ஒரு கிராமத்தில் பசியோடு அலைந்து கொண்டிருந்தது ஓர் ஓநாய். உணவு எதுவும் கிடைக்கவில்லை.
கிராமத்தின் கோடியிலிருந்த குடிசைக்கு அருகில் வந்து கொண்டிருந்தது.
குடிசையினுள் சின்னஞ்சிறு பையன் அழுது கொண்டிருந்தான்.
கிழவி எவ்வளவோ சமாதானப்படுத்தியும், பையனின் அழுகை நிற்கவில்லை.
“நீ அழுகையை நிறுத்தாவிடில், உன்னை ஓநாயிடம் தூக்கிப் போட்டு விடுவேன்” என்று பலமுறை சொல்லி பயமுறுத்தினாள் கிழவி. அதைக் கேட்டதும் ஓநாய் மேற்கொண்டு செல்லாமல், குடிசைக்கு வெளியே படுத்து விட்டது.
கிழவி, பையனை எப்பொழுது வெளியே போடுவாள் என்று ஓநாய் எதிர்பார்த்துக் கொண்டிருந்தது.
இரவு வெகுநேரம் அகிவிட்டது. ஓநாயோ காத்துக் கொண்டிருந்தது.
திடீரென்று குடிசைக்குள்ளிருந்து கிழவியின் குரல் கேட்டது.
“என் கண்ணே நீ தூங்கு! உன்னை ஓநாயிடம் போட மாட்டேன். அந்த ஓநாய் இந்தப் பக்கம் வரட்டும் அதை அடித்துக் கொன்று விடுவோம்.” என்றாள் கிழவி.
அதைக் கேட்டுக் கொண்டிருந்த ஓநாய், “மக்கள் பேசுவது ஒன்று; செய்வது வேறாக இருக்கிறதே” என்று எண்ணிக் கொண்டே எழுந்து, கிராமத்தை விட்டு வெளியேறியது.
– சிறுவர் சிறுமியருக்கு நீதிக் கதைகள், முதற் பதிப்பு: நவம்பர் 1997, முல்லை பதிப்பகம், சென்னை.