கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமலர்
கதைத்தொகுப்பு: சமூக நீதி  
கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 14,424 
 

வாழைத்தோப்பு, மிக்க குளுமையுடன் நாத முனியை வரவேற்றது.
நெருக்கமான வாழைகள், தன் காலுக்குக் கீழே, ஏகப்பட்ட குட்டி வாழைகளுக்கு இடம் கொடுத்து, வாழையடி வாழையாக பல்கிப் பெருகி நிற்கும் வாழைப் பரம்பரை.
தன் இலை, கனி, காய், பூ, நார், மடல் என்று, சகலத்தையும் வினியோகித்து, நேயத்திற்கும், காருண்யத்திற்கும், சிறந்த சாட்சியாய் தலை நிமிர்ந்து நிற்கும் வாழைகள்.
பரிசும் தரிசும்!தனபால்! மகனை நினைத்ததும் நெஞ்சம் இளகியது.
எப்படிக் கிடந்த நிலம் இது… வெறும் தரிசு. அதிலும் கள்ளியும், எருக்கும் மண்டிப் படர்ந்து ஆடு, மாடுகள் கூட, தலை வைத்துப் படுக்காத பாழ்நிலம். கல்லும், பாறையும், நிலமென்னும் நல்லாளை அழுத்திக் கிடந்தன. அய்யாவின் மரணத்திற்குப் பின், இருந்த சொத்தை, பெரியண்ணன் பிரித்த போது, இவர் பங்காக வந்து சேர்ந்த காணி.
வள்ளியம்மா அடிக்கடி சொல்வாள். “நாம நல்லவங்கதான்… அதிலும் நீங்க சொக்கத் தங்கம் தான்… அதுக்காக வயித்துல அடிக்கலாமா உங்க அண்ணன்மாருங்க… வேலைக்கு ஆகாத தரிச, தலையில கட்டுறாங்களே… இத வெச்சு என்ன வெள்ளாம செய்ய முடியும்? காலத்துக்கும் நீங்க மில்லுத் தொழிலாளியாவே இருக்க வேண்டியது தான், விவசாயின்னு பெருமையா சொல்லிக்க முடியாம, இப்படி ஆக்கிட்டாங்களே!’ என்று, அவள் வருத்தப்படும் போதெல்லாம், அவர் சமாதானப்படுத்துவார்.
“ராசா மாதிரி புள்ளய பெத்து வச்சிருக்கோம்டி வள்ளிப் பொண்ணே… அவன் பாரு மண்ணை பொன்னாக்குவான்; நீ கவலப்படாதடி…’ எனும் போது, அவள் பெருமையுடன் புன்னகைத்துக் கொள்வாள். அவன் வாக்கு, அப்படியே பலித்துக் கொண்டிருக்கிறது.
தரிசு, இப்போது பரிசு கொடுத்துக் கொண்டிருக்கிறது. பச்சைக் கம்பளத்தைப் போர்த்தி, பூமித்தாய் மகிழ்ச்சியுடன் வாரி வழங்கிக் கொண்டிருக்கிறாள். ஊர் முழுக்க கண்விரித்து அதிசயத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறது.
தனபால் அனுப்பிய பணம்… அவன் எங்கோ மராட்டிய மண்ணில் சிந்தும் வியர்வை, அந்த உழைப்பு கொடுத்த ஊதியம். தன் செலவு போக, அப்படியே அப்பாவுக்கு அனுப்பினான்.
“விவசாயம் தான்… பெத்தவங்களின் கனவுன்னு தெரியும் எனக்கு… நா இங்க பாக்குறது ஓட்டல் தொழில்… அது வாழ்க்கைக்கு. ஆனா, மனசுக்கு, நீங்க பார்க்க போகிற விவசாயம். வேலைய தொடங்குங்கப்பா…’ என்று, அவன் கொடுத்த உற்சாகத்தில், நிலத்தில் இறங்கினார்.
மண் காத்திருந்தது, ஒன்றை பத்தாக்கிக் கொடுப்பதற்கு. பூமி உச்சி குளிர்ந்து, உழைப்பை உச்சி மோந்தது. முதலில் மென்மைப் பயிராக, கடுகைத்தான் போட்டார். தரமும், விலை உயர்ந்த மோட்டார், அருவியாய் நீரைக் கொட்டியது.
“செயற்கை உரம் வேண்டாம்…’ என்று தனபால் சொன்னதை ஏற்று, மதுரைக்குப் போய், மண்புழுக்களை வாங்கி வந்து, தனியாக நிலத்தின், ஓரத்தில் மண்புழு பண்ணை அமைத்து, அந்த உரத்தையே பயன்படுத்தியதில், விளைச்சல் அமோகமாக செழித்தது.
வரகு, கம்பு, சோளம், சூரியகாந்தி என்று, மாற்றி மாற்றி, நிலம் தன் திறமையைக் கொட்டியது. பக்கத்து நிலம் விலைக்கு வந்த போது, தனபால் ஒரே காசோலை அனுப்பி, வாங்கிக் கொள்ள சொன்னான்.
இப்போது, நெல்லும், துவரையுமாக செந்தமிழ் நாட்டின் சோறுடைத்த சோழ மண் போல, அள்ளி அள்ளிக் கொடுக்கிறது நிலம். இடப்பக்கத்து சோமுக்கோனார் விருப்பத்துடன், தன் நிலத்தை விற்க, அதில் தான் வாழைக்காடு செழித்துப் பெருகியிருக்கிறது.
எல்லாம் சரிதான், அந்த ஒரே ஒரு வருத்தம் தான்.
தனபால்!
உழைப்பு, ஒழுக்கம், திறமை என்று கம்பீரமான மகன், டிப்ளமா சரியாக முடிக்கக்கூட தனக்கு முடியவில்லை என்பதை, நேர்மையாக ஒப்புக் கொண்டு, பெற்றோரிடம் உட்கார்ந்து பேசியவன்.
மராட்டியத்தில் இருக்கும் நண்பனிடம் உதவி பெற்று, ஏதோ ஒரு வேலைக்கு சேர்கிறேன் என்று எடுத்துச் சொன்னவன். படிப்பையும் முடிக்காமல், நல்ல வேலை கிடைப்பதற்கான வாய்ப்பும் இல்லாமல், ஊரில் சுற்றுவது குற்றம் என்று, நேர்மையாக எடுத்துச் சொல்லி, அம்மாவின் கண்ணீரைத் துடைத்து விட்டு, பயணம் மேற்கொண்டவன். இந்த மூன்று வருடங்களில், முழுமையாக உழைத்து, தனக்கான இடத்தை தேடிக் கொண்டவன்.
ஆனால்…
“எம் புள்ளையையும் நாதமுனி, உன் பையன் கிட்டவே அனுப்பிடுப்பா… என்ன வேலை வேணா குடுக்கட்டும்… தொழில கத்துக்கிட்டு, இந்த தறுதலயும் சொந்தக்கால்ல நிக்கட்டும்…’ என்று, எட்டு தகப்பன்கள் சொல்லினர்.
வடக்குத் தெரு மாடசாமி, வரப்பு மேட்டு அய்யனார், நெல்லு மேடு சுப்புக்கோனார், கீழத் தெரு இஸ்மாயில் என்று, அவரிடம் கெஞ்சாத குறையாக, வரிசையில் நின்றனர். அவரும், சந்தோஷமாக தனபாலிடம் சொன்னார்.
தயக்கத்துடன்தான், “சரி…’ என்றான். ஆனால், வந்து சேர்ந்தவர்களை துறைமுக வேலை, கப்பல் வேலை, கட்டட வேலை என்று சேர்த்து விட்டான். தன் ஓட்டலில் வைத்துக் கொள்ளவில்லை. ஊருக்குள் செய்தி பரவி, அவரை புருவம் உயர்த்திப் பார்த்தனர்.
“இதுதான் மனுஷன். தான் உயர்வான்; மத்தவனை <உயர்த்த மாட்டான்...' என்று, முணுமுணுத்துக் கொண்டனர். "பணம் வந்தாத்தான் தெரியும் மனுஷனோட நெறம், தனபால் பய... தலகனத்துப் போய்ட்டான்...' என்று. ஊர் பேசிய போது, அவர் நொறுங்கிப் போய் விட்டார். வள்ளிதான் சொன்னாள்... ""ஊரே உள்ளுக் குள்ளார ஏசுது... மொகத்துக்கு முன்னால சிரிப்பும், முதுகுக்குப் பின்னால மொரப்பும்ன்னு இருக்குது. ஒரு நட, மும்பைக்கு போய், பயல நேர்ல பாத்து கேட்டுரலாம்... என்ன சொல்றீங்க?'' ""நீ சொல்லுறது சரிதான்... அவன போய் பாக்க வேண்டியது தான், நா மட்டும் போய்ட்டு வர்றேன்... சக்கர நோய்க்காரி நீ அலய வேணாம்,'' என்று சொல்லிவிட்டு, மார்க்கெட்டுக்குப் போய் டிராவல்காரனிடம் பணம் கொடுத்து, டிக்கெட்டும் வாங்கி விட்டார். இதோ கிளம்பியும் விட்டார். மும்பை, இப்படித்தான் இருக்கும் என்று மனதில் ஒரு பிம்பம் வைத்திருந்தார். அதில், அவ்வளவாக மாற்றம் செய்யத் தேவை இல்லாமல் இருந்தது. மக்களின் புது மொழி, உடை, உணவு என்று, பார்த்தவாறு முகவரியைக் கையில் வைத்துக் கொண்டு, ஆட்டோவில் ஏறினார். சரியான இடத்தில் இறக்கி விட்ட சீக்கிய ஓட்டுனருக்கு, கூடுதலாக பத்து ரூபாய் கொடுத்துவிட்டு நிமிர்ந்தார். பிரமித்துப் போனார். "வள்ளி ஹோம்!' என்ற பெயர் பலகை கம்பீரமாக நின்றது. கொட்டையாக இந்தியிலும், மாராட்டியத்திலும் எழுத்துக்கள் பளபளத்தன. கீழே தமிழிலும், ஆங்கிலத்திலும் சிறிய எழுத்துகள். நல்ல பரபரப்பான கடைத்தெருவின் மையமான இடம். சுத்தமான சுற்றுப்புறம், தூய்மையான தரைப்பகுதி, கண்ணையும், உடலையும் உறுத்தாத இருக்கைகளில், வடமாநில வாடிக்கையாளர்கள். ஆர்வத்துடன் ஆர்டர் செய்யப்படுகிற இட்லி, தோசா, பட்டூரி, சமோசா, தந்தூரி வகையறாக்கள். கிளீனர், சர்வர், கல்லா, சூப்பர்வைசர் என்று அனைத்தும், வடமாநில ஊழியர்கள். குவிந்து கொண்டே இருக்கிற கூட்டமும், செல்வமும்! ""ஆயியே... ஆயியே...'' என்று புன்னகையுடன், ஒரு சர்தார்ஜி வரவேற்க, அவர் திரும்பினார். ""நான் நாதமுனி... தனபால் அப்பா,'' என்றார். ""பிதாஜி... ஆப், சாப் கா பிதாஜி!'' என்று திகைத்த சர்தார்ஜி, அவர் கையிலிருந்த பெட்டியை வாங்கிக் கொண்டார். ""சார்... இப்போ வந்துடுவார். ஒரு அர்ஜென்ட் வேலை. சார் வாங்க...'' என்று, உடைந்த தமிழில் சொல்லி, கைப்பற்றி அழைத்துப் போனார். அருமையான அறை. அற்புதமான குளியல். அதை விட பிரமாதமான டிபன் என்று, ஒவ்வொரு நிமிடமும், ஒவ்வொரு பிரமிப்பை வழங்கி கொண்டிருந்த போது, "அப்பா...' என்று, தனபாலின் குரல் கேட்டது. ஓடி வந்து அணைத்துக் கொண்டான். ""என்னப்பா... ஒரு போன் செய்யக் கூடாதா... பிளேன்ல வராம என்னப்பா... எப்படிப்பா இருக்கீங்க, அம்மா நல்லா இருக்காங்களா?'' என்று உருகினான். ""ஒன்னய மாதிரி புள்ளய பெத்த மகராசிப்பா அவ... ராணியாட்டம் இருக்கிறா,'' என்றார் மனமார. ""சாரிப்பா... முக்கியமான மீட்டிங்கப்பா ஓட்டலுக்குப் பின்னால... ஏழை மக்கள் காலனி இருக்கு, நூறு வீடுங்க இருக்கிற இடத்துல, பத்து குடிதண்ணி குழாய் கூட இல்லப்பா... தவிர சாக்கடை வசதியும் இல்ல. நானும் அவங்க கூட சோந்து ஊர்வலம், மனு, மீட்டீங்ன்னு போய்ட்டு வர்றேன்.'' ""உன் வீடு இங்கயாப்பா?'' என்றார் ஆர்வமாக. ""இல்லப்பா... இன்னும் சென்டர்ல, நல்ல வசதியான இடம், கட்டி முடிக்கல. ஒரு ரூம் மட்டும் மொதல்ல முடிச்சு நான் இருக்கேன். பிறகு நாம எல்லாரும் சேர்ந்து, இருக்கப் போறோம்,'' என்றான் பரவசமாக. ""என்னப்பா அதிசயமா இருக்கு?'' என்றார் வியப்புடன். ""எதைப்பா சொல்றீங்க?'' ""எல்லாம் வடமாநில ஆளுகளா இருக்காங்க... நீயும் செவசெவன்னு ராஜபுத்திரன் மாதிரி, முதலாளி ஆயிட்ட... கடை பூரா வடமாநில ஆட்கள், வாடிக்கையாட்கள்ன்னு இருக்கு... நீ என்னாடான்னா, அவங்க பிரச்னைக்காக ஊர்வலம், மீட்டிங்ன்னு போறே. நம்ம டவுனை மறந்துட்ட இல்ல... நம்ம பயலுவ எவனையும் வேலைக்கி சேக்க மாட்டேன்னு இருக்கிற இல்ல... ஏம்பா?'' என்று கேட்டு விட்டார். அவன் ஒரு கணம் அவரையே பார்த்தான். பின், அவர் கையை மென்மையாகப் பற்றிக் கொண்டான். ""ஒரு வகையில நீங்க சொல்றது உண்மைதாம்பா... "யாதும் ஊரே யாவரும் கேளீர்' இது தமிழ். ""ஆனா, தமிழன் பின்பற்ற மறந்த... தமிழ் பிழைக்கப் போகிற இடம், பிழைப்பை கொடுத்த இடம்ன்னு நன்றி வேணும்பா... நமக்கு வாழ்வ கொடுத்த மண்ணை மறக்கக் கூடாது... இதை நான் மொதல்லயே முடிவு செஞ்சுட்டேன். கொஞ்சம் காசு சேந்து, கடை சொந்தமா ஆரம்பிச்சதும், உள்ளூர் ஆட்களை வேலைக்கு வெச்சேன்... ""இங்க இருக்கிற ஏழை, படிக்காத இளையவர்களை வேலைக்கு சேர்த்தேன். இந்த ஊர் மக்களோட வசிச்சேன், இவங்க பிரச்னைகளுக்கு, நானும் குரல் கொடுத்தேன். ஒரு விஷயம், மராட்டியம் மராட்டியர்களுக்கே, "மத்த மாநில மக்களே திரும்பிப் போ...'ன்னு பெரிய பிரச்னை எழுந்ததே, அப்ப கொஞ்சம் கூட பாதிக்கப்படாத ஓட்டல், நம்ம ஓட்டல் மட்டும் தாம்பா... ""உண்மையான இந்தியன் இவன்னு மக்கள் புரிஞ்சுகிட்டதால வந்த அற்புதம்பா அது!'' அவர் வியப்புடன் மகனைப் பார்த்தார். ""அதுக்காக, தாய் மண்ணை விட்டுட மாட்டேன்ப்பா... ஊர்ல, ஒரு பிராஞ்ச் தொடங்கறேன், "வள்ளி ஹோம்,' அதுக்கு எல்லாம் நம்ம ஊர் ஆட்கள் தான்...'' அவன் சிரித்தான். ஆனால், அவர் விழிகள் கலங்கின, ஆனந்தத்தில். - பிப்ரவரி 2012

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *