எத்தனுக்கு எத்தன்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: January 19, 2012
பார்வையிட்டோர்: 7,290 
 

வயல்நாடு என்ற ஊரில் கந்தன் என்ற உழவர் இருந்தார், அவரது மகன் இனியன் இருவரும் தங்கள் வயலில் விளைந்த நெல் மூட்டைகளை வண்டியில் ஏற்றினார்கள், பின்னர் கந்தன் மட்டும் அவற்றைப் பக்கத்து
ஊர்ச் சந்தையில் விற்பதற்காகப் புறப்பட்டார்.

http://www.greencanopy.in/images/service-bullock.jpg

ஊர்ச்சந்தைக்கு போகும் வழியில் அவரைச் சந்தித்த ஒரு வியாபாரி,

மூட்டை நெல் என்ன விலை? என்று கேட்டான்.

500 ரூபாய் என்றார் உழவர்.

விலை குறைத்துக் கொடுக்கக் கூடாதா என்று கேட்டான் வணிகன்.

நீங்கள் ஒரு மூட்டை நெல் வாங்கினாலும் சரி. வண்டியோடு எல்லா மூட்டை நெல்லையும் வாங்கி னாலும் சரி, ஐநூறுக்கு ஒரு ரூபாய் குறைத்து வாங்க மாட்டேன் என்று சொன்னார் கந்தன்.

ஏமாற்றுக்காரனான அந்த வணிகன், வண்டியோடு எல்லாவற்றையும் வாங்கிக் கொள்கிறேன் என்றான்.

மகிழ்ந்த உழவர் அவன் வீட்டில் நெல் மூட்டை களை இறக்கினார்.

பணம் தாருங்கள் என்றார்.

உழவர் கையில் வணிகன் 500 ரூபாய் தந்தான்.

என்ன ஐநூறு ரூபாய் மட்டும்தான் தருகிறீர்கள்? என்று கேட்டார் உழவர்.

நீ என்ன சொன்னாய்? ஒரு மூட்டை நெல் வாங்கினாலும் சரி. எல்லாவற்றையும் வண்டியோடு வாங்கி னாலும் சரி. ஐநூறு ரூபாய்தான் என்றாய். ஆகவே உன்னிடம் ஐநூறு ரூபாய் தந்துவிட்டேன். சொன்னபடியே வண்டியோடு நெல்லை வாங்கிக் கொண்டேன். நீ போய் வா என்றான்.

கந்தன் உடனே “என்ன வியாபாரி ஏமாற்ற பார்க்கிறீங்களா? நான் பேச்சு அப்படி சொன்னேன், அதுவும் ஒரு மூட்டை ஐநூறு என்றும், வண்டியோடு இருக்கும் அத்தனை மூட்டைகள் வாங்கினாலும் ஒரு மூட்டையின் விலை ஐநூறுக்கு குறையாது என்ற அர்த்தத்தில் சொன்னேன்” என்றார்.

ஆனால் அந்த வியாபாரி ஒத்துக் கொள்ளவில்லை, சொன்ன சொல்லை காப்பாற்று, வண்டியோடு ஐநூறு தான் வருவேன் என்று அடம்பிடித்தான்.

கோபம் கொண்ட கந்தன் அந்த ஊரில் இருந்த பெரியவர்களிடம் சென்று தனக்கு நீதி வழங்குமாறு வேண்டினார்.

அவன்தான் பெரிய ஏமாற்றுக்காரன் ஆயிற்றே, வண்டியோடு, நெல் எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டாலும் ஐந்நூறு ரூபாய்தான் என்று ஏன் சொன்னாய்? உன் பேச்சை வைத்தே உன்னை ஏமாற்றி விட்டானே. நாங்கள் என்ன செய்ய முடியும்? இனியாவது கவனமாக இரு என்று சொல்லி கந்தனை அனுப்பி வைத்தார்கள்.

ஏமாற்றத்துடன் வீடு திரும்பினார் கந்தன். நடந்ததை அறிந்த அவன் மகன் இனியன், அப்பா, கவலைப்படாதீர்கள். உங்களை ஏமாற்றியவனுக்கு வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாத பாடம் கற்றுத் தருகிறேன் என்று சொல்லிவிட்டு வேறு ஒரு வண்டியில் நெல் மூட்டையை ஏற்றிக் கொண்டு அந்த ஊர் நோக்கிச் சென்றான்.

http://www.bestofasseenontv.com/bull…llockcart2.jpg

உழவனை ஏமாற்றிய வணிகன் தன் நான்கு வயது மகனின் கையைப் பிடித்துக் கொண்டு வந்து கொண்டிருந்தான். எதிரே வண்டி நிறைய நெல் மூட்டை வருவதை அறிந்து மகிழ்ந்தான்.

வண்டியோட்டியைப் பார்த்து,

ஒரு மூட்டை நெல் என்ன விலை? என்று கேட்டான்.

தன் தந்தையை ஏமாற்றியவன் இவன்தான் என்பதை அறிந்த இளைஞன், ஐயா, உங்களைப் பார்த்தாலே, பெரிய மனிதராகத் தெரிகிறது. என்னை ஏமாற்றவா போகிறீர்கள்? உங்கள் மகனின் பிஞ்சுக் கைகளில் சில நாணயங்களை வைத்துக் கொடுங்கள். அதுபோதும் என்று இனிமையாகப் பேசினான்.

இன்று யார் முகத்தில் விழித்தேனோ? என்று தன்னையே பாராட்டிக் கொண்ட வணிகன், சரி, நீ சொன்னபடியே தருகிறேன். நெல் மூட்டைகளை எல்லாம் வீட்டில் இறக்கி வை என்றான்.

அப்படியே செய்தான்.

இளைஞன். தன் மகனின் கைகளில் ஐந்து செப்பு நாணயங்களைத் தந்த வணிகன்,

இதை அவரிடம் தந்து விடு என்றான். அந்த மகனும் தன் கையை இளைஞனிடம் நீட்டினான்.

தன் பையில் கை விட்டு கத்தியை எடுத்தான் இளைஞன்.

எதற்காகக் கத்தியை எடுக்கிறாய? என்று கேட்டான் வணிகன்.

நான் என்ன சொன்னேன்? உங்கள் மகனின் கைகளில் வைத்து நான்கைந்து நாணயங்கள் தாருங்கள் என்றேன். அதன்படி உங்கள் மகனின் கைகளை வெட்டி எடுத்துச் செல்லப் போகிறேன் என்றான் இளைஞன்.

அப்பொழுதுதான் வணிகனுக்கு உண்மை புரிந்தது.

இளைஞன் சொன்ன சொற்களுக்குக் கைகளுடன் நாணயங்கள் என்ற பொருளும் உள்ளது. மகிழ்ச்சிப் பரபரப்பில் நான் அதைப் புரிந்து கொள்ளவில்லையே. வழக்கு ஊர்ப் பெரியவர்களிடம் சென்றால் சொன்னபடியே மகனின் கையை வெட்டிக் கொடுத்து விடு என்றுதான் தீர்ப்பு வழங்குவார்கள். என்ன செய்வது என்று சிந்தித்தான்.

நீ கொண்டு வந்த நெல் மூட்டைகளுக்கு உரிய விலைக்கு மேல் அதிகப் பணம் தருகிறேன். என் மகனின் கையை வெட்டி விடாதே என்று கெஞ்சினான் அவன்.

என் தந்தையை ஏமாற்றியது போல் என்னையும் ஏமாற்றப் பார்க் கிறாயா? உன் ஏமாற்றுத்தனங்களுக்கு எல்லாம் நல்ல பாடம் உன் ஒரே மகனின் கையை வெட்டுவதுதான். சொன்ன சொல் மாறாதே என்று கோபத்துடன் சொன்னான் இளைஞன்.
தன்னை விட திறமைசாலியிடம் சிக்கி இருக்கிறோம் என்பதை உணர்ந்தான் வணிகன். அவனுக்கு என்ன செய்வது என்று புரியவில்லை.

நடந்ததை அறிந்த ஊர் மக்கள் எல்லோரும் அங்கே கூடி விட்டனர்.

இவனால் இந்த ஊருக்கே கெட்ட பெயர். மகனின் கையை வெட்டுவதுதான் இவன் செய்த தீமைகளுக்கு எல்லாம் தக்க தண்டனை என்றார்கள் ஊர்ப் பெரியவர்கள்.

இளைஞனின் கால்களில் விழுந்த வணிகன், இனி என் வாழ்நாளில் யாரையும் ஏமாற்ற கனவில் கூட நினைக்கவே மாட்டேன். உன் தந்தையார்க்கும் உனக்கும் ஏற்பட்ட இழப்பைப் போல நான்கு மடங்குத் தொகை தருகிறேன். என்னை மன்னித்து விடு. என் மகனின் கையை வெட்டாதே என்று அழுது புலம்பினான். உள்ளம் இரங்கிய இளைஞன்,

இனியாவது நேர்மையாக நடந்து கொள். எங்கள் இழப்பிற்கு உரிய தொகை மட்டும் கொடு என்று சொல்லிவிட்டு அவன் கொடுத்த தொகையைப் பெற்றுக் கொண்டு ஊர் திரும்பினான் நம்ம புத்திச்சாலி இனியன்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *