மர்ம வெளி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: த்ரில்லர்
கதைப்பதிவு: February 12, 2022
பார்வையிட்டோர்: 58,451 
 

நண்பர் ஒருவர் கூறியதன் பொருட்டு அந்த மிகப் பாழடைந்த மண்டபத்தினைக் காணும் ஆவல் ஏற்பட்டது. பழைய மன்னர்கள் காலத்து அரண்மனை அல்லது பழைய மன்னர்கள் குடியிருந்த வீடு எனக் கூறலாம்.

தஞ்சாவூர்ல உள்ள மக்கள் வரலாறு குறித்த பல விஷயங்களை வாய்மொழிச் செய்தியாக அவ்வப்போது கூறிச் செல்கின்றனர். இது அவர்களின் இயல்பான வாழ்வுடன் ஒன்றியதொரு விஷயமாக உள்ளது. மேலும் வரலாற்றுச் கால எச்சங்கள் தஞ்சாவூரிலும், சுற்றியுள்ள கிராமங்களிலும், இப்பகுதியெங்கும் காணப்படுகின்றன. கோயில்கள், அரண்மனைகள், குளங்கள், மண்டபங்கள், இப்படி பல வரலாற்றுக் கால எச்சங்கள் காணப்படுகின்றன.

அப்படியொரு எச்சம்தான் அந்த பாழடைந்த மண்டபம். திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள ஒரு குக்கிராமத்தில் அந்த மண்டபம் உள்ளது.
அந்த மண்டபத்தில் புதையல் இருப்பதாகப் பேசிக் கொள்கிறார்கள். ஆவிகள் உலவுகின்றன என கூறுகின்றனர். பிணங்கள் புதைக்கப்பட்டிருப்பதாக கூறுகின்றனர். அந்த மண்டபம் யாராலும் தீண்டப்படாமல் கைவிடப்பட்ட சொந்தம் கொண்டாடப்படாமல் அமானுஷ்யத்தைச் சுமந்த வண்ணம் மர்மம் நிறைந்ததாக, இழப்பை ஆடை நழுவிப்போய் உலகுக்கு காட்டிய வண்ணம் நின்று கொண்டிருந்தது.

நான் அந்த மண்டபத்தைப் பற்றி தெரிந்துகொள்ள ஆர்வங்கொண்டிருந்தேன். வரலாறு என்னுள் ஒரு தீய ஆவிபோல் இறங்கி பிடித்தாட்டுகிறது. அதனாலேயே நான் அங்கு செல்ல தீர்மானித்தேன்.

திருக்காட்டுப்பள்ளிக்கு அருகே ஒரு கிராமம் உள்ளது. அதன் பெயர் செந்தலை. தேனைத் தலைநகரமாகக் கொண்டு களப்பிரர்கள் ஆண்டதாக நான் படித்திருக்கிறேன். பல்லவர்களுக்கும் பிந்தய காலம் கி.பி. ஏழாம் நூற்றாண்டு வாக்கில் எனக் கொள்ளலாம். முத்தரையர்கள் குறுநில மன்னர்களாக ஆண்டதாகவும் நான் படித்திருக்கிறேன். திருக்காட்டுப் பள்ளியைச் சேர்ந்த ஒரு கணக்கர் சோழர் காலத்தில் தவறிழைத்ததற்காக தண்டிக்கப்பட்ட வரலாறும் நான் அறிவேன். அது காவிரியாறு பாய்ந்து செல்லும் வளமான பகுதி. எங்கும் பசுமையான வயல்கள்தான் காணப்படும்.

திருக்காட்டுப்பள்ளிக்கு இரண்டு கி.மீ. தூரத்தில் பூண்டி மாதா திருத்தலம் உள்ளது. அங்கு கிறிஸ்தவ மத பாதிரியார்கள் கி.பி.1700களில் சமயப் பணி ஆற்றியுள்ளனர். வீரமாமுனிவர் அங்கு ஒரு ஆலயம் கட்டியதாக வரலாறு உள்ளது.

கருங்கற்களாலும் மண்ணாலும் செங்கலாலும் கட்டி இடித்துபோன சிதிலமானதொரு பெரிய நிலப்பரப்பிலான மண்டபம் அது. வீழ்ந்துபோய் கிடந்தது. வீழ்ச்கியடைந்த ஒரு சாம்ராஜ்யத்தின் எச்சம்போல் காணப்பட்டது. இம்மண்டபத்தின் வீழ்ச்சி ஒரு அரசின் வீழ்ச்சியாகலாம் அல்லது ஒரு குடும்பத்தின் வீழ்ச்சியாகலாம் அல்லது ஒரு தனி மனிதனின் வீழ்ச்சியாகலாம். பல்லாயிரக் கணக்கான மக்களின் வீழ்ச்சிதானே வரலாறு என்பது!

இக்கட்டிடம் யாருடையது? யாருடைய காலத்தினது? ஏன் வீழ்ச்சி அடைந்தது? கறுப்படைந்த கவர்களில், மழையால் பாசி பிடித்து கிடந்தது. இரவு நேரங்களில் கூக்குரல்கள் இக்கட்டிடத்திலிருந்து எழும்புவதாக கூறுகின்றனர். ஆவிகள் எழும்புவதாக கூறுகின்றனர். ஆவிகள் எழுப்பும் ஓலம், பகலில் அமானுஷ்யத்தை போர்த்தியது. பழமையானது சற்று அச்சமூட்டுவதாகவே உள்ளது.

நாங்கள் உள்ளே சென்றோம். கிராமத்தின் முக்கியஸ்தர்களிடம் விஷயத்தைக் கூறியிருந்தோம். சிலர் வெளியே மர நிழலில் நின்றிருந்தனர். உடைந்துபோன சுவர்கள், மரத்துண்டுகள், கற்குவியல்கள் எனக் கிடந்தது. சில உயிரினங்கள் அங்கு குடிகொண்டிருந்தன. பாம்புகள் இருக்கக்கூடும். சிலந்தி வலை பின்னிக் கிடந்தது தூசி படிந்து இருந்தது. எங்களின் இருப்பு எங்களுக்கே அச்சமூட்டுவதாக இருந்தது.

மண்டபத்தின் உட்பிரிவுகளுக்காக தடயங்கள் ஏதுமின்றி சிதிலமாகிக் கிடந்தது. ஒரே ஒரு அறை இருந்ததற்கான சுவர்கள் தெரிந்தன. கருங்கள் சுவர்கள், சுவர் உடைந்து போயிருந்தது. அந்த அறையின் மூலையில் ஒரு பெட்டி இருந்தது. அது ஒரு இரும்புப் பூட்டினால் பூட்டப்பட்டிருந்தது. துருப்பிடித்திருந்தன பெட்டியும் பூட்டும். பெட்டியை வெளியே எடுத்தோம். பலரும் அது புதையலாக இருக்கக்கூடும் எனக் கருதினர்.

ஊர் முக்கியஸ்தர்கள் முன்னிலையில் அது உடைக்கப்பட்டது. தொல்லியல் துறைக்கும் சொல்லப்பட்டு ஒரு சிலர் வந்திருந்தனர். பெட்டியில் அனைவரும் ஏமாந்து போகும் படி அங்கு புதையலோ, வேறு ஏதுமோ இல்லாமலிருந்தது. ஆனால் ஒரு துணியால் கட்டி மூடப்பட்ட ஒன்றைக் கண்டோம். பட்டுத் துணி இற்றுப் போயிருந்தது. அதனுள் இருந்தவை பல ஓவியங்கள். பாதி அரிக்கப்பட்டும் வண்ணமிழந்தும் உள்ள நிறைய ஓவியங்கள் பல இருத்தன. இயற்கைக் காட்சி, பெண், முதியோ‘, வீடு, கட்டிடங்கள் இப்படி பல. யாவும் அக்கால தூரிகைளில் தீட்டப்பட்டிருந்தன. அவை பாய்க்குச்சி போன்றவைகளால் ஆனதாக இருந்தன.

தொல்லியல் துறையின் சில வரலாற்று ஆராய்ச்சியாளர்களிடம் இவற்றைக் காண்பிக்க வேண்டும். பின்பு அரசு அருங்காட்சியகத்தில் வைக்கப்பட வேண்டும் என்றனர். ஊர் முக்கியஸ்தர்கள் ஊரில்தான் வைக்க வேண்டும் என்றனர். அவ்வோவியங்கள் புதையல் பற்றி குறிப்புகளைக் கொண்டுள்ளன என கருதியது தான் அதன் காரணம்.

எனக்கு இவ்வோவியங்கள் உணர்த்தும் ஏதோ ஒன்று உள்ளது எனப்பட்டது. நிச்சயமாய் புதையல் இருக்காது என மனதில் பட்டது. ஒரு தேர்ந்த கலைஞனின் கைவண்ணம் அவற்றில் தெரிகிறது. யார் அந்த ஓவியன்? அவன் யாரை, எதை வரைந்தான்? ஏன் அதை வரைந்தான்?

மேலும் அம்மண்டபத்தில் இதனுடன் சம்பந்தப்பட்ட விஷயங்களை உணர்த்தும் பொருட்கள் இருக்கக்கூடும் எனப்பட்டது. மீண்டும் அம்மண்டபத்திற்குள் என் நண்பருடன் செல்ல எண்ணினேன். பிறர் வீண் காரியம் என ஒதுங்கிக் கொண்டனர். ஊரார் வேலைகளைக் கவனிக்கச் சென்றுவிட்டனர். ஓவியங்களைத் தொல்பொருள் துறையினர் எடுத்துச் சென்றனர். நான் அவர்களிடம் அது பற்றி சில விஷயங்களைத் தெரிந்துகொள்ள அல்லது ஆராய ஆர்வமாக இருக்கிறேன் எனக் கூறியிருந்தேன்.

நண்பரும், நானும் மீண்டும் உள்ளே சென்றோம். கற்குவியல்களை ஒதுக்கிவிட்டுப் பார்த்தோம். சில இடங்களைத் தோண்டியும் பா‘த்தோம். அப்படி தோண்டிய போது, அந்த இரும்புப் பெட்டிக்கு அருகில் அதாவது அந்த இரும்புப் பெட்டி வைக்கப்பட்ட அறையின் சுவருக்கு அருகில் சில எலும்புகள் கிடந்தன. நிச்சயமாக சொல்ல முடியும் அவை மனித எலும்புகள். நான் பயந்து போனேன். அதிர்ச்சியும் அடைந்தோம். மனித எலும்புக் கூடு, கற்குவியலுக்கு அடியே! இது மண்டபம் அல்லது பெரிய வீடு. இங்கு எப்படி மனித எலும்புகள். வீட்டிற்குள் யாரையும் புதைக்க மாட்டார்கள்!

பொதுவாக, இந்தப் பகுதியில் வாழ்ந்த மூதாதையர்கள் பிணங்களை எரிக்கக் கூடியவர்கள். எப்படிப் புதைத்தனர்? உண்மையில் இந்த மண்டபத்தில் மர்மம் இருப்பதாக எனக்குப்பட்டது. எலும்புகள் பற்றி தொல்லியல் துறையில் கூறினோம். அவர்கள் வேறு சில நிபுணர்களுடன் வந்தனா. கற்குவியல்களை முழுவதுமாக தோண்டி எடுத்தனர். மனித எலும்புக் கூட்டின் பல பகுதிகள் கிடைத்தன. ஒற்றை எலும்புக் கூடு. அதுவும் ஆண் எலும்புக்கூடு என பின்பு ஆய்வு செய்து கூறினர். மேலும் சாதாரண மரணமல்ல என்றும் இயற்கையான அடக்கமல்ல எனவும் கூறினர்.

தடயவியல் நிபுணர்களின் உதவி கொண்டு எலும்புகளைப் பற்றி மேலும் தகவல் கிடைக்கும் என முற்றிலும் நம்பினேன். மருத்துகக் கல்லூரியின் பாரன்சிக் துறையில் வேலை பார்ப்பவர் எனது அறைக்கு அடுத்த அறையில் தங்கியுள்ளார். அவரை அழைத்து வந்து காண்பித்தோம். சில நாள்கள் ஆராய்சி செய்தார். அவர் கூறிய விசயங்கள்

துர் மரணம் சம்பவித்திருக்கிறது. கல்லெறியப்பட்டு இறந்திருக்கலாம் அல்லது கற் குவியல்களுக்கிடையே புதைக்கப்பட்டு இறந்திருக்கலாம். அதற்கு முன்பு இறந்துபோன ஆணினுடைய கை விரல்கள் வெட்டப்பட்டிருக்கின்றன. இறந்தபோது ஏறக்குறைய முப்பது வயதிருக்கலாம். மேலும் ஏறக்குறைய முந்நூறு ஆண்டுகளுக்கு முன்பு உயிர் வாழ்ந்திருக்கக் கூடும்.

உடனே சில விசயங்கள் பிடிபட்டன. இறந்தவன் ஒரு ஒவியன். அவனது ஒவியத்திற்கு எதிரிகள் அல்லது அவனது ஓவியத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் இருந்திருக்கக் கூடும். ஏனெனில் ஓவியம் வரையும் கை விரல்கள் வெட்டப்பட்டிருக்கின்றன. அவனது ஓவியத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் யாரோ அவனைக் கொன்றிருக்கக் கூடும். இது சம்பந்தப்பட்ட பல்வேறு பிரச்சனைகள், அதற்கு முந்திய காலங்களில் நடந்திருக்கக்கூடும். அவற்றின் இறுதியான முடிவுதான் இந்த மரணம். அந்த ஓவியங்களை மீண்டும் ஆராய வேண்டுமெனத் தோன்றியது.

காலம் ஏறக்குறைய 1700களின் முற்பகுதி அல்லது 1600களின் பிற்பகுதி. தஞ்சையில் மராட்டியர்களின் 1600களின் பிற்பகுதி. தஞ்சையில் மராட்டியர்களின் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது. கும்பினியாரின் ஆக்கிரமிப்பு ஆரம்பித்திருந்த காலம். தமிழகத்தில் வெள்ளைக்கார கிறித்துவ துறவிகள் சமயப் பணியாற்றிக் கொண்டிருந்த காலம். அவர்கள் தஞ்சையைச் சுற்றியுள்ள பகுதிகளில் சமூக, சமயப் பணியாற்றியுள்ளனர்.

அப்போதைய காலகட்டத்தில் இத்தனை பெரிய வீட்டில் குடியிருப்பவர்கள் செல்வந்தர்களாக மட்டுமே இருக்க முடியும். அப்போது அரசுத் துறையைச் சார்ந்தவர்கள், இராணுவத் துறையைச் சார்ந்தவர்கள், வியாபாரிகள் மட்டுமே செல்வந்தர்களாக இருந்தனர். அந்தக் குடும்பம் இதில் ஏதேனும் ஓரு பிரிவில் இருந்திருக்க வேண்டும். செல்வமும் கூடவே பிரச்சனைகளும் கூடிய அம்மாளிகையில் வசித்த பெரிய குடும்பத்தினரின் ஒரு வாலிபனின் குரூர மரணம் அது. அவன் மட்டுமே மரணமடைந்திருந்தால் அவனது குடும்பத்துக்குள் ஏற்பட்ட பிரச்சினைகளால் அம்மரணம் ஏற்பட்டிருக்கக் கூடும். மேலும் அக்கால சடங்குகளின்படி எரிக்காமல் கற்குவியல்களுக்கிடையே புதைக்கப்பட்டுள்ளது. ஏன் வீட்டின் பெரியவர்கள் சடங்குகளின்படி எரிக்கவில்லை? அல்லது அதை தடுத்தது எது?

ஒரு வேளை குடும்பமே கூண்டோடு அழிந்ததா? அப்படியெனில் ஒரு பெரிய அழிவு ஏற்பட்டிருக்கக் கூடும். அந்த மண்டபமும் இடிந்து போயிருக்கக் கூடும். அச்த மண்டபமும் இடிந்து போயிருக்கக் கூடும். பிறரது எலும்புக் கூடுகள் எங்கே எலும்புகளின் மிச்சங்கள் எங்கே? மீண்டும் அந்த மண்டபத்திற்குச் சென்று ஆராய விரும்பினேன்.

இதற்கிடையே தொல்லியல் துறையின் உதவியுடன் அந்த ஓவியங்களை மீண்டும் ஏதாவது தடயம் கிடைக்குமா என ஆராய்ந்தேன். இயற்கைக் காட்சிகள், அவற்றின் கீழ் சில குறிப்புகள். தமிழ் மொழி படிக்க சிரமமாயிருந்தது தொல்லியல் துறை நண்பர் ஒருவர் அவற்றை படித்துக் காண்பித்தா‘. சில ஓவியங்கள் முடிக்கப்படாமல் இருந்தன. சில ஒவியங்கள் குழப்பமாக கிறுக்கல்கள் நிறைந்ததாக இருந்தன. அது அவன் மனக் குழப்பத்தையே உணர்த்துகிறது என நான் கருதினேன். அவன் ஓவியனாவதற்குத் தேவையான சூழல் ஏன் மாறிப் போனது?

அந்த குழுப்பமாக கிறுக்கல்கள் நிறைந்ததாக இருந்த ஓவியங்களில் ஒன்று மட்டும் பலவரிகளில் எழுதப்பட்டதாக இருந்தது. தொல்லியல் துறை நண்பர் மிகுந்த சிரமங்களுக்கிடையே படித்துக் கூறியவை:

பாண்டிய நாட்டுடனான போரில் எங்கள் பரம்பரையின் முப்பாட்டனார், நிறைய பாண்டிய நாட்டு போர் வீரர்களைக் கொன்றதற்காக இந்த நிலங்களும், சொத்தும் எங்களுக்கு கிடைக்கப் பெற்றது. இரத்த சம்பாத்தியத்தில்தான் இவ்வுடம்பு வளர்ந்துள்ளது எனநினைக்கையில் மிகுந்த துயரம் கவ்விக் கொள்கிறது. தற்போதுள்ள ஆட்சியில் அனைத்து செல்வாக்கையும் இழந்தாயிற்று. ஊர் மக்கள் அனைவருக்கும் என் மேலும் ஆசாரியர் மேலும் துவேஷமும், குரோதமும் நிறைந்துள்ளது. நானோ பரம்பரை தோறும் துரத்தும் சாபத்திலிருந்து தப்பிக்கவே ஓடிக்கொண்டிருக்கிறேன்.

என்னால் சரிவர விளங்கிக் கொள்ள இயலவில்லை. ஆனால் இதை எழுதியவன் தான் இறந்தவன். அவனை சாபம் துரத்திப் கொண்டிருந்தது. யாரிந்த ஆசாரியர்? மேலும் ஊர் மக்கள் அனைவருக்கும் அவன் மேல் ஏன் விரோதம்?

ஏதேச்சையாக ஒரு ஓவியத்தை வேறொரு கோணத்தில் பார்த்த போது ஒரு பெண்ணின் முகம் தெரிந்தது. கூர்ந்து நோக்கிய போது, ஒரு ஆண் ஒரு பெண்ணை அணைத்துக் கொண்டிருந்தான். அவளோ மயங்கிப் போய் அவன் மேல் சரிந்து கிடந்தாள். அணைத்துக் கொண்டிருந்த அவன் கைகளில் தெரிந்தது ஒரு சிலுவை. நான் மிகவும் அதிர்ச்சி அடைந்தேன்.

மேலும் அம்மண்டபத்தில் இதனுடைய சம்பந்தப்பட்ட விஷயங்களை உணர்த்தும் பொருட்கள் இருக்கக்கூடும் எனப்பட்டது. மீண்டும் அம்மண்டபத்திற்குள் என் நண்பருடன் செல்ல எண்ணினேன்.

கற்குவியல்களை முழுவதுமாக தோண்டி எடுத்தோம். எஞ்சிய மனித எலும்புக் கூட்டின் பல பகுதிகள் கிடைத்தன. மீண்டும் மீண்டும் பூமியைத் தோண்டி எடுத்தோம். அங்கே கண்ட காட்சி எனக்கு மிகுந்த அதிர்ச்சியை அளித்தது. இரும்பாலான துருப்பிடித்த ஒரு சிலுவையை நாங்கள் கண்டோம். சிலுவையுடன் கை விரல் எலும்புகள் கிடந்தன.

நான் ஆய்வை முடித்துக் கொண்டேன். இறந்தவன்தான் ஓவியத்தில் பெண்ணை அணைத்துக் கொண்டிருந்தவன். அந்த ஆசாரியர் அவன் அமைதி தேடி ஓடிய, வெள்ளைக்கார கிறித்தவ துறவி. அவர் தஞ்சையைச் சுற்றியுள்ள பகுதிகளில் சமுக, சமயப் பணியாற்றிக் கொண்டிருந்திருக்கக் கூடும். துவேஷமும் குரோதமும் நிறைந்த ஊர் மக்களின் பரிசு அவனின் மரணம். அதற்கு முன்பு அந்த கிறித்துவ துறவி கொல்லப்பட்டிருக்கக் கூடும்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *