கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி  
கதைப்பதிவு: October 21, 2012
பார்வையிட்டோர்: 18,261 
 

தலைவர் பார்ட் பார்ட்டாய் வந்து இறங்கினார். தலையிலிருந்து மார்பு வரை, மார்பிலிருந்து இடுப்பு வரை, இடுப்பிலிருந்து முழங்கால் வரை, முழங்காலிலிருந்து பாதம் வரை என நான்கு பெரிய வர்ணத் துண்டுகள்.

சாரம் முன்பே கட்டப்பட்டுவிட் டது. துண்டுகளை ஒட்டுப் போட் டுத் தூக்கி நிறுத்த வேண்டியதுதான் பாக்கி.

பெருமாளின் தலைமையில் ஆட்கள் பம்பரமாய்ச் சுழன்று கொண்டிருந்தனர். நாளைக் காலை யில் கூட்டம். விடிவதற்குள் முடித் தாக வேண்டும். அந்தப் பரபரப்பில் ஏற்பட்ட பதற்றமும் எரிச்சலும் அவருடைய ஏவல்களில் தெரிந் தன.

பையன் டீ கொண்டு வந்து கொடுத்தான். வேலையிலிருந்து கண்களைப் பெயர்க்காமலே, பெருமாள் டீயை வாங்கிக் குடித்தார்.

பெருமாள் பழைய தலைமுறை யைச் சேர்ந்தவர். பெரிய பெரிய தலைவர்களையெல்லாம் அவர் பார்த்திருக்கிறார். அவர்களுக்கெல் லாம் இப்படி ராட்சஸக் கட்- அவுட்டுகள் தேவைப்படவில்லை. அவர்கள் சுயமான விஸ்வரூபத்தில் உயர்ந்து, மக்கள் மனத்தில் பிர மாண்டமாக நின்றார்கள். அவர் களுடைய உயரம் துணியாலும் தூரிகையாலும் மரத்தாலும் ஆன தல்ல… அவர்களைத் தூக்கி நிறுத்தச் சாரமும் தேவைப்பட்டதில்லை.

”ஐயா…” என்ற குரலில் அவர் சிந்தனை கலைந்தது. எதிரில் ஓர் இளைஞன்.

”நானும் கூடமாட ஒத்தாசை செய்யட்டுமா?”

”வேண்டாம் தம்பி… போதுமான ஆட்கள் இருக்காங்க.”

”கூலி ஒண்ணும் வேணாங்க. சும்மா செய்றேன். தலைவருன்னா எனக்கு உசுரு. அவருக்குக் கட்- அவுட் வெக்கறதிலே நானும் சேந் துக்கணும்னு ஆசையா இருக்கு.”

”ஓம் பேரு என்ன?” – பெருமாளின் கேள்வியில் கொஞ்சம் வியப் பும் கலந்திருந்தது.

”கபாலிங்க…”

”சரி, போய்ச் செய்!”

கபாலி உற்சாகமாக ஓடினான். சாரத்தில் கால்பகுதி கட்டப்பட்டு முடிந்திருந்தது. அவன் அந்தக் கால் களில் விழுந்து வணங்கினான். எழுந்து, பக்கத்தில் தரையில் கிடந்த தலைவரின் முகத்தை ஆசையோடு தடவினான். வலை வீசும் இந்தப் புன்னகை யாருக்கு வரும்? அவனுக் குள் சுரந்த பயபக்தி முகத்தில் கசிந்தது.

கபாலி கட்சிக்காரன் அல்ல. உண்மையான அர்த்தத்தில் அரசிய லும் அவனுக்குத் தெரியாது. காட் டப்படுவதை நம்பும் இனம் அவன். தலைவர் கிழவியின் தலையைத் தடவுவது, ஊனமுற்ற சிறுவனுக்குச் சக்கர வண்டி கொடுத்து அவனுக்கு முத்தமிடுவது, தீ விபத்தில் வீடு இழந்தவர்களுக்கு உணவுப் பொட் டலம், வேட்டி, சேலை கொடுப்பது…இதையெல்லாம் படங்களில் பார்த்து… ஏழைகளுக்காக உருகி உருகிப் பேசுவது, அவர்கள் உரிமைகளுக்காக வீராவேசமாக முழங்குவது… இதையெல்லாம் கேட்டு, அவனுடைய இதயத்தில் ஒரு சிம்மாசனம் போட்டு அவரை உட் கார வைத்திருந்தான். செய்தித்தாள்களில் காட்டப்படும் வெளிப் பக்கத்தை மட்டுமே தரிசிக்கிறவன் அவன். தூண்டில் முள்ளை மறைக்கும் புழுவை அடையாளம் காணும் பக்குவமெல்லாம் அவனுக்கு இல்லை.

தலைவர் எங்கே பேசினாலும் அங்கே போய் விடுவான். ‘என் கண்ணின் மணிகளே!’ என்று அவர் தொடங்கும்போது பரவசமாகி மெய்சிலிர்த்து விசிலடித்து, ஆரவாரித்துக் கைதட்டுவான். தேர்தல் காலத்தில் அவருக்காகப் பசி தாகம் பார்க்காமல் வேலை செய்வான். போஸ்டர் ஒட்டுவான். சுவரில் எழுதுவான். ஊர்வலம் போவான். உரக்கக் கோஷம் போடுவான். அவரை யாரா வது குறைத்துப் பேசினால் சண்டைக்குப் போவான். இதில் எத்தனையோ முறை அடி, உதை பட்டு ரத்தம் சிந்தியிருக்கிறான். இதை யெல்லாம் தலைவருக்குக் காணிக்கையாகவே நினைத் துக் கொள்வான். தேர்தலில் தலைவர் ஜெயித்துவிட் டால் தானே ஜெயித்தது போல் பட்டாசு கொளுத்திக் கூத்தாடுவான். அந்த ராம னுக்குத் தான் ஓர் அணில் என்று அவனுக்கு நினைப்பு. ஆனால், அவன் முதுகு எப்போதும், யாராலும் தடவிக் கொடுக்கப்பட்ட தில்லை. அதை அவன் எதிர்பார்த்ததும் இல்லை.

நேரம் ஆக ஆகப் பெருமாளுக்குப் பதற்றம் அதிகரித்தது. கொஞ்ச நேரத்துக்கு முன்னால்தான் அமைச்சர் ஒருவர் வந்து வேகம் போதாதென்று கெட்ட வார்த்தையில் திட்டிவிட்டுப் போனார். எனவே, பெருமாள் பரபரப் பாக ஆட்களை வேகப்படுத் தினார்.

அது கட்சிக் கூட்டம் தான். ஆனாலும் மேடை, பந்தல் வேலைகளில் அரசாங்க அதிகாரிகள் பயபக்தியோடு ஈடுபட்டிருந்தனர். அரசாங்க வாகனங்கள் இங்கும் அங்கும் புழுதி பறக்க ஓடிக்கொண்டு இருந்தன.

”இவங்களுக்கு எல்லாம் பெரிசா காட்டணும். அதுவும் அவசரமா காட்டணும். ஜன நாயகம்கிறானுங்க… அமைச்சர் கள் ஜனங்களுடைய சேவகர் கள் என்கிறானுங்க… ஆனா, ஜனங்களைவிட தான் ஒசத்தி… ஜனங்க தங்களை அண்ணாந்து பாக்கணும்… தங்கள் கால்ல விழுந்து வணங்கணும்… கப்பம் கட்டணும்னு நெனக்கிறா னுங்க. தெரியாத தேவதையை விட தெரிந்த அரக்கன் மேல்ங் கற ஜனங்க மனப்பான்மையை இவங்க நல்லாத் தெரிஞ்சு வெச்சிருக்கானுங்க. அதனாலே தங்களுடைய உருவத்தை, முகத்தைச் செயற்கையா அசிங்கமா பெரிசாக்கிப் பாமரர் மனசிலே பலவந்தமா திணிக்க முயற்சி பண்றாங்க. உருவத்தைப் பெரிசா காட்டினா பெரிய மனுஷன் ஆயிடமுடியுமா? இது படங் களை நம்புற தேசம். அத னாலே எல்லாரும் படங்காட்ட றானுங்க. தூத்தேறி…” – பெரு மாள் காறித் துப்பினார்.

தலைப்பகுதியைப் பொருத்திவிட்டு ஆட்கள் இறங்கிக் கொண்டிருந்தார்கள். கபாலிக்கு உடையெல்லாம் அழுக்காகிவிட்டது. உடம்பில் அங்கங்கே சிராய்ப்பு. ஆனால், அவனுக்குக் களைப்போ, வலியோ தெரியவில்லை. அவன் தூரத்தில் போய் நின்று பார்த்தான். தலைவர் வான ளாவ உயர்ந்து அட்டகாசமாக, கம்பீரமாக நின்றுகொண்டு இருந்தார். பின்னால் இருந்த கோயில் கோபுரம் கூடத் தெரியவில்லை. அதைவிட உயரமாக அதை மறைத்துக் கொண்டு நின்றிருந்தார் தலைவர். அந்தப் புன்னகை… யாருக்கு வரும் அந்தப் புன் னகை? கபாலியின் உடம்பெல்லாம் பரவசம் பரவியது. அவன் கையெ டுத்துக் கும்பிட்டான்.

”எவ்வளவு செலவாகியிருக்கும்?” – யாரோ ஒருவன் கேட்டான்.

”ஐம்பதாயிரம் ரூபாய்னு சொன் னாங்க…”

”ஐம்பதாயிரமா? அடப்பாவிங் களா..! ஐம்பது குடும்பம் ஒரு மாசத் துக்குப் பசியில்லாம சாப்பிடலாமே… ராட்சஸன் மாதிரி அவ்வளவையும் விழுங்கிட்டு நிக்கிறதைப் பாரு!”

கபாலிக்கு இதயத்தில் ‘சுரீர்’ என்றது. கோபத்தோடு திரும்பிப் பார்த்தான். கட்டையும் குட்டை யுமாக இருந்தவன்தான் அப்படிப் பேசிக்கொண்டிருந்தான்.

கபாலி அவன் மேல் பாய்ந்தான். ”எங்க தலைவரு தெய்வம்யா..! அவரைப் போய் ராட்சஸன்னா சொல்றே?” என்று கத்தியபடி அவன் முகத்தில் குத்தினான்.

எதிர்பாராத தாக்குதலில் நிலை குலைந்து திகைத்துப் போன அந்த ஆள் தன்னைச் சமாளித்துக் கொண்டு, கபாலியை ஓங்கி மிதித் தான். கபாலி கீழே விழுந்தான்.

”இவனாடா தெய்வம்? ஏண்டா தெய்வம்ங்கற வார்த்தையை இப் படி அசிங்கப்படுத்துறீங்க… உன்னை மாதிரி முட்டாப்பசங்களுக்குத் தான்டா இவன் தெய்வம். உடுத்த மறு வேட்டி இல்லாம இந்த ஊருக்கு வந்தவன்டா ஒங்க தலைவன். இப்போ இந்த ஊர்லே பாதி அவனுக்குச் சொந்தம். எங்கேயிருந்துடா வந்தது இவ்வளவு பணம்? குடியை ஒழிக்காம சாக மாட்டேன்னு கூவுறானே ஒங்க தலைவன்… பினாமியிலே ரெண்டு சாராயத் தொழிற்சாலை இருக்குடா அவனுக்கு… ஒனக்குத் தெரியுமா? சேரியை எல்லாம் ஒழிக்காம தூங்க மாட்டேன்னு மேடையெல்லாம் முழங்குறானே, அவன் எப்படி எங்க சேரியை ஒழிச்சான் தெரியுமா? தனக்குப் பெட்டி பெட்டியா கொண்டு வந்து கப்பம் கட்டறவன் ஓட்டல் கட்டறதுக்காக ஒரு சேரி யையே நெருப்பு வெச்சுக் கொளுத்த வெச்சவன்டா ஒங்க தலைவன். அந்தத் தீயிலே வீடு, வாசல், குழந்தையைப் பறிகொடுத்தவன்டா நான்…” – அந்த ஆள் பொங்கி வெடித் துச் சிதறிக்கொண்டிருந்தான்.

கைகலப்பைப் பார்த்துப் பதறிக் கொண்டு ஓடிவந்தார் பெருமாள். வம்பு எதுவும் வந்து விடக்கூடாதே என்று அந்த ஆளைச் சமாதானம் பண்ணிக் காலில் விழாத குறை யாகக் கெஞ்சி அவனை அனுப்பி வைத்தார்.

கபாலிக்கு இதயத்தில் வலித்தது. ‘இல்லை, இல்லை… இதெல்லாம் உண்மையா இருக்கமுடியாது… இருக்கக்கூடாது. அவன் எதிர்க் கட்சிக்காரனா இருப்பான். பொய் சொல்றான். எங்க தலைவர் இப்படியெல்லாம் செய்யமாட்டார்…’ ஆனால், அவன் இதயத்தில் இருந்த சிம்மாசனம் லேசாக ஆடத் தொடங்கியது.

கட்-அவுட்டை அவன் நிமிர்ந்து பார்த்தான். ‘தலைவரே, இது உண்மையா… உண்மையா?’ என்று அவன் இதயம் அலறியது.

காற்று ‘ஹோ… ஹோ…’ என்று இரையத் தொடங்கியது. மரங்கள் பேயாடின. தலைவரின் அந்தப் புன்னகை மெதுவாக மறைந்தது. வாயின் இரண்டு பக்கத்திலும் கோரப் பற்கள் முளைத்தன. முகம் விகாரமானது.

கபாலி எழுந்து ஓடினான். ”இல்லை… இது உண்மை இல்லை” என்று கட்-அவுட்டின் கால்களைப் பிடித்துக்கொண்டு கதறினான்.

ஆணைக்குக் காத்திருந்தது போல் காற்று சீறிச் சினந்து ஆவே சமாகக் கட்-அவுட்டை அசைத்தது. கொஞ்ச நேரத்தில் கட்-அவுட் மடமடவென்று இரைச்சலுடன் சரிந்து விழுந்தது.

கட்-அவுட்டின் இடிபாடுகளை அகற்ற வந்தவர்கள் அதன் அடியில் ஒரு பிணத்தைக் கண்டு திடுக்கிட் டார்கள். பிணம் ரகசியமாக அப்புறப்படுத்தப்பட்டது.

அந்த இடத்தில் சாட்சியாகக் கொஞ்சம் ரத்தக் கறை மட்டும் இருந்தது… ‘இது உண்மையா, உண்மையா?’ என்ற மௌனமான அலறலோடு.

காலையில் கூடும் கும்பலின் காலடிகள் பட்டு அதுவும் மறைந்துவிடும்.

– 14-03-1993

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *