பூதத்திடம் பிடிச்சு கொடுத்திருவேன்!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: February 22, 2018
பார்வையிட்டோர்: 13,543 
 

ஓர் வீட்டுல ஓர் அழகான அம்மாவும் குழந்தையும் வசிச்சு வந்தாங்க! அந்த குழந்தை ரொம்ப சின்னது! ரெண்டுவயசுதான் இருக்கும் ஒரே பிடிவாதம் பண்ணும். குளிக்க அழும். தலைசீவிக்க அழும். சாப்பிட அழும். ஒரே அடம்பிடித்து அட்டகாசம் பண்ணும்.

மத்த சமயங்கள்ள சமத்தா அழகா விளையாடிட்டு இருக்கும். கொஞ்சி கொஞ்சிப் பேசும். இவங்க வசிச்ச வீடு ஒர் வயலோரமா அழகா இருந்துச்சு. வயல்ல நிறைய பறவைகள் வந்து போவும். பார்க்க ரொம்ப ரம்மியமா இருக்கும் அந்த வீடு.

அந்த அம்மாவும் பொறுமையா குழந்தையை வளர்த்தாங்க! அந்த வீட்டுக்கு பக்கத்துல ஒரு காடு இருந்துச்சு! காட்டோட எல்லையிலதான் இந்த வீடே இருந்துதுன்னு வைச்சிக்கோங்களேன்! இராத்திரியான ஒரே பயமா இருக்கும். அந்த அம்மாவும் குழந்தையும் மட்டும்தான் அந்த வீட்டுல இருப்பாங்க! அப்பா வெளியூர்ல வேலை செய்யறதாலே மாசம் ஒருதடவைதான் வருவாரு. அப்பா வர நாளை குழந்தை எதிர்பார்த்து ஏங்கி காத்துக்கிட்டு இருக்கும்.

அன்னிக்கு ராத்திரி விளக்கு வெச்சிருச்சு! குழந்தைக்கு அம்மா சோறு ஊட்டிக்கிட்டு இருந்தாங்க! குழந்தை வழக்கம் போல சாப்பிடாம அடம்பிடிச்சு வாயில திணிச்சதை எல்லாம் துப்பிக்கிட்டு இருந்துச்சு! அம்மாவுக்கு கோவம் கோவமா வந்துச்சு! ஏன் கண்ணுல்லயா? சமத்துல்லியா? பட்டுக்குட்டிதானே! சாப்பிடுடா கண்ணு! அப்பத்தான் அப்பா மாதிரி உயரமா வளர முடியும்! பலசாலியா வளரலாம்!னு சொல்லிப்பாத்தாங்க!

குழந்தைக்கு இந்த சமாதானம் எதுவும் பலிக்க வில்லை! சரி கொஞ்சம் மிரட்டி பார்க்கலாம்னு முடிவு செஞ்சாங்க! கண்ணு சமத்தா சாப்பிட்டுடு! இல்லை காட்டுல இருக்கற அசட்டு நரிக்கிட்ட பிடிச்சு கொடுத்துடுவேன்!னு மிரட்டினாங்க!

அந்த சமயம் பார்த்து அந்தபக்கமா நரி ஒன்னு வந்துச்சு வயல்ல மேயற நண்டுகளை சாப்பிட! நரி எப்படி நண்டு பிடிக்கும் தெரியுமா? நண்டு வளையில தன்னோட வாலை விடும். நண்டுங்களுக்கு எது கிடைச்சாலும் கெட்டியா பிடிச்சுக்கும்! நரிகிட்ட மாட்டிக்கிறோம்னு தெரியாம வாலை கெட்டியா பிடிச்சுக்கும் வாலை வெளியே இழுத்து நண்டை நரி சாப்பிட்டுடும்! சரி! கதைக்கு வருவோம்!

சாப்பிடலைன்னா! அசட்டு நரிகிட்டே பிடிச்சு கொடுத்துடுவேன்னு அம்மா சொன்னது நரிகாதில் விழுந்தது! ஆகா! எத்தனைநாளுக்குத்தான் நண்டுகளை சாப்பிடறது! அந்த அம்மா குழந்தையை இன்னிக்கு சாப்பிட்டுட வேண்டியதுதான் என்று முடிவு செஞ்சு அங்கேயே காத்துக் கிடந்தது நரி!

இராத்திரி முழுக்க காத்திருந்தும் அம்மா பிள்ளையை வெளியே விடலை! சமாதானம் செஞ்சு சோறு ஊட்டி படுக்க வைச்சிட்டாங்க! ஏமாந்து போன நரி விடிஞ்சதும் வேகம் வேகமா காட்டுக்குள்ளே ஓடிப்போயிருச்சு! சரி நாளைக்குப்பாத்துக்கலாம்னு!

பொழுது விடிஞ்சதும் குழந்தை பல்லு தேய்க்க அடம்பிடிச்சுது! கண்ணா! பல்லு தேச்சாதான் கிருமி எல்லாம் போயிரும்! அழகா இருக்கும்! சொத்தை வராது என்று அம்மா சொல்லியும் குழந்தை பல்லு தேய்க்கமாட்டேன் போ! என்றது!

நீ ஈ தேய்க்காட்டி குடுகுடுப்பை காரன் கிட்ட பிடிச்சு கொடுத்துருவேன்! என்றார் அம்மா! அப்போ அந்த பக்கமா வந்தான் ஒரு குடுகுடுப்பைக் காரன்! அவன் தன் உடுக்கையை அசைக்கவும் குழந்தை பயந்து போய் பல்லு தேய்ச்சுது!

கொஞ்ச நேரம் போச்சு! குழந்தை குளிக்க அடம்பிடிச்சுது! இப்ப அம்மா எவ்வளவோ கெஞ்சிப் பாத்தாங்க! அது சட்டை செய்யலை! உன்னை பூதம்கிட்ட பிடிச்சி கொடுத்திடறேன்! அப்பத்தான் நீ சரிபட்டு வருவே? என்று சொல்லவும் இதை அந்த வீட்டு முருங்கை மரத்தில் இருந்த பூதம் கேட்டுக் கொண்டு இருந்தது. சரி சரி! இன்னிக்கு நம்மளுக்கு நல்ல விருந்துதான் என்று அது நினைத்துக் கொண்டது.

பொழுது ஓடியது! சாயங்கால நேரம் அம்மா குழந்தைக்கு தலை வார ஆரம்பித்தாள். அது அழுது அடம் செய்தது! செல்லக் குட்டி! தலை வாரிக்கிட்டா அழகா இளவரசி மாதிரி ஆயிடலாம்! பட்டு இல்லையா! செல்லம் ஒழுங்கா தலைவாரி பின்னிக்கோ! அம்மா சொல்ல குழந்தை ஓடியது! ஓடு! ஓடு! அங்க அசட்டு நரி உன்னை பிடிக்க காத்திருக்கு! என்று சொல்ல குழந்தை மிரண்டு போய் அம்மாவை அணைத்துக் கொண்டது.

குழந்தையை அம்மா இப்படி மிரட்டி ஊட்டுவது சகஜம்! அசட்டு நரிக்கோ குழந்தையை தின்று விட வேண்டும் என்று ஆசை! அது அன்று இரவில் அவர்கள் வீட்டு வாசலில் வந்து நின்று கொண்டது. வழக்கம் போல அம்மா சோறு ஊட்ட குழந்தை அடம்பிடிக்க அசட்டு நரிக்கிட்ட பிடிச்சு கொடுத்துருவேன்! என்று சொன்னார்.
அப்போது வெளியே இருந்த நரி! என்ன அம்மா! நீங்க! சொல்றீங்களே தவிர செய்ய மாட்டேங்கிறீங்களே! நான் எவ்வளவு நேரம் காத்துக்கிட்டு இருக்கிறது? என்று கேட்டது. திடீரென்று வாசலில் குரல் கேட்கவும், யாரது? என்று கேட்டாள் அம்மா.

நான் தான் நரி வந்திருக்கேன்! உங்க பிள்ளையை சீக்கிரம் கொடுங்க! என்றது நரி! அம்மாவிற்கு கொஞ்சம் உதறல் எடுத்துவிட்டது. குழந்தையை மிரட்ட ஒரு வார்த்தை சொன்னால் இந்த அசட்டு நரியும் அதை நம்பி வந்திருக்கிறதே! உண்மையிலேயே இது அசடுதான் போல! என்று நினைத்து நரியாரே! வந்துட்டீங்களா? இருங்க! பின்னால இருக்கற வயல்ல குழந்தையை வீசிடறேன்! எடுத்துக்கங்க! என்று சொல்லிவிட்டு ஒரு துணி மூட்டையில் சில கற்களையும் அடைத்து பின்பக்கம் வயலில் சத்தம் விழுமாறு தூக்கி எறிந்தாள். அத்துடன் பிள்ளையையும் கிள்ளிவிட்டாள். பிள்ளை அம்மா! என்று அழவும் வயலில் அந்த பைவிழவும் அசட்டு நரி! பிள்ளையைத்தான் தூக்கி எறிகிறாள் என்று வயலுக்குள் பாய்ந்தது.

அந்த வயலுக்கு சொந்தக்காரன் வயலில் இரவில் மிருகங்கள் வந்து விளைச்சலை பாழ் செய்கிறது என்று பொறி வைத்திருந்தான். அந்த பொறியில் வசமாக சிக்கிக் கொண்டது நரி! எவ்வளவுதான் முயற்சி செய்தும் விடுபட முடியாமல் சிக்கிக் கொண்டுவிட்டது.

அப்பாடா தப்பித்தோம்! என்று பெருமூச்சு விட்டாள் அம்மா! மறுநாள் காலையில் குழந்தை பல் விளக்கும் சமயம் குடுகுடுப்பைக் காரன் வந்து என்னம்மா! குழந்தை பல்லு விளக்கிருச்சா! என்றான். எதுக்கு கேக்கறே? என்றாள் அம்மா! என்கிட்ட பிடிச்சு தர்றதா சொன்னீங்களே! என்றான் அவன். குழந்தைன்னாலும் குழவின்னாலும் ஒண்ணுதானே! என்றாள் அம்மா! ஆமாம்மா! ஒண்ணுதான்! என்றான் அவன்.

அப்ப இந்தா பிடிச்சுக்க! என்று அங்கிருந்த குழவிக் கல்லைத் தூக்கி போட்டாள். அவன் அதைப் பிடிக்க முடியால் காலில் தவறவிட்டுக்கொண்டு ஐயோ! அம்மா! என்று அலறியபடியே ஓடி போனான்.

இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்தது பூதம்! இவர்கள் போல நாம் ஏமாறக் கூடாது! இந்த குழந்தையை எப்படியும் முழுங்கி விட வேண்டும்! என்று நினைத்துக் கொண்டது நண்பகல் வேளையில் குழந்தைக்கு அம்மா சோறு ஊட்டிக் கொண்டிருக்கும் போது வாசலில் நின்றது.

பயங்கரமான தோற்றத்துடன் இருந்த அதைப்பார்த்து ஒருநிமிடம் நடுங்கிப் போனாலும் சுதாரித்துக் கொண்ட அம்மா! யார் நீ! என்ன வேண்டும் என்று கேட்டாள். சரியா சாப்பிடாவிட்டா குழந்தையை பிடிச்சுட்டு போக வந்திருக்கேன்! நாந்தான் பூதம்! என்றது அது.

ஒகோ! அப்படியா! நீ அங்கேயே இரு! சரியா சாப்பிடா விட்டால் குழந்தையை நானே தூக்கி போட்டுடறேன்! என்று சொன்ன அம்மா உடனே அடுப்பை பற்றவைத்து ஓர் கரண்டியில் இரும்புக் குண்டை நன்கு காய்ச்சினாள்.

இன்னுமா? எனக்கு பசி எடுக்கிறது! சீக்கிரம் குழந்தையை வெளியே அனுப்பு! என்றது பூதம்! நீ இப்படி பூதம் மாதிரி இருந்தால் எப்படி வெளியே வருவான்? வேறு உருவம் எடுத்துக் கொள்!
சரி! அப்படியானால் நாய் போல மாறிவிடுகிறேன்! என்று நாயைப்போல மாறியது பூதம்! சரி அப்படியானால் உன்னை சங்கிலியால் கட்டி வைக்கவேண்டுமே! அப்பத்தானே குழந்தை நம்பும்!

சரி கட்டி விடு! ஒரு கனத்த இரும்பு சங்கிலியால் நாயைக் கட்டிப்போட்டாள் அம்மா!

இப்போது நீ நான் போடும் பந்தை பிடித்து குழந்தைக்கு விளையாட்டு காட்டு! அப்போதுதான் குழந்தை உன்கிட்ட வரும்!

சீக்கிரம் சீக்கிரம் என்றது பூதம்!

அப்பப்பா! என்ன அவசரம்? இதோ பிடி! பழுக்க காய்ச்சிய இரும்புக் குண்டை கரண்டியிலிருந்து வீசினாள் அம்மா! நாய் வேசத்தில் இருந்த பூதம் அதை வாயில் கவ்வியது! மறுகணம் சூடு தாளாமல்! அம்மா! ஐயோ! ஐயோ! என்று அலறியது!

பிள்ளைக் கறியா! கேட்கிறாய்! பிள்ளைக் கறி! இன்று உனக்கு வைக்கிறேன்! நல்ல சூடு! என்று காய்ச்சிய கரண்டியால் இரண்டு இழுவை இழுத்தாள் அம்மா! சங்கிலியால் கட்டுண்டதால் தப்பிக்கவும் முடியாமல் அலறி அழுதது பூதம்!

அம்மா! இனி இந்த பக்கம் திரும்பவும் மாட்டேன்! என்னை அவிழ்த்துவிடு என்று கெஞ்சியது! அந்த வார்த்தைகள் கூட அதனால் பேச முடியவில்லை! வெந்து போன வாயில் குழறியபடி கூறியது.

குழந்தை இதை பார்த்து கைதட்டி சிரித்தது!பூதத்தை அவிழ்த்துவிட்டபடி! இதோ பாரு கண்ணா! நாய்க்குட்டி! இந்தா ஒரு வாய் சாப்பிடு! இல்லாட்டா பூச்சாண்டிக்கிட்ட பிடிச்சு கொடுத்திருவேன் என்று சோறுட்ட ஆரம்பித்தாள் அம்மா!

விட்டா போதும் என்று அலறி ஓடியது பூதம்!

(இந்து மாயாபஜார் சிறுவர் இணைப்பில் அக்டோபர் 25 ,2017ல் வெளியானது. கதைசுருக்கி தலைப்பு மாற்றப்பட்டிருந்தது அம்மாவிடம் மாட்டிய பூதம் என்ற தலைப்பில் வெளியானது)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *