(1955 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
ஓர் ஊரில் இளைஞர்கள் பலர் ஒன்றுகூடி ஒரு சங்கம் ஏற்படுத்துவதற்கு எண்ணினர். காலியாகக் கிடந்த ஒரு கட்டிடத்தைச் சங்கம் ஏற்படுத்துவதற்கு ஏற்பாடு செய்தனர். ‘நச்சினார்க்கினியர் நற்றமிழ்ச் சங்கம்’ என்று பெரிய பலகை ஒன்றில் ஓவியக்காரனைக் கொண்டு அழகாக எழுதச் செய்து அதனைக் கட்டிட முகப்பிலே கட்டித் தொங்கவிட்டனர். அவ்வளவில் தாங்கள் சங்கம் ஒன்றை ஏற்படுத்திவிட்டதாக எண்ணிப் பெருமைப்பட்டுக் கொண்டனர். இரண்டொரு செய்தித் தாள்களை வாங்கிக் கட்டிடத்தில் போட்ட னர். இளைஞர்கள் பலரும் அங்கே கூடிச் சீட்டாடுதல், புகைச் சுருட்டுப் பிடித்தல், செய்தித் தாள்கள் படித்தல், ஊர்வம்பளத்தல் முதலிய செயல்களைப் புரிந்து கொண்டிருந்தனர்.
அந்த ஊரிலே அறிவிற் சிறந்த பெரியார்கள் பலரும் செந்தமிழ்ப் புலவர்கள் சிலரும் இருந்தனர். ஆயினும், இளைஞர்கள் அப் பெரியார்களைக் கலந்து பேசவோ சங்கத்திற்கு அழைத்துச் சொற்பொழிவுகள் நடத்தவோ இல்லை. பெரியார்கள் யாரையேனும் சங்கத்திற் சேர்த்தால் அவர்களுக்கு அடங்கி நடக்கும் படியாக இருக்கும். சீட்டாடுதல் புகைக் குடித்தல் முதலிய செயல்களைச் செய்தல் முடியாது என்னும் எண்ணத்துடன் தான் அவர்கள் பெரியார்களை அச் சங்கத்திற் சேர்க்காமல் இருந்தார்கள். இவர்கள் ளுடைய சங்கத்தை ஊரிலிருந்த பெரியவர்களும் ஒரு பொருளாக மதிக்கவில்லை.
ஒருநாள் அவ்வூருக்கு வேறோர் ஊரிலே இருந்து ஓர் அறிஞரும், அவருடன் வேறு சிலரும் வந்திருந்த னர். அவ்வறிஞருடைய பெயர் நற்றமிழ் நம்பியார். அவர் தம் நண்பர்களுடன் தெருவிற் சென்று கொண் டிருந்தார். அப்பொழுது நச்சினார்க்கினியர் நற் றமிழ்ச் சங்கம் அவருடைய பார்வைக்கு உள்ளாகியது. நற்றமிழ் நம்பியார் அறிக்கைப் பலகையைப் பார்த்த வுடன் வியப்படைந்து தம் நண்பர்களுடன் உள்ளே நுழைந்தார். அங்குச் சீட்டாட்டம், புகைப்பிடித்தல், வீணுரையாடல் முதலிய வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருத்தலைக் கண்டார்.
“பெரிய பெயர் வைத்து அறிக்கைப் பலகை தொங்கவிட்டுவிட்டு இவ்வாறு சிறிய வேலைகளைச் செய்துகொண்டிருக்கிறீர்களே! நச்சினார்க்கினியர் நற் றமிழ்ச் சங்கம் என்னும் அழகிய பெயருக்கேற்ப நல்ல வேலைகள் செய்யக்கூடாதா? பெரியவர்களை அழைத் துச் சொற்பொழிவுகள் செய்யக்கூடாதா? சிறுவர்கள் கல்வி கற்குமாறு தகுந்த ஆசிரியர்களைக் கொண்டு கல்வி கற்பிக்கக்கூடாதா? இக் கட்டிடத்திற்கு நீங்கள் இப் பெயர் வைத்திருப்பதைவிடத் தண்டச் சோற்றுத் தடிராமர்கள் சங்கம் என்று பெயர் வைத்திருந்தால் எவ்வளவோ நன்றாக இருக்குமே!” என்று கூறினார்.
நற்றமிழ் நம்பியாரின் உரை இளைஞர்களுக்குச் சினத்தையுண்டு பண்ணியது. ஆயினும், அவர்கள் அவரிடம் எதிர்த்துப் பேசத் துணியவில்லை. தங்க ளிடம் தவறிருப்பதையுணர்ந்த அவர்கள் பெரியவர் களைத் தங்கள் சங்கத்திற் சேர்ப்பதற்கு முடிவு செய்தனர்.
“பெரியாரைத் துணைக்கொள்” (இ – ள்.) பெரியாரை – அறிவிலே சிறந்த பெரியவர்களை, துணைக்கொள் – உனக்குத் துணையாகப் போற்றிக்கொள்வாயாக.
– கருப்பக்கிளர் சு.அ.இராமசாமிப் புலவர், ஆத்திசூடி விளக்கக் கதைகள் (இரண்டாம் புத்தகம்), முதற் பதிப்பு: டிசம்பர் 1955