வடம் பிடிக்க வாங்க ஜப்பானுக்கு!

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: February 21, 2021
பார்வையிட்டோர்: 9,718 
 

அத்தியாயம்-2 | அத்தியாயம்-3 | அத்தியாயம்-4

ஒன்று, இரண்டு என்று தொடங்கி ஐந்து வரை விரல் விட்டு எண்ணினார் புள்ளி சுப்புடு. அப்படி எண்ணும்போது நம் ஊர் வழக்கப்படி இல்லாமல், கட்டை விரலில் தொடங்கி சண்டுவிரலில் முடித்தார்.

“இதென்னய்யா தலைகீழ்ப்பாடமா கட்டை விரல்லேருந்து எண்றீங்க! இது எந்த ஊர் வழக்கம்?” என்று கேட்டார் முத்து.

“இது ஜப்பான் நாட்டு வழக்கம். நாமெல்லாம் சுண்டு விரல்லே ஆரம்பிச்சு கட்டை விரல்லே முடிப்போம். இங்கே கட்டைவிரல் தான் முதல் நம்பர் 1 பி எ ரோமன் வென் யு ஆர் இன் ரோம்” என்றார் புள்ளி சுப்புடு.

“சரி; அஞ்சுங்கறது என்ன கணக்கு?” – முத்து கேட்டார்.

“இன்னைக்கு அஞ்சாவது நாள் . இண்டியன் பாங்க் சேர்மன் கோபாலகிருஷ்ணன் வரார். ஆறாவது நாள் காலையில ஒன்பது மணிக்கு பந்தக்கால் முகூர்த்தம். பந்தக்கால் நுனியில் மாவிலை கட்டி மங்கள வாத்திய இசையோட கோபாலகிருஷ்ணன் ஊன்றி வைப்பார். ராசியான கை!”

“பந்தக்காலா? அது எதுக்கு”

“அரண்மனை கிழக்கு வாசல்லேதான் தேரோட்டம் தொடங்கப் போறோம். அந்த இடத்துலயே வேற ஒரு ஸைட்ல ஷாமியானா போட்டு தேர் ஃபெஸ்டிவல் ஆபீஸ் அமைக்கணும். தேரோட்டம் சம்பந்தமான எல்லா ஏற்பாடுகளையும் அந்த ஆபீஸ்தான் கவனிச்சுக்கும்.”

“கொஞ்சம் விவரமாச் சொல்லுங்க…”

“முதல்ல ஸ்பெஷல் கொடி ஒண் ணு தயார் செய்யணும். அப்புறம், ஸ்டாம்ப் ரிலீஸ் கல்ச்சுரல் புரோக்ராம், என்கொயரி ஆபீஸ்னு இப்படி எத்தனையோ ஐட்டம் இருக்கே!” என்றார் முத்து .

“நாங்க ரெண்டு பேரும் இப்பவே தேரடிக்குப் போறோம். முதல்லே தேரை ரிப்பேர் செய்யணும். நாலு பக்கமும் தொம்பை கட்டணும். நிறைய அலங்கார வேலை இருக்கு. ஜாயிண்ட் வேலையெல்லாம் முடிச்சு, பளபளன்னு புதுத் தேராக்கிடணும்” என்றார் கணபதி ஸ்தபதி.

“தேர் வேலையை கவனிக்கப் போறது யார் யார்?”

“நானும்’ கன்னனும் தான். தச்சு வேலை செய்யறவங்க ஓட்டல்ல இருக்காங்க. அவங்களும் இப்ப வராங்க…”

“பந்தக்கால் முகூர்த்தம் வரைக்கும் எங்களுக்கு ஒரு வேலையும் இல்லை. அதனால, நாங்க நாலு பேரும் அதுக்குள்ளே கியோட்டோவுக்குப் போயிட்டு வந்துடறோம்” என்றார் மனோரமா.

“அதுவும் நல்ல யோசனை தான்” என்றார் நன்னன்.

“கியோட்டோ ஜப்பானின் பழைய தலை நகரம். 1868லேருந்து டோக்கியோ தான் புதுத் தலைநகரம்!” என்றார் புள்ளி.

“கியோட்டோ, டோக்கியோ” என்று திருப்பித் திருப்பிச் சொல்லிப் பார்த்தார் மனோரமா.

“KYOTO’ பழைய நகரம். TOKYO புதுசு, ரெண்டுமே அஞ்சு எழுத்துதான்.’ தலைநகரம் மாறின மாதிரி எழுத்துக்களும் இடம் மாறியிருக்கு!” என்று புள்ளி சுப்புடு புதிர் போட்டார்.

“எப்படி?”

“KYOTO-வில் உள்ள கடைசி ரெண்டு எழுத்தை முதல்ல. மாத்திப் போட்டா TOKYO!” என்றார் புள்ளி.

“ரொம்ப ஆராய்ச்சி பண்ணியிருக்கீங்க” – மனோரமா சிரித்தார்.

“நீங்க ஆச்சி, நான் ஆராய்ச்சி!” என்றார் புள்ளி.

நாலு பேரும் ஸ்டேஷன் வாசலில் போய் நின்றபோது – அந்த நகரத்தின் கம்பீரமும், கலகலப்பும் எதிரில் டவர் ஓட்டலும் தெரிந்தன. விசாலமான விஸ்தீரணத்தைக் கடந்து, அந்தக் கட்டடத்தின் ஓரமாகவே நடந்து போனார்கள்.

பக்கத்தில் ஒரு சின்ன சந்து திரும்பியது. “இந்தத் தெருவில் நிறைய ‘இன்ன்’ஸ் இருக்கு. நாலு பேர் தங்கறதுக்கு வசதியாவும் சீப்பாவும் இருக்கும். கட்டில் மட்டும் இருக்காது. தரையில் பாய் விரித்து திண்டு போட்டிருப்பார்கள்” என்றார் கோமோச்சி. .

ஒரு ரைஸ் குக்கர் வாங்கி இன்ன்லயே சமையலம் பண்ணிட்டா சாப்பாட்டுச் செலவும் மிச்சமாப் போயிடும்” என்றார் புள்ளி .

“பஸ்ட்கிளாஸ் ஐடியா சாம்பார் பொடி, ரசப்பொடி, ஊறுகாய் பெருங்காயம் உள்பட சமையலுக்கு வேண்டிய எல்லாம் கொண்டாந்திருக்கேன். நானே சமையல் பண்ணி ரட்டுமா?” என்று கேட்டார் மனோரமா.

“இன்ன்ல சமைக்கலாமா? ஒத்துக்குவாங்களா?” என்று பயந்தார் முத்து.

“இன்ன் சொந்தக்காரிக்குத் தெரிஞ்சா ஆபத்து. சத்தம் போட்டு விரட்டி விட்டுருவாங்க” என்று எச்சரித்தாள் கோமோச்சி.

“ம்.. பார்த்துக்கலாம். சமாளிச்சுக்கலாம்” என்றார் புள்ளி..

“ஜப்பான்ல நம் ஊர்’ சாப்பாடா! அதுவும் மனோரமா கையால பலே, பலே! அப்படின்னா சாம்பார் ஏதாச்சும்கூட…”,

“சின்ன வெங்காயம் இருக்கு. சாம்பாரும் செஞ்சுட்டாப் போகுது” என்றார் மனோரமா.

ஒரு இன்ன் பிடித்து, மேல் மாடியில் இரண்டு ரூம் எடுத்துக் கொண்டார்கள். அந்த இன்ன்னுக்குச் சொந்தக்கார அம்மாளுக்குத் தெரியாமல் ரகசியமாகச் சமைத்து விடுவது என்றும் முடிவு செய்தார்கள்,

வெங்காயம் உரித்து, பருப்பு வேகவைத்து, சாதம் வடித்து, சாம்பார் கொதித்தபோது வெங்காய வாசனை கமகமத்தது!

“கதவைச் சாத்துங்க! வாசனையை வெளியே விடாதீங்க… ஜாக்கிரதை!” என்று எச்சரித்தார் புள்ளி.

எல்லாக் கதவுகளையும் மூடி, துளி ‘ வாசனை கூட வெளியே போகாதபடி துவாரகபாலகர் மாதிரி காவல் காததாா முத்து.

புள்ளி சுப்புடு விசிறியால் வீசி, வீசி வாசனையைக் கலைத்துவிட்டுக் கொண்டிருந்தார்.

வீட்டுக்கார அம்மாள் உட்கார்ந்திருந்த கவுண்ட்டர் வரை போய் நின்று அங்கு சாம்பார் வாசனை வருகிறதா என்று மோப்பம் பிடித்துப் பார்த்தார் புள்ளி.

வீட்டுக்கார அம்மாவோடு பேச்சுக் கொடுத்து, அவள் கவனத்தை திசை திருப்பினாள் கோமோச்சி, முத்து ஊதுவத்தி கொளுத்தி வைத்து சாம்பார் வாசனையை அதில் மறைக்கப் பார்த்தார்.

சாம்பாரைக் கீழே இறக்கி வைக்கிறபோது வீடு பூராவும் வாசனை அடர்த்தியாய்ப் பரவிவிட்டது!

வீட்டுக்கார அம்மாள் மூக்கை உறிஞ்சி உறிஞ்சி, ‘அதென்ன வாசனை! எங்கிருந்து வருகிறது?” என்று யோசித்தாள். சந்தேகத்துடன் மேலே இவர்கள் தங்கியிருந்த அறைக்கு விரைந்து சென்று பார்த்தாள்.

“ஐயோ, வீட்டுக்கார அம்மாள்! தெரிஞ்சுபோச்சு போலிருக்கு! என்ன ஆகப் போகுதோ!” என்று எல்லோரும் பயந்துபோய் திருட்டு முழி முழித்தார்கள்.

அந்த அம்மாள் “இங்கே சமையல் செய்தீர்களா?” என்று அதிகாரமாய்க் கேட்டாள்.

“ஆமாம்” என்று ஒப்புக்கொண்டார் புள்ளி பயந்தபடி.

“என்ன பண்ணீங்க?”

“ஆனியன் சாம்பார்” என்று கோமோச்சி உண்மையைச் சொல்ல, “அப்படியா! வாசனை பிரமாதம்! நாக்ல ஜலம் ஊறுது. எனக்கும் கொஞ்சம் சாம்பார் கொடுப்பீங்களா?” என்று கேட்டாள்.

“அம்மாடியோ! தப்பிச்சோம்!” என்று எண்ணிக்கொண்ட மனோரமா, ஒரு பாத்திரம் நிறைய சாம்பார் எடுத்துக் கொடுத்தனுப்பினார். அங்கேயே ஒரு ஸ்பூன் சாம்பாரை வாயில் ஊற்றிச் சாப்பிட்டுப் பார்த்த வீட்டுக்காரி “ரொம்ப டேஸ்ட்டா யிருக்கு! வெரிகுட் ‘தினமும் நீங்க இங்கேயே சமையல் செஞ்சுக்குங்க. எனக்கும் கொஞ்சம் சாம்பார் கொடுத்துட்டுப் போங்க. ஆமாம்!” என்று ஒரு உத்தரவுபோல் சொல்லி விட்டுப் போனாள்.

மனோரமாவுக்கும் மற்றவர்களுக்கும் அப்போது தான் போன மூச்சு திரும்பி வந்தது!

நாலு பேரும் மகிழ்ச்சி தாங்காமல், “அம்மாடி!” என்று நிம்மதிப் பெருமூச்சு விட்டார்கள்.

“நாளைக்கு என்ன, சமையல்? மீன் குழம்பு வச்சிரலாமா?” என் ஓ கேட்டார் மனோரமா தைரியத்தோடு.

“மீன் தான் ஜப்பானியர்களின் முக்கிய உணவு. இந்த நாட்டின் உணவுத் தேவையை 60% மீன் தான் பூர்த்தி செய்கிறது. பாதிப்பேர் பச்சையாகவே சாப்பிட்டுருவாங்க” என்றார் புள்ளி.

***

நன்னன் உயினோ பார்க்கில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தேர்ச் சப்பரத்தின் மீது ஏறி அமாந்து ஏதோ எழுதிக்கொண்டிருந்தார்.

“என்ன எழுதறீங்க?” என்று கேட்டார் திருக்குறள் ஷோஜோ.

“அரண்மனையைச் சுற்றி நாலு பக்கமும் தேர் ஓட்டப் போறோம் இல்லையா? அந்த நாலு வீதிக்கும் நாலு பேர் வைக்கலாம்னு ஒரு யோசனை!”

“என்ன பேர் வைப்பீங்க?”

“அதைத்தான் எழுதிக்கிட்டிருக்கேன். வள்ளுவர் வீதி, இளங்கோ வீதி, ஒளவையார் வீதி, பாரி வீதி.”

“பாரி வீதி எதுக்கு?”

“முல்லைக்கு தேர் ஈந்த வள்ளல் பாரிதானே? அவன் பேரும் இருக்கட்டுமே!” என்றார் நன்னன்.

வெளிநாட்டிலிருந்து ஏராளமான டூரிஸ்ட்டுகள் தேரைச் சுற்றிச் சூழ்ந்து வேடிக்தை பார்த்துக் கொண்டிருந்தார்கள். திருக்குறள் ஷோஜோ அவர்களுக்கெல்லாம் தேர் பற்றியும் தேரோட்டம் பற்றியும் விளக்கம் – சொல்லிக்கொண்டிருந்தார். தேரின் அடிப்பாகத்தில் இருந்த நுட்பமான சிற்பங்களைக் காட்டி, “இதெல்லாம் இந்தியாவின் கலைச்செல்வங்களையும் ‘கலாசாரங்களையும் பிரதிபலிக்கும், சிற்பங்கள். இந்தத் தேரின் மீது வள்ளுவர் சிலையை வைத்து ஊர்வலம் விடப் போகிறோம்” என்றார்.

“அப்படியா! ஊர்வலம் என்றைக்கு?” என்று ஆவலோடு கேட்டார் கிஜிமாவோடு அங்கே வந்திருந்த ஜார்ஜ்.

“தேதி இன்னும் முடிவாகலே…” என்றார் ஷோஜோ .

தேரைச் சுற்றிச் சுற்றி ஒரு ஆராய்ச்சியோடு கவனித்தார் ஜார்ஜ். எல்லா பாகங்களையும் நுட்பமாகப் பார்த்துக் கொண்டார். நாலு சக்கரங்களையும் தொட்டுப் பார்த்து “ப்யூட்டிஃபுல் கார்விங்ஸ்” என்று வியந்தார்.

சிற்பங்கள் செய்யும் ஆச்சாரிகளைச் சந்தித்து, “சிற்பங்கள் செய்யும் கலையை எனக்கும் கற்றுத் தருவீர்களா?” என்று கேட்டார்.

– தொடரும்…

முதற் பதிப்பு – ஜனவரி 1991

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *