அழகர்சாமியின் குதிரை வண்டி!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 31, 2021
பார்வையிட்டோர்: 4,384 
 

நான் இன்று முன்னுக்கு வந்து வாழ்க்கையில் ஒரு ஆளாகி நிற்கிறேன் என்றால் அதற்கு காரணம் என்னுடைய கடின உழைப்போ, அபார மூளையோ, அதிர்ஷ்டமோ, அப்பா, அம்மா செய்த புண்ணியமோ. இதில் எதுவுமே கிடையாது. எல்லா புகழும் அந்த அழகர் சாமிக்கே…

யார் இந்த அழகர் சாமி?

என் பெயர் பார்த்தசாரதி. சென்னையில் இருக்கும் கால்நடை மருத்துவமனையின் முதன்மை மருத்துவர். கிங் இன்ஸ்டிடியூட், சென்னை. பல பிரபல தனியார் கால்நடை மருத்துவமனைகள் என்று பெரிய மருத்துவ நிலையங்களில் மருத்துவ ஆலோசகர். கைராசிக்கார டாக்டர் என்று பெயர். அக்கம் பக்கத்திலிருக்கும் அத்தனை கிராமத்திலுள்ள ஆடு மாடுகள் மற்றும் வீட்டில் வளர்க்கும் எல்லாவித மிருகங்களும் என் கைபட்டால் பிழைத்துக் கொள்ளும் என்று பெயர் வாங்கியிருந்தேன். என்னுடைய புகழுக்கு முக்கிய காரணம் இந்த அழகர்தான்.

அவரும் சாரதிதானே. நான் சிறுவனாய் இருந்த போது எங்கள் தெருவில் இருந்த குதிரை வண்டிக்காரன் தான்.

“முன்னுக்கு வாங்க தம்பி. முன்னுக்கு வாங்க தம்பி”ன்னு எத்தனை தடவை சொல்லியிருப்பார். அவனை கோவிலில் வைத்துதான் கும்பிட வேண்டும்.

கொஞ்சம் விவரமாகவே சொல்கிறேனே….!!

50…60…களில் ரிக்சா, ஆட்டோ ரிக்சா எல்லாம் பிரபலமாவதற்கு முன்னால் நடுத்தர மக்களின் போக்குவரத்தில் குதிரை வண்டிகளுக்கு முக்கிய பங்கு உண்டு. அதுவும் மதுரை, திருச்சி, பழனி, திருச்செந்தூர், இதுமாதிரியான நகரங்களில் குதிரை வண்டி மிகவும் பிரபலம். கார் வைத்துக் கொள்ள முடியாதவர்கள் சொந்தமாய் குதிரை வண்டி வைத்துக் கொள்வதுண்டு. டாட்டா, ஃபியட், மாருதிக்கு இணையான மதிப்பு அந்த காலத்தில் குதிரை வண்டிகளுக்கு இருந்தது.

எங்கள் வீடு மதுரை மேல மாசி வீதியில் இருந்தது. வீட்டில் மொத்தம் எட்டு பேர். அம்மா, அப்பா, அத்தை, மூணுஅக்கா. கடைக்குட்டி நான். அப்புறம் தூரத்து சொந்தமான ஒரு மாமா. யாரும் இல்லையென்பதால் கூடவே ஒட்டிக் கொண்ட சொந்தம். அப்பா இருக்கும் இடமே தெரியாது அத்தனை அமைதி, ஆனால் ரொம்ப கண்டிப்பு. கண்ணாலேயே சுட்டெரித்து விடுவார், தப்பு செய்தால் மட்டுமே. அம்மா நேர் எதிர், ரொம்ப ஜாலி பேர்வழி. அம்மாவுக்கு மாசம் ஒரு சினிமா பார்த்தாகணும். மூணு அக்காவில் ஒருத்திக்கு சினிமா, டிராமா என்றாலே அலர்ஜி. எப்போதும் புத்தகமும் கையுமாய் இருப்பதுதான் இஷ்டம்.

எங்கள் வீட்டில் காரெல்லாம் கிடையாது… அநேகமாய் நடைதான். இல்லையென்றால் பஸ். மதுரையில் டி.வி.எஸ். பஸ் மாதிரி எங்குமே வராது. குடும்பத்தோடு போவதென்றால் குதிரை வண்டி… பக்கத்தில் போவதானால் பத்து ரூபாய்க்குள் முடிந்து விடும். மேலமாசியும் வடக்குமாசியும் சேரும் மூலையில் நேரு ஆலால சுந்தர விநாயகர் கோயில் ரொம்பவே பிரசித்தி. அதற்கு பக்கத்தில் எப்போதும் நாலைந்து குதிரை வண்டிகள் நின்று கொண்டிருக்கும். பக்கத்தில் சந்திரா டாக்கீஸ் இருப்பதால் படம் விட்டு வருபவர்கள் சவாரி கிடைக்கும். வீட்டில் நான் ஒருவன்தான் விரட்டி வேலை வாங்கும் வயதில் இருந்ததால் வண்டி கூப்பிடுவது… கடைக்குப் போவது… போஸ்ட் பண்ணுவது எல்லாம் என் தலையில் தான் விழும்.மாமா ரகசியமாக எனக்கு அவ்வப்போது ஒரு ரூபாய் தந்துவிடுவதால் நானும் குஷியாகவே கிளம்பி விடுவேன்.எனக்கு அழகர்சாமி பரிச்சியமானது அப்படித்தான்.

நாங்கள் ஆறுபேர், அம்மா, இரண்டு அக்கா, அத்தை, நான், பக்கத்து வீட்டு அக்கா, எண்ணிக்கொள்ளுங்கள். ஆறுபேராச்சா! சினிமா போக ப்ளான்.

தங்கம் தியேட்டரில் ‘பணமா பாசமா’ என்று ஞாபகம். குதிரை வண்டி பிடிக்க என்னைத்தான் அனுப்பினார்கள். முதலில் அப்போதுதான் தனியாக போகிறேன். நெருங்க நெருங்க குதிரை சாணம் மூக்கைத் துளைத்தது. நாலைந்து வண்டி நின்று கொண்டிருந்தது… குதிரையைப் பார்த்தாலே பாவம்…தொத்தலாய்… பத்து நாள் பட்டினி போட்ட மாதிரி…அங்கேயே கொஞ்ச நேரம் நின்று கொண்டிருந்தேன்..

“வா தம்பி…எங்க போகணும்…ஏறுங்க…!!”

ஆளாளுக்கு பிய்த்து எடுத்து விட்டார்கள். எனக்கு ஒரு வண்டியும் பிடிக்கவில்லை.

அப்போதுதான் “ஜல்..ஜல்…”என்று ராஜகுமாரி மாதிரி வந்து நின்றது அந்த குதிரை. என்ன கம்பீரம், பளபளப்பான அதனுடைய பழுப்பு நிறம்… கழுத்தில் கொஞ்சும் சலங்கை, கொண்டைக்கு ரோஜாவர்ணத்தில் கோழித் தூவல். படு அமர்க்களமாய் வந்து நின்றது அந்த குதிரை வண்டி. அதை ஒட்டி வந்தவர்தான் அழகர்சாமி.

“வண்டி வருமாங்க ஐயா ..??””

“தம்பி… இப்பத்தான் ஒரு சவாரி முடிச்சிட்டு வரேன், வேற வண்டிய கூப்பிட்டுக்கிடு!”

எனக்கு ஏமாற்றமாய் போய்விட்டது…

“போயிட்டு வாங்க, தம்பி உங்க குதிரையப் பாத்து ஆசைப்பட்டு கேக்குது”

பக்கத்து வண்டிக்காரன் சிபாரிசு. அப்போதெல்லாம் கொஞ்சம் மனுஷத்தன்மை ஒட்டிக்கொண்டிருந்த காலம். போட்டி. பொறாமை, இல்லாத மனிதர்கள்.அதற்குள் மாமா என்னைத் தேடிக்கொண்டு வந்துவிட்டார்.

