கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: January 11, 2023
பார்வையிட்டோர்: 3,012 
 

சாவன்ன ஹாஜியார், சுபுஹு தொழுகைக்கு எழுந்தவர். தொழுது முடித்ததும், அவருக்கு ஒரு சாயா குடிக்கவேண்டும். இரவே ப்ளாஸ்க்கில் எப்போதும் சாயா போட்டு வைத்துவிட்டுத்தான் போயிருப்பாள் இன்னாசி. அதில் பாதி சூடு போயிருக்கும். மைக்ரோ ஓவனில் சுடவைத்து குடிக்கலாம். இருந்தாலும் புதுசா போட்டு குடிச்சா இந்த இளம் குளிர் நாளையில் சுகமாய் இருக்கும். பக்கத்தில் சாயா கடை ஏதுமில்லை. தெருவுக்குள் போகவேண்டும். அங்கே நைனா கடை திறந்திருக்கும். பள்ளிக்கு ஸுபுஹ் தொழுக போய் இருக்கவேண்டும். தொழுது விட்டு நைனா கடையிலே சாயா குடிச்சிட்டு வந்திருக்கலாம். பள்ளிக்கு போகும் அளவுக்கு உடம்புக்கு முடியவில்லை. அடிக்கடி வயதுக்குரிய பிரட்சினைகள். சக்கரை, ரெத்தக்கொதிப்பு எல்லாமே காலம் தவறாமே, நாற்பதுக்கு முன்னாடியே வந்துருச்சி. வியாபாரத்தை கவனித்துக்கொண்டு வேலை வெட்டி என்று அலைந்த 65 வயசுவரை எந்த தொந்தரவும் இல்லை. அதுக்கு பொறவு அல்லா ஒவ்வொரு சுவிட்ச்சா அணைக்க ஆரம்பிச்சுட்டான் என்று நினைத்துக்கொண்டார். இப்போ ஓய்வுனு வந்து பத்து வருஷம் ஆவுது. பிள்ளைகளிடமும், மருமக்களிடமும் வியாபாரங்களை ஒப்படைத்துவிட்டு சென்னையில் மகளின் குடும்பத்தோடுதான், மனைவியோடு இருந்தார். அப்போதுகூட இத்தனை உடல் பிரட்சினைகள் இல்லை.

ஐந்து வருசத்துக்கு முன்னாடி ஆமினாம்மா போய் சேந்துட்டா. மனைவியை ஆமினாம்மா என்றுதான் கல்யாணம் முடிந்த நாளிலிருந்து அழைப்பார். ஆமினாமா மவுத்துக்கு பொறவுதான் அத்தனை தொந்தரவும். மேலும் வயசானதினாலா? அல்லது ஆமினாமா இல்லாததாலயா?என்ற பட்டிமன்றம் எப்போதும் ஹாஜியாருக்குள் ஓடும். அவளுக்கு முன்னாடி நான் போயிருக்கவேண்டும் என்று எப்போதும் சொல்வார்.

ஓய்வு பெற்ற காலத்தில் ஊரோடு போய் விடவேண்டுமென்று சொன்னபோது, யாரும் சம்மதம் சொல்லவில்லை. ஆமினாம்மாவுக்கு என்று தனி அபிப்பிராயம் எப்போதும் இருந்ததில்லை. ஊரின் வழக்கப்படி மகளோடுதான் பெற்றோர் இருப்பார்கள். மலபார் மாப்பிள்ளைமார்களின் பெண் வீட்டிற்கு சென்று வாழும் பழக்கம்,தமிழகத்தின் தென்கோடி கடற்கரை கிராமத்திற்கு வந்ததின் காரணம் பலரும் பலவித மாக சொல்வார்கள்.

எப்படியோ இந்த பழக்கத்தில் பல நல்ல விஷயங்கள் உண்டு. முக்கியமாக மாமியார், மருமகள் சண்டை இருக்காது. மகளுக்கும், தாய்க்கும் சண்டை வந்தாலும், கணவனிடம் அந்த பிரச்சினை வராது. அனால் மற்ற சமூகத்தினர் இதை வீட்டோட மாப்பிள்ளையா என்று ஒரு கவுரவ பிரட்சினையாக பார்க்கிறார்கள். இது காலம் காலமாக இருந்துவரும் ஆணாதிக்க மனப்பான்மையாக இருக்கலாம்.

மணியை பார்த்தார் இப்போதுதான் ஆறு மணியாகிறது. இன்னாசி எட்டு மணிக்கு மேல்தான் வருவாள். சரி வேற வழியில்லை என்று ப்ளாஸ்க்கில் இருந்த சாயாவை ஒரு பீங்கான் கப்பில் ஊற்றி மைக்ரோ ஓவனில் வைத்து சூடாக்கினார். அப்போது அவரின் மொபைல் ஒலித்தது. காலையில் என்றால், பேங்காக்கில் இருக்கும் மகனாகத்தான் இருக்கும். அதை எடுத்து வருவதற்குள்,சாயா மைக்ரோ ஓவனில் பொங்கி வழிந்து எல்லாம் வெளியே சிந்திட்டது.

சாயா கிடைக்காத ஏமாற்றம், மகனிடம் பேசும்போது, வெளிப்படாமல் பேசினார். மகன்களுக்கோ, மகளுக்கோ இங்கே தனியாக ஊரில் போய் இருப்பது பிடிக்கவில்லை.

ஏன் வாப்பா இப்புடி தனியா கெடந்து கஷ்டப்படுரிய?சென்னையில இல்லாத வசதியா? ஒரு சுகக்கேடுனா, பக்கத்தில் நல்ல ஹாஸ்பிடல் இருக்காப்பா?ராம்னானட்ல கூட ஒழுங்கான ஹாஸ்பிடல் இல்ல, மதுரைக்கி போகணும். நீங்க சொல்றமாதிரி நாங்களும் குடும்பத்தோட வந்தா, புள்ளைங்க படிப்பு என்னாவுறது? அங்கே ஒரு உருப்படியான பள்ளிக்கூடம் இறிக்கிதா? என்றான் மூத்தமகன்.

நீயும், தம்பியும் இந்த ஊர் பள்ளிகுடத்துலதானே படுச்சிய? என்ன கெட்டுப்போயிட்டிய? என்றார் ஹாஜியார்.

”எங்க காலம் வேற. இப்போ இருக்குற போட்டி ஒலகத்துல ஜெயிக்கனும்னா புள்ளங்களுக்கு இண்டர்நேசனல் ஸ்டாண்டர்ட் படிப்பு அவசியம் வாப்பா” என்றான் மகன்.

“யாரோட, எதுக்கு போட்டி போட போறே?” ஒந்தம்பியும்தான் அமெரிக்கவுல பல லட்சம் சம்பாதிக்கிறான். நீயும் அங்கே நல்லாத்தான் சம்பாதிக்கிரே. பணம் மட்டும் போதுமாடா?

நா ஒங்க அளவுக்கு சம்பாதிக்கல. கொழும்புல, தெருவுல அரநாக்கயறு மொதகொண்டு வித்திருக்கேன். நாகூர் சந்தனக்கூட்டுல ஒரு காலத்துல சேமியா காஞ்சி வித்துருக்கேன். எங்க வாப்பா ஒங்க வாப்பா மாதிரி என்ன காலேஜ் வரைக்கி படிக்க வைக்கல. எட்டாவது முடிச்சதும் கள்ளத்தோணியிலே, கொழும்புக்கு போய், ஒங்க பெரியவாப்பாகடையிலே எடுபிடியாதான் சேர்ந்தேன். கிழே இருந்துதான் மேலவந்தேன். பணம் இல்லாதப்பவும் சரி, பணம் வந்தப்பவும் சரி நாங்க சந்தோசமாதான் இருந்தோம்.

இன்னக்கி நாம பல ஊர்ல,நாட்ல பங்களா, வெளிநாட்டு காருன்னு வாழுரமே,மனசுல சந்தோசம் இரிக்கிதா? சொல்லு. அன்னக்கி ஒரே குடும்பமா பெரியம்மா, சாச்சி, மாமா, மாமி ன்னு ஒன்னா இருந்தோம். இன்னக்கி ஒவ்வொருத்தர் ஒவ்வொரு ஊருல இருந்துக்குட்டு, போண்ல குடும்பம் நடத்துறோம். என்ன வாழ்க்கடா இது. நீங்க சொல்றத நான் கேட்கபோவதில்லே, நாஞ்சொல்றத நீங்க கேக்கப்போரதில்லே. அதனாலே அந்த பேச்ச உடு. எல்லோரும் நல்லா இருக்கியளா “ பானுவயும், புள்ளங்களையும் கேட்டதா சொல்லு. எப்ப ஊருக்கு வர்றீங்க” என்றார்.

“டிசம்பர்ல வர்றோம். எல்லார் வீட்டு கல்யாணத்தையும் அட்டன் பண்ணமாதிரி இருக்கும்” என்றான் மகன்.

“ஊருக்கு டிசம்பர்ல வற்றத சடங்காக்கிட்டீங்க. சிறப்பா வாங்க, அஸ்ஸலாமு அழைக்கும்” என்று முடித்துக்கொண்டார் ஹாஜியார்.

இப்போ சாயா குடிக்கணுமே? என்னசெய்யலாம். இன்னாசி வர்ற மட்டு காத்திட்டீக்க முடியாது. அவளுக்கு போன வாங்கிக்குடுத்தா, அதுல பேசதெரியாதுன்டு, வேணாமுன்னுட்டு போய்ட்டா.இப்போ கொழந்தங்க பொறக்கும்போதே போனோடோவே பொறக்குது. பேத்தி ராபியா மூணு வயசுதே ஆவுது. என்னேரமு போன்லதா. எப்புடியும் தெனம் ஒரு போன் போட்டுருவா.என்ன கண்ணுவாப்பா எப்ப மெட்ராசுக்கு வர்றியனு கேட்காத நாள் இல்லை. நீங்க இங்க வாங்கலேண்டா, அங்க செம போரு கன்னுவாப்பாங்குது.

சாயாக்கு வழி இல்லே இப்போ. என்னசெய்யலாம். சாயாகூட போடத்தேறியாமே இருந்துட்டோம். அவ அடுப்பாங்கரபக்கமே உடமாட்டா. அவளுக்கு முன்னாடி போயிருக்கனும். நா இல்லாட்டாலும் அவ சமாளிப்பா. அவ இல்லாம எனக்கு ஏதுமில்லே. என்ன புரிஞ்சிக்கிட்ட மனுசி அவ மட்டுந்தே. மனதுக்குள் புலம்பித்தீர்த்தார் ஹாஜியார்.

மகள் அப்போதே “இன்னாசி வந்து ஆக்கி வச்சிட்டு போயுருவா. உங்களுக்கு சாப்பாட்ட எடுத்துவைக்க கூட ஆள் இல்லே. இந்த வயசுலே எப்புடி தனியா இருப்பிய. தொணக்கி சுப்ரமணியன கூப்புட்டு இருக்கச்சொல்லுங்க. மனிதருக்கு நாலும் உண்டு. உங்க வயசுக்கு நீங்க தனியா கெடக்குறது புடிக்கல” என்று சொன்னாள்.

ஹாஜியார் கேட்கவில்லை. தனிமை வேண்டுமென்றுதான் வந்தார். சென்னையின் ஆரவாரம், அத்தனை பெரிய பங்களாவில் ஆளுக்கொரு ரூமில் அடைந்துகொண்டு, பேச்சுதுணைக்கு கூட ஆளில்லாமல் போரடித்தபோதுதான் ஊரோடு போய்விட நிணைத்தார். அதோடு தான் பார்த்துப் பார்த்து கட்டிய வீட்டில் வாழ ஆசைப்பட்டார்.

அந்த வீடுகட்டியதே, ஒரு கதை. அவர்களின் வீடு, அதாவது முன்பு சொன்னதுபோல், அந்த ஊர் வழக்கப்படி அவர் மனைவிக்கு கொடுக்கப்பட்ட வீடுதான் அவர் வீடு. அது தெருவுக்குள் இருந்த பாரம்பரியமான வீடு. ஆனால் அந்த ஊரில் வீடுகள் நெருக்கமாக கட்டி, தெருக்கள் சிறிய சந்துகலாக இருந்தது. பெரிய பழைய காலத்து வீடாக இருந்தபோதிலும், குறுகிய சந்துக்குள் இருந்தது.

ஒருமுறை மனைவியுடன் இலங்கையில் பேருவளை,சீனன்கோட்டை போன்ற ஊர்களுக்கு அவருடைய வியாபார நண்பர்களின் வீடுகளுக்கு போனார். அப்போது அவர்கள் வாழும் வீடுகளை பார்த்து, வாழ்ந்தால் இப்படி வீடுகளில் வாழவேண்டும் என்று அன்று எடுத்தமுடிவு. பெரிய தோட்டங்களுக்கு நடுவில் அழகிய வீடுகள். தோட்டத்தில் பலவித மரம் செடிகளோடு இயற்கைக்கு நெருக்கத்தில் வாழ்ந்தது அவர் மனதை தொட்டது. மனைவியிடம் “ஆமினாம்மா இதமாதறி ஒரு ஊடு நம்மூர்ல கட்டுறோம் என்ன?” என்றார்.ஆமினாம்மா இந்தமாதிரி தோட்டம்தொரவோட, வூடுகட்ட நம்மதேருவுலே, எடம் எங்க இரிக்கிது”என்றார் ஆமினாம்மா.

அந்த குண்டு சட்டிக்குள்ளதான் கட்டனுமா? நாம தோட்டகாட்டுல எடம்வாங்கி, இதுமாதிரி கட்டுவோம். அங்குட்டு எடத்துட வெலையும் அத்தன இருக்காது என்றார்.

பின்னர் ஊர்வந்ததும் ஹாஜியாரும், ஆமினாம்மாவும் இதற்காகவே ஊர்வந்து ஆறு மாதம் தங்கி இந்த வீட்டை பார்த்து பார்த்து கட்டினார்கள். பழையவீட்டில் தங்கிக்கொண்டு, சமையலை ஒன்பது மணிக்கெல்லாம் முடித்துவைத்துவிட்டு, ஆமினாம்மாவும் அவரோடு கிளம்பிவிடுவார். தெருவிலிருந்து, இரண்டு கிலோமீட்டர் தூரம்தான் இருந்தது. சின்ன மாயகுலம் போறவழியில இருந்த அந்த தோப்பை, சோட்டையனிடமிருந்து, ஐம்பதினாயிரத்துக்கு வாங்கி இருந்தார்கள்.

சோட்டையன், ஹாஜியாருக்கு பலவருட பழக்கமுள்ளவன். பள்ளிப்பருவம் முதல் தெரியும். அவருக்கு இரண்டுவகுப்பு, பின்னால் படித்துக்கொண்டிருந்தான். அவன் பின்னாளில் பால்வியாபாரம் செய்துவந்தான். ஹாஜியார் குடும்பம் ஊரில் இருக்கும் காலத்தில் அவன்தான் பாலூத்திக்கொண்டிருந்தான். அவனுடம் பத்துக்கு மேற்பட்ட பசுக்களும், எருமைகளும் இருந்தன.எல்லாவற்றையும் விற்றுவிட்டு சென்னைக்கு போகப்போவதாக சொன்னான். மகன் கல்பாக்கத்தில் என்ஜினீயராக இருக்கானாம். இன்னும் ஏன் ஊருல கெடந்து கஷ்டப்படுறீங்க என்று அம்மா, அப்பா ரெண்டுபேரையும் கூப்பிட்டிருக்கிறான். பொண்டாட்டி காமாட்சிக்கும் சரியான சுகமில்லை. சரின்னு நிலபுலன் மாடுகள் எல்லாத்தையும் வித்துப்புட்டு கெளம்ப நினைத்தபோது, தோட்டக்காட்டை வாங்க யாருமில்லை. ஊருக்குள்ளே இருந்தா டிமாண்டே வேற.

அப்போதான் ஊருக்கு வந்திருந்த ஹாஜியாரிடம் சொன்னான். ஹாஜியரும் உடனே கிளம்பி விட்டார். தெருவைவிட்டு தள்ளி இருந்தாலும், அவருடைய “ சீனன்கோட்டை கனவு வீட்டிற்கு” தோதான இடமாகப்பட்டது. தோப்பில் இருபது, முப்பது தென்னை இருந்தது.

அங்குபோவதர்க்கு குறுகிய மண் சாலையே இருந்தது. சோட்டையனின் தோப்பை சுற்றிலும் வெறும் கருவேலமரக்காடுதான். தூரத்தில் இருக்கும் தோப்புகளை காண்பித்து, ”அது நானாமூனா முதலாளி தோப்பு,அதுக்கடுத்தது மொய்தீன் காக்கா தோப்பு “என்றான் சொட்டையன்.

“நம்ம கெனத்துல தண்ணீ வத்துனதே கெடையாது. ஒரு ஐஞ்சு பவரு மோட்டார் வச்சியன்னா போதும் இன்னும் நூறு தென்னை வைக்கலாம்” என்றான், அவரின் கனவுவீடுபற்றி தெரியாமல்.

ஹாஜியார் தன் கனவு வீட்டை அந்த தோப்பில், மனதில் கட்டிப்பார்த்துக்கொண்டிருந்தார். ஒரு ஏக்கருக்கும் அதிகமான பூமி. நடுவுல இருபத்தஞ்சி கோலுல (கோல் =75 சதுர அடி ), ஊட்ட கட்டனும். தென்ன மட்டுந்தே இரிக்கிது. மா, புளி, வேப்பை, பூவரசுன்னு, அடர்ந்து இருக்கும் மரங்கள் ஆங்காங்கே வைக்கணும். பாரதி கண்டதுபோல், காணி நிலத்தில் மாளிகை கட்டினார் மனதுக்குள்..

“நான் தென்னந்தோப்புக்காக வாங்க நினைக்கலப்பா. வீடு கட்டப்போறேன்” என்றார் ஹாஜியார். ”என்ன ஊடா? இது தோட்டக்காடு காக்கா. இங்க பக்கத்துல மனுஷ மக்க கிடையாது. எங்க ஊரு நெருக்கமா இருந்தாலும் அதுவும் தூரம்தான்.எங்கூர்ல ஒங்க ஆட்கள் இல்லே” என்றான் சோட்டையன்.

சோட்டையா, இந்த மாதிரி இடத்துல இயற்கையோட வீடுகட்டி வாழணும்னு எனக்கு ரெம்பநாள் ஹாஜத்து. கொழும்புல எப்புடி இயற்கையோட ஊடு கட்டி வாழறாங்க தெரியுமா? வெறுமனே பணம் காச வச்சிக்கிட்டு, குண்டுச்சட்டிக்குள்ள ஊடிகட்டி ஏண்டா வாழனும். கொஞ்ச நாள்ல என்னப்பாத்து எல்லோரும் இங்க வீடுகட்டவருவானுங்க பாரு “ என்றார்.

ஹாஜியார் தள்ளிபோட விரும்பவில்லை. அங்கேயே விலை பேசப்பட்டது. “ஒரு லட்சத்துக்கு போகும்னு என் மச்சினன் சோன்னான்” என்றான் சோட்டையன்.

இங்கே பார் சோட்டையா, ஒவ்வொருத்தன் ஒவ்வொன்னு சொல்லுவான். இப்போதைக்கு இந்த இடம் யாரும் வாங்கக்கூடியதில்லே.விவசாயம் லாபமில்லே. தென்னையிலே காய்ப்பு கொரஞ்சுபோச்சு. இன்னும் சில வருசம்போன ஒரு லட்சத்துக்கு மேல்கூட போகும். அனால் முதல்ல யாரவது வீட்டுமனைக்கு வாங்கி வீடு கட்டனும். அப்புறம் உன் மச்சினன் சொல்ற விலையவிட மேலபோகும்.இப்ப உள்ள நிலைய பேசு,ப்ரோக்கர் வேண்டாம் நமக்குள்ள பேசி முடிச்சிருவோம் “ என்றார்.

“காக்கா உங்கட்ட என்ன பேச. ஐம்பதாயிரம் கொடுந்துருங்க. என் மச்சினனுக்கு எதாவது தரகு கொடுத்துருங்க. அவன்தான் ஒருவருசத்துக்கு மேல விக்க அலஞ்சிக்கிட்டீக்றான்” என்றான் சோட்டையன்.

ஹாஜியாருக்கு, சொட்டையன் பேச்சு பிடித்திருந்தது. மறுபேச்சில்லாமல், இடுப்பிலிருந்த வாரின் ஜோபிலிருந்து,ஐந்து நூறு ரூபாய் நோட்டுகளை எடுத்து அச்சாரம் கொடுத்தார்.. .

அடுத்த வாரமே பத்திரப்பதிவு செய்யப்பட்டது. சோட்டையனுக்கு பணம் செட்டில் செய்யப்பட்டது. சோட்டையனும் சென்னையில் தன் மகனுடன் குடி பெயர்ந்து விட்டான். அடுத்த வாரமே ஹாஜியாரும் வீடு கட்டும் வேலையை ஆரம்பித்து விட்டார். அதற்கு தோதான ஒரு மேஸ்திரியை ஏற்பாடு செய்தார். ஆறுமுகம் என்ற மேஸ்திரி நாணயமானவராக இருந்தார். ஹாஜியார் சொல்லும் யோசனைகளை நன்றாக உள்வாங்கிக் கொண்டு ஹாஜியாரின் விருப்பம் போல் வீட்டிற்கு பிளான் அமைத்தார். ஹாஜியார் சீனங்கோட்டையில் பார்த்த வீடுகளில் பிளான்களை மனதில் நிறுத்தி சொல்லச் சொல்ல அதுவே ஆறுமுகம் பிளானாக வடித்தார். ஆமினாம்மாவும் சில மாற்றங்களையும், யோசனைகளையும் சொன்னார் அவை பொதுவாக அடுப்பங்கரை குளியலறை மற்றும் கொல்லைப்பகுதி பற்றியதாக இருந்தது.

மதுரையில் இருந்த ஹாஜியாருக்கு தெரிந்த ஜமால் இன்ஜினியர் ஒருவருக்கு அனுப்பி அதில் இன்டீரியர் எக்ஸ்டிரியர் எலிவேஷன்களை சரி செய்து பக்கா பிளான் ஒன்று வரவழைத்தார் ஹாஜியார்.

பைனல் பிளான் ஹாஜியாருக்கும் ஆமினா மாவுக்கு மிகவும் திருப்தியாக இருந்தது. தினமும் அதை பார்த்து கற்பனையில் மூழ்கி விடுவார் வாத்தியார்.

ஒரு சில நாட்களிலேயே ஆறுமுகம் வேலையை தொடங்கி விட்டார்.கற்களும், மண்ணும், சிமெண்டு மூட்டைகளும், இரும்பு கம்பிகளும், வந்து இறங்கிக் கொண்டிருந்தன வேலைகள் வெகு சுறுசுறுப்பாக நடந்தது.வேலைகள் வெகுவேகமாக நடந்தது.

டிசம்பரில் குடியேறிவிடவேண்டும் என்ற திட்டத்தோடு வேலைகள் நடந்தது. டிசம்பர் என்றால் அது ஒரு திருவிழாகாலம் போன்றது. அதுதான் கல்யாணம் மற்றும் சுபகாரியங்கள் நடக்கும் காலம். உலகம் முழுவதிலிருந்தும் ஊர்மக்கள் ஒன்றுகூடி உறவுகள் சந்தித்துக் கொள்ளும் காலம்.

இந்த வருட டிசம்பரில் மூத்த மகன் பேங்க்காக்கில் இருந்தும், இளைய மகன் அமெரிக்காவிலிருந்தும், வருவதாக சொல்லி இருந்தார்கள் மகள் கட்டாயம் குடும்பத்துடன் ஒவ்வொரு வருடம் டிசம்பரில் ஊர் வந்து விடுவாள். ஆகவே எல்லோரும் இருக்கும் அந்த காலத்தில் வாழ்நாள் கனவு வீட்டில் குடியேற முடிவு செய்திருந்தார். டிசம்பருக்கு இன்னும் மூன்று மாதங்கள் தான் இருந்தது. எத்தனை பெரிய வீட்டை அதற்குள் கட்டி முடிக்க முடியுமா என்ற பிரமிப்பு அவருக்கும் இருந்தது ஆறுமுகம் மேஸ்திரிக்கும் இருந்தது.

காலையிலேயே ஹாஜியாரும் ஆமினாமாவும் தோட்டத்துக்குப் போய் விடுவார்கள். அங்கு ஒரு சிறிய குடிசை போடப்பட்டிருந்தது அதில் தங்கி பகல் முழுவதும் வீடு கட்டும் வேலைகளை கவனித்துக் கொண்டு ஓய்வு எடுப்பார்கள் பிளாஸ்க்களில் எல்லோருக்கும் தேநீர் எடுத்துக் கொண்டு வருவார்கள். பகல் உணவு வீட்டில் சமைத்துக் கொண்டு இன்னாசி எடுத்துக்கொண்டு வருவாள்.

இன்னாசி பன்னாட்டார் தெருவை சேர்ந்தவள் வீட்டு வேலைகள் செய்வதற்காக அவளை அமர்த்தி இருந்தார்கள். சிறுவயதிலிருந்தே ஆமினாமா வீட்டில் வளர்ந்தவள்தான் இன்னாசி.. அவளும் ஒரு வீட்டு மனுஷியை போல்தான். ஆமினாம்மாவின் வாப்பா அவளுக்கு திருமணம் செய்து வைத்தார். திருமணத்திற்கு பின் அவள் கணவன் மற்றும் அவர்கள் குழந்தைகளுடன் பன்னாட்டு தெருவில் வாழ்ந்து வருகிறாள். ஆனால் காலையிலேயே ஆமினாம்மா வீட்டிற்கு வேலைக்கு வந்து விடுவாள் வேலை முடிந்து குழந்தைகளுக்கும் உணவை எடுத்துக் கொண்டு வீட்டுக்கு போய் விடுவாள். இந்த நடைமுறை தொடர்ந்து நடந்து வந்தது. அவள் கணவன் அந்தோணி கப்பலில் வேலை செய்ய போய்விட்டான். குழந்தைகளோடு அவள் ஊரிலேயே தங்கி விட்டாள் ஆமினாம்மாவின் குடும்பம் குடும்பம் மகளின் திருமணத்திற்கு பிறகு சென்னையில் பெரிய வீடு கட்டி குடி போனதும், அவளுக்கு வேலையில்லாமல் போனது.

இப்போது ஹாஜியார் ஊர் வந்ததும் அவருக்கு சமையல் செய்யவும் மற்றும் வீட்டு வேலைகளுக்கும் அவள் உதவியாக இருந்தாள். ஆனால் தோட்டக்காட்டில் வீடு கட்டி குடிவந்த பிறகு அவளுக்கு பன்னாட்டு தெருவில் இருந்து அங்கு வந்து போவது கொஞ்சம் சிரமமாகத்தான் இருந்தது. ஆனால் அமீனாம்மா, ஹாஜியார் ஆகியோர் மேல் இருந்த பிரியத்தின் காரணமாக அவளால் மறுக்க முடியவில்லை. அவள் தன் பெற்றோருக்கு செய்யும் கடமையாக நினைத்து அதை ஏற்றுக்கொண்டாள்.

சரி எப்படியும் சாயா உடனே குடித்தாக வேண்டும் கடை வரை போய் பார்ப்போம் என்று கிளம்பினார். நைனா கடையை நோக்கி போனார் தோட்டக்காடுகளை கடந்து தெருவுக்குள் வருவதற்குள் அவருக்கு மூச்சு வாங்கியது. இன்னும் அது மண்’ சாலைதான். மழை காலத்தில் நடக்கமுடியாது. பஞ்சாயத்து போர்டு இதெல்லாம் செய்யாது. நாம்தான் தார் ரோடோ, சிமின்ட்’ரோடோ போடவேண்டும் என்று எண்ணிக்கொண்டார். நடந்து வந்தது மூச்சு வாங்கியது. காலை நடப்பயிர்சியை விட்டு இப்போது ஒருவருடத்துக்கு மேலாகிவிட்டது. இன்சா அல்லாஹ்,.அதை தொடரவேண்டும் என்று எண்ணிக்கொண்டார். எங்காவது சிறிது உட்காரலாம் என்றால் வசதியாக ஒரு கல்கூட இல்லை. .

அப்போது தோட்டக்காட்டு முடிவில் ஒரு குடிசையை பார்த்தார். வீடு கட்டிய காலத்திலிருந்து அந்த குடிசையை பார்க்கிறார். ஆனால் அதுபற்றி எண்ணியதில்லை.. யார் இங்குவந்து குடிசை போட்டிருப்பது என்று யோசித்துப்பார்ததுகூட இல்லை.

அப்போது குடிசையிலிருந்து காக்கா என்று ஒரு பெண்ணின் அழைப்பு அவரை திருப்பிப் பார்க்க வைத்தது. குடிசையில் இருந்த சிறிய ஜன்னல் வழியாக ஒரு பெண் அவரை அழைப்பது தெரிந்து அருகில் சென்று பார்த்தார். அது அவர் சிறு வயது தோழி மைமூனா என்பது தெரிந்தது

வீட்டு வேலி கதவை திறந்து கொண்டு ஜன்னல் அருகில் போனார்\. அருகில் சென்றதும் அது மைமூனா என்று தெரிந்தது..

சாவன்னா காக்கா சுகமா இருக்கியளா? என்று மைமூனா கேட்டாள்.

நல்லா இருக்கிறேன் நீ நல்லா இருக்கியா? என்று கேட்டார் ஹாஜியார். மாப்பிள்ளை எங்கே? என்று கேட்டார்.

“அவ்வோ கடலுக்கு போய் இருக்காக. பகலைக்கு பொறவு வருவாக. ஆமா நீங்க எங்க போறீய? நீங்க இங்க வீடு கட்டி இருக்கிறது தெரியும். ஆனா மெட்ராஸ்ல போய் புள்ளைகயோட இருக்கிறதா கேள்விப்பட்டேன். எப்ப வந்திய “என்று கேட்டாள்.

நான் வந்து ஒரு வாரம் ஆகுது. இங்கே இந்த தோட்ட பங்களாவுல தங்க முடிவெடுத்துட்டேன் என்றார்

சாபாட்டுக்கு என்ன செய்றிய? என்று கேட்டாள்..

“இன்னாசி வந்து ஆக்கி வச்சுட்டு போய்டுவா” என்றார்

“இருந்தாலும் நீங்க தனியா இரிக்கிறது சரியில்ல” என்றாள் மைமூனா

“ஆமினா போன பிறகு தனியா இருக்க பழகிட்டேன்.. எனக்கு படிக்கிற பழக்கம் இருக்கிது அதனால தனிமை எனக்கு பெரிய விஷயம் இல்ல” என்றார்.

இருந்தாலும், இந்த வயசுல ஒரு சுகவீனத்துக்கு, உதவிக்கு, ஆள் தேவை இல்லையா என்று கேட்டாள்.

உதவிக்கு தான் இன்னாசி வந்து போறாளே. அது போதும் என்றார்..

இப்ப எங்க போறீங்க என்று கேட்டாள் மைமூனா.

நைனா கடைக்கி சாயா குடிக்கப்போறேன் என்றார்.

ஒரு சாயாக்காக அவ்வளவு தூரம் போகணுமா? நான் தாறேன் உட்காருங்க என்று சொல்லிவிட்டு’. உள்ளே மறைந்தாள்.

ஹாஜியார் பதிலேதும் சொல்லாமல், பூவரச மரத்துக்கு கீழே இருந்த கல் பெஞ்சில் உட்கார்ந்தார்.

அந்த காலைநேரத்தில் பூவரச மரத்தின் மஞ்சள் பூக்களின் வாசத்தோடு வந்த காலைநேர குளிர் காற்று அவருக்கு வீட்டில் ஏசியில் கிட்டாத சுகத்தை தந்தது.. அத்தனை ரம்யமான வாசனை இல்லாத அந்த பூக்களின் வாசனை அந்த சூழலுக்கு இனிமைகூட்டியது. இளமைக்காலத்தில் பூவரசமரத்தில் விளையாடிய ஒன்னாங்கிளி ஆட்டம் நினைவுக்கு வந்தது.

அந்த நாட்கள் எத்தனை இனிமையானவை. அந்த ஆரம்பப்பள்ளி, அருகே இருந்த மண்குளம், கல்குளம், அதோடு இருந்த பெரிய புளியமரம், அதை ஒட்டிய பாட்டனாரின் நீண்ட கிட்டங்கி, குலங்களின் நன்குபக்கங்களிளிலும் பெரிதாக வளர்ந்து கிடந்த ஆலமரங்கள்,இடை இடையே இருந்த வேப்பமரங்கள், அவற்றிற்கிடையே கிழக்குப்பக்கம் இருந்த அந்த பூவரசமரம். ஹாஜியாருக்கு பிடித்தது அந்த பூவரசமரம்தான். காரணம் அவர் ஏறும் அளவுக்கு வசதியாகவும் சிறியதாகவும் இருக்கும்.

அங்குதான் நண்பர்களுடன் ஒன்னாங்கிளி விளையாட்டு வில்லையாடுவார். அன்றைய பள்ளித்தொழர்கள் நூர், காசிம் போன்றவர்களோடு, மைமூனா, ஆசியா போன்ற பெண் பிள்ளைகளும் இருந்தார்கள். அந்த வயதில் ஆண் பெண் வித்தியாசமில்லை. கஷ்டம், துன்பம், துயரம் என்றால் அறியாத பருவம்.

அப்படியே வாழ்க்கை தொடர்ந்திருக்கக்கூடாதா?

மைமூனா தெருவில் செல்வச்செழிப்பான பாரம்பரியமான குடும்பத்துப்பிள்ளை. அவளுடைய பாட்டனார் பெரும் செல்வந்தர். அவருக்கு சொந்தமாக பெரிய மீன் பிடிக்கும் தோணிகளும், பெரிய பாய்மரக்கப்பல்களும் இருந்தன. அவை’,மலபார கடற்கரைகளுக்கும், இலங்கை கடற்கரைகளுக்கும் சரக்குகள் கொண்டுபோய் வரும். ரமலானில் பித்தரா வாங்க பெரும் கூட்டம் அவர்கள் வீட்டில் கூடும். வெளி ஊரிலிருந்தெல்லாம் அந்த பித்தராவை வாங்க வருவார்கள். ஊரில் பல பணக்காரர்கள் பித்தரா கொடுப்பார்கள் என்றாலும். அதிகமாக கொடுப்பது மைமூனாவின் பாட்டனாராகத்தான் இரூக்கும். குறைந்தது ஒருவருக்கு ஒரு ரூபாய் கொடுப்பார். அது தங்கம் பவுன்’ 10 ரூபாயிக்கு விற்றகாலம்.

மைமூனா பள்ளிக்கே பட்டுப்பாவடையுடந்தான் வருவாள். படிப்பிலும் கெட்டிக்காரியாக இருந்தாள்.வகுப்பில் மார்க்கு வாங்குவதில் அவளுக்கும், சாவன்னாவுக்கும்தான் போட்டி. அதிகமாக மைமூனதான் முதல் மார்க் வாங்குவாள்.அவள் கணக்கில் மட்டும் சற்று குறைந்த மதிப்பெண் வாங்குவாள். சாவன்ன கணக்கில் புலி. மைமூனா வீட்டிலும் செல்லமாகத்தான் வளர்ந்தாள்.

காலம்தான் எப்படியெல்லாம் மாறிவிட்டது. மைமூனாவின் பாட்டனாரின் மறைவுக்குப்பிறகு, அவளுடைய மாமாக்கள் கட்டுப்பாடிற்குள், அவர்கள் வணிகமும், குடும்பமும் வந்தது..

மாமாமார்கள் இருவரும், நாள்முழுவதும் அவர்கள் தோப்புகளில், நண்பர்களுடன் சூதாட்டத்தில் இருந்தார்கள்.. மூத்த மாமா சூதாட்டத்தில் தோற்ற வகையில் ஏற்பட்ட கடனுக்காக அந்த தோப்பையே கீச்சீ மூச்சி செட்டியாருக்கு எழுதிக்கொடுத்தார். அடுத்தவர் இன்னொரு பெரிய தென்னந்தோப்பை விற்று சூதாட்டத்தில் விட்டார். ஒவ்வொன்றாக போய், சரியாக கவனிக்காமல் கடல் தொழில்களும் நஷ்டப்பட்டு கைவிட்டு போய்விட்டன.

பரம்பரை சொத்துக்களும், தொழில்களும், தொலைந்தபிறகு, அவர்களுடைய வணிகத்தில் மேற்பார்வை செய்துகொண்டிருந்த மைமூனாவின் தந்தையும் கடல் தொழிலுக்கு போகவேண்டியதானது. பிறகு எல்லாம் தலைகீழ்தான்..

காலம்தான் எப்படி மாறிவிட்டது. பள்ளிப்பருவத்தில் பார்த்த அவர்கள் இப்போதுதான் பார்த்துக்கொள்கிறார்கள். ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக ஆன பின்னும் ஒருவரை ஒருவர் அடையாளம் தெரிந்துகொண்டார்கள். இடையில் மைமூனா வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றங்களை ஹாஜியார். கேள்விப்பட்டுக்கொண்டுதான் இருப்பார். சிறு வயது தோழியின் குடும்பம் வறுமையில் இருப்பதை அறிந்து வருத்தப்படுவார்..

உயர்நிலை பள்ளி படிப்புக்கு மதராசுக்கு போனபிறகு, மைமூனாவின் நட்பும் தொடராமல் போனது. இடையில் ஒருமுறை ஊர்வரும்போது, மைமூனாவின் வீட்டுப்பக்கம் போனார். அவர்கள் வீடு ஹாஜியாரின் வீட்டுப்பக்கம்தான் இருந்தது. அது இப்போது பூட்டிக்கிடந்ததை பார்த்து,அப்போது உடன் வந்த நஜீம். ” அவங்க வீட்ட வித்துட்டு, வேற எங்கையோ பிட்டங்க என்று சொன்னான்.

பிறகு மைமூனா பற்றி அதிகம் தெரியவில்லை. அவளுக்கு கல்யாணம் நடந்தது பற்றி கேள்விப்பட்டார். கணவர் சங்கு குளிகாரர் என்றும் கேள்விப்பட்டார்.

பெரிய பணக்கார குடும்பத்தில் பிறந்து, ஒரு இளவரசிபோல் வாழ்ந்து, இப்போது இந்த ஏழ்மையில் வாழ்வதைப்பார்த்து வேதனைப்பட்டார்..

என்ன காக்கா என்ன யோசனை. முதல்ல சாயா குடிங்க, பொறவு யோசிக்கலாம் என்று சொல்லிக்கொண்டு, ஜன்னணலில் சாயா கோப்பையுடன் நின்றிருந்தாள்,மைமூனா.

ஹாஜியார் எழுந்துபோய் சாயாவை வாங்கிக்கொண்டு வந்து திரும்பவும் பூவரச மரத்தடியில் கல்பெஞ்சில் அமர்ந்து குடிக்க ஆரம்பித்தார்.

“சாயா எப்படி இரிக்குது” என்றாள் மைமூனா?

அருமை. ரொம்ப நாளைக்கப்புறம் நல்ல சாயா குடிக்கிறேன் இப்போ. நல்ல சாய கிடக்கிறது அபூர்வம். ஒன்னு டிகாசன் நிறைய போட்டு கசாயம்போல் இருக்கும், இல்லாட்டா பால அதிகம் ஊத்தி தேயிலை மனமே இல்லாமல் இருக்கும். இப்படி தேயில மனத்தொட அளவான ஒரு சாயா அதுவும் திக்கா போடுவது சிலருக்குத்தான் வரும். இந்த காலைநேரத்துல இது கிடைச்சது என் பாக்கியம், அல்ஹம்துலில்லாஹ் என்றார் ஹாஜியார்.

அப்போ தினமும் இங்க சாயாகுடிக்க வந்துருங்க என்றாள் மைமூனா..

“நிச்சயம் வருகிறேன் தோழி” என்றார் ஹாஜியார்.

நல்ல தேநீர் மட்டுமல்ல, நல்ல தோழியும் திரும்பக்கிடைத்த சந்தோசத்தில்…

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *