மதியழகனும் பூதமும்

3
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு:  
கதைப்பதிவு: January 19, 2012
பார்வையிட்டோர்: 10,467 
 

முன்னொரு காலத்தில் வீரபாண்டியபுரம் என்ற நாட்டில் மதியழகன் என்ற இளைஞன் இருந்தான். உடல் அளவில் பலசாலி இல்லை என்றாலும் புத்திசாலியான அவன் வேடிக்கையானவன், வினோதமான செயல்களை செய்வான். அவன் என்ன செய்கிறான் என்பது நிறைய பேருக்கு புரியாது.

அந்த ஊரின் எல்லையில் இருந்த அடர்ந்த காட்டில் திடிரென்று ஒரு பெரிய பூதம் வந்தது, அது நரமாமிசம் சாப்பிடும் பூதம், அங்கே காட்டுவழியாக செல்பவர்களை பிடித்து சாப்பிடத் தொடங்கியது. அப்படி யாரும் கிடைக்கவில்லை என்றால் ஊரின் எல்லைக்குள் இருக்கும் கிராமத்தில் புகுந்து ஆட்களை சாப்பிடத் தொடங்கியது. வியாபாரம் செய்யவோ, மற்றும் உறவினர்களை சந்திக்க வேற ஊர்களுக்கு செல்ல முடியாத நிலை ஏற்ப்பட்டது.

http://www.gifandgif.eu/animated_gif…20%2816%29.gif

அரசரும் பூதத்தை கொல்ல எத்தனையோ வீரர்களை அனுப்பினார், யாரும் உயிரோடு திரும்பவில்லை. அந்நிலையில் அரசர் ஒரு அறிவிப்பு செய்தார் “யார் அந்த பூதத்தை கொன்று, அதன் நகங்களை கொண்டு வருகிறார்களோ அந்த வீரனுக்கு தன் மகள் எழிழரசியை திருமணம் செய்து வைத்து, தனக்கு பின்னர் அந்த நாட்டின் அரசராக்கவும் முடிவு செய்துள்ளேன்”.

அதன் பின்னர் நிறைய பேர் காட்டிற்கு சென்றார்கள், ஆனால் யாருமே உயிரோடு திரும்பவில்லை.

அறிவிப்பு கேட்டு சில நாட்களுக்குப் பின்னர் மதியழகன் கடைக்குச் சென்று ஒரு கட்டி வெண்ணெய் வாங்கினான். அதைத் தன் மேசையின் மேல் வைத்தான். நான்கு நாட்கள் சென்றன. அந்த வெண்ணெயைப் பார்த்தான் அவன். அது நிறைய ஈக்கள் இருந்தன.

ஒரு பலகையை எடுத்து அந்த வெண்ணெயில் ஓங்கி அடித்தான். நிறைய ஈக்கள் செத்தன. ஏராளமான ஈக்கள் துடிதுடித்தன. அவற்ளை எண்ணினான் அவன். இறந்த ஈக்களின் எண்ணிக்கை இருநூறாக இருந்தது. அடிபட்டவற்றின் எண்ணிக்கை முந்நூறாக இருந்தது.

மதியழகனுக்கு மகிழ்ச்சி தாங்க முடியவில்லை. கடைத் தெருவிற்குச் சென்ற அவன் வீரர்கள் அணியும் சீருடை வாங்கினான்.

அதை அணிந்து கொண்டு கம்பீரமாகத் தலை நகரத்துக்குச் சென்றான்.

அரசவைக்குள் நுழைந்த அவன், அரசர் பெருமானே! என்னை நானே அறிமுகம் செய்து கொள்கிறேன். என் பெயர் மதியழகன், நான் சிறந்த வீரன். சில நாட்களுக்கு முன் நிகழ்ந்த போரில் நான் ஒருவனே இருநூறு பேரைக் கொன்றேன். முந்நூறு பேரைக் காயப் படுத்தினேன், என்றான்.
http://upload.wikimedia.org/wikipedi…s_and_Flip.jpg

அவனை மேலும் கீழும் பார்த்தார் அரசர். உன்னைப் பார்த்தால் வீரனைப் போலத் தெரியவில்லை. தோற்றத்தை வைத்து முடிவுக்கு வரக் கூடாது. உன்னால் எனக்கு ஒரு வேலை ஆக வேண்டும், என்றார்.

கட்டளை இடுங்கள் அரசே! இந்த வாளும் என் உயிரும் இனி உங்களுடையது, என்று வீரமாகப் பேசினான் மதியழகன். எப்படியாவது அரசரிடம் வேலை வாங்கி விட வேண்டும் என்பது அவனது எண்ணம்.

வீரனே! தலைநகரை அடுத்து உள்ள காட்டில் ஒரு பூதம் உள்ளது அது அவ்வப்பொழுது நாட்டிற்குள் நுழைந்து மனிதர்களைத் தூக்கிச் சென்று சாப்பிடுகிறது. எத்தனையோவீரர்கள் அதைக் கொல்லப் புறப்பட்டார்கள். யாருமே உயிருடன் திரும்பவில்லை. இந்த நாட்டு மக்கள் எல்லோரும் அஞ்சி அஞ்சி வாழ்கிறார்கள், என்றார் அரசர்.

அரசர் சொன்னதை கேட்டதும் மதியழகனுக்கு உள்ளுக்குள் பயம் தோன்றியது, வேலைத் தேடி வந்தால் இவர் நம்ம உயிருக்கே உலை வைக்கிறாரே, என்ன செய்யலாம் என்று யோசித்தான், பின்னர் தைரியமாக “அரசே என் வீரத்திற்கு இதைப் போன்ற பெரிய வேலையைத்தான் எதிர்பார்த்தேன். நான் அந்தப் பூதத்தை கொன்று அதன் நகங்களை கொண்டு வருகிறேன். பரிசாக எனக்கு இளவரசியைத் திருமணம் செய்து வைப்பீர்களா?” என்று கேட்டான் மதியழகன்.

“யாராலும் செய்ய இயலாத செயல் இது. நீ சொன்னபடி செய்து முடித்தால் இளவரசியை உனக்குத் திருமணம் செய்து வைக்கிறேன்”, என்றார் அரசர்.

நான் அந்தப் பூதத்தைக் கொன்றுவிட்டு வருகிறேன், என்று சொல்லிவிட்டுக் கையில் பிடித்த வாளுடன் காட்டிற்குள் நுழைந்தான் அவன்.

எவ்வளவு பெரிய கூர்மையான வாளும் பூதத்தை ஒன்றும் செய்ய முடியாது. எவ்வளவு வேகமாக வலிமையாக வெட்டினாலும் அதற்குச் சிறு காயம்தான் ஏற்படும், என்பதும் அவனுக்குப் புரிந்தது.

தன் கையில் இருந்த வெண்ணெயை மாவில் உருட்டிப் பந்து போலச் செய்து கொண்டான் அவன். பார்ப்பதற்கு அது உருண்டையான கூழாங்கல் போல இருந்தது. அதைத் தன் சட்டைப் பைக்குள் வைத்துக் கொண்டான்.

குருவி ஒன்றைப் பிடித்த அவன் அதையும் தன் பைக்குள் வைத்துக் கொண்டான். அருகே இருந்த பெரிய மரம் ஒன்றில் ஏறி அமர்ந்து கொண்டான்.

சிறிது நேரத்தில் பெரிய பூதம் ஒன்று அங்கே வந்தது. மூக்கை உறிஞ்சிய அது, இன்று எனக்கு நல்ல வேட்டை, மனித வாடை வீசுகிறதே! எங்கே இருக்கிறாய்? என்னிடம் இருந்து தப்ப முடியாது, என்று மகிழ்ச்சியுடன் கத்தியது.

தன் நடுக்கத்தை மறைத்துக் கொண்ட அவன், ஏ! பூதமே! என்னையா தேடுகிறாய்? நான் இந்த மரத்தை விட்டுக் கீழே இறங்கினால் என்ன நடக்கும் தெரியுமா? இந்த உலகத்திலேயே நான் தான் வலிமையானவன். சென்ற வாரம் கூட ஒரே அடியில் இருநூறு பேரை கொன்று முந்நூறு பேரைக் காயப் படுத்தினேன். உன்னைவிட நான் வலிமையானவன். என் ஒரு அடியைக் கூட நீ தாங்க மாட்டாய், என்று பெருமை பேசினான் அவன்.

நீ வலிமையானவன் என்றால் நிரூபித்துக் காட்டு, என்றது பூதம்.

அப்படியா? என்ற அவன் தன் சட்டைப் பையிலிருந்த கூழாங்கல் உருண்டையை எடுத்தான். அந்த உருண்டையை வானத்தில் தூக்கிக் போட்டுப் போட்டுப் பிடித்தான். இது என்ன சொல் பார்ப்போம், என்று கேட்டான், அவன்.

உருண்டையான கூழாங்கல், என்றது பூதம்.

என் வலிமையைப் பார், என்ற அவன் அந்த வெண்ணெய் உருண்டையைக் கைக்குள் வைத்து அழுத்தினான். அது பொலபொலவென்று தூள் தூளாகிக் கீழே விழுந்தது.

உண்மையை உணராத அந்த முட்டாள் பூதம் அவனை மிகுந்த வலிமையானவன் என்று நினைத்தது. கீழே வா. உனக்கு இன்னும் ஒரு சோதனை, என்றது அது.

எப்படியும் பூதத்தை ஏமாற்றி விடலாம் என்ற எண்ணத்தில் கீழே குதித்தான் அவன்.

தரையில் கிடந்த சிறு கல்லை எடுத்தது அது. என் வலிமையைப் பார், என்று சொல்லி அந்தக் கல்லை உயரே வானத்தை நோக்கி வீசியது. அரை மணி நேரம் கழித்து அந்தக் கல் கீழே விழுந்தது.

எங்கே இதைப் போலச் செய்து உன் வலிமையைக் காட்டு, என்றது பூதம்.

நான் கல்லை மேலே வீசினால் கீழே விழவே விழாது. வான் உலகத்தைக் கிழித்துக் கொண்டு சென்று விடும். என்று பெருமையுடன் சொன்ன அவன் தன் பைக்குள் இருந்த சிட்டுக் குருவியை எடுத்தான். அதை மேலே தூக்கி எறிந்தான். அப்படியே பறந்து சென்றது அது.

பூதம் நீண்ட நேரம் காத்திருந்தது. மேலே எறிந்த கல் கீழே விழவே இல்லையே. இவனிடம் கவனமாக இருக்க வேண்டும். இல்லையேல் என்னைக் கொன்று விடுவான், என்று நினைத்தது அது.

நீ என் விருந்தினன். என் மாளிகைக்கு வா. விருந்து சாப்பிட்டுவிட்டுச் செல்லலாம், என்று அன்புடன் அழைத்தது அது.

இருவரும் பூதத்தின் மாளிகையை அடைந்தனர். அந்த மாளிகைகளைச் சுற்றிலும் தோட்டம் இருந்தது.

சமையல் செய்ய விறகு இல்லை. காட்டிற்குச் சென்று சிறிது விறகு கொண்டு வா, என்று அவனைப் பார்த்துச் சொன்னது பூதம். உடனே அவன், எதற்காக விறகு? நான் அந்தப் பெரிய மரத்தை அப்படியே இழுத்து வருகிறேன், என்றான்.

அந்தப் பெரிய மரத்தைப் பார்த்தது பூதம். அது கீழே விழுந்தால் தன் தோட்டம் பாழாகி விடும். மாளிகைச் சுவரும் இடிந்து விடும் என்று நினைத்தது அது. பயந்து போன அது நானே, சென்று விறகு கொண்டு வருகிறேன், என்று புறப்பட்டது. சிறிது நேரத்தில் விறகுடன் அங்கே வந்தது அது.

இன்னும் எப்படி எல்லாம் அதை ஏமாற்றலாம் என்று சிந்தித்துக் கொண்டிருந்தான் அவன்.
பூதம் அவனைப் பார்த்து. சமைப்பதற்கு நீர் வேண்டுமே. கிணற்றுக்குச் சென்று இந்தப் பாத்திரத்தில் நீர் கொண்டு வா, என்றது-

பாத்திரத்தில் நீர் கொண்டு வருவதா? எனக்கு எவ்வளவு கேவலம், வலிமை உடைய நான் அந்தக் கிணற்றையே இங்கே இழுத்து வந்து விடுகிறேன். அதைக் கட்டி இழுக்க உறுதியான கயிறு ஒன்றைக் கொடு, என்று கேட்டான் அவன்.

இதைக் கேட்ட பூதம் மேலும் பயந்தது. நீ நீர் கொண்டு வர வேண்டாம். நானே கொண்டு வருகிறேன், என்றது அது.

இருவரும் சாப்பிட்டு முடித்தனர். அங்கிருந்த கட்டிலில் அவன் படுத்துக் கொண்டான். பக்கத்தில் இருந்த இன்னொரு கட்டிலில் பூதம் படுத்துக் கொண்டது.

தன் உயிருக்கு ஆபத்து வரும் என்று நினைத்த மதியழகன் தூங்காமலே இருந்தான். பூதம் தூங்கி விட்டதை அறிந்த அவன் கட்டிலிலிருந்து மெல்ல இறங்கினான். ஒரு பூசனிக் காயைத் தன் கட்டிலில் வைத்தான். அதன் மீது போர்வையைப் போட்டு மூடினான். பார்ப்பதற்குக் கட்டிலில் யாரோ படுத்திருப்பது போலத் தோன்றியது. பிறகு பூதத்தின் கட்டிலுக்கு அடியில் படுத்துக் கொண்டான் அவன்.

நள்ளிரவு நேரம், பூதம் கட்டிலை விட்டு எழுந்தது. பக்கத்தில் இருந்த பெரிய இரும்புத் தடியைத் தூக்கியது.
கட்டிலில் படுத்திருந்த அவன் மண்டையில் தன் வலிமை கொண்ட மட்டும் அந்தத் தடியால் அடித்தது. போர்வைக்குள் இருந்த பூசனிக் காய் உடைந்து சிதறியது.

மதியழகன் இறந்து விட்டான் என்று மகிழ்ந்தது அது. தன் கட்டிலில் படுத்த அது குறட்டை விடத் தொடங்கியது. கட்டிலுக்கு அடியில் படுத்திருந்த அவன் எழுந்தான். பூசனிக் காய்த் துண்டுகளை எடுத்து வெளியே வீசினான். மீண்டும் அந்தக் கட்டிலில் படுத்துத் தூங்கத் தொடங்கினான்.

பொழுது விடிந்தது. விழித்த பூதம் கட்டிலில் அவன் உயிருடன் படுத்திருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தது. கட்டிலில் இருந்து எழுந்து அமர்ந்தான் அவன்.

இரவு நன்றாகத் தூங்கினாயா? உன் தூக்கத்திற்கு ஏதேனும் தொல்லை ஏற்பட்டதா? என்று கேட்டது அது. நள்ளிரவிலே ஏதோ கொசு ஒன்று என் காதில் கடித்தது போல இருந்தது. புரண்டு படுத்தேன். இங்கே கொசு அதிகமா? என்று கேட்டான் அவன்.

என் வலிமை எல்லாம் பயன்படுத்தி இருமூபுத் தடியால் இவன் மண்டையில் ஓங்கி அடித்தேன். யாராக இருந்தாலும் இறந்திருக்க வேண்டும். இவனோ கொசு கடித்தது போல இருந்தது என்கிறான். இவனிடம் நன்றாக மாட்டிக் கொண்டோமே. எப்படித் தப்பிப்பது? என்று பயந்து நடுங்கியது அது.

நமக்குள் இன்னொரு போட்டி வைத்தால் என்ன? என்று கேட்டான் அவன்.
என்ன போட்டி? என்று கேட்டது அது.

ஒரு பெரிய பாத்திரத்தில் கஞ்சி வைப்போம். அதில் பாதியை நான் சிறிது கூட மென்று தின்னாமல் அப்படியே குடித்து விடுகிறேன், என்றான் அவன்.

நான் நம்ப மாட்டேன். நீ மென்றுதான் தின்றிருப்பாய். நீ மெல்லாமல் விழுங்கி இருந்தால் எப்படிக் கண்டுபிடிப்பது? அதை நான் என் வயிற்றுக்குள் இறங்கியா பார்க்க முடியும்? என்று கேட்டது அது. உன்னால் பார்க்க முடியும். நான் கஞ்சியைக் குடித்ததும் வயிற்றில் ஒரு பகுதியைக் கிழித்துக் காட்டுகிறேன். பிறகு

உனக்கே நான் மென்று தின்றேனா இல்லையா என்பது விளங்கும், என்றான் அவன்.
சரி என்ற பூதம் கஞ்சி சமைக்கத் தொடங்கியது.

http://www.gifandgif.eu/animated_gif…%20%281%29.gif

வேறு அறைக்குச் சென்ற அவன் தோல் பையை எடுத்துத் தன் வயிற்றில் கட்டிக் கொண்டான். அதன் வாய்ப்பகுதி தன் தொண்டைக்கு நேராக இருக்குமாறு வைத்தான். உள்ளே பை இருப்பது தெரியாத வண்ணம் மேலே சட்டையை போட்டுக் கொண்டான்.

பூதம் கஞ்சி வைத்திருந்தது. அதைப் பாத்திரத்தோடு எடுத்தான் அவன். தன் தொண்டைக்கு அருகே இருந்த பைக்குள் அதைச் சிறிது சிறிதாக ஊற்றினான். குடிப்பது போல நடித்தான்.
சூழ்ச்சியை அறியாத பூதம் அவன் குடிப்பதாகவே நினைத்தது.

பூதத்தைப் பார்த்து அவன், நான் கஞ்சியை எப்படிக் குடித்து இருக்கிறேன் என்று பார். சிறிது கூட மெல்ல வில்லை. அப்படியே அரிசிச் சோறு இருக்கும். என்று சொல்லி கொண்டே கத்தியால் தன் வயிற்றைக் கிழித்தான். உண்மையில் அவன் கிழித்தது வயிற்றுக்குள் கட்டப்பட்டிருந்த தோல்பையையே. அவன் வயிற்றிலிருந்து கொட்டிய கஞ்சியைப் பூதம் பார்த்தது.

உன்னைப் போல நானும் செய்கிறேன், என்ற அது. இன்னொரு பாத்திரத்தில் இருந்த கஞ்சியை அப்படியே குடித்தது.
http://www.gifandgif.eu/animated_gif…%20%283%29.gif

நான் எதையும் மெல்லவில்லை. அப்படியே குடித்து இருக்கிறேன் பார், என்று சொல்லிக் கொண்டே தன் வயிற்றைக் கத்தியால் கிழித்தது அது. குருதீ கொட்ட குடல் வெளியே வந்து துடிதுடித்து அங்கேயே இறந்தது அது.

பூதம் இறந்த செய்தி அறிந்ததும் நாடே உற்சாகத்தில் விழாக்கோலம் கண்டது, வெற்றி வீரனாகத் திரும்பிய மதியழகனுக்கும் இளவரசி எழிழரசிக்கும் ஒரு நல்ல நாளில் திருமணம் நடந்தது. அரசருக்குப் பின்னர் மதியழகன் தன் புத்திசாலித்தனத்தால் நாட்டை சிறப்பாக ஆண்டார்.

Print Friendly, PDF & Email

3 thoughts on “மதியழகனும் பூதமும்

  1. சிறுவர்களை திருப்திப்படுத்த கூடிய அழகான கதை, வாழ்த்துக்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *