புத்தாண்டு சுற்றுலா

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: February 21, 2019
பார்வையிட்டோர்: 9,538 
 

ஜான், ரமேஷ், முஸ்தபா,எழில், இவர்கள் அனைவரும் நண்பர்கள். கோவையில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் பத்து மற்றும் ஒன்பதாவது படித்துக்கொண்டிருக்கிறார்கள். இவர்களின் பெற்றோர்கள் அங்குள்ள அடுக்கு மாடி குடியிருப்பில் அருகருகே குடியிருக்கிறார்கள். அவர்களும் குடும்ப நண்பர்களாக அந்த குடியிருப்பில் வசித்து கொண்டிருக்கிறார்கள்.இவர்கள் பள்ளிக்கு தினமும் அவரவர் சைக்கிள்களிலே சென்று விடுவார்கள்.

முஸ்தபா ஒரு நாள் தனது நண்பர்களிடம் வர்ற புத்தாண்டு அன்னைக்கு என்ன புரோகிராம் வச்சுக்கலாம்? என்று கேட்டான். ரமேஷ் ஏதாவது நல்ல பிக்சர் பார்க்க போகலாம் என்று சொன்னான். ஜான் வேண்டாம் எங்கேயாவது ஒரு “டூர் பிக்ஸ்” பண்ணுங்க, நாம எல்லாரும் போகலாம் என்றான். எழில் சிறிது நேரம் யோசித்தவன் எனக்கு இப்ப ஒண்ணும் தோணலை, என்று ஒதுங்கிக்கொண்டான்.

முஸ்தபா சிரித்து விட்டு நான் ஒரு “பிளான்” பண்ணி வச்சிருக்கேன், இன்னைக்கு இராத்திரி நல்லா அதைப்பத்தி யோசிச்சுட்டு உங்களுக்கு அப்புறம் சொல்றேன். என்று சொன்னவுடன் நண்பர்களுக்கு சுவாரசியம் தட்டியது. “குட் நல்லா பிளான் பண்ணிட்டு சொல்லு, நாம் எல்லாம் அது மாதிரி செய்யலாம் என்று சொன்னார்கள். சரி நான் கிளம்பறேன் என்று சொல்லி அவரவர்கள் தங்கள் வீடுகளுக்கு சென்றனர்.

மறு நாள் மூவரும் முஸ்தபாவை பிடித்துக்கொண்டனர்.என்ன திட்டம் வைத்திருக்கிறாய்? என்று குடைய ஆரம்பித்து விட்டார்கள். பொறுங்கள், இப்பொழுது பள்ளிக்கு நேரமாகி விட்டது, மதிய இடை வேளையில் மேற்கொண்டு பேசலாம் என்று சொல்லவும், அதுவும் சரிதான் என்று மூவரும் அவரவர் வகுப்புக்குள் நுழைந்தனர்.

மதியம் இடை வேளையில் முஸ்தபா சொன்ன திட்டத்தை கேட்டு மூவரும் ரொம்ப நல்ல திட்டம் என்று சொன்னார்கள். எழில் மட்டும் கொஞ்சம் சிந்தனையில் இருந்தது போல் தெரியவும், எழில் என்னுடைய திட்டம் சரியில்லையா? என்று முஸ்தபா கேட்டான். அதெல்லாம் ஒண்ணுமில்லை, இந்த திட்டத்துல நம்முடைய பெற்றோர்களயும் சேர்த்துகிட்டா நல்லா இருக்குமேன்னு பார்த்தேன்.

வெரி குட் அதுவும் நல்ல ஐடியாதான், அவனை பாராட்டிய முஸ்தபா இன்னைக்கு எல்லோரும் அவங்கவங்க வீட்டுல போய் பேசறோம், நாளைக்கு இதே நேரத்துல மற்ற விசய்ங்களை பேசலாம், இப்ப வகுப்புக்கு மணியடிச்சுட்டாங்க, வாங்க போகலாம் என்று கிளம்பினர்.

மறு நாள் நால்வருமே நம்ம பெற்றோர்கள் இதுக்கு பூரண சம்மதம் சொல்லிட்டாங்க, எவ்வளவு செலவானாலும் பங்கு போட்டு செய்துக்கலாமுன்னு சொல்லிட்டாங்க. அவர்கள் மகிழ்ச்சியுடன் இந்த செய்தியை பகிர்ந்து கொண்டனர்.
மேற்கொண்டு என்ன செய்யலாம் என்று நால்வரும் ஆலோசித்து நாளை ஞாயிற்றுக்கிழமை, நாம் எல்லாம் ஒரு காப்பகத்துக்கு போறோம் ரெடியாக இருங்க, முஸ்தபா சொல்லிவிட்டு வீட்டுக்கு கிளம்பினான்.மற்ற மூவரும் ஒரு வித எதிர்பார்ப்புடன் அவரவர் வீட்டுக்கு சென்றனர்.

மறு நாள் இவர்கள் அந்த காப்பகத்தின் மேலாளரிடம் தங்களின் திட்டத்தை சொன்னார்கள், அவர் சிறிது நேரம் யோசித்தவர், நிறைய செலவுகள் பிடிக்குமே என்று இழுத்தார். அதை பற்றி கவலைப்படாதீர்கள், எங்களின் பெற்றோர்கள் செலவு பொறுப்பை ஏற்றுக்கொண்டுள்ளார்கள், உங்கள் சம்மதம் இருந்தால்தான் மேற்கொண்டு ஏற்பாடுகளை செய்ய முடியும், இவர்களின் தீவிரத்தை பார்த்த அந்த நிர்வாகி, சரி புத்தாண்டு அன்று நாங்கள் அனைவரும் தயாராக இருக்கிறோம்.

அவரின் சம்மதத்தை கேட்டவுடன் தான் இவர்களுக்கு உயிரே வந்தது. நன்றி ஐயா, நாங்கள் மேற்கொண்டு மற்ற வேலைகளை கவனிக்கிறோம், சொல்லி விட்டு வீட்டுக்கு திரும்பினர்.
ஊரே வேறு விதமாக கொண்டாடிக்கொண்டிருந்த புத்தாண்டு அன்று இந்த நால்வரின் குடுமபங்களும், மற்றும் இவர்களின் திட்டத்தை கேள்விப்பட்டு இவர்களுடன் பங்கு கொள்ள வந்திருந்த மேலும் நான்கைந்து குடும்பங்களும் ஒரு பெரிய சுற்றுலா பேருந்தை எடுத்துக்கொண்டு அந்த “அநாதை குழந்தைகள் காப்பகத்தின் முன் சென்று நின்றனர். அங்கு நல்ல உடையணிந்து காப்பகத்து நிர்வாகியுடன் பெற்றோரை இழந்து அந்த காப்பகத்தில் வாழ்ந்து கொண்டிருந்த குழந்தைகள் தயாராக நின்று கொண்டிருந்தனர். அந்த பேருந்தில் வந்திருந்த அனைத்து குடும்பத்தினரும் கீழே இறங்கி அந்த குழந்தைகளுக்கு புத்தாண்டு வாழ்த்து சொல்லி வரிசையாக அவர்களை,பேருந்தில் ஏற்றி விட்டனர்.

சுமார் ஐம்பது குழந்தைகளுடன், கீழே நின்று கொண்டிருந்த அனைவரும் பேருந்தில் ஏறினர். பேருந்து இப்பொழுது ஊட்டியை நோக்கி தன் பயணத்தை தொடர்ந்தது. மேட்டுப்பாளயம் வந்ததும் அனைவரும் இறங்கி நல்ல சிற்றுண்டியில் காலை உணவை உண்டனர். அதன் பின்னர் அந்த குழந்தைகளுடன் ஆடி பாடிக்கொண்டு ஊட்டியை நோக்கி சென்றனர்.

அன்று காலை முதல் ஆரம்பித்த ஆட்டம் பாட்டம், மதியம் ஒரு கடையில் விருந்து சாபிட்டு விட்டு, ஊட்டியின் அனைத்து இடங்களையும் சுற்றிப்பார்த்து, பின் கீழே இறங்கினர். இரவு அதே போல் நல்ல சிற்றுண்டி கடையில் நிறுத்தி அனைவரும் தேவையானதை உண்டுவிட்டு மீண்டும் கோவைக்கு கிளம்பினர்.

இரவு ஒன்பது மணி அளவில் காப்பகத்திற்கு வந்து, அவர்களை பத்திரமாக இறக்கிவிட்டனர். அந்த நிர்வாகியும், குழந்தைகளும், மிகுந்த மகிழ்ச்சியுடன் இவர்களுக்கு நன்றி சொல்ல, முஸ்தபாவுடன் அவன் நண்பர்கள் மூவரும், மற்றும் அவர்களின் பெற்றோர்களும், உங்களுக்குத்தான் எங்கள் நன்றி “இந்த நாளை இவ்வளவு மகிழ்ச்சியாக கழிக்க உதவி இருக்கிறீர்கள் என்று அவருக்கும், அந்த குழந்தைகளுக்கும் வாழ்த்து சொல்லி விட்டு வீட்டுக்கு திரும்பினர்.

மறு நாள் அவர்கள் வசித்து கொண்டிருந்த அடுக்கு மாடி குடியிருப்பில் உள்ளோர் அனைவரும், முஸ்தபா மற்றும் அவன் நண்பர்களை மனதார பாராட்டினர்.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் குட்டீஸ் இந்த நண்பர்களின் புத்தாண்டு சுற்றுலாவை?

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *