கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: October 15, 2012
பார்வையிட்டோர்: 8,654 
 

பேயோட்டம் பார்த்தே தீருவது என்று நான், சுரேஷ், வயலின், தேசி நால்வரும் ஓலக்காரிகளுக்குப் பின்னால் உட்கார்ந்தோம். பத்தாம் வகுப்புக் கோடை விடுமுறையின் அந்த விடலைச்செயல், எங்களை வாழ்நாள் முழுதும் துரத்தும் என்று அறியவில்லை.

ஓலக்காரிகளுக்கு அப்பால் சிந்தாளம்மன் சன்னதிக்கெதிரே குழி வெட்டியிருந்தது. சுற்றி மாக்கோலம், சில சட்டிப்பானைகள், வேப்பிலைக் கொத்துகள். நள்ளிரவில் கோயில் கதவு திறந்து வந்த இரண்டு பூசாரிகள், குழிக்கருகில் நின்றனர். அவர்கள் பின்னே ஒரு ஆட்டை இழுத்துக் கொண்டு வந்தவனைப் பார்த்து, “பால்காரத் தாமுடா!” என்று வியந்தான் தேசி. ஒரு சட்டியிலியிருந்து மஞ்சள் பொடியை எடுத்து, குழியின் குறுக்கே கட்டியிருந்தக் கயிற்றுப்பந்தல் மேல் பூசாரிகள் அள்ளி வீசினர். இன்னொரு சட்டியிலிருந்து மண்ணெண்ணையைக் குழியில் தெளிக்க, குப்பென்று நாலடிக்கு எழுந்தடங்கியது நெருப்பு. “வந்துட்டா, சிந்தாளம்மா வந்துட்டா” என்று ஒரு பூசாரி, வேறொரு சட்டியிலிருந்த குங்குமத்தை நாலுபுறமும் வீசினான். கூட்டம் “ஆத்தா, ஆத்தா” என்றது. இரண்டாவது பூசாரி உள்ளிருந்து ஒரு அகண்ட இரும்புச்சட்டியை எடுத்து வந்து குழிமேல் வைத்தான். ஆட்டைக் கட்டியிருந்த கயிற்றைப் பால்காரத் தாமு கயிற்றுப்பந்தல் மேலெறிந்து இழுக்க, ஆடு கிணற்றுக்குடம் போல் மெள்ள உயரே எழும்பி இரும்புச்சட்டிக்கு மேலாக நின்றது. ஒரு பானையை மூடி விலக்கி முகர்ந்து பார்த்தப் பூசாரி, பானை நீரை ஆட்டின் மேல் வீசினான். ஒலக்காரிகள் “ஊலஊலஊல” என்று பின்னோலமிட, ஆடு பதிலுக்குப் “பேஏஏஏஏ” என்றது. எதிர்பாராத வகையில் தாமு ஒரு வெட்டறிவாளை எடுத்து “பகவதி!” என்றபடி இரண்டடி உயரத்துக்குத் துள்ளிக் குதித்து ஆட்டின் தலையை ஒரே வீச்சில் வெட்டியெறிந்தான். தலை கீழே சட்டியில் விழுந்தபோது வெளிவந்த ரத்தம் எங்கள் மீதும் தெறித்தது. ஓலக்காரிகளின் இடைவிடாத ஓலத்திற்கு மேல் இப்போது கூட்டம் “ஆத்தா, ஆத்தா” என்று அலறத் தொடங்கிவிட்டது. நான் நடுங்கி தேசியைப் பார்த்தபோது அவன் உதட்டோரத்தில் ஆட்டுரத்தம் தெறித்துக் காட்டேறி போல் தெரிந்தான். தாமு ஆட்டை இறக்கி, தலையையும் முண்டத்தையும் எடுத்துக் கொண்டு விலகினான். பூசாரிகள் இருவரும் சட்டியின் எதிரெதிரே உட்கார்ந்தனர். ஆட்டிலிருந்து இறங்கிய ரத்தம் முழுதும் சட்டியில் கொதிக்கத் தொடங்கி, ரத்தக்கறி வாடை வயிற்றைக் குமட்டியது. கொட்டிய ரத்தம் சூட்டில் இறுகிச் சிறிய உருண்டைகளாக மாற, “ஆத்தா வயிறு நெறஞ்சிடுச்சி” என்றபடி சட்டியை எடுத்துச் சென்றனர். கூட்டம் அவர்கள் சொன்னதை நம்பி ஆரவாரம் செய்தது. ஒரு ஓலக்காரி, “ஆத்தா அப்படியே குடிச்சிட்டா, கொட்டின ரத்தம் எங்கே போவும்?” என்றாள். “ஆத்தா, ஆத்தா” என்றான் சுரேஷ் என்னைப் பார்த்துக் கண்சிமிட்டியபடி. என் நிஜார் நனைந்தது அவனுக்கு நிச்சயமாகத் தெரியும். திரும்பி வந்த பூசாரிகள் ஒரு பானையிலிருந்து நீரை எடுத்துக் குழியில் கொட்ட, நெருப்பு அணைந்து புகைந்தது. அதன் மேல் மண்ணையும் மஞ்சளையும் அள்ளிக் அள்ளிக் கொட்டினர். மூடிய குழிமேல் ஆண், பெண் என்று வரிசையாக நிற்கவைத்துப் பேயோட்டத் தொடங்கினர். “ஓடு, ஆத்தா சொல்லுறா ஓடு” என்று வேப்பிலைக் கொத்தினால் அடி அடி என்று அடிக்க, அவர்கள் அலறினர். நான் பயத்தில் கண்களை மூடிக்கொண்டேன்.

“கண்ணைத் தொறடா, ஒம்போது” என்று என்னைத் தட்டி எழுப்பினான் சுரேஷ்.

எதிரே ஒரு சிறு பெண்ணை, பத்து வயது இருக்குமென்று தோன்றியது, பேயோட்டிக் கொண்டிருந்தனர். அருகிலிருந்தக் கிழவர், “மவ வயித்துப் பொண்ணு, என் மவ வயித்துப் பொண்ணு, வாடி பவிசு, என் மவளே” என்று கூச்சல் போடத் தொடங்கினார். “ஓடுறீ நீலி, ஆத்தா ரத்தம் குடிச்சு கோவமா இருக்கா. மலையேறு காட்டேறி, அப்பன் மனசு குளிற இறங்கிவா ஆத்தா” என்று பூசாரிகள் வேப்பிலை அடிக்கத் தொடங்கினர். ஓலக்காரிகள் கூச்சல் போட, கிழவர் சட்டென்று தேசியையும் என்னையும் எழுப்பிக் கட்டிக்கொண்டு ஆடத்தொடங்கினார். வயலினும் சுரேஷும் கூட்டத்துடன் கலந்து, “இறங்கிவா ஆத்தா இறங்கிவா” என்று டப்பாங்குத்து ஆடினார்கள். திடீரென்று அந்தப் பெண் “டேய், நிறுத்துடா” என்று அலறினாள், கிழக்கட்டைக் குரலில். திடுக்கிட்ட ஒரு பூசாரி கையிலிருந்த வேப்பிலைக் கொத்தைத் தவறவிட்டு எடுக்கக் குனிந்தபோது, எகிறி அவன் கழுத்தைப் பிடித்துக்கொண்டாள். “தாயத்து எங்கடா?” என்று பூசாரியின் தலையைத் தட்டித்தட்டி ஆடத் தொடங்கினாள்.

“யாரு நீ? சூலியா, காட்டேறியா அடையாளம் சொல்லு தாயே” என்றான் பூசாரி.

“ஆத்தா, ஆத்தா, தாயத்து என்னாண்ட இருக்குது தாயே” என்று அலறினார் கிழவர். தன் பையிலிருந்து எடுத்துக் காட்டினார்.

அதற்குள் தன்னை விடுவித்துக்கொண்டப் பூசாரி, ஒரு பானையை எடுத்துக் கோபத்துடன் அவள் மேல் கவிழ்த்தான். தண்ணீரோ என்னவோ அதிலிருந்து கொட்ட, பேய்ப்பெண் இன்னும் அலறினாள். எட்டி எட்டிக் குதித்தாள். பூசாரி மேல் காறித் துப்பினாள். ஏற்பட்ட கடுப்பில், “மலையேறு, குடுப்பாரு” என்று வேப்பிலைக் கொத்தினால் ஓங்கி அடித்தான் பூசாரி.

கிழவர், நான் திடுக்கிடும்படியாக என்னை இழுத்து என் சட்டைப் பையில் தாயத்தைப் போட்டார். “இதோ, தாயத்து இவங்கிட்டே இருக்கு ஆத்தா. சரியான எடத்துல சேந்துடுச்சு தாயே. மலையேறு, பவிசு மலையேறு” என்றார்.

நடுங்கிப்போய் என்னை விடுவித்துக் கொண்டேன். பாக்கெட்டில் விழுந்த தாயத்தை எடுத்து வயலினிடம் தர முயன்றபோது அவன் விலகினான். தவறிக் கீழே விழுந்தது. ஓலக்காரிகள் பலமாகப் பின்னோலமிட, கிழவர் மயங்கி விழுந்தார். கூட்டத்தில் பரபரப்பு. திரும்பிப் பார்த்தால் தேசியைக் காணோம். சுரேஷ் கழன்றுகொண்டிருந்தான். “ஆத்தா ஆத்தா” என்று அவரவர் எழுந்து அருகில் வர, நாங்கள் எடுத்தோம் ஓட்டம்.

மறுநாள். வழக்கம் போல் பம்மல் மலை வரை அரட்டை அடித்தபடி நடந்து, மலையுச்சியிலிருந்து சிறு பாறைகளை உருட்டி ரேஸ் விளையாடிக்கொண்டிருந்த பொழுது சுரேஷ் திடீரென்று, “டேய், இன்னி காலைல பால்காரத் தாமுட்ட கேட்டண்டா. நம்மள அவன் கவனிக்கவே இல்லை போல. நேத்து மண்டபத்துல ரகளைனான். அந்தக் கெழம் பாலாஜி நகராம். நெனச்சதை நடத்திக் கொடுக்கும் தாயத்தக் கொடுத்துட்டு காட்டேறிப்பேய் மலையேறிடுச்சு, தாயத்தோ மாயமா மறைஞ்சிடுச்சுனு சொன்னான்” என்றான்.

“ஆ..மடா, நெனச்சத நடத்திக்காட்டுற தாயத்தாவது மயிராவது. போடாங்க… இதெல்லாம்” என்று இழுத்த வயலினை மறித்தான் சுரேஷ். “இது என்னா தெரியுதா?” என்றான். அவன் கையில், முதல் நாளிரவு அந்தக் கிழவர் கொடுத்த தாயத்து! ஜோதிலட்சுமி போல் இடுப்பை ஒடித்து, “ஆத்தா, ஆத்தா” என்றான்.

“அடப்பாவி! நீயா சுட்டே? வேணாம்டா, தூக்கியெறிடா” என்றேன்.

“நிறுத்துறா”. தாயத்தைப் பிடுங்கி எறியப்போன என்னைத் தடுத்தான் சுரேஷ். “டேய், வயலின். அந்த திலகம் மேல ஒனக்கு ஒரு இது தானே? தாயத்த வச்சு அவள வசியம் பண்ணிடு, இந்தா பிடி” என்றான். “அவ உன்னை விட ஒரு கிளாஸ் பெரியவடா. வசியம் பண்ணா தான் உண்டு. இல்லையினா உன் பக்கம் தாவணி கூட காட்ட மாட்டா” என்றான்.

“போடா. தண்டக்கருமாந்திரம்” என்றான் வயலின்.

சுரேஷ் விடாமல் திலகம் போல் பின்புறத்தை அசைத்துக் காட்டினான். “தொடணும் போல இருக்குல்ல..?” இடது கையால் பின்புறத்தைத் தட்டிக் காற்றில் முத்தம் ஊதி வயலினைச் சீண்டினான். “இந்தா தாயத்து”.

என்ன தோன்றியதோ, “நாம நாலு பேரும் ஆளுக்கு ஒண்ணு வேண்டுறதா இருந்தா சரி” என்றான் வயலின். “சரி” என்ற சுரேஷ் தாயத்தை என்னிடம் கொடுத்து, “துரை, நீதாண்டா மொதல்” என்றான். வயலின் விழுந்து சிரித்தான். “மாட்னான் பாரு” என்றான்.

எனக்கு பயமிருந்தாலும் நம்பிக்கையில்லை. தாயத்தை எடுத்து ஒரு கணம் மௌனமாயிருந்துவிட்டு, திருப்பிக் கொடுத்தேன். “ஓலாக்குதே? என்ன வேண்டிக்கிட்டேனு ஓபனா சொல்லணும்” என்றான் சுரேஷ்.

“அத மொதவே சொல்லியிருக்கணும். புது ரூல் போடாதே. நான் வேண்டியாச்சு, அவ்ளோ தான்” என்றேன். “இனி உங்க டர்ன். இந்தாடா” என்று தேசியிடம் தாயத்தைக் கொடுத்தேன். சுரேஷ் மறித்தான். “என்ன வேண்டுறோம்னு உரக்க சொல்லணும். இந்த சும்பக்கூ வேலையெல்லாம் வேணாம். துரை, நீ திலகத்தை டாவடிக்கணும்னு தானே வேண்டினே? எனக்குத் தெரியும்” என்றான் விஷமத்துடன்.

வயலினுக்குக் கோபம் வந்தது. “டேய், துரோகி” என்றான். “இல்ல்ல்லடா” என்றேன்.

தேசி முன்வந்து, “அவன விடுங்கடா” என்றான். தாயத்தை ஹீரோ போல் உயர்த்தி, “எனக்கு லட்ச ரூவா கிடைக்கணும்” என்றான். சுரேஷிடம், “தடியா, நீ வேண்டிக்கடா” என்றான்.

“வேண்டுறதெல்லாமே ஒரு லெவல்ல இருக்கணும்டா” என்ற சுரேஷ், “அமெரிக்கா போய் செட்டில் ஆவணும்” என்றபடி தாயத்தை முத்தமிட்டான். “இந்தாடா” என்று வயலினிடம் கொடுத்தான்.

எதிர்பார்த்தபடி, “திலகம் எனக்கு பொஞ்சாதியாவணும்” என்று உரக்க வேண்டினான் வயலின்.

பிறகு ஏதோ சடங்கு போல எங்கள் ஒவ்வொருவர் தலையையும் தாயத்தால் சுற்றி விட்டு உள்ளங்கையில் தாயத்தைக் காட்டியடி, “டேய், இதுல எது பலிச்சாலும் யார் கிட்டயும் எதுவும் செத்தா கூடச் சொல்லக்கூடாது. சத்தியம் பண்ணுங்க” என்றான் வயலின். “செத்தா எப்படிறா சொல்ல முடியும்?” என்ற என்னிடம், “புடுங்கி.. முக்கியமா நீதான். சத்தியத்துல நம்பிக்கையில்லேனு ஓல்பஜனை வேண்டாம்” என்றான். நாங்கள் எல்லோரும் வயலின் கையில் சத்தியமடித்தோம்.

தாயத்தைத் தூக்கி எறிந்து இறங்கத் தொடங்கினோம். “இதெல்லாம் நடக்குற கதையாடா? எனக்கு லட்ச ரூவா கெடச்சாலும் கெடக்கும், திலகம் உனக்கு எப்டிரா கழுத்த நீட்டுவா?” என்றான் தேசி.

“புளுத்தியப் பாரு, அமெரிக்காவுல செட்டிலாவணுமாம். த்த.. நமக்கு பம்மல் தான் கதி” என்று வயலின் ஒரு உருளைக்கல்லைக் கால்பந்து போல் உதைத்தபடி வந்தான்.

“திலகம் உன்னை கிஸ்ஸடிப்பானு நம்பிக்கையாத்தானே வேண்டிக்கிட்டே? உடாதமா கண்ணா” என்று சுரேஷ் அவனைச் சீண்ட, வீடு சேரும் நேரத்தில் பேச்சு திசைமாறி விட்டது.

விடுமுறை முடிந்து நானும் சுரேஷும் ப்ளஸ்டூ படிக்க ஆலந்தூர் போக வேண்டியிருந்தது. தேசி பல்லாவரத்தில் படித்தான். வயலினுக்கு எங்கும் இடம் கிடைக்காமல் குன்றத்தூரோ மாங்காடோ சென்று படித்தான். இடையில் என் அப்பா இறந்து போனதும் ஏற்பட்ட வீட்டு நெருக்கடி, க்ருஷ்ணா நகர் பெண்கள், ‘யௌவனம்’ கையெழுத்துப் பத்திரிகை என்று பல திசைகளில் என் கவனம் திரும்பியது. சனி ஞாயிறில் மட்டுமே சந்தித்தவர்கள், மெள்ள அதையும் குறைத்துக் கொண்டோம். தெரு நண்பர்களுடன் என்னால் முன்போல் பழக முடியவில்லை. சுரேஷ் என்சிசியில் சேர்ந்து அடிக்கடி காணாமல் போகத்தொடங்கினான். தேசி எங்களை விட்டு பாலாஜி நகர், கோகுலம் காலனி ஆட்களுடன் பழகத் தொடங்கிவிட்டான்.

ப்ளஸ்டூ விடுமுறை தொடங்கிய முதல் வாரம். திடிரென்று வயலினைக் காணோம். திலகமும் வயலினும் ஊரை விட்டு ஓடித் திருமணம் செய்து கொண்டது பற்றி பம்மல் முழுவதும் ஒரே பேச்சு. இரண்டு மூன்று மாதங்களுக்குத் தலைமறைவாகிவிட்டார்கள்.

நான் கல்லூரி சேர்ந்த பின், முதல் விடுமுறையில் பம்மல் வந்தபோது வயலினைச் சந்தித்தேன். திலகத்துடன் மகிழ்ச்சியாக இருப்பதாகச் சொன்னான். “எல்லாம் தாயத்து மகிமைடா” என்றான்.

“உளறாதடா. என்ன ஆச்சு, உண்மைய சொல்லுடா? உனக்கு பதினெட்டு வயசு கூட ஆவலையே? அவளை எப்படிரா காப்பாத்துவ?” என்றேன்.

அதற்குள் திலகம் ஒரு சிறு தட்டில் இனிப்பும் காபியும் கொண்டு வந்து கொடுத்தாள். அவளைப் பார்த்து மனதுக்குள் அதிர்ந்து, வயலினைப் பார்த்தேன். திலகம் விலகியதும், “ஆமாடா, முழுகாம இருக்கா” என்றான்.

“டேய், கவனமா இருடா. இதெல்லாம் சட்டவிரோதம் மட்டுமில்லே ரொம்ப ரொம்பச் சீக்கிரம்டா” என்று சொல்லிவிட்டு வந்தேன். வீட்டுக்கு வரும் வழியில் தாயத்து நினைவுக்கு வந்தபடி இருந்தது.

பொங்கல் விடுமுறைக்கு வீடு திரும்பியபோது மீண்டும் வயலினைச் சந்தித்தேன். திலகம் அவனைவிட்டு ஓடிவிட்டதாகச் சொன்னான். அதிர்ச்சியாக இருந்தது.

“அப்புறம் உன்னை ஏண்டா கட்டிக்கிட்டா?” என்றேன்.

“அது வேறே கதைடா” என்றான் வயலின். “ஒரு நா திலகமும் அவ அம்மாவும் எங்க வீட்டுக்கு வந்து, திலகத்தை நான் கெடுத்துட்டதா சொன்னாங்கடா. திலகம் என்னைக் காட்டி நான் அவளைப் படுக்க வச்சதாவும் அதனால கர்ப்பமாயிட்டதாயும் சொன்னா. அதனால காதும் காதும் வச்ச மாதிரி எங்க வீட்லயும் அவ வீட்லயும் பேசி எங்களுக்கு கல்யாணம் கட்டி வச்சுட்டாங்கடா. நீ வந்தப்ப திலகம் கர்ப்பமா இருந்தது, என்னோட கர்ப்பம் இல்லடா” என்றான்.

என் அதிர்ச்சி அதிகமானது. “உனக்கு என்னடா பைத்தியமா பிடிச்சிருந்துச்சு? உண்மையைச் சொல்ல வேண்டியது தானடா?”

“ஒரு பொண்ணு ஒங்க வீட்டுக்கு வந்து, நீ தான் அவளைக் கெடுத்துட்டனு சொன்னா எந்த அப்பா அம்மா நீ சொல்றத கேப்பாங்கடா?” என்றான்.

“இப்ப எங்கடா அவ?”

“தெரியலடா. ஒரு நாள் பொழுது விடிஞ்சு பாத்தப்ப ஆளக்காணோம். எவனோடயோ ஓடிட்டா”

“கொழந்த?”

“அது… அந்த கர்ப்பம் கலஞ்சு போயிடுச்சுரா”

“திலகம் உன்னை நல்லா பயன்படுத்தியிருக்கா” என்றேன். எனக்கு ஆத்திரம் வந்தது.

வயலின் அமைதியாக, “ஆனா, ஓரளவுக்கு அது எனக்கு பிடிச்சு தாண்டா இருந்துச்சு. திலகத்தைக் கட்டிப்பேன்னு நான் கனவுல கூட நினைச்சதில்ல. தாயத்துக்குத்தான் தேங்க்ஸ் சொல்லணும்” என்றான்.

நாற்பது வயதுக்காரனின் தளர்ச்சியும் முதிர்ச்சியும் அவனுடைய பேச்சில் தென்பட்டது. நண்பனின் நிலை இப்படியானது வலித்தது. “பொடாங்… நீ மூளையிலாம நடந்துகிட்டு தாயத்து தயிர்வடைனுட்டு..” என்றேன் எரிச்சலை அடக்க முடியாமல்.

அதற்குப் பிறகு, படிப்பிலும் ஒன்றிரண்டு காதல் விவகாரங்களிலும் கவனமாக இருந்ததால் கல்லூரி முடியும் வரை பம்மல் போகவில்லை. மேற்படிப்புக்காக ஐஐஎமில் இடம் கிடைத்ததால் உடனே பெங்களூர் கிளம்பிவிட்டேன். படிப்பு முடியுமுன்னரே மேனேஜ்மென்ட் ட்ரெய்னி வேலை கிடைத்து டெல்லி போனேன். டெல்லி கல்கத்தா என்று மூன்று வருடப் பயிற்சி முடிந்து சென்னைக்கு மாற்றம் பெற்று வந்து ஆறு மாதம் ஆகியிருந்தது. புதிதாக வாங்கியிருந்த ராஜ்தூத் யமஹாவில் ஒரு சுற்று சுற்றிவரலாமென்று சும்மா திரிந்த போது, ஜிஎஸ்டி-குரோம் லெதர் கம்பெனி சாலைகளின் முனையில் என் வண்டி காரணமில்லாமல் சட்டென்று நின்றது. புது வண்டி நின்று விட்டதே என்ற கடுப்பிலிருந்த என் எதிரே ஒரு முதியவர் அழுது கொண்டு போனதைப் பார்த்துத் திகைத்தேன். பழகிய முகம். என் முன் கை கூப்பிக்கொண்டே திரும்பிவந்தார். மன்னிப்பு கேட்கிறாரா பிச்சை கேட்கிறாரா என்று புரியவில்லை. திடீரென்று என்னருகில் தோன்றியவரைப் பார்த்து வண்டியை ஒரு கணம் மறந்தேன். என்னிடம் ஏதோ சொல்லவோ கொடை கேட்கவோ போகிறார் என்று நினைத்து வண்டியில் கவனமாக இருப்பது போல் நடித்தேன். என்னை ஏக்கமாகப் பார்த்துவிட்டு ஒன்றும் சொல்லாமலே போனார். பெட்ரோல் தீர்ந்து ரிசர்வுக்கு மாற்ற மறந்தது தெரிந்து என்னைத் திட்டிக்கொண்டே மாற்றினேன். வண்டி கிளம்பிவிட்ட நிறைவில், ‘பாவம், பெரியவருக்கு என்ன கஷ்டமோ.. ஐந்தோ பத்தோ கொடுத்திருக்கலாமே’ என்று நினைத்து அவர் போன வழியில் திரும்பியவன் திகைத்தேன். சாலையின் இருபுறமும் மைல் நீளத்துக்கு ஆளரவமே இல்லை. இரண்டு முறை இப்படி அப்படி மெள்ள ஓட்டிப் பார்த்தும் கிழவரைக் காணோம். எங்கேயோ பார்த்திருக்கிறேனே என்று நினைத்தபடி வீட்டுக்கு வந்தேன்.

தேசியும் அவனுடைய அண்ணா பெண்ணும் வீட்டில் காத்திருந்தார்கள். “டேய், எனக்குக் கல்யாணம்டா. சாயந்திரம் நிச்சயதார்த்தம். கண்டிப்பா வாடா” என்றான். “லவ் மேரேஜுடா. இந்தா போட்டோ”.

புகைப்படத்தில் பெண் இளமையாக, மிக அழகாக இருந்தாள். “யார்டா பொண்ணு?” என்றேன். “சொல்லவே இல்லையே? ரொம்ப அழகா இருக்கா”. வாழ்த்தினேன். “வேறே யாரைக் கூப்ட? தடியன், வயலின், சேஜோ, காஜூகாரன் யாருனா வராங்களா?” என்றேன்.

“நீ மட்டுந்தாண்டா. வயலின் எதுலயும் கலந்துக்கறதில்லே. தடியன் ஊர்ல இல்லை. கோகுலம் காலனிப் பசங்களைக் கூப்பிடலைடா” என்றான்.

வயலினைப் பற்றிக் கொஞ்ச நேரம் பேசினோம். தாயத்து பற்றிப் பேச்சு வந்தது. கொஞ்சம் தயங்கி, “உங்கிட்டே ஒண்ணு சொல்லணும்டா” என்றான்.

“என்னடா, உனக்கு லட்ச ரூவா கெடச்சுதா, தாயத்து மகிமையாலே?” என்றேன் கிண்டலாக.

அதற்குள் உள்ளிருந்து வந்த அண்ணன் பெண்ணுடன் கிளம்பினான். “சாயந்திரம் நிச்சயதார்த்தத்துக்கு வா. பேசலாம்” என்றான்.

எனக்குக் குழப்பமாக இருந்தது. இதென்ன, தாயத்து மறுபடி தலையெடுக்கிறதா? மாலை அவன் வீட்டிற்குப் போனேன். பத்து பேர் கூட இல்லை. பெண் வீட்டிலிருந்து இரண்டே பேர். பெண், அவளுடைய தாத்தா. எங்கேயோ பார்த்தாற்போலிருந்தது அவரை. தேசியின் அண்ணா எனக்கு ஒரு ரோல் மாடல் என்பதால் அவனுடன் கொஞ்சம் பேசிக்கொண்டிருந்து விட்டு, “யாரு சம்பத் இந்த ஆளு? எங்கயோ பாத்தாப்புல இருக்கே?” என்றேன்.

“பாலாஜி நகர் மச்சான். லஷ்மணன் அவளைத் தள்ளிகினு போறேனு கெளம்னான். நான்தான் அம்மாவாண்ட சொல்லி கட்டிவைனு ஜபர்தஸ்து பண்ணிகினேன்” என்றான். சம்பத் மெத்தப் படித்தவன். இங்லிஷ் ஞானி. தமிழில் மட்டும் ஏனோ சேரிவழக்கில் பேசுவான். தேசியை லஷ்மணா என்றுதான் கூப்பிடுவான். விசித்திர, உயர்தர கேரக்டர். அதற்குள் புரோகிதர் அழைத்ததால் கூடத்திற்குச் சென்றோம். “தண்ணி வாங்கியாந்திருக்கான் லஷ்மணன். ஒயிட் ஹார்ஸ். முட்டை புர்ஜி பண்ணிகிறேன். தட்டு மாத்தினதும் நாம மாடிக்குப் போவலாம். ஓடிறாத மச்சான்” என்றபடி என்னை இழுத்துக் கொண்டு போனான்.

திருமணப் பத்திரிகை படித்துவிட்டு பெண் வீட்டாரும் பிள்ளை வீட்டாரும் பழத்தட்டு மாற்றிக்கொண்டார்கள். சீதன வகைப் பேச்சு வந்ததும், பெண் வீட்டுப் பெரியவர், “எனக்கு இருக்குறது இந்தப் பேத்தி மட்டுந்தான். இவ அப்பன் ஆத்தா சொத்து, நகை, என்னோட சொத்து எல்லாம் சேத்து இதோ இந்தப் பணம் முழுக்க இவளுக்குத் தான். இந்தப் பணத்தை சீதனமாத் தரேன். பாதி பொண்ணு பேர்லயும் மீதி ஒங்க ரெண்டு பேர்லயும் பேங்குல போட்டுறுங்க” என்றார். நூறு ரூபாய் கட்டுக்கள் பத்து எடுத்து வைத்தார். “லட்ச ரூவாங்க. மவ பவிசு மனசு குளிருங்க” என்றார். தேசியைக் கட்டிப்பிடித்துக் கொண்டார். பொட்டிலறைந்தாற் போல் பெரியவர் யாரென்று நினைவுக்கு வந்தது.

இருப்புக் கொள்ளாமல் தவித்தேன். சாப்பாட்டில் லயிக்காமல் நானும் சம்பத்தும் மொட்டை மாடிக்குப் போனோம். நாகரீகமாக மூன்று ரவுண்டு விஸ்கி அடித்துவிட்டு புர்ஜியைக் கொறித்துக் கொண்டிருந்தோம். சம்பத் ஹிந்தியில் அருமையாகப் பாடுவான். விஸ்கியும் முழுநிலவும் மொட்டைமாடியும் பம்மல் காற்றும் சேர்ந்தக் கலவையில், “..ஹாமோஷியோங்கி சதாயேன் புலா ரஹீஹை துமேன்..” என்று ரபியைத் தோற்கடித்துப் பாடிக்கொண்டிருந்தான். தேசி வந்து சேர்ந்ததும் கொஞ்ச நேரம் விஸ்கி புர்ஜி வேலை அரசியல் என்று ஏதோ பேசிக்கொண்டிருந்தோம். எம்ஜிஆர் இறந்த வாரமாகையால் அதைப்பற்றிக் கொஞ்ச நேரம் பேசினோம். “தொப்பித்தலையன் பூட்டான் மச்சான்” என்றான் சம்பத். “லஷ்மணா.. துரையைக் கவனிடா. கிவ் ஹிம் எ ட்ரிங் ஐ சே” என்றான்.

“டேய், லட்ச ரூவா கத்தை கத்தையா கொடுக்குறாங்களேடா பொண் வீட்டுல?” என்றேன் தேசியிடம், சம்பத் கவனிக்கிறானா என்று பார்த்தபடி. குரு தத் போல் எழுந்து நின்ற சம்பத் இரண்டு கைகளையும் உயர்த்தி, “யே துனியா அகர் மில் பி ஜாயே தோ க்யா ஹை?” என்று பாடத் தொடங்கினான். சம்பத் அவனுடைய உலகத்தில் ஆழ்ந்துவிட்டது தெரிந்து தேசியைத் தனியாக இழுத்துப் பிடித்துக் கொண்டேன். “டேய், என்னடா இது?! லட்ச ரூவா? பேய்ப்பொண்ணு தானேடா அவ? தாத்தா தானேடா நம்மளைப் பிடிச்சு ஆடினது?” என்றேன்.

“கோச்சுக்காதறா. பாலாஜி நகர் போனதுல பழக்கமாயிடுச்சுடா. நாலு வருசமா அவளோட பழகிட்டிருக்கேண்டா. ப்லஸ்டூ முடிச்சு ரயில்வே க்ளர்க் பரீட்சை பாஸ் பண்ணி வேலைல இருக்காடா. தாயத்து விஷயம் எனக்கு ஒரு பொருட்டா படலைடா. ஷி இஸ் டிவைன். இவளை நான் உண்மையிலயே விரும்புறேண்டா. தாத்தாவும் என் மேலே அன்பா இருக்கார்டா. லட்ச ரூவா கொடுக்குறதா தாத்தா ரெண்டு வருசமா சொல்லிட்டிருக்காருடா. நான் கல்யாணம் செஞ்சுக்காம போயிருவேனோனு பயத்துல ஆசை காட்டுறதா நெனச்சேன். ஆனா போன வாரம் பணத்தைக் காட்டினதும் ஆடிப் போயிட்டேண்டா. கட்ன துணியோட அவளைக் கல்யாணம் பண்ணிக்கத் தயார்டா. எனக்கு அந்தப் பணம் தேவையே இல்லைடா. லட்ச லட்சமா கெடச்சாலும் அவளுக்கு ஈடாகாதுடா” என்றான்.

எனக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. அவனைக் கட்டிப்பிடித்தேன். “கங்கிராட்ஸ்டா!” என்றேன்.

“ஒரு விதத்துல தாயத்தை வேண்டிக்கிட்டது பலிச்சுடுச்சோனு நெனச்சேன்… இருந்தாலும் பணத்தை அவ பேர்லயே போடச் சொல்லிட்டேண்டா. ஐ லவ் ஹர்” என்றான் மென்மையாய்.

“நல்லா இருடா” என்றேன். “நான் கெளம்புறேண்டா. ஐ நீட் டு ரெகன்சைல். நாளைக்குப் பாப்போம்” என்றபடி கிளம்பினேன். சம்பத் இன்னும் உருகிக் கொண்டிருந்தான். “நயி நயி ரங்க் லேகே..”.

நள்ளிரவு போல் தோன்றியது. மேகங்களின் நிழலை முழுநிலவு பூமியில் காட்டிக்கொண்டிருக்க, கொஞ்சம் போதை கொஞ்சம் ஆத்திரம் கொஞ்சம் கலவரம் கலந்தவனாக நடக்கத் தொடங்கினேன். தேசி வீட்டிலிருந்து எங்கள் வீட்டுக்கு மூலைவிட்டப் பாதையில் நடந்தால் இருநூறு அடி கூட இருக்காது. பம்மலின் சென்ற ஐந்தாண்டு துரித வளர்ச்சியில் வீடுகள் வந்து, வரப்புகள் அசல் ரோடுகளாக மாறியிருந்தன. தார்சாலையில் செங்கோணமாக அறுநூறு அடி நடக்க வேண்டியிருந்தது. சிவன் கோயில் தெருவும் தேசி வீட்டு அண்ணா சாலையும் சந்திக்கும் இடத்தில் உருவத்தைப் பார்த்தேன். மதியம் குரோம்பேட்டையில் பார்த்தக் கிழவர்! திடுக்கிட்டுப் போய்ப் பின் வாங்கினேன். தெருவில் யாருமில்லை. மாலதி கடை மூடியிருந்தது. கைகூப்பி வந்தார் கிழவர். பாவமாக இருந்தது. என்ன கேட்கப் போகிறார் என்று நினைக்கையில் ஆளைக் காணோம். ஓட்டமெடுத்தேன். மபொசி தெருவிறங்கி கொஞ்சம் மூச்சு வாங்கினேன். ஒற்றைப் பனைமரத்தடியில் கிழவர் நின்று கொண்டிருந்ததைப் பார்த்ததும் பக்கென்றது. அவரைத் தாண்டித்தான் வீட்டு வேலிக்கதவைத் திறக்க வேண்டும். “சே! என்ன பிரமை” என்று என்னைத் தேற்றிக்கொண்டு வேலிக்கதவைத் திறந்தேன். எனக்கு நேர் எதிரே கிழவர் நின்று கொண்டிருந்தார். ஏதோ சொல்ல முயற்சிப்பது புரிந்தது. “ஏன்?” என்று கிழவர் கேட்பது போல் பட்டது. கெஞ்சுவது போல் பட்டது. வேகமாக நடந்து கதவைத் தட்டினதும் என் தங்கை கதவைத் திறந்து வெளி விளக்கை இயக்கினாள்.

திரும்பிப் பார்த்த போது வாடர் டேங்க் வரை ஈ காக்கா இல்லை. “ஏண்டா, என்னவோ போலிருக்கே?” என்று முகம் சுளித்தத் தங்கையை லட்சியம் செய்யாமல் உள்ளே சென்றேன். என் அறைக்குச் சென்று படுத்தேன். பத்து நிமிடமோ என்னவோ பொறுத்து ஜன்னல் இடுக்கு வழியாக வெளியே பார்த்தேன். பனைமரத்தடியில் கிழ உருவம் என்னையே பார்த்துக்கொண்டிருந்தது.

திடுக்கென்று அவர் யாரென்பது புரிந்து எழுந்து உட்கார்ந்தேன். போதை முழுதுமாகத் தெளிந்து வியர்த்தது. மறுபடி ஜன்னலிடுக்கு வழியாகப் பார்த்தபோது உருவத்தைக் காணோம்.

அலுவல் பயணங்கள், சகோதரிகள் திருமணம் என்று இரண்டு வருடங்கள் ஓடியதே தெரியவில்லை. மூன்றாம் வருடம் அமெரிக்கா போக வாய்ப்பு கிடைத்ததும் உடும்பாகப் பிடித்துக் கொண்டேன். பதவி உயர்வுடன் வெளிநாட்டில் வேலை என்றதும் அப்போதிருந்த காதலையும் கைவிட்டு அமெரிக்கா கிளம்ப ஆயத்தமானேன். விமானநிலையத்திற்கு வயலின் உட்பட என் நண்பர்கள் அத்தனை பேரும் வந்திருந்தார்கள். தனக்குத் திருமணம் நிச்சயிக்கப்படுகிறது என்றான் சுரேஷ். “நம்ம செட்ல எல்லாரும் செட்டில் ஆயாச்சு மச்சி. நீ மட்டுந்தான் கிர்கில்ஸ் விட்டுட்டிருக்கே” என்றான். அதுவரை அமைதியாக இருந்த வயலின், “ஏண்டா, அவன் ஒருத்தனாவது நிம்மதியா இருக்கட்டுமேடா?” என்றான் சட்டென்று. “இங்கே நிம்மதிக்கென்னடா குறை? அமெரிக்கா போனா நிம்மதியாயிருமா? அவனவனுக்கு என்ன நடக்கணுமோ அது தாண்டா நடக்கும்” என்ற தேசியைத் தட்டிக்கொடுத்த சுரேஷ், “ரைட், விடுங்கடா” என்றான். எனக்கு இருந்தப் பெருமையிலும் போதையிலும், எல்லாவற்றையும் விட இந்தியாவை விட்டுப் போகும் வேகத்திலும், அவர்கள் பேச்சில் புதைந்திருந்த அச்சத்தை உணரத் தவறினேன்.

எனக்கென்னவோ என்னிடமிருந்தே விடுதலை கிடைத்தது போலிருந்தது. அமெரிக்கா வந்த ஒரு வருடத்துக்குள் தமிழ், தமிழ்நாடு, நண்பர்கள், உறவினர் என்று அத்தனை பேரையும் மறந்து விட்டேன். வருடத்துக்கு ஒன்றிரண்டு முறை அம்மாவுடன் தொலைபேசுவதோடு சரி. வந்து பத்து வருடங்களுக்கு மேலாகியிருக்கும். இரண்டாயிரத்தொன்றில் தாயத்தின் நிழல் என்மேல் மீண்டும் பட்டது.

டோக்யோவிலிருந்து சேன்ஹோசே திரும்பிக் கொண்டிருந்தேன். நகோயா விமான நிலையத்தில் யாரென்று பார்த்தால், சுரேஷ்! கொஞ்சம் கூட எதிர்பார்க்கவேயில்லை. என்னை அடையாளம் கண்டு பேசினான். அரைமணி காரசாரமாகத் திட்டிவிட்டு பழைய நட்பின் இழைகளைக் காட்டினான். எனக்கும் நட்பை இழந்த வருத்தமேற்பட்டு அவனிடம் மன்னிப்பு கேட்டேன். குடும்பம், தொழில் பற்றிப் பேசினோம். ஐ.டி வெளிச்சேவை பரவலாக அங்கீகரிக்கப்பட்டு வந்த நேரம் அது. ஒரு இந்திய ஐ.டி கம்பெனியின் விற்பனை அதிகாரியாக சேன்ஹோசே வந்திருப்பதாகவும், இனி அமெரிக்காவில் தான் வேலையென்றும் சொன்னான். வீடு பார்த்தபின் மனைவி, மகனை வரவழைப்பதாகவும் சொன்னான். புகைப்படங்கள் காட்டினான். வாழ்த்தினேன்.

விமானம் கிளம்ப நேரமிருந்தது. என் கணக்கில் அவனையும் உயர்வகுப்புக்கு மாற்றிக்கொண்டு, லவுஞ்சுக்கு அழைத்துச் சென்றேன். “என்ன சாப்பிடுறே?” என்றேன். “கல்யாணி கிடைக்குமாடா?” என்றான். “அடச்சே. டோக்யோக்காரன் தண்ணியடிப்போம்டா” என்று ஒரு புட்டி உயர்தர சொச்சு தரவழைத்தேன். “நம்ம ஊர் பட்டைச்சாராயம் போல இருக்கேடா?” என்றான். அங்கேயிங்கே சுற்றிப் பேசி, “மச்சி, அமெரிக்கா வருவேன்னு நினைக்கவேயில்லடா. ஐ.டி மட்டும் வரலின்னா சான்சே இல்ல. இதுல கூட ஒரு இழவும் தெரியாமத்தான் வந்திருக்கேன். ஒரு மணி நேரத்துக்கு முப்பது டாலர்னு தொழில் விக்குற வேலைடா. என்ன வித்தியாசம்னா, இந்த தொழில்ல படுக்க வேண்டாம், அவ்ளோ தான். கெளம்பினதுலந்து கிள்ளி கிள்ளி விட்டிட்டிருக்கேண்டா. அமெரிக்கா!” என்று வியந்து பேசினான். பிறகு அமைதியாக, “தாயத்து தாண்டா” என்றான்.

அதுவரை என் உள்ளத்தின் ஆழ்கிணறுகள் ஒன்றில் சங்கிலிப் பாரம் கட்டிப் புதைந்து கிடந்த உளுத்த பெட்டி மெள்ள எழும்பியது. பெட்டியின் விரிசல்களிலிருந்து கரப்பான்பூச்சி முட்டைகள் சோப் குமிழிகளாக ஆயிரக்கணக்கில் வெளிவந்தன. முட்டை வெடித்து கரப்பான்பூச்சிகள் என் மனம், உடல், மூளையெங்கும் பரவி ஓடத்தொடங்கின. அதிலிருந்து வெளிவந்த ஒரு கரப்பான்பூச்சி சர்ர்ர்ர்ரென்று வெளியே பறந்து எனக்குச் சற்றுத் தொலைவில் இறங்கி மனித உருவில் நடக்கத் தொடங்கியது.

“டேய்” என்று சுரேஷ் என்னை உலுக்கினான். “என்னடா ஆச்சு? பேயடிச்ச மாதிரி பாக்குறே?” என்றான்.

“நதிங்” என்று சுதாரித்தேன். “நீ தாயத்துன்னதும் கொஞ்சம் ஸ்டன்னாயிட்டேன், அதான்” என்றேன். கண்கள் கரப்பான்பூச்சியைத் தேடின.

“அதப்பத்தி பேச விரும்பலைனா, வேணாம்டா. சாரி” என்றான்.

“சேசே! அதுல எல்லாம் எனக்கு நம்பிக்கையே இல்லடா” என்றேன். “ஸோ, தாயத்து பலிச்சுடுச்சுன்றே?”

“வேறே எப்படிறா இதுக்கு விளக்கம் சொல்றது? கம்ப்யூடர்னா என்னனு கூடத் தெரியாதுறா எனக்கு. க்ளூகோஸ் வித்துக்கிட்டிருந்த என்னைச் சுண்ணாம்படிச்சு சட்டை போட்டு இங்கே கொணாந்திருச்சேடா?” என்றான்.

“அப்ப, எஞ்சாய்டா” என்றேன். “புடிக்கலேன்னா க்ளூகோஸ் வியாபாரம் இருக்கவே இருக்கு” என்றேன்.

“அதை விடுறா. தாயத்து வேண்டுதல் பலிச்சு கொஞ்ச நாள்லயே எதுனா கெட்டதும் நடக்குதேடா? அதாண்டா பயமா இருக்கு” என்றான்.

“வயலினை வச்சு சொல்லாதறா. திலகம் அவனை யூஸ் பண்ணினானு உனக்கும் நல்லாத் தெரியும். ஷீ வாஸ் எ ட்ரேம்ப். அழகா கவர்ச்சியா இருந்தா, அந்த வயசுல நம்ம சுரப்பிகளும் ஓவர்டைம் செஞ்சுட்டிருந்துச்சு. தட்ஸ் ஆல். அவ ஓடினது வயலினுக்குத் தான் நல்லது. குட் ரிடன்ஸ்” என்றேன்.

“அவ திரும்பி வந்துட்டா தெரியாதா?” என்றான்.

விமானம் கிளம்பத் தயாராக இருப்பதாகச் சிப்பந்திப்பெண் பணிவாகச் சொன்னாள். “வாடா” என்றேன். மேல்வகுப்புப் பிரயாணிகளுடன் கலந்தபடி, “திரும்ப சேந்துட்டாங்களா? அப்புறம் என்ன? குட்” என்றேன்.

“இல்லடா. அவனை அவ பாடா படுத்தி பெண்டெடுக்குறா. கேரக்டரும் சரியில்லே. வேற கல்யாணமும் கட்ட முடியல, விவாகரத்தும் செய்ய மாட்டுறான். ஆளு இப்ப ரொம்ப நொந்துட்டான்” என்றான்.

இடம் தெரிந்து அமர்ந்து கொண்டோம். “இருக்கட்டுமேடா. ஒரு கேசை வச்சுக் கலங்குறதுல லாஜிக்கே இல்லியே? தேசி சந்தோசமாத் தானேடா இருக்கான்?” என்றேன். கேட்டிருக்கக் கூடாதோ? உளுத்த பெட்டி மீண்டும் மேலே வந்தது.

“விஷயம் தெரியாதா? அவங்களுக்கு ஒரு கொழந்த பொறந்ததும் பிரிஞ்சுட்டாங்க. கொழந்த பொறந்ததுமே அவங்க ரெண்டு பேருக்கும் தகராறாகி அவ கொழந்தையைத் தூக்கிக்கிட்டு தாத்தாகாரனோட ஓடிட்டா” என்றான்.

“ஏன்?”. பெட்டி விரிசல்களிருந்து கரப்பான்பூச்சி முட்டைகள் பொங்கி வந்தன.

“எனக்குத் தெரியாதுடா. தேசி தான் சொன்னான். பொறந்த கொழந்தை இவனைப் பாத்து சிரிச்சுதாம்” என்றான். சற்றுத் தயங்கி, “வாயெல்லாம் பல்லா இருந்துச்சாம்டா. கோரப்பல் கூட இருந்துச்சாம். அன்னிக்குப் பொறந்த கொழந்தைக்கு எப்டிறா பல்லு வரும்?” என்றான். முட்டைகள் வெடித்துக் கரப்பான்பூச்சிகள் என் மேல் ஊரத் தொடங்கின. உதட்டோரம் ஆட்டுரத்தம் தெறித்து தேசி காட்டேறி போல் தெரிந்தான். “அவன் டாக்டர்கிட்டே வைத்தியம் செய்யணும்னு சொல்ல, அவ முடியாதுனு சொல்ல, அதுக்குள்ள தாத்தாக்காரன் வந்து, இதைக் கேளுடா.. ரெண்டு பேரும் கொழந்தையோட ஜன்னல்லந்து தவளை குதிக்கிற மாதிரி குதிச்சுப் போயிட்டாங்களாம்”. ஒரு பூச்சி சர்ர்ர்ர்ரென்று பறந்து, என்னைப் பார்த்து சிரித்தபடி வந்த விமானப் பணிப்பெண்ணின் கண்ணுக்குள் கலந்தது.

“வாட் நான்சென்ஸ்!” என்று சுதாரித்தேன். “எப்படிரா இதையெல்லாம் நம்புறே? இஸ் ஹி நட்ஸ் ஆர் வாட்?”

“இதையெல்லாம் நம்புறனா நம்பலியா உண்மையா பொய்யா அதெல்லாம் பீராஞ்சுட்டிருக்கலாம். வேறே விஷயம். ஆனா வயலினும் தேசியும் நம்ம ப்ரென்ட்ஸ். அவங்க நம்மள மாதிரிதான். அவங்கள நம்பாம எப்படிரா?”

“தேசி இப்ப எப்படி இருக்கான்?”

“அதையெல்லாம் மறந்துட்டான். புது ஆள் இப்ப. பிலிப்ஸ்ல சீப் மார்கெடிங் ஆபீசர். கம்பெனி ப்ளேன்ல போயிட்டிருக்கான். ரீமேரிட். யூரோப்ல செட்டிலாயிட்டான்.”

“அப்புறம் என்னடா? சுபம். விடுறா” என்றேன்.

சேன்ஹோசேவில் அவனுடைய ஹோட்டலில் இறக்கிவிட்டேன். என் செல் நம்பரைக் கொடுத்து, “செட்டிலானதும் போன் பண்ணு” என்றேன். என் ஹோட்டலுக்கு வந்தேன். ரூம் சாவியைக் கொடுத்த நபரைப் பார்த்து ஏறக்குறைய மயங்கி விழுந்தேன். தேசியின் நிச்சயதார்த்தத்தன்று நான் பார்த்த முதிய உருவம்! பனைமரத்தடியில் மீண்டும் பார்த்து அடையாளம் கண்ட அதே உருவம்! சிப்பந்திக்கருகில் தோன்றி மறைந்தது.

செப்டம்பர் பதினொன்றாம் தேதி மாலை சுரேஷிடமிருந்து போன் வந்தது. அரண்டு போயிருந்தான். “டேய், என் பையனைக் காணலடா. உடனே வாடா, ஹெல்ப்” விடாமல் பேசிக்கொண்டிருந்தான். கொஞ்சம் நிதானப்படுத்தியதும், “குடும்பத்தோட ந்யூயோர்க் வந்தேன். இன்னி காலைல நடந்த கலாட்டாலே என் பையனைத் தொலைச்சுட்டம்டா. இங்கே ஒரே கூச்சலும் கொழப்பமாவும் இருக்குடா. பாஸ்போர்ட் பையும் தொலஞ்சுடுச்சுடா. எல்லாரையும் பிடிச்சு உள்ளே போட்டுட்டிருக்காங்கடா. உடனே வாடா” என்று விவரம் சொல்லி மன்றாடினான்.

அன்றிரவே காரில் விரைந்து அவனை மறுநாள் சந்தித்த போது நல்லவேளையாகக் குழந்தை அகப்பட்டச் செய்தி கிடைத்தது. போய் அழைத்து வந்தோம். கூட்டத்தில் சிக்கிய பையனுக்கு உடலெங்கும் சிராய்ப்புகள், காயங்கள். சுரேஷ் மனைவி, “மெட்ராஸ் போலாம், போதும் போதும்” என்று அரிக்கத் தொடங்கினாள். அவளை அமைதிப்படுத்தி, அவன் குடும்பத்துடன் சில நாட்கள் தங்கினேன். சிகாகோ கிளம்புகையில் நன்றி சொன்னார்கள். என்னைக் கட்டிக்கொண்ட சிறுவனை ஆதரவாக அணைத்தேன். “காயமெல்லாம் சரியாயிடுச்சா?” என்றேன். “ஆயிடுச்சு. தழும்பு கூட வந்திருக்கு. இங்க பாருங்க அங்கிள்” என்று முழங்கையைக் காட்டினான். முழங்கைக்குக் கீழே காயம் காய்ந்த வடு. தாயத்து வடிவத்தில் இருந்தது. நானும் சுரேஷும் அதிர்ந்தோம்.

வீட்டுக்கு வந்ததும் மனைவியிடம் விவரமெல்லாம் சொன்னேன். “யூ நீட் ஹெல்ப்” என்றாள். அவளுடைய சக உளவியல் மருத்துவர் கெவின் ப்லேனகனிடம் சிபாரிசு செய்தாள். மூன்று நாட்களாகத் தினம் ஒரு மணி நேரத்துக்கு பழைய கதையெல்லாம் பேசி, நான் கெவினிடம் தாயத்துப் பின்னணியைச் சொல்லி முடித்தேன். வாங்கும் இன்சூரன்ஸ் காசுக்கு வஞ்சனையில்லாமல் மூன்று நாட்களாய் எழுதிச் சேர்த்த நோட்சையெல்லாம் படித்தான்.

“துரை, தாயத்து நம்பிக்கையெல்லாம் கொஞ்சம் ஒத்தி வைப்போம். மோஸ்ட்லி ப்லெசிபோ. ஆனா நீங்க குழம்பியிருக்கறதுக்கான அடையாளங்கள் நிச்சயமா உங்க பேச்சுல தெரியுது. மைல்ட் பெர்சனாலிடி டிசோர்டர்னு சொல்லத் தோணுது. இருபது வருச ஹெலுசினேடிங் ப்ரொபென்சிடி கவலைப் படவைக்குது. அமானுஷ்யத் தோற்றங்கள் உங்க மனதோட உள் விகாரங்கள்னு நினைக்கிறேன். எல்லா விவரங்களையும் சொன்னீங்கன்னா, கொஞ்சம் சைகோ அனேலிசிஸ் செஞ்சு பார்க்கலாம். உதாரணமா, பனைமரத்தடியில் அடையாளம் தெரிஞ்ச உருவம்னு சொன்னீங்களே, அது யாரு?” என்றான்.

சற்று நிதானித்துவிட்டு, “சாலை விபத்துல மண்டையிலடிபட்டு இறந்து போன என்னோட அப்பா” என்றேன்.

என் பதில் அவனுக்கு அதிர்ச்சியாக இருந்ததா என்பது தெரியவில்லை. பாலைவனக்கல் போல் அசையாதிருந்தான். என் அப்பா இறந்த விவரங்கள் கேட்டான். அலுத்துப் போகும் வரை சொன்னேன். ‘இது எங்கே போகிறது?’ என்று நினைத்தேன். பிறகு, “துரை, உங்க அப்பாவின் உருவம் தோன்றுவது எதனால் என்று நினைக்கிறீர்கள்?” என்றான்.

‘அதைக் கண்டுபிடிக்கத்தானே உனக்குப் பணம் தருகிறேன்?’ என்று சொல்லத் துடித்தவன் அடக்கிக் கொண்டேன்.

கெவின் சில நிமிடங்கள் அமைதி காத்துவிட்டு, “நீங்க உங்க அப்பா உருவத்தைப் பார்ப்பது, உங்க உள் விகாரம். ஏதாவது குற்ற உணர்வா? கொஞ்சம் யோசித்துப் பதில் சொல்லுங்க” என்றான். இன்னும் சில நிமிட அமைதிக்குப்பின், “தாயத்தைக் கையில் எடுத்தவுடன் உங்களுக்கு என்ன தோன்றியது?” என்றான்.

“என் அப்பா சாகவேண்டும் என்று நினைத்தேன்” என்றேன் நிதானமாக.

இருபது வருடங்களாக அடைத்திருந்த கதவு உடைந்துத் தெறித்தது. “எனக்கும் என் அப்பாவுக்கும் சுமுகமான உறவே இல்லை. எதற்கெடுத்தாலும் அடி உதை ஆத்திரம் ஆங்காரம்னு இருந்ததால எனக்கு வேறு எதுவும் தோணல. பேயோட்டிய மறுநாள் காலை தேவையில்லாம, வளர்ந்த பிள்ளைனும் பாராம, என்னைத் திட்டி அவமானப்படுத்தினார். அந்த ஆத்திரத்தில் இருந்தவன், தாயத்து கிடைச்சதும் வேண்டிக்கிட்டேன். அவருடைய கண்மறைக்கும் ஆத்திரம் எனக்குள்ளும் இருக்குதே?” என்றேன்.

கெவின் வேண்டுமென்றே அமைதியாக இருந்தது போல் பட்டது. “துரை, உங்க ஹெலூசினேசனுக்கு ஒரு காரணம் இப்ப புரியுது. குற்ற உணர்வு. நீங்க தாயத்தை வேண்டினதால உங்க அப்பா இறந்துட்டாருனு நம்புறீங்க; அதான் பல வகையில உங்க அப்பாவோட உருவம் கண் முன்னால வந்துகிட்டே இருக்கு. தாயத்தை வேண்டிக்கிட்டதால நீங்க ஒரு தப்பும் செய்யலை. தற்செயலா நடந்த இரண்டு சம்பவங்கள், அவ்வளவுதான். நீங்க குற்றம் செஞ்சதா நினைக்காதீங்க” என்றான்.

“இல்லை” என்று தலையாட்டினேன்.

நோட்பேடில் என்னவோ கிறுக்கினான். “உங்க ட்ரீட்மென்டை ஒரு மைல்ட் ரிலேக்சன்டோட தொடங்கப்போகிறேன். ஆறு வாரத்துக்கு தினம் ஒரு வேளை. ஏங்சைடி சப்ரெசன்ட்” என்ற கெவின், என்னிடம் ஒரு ப்ரிஸ்க்ரிப்ஷன் கொடுத்தான். பிறகு, “நாளைக்குச் சில எலக்ட்ரோ மேக்னடிக் வேவ் ரீடிங் பாத்துடலாம். உங்க ந்யூரோ ஹெல்த் சரியா இருக்கானு பாத்துருவோம்” என்றான்.

“ட்ரீட்மென்ட், மருந்தெல்லாம் வேண்டாம். நமக்குள்ளயே ஏதோ பேசித் தீத்துக்குவோம்” என்றேன். எனக்கு இருப்புக் கொள்ளவில்லை.

சிரித்தான். “துரை, ஐ’ம் நாட் எ தெரபிஸ்ட். பேசித் தீக்குறதுக்கு இது என்ன யுஎன் கவுன்சிலா? நான் ஒரு சைகயேட்ரிஸ்ட். நோய் நாடி நோய் முதல் நாடித் தீர்ப்பவன். உங்க மென்டல் மேகப் தெரியற வரைக்கும் நீங்க ஒரு அட் ரிஸ்க் பேசன்ட்” என்றான். “கண்டிப்பா ட்ரீட்மென்ட் எடுத்துகிட்டுத்தான் ஆகணும். யு ஓ இட் டு யூர்செல்ப்”

அப்போது தான் அவன் மேசை மேல் ஏதோ அசைவதைக் கவனித்தேன். “அது என்ன கெவின்?” என்றேன். “ஓ..சிலந்தி பேபர் வெயிட்! ஸ்பைடர்மேன் படக்குழுவுக்கு நான்தான் சைகயேட்ரிஸ்ட்..” என்றபடி அதை எடுத்து உள்ளங்கையில் வைத்துக்கொண்டான். சிலந்தி சிலிர்த்து அவன் உள்ளங்கையைக் கவ்விக்கிழிக்கத் தொடங்கியது. அவன் அலறக்கூட நேரமில்லை. நொடிகளில் துவண்டு விழுந்தபோது அவன் கண்களில் பெரும் வேதனை தெரிந்தது.

நான் திடுக்கிட்டு அலறினேன். ஓடி வந்தப் பெண் சிப்பந்தி முதலில் அலறிவிட்டு இரண்டாவதாகப் போலீசை வரவழைத்தாள்.

ஏழில் சென்னை போக வேண்டி வந்தது. என் விவாகரத்துச் சிக்கல்கள் முடிந்து, அம்மாவுடன் கொஞ்சம் ஓய்வெடுக்கச் சென்றேன். பழைய நட்புகள் சிலவற்றைப் புதுப்பித்தேன். தேசி ஆளைக் காணோம். வயலின் வீட்டை விட்டு ஓடிவிட்டதாகக் கேள்விப்பட்டேன். செ.இலவனுக்குப் பிறகு இந்தியா திரும்பிய சுரேஷ், ஐடி வேலையை விட்டு அவன் மனைவி பெயரில் வீட்டுமனை வியாபாரத்தில் இறங்கி இன்றைக்குப் பெரிய பில்டர். கொழிக்கிறான். குடிப்பதில்லை. பதிலுக்கு நெற்றியில் பட்டை அடிக்கிறான். என் மனநிலையையும் கெவினுடன் பேசி நடந்ததையும் சொன்னேன். அவன் சிவப்பழமாகத் தலையாட்டினான். “அதுக்குப் பிறகு எங்கப்பா உருவத்தைப் பார்க்கலேடா” என்றேன்.

“நல்லதுரா. தாயத்தோ புண்ணாக்கோ, நம்மள ஆட்டிவச்சது தொலஞ்சதுனு இருப்போம்” என்றான். “இந்தாடா, பழனி விபூதி. தினம் ஒரு கீத்து வச்சுக்க” என்று உள்ளிருந்து ஒரு பொட்டலத்தை எடுத்து வந்து கொடுத்தான். வெளியே வந்ததும் அதை எறிந்தேன். அவனுடைய வீட்டைத் திரும்பிப் பார்த்தபடியே நடந்தேன்.

மறுநாள் செரடன் ஹோடலில் அவளைச் சந்தித்தேன். என்னை அடையாளம் கண்டு அருகில் வந்து புன்னகை செய்தாள். நான் “ஹலோ” என்றேன். சினிமா தயாரிக்கிறாளாம். “எத்தனை வருசமாச்சு பாத்து?! எத்தனையோ நாளா சந்திக்கணும்னு நெனச்சேன், இங்க சந்திக்கணும்னு இருக்கு பாருங்க” என்றாள். “என்ன செஞ்சுட்டிருக்கீங்க?”.

“நான் அமெரிகாவுல இருக்கேன்”

“தெரியும், இங்கே என்ன செஞ்சுட்டிருக்கீங்க?”

தோளைக்குலுக்கி உதட்டைப் பிதுக்கினேன்.

“அப்ப, எங்கூட மேலே வாங்களேன். ஒரு சின்ன ஷூடிங் எடுக்குறோம் மூணாவது மாடில. பாத்துகிட்டே பேசுவோமே?” என்றாள். என் கை தொட்டு அழைத்தாள். சென்றேன். மூன்றாவது மாடியில் ஷூடிங் அறைக்குப் பின்னால் தனியறைக்குப் போனோம். தொட்டிலில் ஒரு குழந்தை என்னைப் பார்த்துச் சிரித்தது. வாயெல்லாம் கோரைப்பல். அரையிருளில் அவளைக் கவனித்துப் பார்த்தேன். இருபது வருடங்களுக்கு மேலாகியும் முகத்தில் களையிருந்தது. பொலிவுடன் பளிச்சென்று இருந்தாள் பேய்ப்பெண். பட்டாம்பூச்சிக் கண்களில் அழைப்பிருந்தது. உதட்டின் சிவப்புச் சாயம், நிச்சயம் மேபலீன்.

மாற்று:

என் பதில் அவனுக்கு அதிர்ச்சியாக இருந்ததா என்பது தெரியவில்லை. பாலைவனக்கல் போல் அசையாதிருந்தான். என் அப்பா இறந்த விவரங்கள் கேட்டான். அலுத்துப் போகும் வரை சொன்னேன். ‘இது எங்கே போகிறது?’ என்று நினைத்தேன். பிறகு, “துரை, உங்க அப்பாவின் உருவம் தோன்றுவது எதனால் என்று நினைக்கிறீர்கள்?” என்றான்.

நான் பதில் சொல்லவில்லை.

கெவின் சில நிமிடங்கள் அமைதி காத்துவிட்டு, “நீங்க உங்க அப்பா உருவத்தைப் பார்ப்பது, உங்க உள் விகாரம். ஏதாவது குற்ற உணர்வா? கொஞ்சம் யோசித்துப் பதில் சொல்லுங்க” என்றான். இன்னும் சில நிமிட அமைதிக்குப்பின், “தாயத்தைக் கையில் எடுத்தவுடன் உங்களுக்கு என்ன தோன்றியது?” என்றான்.

“என் அப்பா சாகவேண்டும் என்று நினைத்தேன்” என்றேன் நிதானமாக.

இருபது வருடங்களாக அடைத்திருந்த கதவு உடைந்துத் தெறித்தது. “எனக்கும் என் அப்பாவுக்கும் சுமுகமான உறவே இல்லை. எதற்கெடுத்தாலும் அடி உதை ஆத்திரம் ஆங்காரம்னு இருந்ததால எனக்கு வேறு எதுவும் தோணல. பேயோட்டிய மறுநாள் காலை தேவையில்லாம, வளர்ந்த பிள்ளைனும் பாராம, என்னைத் திட்டி அவமானப்படுத்தினார். அந்த ஆத்திரத்தில் இருந்தவன், தாயத்து கிடைச்சதும் என்ன செய்றோமுன்னு தெரியாம வேண்டிக்கிட்டேன். அவருடைய கண்மறைக்கும் ஆத்திரம் எனக்குள்ளும் இருப்பதை அன்னக்கு நான் தெரிஞ்சுக்கலே” என்றேன். “இதெல்லாம் நடக்காதுனு தான் நினைச்சேன். ஆறு மாசத்துக்குள்ள சாலை விபத்தில அடிபட்டு, துணிப்பொட்டலமா வந்த அப்பா உடலைப் பாத்ததும் ரொம்ப உடைஞ்சு போனேன். வேண்டுதலின் விளைவா இருக்குமோனு சந்தேகப்பட்டேன். பிறகு வயலின் திலகத்துடன் ஓடிப்போனதும் எனக்குள் இருந்த சந்தேகம் தீந்து பயம், பிராந்தி… வெளிப்படையா இதைக் காட்டிக்கொள்ளாவிட்டாலும் என்னை இந்த உணர்வு அரிச்சுக்கிட்டே இருக்கு”.

“நீங்க காண்பதாகச் சொல்லும் உங்க அப்பாவின் உருவம் உங்களை எந்த விதத்திலாவது துன்புறுத்தியிருக்கிறதா? அச்சப்படுத்தியிருக்கிறதா?”

“இல்லை. சொல்லணும்னா கொஞ்சம் பாவமா இருக்கும். ஆனா அடிக்கடி என் முன்னால தோண்றது எனக்கு தொல்லைதான்”

நோட்பேடில் என்னவோ கிறுக்கினான். “உங்க ட்ரீட்மென்டை ஒரு மைல்ட் ரிலேக்சன்டோட தொடங்கப்போகிறேன். ஆறு வாரத்துக்கு தினம் ஒரு வேளை. ஏங்சைடி சப்ரெசன்ட்” என்ற கெவின், என்னிடம் ஒரு ப்ரிஸ்க்ரிப்ஷன் கொடுத்தான். பிறகு, “நாளைக்குச் சில எலக்ட்ரோ மேக்னடிக் வேவ் ரீடிங் பாத்துடலாம். உங்க ந்யூரோ ஹெல்த் சரியா இருக்கானு பாத்துருவோம்” என்றான்.

தலையாட்டினேன்.

“துரை, இதற்கு மருந்து கொடுத்து குணமாக்க முடியும் என்று என்னால் சொல்ல முடியாது. லெட் மி கிவ் யு மை வ்யூ. நீங்க சொல்றது போலவே தாயத்தின் விளைவென்றே வைத்துக் கொள்வோம். உங்க நண்பர்களுக்கு நல்லது நடந்ததும் தொடர்ந்து ஒரு கெடுதல் நடந்ததும் தாயத்தினால்தான் என்றே வைத்துக்கொள்வோம். மே பி யூ ஆர் லக்கி. உங்க நண்பர்கள் வேண்டியது எல்லாமே பாசிடிவ். நீங்க வேண்டிக்கொண்டது நெகெடிவா பாடிசிவா சொல்ல முடியாது, என்றாலும் அடுத்தவர் இறந்து போக வேண்டும் என்று நினைப்பது நிச்சயம் பாசிடிவ் இல்லை என்பேன். சரியா? அதனால அவங்களுக்குத் தொடர்ந்து கெடுதல் நடந்தது போல் உங்களுக்கு நடக்கும் என்று இல்லையே? காரணம் உங்க அப்பா அகாலமாய் இறந்து உங்களுக்கும் உங்கக் குடும்பத்துக்கும் ஏற்கனவே பல கெடுதல்கள் உண்டானதாலே, மே பி, உங்களுக்கு பாசிடிவாக ஏதாவது நடக்குமோ என்னவோ?” என்று ஏதோ சொல்லிக்கொண்டிருந்தான். “ஒரு வேளை உங்க அப்பாவின் உருவம் உங்களிடம் மன்னிப்புக் கேட்கிறதோ என்னவோ? பார் ஆல் த இல்ட்ரீட்மென்ட் ஹி’ஸ் சபோஸ்டு ஹவ் டன்?”. கடைசி வரிகள் உறைத்தன.

ஒரு வேளை என் அப்பாவின் உருவம் என்னிடம் மன்னிப்புக் கோருகிறதா? என்னை மன்னிக்கச் சொல்கிறதா? கெவினிடம் விடைபெற்றுக்கொண்டு வெளியே வந்தேன். அவன் கொடுத்த ப்ரிஸ்க்ரிப்ஷனைக் கிழித்துப் போட்டேன்.

“அப்பா, உன்னை மன்னித்தேன். லெட்ஸ் பர்கெட்” என்றேன் உரக்க.

என்னை ஏக்கமாகப் பார்த்துக்கொண்டிருந்த தெருவோர சேக்சபோன் பிச்சைக்காரன் பிஏஜி என்றான். அவன் பையில் ஐந்து டாலர் நோட்டைத் திணித்து நடந்தேன். உளுத்த பெட்டி என் கண்ணெதிரே பொடிப் பொடியாகிக் கரைந்து போனது.

– 2010/10/22

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *