நான் ஒரு நாடகம் பார்க்கிறேன்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி  
கதைப்பதிவு: July 29, 2014
பார்வையிட்டோர்: 11,252 
 

“மலர்விழி 82, கண்ணன் 72, மாலதி 75, கோபால் 30..” ஒரு கணம் தாமதித்தேன். கையிலிருந்த தேர்வுத்தாளின் சிவப்புநிறப் புள்ளியில் கண்கள் நிலைகுத்தின. அதற்குமேல் என்னால் புள்ளிகளை வாசிக்க முடியவில்லை. கோபம் எனக்குள் எட்டிப்பார்த்தது. என் முகமாற்றத்தை மாணவர்கள் உணர்ந்திருக்க வேண்டும்.

எத்தனை விதமான முயற்சிகள்! எவ்வளவு பயிற்சிகள்! பல மாத உழைப்பின் அறுவடையை அளந்து பார்க்கக் காத்திருந்தவனுக்குப் பலன் ஒன்றுமில்லை என்றால் எழும் ஏமாற்றம்தான் என்னையும் துவைத்தது. அரையாண்டுத் தேர்விலேயே இப்படியென்றால் உண்மையான எஸ்.பி.எம். தேர்வில்? நினைத்துப் பார்க்கவே வேதனையாக இருந்தது. தேர்வில் ஒட்டுமொத்தத் தமிழ்மொழித் தேர்ச்சி இந்த ஆண்டு வீழ்ச்சியடைந்தால்…

தேர்வுத் தாளைத் தயக்கத்தோடு வாங்கினான் கோபால். என் முகத்தில் பரவிய கோபத்தின் கடுமையை உணர்ந்திருக்க வேண்டும்.

“மன்னிச்சிடுங்க சார். இந்த தடவ என்னால பாஸாக முடியல்ல.. அடுத்த தடவ முயற்சி செய்யிறேன்.. எல்லார் முன்னுக்கும் என்ன ஏசாதீங்க சார்..” அருகில் வந்து தாழ்ந்த குரலில் கூறினான். தலை கவிழ்ந்திருந்தது.

“அவமானப்படக்கூடாது என்ற விழிப்பு உணர்வு இருக்கிறது. ஆனால், உழைப்பதற்கான முயற்சி இல்லையே. இங்க உன்ன மாதிரிதானே எல்லாருக்கும் பாடம் நடத்துறேன். எல்லாரும் அக்கறையா பாடத்துல கவனமா இருக்கிறாங்க. ஆனா நீ…. வகுப்புலேயும் கவனமில்ல. வீட்டுப் பாடங்களும் செய்யிறதில்ல.. தாய்மொழியிலேயே தடுமாறுனா எப்படி? எவ்வளவு பயிற்சி கொடுத்திருக்கிறேன். அதையெல்லாம் செய்திருந்தா இப்படி மோசமா இருக்குமா? எப்பப்பார்த்தாலும் ஒரே சிரிப்பு, கும்மாளம். நீயெல்லாம்..” நாக்கு நுனியில் வந்துவிட்ட சொற்களைச் சிரமப்பட்டுத் தடுத்தேன்.

வகுப்பு அமைதியாகிவிட்டது. இருபத்தைந்து மாணவர்களில் ஒருவன் மட்டும் தேர்ச்சிபெறவில்லை என்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. நூறு விழுக்காடு வெற்றிக்குக் காய்களை நகர்த்தியவன் கடைசி வினாடியில் தோல்வியைச் சந்தித்தால்..
கோபால் பேசாமல் போய் அவன் இடத்தில் அமர்ந்துவிட்டான். குற்றம் இழைத்தவனின் வேதனையைப்போல் அவன் முகம் வாடிவிட்டது.

அதற்குமேல் பாடத்தில் என்னால் மனம் ஒன்றிச் சொல்லித்தர முடியவில்லை. தேர்வுக் கேள்வியில் சிரமமான பகுதிகளை விளக்கினேன். கட்டுரை என்றாலே மாணவர்க்குக் கசப்பு மருந்தாகிவிடுகிறது. அதில்தான் பலர் புள்ளிகளை இழந்திருந்தார்கள்.

வகுப்பு முடிந்து ஆசிரியர் அறைக்குத் திரும்பினேன். மனம் அமைதியடையாமல் முரண்டு பண்ணியது. கோபாலைப் போன்ற மாணவர்களுக்கு ஆசிரியரின் மனவேதனை புரியுமா?

“சார், இன்னொரு வாய்ப்பு கொடுங்க. நான் எப்படியாவது..” பின்னாலேயே வந்து நின்றான் கோபால்.

“எதற்கு இன்னொரு வாய்ப்பு? அடுத்தமுறை 20 எடுத்து என்ன அவமானப்படுத்தவா? இங்க பார் கோபால். நானும் உன்னை மாதிரிதான் படிப்பில ரொம்ப பின்தங்கி இருந்தேன். ஆனா, நல்லா படிச்சி உயர்ந்த நிலைக்கு வருனும்னு கடுமையா உழைச்சேன். சும்மா வெட்டிக்கதை பேசி காலத்த கழிக்கல. உனக்கு எப்பப் பார்த்தாலும் ஆட்டம் பாட்டம். நான் கொடுக்கிற பாடங்களைச் செய்தாலே போதும். ஆனா நீ செய்யமாட்டே. உனக்குத்தான் படிப்பில ஆர்வம் இல்லையே” ஆதங்கத்தைக் கொட்டித் தீர்த்தேன்.

“அப்படி இல்ல சார். கொஞ்சம் விளையாட்டா இருந்திட்டேன். சார், நீங்க வேணும்னா பாருங்க. அடுத்த பரீச்சயில நல்ல மார்க் எடுக்கிறேன். இதுக்காக என்ன நாடகத்தில இருந்து எடுத்திடாதீங்க.. உங்களுக்குத்தான் தெரியுமே. நான் நல்ல நடிப்பேன் சார்” அடுத்த மாதம் மாவட்ட அளவில் நடைபெறவுள்ள நாடகப்போட்டிக்காக எங்கள் பள்ளி நாடகக் குழுவில் பங்குபெற கோபாலும் பெயர் கொடுத்திருந்தது ஞாபகத்திற்கு வந்தது. கடந்த ஆண்டு நாடகப் போட்டியில் மூன்றாம் இடத்தைப் பிடித்தோம். இம்முறை முதல் இடத்தைக் குறிவைத்து நாடக வேலையைத் தொடக்கியிருந்தேன். கோபாலும் நடிக்கும் திறமையுள்ளவன்தான். ஆனாலும், தமிழ்ப் பாடத்திலேயே தடுமாறும் இவனுக்கு ஏன் வாய்ப்பு தரவேண்டும்? தமிழில் தேர்ச்சிபெற்ற மற்றவர்களுக்கு அதைத் தரலாமே!

“ஓ, உனக்கு அந்த ஆசை வேற இருக்கா? முதல்ல தமிழ்ல உன் திறமையை காட்டு. அப்புறம் நாடகம் பத்தி யோசிக்கலாம். உன்னைவிட தமிழ்ல நல்ல மார்க் எடுத்த கண்ணன், அமுதன், முகிலன் இவங்களுக்கு வாய்ப்பு கொடுக்கலாம்னு நினைக்கிறேன்” கோபால் முகத்தில் ஏமாற்ற ரேகைகள் முகாமிட்டன. ஒன்றும் பேசவில்லை. போய்விட்டான்.

பள்ளி வேலையில் மூழ்கினாலும் என் எண்ணமெல்லாம் கோபாலைச் சுற்றியே வட்டமிட்டது. எப்படியாவது அவனைத் தமிழ்ப்பாடத்தில் தேர்ச்சியை நோக்கி நகர்த்தவேண்டும். மூன்று ஆண்டுகளாகப் பெற்ற நூறு விழுக்காடு தேர்ச்சியை ஒரு மாணவனால் தவறவிடக்கூடாது. குதிரையை மல்லுக்கட்டி ஆற்றுக்குக் கொண்டுபோகலாம். தண்ணீரை அதுதானே குடிக்கவேண்டும்?

***

மாணவர் வருகைப் பதிவேட்டில் முகவரி இருந்ததால் கோபாலின் வீட்டைக் கண்டுபிடிப்பது சிரமமாக இருக்கவில்லை. சாலையோர வீடமைப்புப் பகுதியில் நுழைந்து இரண்டாவது வரிசையில் காரை நிறுத்தி வீட்டை நெருங்கினேன்.

மாலை மணி ஆறு. வீட்டில் பேச்சொலி கேட்டது. எட்டிப்பார்த்தேன். “அடியே, உன்னையும் உன் குடும்பத்தையும் அடியோடு அழிக்காம விடமாட்டேன். நீ அழுது ஒண்ணும் இங்கே சாதிக்கமுடியாது.” தொலைக்காட்சியில் ஏதோ நாடகம் ஓடிக்கொண்டிருந்தது. கோபாலின் மொத்தக் குடும்பமே நாடகத்தின் உருக்கமான காட்சியில் சிறையாகி இருந்தது. சோகத்தைக் கிலோ கணக்கில் யாரோ பிழிந்துகொண்டிருந்தார்கள். தொடர் நாடகங்கள் பார்ப்பது நம்மவரின் முக்கிய அன்றாடக் கடமைகளில் ஒன்றாகிவிட்டதா? இதனைச் ‘சைத்தான் பெட்டி’ என்று சொல்வது சரியாகத்தான் இருக்குமோ? கோபாலைக் காணவில்லை.

“வணக்கங்க. நான் கோபாலின் தமிழ் ஆசிரியருங்க. கோபால் விசயமா உங்ககிட்ட கொஞ்சம் பேசணும். கோபால் இல்லீங்களா?” கேள்வியோடு உள்ளே நுழைந்தேன்.

“வாங்க, உக்காருங்க சார். கோபாலு வீட்டுல இல்லையே. எங்க போயிருக்கான்? பந்து விளையாடத்தானே?” கோபாலின் அப்பா கிருஷ்ணன் தன் மனைவியிடம் உறுதிப்படுத்திகொண்டு என்னை ஏறிட்டார். கலைந்த தலைமுடி. சவரம் காணாமல் முகத்தை அப்பியிருந்த வெள்ளைத் தாடி. அவர் நாடக மயக்கத்தில் இருந்தார்.

“என்ன விசயம் சார்? தப்பு ஏதும் பண்ணிட்டானா? அவன் சாதுவாச்சே” கோபாலின் அம்மாவின் முகத்தில் கேள்விக்குறிகள்.

“தப்பு ஒண்ணும் செய்யிலங்க. தமிழ்ப் பாடத்துல கொஞ்சம்கூட ஆர்வம் இல்லாம இருக்கான். நானும் எவ்வளவோ முயற்சி செய்து பார்த்துட்டேன். பயிற்சிங்க கொடுத்தா செய்யறதில்ல. அதான் உங்ககிட்ட சொல்லிட்டுப்போக வந்தேன்.” சொல்லிவிட்டு இருவரின் முகங்களைக் கூர்ந்து நோக்கினேன்.

“நல்லா சொல்லுங்க சார். வீட்டுல எங்க படிக்கிறான்? எப்பவும் பந்து விளையாட்டுதான். திடலே கதின்னு கிடப்பான். சாயங்காலம் ஆச்சுன்னா கூட்டாளிங்க வந்திடுவாங்க. அப்புறம் ஆள பார்க்க முடியாது. நீங்க தண்ணி சாப்பிடுங்க சார்” தன்னளவில் எந்தக் தப்பும் இல்லை என்பதை உறுதிப்படுத்தும் தொனி கிருஷ்ணன் குரலில் தெரிந்தது.

“ஆமாங்க சார். நாங்க என்னா அவன படிக்கவேண்டாம்னா சொல்றோம். வீட்டுல இருந்தாலும் நல்லா டிவியில நாடகத்த பார்த்துக்கிட்டு பொழுத போக்குறான். நாடகம்னா அவனுக்கு அவ்வளவு உசுரு.” கோபாலின் அம்மா நிலைமையை விளக்கினார்.

“நீங்கதான் அவன் படிக்கிற சூழ்நிலைய வீட்டுல ஏற்படுத்தணும். சொல்றேன்னு தப்பா நினைக்காதீங்க. நீங்களே டிவிய பார்த்துகிட்டு இருந்தா அப்புறம் கோபாலுக்கு எப்படி படிப்புல ஆர்வம் வரும்.” வேறுவழியில்லை. நேரடியாக என் உள்ளக்கிடக்கையைக் கொட்டிவிட்டேன். மூடிமறைத்துப் பேசிப் பயனில்லை.

“என்ன சார் இப்படி சொல்லிட்டீங்க? நாங்க வயசான காலத்துல டிவிய பார்த்துகிட்டு காலத்த கழிக்கிறோம். இவனுக்கு எங்க போச்சு புத்தி? படிக்கிற இவனுக்கு தெரியணும் சார். நாளைக்கி படிச்சி வேலைக்குப் போனா அவந்தான நல்லா இருப்பான்” கிருஷ்ணனின் சொற்களில் சூடு ஏறியிருந்தது. பழியைத் தூக்கி அப்படியே மகனின் மீது போட்டுவிட்டார்.
தொலைக்காட்சி கம்பீரமாகக் கொலுவீற்றிருந்த முன் அறையில் தமிழ் நாளிதழோ நூல்களோ இருப்பதற்கான அடையாளம் ஏதும் இல்லை. சுவரில் நடிகர்கள் விஜயும் அஜீத்தும் ஸ்டைல் காட்டிச் சிரித்துக்கொண்டிருந்தார்கள் தனியாக அமர்ந்து படிப்பதற்கான எந்த வசதியும் அங்கில்லை என்பதை என்னால் உணரமுடிந்தது. கோபாலுக்கும் தமிழுக்கும் தூரம் நீண்டிருப்பதற்கான காரணம் எனக்குப் புரியத் தொடங்கியது.

“கோபாலுக்காக நீங்க கொஞ்சம் கூடுதல் முயற்சி எடுக்கணும். பிள்ளைகளுக்காக நாம தியாகம் செய்ய தயாரா இருந்தாதான் அவங்கள வாழ்க்கையில கரை சேர்க்கலாம். வீட்டுல கோபால் படிக்கிறதுக்கு வசதி இருக்கா? கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க….” சொல்ல வேண்டியதைச் சொல்லிவிட்டேன்.

நான் விடைபெற்றேன். நெஞ்சம் முழுக்க ஏமாற்றம் நிறைந்திருந்தது.
“அவன் வந்தா சொல்றேங்க சார். பார்ப்போம். ஆண்டவன் அவனுக்கு ஒரு வழிகாட்டாமலா போவான்” இப்போது பாரத்தை ஆண்டவன் மீது தூக்கிப் போட்டுவிட்டு எனக்கு விடைதந்தார். வீட்டின் முன்பகுதியைக் கவனித்தேன் அது கவனிப்பாரற்றுப் புல் மண்டிக்கிடந்தது.

***

“புறா மூலம் தூது அனுப்பினேனே கிடைத்ததா? ஏன் இன்னும் மறுமொழியில்லை? என எதிரி நாட்டு மன்னன் ஓலை அனுப்பி இருக்கிறான். என்ன செய்யட்டும் மன்னா? கட்டளையிடுங்கள்” அமைச்சர் முகத்தில் கேள்விக்குறிகள் நிறைந்தன.

“பகை மன்னன் பாண்டியன்தானே? என்ன திமிர் அவனுக்கு? வரட்டும் பார்த்துவிடுவோம். நம் பலம் தெரியாமல் நம்மோடு மோதுகிறான் அந்தப் புல்லன். புறாவுக்கு நேர்ந்த கதிதான் அவனுக்கும். புரிய வைப்போம்” மன்னர் மீசையை முறுக்கினார்.

பள்ளி மண்டபத்தில் நாடக ஒத்திகை தொடங்கிவிட்டது. கடந்த ஆண்டு எங்கள் பள்ளி தவறவிட்ட வெற்றிக்கோப்பையை இம்முறை எப்படியாவது வாகைசூட வேண்டுமே? கடுமையான முயற்சியில் இறங்கிவிட்டோம். அமைச்சர், தளபதி, புலவர், ராணி என எல்லாப் பாத்திரங்களும் கனகச்சிதமாகப் பொருந்தினார்கள். மன்னருக்குத்தான் முறுக்கு போதவில்லை. வாயில் நுழைந்த தமிழும் சிதைந்துகொண்டிருந்தது. குரலில் கம்பீர மிடுக்கும் குறைந்தது. வேறு வழியில்லை. மன்னரை மாற்றிப் பார்த்தேன்.

அப்பொழுதும் திருப்தியில்லை. புதிய மன்னருக்குத் தமிழ் உச்சரிப்பு தகராறு பண்ணியது. மூன்று நாள் பயிற்சி கொடுத்தால் மன்னரைத் தேற்றலாம் என நினைத்தேன். அது அவ்வளவு எளிதில்லை என்பது புரிந்தது. இன்னும் கொஞ்சம் மிரட்டினால் மன்னர் அழுதுவிடுவார் போலிருந்தது. வேறு வழியில்லை அவரை வைத்துத்தான் எப்படியாவது ஒப்பேத்த வேண்டும்.

“சார், எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்க. முயற்சி பண்றேன். என்னால முடியும். போன வருசம்கூட நடிச்சேனே” பள்ளி முடிந்து மண்டபத்தில் நடக்கும் ஒத்திகைக்கு நாள் தவறாமல் வந்து ஒரு மூலையில் அமர்ந்து வேடிக்கை பார்க்கும் கோபால்தான் மனு செய்தான்.

“இப்பதானே கொடுத்த பாடங்கள செய்ய ஆரம்பிச்சிருக்க. பார்ப்போம். தமிழ்ல நாற்பது புள்ளிய தாண்டுனா உன்ன பரிசீலிக்கலாம். அதுவரைக்கும் நீ வேடிக்கைதான் பார்க்கணும் கோபால்” நான் திட்டவட்டமாகக் கூறிவிட்டேன். அவன் முகம் வாடியதைக் கவனிக்கத் தவறவில்லை.

“புல்லனே! யாரிடம் மோதுகிறாய்? இமயத்தில் புலிக்கொடி பொறித்த வீர மரபில் வந்தவர்கள் நாங்கள். உங்களின் தலைகளைப் பந்தாடாமல் எங்கள் வாள்கள் உறையில் உறங்காது” மன்னர் வாளை உருவியபடி எதிரியைப் பார்த்துக் கர்ஜித்தார். குரலில் கடுமை போதவில்லை. பயம்தான் எட்டிப்பார்த்தது. நான் பொறுமையை இழந்துகொண்டிருந்தேன்.

நாடகப் போட்டிக்கு மாணவரை அழைத்துப் போக பெற்றோரின் அனுமதி, உணவு ஏற்பாடு, பேருந்து என பல பணிகளை முடிக்கவேண்டியிருந்தது. இடையிடையே மன்னர் எனக்குள் எட்டிப்பார்த்து என்னைப் பயமுறுத்தினார்.

***

கோபாலிடமிருந்து வீட்டுப்பாடம் வருவது ஆச்சரியம்தான். ஆனால், வந்தது. எழுத்துப்பிழைகள் குறைந்தபாடில்லை. ஆனாலும், முயற்சியின் முதல்படியில் ஏறத்தொடங்கியிருந்தான். அடிக்கடி ஆசிரியர் அறைக்கு வந்து என்னை எட்டிப்பார்த்தான். பேச்சுக் கொடுத்தான். வீட்டுப்பாடத்தை நீட்டினான். வகுப்பில் கும்மாளத்தைக் குறைத்தான்.

நாடகப்போட்டிக்கு இன்னும் இரண்டு வாரங்கள். தொடர்ந்து மன்னரோடு போராடும் சக்தியை நான் இழந்துகொண்டிருந்தேன். நாடகத்தைத் தூக்கி நிறுத்தப்போகும் பாத்திரம் மன்னர்தான், அவரே தடுமாறிச் சொதப்பிக்கொண்டிருந்தால்…

“சார், இந்தாங்க நேத்து நீங்க கொடுத்த கட்டுரை. முடிச்சிட்டேன் சார். வகுப்பறையில் பயிற்சி நூல்களைத் திருத்திக் கொண்டிருந்தவன் தலைநிமிர்ந்தேன். கோபால் கட்டுரை எழுதித் தருவது அபூர்வம். இப்படியாவது தமிழில் தேர்ச்சியை நோக்கி நகர்வானா? மனம் எதிர்பார்ப்புகளை அடுக்கியது.

“ஒரே ஒரு வாய்ப்பு. கொடுத்து பாருங்க. உங்க பேர காப்பாத்துவேன் சார்” கோபாலின் விடாமுயற்சி எனக்குப் பிடித்திருந்தது.
“இல்ல கோபால். உன் முயற்சி போதாது. இன்னும் நீ தீவிரமா உழைப்பை தரணும். அது உன்னால முடியுன்னு நான் நம்புறேன்”

***

நாடகப்போட்டியில் இம்முறை ஒன்பது பள்ளிகள் கலந்துகொண்டன. நான்காம் ஆண்டாக நடக்கும் நிகழ்வென்பதால் எல்லாப் பள்ளிகளும் நடிப்பாற்றலை வளர்த்துக்கொண்டு கடுமையான போட்டியைத் தந்தன. இலக்கிய நாடகமென்பதால் பலவிதமான உடைகளில் மாணவர்கள் சரித்திரக் கதைமாந்தர்களாய் உருமாறி மேடையைக் கலக்கிக்கொண்டிருந்தனர்.

கடைசிக் குழுவாய் எங்கள் பள்ளி மாணவர்கள் மேடையேறினர். நான் நம்பிக்கையோடு சரித்திரப் பாத்திரங்களோடு ஒன்றிப்போனேன்.

“எம் மண்ணில் கால் வைத்தால் பகைவனின் தலையைப் பந்தாடாமல் விடமாட்டோம். புல்லனுக்கு நம் வீரத்தைப் புரிய வைக்கும் வரையில் நாங்கள் ஓயமாட்டோம். நினைத்ததை அடைந்தே தீருவோம்.” மன்னர் உணர்ச்சிப் பிழம்பாய்ப் பொங்கினார். ஒவ்வொரு பாத்திரத்தின் உடையும் வாளும் அணிகளும் நாடகத்திற்கு உயிரூட்டிக்கொண்டிருந்தன.

மண்டபத்தில் உள்ளோரின் கையொலி போட்டியின் முடிவைச் சொல்லாமல் சொல்லியது. நாடகம் முடிந்து, திரை மூடியது. மேடைக்குப் பின்னால் நின்றிருந்த என்னை நோக்கி என் நாடகக் குழுவினர் வந்தனர். கோபால் மகுடத்தைக் கழற்றிக் கையில் வைத்திருந்தான். நான் அவனை ஆரத் தழுவிக் கொண்டேன்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *