கண்ணபிரான் சிறுவனாக இருந்தபோது பல வீடுகளில் வெண்ணெய் திருடி உண்டார். தன்னுடன் வரும் சிறுவர்களுக்கும் தந்து மகிழ்வார்.
ஒருநாள் கண்ணன் ஒரு வீட்டிற்குச் சென்றான். அங்கே பானை இருந்த உறி, ஒரு கயிற்றால் மணியுடன் இணைக்கப்பட்டு இருந்தது.
இது தன்னைப் பிடிப்பதற்கான தந்திரம் என்பதை அறிந்தான். உடனே மணியை நோக்கி, “”ஒலிக்கக் கூடாது” என்று உத்தரவிட்டான்.
பானையைத் திருடி சிறுவர்கள் வெண்ணெய் உண்டனர். மணி ஒலிக்கவில்லை! ஆனால் கண்ணன் உண்ணும் போது மட்டும் மணி ஒலித்தது. உடனே அந்த வீட்டுப் பெண் வெளியே வந்து கண்ணனைக் கையும் களவுமாகப் பிடித்தாள்.
கண்ணன் மணியைப் பார்த்தான்.
மணி, “”கண்ணா உன் உத்தரவை மீறவில்லை. கடவுளாகிய நீ உண்ணும்போது அது நைவேத்தியம். எனவே நைவேத்திய காலத்தில் என் கடமையைச் செய்தேன்..” என்றது.
கண்ணன் மணியின் கடமை உணர்வைப் பாராட்டிவிட்டு, அடுத்த விநாடியில் தனது வீட்டை அடைந்தான்.
மாணவர்களும் படித்தல், எழுதுதல் முதலிய தங்களது கடமைகளைச் சரிவர செய்துவந்தால், வளமான வாழ்க்கை கிடைக்கும்.
– ஜி.மோகனவேலு, கம்பம். (நவம்பர் 2011)