“டேய் சாரதி, என்னடா பண்ணிட்டிருக்க? ஜட்கா பிடிக்க இவ்வளவு நேரமா? சினிமா ஆரம்பிச்சிடுவாண்டா!”

எல்லாரும் தயாராகி எவ்வளவு நேரம் வெயிட் பண்றாங்க தெரியுமா? நாங்கூட வண்டி கிடைக்கலையோன்னு நினைச்சேன். இத்தன வண்டி நிக்குதேடா”

“தம்பி எங்க வண்டிலெல்லாம் ஏற மாட்டாராம். அழகர் வண்டிலதான் ஏறுவாராம்”

மற்ற வண்டிக்காரர்கள் கொல்லென்று சிரித்தார்கள். எனக்கு வெட்கமாய் போய்விட்டது.

“சரி..சரி…கிளம்பலாமா…??” மாமா அவசரப்பட்டார்.

“சாமி, ஒரு நிமிஷம். சிங்காரிக்கு புல்லு காட்டிட்டு தண்ணி குடுத்திட்டு புறப்படலாம். பாவம், சவாரி போய்ட்டு வந்திருக்கில்ல”

“சிங்காரி, சரியாகத்தான் பேரு வச்சிருக்கான், சொன்னாலும் சொல்லாவிட்டாலும் சிங்காரி தான்!”

குழந்தை மாதிரி கழுத்தைக் தடவிக் குடுத்தான்.

“குந்துங்க, எங்க போவணும்?”

“மேலமாசி வீதி. பக்கந்தான். அங்கேயிருந்து தங்கம் தியேட்டர்”

“பணமா பாசமா? நல்ல படம் தம்பி. மூணு வாட்டி பாத்துப்புட்டேன்”

நல்ல பச்சை கலரும் சிவப்பு கலரும் சேர்ந்து தூக்கி அடித்தது வண்டி. மெத்து மெத்தென்று வைக்கோல்மேல் சாக்கு போட்டு அதன் மேல் வழுவழுப்பாக பூப்போட்ட சாட்டின் துணி.இரண்டு பக்கமும் ஜன்னல்.கால் வைத்து ஏற அகலமான படி.

“நா உங்க பக்கத்தில உட்காரட்டா…!!”

“நல்லா குந்திக்கோ தம்பி…”

மாமா ஏறி உட்கார்ந்தததும் சிங்காரி “‘ஜல்.. ஜல்.. ஜல்… எனும் சலங்கை ஒலி..’ என்று கிளம்பினாள்….

வீட்டுக்கு வாசலில் அக்கா கோபமாய் நின்று கொண்டிருந்தாள்.

“போடா…!!! படம் ஆரம்பிச்சிருப்பான்…”

“தாயி… ஒண்ணும் வெசனப்படாத..சிட்டா பறந்திடுவா என் சிங்காரி..”

“சாரதி போனாலே இப்படித்தான்…”

“வள வளன்னு பேசாம ஏறுங்க…!!!” அத்தை அதட்டினாள்..

“முதல்ல பாப்பா நீ ஏறும்மா… அம்மா நீங்களும் அத்தையும்மாவும் நடுவுல..மீதி இரண்டு பேரும் காலத் தொங்கப்போட்டு உக்காருங்க.. தம்பி நீங்க முன்னுக்கு வாங்க…”

அப்போ ஆரம்பித்தது தான் இந்த ‘முன்னுக்கு வாங்க’

மாமா எங்கள் பின்னாலேயே சைக்கிளில் வந்தார்.நான் இரண்டு மூன்று தடவை குதிரை வண்டியில் போயிருக்கிறேன்.அப்போது ரொம்ப சின்னப் பையன் என்பதால் நசுக்கிக் கொண்டு நடுவில் உட்கார்ந்திருப்பேன். கசகசவென்று வியர்வை நாத்தம். பிடிக்கவே பிடிக்காது. இப்போதோ ஒரு ராஜகுமாரனைப் போல. அழகர்சாமி சாட்டை சொடுக்கும் விதமே தனி.

“என்ன தம்பி..சாட்டையப் பிடிக்கிறியா..???”

கையில் வாங்கிக் கொண்டேன்.

“நெஞ்சம் உண்டு ..நேர்மை உண்டு..ஓடு ராஜா…”

மனம் சந்தோஷத்தில் துள்ளிக்குதித்தது… தலையைத் தலையை ஆட்டிக் கொண்டு சிங்காரி சிட்டாய்ப் பறந்தாள்…

பத்து நிமிடம் முன்னாடியே போய் விட்டோம்..

“படம் ஒம்பது மணிக்கு முடியும். இங்கனக்குள்ளதான் இருப்பேன்..வரீங்களா….”

“அம்மா .அம்மா..இவரே வரட்டும்மா..”

இப்படித்தான் ஆரம்பித்தது அழகர்சாமிக்கும் எனக்குமுள்ள உறவு…

இரண்டு மூன்று தடவை ஜட்காவில் சினிமா தியேட்டர், மீனாட்சி அம்மன் கோயில், ஸத்குரு சங்கீத சமாஜம் என்று சுற்றிவிட்டோம்.எல்லாம் அழகர் உபயம்தான்..

யார் கண் பட்டுதோ …. தெரியவில்லை..

‘சிவகவி’ – M.K.தியாகராஜபாகவதர் நடித்த பழைய படம். இம்பீரியல் டாக்கீஸில் மாட்டினி காட்சி.

அத்தைக்குபார்க்க வேண்டுமென்று ஒரே பிடிவாதம்..அம்மா..மாமா.. இரண்டு பேரும் கூட சேர்ந்து கொண்டார்கள்.இரண்டு அக்காவும் பழைய படம் பார்க்க ரொம்பநாளாய் ஆசைப்பட்டுக் கொண்டிருந்தார்கள்.

மாமாவும் அத்தையும் மாறி மாறி பாட ஆரம்பித்துவிட்டார்கள்.

“வதனமே சந்த்ரபிம்பமோ …”என்று அத்தை பாட.

“அப்பனைப்பாடும் வாயால் ….ஆண்டி சுப்பனை பாடுவேனோ ???” என்று மாமா பாட வீட்டில் ஒரே கும்மாளம்தான்.

சனிக்கிழமை போகலாமென்று முடிவும்பண்ணியாகிவிட்டது. அழகரைப்போய் கூட்டிக்கொண்டு வந்தேன்.

பாரம் சரியாக இருக்க சில விஷயங்கள் வண்டிக்காரர்களுக்குத்தான் தெரியும்.

முதலில் வெயிட் கம்மியான ஒருவர்… அப்புறம் நடுவில் குண்டானவர்கள். அப்புறம் ஒல்லியானவர்கள் என்று சில கணக்கு கூட்டல்கள் உண்டு. உட்காரும் போதும் பக்கம், வலது பக்கம் என்று மாறி மாறி உட்கார வேண்டும்.

வழக்கம்போல “தம்பி.. நீங்க முன்னுக்கு வாங்க ‘ என்று சொல்லி என்னை பக்கத்தில் உட்கார வைத்தான்.

அன்றைக்கு என்னமோ சிங்காரிக்கு மூடு சரியில்லை கிளம்பும் போதே லேசாய் முரண்டு பிடித்தாள்..

“என்னடா..ராஜாத்தி..போவலாமா” என்றான்.

ஒரு வழியாக கனைத்துக் கொண்டு கிளம்பியது..

பத்தடி கூட போயிருக்காது.

எதிர்பக்கம்வேகமாக ஒரு கார் சத்தமாய் ஹாரன் அடித்துக் கொண்டு வண்டி மீது மோதுவது போல் வந்தது. சிங்காரி கொஞ்சம் மிரண்டு விட்டாள்.

திடீரென்று காலை முன்னால் தூக்கவே வண்டி அப்படியே குடை சாய்ந்து விட்டது.

இத்தனை பேரும் குதிரை வண்டியில் ஏற முடியுமா என்று யாருக்குமே தோணவில்லை.

ஒரு நிமிஷம் எல்லோருமே அலறி விட்டோம். அழகர் உடனே வண்டியிலிருந்து குதித்து விட்டான்..

“சாமி… அம்மா.. கையக்குடுங்க சாமி….”

ஒவ்வோருத்தரையாய் கையைப் பிடித்து தூக்கி விட்டான். நல்ல வேளை… யாருக்கும் பலத்த காயம் ஏதும் இல்லை.அத்தைக்குத்தான் எழுந்திருக்க முடியவில்லை.

இரண்டுபேராய் தூக்கி விட்டார்கள். ஐந்து நிமிஷத்தில் எல்லோரும் ஓக்கே…

சிங்காரி கொஞ்சம் முனக ஆரம்பித்தது.

“கண்ணு, என்னம்மா” என்று கழுத்தை தொட்டதும் பெரிய கனைப்பு.

“அழகர், கழுத்துல அடிபட்டிருக்குமோ?”

“சாமி, என்ன மன்னிச்சிடு சாமி”

அழகர் ரொம்பவே வருத்தப் பட்டான்…

“நீ என்னப்பா பண்ணுவ…. நாங்கதான் புத்தியில்லாம இத்தனை பேர் ஏறி உக்காந்து. பாவம் சிங்காரி…முதல்ல அத கவனி… நாங்க மெள்ள மெள்ள நடந்து வீட்டுக்கு போயிடுவோம்.கவலப்படாம போ…”

“சொப்பன வாழ்வில் மகிழ்ந்து.சுப்பிரமணிய சுவாமி உனை மறந்தேன்…” என்று மாமா பாடிக்கொண்டே நடந்தார். அடுத்த நாள் நான் கோவிலுக்கு போய்விட்டு அழகரையும் , சிங்காரியையும் பார்த்துவிட்டு வந்து விடலாம் என்று கிளம்பினேன்.வண்டியைக்காணம்.பக்கத்து வண்டிக்கார முருகனைக் கேட்டேன். அவருக்கு ஒன்றும் தெரியவில்லை. அழகர் வீட்டு விலாசத்தை வாங்கிக் கொண்டேன்.
வீடு கண்டுபிடிப்பதில் ஒரு சிரமமும் இருக்கவில்லை.ராமாயணசாவடியில் ஒரு முட்டு சந்தில் இருந்தது அழகர் வீடு.வண்டி மட்டும் ஒரு ஓரத்தில் இருந்தது சிங்காரியைக் காணம். வாசலில் ஒரு கோணி படுதா தொங்கிக்கொண்டிருந்தது..

“அழகர்சாமியண்ணா!”

குரலைக் கேட்டு ஒரு அம்மாள் வெளியே வந்தாள். நல்ல கொசுவம் வைத்த சுங்கிடி சேலை. பாதி நரைத்த தலைமுடி.

“தம்பி யாருப்பா?”

“எம்பேரு சாரதி, அழகர்சாமி வண்டில அடிக்கடி சவாரி போவோம். இரண்டு நாளா வண்டி அங்க இல்ல. அதான் பாத்துட்டு போலாமின்னு”

“தம்பி உள்ளார வாப்பா!”

படு சுத்தமாய் இருந்தது. அந்த அறைதான் மொத்த வீடும் என்று நன்றாகத் தெரிந்தது. உள்ளே ஒரு ஐந்து வயது பெண் குழந்தை விளையாடிக் கொண்டிருந்தது.என்னைப் பார்த்ததும் ஓடிப்போய் அந்த அம்மாள் காலை கட்டிக் கொண்டது.

“உக்காருப்பா….”

ஒரு ஸ்டூலை இழுத்துப் போட்டாள்.

“நானு அழகர் சம்சாரந்தேன் தம்பி. அவரு சிங்காரிய கூப்பிட்டுகிட்டு ஆசுபத்திரிக்கு போயிருக்காக. மூணு நாளாச்சு. நெதமும் வரச் சொல்லி இருக்காக”

“சிங்காரிக்கு எப்படி இருக்கு. அத விசாரிச்சிட்டு போகத்தான் வந்தேன்”

“தம்பி கேக்குறதப்பாத்தா சிங்காரிய நல்லா தெரியும் போல”

“ஆமாம்மா!”

ஆதியோடந்தமாய் எல்லா விவரத்தையும் சொல்லி முடித்தேன்.

“தம்பி, சொன்னா நம்பமாட்டீக. இந்த புள்ள மூணு நாளா சோறு தண்ணி இல்லாம தூங்காம எந்நேரம் பாத்தாலும் அழுதுகிட்டே கிடக்குது. சிங்காரி இல்லாம ஒரு நேரம் இருக்காது. எனக்கே மனசு ரொம்ப சங்கட்டமா போச்சு. நல்ல காலம். வெறும் நரம்பு சுளுக்கு தான் சொல்லி மூணு நாளு எண்ணபெரட்டி நீவி விடணுமின்னு டாக்டரு சொல்லிப்புட்டாரு..”

“இந்த குழந்தை?”

“எங்க மக வயித்து பேத்தி தம்பி. அப்பனும் ஆத்தாளும் போய்ச்சேந்துபுட்டாக…இதுக்காகத்தான் உசிர கையில பிடிச்சுக்கிட்டு அலமோதுறோம்”

கண்ணிலிருந்து கண்ணீர் மளமளவென்று கொட்டியது.

“எல்லாம் எங்களாலதானே”

“நேரந்தம்பி, நேரம். உங்க நல்ல மனசு சுளுக்கோட போயிரிச்சு”

ஒரு குதிரைக்காக உயிரையே விடும் குடும்பத்தை முதன் முறையாக பார்த்து அதிசயப்பட்டேன். அப்புறம் இரண்டு தடவை அழகர் வீட்டுக்கு போய் வந்தேன். ஒரு மாசம் வண்டியில் பூட்டக்கூடாது என்று டாக்டர் சொல்லி விட்டாராம். என்னால் வருமானம் போய்விட்டதே என்ற அங்கலாய்ப்பு. இருநூறு ரூபாய் குடுத்ததை வாங்க மறுத்து விட்டான்.

“எம்பொண்ணுக்கு நாஞ்செய்யாம வேற யாரு செய்வாக தம்பி?. வெசனமில்லாம போங்க தம்பி!”

குதிரை வண்டியில் ஏறுவதே ஏறக்குறைய நின்று போனது.. சிங்காரி எப்போதும் போல் சவாரிக்கு வந்துவிட்டாள். ஆனால் மாசத்தில் நாலைந்து நாள் ஓட்டுவதில்லை என்று தீர்மானமாய் இருப்பதாய் அழகர் சொன்னான். அம்மாதான் அடிக்கடி சொல்லிக்கொண்டே இருப்பாள்.

“பாவம், வாயில்லா ஜீவன் மேல எத்தனை கரிசனம் பார் அழகருக்கு”

என்னுள் வித்தாக முளைத்தது பெரிய விருட்சமாய் வளர்ந்தது. ஆமாம், பெரியவனானதும் கால்நடை மருத்துவராவதுதான் என் லட்சியம். அத்தை போனபின் அப்பாவுக்கு மெட்ராஸ் போஸ்ட்டிங் ஆகிவிட்டது.நான் தீர்மானித்தபடி கால்நடைமருத்துவக் கல்லூரியில் சேர்ந்து விட்டேன். நம்முடைய வாழ்க்கையின் வழிகாட்டி விவேகானந்தரோ, ஜக்கி வாசுதேவ் ஆகத்தான் இருக்க வேண்டிய அவசியமில்லை. ஒரு அழகர்சாமியோ, மங்கம்மாவோ கூட இருக்கலாம்.

“செய்யும் தொழிலே தெய்வம்…
அந்த திறமைதான் நமது செல்வம் ”

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *