கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: October 10, 2014
பார்வையிட்டோர்: 7,951 
 

(1973ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

நான் மட்டும் தனியாக இருக்கும் அந்த நேரத்தில் கதவு தட்டப்படும் ஓசை கேட்கிறது. யன்னலின் திரையை நீக்கி வெளியே பார்க்கிறேன். நான் நினைத்தது போலவே புகையிலைத் தரகர் பொன்னம்பலந்தான் நின்றுகொண்டிருந்தார்.

கதவைத் திறக்காமலே அண்ணன் வீட்டிலில்லை என்பதை அவரிடம் கூறிவிடலாமா என ஒருகணம் யோசிக்கிறேன். ஆனால் அப்படிச் செய்யவில்லை.

பொன்னம்பலம் உள்ளே வந்து கதிரையில் உட்காருகிறார். நான் அவருக்குத் தேநீர் தயாரிப்பதற்காகச் சமையல் அறைப்பக்கம் போகிறேன்.

பொன்னம்பலத்திடம் எல்லோரும் மரியாதையுடன்தான் பழகுவார்கள். அதற்குக் காரணம் அவர் தனது தொழிலிற் காட்டும் நேர்மையாகத்தான் இருக்க வேண்டும்.

பத்துப் பன்னிரண்டு வருடங்களுக்கு முன்பு, நான் கல்லூரி மாணவியாக இருந்தபோது கண்ட பொன்னம்பலத்தின் இளமைத்தோற்றம் இன்றும் அப்படியே இருக்கிறது. அவர் அப்போதெல்லாம் வியாபார விஷயமாக எங்கள் வீட்டுக்கு வருவார். அப்பொழுது எங்கள் தந்தை உயிரோடு இருந்தார்; குடும்பமும் நல்ல நிலையில் இருந்தது.

அண்ணனுக்கு அரசாங்கத்தில் ஆசிரியத் தொழில் கிடைத்த பின்னர் தோட்டத்தைக் கவனிப்பதற்கு நேரம் இல்லாமற் போய்விட்டது. எங்களிடம் இப்போது விற்பனைக்குப் புகையிலைக் கன்றுகளும் இல்லை.

எங்கள் தந்தை இறந்தபின்பு எங்களுக்கு ஏற்பட்ட கஷ்ட நஷ்டங்களோ பல. அப்போது பொன்னம்பலந்தான் எங்களுக்கு உதவியாக இருந்தார். அவர் ஒருவர்தான் இப்பொழுதும் எங்கள் குடும்பத்துக்கு ஆதரவாக இருக்கிறார்.

அண்ணன் சிறிது நேரத்திற்கு முன்புதான் வெளியே சென்றார். பொன்னம்பலம் அதனைக் கவனித்த பின்புதான் இங்கு வந்திருக்க வேண்டும்.

கடந்த சில நாட்களாக பொன்னம்பலம் என்னிடம் பழகும் விதத்தில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. எனினும் நான் அதனை உணர்ந்து கொண்டவள்போல அவரிடம் காட்டிக்கொள்வதில்லை.

தேநீரைக் கிளாஸில் ஊற்றிப் பொன்னம்பலத்திடம் கொடுக்கிறேன். அதனை வாங்கும்போது அவருடைய கை எனது விரல்களிற்படுகிறது.

பொன்னம்பலம் சிரிக்கிறார். அவருடைய உள்ளத்தில் ஏற்பட்ட மாற்றத்தினாலோ என்னவோ முகத்தில் அசடு வழிகிறது.

“பூமணி ! நீ எவ்வளவு வடிவாய் இருக்கிறாய்! ” பொன்னம்பலம் இப்படிக் கூறியதைக் கேட்க எனக்கு உள்ளூர ஆசையாக இருந்தாலும் ஏதோ ஒரு வித பயமும் இருக்கத்தான் செய்கிறது.

பொன்னம்பலம் எழுந்து நிற்கிறார்.

“பூமணி! நான் …. …. உன்னை ஒண்டு கேட்கிறேன். நீ அண்ணனிட்டைச் சொல்லுவியோ?”

நாக்கு மேலே ஒட்டிக்கொண்டதுபோல அவரது குரல் தடுமாறுகிறது. உடல் சிறிது நடுங்குகிறது. அவர் சொல்லி முடித்ததும் எச்சிலை விழுங்குவது நன்றாகத் தெரிகிறது. அவரது முகம் மாறி விட்டது.

அண்ணனிடம் சொல்லமாட்டேன் என்பதற்கு அடையாளமாக, நான் தலையைமட்டும் அசைக்கிறேன். அவர் கேட்கப்போவது என்ன என்பதை அறிய எனக்கு ஆவலாக இருக்கிறது.

அண்ணன் வருவது தூரத்தே தெரிகிறது. பொன்னம்பலம் சமாளித்துக்கொண்டு கதிரையில் உட்காருகிறார். நான் சமையல் அறைப்பக்கம் போகிறேன்.

அண்ணனும் பொன்னம்பலமும் முன் கூடத்திற் பேசிக்கொண்டிருக்கிறார்கள். பொன்னம்பலம் சிறிது காலமாக அண்ணனிடம் பேசுவதெல்லாம் எனக்குத் திருமணம் செய்து வைக்கவேண்டிய அவசியத்தைப் பற்றியதாகத்தான் இருக்கும்.

அவர்கள் பேசுவதை மறைந்திருந்து கேட்பதற்கு எனக்கு கொள்ளை ஆசை.

“பூமணிக்கு வயசு முப்பதாகுது. இனிமேலும் அவளுக்கு கலியாணஞ் செய்து வைக்காமல் இருக்கிறது சரியில்லைத் தம்பி.”

பொன்னம்பலம் அண்ணனிடம் கூறிய வார்த்தைகள் என் காதிலும் விழுகின்றன.

அண்ணன் மௌனமாக இருக்கிறார். அவரால் என்னதான் செய்யமுடியும்?.

ஏழெட்டு வருடங்களாக எனக்குத் திருமணஞ் செய்து வைப்பதற்கு ஏறாத வாசற் படிகளெல்லாம் ஏறியிறங்கிவிட்டார். பலன்தான் கிட்டவில்லையே.

எனக்குப் பெரிய இடத்தில் கைநிறையச் சம்பளம் எடுக்கும் ஒரு நல்ல மாப்பிள்ளையைக் கட்டிவைக்க வேண்டுமென்பது அண்ண னுடைய விருப்பம்

நான் மணப் பருவம் எய்திய நாளிலிருந்தே அண்ணன் அதனை என்னிடம் அடிக்கடி கூறுவார். அதனாலேதான் என் மனதிலும் அந்த ஆசை வேரூன்றி விட்டதோ என்னவோ!

நான் பெரியவளாகிச் சில மாதங்களுக்குள் என்னைத் தனது மகனுக்குத் திருமணம் செய்துவைக்க வேண்டுமென மாமா விரும்பினார். ஆனால் நான் அதனைத் துளிகூட விரும்பியதில்லை. என் தோழி சுகுணா ஓர் என்ஜினியரைத் திருமணம் செய்து வாழ்க்கை நடத்துகிறாள். நான் மட்டும் ஒரு கமக்காரனுக்கு வாழ்க்கைப்படுவதா?

பெரிய இடங்களில் எனக்குத் திருமணம் பேசியபோதெல்லாம் அத்திருமணம் நடந்துவிடாதா என என் மனம் ஏங்குவதுண்டு. எனக்கு அழகில்லை என்றார்கள் சிலர். எங்களுடைய அந்தஸ்து போதாதென்றார்கள் வேறு சிலர். எங்களால் கொடுக்க முடியாத அளவு சீதனம் கேட்டுத் தட்டிக்கழித்தனர் பலர். இப்போது எனக்கு வயது அதிகமாகிவிட்டது என்ற காரணமும் அவர்களுக்குக் கிடைத்துவிட்டது.

பேசுகிறவர்கள் எதையும் பேசிவிட்டுப் போகட்டும் எனக்கு நல்ல இடத்தில் திருமணம் நடக்கத்தான் போகிறது.

அன்று சுகுணா தனது கணவர் சந்திரனுடன் வந்திருந்தாள். அவளுடைய கணவனைப் போன்று அவளுடைய குழந்தையும் அழகாகத்தான் இருக்கிறான். முன் கூடத்தில் அண்ணனுடன் அவர்கள் பேசிக் கொண்டிருக்கும்போது நான் மட்டும் சமையலறையில் அந்தக் குழந்தையுடன் கொஞ்சிக்கொண்டிருந்தேன்.

நானும் ஒரு நாள் சுகுணாவைப்போல ஒரு பெரிய உத்தி யோகத்தரைக் கலியாணஞ் செய்வேன். எனக்கும் அழகான ஓரு குழந்தை பிறக்கும். அந்தக் குழந்தையை எப்பொழுதும் என்னிடம் வைத்துக் கொஞ்சுவேன். அப்போது என் கணவர் தன்னிடம் எனக்கிருந்த அன்பு குறைந்து விட்டதென்று செல்லமாகக் குறைப்படுவார்.

நான் சுகுணாவின் குழந்தையை நெஞ்சோடு அணைத்து அதன் கன்னங்களை மாறி மாறி முத்தமிடுகிறேன். குழந்தை கன்னங் குழியச் சிரிக்கிறான். அவனுடைய மிருதுவான கேசங்கள் பார்ப்பதற்கு எவ்வளவு அழகாக இருக்கின்றன.

குழந்தை தன் பிஞ்சுக் கரங்களால் என் மார்புச் சட்டையைப் பிடித்து இழுக்கிறான். கற்பனையில் எனக்கு ஏதேதோ ஆசைகள் எழுகின்றன. எனக்கு நாணமாக இருக்கிறது.

நான் வழுகியிருந்த மேலாடையைச் சரிப்படுத்துகிறேன்.

பால் கொடுக்கலாமென்றால், பாற்காரன் காலந்தாழ்ந்தும் இன்னும் வரவில்லையே!

சுகுணா வந்து குழந்தைக்குப் பாலூட்டுகிறாள். குழந்தை செய்யும் குறும்புத்தனங்களை எனக்குச் சொல்லும்போது அவளுக்கு பெருமை யாக இருக்கிறது. சுகுணாவைப்போல் நானும் என்றுதான் பெருமைப் படப் போகிறேனோ?

சுகுணாவின் பேச்சு திசை திரும்புகிறது. “பூமணி! அண்ணர் உமக்கு எப்ப கலியாணஞ் செய்துவைக்கப் போகிறார்?”

“இப்ப என்ன அவசரம் ? ஆறுதலாய்ச் செய்யிறது. கலியாணஞ் செய்தால் சுதந்திரமாய் இருக்கேலாது. குழந்தை குட்டியென்று பெரிய கரைச்சல்….”

சுகுணா சிரிக்கிறாள். அவளும் இப்படித்தான் திருமணம் நிறைவேறுமுன்பு சொல்லிக்கொண்டிருந்தாளா? அல்லது எனது ஆதங்கத்தைப் புரிந்துகொண்டிருப்பாளா?

சுகுணாவும் அவளது கணவரும் எங்களிடம் விடைபெற்றுக் கொண்டு போய்விட்டார்கள்.

அண்ணன் என்றும்மில்லாத மகிழ்வுடன் இருக்கிறார்.

“பூமணி! கடவுள் கண்ணைத் திறந்துவிட்டார். நான் பட்ட கஷ்டத்துக்கெல்லாம் பலன் கிடைத்து விட்டது. சுகுணாவின் கணவன் சந்திரனுக்கு ஒரு தம்பி இருக்கிறானாம், கொழும்பில் ஒரு கம்பனியில் வேலை; கைநிறையச் சம்பளம் கிடைக்கிறது. நானும் சந்திரனும் இதைப்பற்றித்தான் பேசிக்கொண்டிருந்தோம். அவர்களுக்கு இந்தச் சம்பந்தத்தில் நல்ல சந்தோஷம். வருகிற மாதமே திருமணத்தை நடத்திவிடவேண்டுமென்று சொல்கிறார்கள். ”

அண்ணா இதனை என்னிடம் கூறும்போது உணர்ச்சி வசப்படுகிறார். ஆனந்த மிகுதியால் அவரது கண்கள் கலங்குகின்றன.

என்னுள்ளமும் மகிழ்ச்சியால் துள்ளுகிறது. என்னுடைய நீண்டகால ஆசைகள் நிறைவேறப்போகின்றன. இன்னும் ஒரு மாதத்தில் நான் ஒரு பெரிய உத்தியோகத்தரின் மனைவியாகி விடுவேன்.

அண்ணனிடம் எந்தப் பதிலையும் சொல்ல என்னால் முடிய வில்லை. சமையல் அறைக்குள் ஒடிவிடவேண்டும் போல் இருக்கிறது. எனது மகிழ்ச்சியைக் கண்டுகொண்டால் அண்ணன் கேலி செய்வார். எனக்கு வெட்கமாக இருக்கும்.

எனக்குத் திருமணஞ் செய்துவைக்க அண்ணன் இவ்வளவு காலமும் எவ்வளவு கஷ்டப்பட்டார். இப்போது திருமணம் தானாகவே வந்து கைகூடப்போகிறது. ஏதாவது காரணங்களால் இம்முறையும் என் திருமணம் குழம்பிவிடாமல் இருக்கவேண்டுமே.

“பூமணி, எங்கள் இருவருக்கும் ஒரே பந்தலில் திருமணம் நடக்கப்போகிறது. சந்திரனின் தங்கையைத்தான் நான் திருமணஞ் செய்யப்போகிறேன்.”

‘ஐயோ அண்ணா!’ என்று அலற வேண்டும்போல இருக்கிறது. எனக்கு எல்லாம் ஒரே நொடியில் விளங்குகின்றன.

சந்திரனின் தங்கை ஒரு குருடி. எனக்கு வாழ்வளிப்பதற்காக ஒரு பிறவிக் குருடியை அண்ணன் திருமணஞ் செய்யப்போகிறார். அண்ணா வுக்கு முன்னால் என்னால் நிற்கமுடியவில்லை. நான் சமையல் அறைக்குள் ஒடுகிறேன்.

அண்ணன் சிரிக்கிறார். திருமணத்தைப்பற்றிச் சொன்னதும் எனக்கு வெட்கம் ஏற்பட்டுவிட்டதென நினைத்துச் சிரிக்கிறாரா? எனக்கு எல்லாமே மங்கலாகத் தெரிகின்றன.

இரவில் படுக்கும்போது தூக்கமே வருவதில்லை, என் தலையே வெடித்துவிடும்போல் இருக்கிறது.

அண்ணா! எனக்குத் திருமணஞ் செய்துவைப்பதற்குப் பணம் வேண்டுமென்ற காரணத்தால், நான் பெரியவளாகியதும் நீ மேலே தொடர்ந்து படிக்காமல், உன் உயர்வைக் குறுக்கிக்கொண்டு ஊரிலேயே உத்தியோகத்தில் அமர்ந்துகொண்டாய்.

உழைக்கத் தொடங்கியதும் உனது பணத்தில் உனக்காக ஒன்றும் செலவு செய்யாது என் திருமணத்திற்காகப் பணத்தைச் சேர்த்து வைத்தாய்.

அழகான பெண்ணுடன் வசதியான வாழ்க்கையை உனக்கு அமைத்துத்தரப் பலர் முன்வந்தபோதும் எனது திருமணத்தின் பின்புதான் உனக்கு திருமணம் என்று திடசித்தம் செய்துகொண்டாய்.

இப்போது எனக்காகக் குருட்டு வாழ்க்கை நடத்தவும் திட்டமிட்டு விட்டாயா?

நான் இதற்கு ஒரு போதும் சம்மதிக்கமாட்டேன். இந்தத் திருமணம் நடக்க ஒரு போதும் விடமாட்டேன். எனக்குத் தெரியும், நீ என் பேச்சைக் கேட்கமாட்டாய்.

எத்தனையோ இரக்கமற்ற இரவுகள் என்னைச் சித்திரவதை செய்கின்றன.

புகையிலைத் தரகர் பொன்னம்பலம் வழக்கம்போல எங்களது வீட்டுக்கு வந்து போய்க்கொண்டுதான் இருக்கிறார்.

அன்றொருநாள் தனிமையில் என்னிடம் கேட்கத்தயங்கியதை இன்று துணிவுடன் கேட்கிறார். நான் அதற்குச் சம்மதிக்கிறேன். என் மனதில் என்றுமில்லாத சாந்தி நிலவுகிறது.

விடிவதற்கு இன்னும் சிறிது நேரந்தான் இருக்கிறது. பொன்னம்பலம் எங்கள் வீட்டு வாசலில் காருடன் எனக்காகக் காத்திருக்கிறார். அவர் மிகவும் நல்லவர்; எனக்கு ஒரு குறையுமில்லாமற் காப்பாற்றுவார்

அண்ணன் அமைதியாகத் தூங்கிக்கொண்டிருக்கிறார்.

“அண்ணா ! உனக்கு மட்டும் தான் தியாகம் செய்யத் தெரியுமென்று எண்ணாதே. நான் உன் தங்கை எனக்கும் செய்யத் தெரியும் .”

கலங்கும் கண்களால் மானசீகமாக அண்ணனிடம் விடை பெறுகிறேன்.

அண்ணன் நித்திரையில் புன்னகை பூக்கிறார்.

கீழ்வானம் சிவந்து ஒளிமயமாகத் தெரிகிறது. எங்கோ பறவைகள் இனிமையாகப் பாடுகின்றன.

விடிந்துவிட்டது.

(1970இல் இலங்கை சாகித்தியமண்டலம் நடாத்திய அகில இலங்கைச் சிறு கதைப் போட்டியில் இரண்டாம் பரிசு பெற்ற கதை.)

– கால தரிசனம் (சிறுகதைகள்), முதற் பதிப்பு: ஏப்ரல் 1973, கணேச சனசமூக நிலையம், புன்னாலைக்கட்டுவன்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *