கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: September 1, 2022
பார்வையிட்டோர்: 7,479 
 

(1996ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

பள்ளி வளாகத்தில் மாணவர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. ஆரவாரம் மகிழ்ச்சி குதூகலம் கொண்டாட்டம் கூடவே சோகம், சோர்வு கவலை ஏமாற்றம் என்றெல்லாம் முகத்திற்கு முகம் மாறுபட்ட உணர்ச்சிக் கவலையின் வெளிப்பாடு.

ஒவ்வொருவரின் கையிலும் தேர்வு முடிவுத்தாள் காற் றில் பறக்கத் துடித்துக் கொண்டிருந்தது.

வென்றவர் ஒருவரை ஒருவர் கட்டித் தழுவி தன் வாழ்த்துகளை பரிமாறிக் கொள்வதும், தோற்றவர்களுக்கும் ஆறுதல் சொல்லிக் கொள்வதுமாய் நேரம் ஓடிக்கொண்ருந் தது.

மனோகரன் தனது மோட்டார் சைக்கிளை எடுத்துக் கொண்டு மகிழ்ச்சியுடன் வீட்டுக்குக் கிளம்பினான். தனது வெற்றியை வீட்டில் உள்ளவர்களிடம் தெரிவிக்க அவனது கால்கள் பரபரத்துக் கொண்டிருந்தன.

பள்ளிக் காம்பவுண்டில் இருந்து வெளியே வந்து சாலையில் திரும்பியபோது மூன்று மோட்டார் சைக்கிள்கள் அவனை வழி மறித்து நின்றன. திகைப்பும் தவிப்புமாய் நின்றான் அவன்.

அவனோடு படிப்பவர்கள்தான் என்றாலும் அதிகமாய் நெருங்கிப் பழகாதவர்கள் என்பதால் ஒரு புன்னகையோடு அங்கிருந்து நகரமுயன்றான் அவர்கள் அவனை விடுவதாய் இல்லை.

ரிச்சர்ட் அவன் அருகே நெருங்கி வந்தான் “பஸ்ட் கிளாஸ்ல பாஸ் பண்ணிட்டு எங்களைப் பார்க்காம போனா எப்படி பிரதர்… எங்களுக்கெல்லாம் எதுவும் கெடையாதா…

வார்த்தையில் கிண்டல் தொனித்தது. மனோகரன் சுதாரித்துக் கொண்டான். பிரபாகரன் கொஞ்சம் நெருங்கி வந்து தொட்டான்.

“நீ குடுக்கலேன்னாலும் பரவாயில்லே… நாங்க உனக்கு ட்ரீட் கொடுத்தா வாங்கிக்கலாம்லே… சும்மா எங்களோட வாப்பா… நலக விஷயத்தை சந்தோஷமா கொண்டாட லேன்னா எப்படி… பேச்சில் சினிமா வில்லனின் கிண்டல் தெரிந்தது.

மனோகரன் தனது தோளில் பதிந்திருந்த அவனது கையை எடுத்து விட்டான். புறப்படத் தயாராகி நகர்ந்தான்.

“நீங்க கேட்டீங்கன்னு உங்களுக்கு ட்ரீட் கொடுக்க எனக்கு வசதியும் இல்லே… அதே மாதிரி நீங்க கொடுக்கி றதை வாங்கிக்கிற எண்ணமும் எனக்கில்லே…தயவு செய்து எனக்குப் பாதையை விடுங்கப்பா“

அவன் நகர்வதற்குள் சலீம் சொன்னான்.

“வெற்றியை மகிழ்ச்சியா கொண்டாட நேரமில்லேன்னு சொல்லுவே…ஆனா பக்கம் பக்கமா அடுத்தவனைக் காப்பி யடிச்சு பரீட்சை எழுதமட்டும் உனக்கு நெறையவே நேரம் இருந்திருக்குமே அது மட்டும் எப்படிப்பா…?”

கேலியாய் சொல்லி அவன் சிரிக்க, கூடவே நண்பர்க ளும் சிரித்தார்கள். மனோகரனுக்கு அந்த வார்த்தைகள் மிகுந்த ஆத்திரத்தை உண்டு பண்ணின. சட்டென்று அவன் சட்டையைப் பிடித்து உலுக்கினான்.

“யாரைப் பார்த்துடா, காப்பியடிச்சு எழுதினேன்னு சொன்னே”

பயந்து போனார்கள் அவர்கள். ரிச்சர்ட் அவனை சமாதானப்படுத்தினான். அவன் பிடியிலிருந்து சலீமை விலக்கி விட்டு, ரிச்சர்ட் சலீமை திட்டினான்.

“நீ ஏன்டா கண்டவன் சொன்னதை கேட்டு, நம்ம மனோவை அப்படிக் கேட்டே…அறிவு இருக்கா உனக்கு…?”

ரிச்சர்ட்டின் பேச்சில் ஏதோ ஒரு விஷயம் ஒளிந்து கிடப்பது நன்றாகவே தெரிந்தது . மனோகரனுக்கு தன்னைப் பற்றி இவர்களிடம் யாரோ தவறான செய்தியைப் பரப்பி இருக்கிறார்கள் என்று புரிந்தது.

“ரிச்சர்ட் நீ என்னடா சொல்றே இவன் சொன்ன சேதியை யாருடா சொன்னது சொல்லுடா…சொல்லு“

மறுபடியும் ஆத்திரம் கிளம்பியது அமைதிப் படுத்தினான் ரிச்சர்ட்.

“இங்கே பாரு மனோ… நீ காப்பியடிச்சு எழுதி முதல் மாணவனா வந்ததது தன்னைப் பார்த்துதான்னு சொன்னது வேறெ யாருமில்லே…உன்னோட தோஸ்து சங்கர்தான்பா…”

ரிச்சர்ட் முடிக்கவில்லை சலீம் தொடர்ந்தான் “அவன் கூட நட்பா இருந்து அவனுக்கே குழிபறிச்சிட்டியாம் . இப்பத் தான் நீ எதுக்காக அவனோட பழகினேன்னு அவனுக்குப் புரிஞ்சுதாம்“

மனோகரன் ஒரு வினாடி செயல் இழந்து போனான்.

தன்னுடைய வெற்றியை விரைவாக வீட்டில் போய் சொல்லி அவர்கள் பாராட்டை பரிசை பெற வேண்டும் என்று ஆவலாய் போய்க் கொண்டிருக்கும் போது , இப்படிப்பட்ட வார்த்தைககள் காதில் விழுந்ததும் அவனுக்கு அந்த நேரத் தில் எதுவுமே புலப்படவில்லை. சங்கரை நினைத்தான்.

வகுப்பில் சங்கர் இதுவரை முதல் மாணவனாக இருந்து வந்தது உண்மையே. என்றாலும் அவனோடு போட்டி போட்டுப் படித்து தேர்வில் அமர்ந்து இந்த வெற்றியை அவன் பெற்றான் என்பது அவன் மனமறிந்த விஷயம். இதை எப்படி அவன் குறை கூறினான்?

இப்ப எங்கேடா அவன்…அதட்டினான். அவர்கள் மூவருமாய் எதிர் திசையில் கையைக் காட்டிவிட்டுத் தங்கள் வண்டியைக் கிளப்பினார்கள் மனோகரன் மறுபடியும் பள்ளி வளாகத்திற்கே மோட்டார் சைக்கிளைத் திருப்பினான்.

மாணவர்கள் திட்டுதிட்டாய் குழுமி நின்றார்கள். நாலா புறமும் ஒரு வட்டம் போட்டு அவனது வண்டி ஓரிடத்தில் நின்றது. அதிலிருந்து இறங்கி சங்கர் நின்ற இடத்தை நோக்கி நடந்தான் மனோகரன். தனது தோல்வியைப் பற்றி ஆராய்ந்து கொண்டு மற்ற மாணவர்கனோடு அளவளாவிக் கொண்டிருந்த சங்கரை நெருங்கி அவன் சட்டையைப் பிடித்து உலுக்கி.

“ஏண்டா…நானா உன்னைப் பார்த்துக் காப்பியடிச்சு எழுதினேன்… உன்னால நிரூபிக்க முடியுமா அதை…”

ஆத்திரமும் ஆவேசமுமாய் கேட்கிறான். எதிர்பாராத தாக்குதலும், கேள்வியும், சங்கரை நிலைகுலைய வைக்கின் றன. தடுமாறிப் போகிறான். சகமாணவர்கள் அவர்களை விலக்கி விட்டு , விஷயத்தை அறிய முனைகிறார்கள்.

சற்றுமுன் நடந்த விஷயங்களை அவர்களிடம் அதிகக் கவலையுடன் கூறினான் மனோகரன். அந்தக் கூட்டத்தில் சலசலப்பு அதிகமானது. ஒரு மாணவன் கேட்டான்.

“மனோ…உன்கிட்டே இப்படி சொன்னது யாரு…உன்னோட நண்பனா…இல்லே உன்னோட அண்ணன் தம்பியா… இல்லே உன் அப்பா அம்மாவா?”

மனோகரன் தடுமாறினான்.

ஒருநாள் ஒருமணிநேரம் கூட அந்த மூன்று பேர்களோ டும் ஒன்றாக அமர்ந்து அவன் பேசினது கிடையாது. இந்த நிலையில் அவர்கள் சொன்னதை நம்பி ஏழெட்டு ஆண்டுக் கால நண்பனைக் கஷ்டப்படுத்தி விட்டோமே என மனம் வருந்தியது:

“கொஞ்ச நேரம் நாங்க உங்களை விட்டிருந்தா… உங்களோட பழக்கத்திற்கே அர்த்தமில்லாம போயிருக் குமே… நமக்கு அணுக்கமில்லாத நண்பர்கள் நம்மைப் பற்றி ஏதாச்சும் சொன்னா அவுங்க ஏன் சொன்னாங்க எதுக்காக சொன்னாங்கன்னு நாம்தான் யோசிக்கனும். அதுதான் படிச்ச வன் செயல்.. அதைவிட்டுட்டு இப்படியா அசிங்கமா நடந்துப்பாங்க.

மனோகரன் சங்கரின் கையைப் பற்றி மன்னிப்புக் கேட்டான். மற்றவர்களிடமும் மன்னிப்புக் கோரினான். சங்க ரும் அவுன் நண்பர்களும் மனோகரனுக்கு வாழ்த்தைக் கூறிக் கொண்டார்கள். அவனும் அவர்களை வாழ்த்தி விடை பெற்றான்.

மறுபடியும் இது போன்ற தவறைச் செய்யவே கூடாது என்ற உறுதியோடு வீட்டுக்குப் பறந்தான்.

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு. (குறள்:423)

விளக்கம்: http://www.thirukkural.com/2009/01/blog-post_5062.html#423

– குறள் விளக்கக் கதைகள், முதற் பதிப்பு: நவம்பர் 1996, மாஸ்கோ பதிப்பகம், சென்னை

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *