் தலை முடிக்குள் அளைந்து அளைந்து விரல்களால் கோதிக்கொண்டே அவள் சொல்வதைக் கேட்கிற பதிலால் நானும் நிரம்பிக் கிடந்தேன். இதில் என்ன என்கிற நெகிழ்ச்சி வந்து விட்டிருந்தது.

எல்லாம் மங்காயி அத்தைதான் சொல்லியிருக்கிறாள். இவள் சின்னு வீட்டிற்குப் போகிறோம் என்று சொன்னவுடன் ‘அந்த’ என்று ஆரம்பித்த பிறகு நிறுத்தவே இல்லை போல. எங்களுக்கும், கேட்டுக்கொண்டிருந்த இவளுக்கும் சின்னுவின் மேலிருந்த தவிப்பையும் ஈரத்தையும் உலர்த்திப் பறக்கவிடுவது போல அத்தை நிறையச் சொல்லியிருக்கிறாள்.

”ஆர்.கண்ணன் செத்தது சின்னுவால். ஆர்.கண்ணனின் தம்பியுடன்தான் இப்போது இருக்கிறாள். இதற்கு முன்னாடியே சின்னு அப்படித்தான். எல்லாம் வழிவழிப்புத்திதானே வரும். ஆர்.கண்ணன் தம்பி மட்டும் யோக்கியமா. சரியான குடிகாரன். ஏற்கனவே ட்ராமாக்காரி ஒருத்தி கூட. அந்தக் கழுதை எங்கே போயிற்றோ இந்தக் கழுதையைச் சேர்த்திருக்கிறான். தினசரிக் குடித்துவிட்டுக் கதவை தட்டும் போது அர்த்த ராத்திரி. சின்னுதான் வந்து கதவைத் திறப்பாள். தோளில் கையைத் தூக்கிப் போட்டு இழுத்துக் கொண்டு போய்ப் படுத்தார்கள் என்றால் விடிந்து பன்னிரெண்டு மணியாகும் எழுந்து பல்தேய்க்க, கதவைக் கூட சாத்துவதற்கு மறந்து போய் இரண்டு பேரும் ஒன்றாகப் படுத்துத் தூங்குகிற கண்றாவியைப் பார்த்ததாக ஒருத்தருக்கு நாலு பேர் சொல்லியாகிவிட்டது. இந்தக் கூத்தை எல்லாம் சின்னுவின் அம்மாவும் பார்த்துக்கொண்டு கண்டும் காணாமல் இருக்கிறாள். அந்த லெட்சணத்தில் சின்னுவுடைய மகளும் பெரிய மனுஷி ஆகிவிட்டது. எல்லாம் சரிதான். அடுத்தடுத்து ஆள் வேண்டுமல்லவா வம்சத்துக்கு.” |

மங்காயி அத்தை சொன்னதை அப்படியே சொல்லாமல் இவளே கொஞ்சம் நல்ல வார்த்தைகளில்தான் சொல்லியிருப்பாள். அவளிடமிருந்து நான் கேட்டுச் சொல்கிற இவையே இவ்வளவு கொடூரமாக இருக்கின்றன.

அத்தை வீட்டுக்குள் இருந்து கொண்டு இருட்டைக் கவ்விக் கடித்து இழுக்கிற மிருகமாக வெளிச்சத்தைக் கற்பனை செய்து கொண்டிருந்தது சரியாகத்தான் போயிற்று. நான் அப்படி நினைத்த நேரத்தில் சின்னுவின் மேல் விழுந்து அத்தை அவ்வளவு தூரம் குதறிக்கொண்டுதான் இருந்திருக்க வேண்டும்.

‘இன்னும் கூடச் சொல்லியிருப்பாளே. இவனை அங்கே போக விடாதே. போனால் சேலைத் தலைப்பில் முடிந்து கொள்வாள். இவனுக்குச் சூதுவாது தெரியாது என்று.’ நான் சொல்லி முடிக்கும்போது இவள் மிக மலர்ச்சியுடன் நிமிர்ந்து –

‘அவங்க சொல்வதை எல்லாம் ஊமை மாதிரி அங்கேயிருந்தே கேட்டுக் கொண்டுதான் இருந்தீங்களா?’ என்று படக்கென்று எழுந்தாள். எனக்கு சுரீர் என்று அறை விழுந்தது போல இருந்தது. என் ஒரு வெற்று யூகமே கனத்து மேலே நிஜமாக விழுந்து திகைக்க வைத்தது. மங்காயி அத்தை எவ்வளவு தூரம் எல்லாம் பயங்காட்டியிருக்கிறாள். வெறும் மாட்டோடு பழகினவள்தானே அவள். மாமா இருக்கும்போது வெளி உலகம் தெரியாமல் மாடும் தொழுவும்தான் என்று சந்தோஷப் பட்டுக்கொண்டிருப்பாள். மாமா போனதுக்குப் பிறகு கண்ணைக் கட்டி காட்டில் விட்டது போல இருந்திருக்கும். இத்தனை வயது வரைக்கும் அனுபவிக்காத சிரிப்பும், குதூகலமுமாக உலகம் இருப்பதை பொறுத்தக் கொள்ள முடியாது போயிருக்கும். அதெப்படி ஆண்களும், பெண்களும் சின்னஞ்சிறுசுகள் அவ்வளவு சந்தோஷமாக இருக்கலாம். ஒரு பெண் அருமையானவள் இன்று தன் புருஷனையும் கூப்பிட்டுக் கொண்டு இன்னொரு பெண்ணைப் பார்க்கப் போகலாம். ஒரு பெண் கணவன் இறந்தபின் இன்னொரு மனிதனுடன் எப்படி வாழலாம். அதுவும் தானிருக்கிற தெருவிலே. இதைப் பார்த்துக் கொண்டு அவளுடைய அம்மாவும் அவளுடனே இருத்தல் எப்படி சாத்தியம். தனக்குள் என்னவெல்லாம் தலைகீழாகப் புரண்டு கிடந்ததோ அதைப் பூராவும் இவளுடைய தலையில் மாற்றிவிட்டது நன்றாகத் தெரிகிறது. ஒரு விசிறலில் ஒரு மழையின் ஈரப்பதத்தில் காடாக மண்டிவிடுகிற விஷவித்துக்களை விதைத்துக் கொண்டே மங்காயி அத்தை நடமாடியிருக்கிறாள்.

இவளுக்கு நெஞ்சு ஏற்கனவே ஈரம். சின்னு சின்னு என்று உருகியிருப்பாள். உடனே என்னையும் சேர்த்து ஒரே விலங்கில் போட்டுக் கட்டிவிடத் தீர்மானித்து விட்டாள் அத்தை.

‘இதையெல்லாம் நம்புகிறாயா நீ’ என்கிறபோதே அவள் ஏற்கனவே நம்பிவிட்டிருக்கிற முகத்தைப் பார்த்துப் பேசுகிற கஷ்டம் எனக்கு வந்து விட்டிருந்தது. ஒரு அசட்டு வீம்பும் சந்தேகமுமாக அவள் என்னையே பார்த்துக்கொண்டிருந்தாள். எந்தச் சிறு கதவின் வழியாகவும் வெளியேறிவிட முடியாதபடி எல்லா வழிகளையம் அடைத்து விடவேண்டும் என்ற திடமான நகர்வுகளில் அவள் இருந்தாள்.

ரொம்பவும் சிதிலமடைந்து விட்ட மனநிலையுடன் சட்டென்று அவளிடம் அடுத்தபடியாக எனக்குக் கேட்கத் தோன்றிற்று. ‘என்னை நீ நம்புகிறாய் அல்லவா?’ ‘யாரையும் நம்பவில்லை!’ என்று சொல்லிக் கொண்டு கல் மாதிரி, கல் நாகம் மாதிரி அசையாது இருந்தாள்.

‘நீங்க அவளைப் பார்க்கக் கூடாது’ என்று மறுபடியும் சீறினாள். சீற்றத்தின் நச்சு திசையெங்கும் பரவி, சுவாசம் அடைத்துக் கொண்டது போல் நான் திகைத்துப் போய் இருந்தேன். இது மகாப்பெரிய இம்சையாக இருந்தது. இதுவரைக்கும் எவ்வளவு அவநம்பிக்கை இருந்திருந்தால், இப்படியொரு சாயந்திரத்துக்கும், ராத்திரிக்கும் இடையில் இப்படி பீடத்தை அசைத்து வேரோடு பிடுங்கி வெளியில் போட்டிருக்க முடியும். எத்தனை ரோஜாச் செடிகளையும், பசலிச் கொடிகளையும் வேரடி மண்ணோடு குப்பைத் தொட்டியில் பார்த்துப் பதைத்திருக்கிறேன். ஒருவினாடி நானே அந்தக் குப்பைத் தொட்டியில் வீசப்பட்டுக் கிடப்பது போலிருந்தது. சூரி அண்ணாச்சி என் பக்கம் உட்காரப் போனவர் என்னைப் பார்த்துவிட்டு ‘நீ என்ன இப்படிக் கிடக்கிறாய். உன்னைக் குடும்பத்தோடு வீட்டுக்கு வரச்சொன்னேன் அல்லவா?’ என்கிறார். சிரிக்கிறார். எழுந்திருக்கப் பிரயத்தனம் செய்யச் செய்ய குப்பையும் குப்பைத் தொட்டியும் மலைமலையாக வளர்ந்து கொண்டே போகிறது. ஒரு கை வெளியே, விரல்கள் விரியக் குப்பை தொட்டி விளிம்பினையும், விளிம்பில் உடைந்த கம்பியையும் பற்றிக் கொண்டு தவிக்கிறது.

அவள் தவிப்பதைப் பார்க்கச் சங்கடமாக இருந்தது. ‘நீங்கள் அவளைப் பார்க்கக் கூடாது’ மறுபடியும் சொன்னாள். ஒரு பிசகின பார்வையுடன் அழுது கொண்டிருக்கிற அவளுடைய முகத்தைப் பார்க்கும்போது கஷ்டமாக இருந்தது. எவ்வளவு அபூர்வமான அந்த முகம் இப்படிச் சுக்கல் சுக்கலாகி நிற்கிறது. பூகம்பத்தில் அஸ்திவாரம் வரை உடைந்து மேலுக்கு மேல் பாளம் பாளமாகச் சரிந்து தரைமட்டமாகிக் கிடக்கிறது போல அல்லவா இத்தனை வருஷத்து அனுபவங்களின் கட்டுமானமும் ஆகிவிட்டது. இத்தனை இடிபாடுகளுக்குமிடையில் எங்கே தினகரி கிடக்கிறாள். ஒரு தீனமான திரளாக, இந்தக் குவியல்களுக்கு மத்தியில் இருந்து அவள் கூப்பிடுகிறது கேட்கிறது. காப்பாற்றிவிட முடியுமா? முடியவேண்டும். என்னை, இவளை, தினகரியை எல்லோரும் காப்பாற்றிக் கரை சேர்த்தால்தான் நல்லது.

என்னை அறியாமல் அவளை நான் தட்டிக் கொடுத்துக் கொண்டிருந்தேன். என் கையொன்றைப் பிடித்து நெஞ்சில் வைத்திருந்தாள். அழுத கண் இன்னும் உலரலில்லை. தலையணையில் முகம் புதைந்திருக்க, ஒரு சிறு புழுப்போல, தீங்கற்ற உயிர்ப்பிராணி போல அவள் படுத்திருந்தாள்.

எல்லாம் இவ்வளவுதானா, ஜன்னல் வழியாக வெண்டைக்காய் காம்போ, பரங்கிக்காய் விதையோ எறியப்படுவது போல அற்பத்திலும் அற்பமாகத் தெருவில் விழ வேண்டியதுதானா. இந்தப்பத்து நிமிடத்திற்கு முன்னால் வரை மேகத்தில் ஊஞ்சல் கட்டி உட்கார்த்தி வைத்தது எல்லாம் என்ன? யாரோ ஒரு மங்காயி அத்தை பயம் காட்டுவாள். அந்த நேரம் பார்த்து நான் நாலு தடவை சின்னு சின்னு என்று சொல்லுவேன். அதோடு என் சரித்திரம்முழுவதுமே அழுகிவிட்ட ஒன்றாகி விட்டதா?

இருக்கட்டும் எல்லாம் இருக்கட்டும். நான் எப்படி என்று நிரூபிப்பதெல்லாம் அப்புறம் பார்த்துக் கொள்ளலாம். நானும் நீயும் எங்கே போய்விடப் போகிறோம். எங்கும் போய்விட முடியாது என்பதனால்தானே இப்படி நிறுத்தி வைத்து ஆணி அடிக்கிறாய். “ஆனால் முதலில் சின்னுவைப் பார்ப்போம். என்னுடன் வா. ரெண்டு பேருமாகவே பார்ப்போம். பார்த்த உடனே தெரிந்து போகாதா. சின்னுவுக்கு நம்மை நிமிர்ந்து பார்த்துவிட முடியுமா? அப்படியெல்லாம் என்றால், ஆர். கண்ணனுக்காகவாவது” நான் இதைத் தொடர்ந்து சொல்லாமல் வெவ்வேறு குரல்களில் சொன்னேன்.

“நானும் வரமாட்டேன். நீங்களும் அவளைப் பார்க்கக் கூடாது” என்றாள். ஒரு வகையில் பல் கிட்டிக் கொண்டு முகம் கோணி வதைத்துக் கொண்டு தெளிவற்ற ஒரு பயத்தின் வலையில், முள்ளில் விழுந்து சுற்றும் முற்றும் பார்த்தேன். வெகுநேரம் சுற்றிலும் பார்க்க மறந்தே போய்விட்டிருந்தது. இருட்டு அங்கங்கே காத்துக் கொண்டிருந்தது. நிலைக் கண்ணாடி ஆணியில் என் சட்டை கிடந்தது. அப்பா சட்டை போலத் தோன்றிற்று. அப்பா போலவே தோன்றிற்று. ‘உனக்கு ஏன் இப்படி நிகழ்ந்து’ என்று கேட்டது. அடுத்த வினாடி பொங்கிப் பொங்கி அழுகை வந்தது. ஒரு நீண்ட கேவலுடன் என் தோள்கள் குலுங்குவதை நானே உணர முடிந்தது. என் கால்களுக்குக் கீழ் பலகைகள் உருவப்பட்டு எங்கோ அதல பாதாளத்துக்கு எறியப்பட்டு சொத்தென்று ஒரு பறவையின் எச்சம் போல நான் தெறிப்பது தெரிந்தது. ஒரு காகம் மாத்திரம் கத்திக் கொண்டிருந்தது. மிகச் சரியான உச்சி வெயிலில் தெரு உருகி ஓடிக்கொண்டிருந்தது. நடமாற்றமே அற்று தெருவை எல்லோரும் காலி செய்து கொண்டு போய்விட்டது போலிருந்தது.

“நானும் வரமாட்டேன். நீங்களும் அவளைப் பார்க்கக் கூடாது” என்றாள். ஒரு வகையில் பல் கிட்டிக் கொண்டு முகம் கோணி வதைத்துக் கொண்டு தெளிவற்ற ஒரு பயத்தின் வலையில், முள்ளில் விழுந்து சுற்றும் முற்றும் பார்த்தேன். வெகுநேரம் சுற்றிலும் பார்க்க மறந்தே போய்விட்டிருந்தது. இருட்டு அங்கங்கே காத்துக் கொண்டிருந்தது. நிலைக் கண்ணாடி ஆணியில் என் சட்டை கிடந்தது. அப்பா சட்டை போலத் தோன்றிற்று. அப்பா போலவே தோன்றிற்று. ‘உனக்கு ஏன் இப்படி நிகழ்ந்து’ என்று கேட்டது. அடுத்த வினாடி பொங்கிப் பொங்கி அழுகை வந்தது. ஒரு நீண்ட கேவலுடன் என் தோள்கள் குலுங்குவதை நானே உணர முடிந்தது. என் கால்களுக்குக் கீழ் பலகைகள் உருவப்பட்டு எங்கோ அதல பாதாளத்துக்கு எறியப்பட்டு சொத்தென்று ஒரு பறவையின் எச்சம் போல நான் தெறிப்பது தெரிந்தது. ஒரு காகம் மாத்திரம் கத்திக் கொண்டிருந்தது. மிகச் சரியான உச்சி வெயிலில் தெரு உருகி ஓடிக்கொண்டிருந்தது. நடமாற்றமே அற்று தெருவை எல்லோரும் காலி செய்து கொண்டு போய்விட்டது போலிருந்தது.

ஜவஹர் ராஜையும், திலகா அக்காவையும் தேடிவந்த சுதே வீட்டுக்குள் காலடி எடுத்து வைக்கிறேன். என்னென்ன வெல்லாமோ அடித்துப் புரண்டு கொண்டு பழைய ஞாபகங்கள் எல்லாம் வருகின்றன. எல்லாம் பள்ளிக்கூடமும் புத்தகமும், சினிமாப் பாட்டுகளும், திலகவதி அக்காவுமாக மாறி மாறிச் சுற்றுகின்றன. ஒன்றை நிறுத்தி நிதானித்துப் பார்க்கிற சாவகாசத்துக்கு அமைதியின்றி, ஒன்றின் மேல் ஒன்று, ஒன்றின் இடத்தில் ஒன்றொன்று வந்து போகின்றன. தட்டான்கள் மயமாகப் பறந்துகொண்டிருந்த மழை நாளில் இந்த வாசலில் நாங்கள் இருந்தது ஞாபகம் வருகிறது. அவரைப் பந்தலில் கருநீலத்தில் பூத்துப் படர்ந்த பந்தல் அடைத்துக் கிடந்த வாசலில், தொட்டாலே வாடையடிக்கிற அவரைப் பூச்சியை நான் தொட்டுவிட ‘கிட்டே வராதே வராதே’ என்று என்னைக் கேலி பண்ணிய திலகா அக்கா ஞாபகம் வருகிறது. அப்பேர்ப்பட்ட திலகா அக்கா இருந்த இடத்திலாகடைசியாக இந்தச் சின்னுவும் வந்து உட்கார்ந்துக் கொள்ளவேண்டும். திலகா அக்கா அவளுக்குத்தான் வீட்டை வாடகைக்கு விட்டுவிட முடிவு செய்தார்களா? பத்துப்பதினைந்து வருடங்களுக்கு முன்பு சின்னு வருவாள். வந்து நம் வீட்டில் குடியிருப்பாள் சின்னுவையும் எனக்குத் தெரியவரும் என்று எல்லாம் எப்படித் தெரிந்திருக்க முடியும். எப்படியோ அவள் போனாள். இவள் இருக்கிறாள்.

எப்போது ராத்திரி தூங்கினேன். எப்போது விழித்தேன் என்று தெரியாமல் நானும் இதோ வந்து நிற்கிறேன். இங்கு வரவேண்டும் என்று எந்தத் தீர்மானமும், முன் முடிவுமில்லை. திடீரென்று இவ்வளவு சிக்கலாகிவிட்டதே எல்லாம் என்ற திகைப்பிலேயே மனம் இருந்தது. தினகரி பாடு என்ன ஆகும் என்று தோன்றிற்று. ஆதாரமற்ற நூலிழைகளில் தொங்கிக் கொண்டு வாழ்வதன் அவசியத்தின் மேல் சந்தேகங்கள் வந்து கூடியிருந்தன. எப்போது இற்று விழும் என்று பயந்து கொண்டோ, எப்போது வேண்டுமானாலும் அறுந்து விழட்டும் என்ற முரட்டு தைரியத்துடனோ எல்லாம் வாழ்ந்து விட முடியும் என்று படவில்லை . அப்படி வாழ்வதற்குரிய அருகதையுடையதாக இந்த வாழ்வு இருக்கிறதா என்ன? ஒரு சாயங்காலத்துக்குள் உருட்டப்படுவதற்காக, ஆயுள் முழுவதும் கஷ்டப்பட்டு ஒரு மலையில் ஏறவேண்டுமா?

பஸ் ஏறி சிவனைப் பார்க்கப் போனால் சிவன் இல்லை. தோழர் என்று நாங்கள் செல்லமாய் அழைக்கிற திருப்பாற்கடலையும் காணோம். சட்டென்று இவ்வளவு பெரிய ஊரில் நான் போய் மாறுதலுக்காகச் சற்று நின்று பேசுகிற அளவுக்குக் கூட யாருமே இல்லாதது போல இருந்தது. மறுபடியும் பஸ் ஏறினேன். ரோடு வேலை செய்கிறார்கள், அது இது என்று எங்கேயோ இறக்கி விட்டான். வெயிலில் நடக்க நடக்க மூளை கொதித்தது . சட்டென்று டாக்ஸி ஸ்டாண்டிற்கும் மரக்கடைக்கும் நேரே வந்ததும் சின்னுவைப் பார்த்தால் என்ன ஆகிவிடப்போகிறது என்று தோன்றி விட்டது.

மேலும் ஆர்.கண்ணன் இறந்ததைக் கேட்ட பிறகு சின்னுவையாவது நான் பார்த்து நான்கு வார்த்தைகள் ஆறுதல் சொல்லத்தானே வேண்டும்.

வாசலின் வலது சுவரில் முன்பு வரிசையாக குரோட்டன்ஸ் தொட்டிகள் இருந்த இடத்தில், ஒரு பெரிய தெரு ஒன்று நாடகத் திரைக்காக வரையத் துவங்கப்பட்டு பாதியில் நின்றது. பக்கத்திலேயே வர்ணங்களும், தூரிகைகளும், உலை மூடியில் கரைக்கப்பட்ட சில மட்டமான பெயின்ட்களுமாக அந்த இடமிருந்தது.

ஒரு சிறு வெள்ளை நாய்க்குட்டி கழுத்துச் செயினை இழுத்துக் கொண்டு குரைத்தது. வெளியே வந்து யார் என்று பார்த்தது சின்னுவின் அம்மாதான். முதன் முதலில் பிரகாரத்தில் பார்த்த அதே முகத்துடன் இருந்தார்கள். சற்றுத் தளர்ந்திருந்தார்கள். கனிவு கூடி ஒரு சிறு புள்ளியில் சிரித்தார்கள். சிரித்தது போலத்தான் இருந்தது. யார் என்று யோசிப்பதற்கான அவகாசத்தை அப்படி எடுத்துக் கொண்டார்கள் போல. ஞாபகம் வந்ததும் ‘உள்ளே வாருங்கள்!’ என்றார்கள். போனேன்.

நீண்ட பெஞ்சு ஒன்றில் உட்கார்ந்தபோது அவர்கள் கண்கள் கலங்கியிருந்தது. ‘எல்லோரும் சௌக்யமா அய்யா’ என்றார்கள். ‘எல்லோரும் அங்கேதானே!’ என்று நாங்கள் இருந்த பழைய ஊரைச் சொல்லிக் கேட்டார்கள். புதிய ஊருக்குப் போய்விட்டதைச் சொன்னேன். வேறு ஒன்றும் சொல்லவில்லை. என்ன கண்ணனுக்கு இப்படி ஆகிவிட்டதே என்று கேட்கவில்லை. இவ்வளவு நாட்களுக்குப் பிறகு அதெல்லாம் எதற்கு என்று அப்படியே இருந்தேன். ‘சின்னுவை வரச் சொல்கிறேன்’ என்று உள்ளே போனார்கள்.

ஒரு டம்ளர் தண்ணீர் கொடுத்துவிட்டு உள்ளே போனார்கள். சின்னு வந்தாள். அப்படியே இருந்தாள். ‘அக்கா வரலியா’ என்றாள். சிறிது சிறிதாக அழ ஆரம்பித்தாள். ஜவஹர் ராஜும் நானும் எந்த கதவைச் சாத்திக் கொண்டு சினிமா போட்டு விளையாடினாமோ அந்தக் கதவைப் பிடித்துக் கொண்டு மாலை மாலையாய் அழுதாள். பொட்டு இருந்தது. அந்த மூக்குத்தி இருந்தது. கழுத்தில் கீற்றுப்போல ஏதோ கிடந்தது. உடம்பில் எந்த வாட்டமும் இல்லை. முன்பைவிட கூடச் சுடர்விட்டிருந்தது. கண்களில் அந்த ஜோதி அப்படியே யிருந்தது. அகன்று குளுகுளுவென்று பார்த்து அப்படியே பூசி வாங்குகிற அதே பார்வையிருந்தது. கன்னம் பூரித்திருந்தது. சற்று உயர்ந்த முன் பற்களைப் பூட்டிக் கொண்டு சிரிக்கிற அவளுடைய வழக்கமான சிரிப்பு இப்போது இல்லையே தவிர ஈரப்பற்றுடன் ஒன்றுடன் ஒன்று இறுகுகிற, நடுப்பல் தெரிகிற அதே உதடுகள், கன்றுக்குட்டிக்கு முதுகு சிலிர்ப்பது போல ஒரு தடவை சொடுக்கிக் கொண்டு அப்படியே இருந்தன.

நல்ல வெயிலில் அனைத்தும் அமைதியாக இருந்தன. நான் சின்னுவையே பார்த்துக் கொண்டு இருந்தேன். அந்த ஆஸ்பத்திரிக் கட்டிலில் ஆர்.கண்ணன் மூடப்பட்டிருக்க இவள் உட்கார்ந்திருந்த நிலையின் விசித்திரம் ஞாபகம் வர, தொண்டையெல்லாம் உலர்ந்தது. கழுத்து, தோள் என்று ஒவ்வொன்றாகப் பார்த்துக் கொண்டே இருந்தது முகம். தேர்ந்து எடுக்கப்பட்ட சேலையின் பொதிவில் சின்னு எப்போதும் போல நேர்த்தியாக அழகுடன் நின்றாள். இடுப்பு தெரிந்தது. கையின் தொங்கலில் ஒவ்வொன்றாகச் சரிந்த மூன்று வளையல்கள்.

தூரத்தில் கடைசிவரை வாசல் வாசலாகத் திறந்து போட்டிருந்தார்கள். பசேல் என்று கடைசியில் புடலங்கொடியின் இலைகள் அசைந்தன. அந்தக் கடைசிக் கதவை அப்போதுதான் திறந்திருக்க வேண்டும். வெளிச்சம் திடுதிடுவென்று உள்ளே சிறு பிள்ளை போல ஓடி வந்து இவள் பின்னால் நின்றது. சின்னுலின் இடுப்பு வளைவிலிருந்து கால் வரை திண்ணமாக ஒரு கோட்டை அந்த வெளிச்சம் வரைந்து இதற்கு முந்திய கணத்திலிருந்து அவளை வேறொரு வீச்சிற்கு நகர்த்தி வைத்திருந்தது. இவள் பின்னால் இவ்வளவு வெளிச்சம் அப்பி, இருளிலிருந்து பெயர்த்து எடுத்தது போலச் சின்னுவை நிறுத்தி இருக்க வேண்டாம். சின்னு ஒரு முறை, ஒரே ஒரு முறை ஏறிட்டுப் பார்த்தாள். இது நான்தானா என்றிருந்தது. எனக்கு யாராவது என் புஜங்களை அப்படியே அமுக்கிப் பிடித்து அந்த இடத்தை விட்டு அப்புறப்படுத்திவிட்டால் நல்லது. விருவிருவென்று உச்சந்தலை வரைக்கும் ஒரு பரபரப்பு ஏறி ஒவ்வொரு நகக்கண்ணிலும் மறுபடி இறங்கி வந்தது. சிறு தீ போல நானே எரிந்து அடங்குவது போல இருந்தது. தவிப்பாக இருந்தது. பரவசமாக இருந்தது. நிகழ்ந்து விடாதா என்றிருந்தது. நிகழ்ந்துவிடக்கூடாது என்று படபடத்தது. சின்னு அப்படியே நின்றாள். ஒரு வாழைப்பூப் போல.

மூச்சு மறுபடியும் வந்தது. உஸ்ஸென்று சர்ப்பம் போல நெட்டுயிர்த்தது. பின்னால் கடைசி வரை அதே வெளிச்சம். அதே படவரைக் குழிப் பச்சை,

‘வரட்டுமா’ என்று கேட்கும்போது சின்னு சிரித்த மாதிரியிருந்தது. இவ்வளவு நேரம் அப்படியே நின்றது, பார்த்தது எல்லாம் நீதானா என்று பரிதாபப்பட்டு சிரித்தது மாதிரி இருந்தது.

செருப்பை மாட்டிக் கொண்டு நடையை விட்டுக் கீழே இறங்கினேன். தெரு மீண்டும் தெருவாக இருந்தது.

-முற்றும்-

– 1991, சந்தியா பதிப்பகம்

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *