ஒரு சிறிய தோட்டத்தில் ஒரு எறும்புப் புற்று இருந்தது. அந்த எறும்புப் புற்றிலிருந்த எறும்புகள் பக்கத்திலிருந்த ஒரு பெரிய மரத்தின் மீது ஏறிக் கொண்டு இருந்தன. அந்த மரத்திற்குப் பக்கத்தில் சிறிய முசுக்கொட்டை செடியொன்று இருந்தது. அந்த செடியின் ஓரிடத்தில் ஒரு சிறிய கூடு இருந்தது. அந்த பஞ்சுக் கூட்டிற்குள் ஒரு புழுவொன்று மெல்ல வாலாட்டிக் கொண்டு இருந்தது.
அதைக் காணவே அசிங்கமாக கறுப்பாக இருந்தது. அது ஒரு பட்டுப் புழு. அதுதான் நன்கு வளர்ந்து கூட்டுப் புழு ஆகி பின் அழகிய பட்டுப் பூச்சி ஆகும். இப்போது எறும்புகள் அந்தப் புழு தனது கூட்டில் இருந்த போதுதான் பார்த்தன. அந்த எறும்புக் கூட்டத்தில் ஒரு பொல்லாத தீய குணமும் குறும்பும் கொண்ட ஒரு எறும்பு இருந்தது. அந்த எறும்பு மரத்தடியில் இருந்து செடியில் வாழும் புழுவைக் கண்டன.
http://www.dinamalar.com/siruvarmala…es/Smr-1-3.jpg
உடனே “ஓ! சிறிய புழுவே! உன்னைப் பார்த்தால் எனக்கு மிகவும் பாவமாக உள்ளது. எங்களைப் பார். எத்தனை உயரமான மரத்தில் எத்தனை எளிதாக ஏறிச் செல்கிறோம். ஆனால், நீயோ ஒரு போதும் உயரமான மரத்தில் ஏற முடியாது பாவம். உங்களது பிறவி அப்படி! என்ன செய்வது,” என்று கேட்டான். அதனைக் கேட்ட மற்ற எறும்புகள் மிக கேலியாகச் சிரித்தன. புழு அமைதியாக பதில் ஏதும் கூறாமல் இருந்தது. பின் எறும்புகள் அந்தப் புழுவை கேலியும், கிண்டலும் செய்தபடி அங்கிருந்து புறப்பட்டுச் சென்று விட்டன. சிறிது நாட்கள் ஆனது.
ஒரு நாள் அதே எறும்புகள் மீண்டும் அந்த மரத்தில் மேலே ஏறிச் சென்றன. அப்போது முசுக்கொட்டை செடியின் அருகில் பட்டுப் புழுவின் கூடு மட்டும் இருந்தது. சுற்றிலும் அந்தப் பட்டுப் புழுவைக் காணவே இல்ல. உடனே அந்த எறும்புகள், பாவம் அந்தப் புழு கூட்டிலேயே தனது வாழ்வை முடித்துக் கொண்டது போலும் என்று கூறிக் கேலியாக சிரித்தன. அப்போது எறும்புகளின் தலைக்கு மேலிருந்து, “”எறும்பு நண்பர்ளே!” என்று யாரோ கூப்பிடும் குரல் கேட்டது.
எறும்புகள் மேலேப் பார்த்தன. வானத்தில் மிக அழகிய பட்டுப் பூச்சி ஒன்று சிறகடித்தபடி நின்றது.
அந்த பட்டுப் பூச்சி எறும்புகளை பார்த்து, “”நண்பர்களே! இப்போது நான் உங்களை விட மிக உயரமான வானில் சிறகடித்துப் பறக்கிறேன். உங்களால் வெறும் மரத்திலும் உயரமான சுவர்களிலும் மட்டும்தான் ஏற முடியும். ஆனால், என்னால் அதை விட மிக உயரமான மலைக்கு மேலும் வானம் வரையிலும் கூட பறக்க முடியும் என்று கூறியது.
“மேலும் இதற்காக உங்கள் பிறவியை ஈனப் பிறவி என்று நான் கூறவில்லை. யார் யாருக்கு என்ன திறமை தேவையோ அந்த திறமைகளை அவரவர்க்கு இறைவன் தருகிறான். இதனால் நமது திறமைகளுக்காக நாம் கர்வப்பட்டு பிறரை இகழக் கூடாது. அதை புரிந்து கொள்ளுங்கள்.” என்று அறிவுரை கூறியது. பாவம் எறும்புகள் இப்போது தலைகுனிந்து சென்றன.
குட்டீஸ்களே… எப்போதும் பிறரை குறைத்து மதிப்பிடாதீர்கள் சரியா?