கீழே விழுந்துட்டேங்க!

1
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: September 26, 2012
பார்வையிட்டோர்: 11,995 
 

மதிகெட்டான்பட்டியின் அராஜகப் பேர்வழிகள் அத்தனை தப்பு தண்டாக்களையும் செய்துவிட்டு, ஊர் பூசாரியிடம் போய், தாங்கள் செய்த தப்பை விலாவாரியாகச் சொல்லி, ‘ஐயோ! இப்படிச் செய்துவிட்டேனே!’ என்று வருந்திக் குமைவார்கள்.

அவர் எண்பது வயது முதியவர். பழுத்த பழம். அவருக்கு இதனால் பெரிய தலைவலியாகிவிட்டது.

ஊர் நாட்டாமையிடம் அவர் ஒருநாள் இதுபற்றி முறையிட, நாட்டாமை ஊரைக் கூட்டி, ”இதோ பாருங்கப்பா! அவரோ வயசானவரு. அவர்கிட்டே நீங்க பண்ணின கற்பழிப்பு விஷயம், பொம்பளைங்க சோரம் போன விஷயம் இதையெல்லாம் அப்படியே விவரிச்சுச் சொன்னா, பாவம் அந்த மனுஷன் ரொம்பச் சங்கடப்படறாரு. இனிமே அந்த மாதிரி விஷயமா இருந்தா, வெறுமே ‘கீழே விழுந்துட்டேங்க’ன்னு சொன்னா போதும், புரிஞ்சுப்பாரு!” என்றார்.

அன்று முதல் பூசாரியிடம் தினமும் யாராவது வந்து, ”கீழே விழுந்துட்டேங்க!” என்பது வாடிக்கையாயிற்று. அவர் காலத்துக்குப் பிறகு பூசாரியாக பொறுப்பேற்றுக்கொண்ட வெளியூர் இளைஞனிடமும் தினமும் யாராவது வந்து ”கீழே விழுந்துட்டேங்க” என்று சொல்லிவிட்டுப் போனார்கள்.

ஊர் நாட்டாமையைச் சந்தித்த அவன், ”ஐயா! நம்ம கோயிலுக்கு வர்ற பாதையை உடனே சீர்படுத்தியாகணும்! தினம் தினம் யாராவது ‘கீழே விழுந்துட்டேன்’னு புகார் சொல்லிட்டே இருக்காங்க” என்றான்.

ஊர் வழக்கத்தை அவனிடம் யாரும் இதுவரை சொல்லவில்லை என்பதைப் புரிந்துகொண்ட நாட்டாமை இடி இடியென்று சிரித்தார்.

”ஐயா! நீங்க இப்ப எதுக்காகச் சிரிக்கிறீங்கன்னு எனக்குப் புரியலே! போன வாரம் மட்டும் உங்க மனைவி மூணு தடவை கீழே விழுந்திருக்காங்க. அப்புறம் உங்க சௌகரியம்!” என்றான்.

– 11th ஜூன் 2008

Print Friendly, PDF & Email

1 thought on “கீழே விழுந்துட்டேங்க!

  1. Indha kadhai naan kurumpadamaga eduka ninaikiren. Asiriyar ennai thodarbu kollavum. 9087488444
    Whatsapp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *