எல்லாம் இழந்தபின்னும்…

0
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: March 16, 2014
பார்வையிட்டோர்: 9,162 
 

அந்த வீட்டிலிருந்து வெளியே வரும்பொழுதுதெல்லாம் இப்படித்தான் அந்த முயலும் சிங்கத்தின் குகையிலிருந்து வெளியே வந்திருக்கும் என்ற நினைப்பு எப்பவும் வரும். வரும் வழியெல்லாம் முப்பது ஈரோவைப்பற்றிய கனவும் அது இருக்கா இருக்கா என்று ஜீன்ஸ் பொக்கற்றை தடவி பார்ப்பதும் வெளியே எடுத்துப்பார்த்து தொலைத்த நாட்கள் நினைவில் வர மனம் எதை எதையோ நினைத்து பெருமூச்சை வெளியே தள்ளியது. இப்¦;பாழுதெல்லாம் வாழ்வின் பிடிப்பு மெல்ல நழுவுவதுபோல் உணர்வு எழுந்து கொண்டே இருக்கிறது. எல்லாமே கொஞ்ச நாட்களில் சலிப்பு தட்டிவிடுகிறது. எப்பவும் வேலையையும் காசையும் அசைபோடும் மனசு எந்த வேலையென்றாலும் என்னைக்கேட்காமலே ஓம் என்று தலையாட்டுகிறது. எல்லா வேலையையும் ஒருநாள் தூக்கி எறிந்துவிட்டு எந்த அழுத்தமும் இல்லாமல் பழையபடி கவிதையை,கதையை அசைபோட்டபடி.

இப்படி பல முறை முடிவுகள் எடுத்திருக்கின்றேன். அப்பொழுதெல்லாம் இல்லாமை பல வழிகளில் மனவெளியில் தன் இருப்பை உணர்த்தி என் உறுதியை பொல பொலவென உடைத்தெறியும். ஆனால் இம்முறை அப்படியல்ல இனி இயலாது என்று கைகளும் கால்களும் கூட மறுக்கத் தொடங்கிவிட்டன. மனமோ வங்கிக்கடனை கணக்கு பார்த்து உடைந்து விழத்தொடங்கியது. என்ன செய்ய ? அம்மா புத்தகம் வாங்க நிறைய காசு வேணும். மகனின் குரல் திரும்ப திரும்ப கேட்டுக்கொண்டே இருந்தது. நான் உடைந்து விழும் பொழுதேல்லாம் காற்றோடு அடிபட்டு போகும் சருகைப் போல. வெள்ளைக்காரியும் என்னை அப்படித்தான் நினைத்திருக்கிறாள்

இல்லாவிட்டால் ஒரு சின்ன தவறுக்காக படிகளில் நடக்க முடியாவிட்டாலும் தவண்டு கொண்டு வாயில் துடைக்கும் துணியை கவ்வியபடி பாய்ந்து வந்த தோற்றம் ஏதோ ஒரு பெரிய நாய் என்னை கடித்து துப்புவதற்கு வருவதுபோல். ராகினி வீட்டு ஐ¢ல்லும் அப்படித்தான் வந்தது. அதுக்கு தன் குட்டிகளை நான் தூக்கிவிடுவேனோ என்ற பயம். ஆனால் வெள்ளைக்காரி தான் எஐமானியாகவும் நான் ஏதோ அடிமைமாதிரியும் அப்படித்தான் நினைத்திருக்கிறா. நான் பிறந்து வளர்ந்த என்ர மண்ணிலையும் கூனிக்குறுகி அவர்கள் கேட்கும் பொழுதெல்லாம் கர்ணணோடு ஒட்டிய கவசம் மாதிரி காவித்திரியும் அடையளா அட்டையை காட்டி களைத்து இவைகள் எல்லாம் வேண்டாம் என்றுதானே ஓடிவந்தனான். வந்த இடத்திலும்.

இந்த பொழுதுகளிலெல்லாம் அண்ணா பொகவந்தலாவிலிருந்து வீட்டு வேலைக்கு அனுப்பிய ஒவ்வொரு முகமும் என்னை பார்த்து சிரிப்பதுபோல் இருக்கும். அதிலும் கடைசியாக வந்த குமார். அவன் இப்ப கொழும்பில பெரிய மொத்த வியாபாரி. காலம் எப்படி எல்லாம் சுழன்றுகொண்டு ஓடுகிறது. ஏணிப்படியின் உச்சத்தில் இருந்த வாழ்க்கை என்ன நடக்கிறது என்று சிந்திக்கும் முன் மலைப்பாம்பின் வாய்க்குள் அகபபட்டு சட்டென்று கீழ் இறங்கிய விளையாட்டுப்போல் எல்லாம் நடந்து முடிந்துவிட்டது. இயலாமையும், இல்லாமையும் இணைந்து வேதனை தீயை வளர்த்தபடி இருக்க இவைகளிலிருந்து மீளமுடியாத மனசு பெரும் குரல் எடுத்து அழுகிறது.

இருட்டு எங்கும் இருட்டு. இலைகளை இழந்த மரங்களும், மெளனித்து கிடக்கும் வெளிகளும் வெறும் வெள்ளைச்சுவர்களும். சில சமயம் இந்த வெள்ளைச்சுவர்கள் என்னை நெரிப்பது போல் இருக்கும் பல சமயம் விரல்களை நீட்டியும் மடித்தும் என்னை குற்றவாளி ஆக்கும். இனி இயலாது வெள்ளைக்காரியின் வீட்டு சுவர்களும் கதவுகளும் கூட என்னை இப்படித்தான் அடிக்கடி முறைத்து பார்க்கும். அங்கு வேலை செய்யும் பொழுதெல்லாம் மனம் ஏதோ ஏதோ நினைத்து அழுதாலும். கை கூவர் பிடிக்க, கண் மணிகூட்டை பார்க்க, மனம் பெருக்கல் வாய்பாட்டை பெருக்கி பார்க்கும். இந்த மாதம் அண்ணாவுக்கு காசுஅனுப்பவேணும்.அனுவுக்கும் புத்தகம் வாங்க நிரம்ப காசு தேவை எண்டு சொன்னவர். கிறிஸ்மஸ் காசு ஜம்பது ஈரோ தருவா அதையும் சேர்த்து அனுப்புவம். இப்படி பல கற்பனைகள் முப்பது ஈரோவை சுற்றி சுற்றி ஓடும். கை படிகளை துடைக்கும்: வெள்ளைக்காரி கண்ணாடி முன்னால இருந்து கொண்டு ஒரு கண் என்னிலும் மறு கண் கண்ணாடியிலுமா இருப்பதை பார்த்தால் ஆறுகுள்ளரும் இளவரசியும் கதைதான் ஞாபகத்தில வரும் அதிலையும் இப்படித்தான் சூனியக்காரி இளவரசியை வீடுதுடைக்கவிட்டிட்டு எந்த நேரமும் கண்ணாடிக்கு முன்னால இருந்து கொண்டு கண்ணாடி கண்ணாடி இப்ப சொல்லு நான் அழக இல்லை அவள் அழகா? என்று கேட்டுக்கொண்டே இருப்பா. இவவும் அப்படித்தான் கேட்கிறவோ? நான் எனக்குள் சி¡¢ப்பதை பார்த்தால் போதும் நான் நினைக்கிறன் நீ எங்கோயோ போய்வராய் போல இருக்குது எனக்கு அப்பவும் சிரிப்புவரும். இந்த வெள்ளைக்காரர் எப்ப எப்படி இருப்பினம் என்று சொல்லவே முடியாது. போன கிழமை சிரிச்ச மனுசிதானே எண்டு சிரிச்சா இந்தக் கிழமை பிடரியை சிலுப்பிக் கொண்டு இருக்கும். கறுப்பிக்கு காசு வேணும் அவள் என்ன சொன்னாலும் வருவாள். இவள் அகதிதானே. இவளுக்கு மானம் ரோசம் ஒன்றும் இருக்காது இருக்கவும் கூடாது அப்படித்தான் மனதுக்கள் என்னைப்பற்றிய ஒரு வரைவிலக்கணத்தை வைத்திருப்பா. ஒரு நாள் வேலை செய்யும் பொழுது கேட்டாள். உனக்கு உன்ர நாட்டை பார்க்க ஆசை இல்லையே? ஏன் இல்லை ஒரு நாள் எண்டாலும் நான் பிறந்த வீட்டை பார்க்கவேணும். அப்ப என்னத்துக்கு இங்க வந்தனீ ? மனிதனுடைய உணர்வுகளை புரிந்து கொள்ள முடியாத ஜென்மத்திடம் என் உணர்வை கொட்டியதை நினைத்து வெட்கப்பட்டுபோனேன்.

ஓம் நான் ஏன் எல்லாவற்றையும் உதறிப்போட்டு இங்க வந்தனான்? ஏன் இப்படி ஒரு வேலைக்காரி வாழ்க்கைக்குள் உழன்று கொண்டு இருக்க வேணும். வேலையை முடித்துவிட்டு வீட்டுக்கு போனால் அங்கேயும் அதே தும்புத்தடியும் மப்பண்ணிற தடியும் எனக்காக காத்துக்கொண்டிருக்கும். எப்படியெல்லாம் என்னை அம்மா வளர்த்தா. நினைவுகள் பெருக பெருக இனி இந்த வீடு இருக்கும் தெருவுக்குள் என் கால்கள் வராது என்ற நினைப்பும் சேர விறு விறுவென கால்கள் நடைபோட தொடங்கும். ஆனால் எங்கேயோ என் முதுகிலயோ, அல்லது புறங்காலிலையோ எங்கேயோ அந்த வீட்டு தும்புத்தடியும் மப்பண்ணிற தடியும் என்னோட ஒட்டிக்கொண்டே வரும்.

இப்படித்தான் எனக்குள் எழும் எல்லா உணர்வுகளும்.நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் பொய்யாகி போகும் பொழுது வாழ்க்கை வெறுத்து போய்விடுகிறது. வருவன் என்று சொல்லிவிட்டுத்தானே வந்தனான். கட்டிப்பிடித்து பின் கைகள் இறுகி, விரல் நுனி தடவி, கண்கள் கலங்கி, ஏங்கி அம்மா நின்ற காட்சி அப்போதும் கால்கள் தன் பாட்டில் நீட்சியான பாதையை நோக்கி நடைபோட்டன. இடைவெளிகள் நீள நீள மனம் பெருங்குரல் எடுத்து அலைபோல் அழுதிருக்கும். அலைகள் அழுவது யாருக்கும் புரியாது. இலைகள் உதிரும் பொழுது மரங்கள் மெளனித்து அழுவது போல்தான்அலைகளும். நடந்து நடந்து பாதைகள் இல்லாத இடமெல்லாம் பாதைகள் வகுத்த பொழுது எத்தனை முகங்கள் நடைபோடத் தொடங்கின. வேர்களின் முகங்களில் காலால் புழுதியை வாரி இறைத்தபடி நடந்தன. புழுதி அப்பிய முகங்களில் வழிந்த கண்ணீரால் புழுதியை கழுவவே முடியவில்லை. இப்பொழுது நான் வேராகி வேர்களில் முளைத்ததெல்லாம் மலர்கள் என முகிழ்த்து நின்ற பொழுது அவை நெருஞ்சி முட்களாக முகம் காட்டி சிரித்தன .அப்போதுதான் நான் முதல் முதலாக உடைந்து போனேன். மறுபடியும் என் வேர்களை தேடினேன் அழுதழுது தேடினேன். அவை அழுது, களைத்து, உக்கி,நெருப்போடு போன சேதி காலம் கடந்து………………………

கரை கடந்து, கடல் கடந்து விலகி வரும் பொழுது அலைகள் உடைந்து சிதறி அழுத பொழுது என் காதுக்கு கிட்டவே இல்லை. மல்லாந்து படுத்து தனக்குதானே துப்புகிறது என்றல்லவா நினைத்திருந்தேன்.யாரும் அறிய முடியாத ஆழத்தில் துயர்கள் நிரம்பி வழியும் பொழுது வெடித்து ஓவென பெரும் இரைச்சல் கொண்டு எழுந்து பாறாங்கற்களில் மோதி மோதி அழுதது.,அழுத அலைகள் கரைகளுக்கு வருவதும் பின் பெரும் துயர் சுமந்து திரும்பியதையும் அது யாருக்கம் சொல்லவே இல்லை. கணவர் என்ற பெரும் சுவர் எல்லாவற்றையும் மறைத்துவிட்டது. எல்லா நினைவுகளுமே குளத்தில் போட்ட கல்லாக அடங்கிக் கிடக்கிறது. அவை மேலெழும் பொழுது கலங்கிப்போகும் குளம்போல்தான் நானும்.

எந்த நினைவையும் என்னால் தூர வீசி எறிய முடியவில்லை.அவை எப்போதும் ஓர் மூலையில் பதுங்கியிருந்து சில சமயம் என்னை பார்த்து சிரிக்கும் பல சமயம் முறைக்கும். அது எலலோருடைய குரலிலும் என்னை கேள்வி கேட்கும். .யாழ்ப்பாணத்திலிருந்து வந்த அக்காவிடம் எதை எதையோ கேட்க மனம் துடித்தது. ஆனால் பாலைமரம் எப்படியிருக்கிறது? என்று மட்டும்தான் கேட்க முடிந்தது. கடந்தகாலங்கள் என்னை பிடித்து வைத்துக்கொண்டிருக்கிறதா? அல்லது நான் அதை பிடித்து வைத்திருக்கின்றேனா? எல்லவாற்றையும் உதறிவிட்டுத்தானே வந்தேன்.

பகலை தொலைத்த நாட்கள் அவை. வெறும் இருட்டுமட்டுமே பரவிக்கிடந்தது. எல்லாவற்றையும் தொலைத்த வெறுமை. மனிதர்களின் புரியாத மனம் குழம்பிப்போய் கிடந்தது

குழம்பிப்போய் கிடக்கும் வானத்தை போல. சில வேளைகளில் மட்டும் வெளிச்சம் பரவும் அதுவும் சில நிமிடங்களில் ஓடி ஒளிந்து கொள்ளும். இரவின் அமைதி தொலைந்து போயிருந்தது. ஏராளமான கனவுகளை தொலைத்து நடுங்கிய இரவில் வீடும,; காற்றும், அந்த ஊரும், சந்தியும் எல்லாவற்றையும் உள்வாங்கி தனக்குள் புதைத்து வைத்துக் கொண்டிருந்தது. யாழ்ப்பாண வீதிகள் அங்கு வாழ்ந்தவர்களின் மனதை பிரதிபலித்துக்கொண்டிருந்த காலம் வேற்று முகங்களினால் பறிக்கப்பட்டுக்கொண்டிருந்தது. எல்லா நிகழ்வும் நிரப்படாத இடைவெளியாய் நீண்டு கொண்டே போனது. காட்டிக் கொடுப்போரின் விரல்களும் எல்லா திசைகளிலும் நீள நீள காணமல் போவோரின் பட்டியலும் நீண்டு கொண்டே போனது. அதே விரல்கள் என் தோழியின் கணவர் முன் நீண்ட பொழுதுதான் எனக்குள் பயம் இன்னும் அதிகமாக படரத் தொடங்கியது. இலைகள் அசைந்தாலும், இரவு கவியத்தொடங்கினாலும், நாய்கள் குரைத்தாலும் எல்லாவற்றுக்குமே பயம். பயம் வாழ்க்கையை ஆதிக்கம் பண்ணத் தொடங்கியது. கற்பனைகளை சுமந்த முகங்களெல்லாம் மரண பயத்தை சுமந்தபடி உலவியதை பார்க்க வாழ்க்கையின் கொடுரம் புரியத்தொடங்கியது. சிரித்தும், கதைத்தும் கழிந்த வாழ்க்கை அடங்கி, ஒடுங்கி, நடுங்கி வாழமுயன்றபோது நாளைய வாழ்வு கேள்விக் குறியானது. கேள்விகள் நிறைந்து நிறைந்து வழியத் தொடங்கியது. அத்தனை முகங்களிலும் துயரமும், பயமும், கேள்வியும் மட்டுமே. போரின் நிஜமுகத்தை எதிர் கொள்ள என்னால் முடியவில்லை என் முகத்தை எங்கேயாவது ஒளிக்க வேண்டும்.

பனிப் புகார் என் அடையாளத்தை மறைக்கத்தொடங்கியது. வீட்டை விட்டு ஓடியகால்கள் பனிகளுக்குள்ளும், ஆற்றிலும் புதைந்து விறைத்தன.புதைந்த கால்களின் அழுகுரல் ஊரில் கேட்டது போலவே. ஆனால் இங்கு ஊர் அசையவே இல்லை.ஏது இயலாது என்று ஓடி வந்தேனோ அது இங்கேயும்……………………. வழமைபோலவே என் கால்கள் புதிய பாதையை நோக்கி நடந்து நடந்து முற்றுப்புள்ளியில் நின்றபோது அடையாளங்களை அழித்தும் ஒழித்தும் முகத்தில் பொய்களை அப்பியபடி இங்கேயும் விஷஜந்துக்கள் பற்களை நீட்டியபடி காத்திருக்கின்றன என்பதை அறியாத அப்பாவியாய்.

அப்போது எல்லாவற்றிக்கும் பெயர் இருந்தது. வீட்டுக்கும், அறைகளுக்கும், எங்களுக்கும். இப்போ வெறும் கற்குவியலும் மணலுமாக இருக்கும் வீட்டுக்கு என்ன பெயர்? இங்கு நாங்கள் இருக்கும் வீட்டுக்கு பெயர் அகதி முகாம். எனக்கும் அகதி பொம்பிளை விறாந்தை, கோல், குசினி, சாப்பாட்டறை, சாமிஅறை, படிக்கிறஅறை, படுக்கைஅறை எல்லாமே ஒரு அறை. அம்மாவுக்கு கடிதம் எழுதுவம் என்று நினைத்தவுடன் மனம் வரிகளை எழுதி எழுதி அழித்துக்கொண்டு இருக்கும். நான் நலம் அதுபோல் நமசிவாய பள்ளிக்கூடத்தில சிவஞான ரீச்சர் கடிதம் எழுதுவது எப்படி? எண்டு எப்ப காட்டித்தந்தாவோ அதில இருந்து இப்படித்தான் எழுதிறன். வெளியில போனாலும் வெள்ளைக்காரர் எப்பிடி சுகமா? ஏன்று கேட்டால் போதும் எங்கிருந்துதான் இந்த பொய் சிரிப்பு வந்து ஒட்டிக்கொள்கிறதோ தெரியவில்லை. எல்லாமே பொய்யாகி நான் உடைநது அழும்பொழுது வழியும் கண்ணீர் கூட பனியில் இறுகி நிற்கும்.

அழுவதற்கும் நேரம் இல்லாத வாழ்க்கை. எவர் கண்களுக்கும் புலப்படாத விலங்கு கால்களில் பூட்டப்பட்டுக்கிடந்தது.ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் நடந்து நடந்து அலுக்கும் மனதை இசைக்கும் கருவியாக பழைய நினைவுகள். நினைவுகள் தழும்பி தழும்பி பல சமயம் அதுவும் அழும். அம்மா, வீடு, ஜிம்மி என்னை அழவைக்க வேறு எதுவும் தேவையேயில்லை. என்மேல் யார்கை பட்டாலும் பாய்ந்து கடிக்கும் ஜிம்மி. அம்மா சொல்லுவா நீ ஜிம்மிவேணுமென்டு ஜில்லிட்ட கடி வாங்கினனிதானே அதனாலதான் உனக்கு ஆர் அடிச்சாலும் அவையளை கடிக்குது. எங்கட றோட்டில உள்ள எல்லாரும் சொல்லுவினம்.

இது நாய் இல்லை கடவுள்.

ஓம் நானும் அப்பிடித்தான் நினைக்கிறன் எண்டு அம்மாவும் சொல்லுவா. அது எப்பவும் இப்பிடித்தான் சா¢யா நாலுமணிக்கு அம்மாவோட சேர்ந்து கேற்றில காவல் நிற்க்கும். சந்தியில என்ரை வெள்ளை சாறி தொ¢ஞ்சா போதும் பாய்ந்து கொண்டுவரும் தண்ணி எடுக்க றோட்டில நிற்க்கிற எல்லாரும் சொல்லுவினம் சுகந்தி பள்ளிக்கூடத்தால வறாள்.

என்ர அம்மா மாதிரியே ஜிம்மியும் எப்பவும் என்னோடையே இருக்கும். எல்லாரையும் கடிக்கிற ஜிம்மி ஏன் கணக்கு மாஸ்ரை கடிக்கிதில்ல? விடியாத இருட்டில இருட்டு மாதிரியே இருக்கிற அவரின்ட நிழல் விறாந்தை யன்னல் கண்ணாடியால தெரியும். பிறகு ராகினி, கமலா வருவினம் எனக்கும் ராகினிக்கும் மடக்கை கணக்கு படிப்பிக்கத்தொடங்குவார்.மார்கழி மாதம் வந்தா போதும் பண்ணைப் பாலச்சத்தம், நல்லூர்மணி, பெருமாள்கோவில் சுப்பிரபாதம், எல்லாம் யாழ்தேவிகூட காதுக்க கூவும் அதில நாங்கள் நித்திரை தூங்கிறதை பாங்கொலி காட்டிக்கொடுக்கும். இறுக்கி குட்டுவார். ஆனால் ஜிம்மி பார்த்துக்கொண்டு சும்மா இருக்கும். சோதனை வந்தாபோதும் நானும் அக்காவும் சரஸ்வதி கலண்டருக்கு சண்டை போடத் தொடங்கிவிடுவம். பிறகு அம்மா பூபாலசிங்கம் கடையில இரண்டு மெய்கண்டான் கலண்டர் வாங்குவா. நான் கலண்டரில எனக்கு மட்டும் விளங்கிறமாதிரி ஏதாவது குறிப்பு குறிச்சுவைச்சிட்டு அதில கட்டியிருக்கிற சணலில பிடிச்சு ஆட்டிக்கொண்டு போவன். அக்கா சொல்லுவா எனக்கென்ன கடவுள் உன்னை கோபிப்பார். அக்கா எப்பவும் இப்பிடித்தான். நல்லா பொய் சொல்லிறன் எண்டு அம்மாட்டை கோள்மூட்டுவா. அம்மாவும் நல்லுர்ர் உதய பூஜைக்குபோற நேரமெல்லாம் திருஞர்ன சம்பந்தர் ஆதினத்துக்கு கூட்டிக்கொண்டுபோய் மணி அய்யரிடம் சொல்லுவா. சுவாமி இவள் வாய்திறந்தா பொய் சொல்லிக்கொண்டே இருக்கிறாள். அவரும் ஆதினத்தில பெரிய கரும்பலகையில ஒட்டியிருக்கிற படத்தை காட்டுவார். இங்க பார் பொய் சொன்னா என்ன தண்டனை கிடைக்கும் கண்டியோ? அதில அம்புலிமாமாவில வருகிறவை மாதிரி கொம்புவைச்சு பெரிய மீசைவைச்ச அரக்கர்கள் நகங்களை பிடுங்கிக் கொண்டு இருப்பினம். மற்றவை கொதிக்கிற எண்ணைக்குள்ள கைவைச்சு அமுக்குவினம். எனக்கு பயம்வந்திடும். அக்கா என்னை பார்த்து சிரிப்பா. பிறகு சுடச்சுட கற்கண்டு போட்ட பால்தீர்த்தம் தருவார். இரண்டு தரம் வாங்கி குடிச்சதுக்கு அம்மாட்டை நுள்ளுவாங்குவன். அக்கா அம்மா சொல்லிற மாதி¡¢யெல்லாம் கும்பிடுவா. ஆனால் நான் நாங்கள் வீட்டை போறதுக்கிடையில காப்புக்கடைக்காறன் பலுர்ன் கடைக்காறன், இனிப்பு விற்க்கிற பொரிகடலை வண்டில்காரன் எல்லாரும் எழும்பி கடையை திறந்திட வேணும் கடவுளே எண்டு முருகனிட்டை கேட்டுககொண்டே இருப்பன்.

அக்காவின்ர பள்ளிக்கூட சூட்கேஸ் உள்மூடியில சரஸ்வதி, பிள்ளையார் எல்லாரையும் ஒட்டிவைச்சிட்டு படிக்க முதல் கும்பிட்டிட்டுதான் படிக்கத் தொடங்குவா. சமயபாடத்தில கேள்வி கேட்டுக்கொண்டே இருப்பா. நா¢யை பா¢ ஆக்கினது ஆரெண்ட சொல்லு, திருமறைக்கதவை திறக்க பாடினது யார்? மூடப்பாடினது யார்? நீ முதல்ல சமயபுத்தகத்தை மூடு இவையளுக்கு வேற வேலை இல்லாமல் அற்புதங்கள் செய்தவை இவையாலதான் சமயபாடத்தில கேள்வி கூடிக்கொண்டே போகுது.அதுக்கும் அம்மாட்டை கோள்மூட்டி அடிவாங்கி தருவா. சோதனை முடிந்த பிறகு இரண்டு விரலில ஒண்டை தொடு என்டு நெடுகலும் கேப்பா. ரஞ்சன,; ராஜன், ரவி, பபா எல்லாரும் பிறேமக்கா வீட்டுக்கு பின்னால இருக்கிற சோனக வழவுக்க போய் வெடிக்கிற காய்க்கு எச்சில துப்பிப்போட்டு கண்ணை மூடிக்கொண்டு வெய்யிலில பிடிப்பம். அது வெடிச்சா பாஸ் அக்கான்ர காய் சத்தத்தோட வெடிக்கும். பிறகு பள்ளிக்கூடத்தால வரேக்க இந்த கல்லை வீடுமட்டும் காலால தள்ளிக்கொண்டு போன நான் பாஸ்பண்ணுவன் எண்டு சொல்லி தள்ளிக்கொண்டே வருவா அக்காவுக்கு எல்லாம் சா¢யாத்தான் இருக்கும். ஆனா சோதனை மறுமொழி மட்டும் மாறிவரும். பிறகு கொஞ்ச நாளைக்கு எனக்கு பிறேமக்கா வீட்டுக்கு போய் எங்கட வீட்டில இல்லாத திருவாத்தி பூ பிய்க்கிற வேலை இருக்காது. எனக்கு ஒரே யோசனையா இருக்கும் எல்லாம் சா¢யாத்தானே வந்தது. பிறகேன் அக்கா பாஸ்பண்ணேல்ல?

எந்தக்கேள்விக்கும் எனக்கு சா¢யா விடை கிடைப்பதே இல்லை. எந்த வேலை தேடிப்போனாலும் முன் அனுபம் இருக்கா…….?

நீங்க வேலை தந்தால்தானே முன் அனுபவம் வரும். வெள்ளையனின்ர முகம் மெல்ல சிவக்கும்

இந்த வேலைக்கு படிச்சனியோ?

உங்கட அரசாங்கம் என்னை மொழியே படிக்க விடேல்லை.

ஆனா உனக்கு வாய் பெரிசா இருக்கு.

எல்லாம் உங்கட ஆட்க்களோட பழகி பிடிச்சது

உனக்கு சரியான வேலை ஒன்று இருக்குது. காலையில கடை திறக்க முதல்வந்து கூட்டி துடைச்சிட்டு போ. இப்ப எனக்கு காது எரியும் ஏன் அதுக்கு முன் அனுபவம் வேண்டாமோ? என்ர கோபத்தை காதவில மட்டும்தான் காட்ட முடிந்தது. பகல் வருவதும் போவதுமாக இருந்தது. ஆனால் இரவுமட்டும் நிரந்தரமாக தங்கியிருந்தது. கடலையும் காற்றையும் தொலைத்து உயர்ந்த கட்டிடங்களுக்கிடையில் சிறு குப்பையாக வாழும் வாழ்க்கை சலிப்பும் வெறுப்பும் கலந்த கலவையாக. தொலைகாட்சி தன்பாட்டில் ஓடிக்கொண்டிருந்தது. அங்கேயும் வெள்ளைக்கா¡¢ கதிரையில இருக்க அமொ¢க்க கறுப்பு இன மனுசி மண்டியிட்டுவீட்டை துடைத்தக்கொண்டிருந்தாள். எ¡¢ச்சலுடன் சனலை மாற்றினேன். ஓட்டப்போட்டி வெள்ளையர்களுடன் கறுத்தவர்களும் விடதே விடதே என மனம் பதைபதைத்துக் கொண்டிருந்தது. படாசாலையால் வந்து பிள்ளைகள் கேட்கும் கேள்விகளுக்கு சில வேளைகளில் என்னிடம் பதிலே இருக்காது. நாங்கள் ஏன் அம்மா கறுப்பா பிறந்தனாங்கள்? இந்த சோப்போட்டு குளிச்சா வெள்ளையாவருவமோ? லூக்காஸ் இதுபோட்டுத்தான் குளிக்கிறவனாம். அதுதான் அவன் வெள்ளையா இருக்கிறானோ?. அம்மா ஏன் சாத்தானையும் கள்ளனையும் கறுப்பா காட்டினம்? பள்ளிக்கூடத்தில எல்லாரும் படம் கீறேக்க என்னை பார்க்கினம். எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டிருந்த பெரிய மகன். மை பமிலியை பற்றி எழுதவேணும் என்னுடைய அம்மா ஒரு புட்ஸ் பிறா (துடைக்கிறமனுசி) எண்டே எழுதிறது. மற்ற பிள்ளையள் எல்லாம் தங்கட அம்மா லேரா (ஆசிரியர்), பாங்கில புக்கள்ரா¢ன்(கணக்காளர்), எண்டு எழுதிக்கொண்டு வருவினம் எங்கட அம்மாவும் ஜ ஏ பி எல்லாம் படிச்சவ எண்டுதானே அப்பா சொன்னவர். பிறகேன் சுமிற்சிக் (ஊத்தை) வேலையெல்லாம் செய்யிறா? எங்களோட படிக்கிறவை ஆராவது கண்டிட்டா எங்களுக்கு வெக்கமா இருக்கு அம்மா. ஓம் என்கிறமாதிரி மற்றப்பிள்ளைகளும் என்ர முகத்தை பார்ப்பினம். பிள்ளைகளின் ஆதங்கங்கம் ஒவ்வொன்றாய் எதிரொலித்துக்கொண்டிருக்க. முள்ளந்தண்டில் குளிர் ஊசியை ஏற்றியபடி இருந்தது. கால்கள் சிங்கத்தின் குகையை நோக்கி தன்பாட்டில் நடைபோட்டது. காலம் என்னோடு வர மறுக்கின்றது. நானும் அதுவும் எப்போதும் விலகியபடி.

பள்ளிக்கூட யூனிபோமை கஞ்சிபோட்டு அலம்பி அயன்பண்ணி கசங்கமா கை முட்டாமல் றோட்டுக்கு வந்தா தேவிகாவின்ர அம்மா குப்பை லொறிக்குள்ள குப்பையை அள்ளிபோடும் பொழுது எழும் புழதியில் கோபம் வரும். என்னுடைய கோபம் தேவிகாவை அழவைக்கும். மரங்களும் வெள்ளைக்காரி மாதிரியே. சருகுகளை அள்ளிபோட்டிட்டு முதுகைதடவியபடி திரும்பி பார்த்த அடங்கா பிடரிமாதிரி தலையை உலுப்பி திரும்பவும் கொட்டிப்போட்டு என்னை பார்க்கும்.. அள்ளின சருகுகளை குப்பை வாளிக்குள் கொட்டும் பொழுது பாடசாலைக்கு போகும் ஒவ்வொரு சிறுவர்களின் பார்வையிலும் தேவிகா தொ¢வாள். கொட்டடி பள்ளிக்கூடத்தில் மாமரத்துக்கு கீழே வட்டமாக இருந்து கொண்டு முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்று அர்த்தமே புரியாது கத்தி கத்தி பாடமாக்கினதன் அர்த்தம் இப்பொழுதுதான்……………. ரொயிலற்றை கழுவும் பொழுது தண்ணீரைவிட கண்ணீரால் கழுவுவது அதிகமாக இருக்கும். வாளியின் கம்பிச்சத்தம் எதையெல்லாமோ நினைவுபடுத்தும். கோடியால் வந்து போகும் ஊத்தை துரை வந்திட்டான் என்று அம்மாவுக்கு அடையாளம் காட்டுவது இந்த வாளியின் கம்பிச்சத்தம்தான். ஒரு நாள் வாளியை வாங்கும் பொழுது ஊத்தை துரையின் விரல் என் கைமீது பட்டுவிட்டது என்பதற்காக இழுத்துவைத்து முழுகவார்த்த அம்மா. இப்போ எதைவைத்து என்னை முழுகவார்ப்பா? பொய்யாகி போன வாழ்க்கையில் இனி சொல்வதற்கு எதுவும் இல்லை கேட்பதற்கும் ஆரும் இல்லை.

தொலைகாட்சியில் பிரிந்த ஜேர்மனி ஒன்றான நாளைப்பற்றிய விமர்சனம் ஓடிக்கொண்டிருந்தது. வெள்ளைக்காரி ஒரு கையில் பாண்துண்டும் மறுகையில் கோப்பியுமாக மிக ஆர்வமாக பார்த்துக்கொண்டிருந்தா. நானும் ஒரு கையில் துடைக்கிற துணியும் மறுகையில் தும்புத்தடியுமாக ஓடிக்கொண்டிருந்தேன். ஒரு நொடியில் மதில் கீழே சரிந்து கொண்டிருந்தது. பலர் அதன் துண்டுகளை இடிபட்டு எடுத்துக்கொண்டிருந்தார்கள். இரண்டு பக்கமாக உறவுகளை பிரித்து வைத்திருந்த மதிலின் சரிவை வானங்கள் எழுந்து வெடித்து மகிழ்வை தெரிவித்துக்கொண்டிருக்க பிரிந்த உறவுகள் கட்டிப்பிடித்து ஆனந்தக் கண்ணீர் வடிக்க, எனக்கும் அழுகைவந்தது. இப்படித்தான் ஏ 9 பாதை திறக்கும் பொழுது இருந்தாக அண்ணா எழுதியிருந்தார். இதை மூடும் பொழுது எத்தனை உயிர்களின் இரத்தம் இந்த மண்ணில் சிந்தியிருக்கும். எத்தனை உறவுகள் பிரிக்கப்பட்டிருக்கும். எத்தனையோ நாட்களாக மெழுகுதிரியை ஏற்றிக்கொண்டு ஒரு ஓரத்தில் நின்று வயது முதிர்ந்த அன்னையர்கள் தங்கள் குழந்தைகளின் பெயர்களை சொல்லிச் சொல்லி அழைத்தார்களாம். அவர்களின் ஒப்பாரிகளை ஏக்கங்களை எல்லாவற்றையும் உள்வாங்கியும் இரங்காத சுவர் இப்போ மண்ணில் சாய்ந்து கிடந்தது. அந்தகாட்சியும,; பிள்ளைகளை இறுதிக்காலம் வரையும் காணது ஏக்கத்துடன் இறந்த அத்தனை அம்மாவைபற்றிய நினைவும் என்னை ஆக்கிரமித்துக்கொண்டிருக்க என்கையிலிருந்த பூனையின் கோப்பை என்னை அறியாமலே விழுந்து சிதறியது. ஓரு கணம் நடுங்கிப்போனேன். வெள்ளைக்கா¡¢யின் உள்ளிருந்து பிடா¢யை சிலுப்பிக்கொண்டு சிங்கம் எழும்பியது. என் உயிர் சிங்கத்தின் கோரப்பற்களுக்குள் அகபபட்டு துடிக்கும் காட்சி என் கண்முன்னே வி¡¢ந்தது. சிங்கத்தின் கண்கள் என் அச்சத்தையும், துயரையும் உள்வாங்கியபடி நெருப்பை கக்க தொடங்கியது. என்னுள் இருந்த இரத்தம் வேர்வையாக கொட்டியது. உடல் அனலின் பிடியில் சிக்கியது. இம்முறை அகதி வேலைக்காரியின் கையிலிருந்த தும்புத்தடியும், ஊத்தை துணியும் அதற்கான இடத்தில்போய் சுழன்று கொண்டு விழுந்தது. வெளியே பாரம் தாங்காமல் மேகம் கீழ்இறங்கிக்கொண்டிருந்தது.

– சாந்தினி வரதராஜன் (ஜேர்மனி)

‘பதிவுகள்’/ ‘தமிழர் மத்தியில்’ ஆதரவுச் சிறுகதைபோட்டி 2004 – முதற் பரிசு!

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *