கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: June 22, 2021
பார்வையிட்டோர்: 2,381 
 

புதிதாகத் திருமணம் செய்து கொண்ட கணவனும், மனைவியும் ஒரு வேலையும் இல்லாதபோது வீண் பேச்சுக்களைப் பேசிக்கொண்டிருந்தனர்.

கணவன் சொன்னான் ‘நான் நாள்தோறும் பால் குடிக்க வேண்டும்’ என்று. மனைவி சொன்னாள்: ‘நல்ல யோசனை: ஒரு பசு வாங்கி விடுங்கள்.’

கணவர் : நேற்றே ஒரு பசு , மாட்டைப் பார்த்து வந்தேன். நாளைய தினம் போய் வாங்கி விடுவேன்.

மனைவி : மாடு வாங்கி வரும்போதே இரண்டு பித்தளைச்சொம்பும் வாங்கி வந்துவிடுங்கள்.

கணவர் : எதற்காக இரண்டு பித்தளைச் சொம்பு?

மனைவி : ஒன்று பால் கறக்க; மற்றொன்று எங்கம்மா வீட்டுக்குப் பால் அனுப்ப.

கணவர் : ஏண்டி! நான் பணம் போட்டு வாங்கும் மாட்டுப் பாலைக் கறந்து உங்க அம்மா வீட்டுக்கு அனுப்புவது எதற்காக?

மனைவி : என்னைப் பெற்று வளர்த்து உங்களுக்குக் கட்டிக் கொடுத்தார்களே அதுக்காக.

கணவர் : அப்படியானால் நீ இங்கு இருக்காதே என அதட்டினான்.

இப்படியாக வாய் முற்றி, தடியால் அடித்து, மனைவியைத் தாய் வீட்டுக்கு விரட்டிவிட்டான். அவளும் அங்கு போய் பல மாதங்கள் ஆயிற்று.

இருவருமே தங்கள் தவறுகளை உணரும் காலம் நெருங்கியது.

மனைவியோடு பிறந்தவன், ‘ஒருநாள் மைத்துனனிடம் வந்து ‘அத்தான், நீ வாங்கிய மாடு எங்கள் வீட்டுக்குவந்து வைக்கோலை மேய்ந்து கொண்டிருக்கிறதே’ என்றான்.

அதற்கு மைத்துனன், ‘நான் மாடும் வாங்கவில்லை. பாலும் கறக்கவில்லை. வேலையில்லாதபோது வீணுக்குப் பேசிய பேச்சு அது’ என்று கூறி, மனைவியை அழைத்து. வந்து குடும்பத்தை நடத்தினான்.

இல்லறம் நடத்துவோர் இம்மாதிரி வேலையொன்றும் இல்லாதபோது வீண் பேச்சுக்களைப் பேசித் தொல்லைகளை விளைவித்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது.

– அறிவுக் கதைகள், மூன்றாம் பதிப்பு: 1998, பாரி நிலையம், சென்னை

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *