கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: April 9, 2014
பார்வையிட்டோர்: 22,432 
 

மதிய உணவு இடைவேளையின்போது, பள்ளிக்கூட மரத்தடியில் சிவா, தன் நண்பர்களோடு பேசிக் கொண்டிருந்தான். அப்போது அங்கு வந்த கோபு, “”டேய் சிவா, உங்கப்பாவை இன்னிக்கு எங்க தெருவுல பார்த்தேண்டா” என்றான்.

இதைக் கேட்ட சிவாவின் முகம் மாறியது. கண்களில் நீர் கோர்க்கத் தொடங்கியது. அதை மறைத்துக்கொண்டு, “”அதுக்கு என்னடா இப்ப? அதுதான் பார்த்தேல்ல, இதைப்போய் பெரிய செய்தியாட்டமா அடிக்கடி சொல்லிக்கிட்டிருக்கியே?” என்று கடுகடுத்தான். உடனே நண்பர்கள் சிவாவையே உற்று நோக்கினர்.

அச்சாணிசிவாவும் கோபுவும் ஒரே வகுப்புதான் என்றாலும், எப்போதும் இருவருக்கும் ஆகாது. காரணம், கோபு பணக்காரன்; சிவா ஏழை. அந்த வகுப்பிலேயே தான்தான் மிகுந்த பணக்காரன் என்ற கர்வம் கோபுவுக்கு உண்டு. அதேபோல அந்த வகுப்பிலேயே தான்தான் மிகுந்த ஏழை என்ற தாழ்வு மனப்பான்மையும் சிவாவுக்கு உண்டு. இதுதான் அவர்களை நட்பு முறையில் நெருங்க விடாமல் செய்தது. ஆனால் சிவா எல்லோரிடமும் அன்பாகப் பழகுவான்; நன்றாகப் படித்து, நல்ல மதிப்பெண்கள் வாங்குவான்.

“நல்ல மாணவன்’ என்று ஆசிரியர்களால் பாராட்டப்படுவான். எல்லோருக்கும் வலியச் சென்று உதவி செய்வான். ஆனால் கோபு அவனுக்கு நேர்மாறாக இருந்தான். அனைவரிடமும் தன் பணக்காரத் திமிரை நேரம் கிடைக்கும் போதெல்லாம் சொல்லிக்காட்டியும், குத்திக்காட்டியும் அவரவர்கள் தந்தை செய்யும் தொழிலைப் பழித்துப் பேசியும் கேலி செய்தும் நிரூபிப்பான்.

கோபு, வேண்டுமென்றே, சிவா தன் நண்பர்களோடு இருக்கும் சமயம் பார்த்து, “உங்க அப்பாவை இந்தத் தெருவுல பார்த்தேண்டா; அந்தத் தெருவுல பார்த்தேண்டா’ என்று கூறி தன் நிலையை உயர்த்திக்கொள்வான். காரணம், கோபுவின் அப்பா பிசினஸ்மேன். அவன் தினமும் பள்ளிக்குக் காரில்தான் வந்து இறங்குவான் என்றால், அவனுடைய கர்வத்துக்குக் கேட்கவா வேண்டும்!

ஆனால், சிவாவின் அப்பா பழைய பேப்பர் கடை வைத்திருக்கிறார். கடையில் வேலை செய்பவர் விடுமுறையில் போய்விட்டால், தானே தெருத்தெருவாகச் சென்று பழைய பேப்பர், புத்தகங்களை வாங்கி வருவார். அதைத்தான் கோபு அடிக்கடி இப்படிச் சொல்லிக்காட்டி சிவாவை மட்டம் தட்டிக் கொண்டிருந்தான். அவனுக்கு இது ஒரு பொழுதுபோக்கு. சிவாவை சீண்டிப் பார்ப்பதில் ஓர் அற்ப சந்தோஷம்.

அவனுடைய திமிரை அடக்க, தக்க தருணத்துக்காகக் காத்துக்கொண்டிருந்தான் சிவா.

“”ஏண்டா சிவா, உங்க அப்பா ஏண்டா கோபு இருக்கும் தெருவுக்குப் போனாரு? அவருக்கு வேற வேலையே இல்லையா? தெருத்தெருவா அலையற வேலைதானாமே…” இப்படிக் கிண்டலடித்தான் கோபுவின் நண்பன் செந்தில். கோபுவின் நண்பன் அவனைப் போலத்தானே இருப்பான்!

சிவாவுக்கு அழுகை முட்டிக்கொண்டு வந்தது. “”சரி, வாடா சிவா, இதுக்குப்போய் ஏண்டா வருத்தப்படுறே, இந்தப் பயலுக பேசறதையெல்லாம் சீரியசா எடுத்துக்காதடா” என்று ஆறுதல் கூறினான் சிவாவின் நண்பன் கணேஷ்.

“”இல்லடா, எங்கப்பா எனக்கு புதுப் புத்தகமே வாங்கித் தரமாட்டாருடா. வருஷா வருஷம் கடைக்குக் கொண்டுவர்ற பழைய புத்தகங்களைத்தான் படிக்கச் சொல்லுவாரு. இல்லேன்னா, உனக்கு முன்னாடி படிச்சவங்ககிட்டேருந்து பழைய புத்தகம் வாங்கிப் படின்னு சொல்லுவாரு. “புது புக் வாங்கிப் படிக்க பணமில்லாதவன்னு’ அடிக்கடி குத்திக்காட்டிப் பேசறாண்டா இந்த கோபு” சொல்லிவிட்டு அழுதான் சிவா.

“”அட, உனக்கு ஒண்ணு தெரியுமா? பழைய புத்தகத்துலதான் நிறைய முக்கியமான கேள்வி எல்லாம் குறிச்சி வச்சிருப்பாங்க. குறிப்பெல்லாம் எழுதி வச்சிருப்பாங்க. அதைப் படிச்சாலே போதும்டா… நாம 60 மார்க் எடுக்கலாம். நீ கொடுத்து வச்சவன்னு நினைச்சுக்கோ. எங்களுக்கெல்லாம் ஏன்தான் புது புக் வாங்கித் தர்றாங்களோன்னு இருக்கு. புது புக்கைப் பார்தால் எதைப் படிக்கிறதுன்னு ஒண்ணுமே தோணாது. உனக்கு அப்படி இல்லையே! அதுதான் நீ நிறைய மார்க் எடுக்குற?” என்று கணேஷ் கூறி முடிக்கவும் பள்ளி மணி அடித்தது. உடனே இருவரும் கைகோர்த்தபடி வகுப்புக்குள் நுழைந்தனர்.

வகுப்பில் உட்கார்ந்திருந்த சிவா, கணேஷை நினைத்துப் பார்த்தான். இவன் எப்போதும் இப்படித்தான்! ஆபத்தான நேரத்தில் உதவுவான். கவலையா இருக்கும்போது ஆறுதல் கூறித் தேற்றி, உற்சாகப்படுத்துவான். கணேஷ் மாதிரி ஒரு நண்பன் கிடைச்சிருக்கப்ப, கோபுவைப் போல ஒரு திமிர் பிடித்தவன் பேச்சைக் கேட்டு நாம ஏன் கவலைப்படணும்’ என்று நினைத்துக் கொண்டான்.

அன்று பள்ளி விடுமுறை என்பதால், சிவா அப்பாவோடு கடைக்குச் சென்று பேப்பரைத் தனியாகவும் புத்தகங்களைத் தனியாகவும், பால் கவர்களைத் தனியாகவும் பிரித்து வைத்து அப்பாவுக்கு ஒத்தாசை செய்து கொண்டிருந்தான். நிறைய மாதப் பத்திரிகைகள், காமிக்ஸ் புத்தகங்கள் வந்திருந்தன. அப்போது அவன் கையில் தட்டுப்பட்டது அது. “அட, இது எப்படி அதுக்குள்ளே நம்ம கடைக்கு வந்தது? என்று நினைத்தவன் அதை எடுத்துப் பத்திரப்படுத்தினான்.

“”அப்பா, நேத்திக்கு நீ எந்த ஏரியாவுக்குப் போன?” சொன்னார்.

“”எந்த வீட்டுக்குப் போன?” சொன்னார். சொல்லிவிட்டு, “”ஏண்டா, அதையெல்லாம் கேக்கற? உன் வேலை என்னவோ அதை மட்டும் பாரு? வடையைத் தின்னுடான்னா, தொளைய எண்ணிக்கிட்டிருக்கியே…” என்றார்.
சிவா மெüனமானான். அப்பாவைப் பெருமைப்படுத்த தக்க தருணம் கிடைத்திருப்பதை எண்ணி மகிழ்ந்தான்.

சனி, ஞாயிறு விடுமுறையை அடுத்து, திங்கள்கிழமை பள்ளிக்கு வந்ததிலிருந்து கோபு மிகவும் பதட்டத்துடன் காணப்பட்டான். தன் வகுப்பு மாணவர்கள் மட்டுமல்லாமல், அடுத்தடுத்த வகுப்பு மாணவர்களிடமும் சென்று ஏதோ சொல்லி வருத்தப்பட்டுக் கொண்டிருந்தான்.

இதையெல்லாம் கவனித்துக்கொண்டிருந்த சிவா, கண்டும் காணாததுபோல இருந்தான். மேலும், ஆண்டுத் தேர்வுக்கு இன்னும் ஒரு வாரமே இருந்ததால் தேர்வுக்குப் படிப்பதில் தீவிரம் காட்டினான். அங்கு வந்த நண்பன் கணேஷிடம், “”என்னடா ஆச்சு, இந்த கோபுவுக்கு? இப்படி இருதலைக் கொள்ளி எறும்பு போலத் தவிக்கிறானே?” என்றான் சிவா.

“”அவனோட இங்கிலீஷ் புக்கைக் காணோமாண்டா, எவனோ சுட்டுட்டானாம்” என்றான் கணேஷ்.

“”அவன்தான் பணக்காரனாச்சே, புதுசு எவ்வளவு வேணுமானாலும் வாங்கிப் படிக்கலாமே…”

“”இல்லேடா சிவா, அவனோட புத்தகத்துல நிறைய முக்கியமான கேள்வி எல்லாம் குறிச்சி வச்சிருந்தானாம். அதை மட்டும்தான் ஆண்டுத் தேர்வுக்குப் படிக்க இருந்தானாம். இப்ப போய் புது புக் வாங்கினா, புத்தகம் முழுசுமா படிக்க முடியும்? ஒரு வாரம்தானே இருக்கு? அதுதான் தவிக்கிறான்” சிரித்தான் கணேஷ்.

“”அதுதான் ரெண்டு நாளா என்னைக் கேலி பேச, என் பக்கமே அந்தப் பய வரலையா?” என்றான் சிவா.

அன்று வகுப்பறையில் ஆங்கில ஆசிரியரிடம் சொல்லி அழுது கொண்டிருந்தான் கோபு.

ஆசிரியர் மாணவர்களை நோக்கி, “”யாராவது கோபுவுக்கு இங்கிலீஷ் புத்தகம் கொடுத்து உதவுங்கள். அவனோட புத்தகம் தொலைஞ்சிடுச்சாம்” என்றார்.

எல்லோரும் அமைதியாக இருந்தனர். யாருமே கொடுக்க முன் வரவில்லை. காரணம் முதல் பரீட்சை, ஆங்கிலம் என்பதால் சிலர் தாங்கள் படிக்க வேண்டும் என்று மறுத்துவிட்டனர்; சிலர் தாய்-தந்தை திட்டுவார்கள் என்று கூறிவிட்டனர்; இன்னும் சிலர் கோபுவின் ஆணவத்தை அடியோடு வெறுப்பவர்கள். உடனே சிவா எழுந்து, “”சார் நான் வேணும்ன்னா தர்றேன். ஆனால் இரண்டு நாளுக்குள்ள திருப்பித் தந்திடச் சொல்லுங்க சார்” என்றான்.

சட்டென எழுந்த கோபு,””வேண்டாம் சார், சிவாவோட புத்தகம் எனக்கு வேண்டவே வேண்டாம். அவனோட புத்தகத்தையா நான் படிக்கணும்?” என்றான் ஆணவத்துடன்.

கோபுவின் குணமும் பணக்காரத் திமிரும் ஆசிரியருக்குத் தெரியுமாதலால். “”சரி, எப்படியாவது படிச்சு பரீட்சை எழுது, இப்ப அழாம உட்கார்” என்றார்.
சிவாவுக்கு மனம் கேட்கவில்லை. நாளைக்கு எப்படியும் ஆசிரியரிடம் அதைச் சொல்லிவிட வேண்டும் என்று முடிவு செய்தான். அன்று மதியம்தான் ஆங்கில வகுப்பு என்பதால், மதியம் வரை பொறுமையாகக் காத்திருந்தான் சிவா.

ஆசிரியர் வகுப்புக்கு வருவதற்கு முன்பாக அவரைத் தனியாகச் சென்று சந்தித்து, “”இந்தாங்க சார், இதை நீங்களே அவனிடம் கொடுத்திடுங்க” என்று கூறி அவர் கையில் எதையோ தந்துவிட்டு, சிலமணி நேரம் அவரிடம் ஏதோ சொல்லி அழுதான் சிவா.

ஆசிரியர், அவனை சமாதானப்படுத்தி அனுப்பினார்.

வகுப்பறைக்குள் ஆசிரியர் நுழைந்ததும், கோபுவைக் கூப்பிட்டார். ஆசிரியர் அருகில் சென்று நின்ற கோபுவைப் பார்த்து, “”இந்தா, இதுதானே உன்னோட புத்தகம்?” என்றார்.

“”ஆமா சார், இது என்னோடதுதான் சார், இது எப்படிக் கிடைச்சது? யார் சார் எடுத்தாங்க? எனக்கு வேண்டாத யாரோதான் இதை எடுத்து வச்சு என்னை ரெண்டு நாளா அழ வச்சிருக்காங்க. அவங்களை உடனடியா நீங்க தண்டிக்கணும் சார்” என்றான் கோபமாக.

“”இதோ பார் கோபு, உன்னோட புத்தகத்தை யாரும் திருடலை. உன்னோட கவனக்குறைவுதான் அதற்குக் காரணம். ஆனால் அதை தேடிக் கொடுத்தவங்களையே நீ தண்டிக்கச் சொல்றியா?” என்று கோபமாகக் கேட்ட ஆசிரியர், “”கோபு, நீ பணக்காரன் என்பதால் நீ சொல்வதையெல்லாம் எல்லோரும் கேட்டு அடங்கி நடக்க வேண்டும் என்று நினைக்காதே! இது உன் வீடு அல்ல; பள்ளிக்கூடம். பள்ளிக்கூடத்தில் ஏழை-பணக்காரன், ஏற்ற-தாழ்வு, சிறியவன்-பெரியவன் என்ற வேறுபாடெல்லாம் பார்க்கக்கூடாது.

இந்தப் புத்தகத்தை பத்திரமாகக் கொண்டுவந்து கொடுத்தது யார் தெரியுமா? நீ அடிக்கடி ஒருவர் செய்யும் தொழிலை கேவலமாகப் பேசி, அவருடைய மகனை அவமானப்படுத்திக் கொண்டிருந்தாயே சிவா, அவன்தான் கொடுத்தான். உழைத்து சம்பாதிக்கும் எந்தத் தொழிலும் தாழ்ந்ததல்ல. சிவாவின் அப்பா போன்றவர்கள் வீடுவீடாகச் சென்று பேப்பர் எடுக்கவில்லை என்றால் நாமெல்லாம் நம் வீட்டில் குப்பைகளைத்தான் சேர்த்து வைத்திருக்க வேண்டும்.

உன்னுடைய புத்தகம், உங்கள் வீட்டு வேலைக்காரி போட்ட நியூஸ் பேப்பருடன் கலந்து அவனுடைய அப்பா கடைக்குச் சென்றதால் உனக்குக் கிடைத்திருக்கிறது. இல்லையென்றால் எந்தக் கடையில் போய் நீ இதைத் தேடுவாய்? யாரையும், எந்தத் தொழிலையும் இனி கேவலமாக நினைக்காதே – பேசாதே! நீ பத்தாம் வகுப்பு வந்துவிட்டாய். இனியாவது அடுத்தவர்களை மதிக்கக் கற்றுக்கொள்.

“”உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்கு
அச்சாணி அன்னார் உடைத்து”

அதாவது, “பெரிய தேர் ஓடுவதற்கு அச்சில் இருந்து தாங்கும் சிறிய ஆணி போன்றவர்கள் இந்த உலகத்தில் உள்ளனர். அவர்களுடைய உருவத்தின் சிறுமையைக் கண்டு இகழக்கூடாது’ என வள்ளுவர் கூறிய இந்தத் திருக்குறளை உங்களுக்கு எத்தனை முறை நான் மேற்கோள் காட்டி பாடம் நடத்தி இருக்கிறேன். தேர் ஓடுவதற்கு அடிப்படையாய் இருப்பது அதன் அச்சாணிதான். அச்சாணி உருவத்தால் சிறியதுதான்; ஆனால் அதன் பயன் மிகப்பெரியது. அதுபோலத்தான் ஒருவரின் உருவத்தையோ அவர்கள் செய்யும் தொழிலையோ ஒருபோதும் கேவலமாகப் பேசக்கூடாது. ஏனென்றால் அவர்கள்தான் தக்க சமயத்தில் உதவக்கூடியவர்கள் இருப்பார்கள். நீ எவ்வளவுதான் சிவாவின் அப்பா செய்யும் தொழிலைக் கேவலப்படுத்தி, அவன் மனம் நோகப் பேசினாலும், உனக்கு தக்க சமயத்தில் அச்சாணியாக இருந்து உதவியவன் சிவாதான் என்பதை மறந்துவிடாதே! இனியாவது அனைவரிடமும் அன்பாகவும், பண்பாகவும் நடந்துகொள்ள முயற்சி செய்” என்றார்.

கோபு வெட்கித் தலைகுனிந்தபடி, சிவாவிடம் வந்து மன்னிப்புக் கேட்டுக்கொண்டு தன் இடத்தில் வந்து அமர்ந்தான்.

மறுநாள் சைக்கிளில் வந்து இறங்கிய கோபு, “”குட் மார்னிங் சிவா, என்னையும் உன்னோட ஃபிரண்டா ஏத்துக்கிறியா?” என்றான்.

“”ஒய் நாட்?” என்று அவன் கையைப் பற்றிக் குலுக்கினான் சிவா.

இந்தக் காட்சியைக் கண்டு சிரித்துக்கொண்டே சென்றார் ஆசிரியர்.

– கி.மஞ்சுளா (நவம்பர் 2013)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *