ஹோட்டல் புராணம்

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: கல்கி
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: April 28, 2023
பார்வையிட்டோர்: 4,454 
 

(1948ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

புதிதாக ஓர் ஊருக்குச் செல்லும் ஒருவர், முதலில் அவ்வூரில் நல்ல ஹோட்டல் எது என்பதைத்தான் விசாரிக்கிறார். எத்தனையோ கதைகளிலும் நாவல்களிலும் ஹோட்டல்கள் முக்கிய அங்கம் வகித்துக் கதாசிரியனுக்குப் பெரிதும் துணையா யிருந்திருக்கின்றன.

ஒரு கதாநாயகன் ஒரு ஹோட்டலில் சாப்பிட்டுக் கொண்டு, தங்கும் அறையை ஒரு ராவ்சாகிப்பின் வீட்டில் வைத்துக் கொண்டிருப்பான். அந்த ராவ்சாகிப், ஹோட்டல் விடுமுறை நாட்களில் எல்லாம் அந்த வாலிபனைத் தம் வீட்டில் சாப்பிடும் படி வற்புறுத்துவார். முதலிலெல்லாம் அந்த வற்புறுத்தலைத் தட்டிக் கழித்துக் கொண்டே வந்த கதாநாயகன், கடைசியில் ஒருநாள் தன் மடமையை நினைத்து வருந்துவான். அப்படி அவன் திடீரென்று வருந்த நேர்ந்ததற்குக் காரணம் தற்செயலாக ராவ்சாகிப்பின் குமாரி கதாநாயகி அவன் கண்ணில் பட்டுத் தொலைத்தது தான்! அப்புறம் அவன் ராவ்சாகிப் சொல்ல வேண்டும் என்று வைத்துக் கொள்ள மாட்டான். தானாகவே ஹோட்டல் இல்லாத நாட்களில் எல்லாம் அவர் வீட்டில் சாப்பிடத் தயாராகி விடுவான். அவ்வளவுதான்; ஹோட்டல் சாப்பாடும் வீட்டுச் சாப்பாடுமாகச் சேர்ந்து கதாநாயகன் – கதாநாயகி இருவருக்குமிடையே காதலை வளர்க்கும். அப்புறம் கல்யாணம் . முடிவில் காதலர்கள் தங்களை ஒன்று சேர்த்து வைத்த ஹோட்டலை மனமார வாழ்த்துவார்கள்.


கிடைப்பதற்கரிய ஏதாவது ஒரு வஸ்துவைக் குறிப்பிட வேண்டுமானாலும் சரி, ஏதாவது காணாத காட்சியைக் காண நேர்ந்தாலும் சரி – கார்த்திகைப் பிறை, வெள்ளைக் காகம், அத்திப்பூ இவைகளை யெல்லாம் உதாரணம் கூறுவது வழக்கமாயிருந்து வருகிறது. ஆனால் காலம் மாறிக் கொண்டே வருகிறது. எதிலும் ஒரு புதுமை மோகம் பிறந்து வருகிறது.ஆகையால் மேலே சொன்ன உதாரணங்களையும் புதிய முறையில் கூறவேண்டுமல்லவா? அதற்குக் கீழே வரும் சம்பவம் பெரிதும் உதவியா யிருக்கும்.

ஒரு ஹோட்டலில் சாப்பாடு நடந்து கொண்டிருந்தது. எல்லாரும் வரிசையாக உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அப்பொழுது பந்தியில் ஒருவர், ”ஹா!” என்று அதிசயத்துடன் கூலி னார். அவர் உடம்பு முழுவதும் ஆச்சரியக் குறியாயிருந்தது. அவர் கையில் ஏதோ ஒரு வஸ்து இருந்தது. அதைப் பார்த்ததும் எதிர்ப்புறத்துப் பந்தியில் சாப்பிட்டுக் கொண்டிருந்த ஒருவர் ஒரே தாவாகத் தாவி அந்த மனிதருக்கு அருகில் போய் உட்கார்ந்தார். உடனே, அவரைப் பின் பற்றி எல்லோரும் ஓடி, சாப்பிட்டுக்கொண்டிருந்த அந்த மனிதரைச் சூழ்ந்து கொண்டனர். அச்சமயம் விஷயம் புரியாத பிரகிருதி யொருவர், “என்ன? என்ன, என்ன ஒரே சத்தம்?” என்று சத்தம் போட்டார்.

“ஒன்று மில்லை, ஸார்! முருங்கைக்காய் சாம்பாரில் ஒரு முருங்கைக் காய் ‘தான்’ கிடைத்து விட்டதாம்!” என்று சொல்லி விஷயத்தை விளக்கி வைத்தார் ஒருவர்!


ஹோட்டலின் பலவிதமான பஷணல்கள் இருக்கின்றன. அவை யெல்லாம் ரஸமா விருக்கின்றனவோ என்னவோ, அங்கே நடக்கும் சம்பவங்கள் சில ரஸமா யிருக்கின்றன. கீழே வரும் ஒரு சிறு சம்பாஷனை மேற்படி ரஸனையை ஓரளவு எடுத்துக் காட்டுகிறது.

ஒருவர் ஹோட்டலில் சாப்பிட்டுக்கொண்டிருந்தார். ஹோட்டல் முதலாளி இசைத் தட்டுச் சங்கீதத்தை ஆனந்தமாக ரசித்துக்கொண்டிருந்தார். சாப்பிடுபவரைப் பார்த்து முதலாளி, “ஸார், பாட்டு என்றால் இதுதான் ஸார் பாட்டு! கல்லும் கரையும்படி யல்லவா பாடுகிறார்!!’ என்றார்.

அச்சமயம் சாப்பிடுபவர் வாயில் ‘டக்’ என்ற ஓசையுடன் ஒரு ‘மலைப் பிஞ்சு’ அகப்பட்டது, உடனே அவர், “ஆமாம் ஸார்! ரொம்ப உருக்கமாய்ப் பாடுகிறர். சமையலறையில் இந்த இசைத் தட்டை வைத்தால் சாப்பாட்டில் அகப்படும் கல்லாவது கரையுமே!” என்றார் ஆத்திரமும் அநுதாபமும் தம் குரலில் தொனிக்க!


குறிப்பினாலும் அனுமானத்தினாலும் ஒரு விஷயத்தை நாம் நிர்ணயிக்கிறோம் அல்லவா? அந்தக் குறிப்புக்கும் அனுமானத்துக்கும் சரியான உதாரணம் காட்ட வேண்டுமானால் அதற்கும் ஹோட்டல் மிகவும் உதவியா யிருக்கிறது.

ஒரு ஹோட்டலுக்குச் சென்ற ஒருவர் அங்கு காப்பி சாப்பிட்டார். காப்பி ரொம்பவும் மோசமாயிருந்தது. முதலாளியைல் கண்டு தம் வருத்தத்தைத் தெரிவிக்க நினைத்து, ‘முதலாளி எங்கே?” என்று அங்கிருந்த ஸர்வரை விசாரித்தார். வேறெரு ஹோட்டலுக்கும் காப்பி சாப்பிடப் போயிருப்பதாகப் பதில் கிடைத்தது. தம்முடைய ஹோட்டல் காப்பியைப் பற்றி அவருக்கே அவ்வளவு நல்ல அபிப்பிராயம்!

சில சமயம் நாம் அஜாக்கிரதையா யிருந்து அநாவசியமான சங்கடங்களில் அகப்பட்டிக் கொள்ளுகிறோம்.அப்பொமுது தான் நமக்கு முன் ஜாக்கிரதையின் அவசியம் தெரிகிறது. இதோ, அதற்கு ஓர் உதாரணம் –

காதல் மணம் புரிந்து கொண்ட தம்பதிகள் ஒரு ஹோட்டலுக்குச் சென்றனர். காதவிக்கு வெட்கம் தாங்கவில்லை. ஹோட்டலில் சிற்றுண்டி சாப்பிடும் மாபெருங் கூட்டத்துக்கு மத்தியில் நான் எப்படிச் சாப்பிடுவது என்று அவள் தயக்கினாள். காதலியின் தயக்கத்தை அவள் முகபாவத்தி லிருந்து அறிந்து கொண்ட காதலன், ”கரும்பே, நீயும் நானும் ஈருடலும் ஒருயிருமாயிருக்கிறேம். ஆகையினால் கொஞ்சங்கூட வெட்கப் படாதே!” என்றான்.

உடனே காதலி நாணத்தை விட்டு மாதுளை மொட்டு மலர்ந்ததைப் போல் தன் திருவாய் மலர்ந்து, “நாதா, நீங்களும் நானும் பேச்சளவில் ஈருடலும் ஓருயிருமாயிருக்கலாம். ஆனால் உங்களுக்கும் எனக்கும் தனித் தனியாகத்தான் பசி யெடுக்கிறது என்பதை நீங்கள் ஞாபகத்தில் வைத்துக்கொள்ள வேண்டும். ஆகையால் ஸர்வரிடம் எல்லாவற்றிலும் இரண்டிரண்டு கொண்டுவரச் சொல்லுங்கள்!” என்றாள்.


குறித்த காலத்தில் ஒரு காரியத்தைச் செய்யவேண்டும் என்பதற்கு ஆங்கிலேயர்களையே நாம் உதாரணமாகக் கூறுகிறோம். இனிமேல் அதற்கு அவசியம் இல்லை. நாம் ஹோட்டலுக்குப் போவது லிருந்தே அதைச் சுலபமாய்த் தெரிந்துகொள்ளலாம். இப்பொழுது இரவு எட்டு மணிக்கு மேல் ஆகிறதல்லவா?. இனிமேல் ஹோட்டலில் சாப்பாடு கிடைப்பது சிரமம் தான்; குறித்த காலத்தில் போனால் தான் அங்கே சாப்பாடு கிடைக்கும். இருந்தாலும் பார்க்கிறேன், நான் வரட்டுமா?.

– 1948-03-21

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *