கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு:
கதைப்பதிவு: January 27, 2013
பார்வையிட்டோர்: 9,124 
 

செளதாமினி வீதி முக்கைக் கடக்கும்போது “கனவு இல்லம்’ என்ற போர்டு இருந்த வீட்டைப் பார்த்தாள். கேட் பூட்டியிருந்தது. முகம் இருளடைந்ததுபோல் இறுக்கமாகியது. அரை பர்லாங் தூரம் போனால் புதிதாக எழும்பிக் கொண்டிருக்கும் கட்டடம். அந்தக் கட்டடத்தை நோக்கிப் போய்க் கொண்டிருந்தாள். அவள் பயணம் நீண்ட பயணம்தான்.

பீகாரிலிருந்து உத்திரப் பிரதேசத்திற்கோ, டெல்லிக்கோ போவதுகூட நீண்ட பயணம் என்று நினைக்கிறவள் அவள். ஆனால் செüதாமினியைத் தமிழ்நாடு வரைக்கும் யார் துரத்தியது? ரொம்ப தூரம்தான் வந்துவிட்டாள்.

தாகம்“கனவு இல்லத்தை’ மறுபடியும் பார்த்தாள். கதவு திறந்திருந்ததென்றால் உள்ளே நுழைந்து, “கொஞ்சம் தண்ணீ’ என்று கொஞ்சும் தமிழில் கேட்பாள். “கொஞ்சம் தண்ணீ’ என்று பேசுவதற்குக் கற்றுக் கொண்டதுதான் முப்பதுநாளில் அவள் கற்றுக் கொண்ட தமிழாகும். கனவு இல்லத்தில் சுகந்தி இருந்தால் தண்ணீர் கொடுப்பாள். காலை பதினொரு மணிக்கோ மாலை மூன்று மணிக்கோ இதே போல வந்து நின்றால், தேநீர் கிடைக்கும். ஆனால் கட்டடத்தில் வேலை செய்பவர்களுக்குக் காலையும் மாலையும் தேனீர் வாங்கி வர ஒருவன் இருந்தான். தேனீர் கடையில் செüதாமினிக்குப் பிடித்த ஆலு போண்டா வெகு அபூர்வமாகத்தான் கிடைக்கும். ஆலு போண்டாவை ஜிஜேந்திரனும் விரும்பிச் சாப்பிடுவான். ஜிஜேந்திரன் அவளின் அன்பு கணவன்; பீகார்காரன்தான். திருப்பூர் பின்னலாடைத் தொழிற்சாலைகளில் வேலை கொட்டிக் கிடக்கிறதென்று ஏகப்பட்ட பேரை திருமூர்த்தி என்ற புரோக்கர் கூட்டிக் கொண்டு வந்தான். புரோக்கர்களுக்கு ஓர் ஆளைக் கூட்டிக் கொண்டு வந்தால் ஆயிரம் ரூபாய் கிடைக்கும். அந்த ஆள் தொழிற்சாலையில் ஓராண்டிற்கு மேல் இருந்தால் இன்னொரு ஐநூறு ரூபாய் கிடைக்கும். அப்படித்தான் பீகாரின் புழுதி படர்ந்த குக்கிராமத்திலிருந்து செüதாமினி, ஜிஜேந்திரன் உட்பட ஐம்பது பேரைக் கூட்டி வந்திருந்தான். திருமூர்த்திக்கு ஒரே ரயில் பயணத்தில் ஐம்பதாயிரம் ரூபாய் கிட்டியிருக்கும். தலைக்கு ஐநூறு ரூபாய் கிடைப்பதற்கு வாய்ப்பில்லாமல் போய்விட்டது அவனுக்கு. பின்னலாடைத் தொழிற்சாலையில் அவன் கூட்டி வந்ததில் பதினைந்து பேர், “வேலை கடினம்’ என்று சொல்லிவிட்டார்கள். மிருதுவான பனியன் துணிகளைப் பக்குவமாய் கையாள வேண்டியிருந்தது. இளம் பெண்ணின் உடம்பைத் தொட்டுப் பார்ப்பது போன்ற மிருதுத்தனம் எவ்வளவு நுணுக்கமானது. புழுதி பறக்கும் கிராமத்தில் இருந்து ஆடு, மாடு மேய்த்துக் கொண்டிருந்தவர்களுக்கு சிரமம்தான். பேக்கிங், செக்கிங் கூட பிடிபடவில்லை. திருமூர்த்தி பதினைந்து பேரை வெளியேற்றிவிட்டான். “”சப்பை மூக்கு மஞ்சள் தோலு நேபாளிங்க கூட எவ்வளவு பேர் உங்க கண்ணு முன்னாலே பனியன் கம்பனியில வேலை செய்யறாங்க. உங்களுக்கென்ன கேடு? மூணு வேளை சாப்பாடு, தங்க எடம். கல்யாணமாகாதவங்கன்னா முப்பதாயிரமோ , ஐம்பதாயிரமோ தருவாங்க. கூடவே அரைப் பவுன் தாலியும்”

“”சுமங்கலி ஸ்கீம் ”

“”ஆமாமா… சுமங்கலிகளா கூட்டிட்டு வந்திருக்கலாம் போலிருக்கு. பனியன் கம்பனியில வேலை செய்யறது எவ்வளவு சொகுசு”

“”ஆனா எங்களுக்குப் பிடிபடலியே… என்ன பண்றது?”

ஷாஜஹான் மேஸ்திரியிடம் கூட்டிக் கொண்டு போய் நிறுத்தினான்.

“”கம்பெனி வேலைக்குன்னு கூட்டிட்டு வந்தது. பிரயோஜனமில்லை. கட்டட வேலைக்காவானுக. பீகாருக்குத் திரும்பிப் போய் ரொட்டி சுட்டுத் திங்க ஆசையில்லங்கறானுங்க. இட்லி சாம்பார்ல மூழ்கிப் போயிட்டானுக. கட்டட வேலைக்கு எடுத்துக்கோ” ஷாஜஹான் திருமூர்த்திக்குப் புரோக்கர் கமிஷனாக ஆளுக்கு நூறு ரூபாய் கொடுத்தான்.

இப்போதைக்கு நகரத்தைத் தாண்டி ஒதுக்குப் புறமான இடத்தில் பனியன் கம்பெனி கட்டட வேலை நடக்கிறது. அது முடிய நாலைந்து மாதங்களாகும். பிறகு வேறு கட்டிடம் முளைக்கும். புதிய மாவட்டமாகிவிட்டது. கார்ப்பரேஷன் எல்லை விரிவாகிக் கொண்டிருந்தது. சண்டை போட மொழி தேவையில்லாதபடி தங்களுக்குள் பேசிக் கொண்டிருப்பது போல பீகாரில் தங்கள் மொழியில் ஏதாவது பேசிக் கொண்டு வேலை செய்து வந்தனர். இட்லியும் தோசையும் சாம்பாரும் அவர்கள் வாயை அடைத்திருந்தது.

கட்டட சாளரத்தின் மேல் நின்று ஜிதேந்திரன் தூரப் பார்வை பார்த்தான். தாறுமாறாய் புல்லும் முள்ளும் அடர்ந்து கிடந்தது. பாதையென்று அழுத்தமான தடமாய் எதுவுமில்லை. கட்டட வேலைக்கென்று வந்து போகிற பீகாரிகளும், ஷாஜஹான் மற்றும் வாகனங்களும் ஏற்படுத்தியிருந்த தடம் தான் மெல்லியதாகத் தெரிந்தது. மனைவி செüதாமினி கண்ணில் தென்படவில்லை. வெயில் வேறு கசகசவென்று வியர்வையைப் பெருக்கெடுக்க வைத்தது. செüதாமினி ஏதாவது வீட்டு நிழலில் வெயிலுக்குப் பயந்து நின்றிருப்பாள். பீகார் வெயிலுக்கும் புழுக்கத்துக்கும் பயப்படாதவள்தான் செüதாமினி. தமிழ்நாட்டின் உச்சிவெயிலில் வானத்தையும் சூரியனையும் பார்ப்பவள் அவள்.

ஜிஜேந்திரன் சாரத்தைவிட்டுக் கீழிறங்கினான். சற்று தூரத்தில் ஒரு கார் வந்து நின்றிருந்தது. காரிலிருந்து இறங்கிய மூன்று பேர் சாய்ந்து கொண்டு மேற்கு பக்கம் பார்த்தார்கள். சூரியனின் வெம்மையைச் சகித்துக் கொள்ள முடியாதவர்கள் போன்று முகங்களைச் சுருக்கிக் கொண்டார்கள். ஜிஜேந்திரன் அவர்கள் அருகில் சென்று, “தண்ணீ வேணும்’ என்றான். கார் உள் அவன் பார்வை அலைந்தது. அவனின் அழுக்கு குர்தாவும் கொஞ்சம் தமிழும் அவனை ஆர்வமாய்ப் பார்க்கச் செய்தது.

“”தண்ணியில்ல”

“”தாகம்”

“”தண்ணியெதுவும் இல்லெ” ஜிஜேந்திரனின் கண்கள் காரினுள் அலைபாய்ந்தன.

“”கொஞ்சம் குடிக்க”

“”கார் சூடாயிருச்சு. காருக்கு ஊத்தத்தான் தண்ணியிருக்கு” ஜிஜேந்திரன் மீண்டும் வார்த்தைகளாய் சொல்லாமல் கை

விரல்களை வாய் அருகே கொண்டு சென்று சைகை செய்தான்.

“”காருக்குத்தான் இருக்கு”.

அவன் பீகாரிலிருந்து புறப்படுவதற்குத் தயங்கிக் கொண்டிருந்தான். திருமூர்த்தி வேறு அவ்வப்போது தலையைக் காட்டி, “”ஐம்பது பேர் சேர்ந்தாச்சு. நீ ஐம்பத்தி ஒண்ணாவதா சேர்ந்துச்சு, தமிழ்நாட்ல வேலை கொட்டி கெடக்கு. எதுக்கு ஆடு மேய்க்கறே” என்று சொல்லிக் கொண்டிருந்தான். ஆடுகளை ரொம்ப தூரம் ஒட்டி வந்துவிட்டான் என்று தெரிந்தது. கும்பலாய் நிறையப் பேர் தென்பட்டதும் அருகில் சென்றான். கார்கள் ஏழெட்டு நின்றிருந்தன. அவற்றின் வர்ணங்களில் மயங்கியவன் போல் நின்றான். இன்னும் தூரத்தில் காமிராவில் ஏதோ படமெடுத்துக் கொண்டிருந்தார்கள். ஆண்கள் நடித்துக் கொண்டிருந்தார்கள். சுவாரஸ்யம் இல்லாத மாதிரி கார்களைப் பார்த்தான். தண்ணீர் கேட்டான். இல்லையென்றார்கள். தாகத்தால் திரும்பத் திரும்ப நாக்கு வறண்டு தண்ணீர் கிடைக்கவில்லை. அன்றைக்கு மாலை திருமூர்த்தியைப் பார்த்தபோது தலையாட்டிவிட்டான். “”இன்னிக்கு ராத்திரி ஐம்பத்தொம்பது பேர் திருப்பூர் போறம்”

மீண்டும் நடந்து வந்து சாரத்தின் மேல் ஏறினான்.

வடக்குப் பக்கத்திலிருந்து கற்களை வேறு இடத்துக்கு மாற்றுகிற வேலையை மற்றவர்கள் செய்து கொண்டிருந்தார்கள். சாரத்தின் மேற்குப் பக்கம் நடந்து சென்ற ஜிஜேந்திரன் வானம் பார்த்தான். வெயில் கருக்கியது. எச்சிலை விழுங்கி பின் உதட்டை ஈரப்படுத்திக் கொண்டான்.

மேற்குப் பக்கம் இன்னும் முழுமையாக முடியாத இரண்டு மாடிக் கட்டடம் ஒன்று இருந்தது. அதிலிருந்த பிளாஸ்டிக் கயிற்றில் துவைத்த துணிகளைக் காயப் போட்டிருந்தார்கள். வலது கையை நீட்டியபோது மஞ்சள் நிறப் பாவாடையொன்று கையில் பட்டது. மிருதுவாக இருந்தது. பயன்படுத்துபவள் இளம்பெண்ணாகத்தான் இருக்க வேண்டும். இழுத்த போது மெல்லிதான பரபரச் சத்தத்துடன் கைக்குள் வந்துவிட்டது. சாரத்தை விட்டுக் கீழே இறங்கினான்.

பக்கத்துக் கட்டடத்தின் இரண்டாம் மாடிக்குச் சென்றான். முதல் தளத்திலோ, கீழ் தளத்திலோ யாருமே தென்படவில்லை. அவனின் காலடிச் சத்தத்தைக் கேட்டு வந்த மாதிரி அந்தப் பெண் கதவருகில் வந்து நின்றாள். அவன் கையில் இருந்த மஞ்சள் பாவாடையை நீட்டினான். அவள் அதிர்ச்சியûடைந்ததுபோல திடுக்கிட்டுப் பார்த்தாள். அவளுடைய அழகான முகத்தில் கண்கள் கோலிக் குண்டுகளாய் உருண்டன. வெகு சமீபமாய்த்தான் புருவங்களைச் செதுக்கியிருந்ததால் முகம் பளிச்சென்று இருந்தது.

“”என்னுடையதுதா”

“”கீழே வேலை செஞ்சுட்டிருந்தன். கீழே கிடந்தது. அதுதா எடுத்துட்டு வந்தன். உங்களதுதானா?” பீகாரியில்தான் அவன் சரசரவென்று சொல்லிவிட்டு அவளின் பளிச்சென்ற முகத்தைப் பார்த்தான்.

“”என்னுடையதுதா” அவள் பிடுங்கிக் கொண்டவள் போல விரைசலாய் வாங்கிக் கொண்டாள். பனியன் பிசிறு வெட்டிக் கெண்டிருந்தவள் போலும், பஞ்சுத் துகள்கள் முகத்தில் பரவியிருந்தன.

“”தண்ணீ வேணும்”

உள்ளே சென்றாள். திரும்பி வந்து பிளாஸ்டிக் பாட்டிலை நீட்டினாள். இரண்டு மடக்கு உள்ளே சென்றதும், உயிர் வந்ததைப் போல இருந்தது.

கைகளை உயரே தூக்கி அவளைக் கும்பிட்டான்.

– செப்டம்பர் 2011

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *