“எங்கே கடவுள்?’ என்றான் சீடன்.
“எல்லா இடத்திலும் எல்லோரிடமும் எல்லாப் பொருள்களிலும் கடவுள் உள்ளார்’ என்றார் குரு.
சீடன் வீட்டுக்குச் சென்றான். வழியில் அவனை நோக்கி ஒரு யானை வந்தது.
“விலகிப் போ… விலகிப் போ… யானைக்கு மதம் பிடித்து இருக்கிறது’ என்று கத்தினான் யானைப்பாகன்.
“”கடவுள் எங்கும் உள்ளார் என்று குரு சொன்னார். அப்படியானால் இந்த யானைக்குள்ளும் அவர் இருப்பாரே” என்று சீடன் நினைத்தான்.
கடவுள் கருணையுள்ளவர் ஆயிற்றே! கடவுள் இருக்கும் இந்த யானை என்னை ஒன்றும் செய்யாது என்று எண்ணிய சீடன் அதே இடத்தில் அசையாமல் நின்றான்.
மதம் கொண்ட யானையோ அவனைத் தும்பிக்கையால் தூக்கி வீசியது. ஆனால் அதிர்ஷ்டவசமாக வைக்கோல் போர் மீது போய் விழுந்ததால் அடிபடாமல் உயிர் தப்பினான் அந்தச் சீடன்.
குருவும் பிற சீடர்களும் அவனது உதவிக்கு வந்தனர். சீடன் கோபத்துடன் எழுந்தான்.
“குருவே, கடவுள் எங்கும் இருக்கிறார் என்றீர்கள். ஆனால் இந்த யானை என்னைத் தூக்கி வீசியதைப் பார்த்தீர்களா? இந்த யானைக்குள் கடவுள் இல்லையா?’ என்றான்.
குரு சிரித்தார். பிறகு சொன்னார், “என் அருமைச் சீடனே, கடவுள் எங்கும்தான் இருக்கிறார். அவர் யானையிலும் இருக்கிறார். உன்னை விலகிப் போகச் சொன்ன யானைப்பாகனிலும் இருக்கிறார். பாகன் கூறியதை நீ ஏன் கேட்கவில்லை? மேலும் கடவுள் இந்த வைக்கோல் போரிலும் இருக்கிறார். அவர்தான் இப்போது உன்னைக் காப்பாற்றினார்.’
தவறை உணர்ந்த சீடன் தலை கவிழ்ந்தான்.
– கே.முருகேஸ்வரி (அக்டோபர் 2012)