கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: December 24, 2022
பார்வையிட்டோர்: 2,984 
 

(1998ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

வருடங்கள் பல உருண்டும் மருத்துவமனையில் சிறிது நேரம் இருக்க நேர்ந்தாலும், என் எண்ணங்கள் ஆச்சரியமான நாலு கால் பாய்ச்சலில் பதினைந்து வருடங்கள் பின்னோக்கி ஓடி விடுகின்றன! அப்போதும் இதே தான் தோக் செங் மருத்துவமனையில் தான் பிரகாஷ் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தான். அப்போதும் இதே போல பிரவீணா தான் என் முகத்தையே பார்த்தவாறு, தம்பியைப் பற்றிய கவலையை முகத்தில் அணிந்து என் அருகில் உட்கார்ந்திருந்தாள். கும்பிட்ட தெய்வங்கள் மட்டும் என்னைக் கைவிடவில்லை. பிழைத்து எழுந்து மறு தினமே தம்பி பார்த்திபனுடன் வீட்டில் விளையாட ஆரம்பித்து விட்டான். தனியாகத் தவித்த எனக்கு உற்ற நண்பர்களின் உதவிகள் கிடைத்திராவிட்டால், நிலைமையை நினைத்துப் பார்க்கவே இன்று நடுக்கமாக உள்ளது.

அதே பிரகாஷ் இன்று கல்லூரிப் படிப்பையும் முடித்து தேசிய சேவைக்குச் செல்லத் தொடங்கி விட்டிருந்தான். எலும்பும் தோலுமாய் இருந்த அந்தச் சிறுவனா இவன் என்று பெற்றவளான நானே வியக்கும் வண்ணம் உயரமாய், அதற்கேற்ற பருமனுடன் என்னமாய்த் தான் வளர்ந்து நிற்கிறான்!

எத்தனை எடுத்துச் சொல்லியும் கேட்காமல், சமயோசிதமாய்ப் பேசித் தன்னுடன் என்னையும் கூட்டி வந்து விட்டான். மூவரில் என்னிடம் அதிகமான அன்பு கொண்டிருந்தவன் பிரகாஷ் என்பது என் அந்தரங்கச் சொந்தக் கணிப்பு. நான் அவனிடம் காட்டிய அதிக அன்பின் விளைவோ! பிரவீணாவோ என்னைப் போலவே பிரகாஷின் எண்ணங்களை ஒப்புக் கொள்ளவில்லை. அவளுக்குத் தன் தகப்பனிடம் பாசமில்லாமலில்லை. இருப்பினும், தன்னுடைய ஒரு சிறுநீரகத்தையே கொடுத்துதவ நினைத்த பிரகாஷின் எண்ண அலை வரிசை எங்களுடைய அலைவரிசையுடன் ஒத்துப் போகவில்லை. நாங்கள் இருவருமே மனதிற்குள் ஒரே மாதிரியாய் சிந்தித்துக் கொண்டிருப்பது போல என் மனதுக்குள் நினைத்துக் கொள்கிறேன். பிரகாஷின் சிறுநீரகம் பொருந்தாது என்று மட்டும் மருத்துவர்கள் கூறிவிட்டால், எத்தனை நிம்மதி!

மற்றொரு கோணத்திலிலிருந்து பார்த்தால் என்னுடைய இரக்கமில்லாத்தனம் என்னையே அதிர வைக்கிறது! இரக்கம் முற்றும் அழிந்து விடவில்லை என்னுள் என்பதற்கு என் பொதுநல சேவைகள் சாட்சி கூறும். ஆனால், சற்றும் பொறுப்பில்லாமல் மூன்று சின்னஞ்சிறு குழந்தைகளுடன் நின்ற என்னை அநாதரவாய் விட்டுச் சென்ற அந்த ஆளை நினைத்தால் என்னையும் மீறி வெறுப்பும் கோபமுமே மனதில் எரிமலையெனக் கொப்பளிக்கின்றன.

‘அம்மா, உங்களுக்குக் குடிக்க ஏதும் வாங்கிக்கிட்டு வரவா?”, மகள் தான், என்னையும் என் நினைவலைகளையும் உலுக்கி நனவுலகிற்குக் கூட்டி வருகிறாள். சைகையிலேயே வேண்டாமென்று மறுத்துவிட்டு சுற்றுமுற்றும் கண்களைச் சுழற்றுகிறேன். கண்கள் தங்கள் வேலையில் ஈடுபட்டிருந்த போதும் மனம் மட்டும் விட்ட இடத்தையே பிடிக்க ஓடுகிறது.

அன்று தான், பெயரளவிலாவது கணவனாய் இருந்த அந்த ஆள் என் கண் முன்னே கயவனாகிப் போனான். எப்போதும் எப்போதும் போல அலுவலக விஷயமாகத் தான் பெட்டி படுக்கைகளுடன் கிளம்புகிறானென்று நினைத்த என் தலையில் மண்ணை வாரி இரைத்தான். வீட்டையும் குடும்பத்தையும் விட்டு போவதாய் சர்வசாதாரணமாய்க் கூறி விட்டுக் கிளம்பி விட்டான். அழுகவோ, ஆத்திரப்படவோ இல்லை சண்டையிடவோ எனக்குச் சந்தர்ப்பமே தராமல் மறைந்தான். மாதங்கள் கடந்து தான் அவனுக்குப் பினாங்கில் மறுமணமென்ற செய்தி என் காதை எட்டியது.

பாவி மனுஷன் நான் பார்த்த வேலையையும் இரண்டாம் குழந்தைப்பேறு முடிந்த சமயத்தில் விட்டு விட வற்புறுத்தியதில், நானும் வேலைத் துறந்திருந்தேன். வீட்டை விட்டு அவன் வெளியேறிய பின் யோசித்த போது தான் சிறுசிறு சம்பவங்கள் என்னால் அலட்சியப் படுத்தப்பட்டிருப்பது எனக்குப் புரிந்தது. நாளடைவில் அவனிடம் தெரிந்த மாறுதல்களை நான் பொருட் படுத்தாது இருந்தது அவனிடமிருந்த நம்பிக்கையின் காரணமோ என்னவோ. முன்பே சிறிதளவாவது சூசகமாய் எனக்கு உணர்த்தியிருந்தால் பேரிடியாகவாவது உணர்ந்திருக்க மாட்டேன்.

நண்பர்கள் உதவியுடன் ஒரு வேலையைத் தேடிக் கொண்டு குடும்பத்தையும் அவர்கள் உதவியுடனேயே நடத்த நான் பட்ட கஷ்டங்கள் ஒரு விரோதிக்கும் வரக் கூடாது. பிரவீணா தான் ஆக அதிகம் பாதிக்கப்பட்டவள். மூத்தவளாய்ப் பிறந்து, இன்னல்களைக் கண்டு, சிறுமியாக இருந்த போதே அவள் பொறுப்புள்ள பெண்ணாகி விட்டிருந்தாள். நான் வீட்டிலில்லாத சமயங்களில் தம்பிகளைப் பார்த்துக் கொண்டதே அவள் தான். அவள் ஒன்றாம் வகுப்பு படிக்கும் போதே அவளிடம் வீட்டுச் சாவி பள்ளிப் பையில் இருக்கும். வேலை நேரத்தில், வீட்டில் திருடன் புகுந்து விடுவானோ என்ற பயமே எனக்கு இருந்ததில்லை. காரணம், திருடனுக்கும் தெரியுமே, அவனுக்கு ஒன்றும் கிடைக்காதென்று. இருப்பினும், குழந்தைகள் காயம் படாமல் பத்திரமாய் இருக்க வேண்டுமே என்ற கவலையும் பயமும் மட்டும் என் மனம் நிறைய வியாப்பிக்கும். அண்டை வீட்டாரும் ஓரளவு கவனித்துக் கொண்டனர்.

“அம்மா, அம்மா, நீங்க வேணா வீட்டுக்குப் போங்கம்மா. இன்னிக்கி எனக்கு பாடம் முடிஞ்சிடிச்சி. அதான் சீக்கிரமே வந்துட்டேன். நானும் அக்காவும் காத்திருக்கோம்”, என்று பார்த்திபன் கூப்பிட்டதும், அருகில் தொடக்கக் கல்லூரிச் சீருடையில் அவன் நிற்பதைப் பார்க்கிறேன். ஒரு விதத்தில் இவன் அதிருஷ்டசாலி. ஏனென்றால், அவனுக்கு விவரம் புரியும் வயதில் நான் ஓரளவு பொருளாதாரம் மட்டுமில்லாமல் வாழ்க்கையை எதிர் நோக்கும் திறனிலும் தேர்ந்து விட்டிருந்தேன். ஓரளவு நல்ல இளமைப் பருவம் அமைந்து விட்டிருந்தது இவனுக்கு, மற்ற இருவரையும் ஒப்பிடும் போது.

“நீ சாப்பிட்டயா பார்த்திபா?, என்று நான் கேட்டதும், “நா சாப்புட்டுட்டேம்மா. நீங்க ரெண்டு பேரும் போயி சாப்பிடறீங்களா? அண்ணனுக்கு ரத்தப் பரிசோதனை தவிர வேறு சில பரிசோதனைகளும் இருக்காம். வெறும் பரிசோதனை தானேம்மா. இதுக்கு ஏம்மா உங்க முகத்துல இவ்வளவு கவலை? கவலப் படாதீங்கம்மா”, என்று தன் பாணியிலேயே சிரித்துக் கொண்டே கூறுகிறான். அவனுடைய உற்சாகம் எனக்குப் பொறாமை கலந்த பெருமிதத்தைக் கொடுத்தது. புன்னகைக்க முயல்கிறேன்.

“பிரவீணா, பிரகாஷ் முடிவு பண்ணிட்டானா, ஒரு கிட்னிய உங்கப்பாவுக்குக் கொடுக்கத் தான் போறானா என்ன?”, என்று பீடிகையின்றி நான் அதிரடியாய் என் கவலையை வெளிப்படுத்த, பார்த்திபன் முந்திக் கொண்டு, “பொருந்தினாத் தானேம்மா, அதைப் பத்தியே சொல்ல முடியும். ஆனா, அப்பா ரொம்பவே முடியாமத் தான் இருக்காரு. ரெண்டு கிட்னியும் சுத்தமா செயலிழந்தாச்சுன்னும் மாற்று சிறுநீரகம் பொருத்தினாத் தஇான் பிழைப்பாருன்னும் கண்டிப்பாச் சொல்லிட்டாங்களாம். டையாலிஸிஸ்ல தான் ஓடிட்டுக்கு. இப்பப் பொருந்துமான்னு தெரியத் தானே பிரகாஷ் பரிசோதனைக்குப் போயிருக்கான். அதுக்குள்ள நீங்க,..”, என்று சமாதானம் செய்கிறான்.

“என்னவோ எனக்குத் துளிக் கூடப் பிடிக்கல்ல. இருந்ததோ இருந்துட்டோம். அவனும் வந்துடட்டும். சேர்ந்தே வீட்டுக்குப் போயிடலாம்,” என்று சொல்லிவிட்டு என் இருக்கையில் சௌகரியமாய் உட்கார்ந்து கொள்கிறேன். பொது இடங்களில் மேலும் பேசி உணர்ச்சி வசப்படுவதில் யாதொரு பலனும் இல்லை. பேசுவதைவிட, யோசனையில் தான் என் மனம் அதிக நாட்டம் கொள்கிறது.

வயிற்றில் சுமந்து, பெற்று, வளர்த்து, படிக்க வைத்து உயர்த்தியதால் மட்டும் மகனைத் தன் உடைமையெனக் கருதும் என் பேதமையை நினைத்து என்னால் வியக்காமல் இருக்க முடியவில்லை. மூளைக்கிருக்கும் பக்குவம் மனதிற்கில்லாமல் போனதே. வளர்ந்து ஓர் ஆணாகிவிட்ட மகனை இன்னும் சிறு குழந்தையாகவே நினைக்க வைக்கிறது, எனக்கு அவனிடம் இருக்கும் பாசம். அவன் வாழ்வே இப்போது தான் தொடங்கியிருக்கிறது. அவனுக்கு ஒரு நல்ல வேலை, பொருத்தமான திருமணம் என்று நடக்கும் முன்பே இது என்ன பெரும் சோதனை!

சிறு வயதுப் பிள்ளையாய் இருந்தாலும் அதட்டி உருட்டி மிரட்டிப் பணிய வைக்கலாம். தோளுக்கு மேல் வளர்ந்துவிட்ட மகனிடம் சொற்களைக் கவனமாக உபயோகிக்கும் என் நிலை இருதலைக் கொள்ளி எறும்பின் நிலைதான். செய்வதறியாது குழம்பியது தான் மிச்சம். நாலரை வயதில் அவன் உயிர் பிழைப்பது கடினம் என்று மருத்துவரே உதட்டைப் பிதுக்கிக் கைவிட்டு விட்டனர். விஷக்காய்ச்சலிலிருந்து பிழைத்தெழுந்த மகனைக் கண்டு நான் அடைந்த நிம்மதி, மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. இன்று இதே மருத்துவமனைச் சூழலில் மறுபடியும் என் மனபலத்தை இறைவன் சோதிப்பதாய் தோன்றியது. எனக்கு வைத்த சோதனைகளிலெல்லாம் அவன் திருப்தி அடையவில்லை போலும்.

எண்ணிலடங்காப் பல இன்னல்களுக்கு ஆளாகிப் பிள்ளைகளை நான் வளர்த்து வாழ்க்கையில் ஓரளவு உயர்ந்து விட்ட நிலையில் தானே, திடீரென்று எங்கள் நினைவு வந்து வீடு தேடி வர ஆரம்பித்திருந்தான் என் மக்களின் தகப்பன்.

சமீபமாக, சுமார் நான்கைந்து வருடங்களாகத் தான், எனக்குத் தெரிந்தும் தெரியாமலும் வீட்டுக்கு வந்து தன் குழந்தைகளுடன் பேசிவிட்டுச் செல்ல ஆரம்பித்திருந்தான். முதலில் வெகுண்டெழுந்த நான், பிறகு குழந்தைகளுக்குத் தகப்பனின் சிறிதளவு அன்பு காலம் கடந்தாவது கிடைக்கிறதே என்ற எண்ணத்தில் கண்டும் காணாமலும் இருக்கத் தொடங்கினேன்.

விதி வழி வாழப் பழகிய எனக்குச் சொந்த விருப்பு வெறுப்புகளைத் துறப்பது சுலபமாகி விட்டிருந்தது. வாழ்க்கையில் நான் ஏமாறாத ஒரே விஷயம் என் குழந்தைகள். அவர்கள் நல்ல, பொறுப்புள்ளவர்களாய் இருந்து விட்டது எனக்கு ஒரு நிம்மதி. ஒழுக்கப் பிரச்சனைகள் ஒன்றும் இல்லாது போனதே என் வாழ்க்கைப்படகு கரை சேர ஏதுவானது. மூவருக்குமே என்னிடம் பாசம், அன்பு மற்றும் மரியாதை உண்டு.

தான் சம்பாதித்து பார்த்திபனை மருத்துவம் படிக்க வைக்கப் போவதாய் பிரகாஷ் கூறியிருந்தான். பிரவீணாவும் வேலையில் அமர்ந்து ஒன்றரை ஆண்டுகளாகி விட்டன. இருவருமாய் வேலையை விட்டுவிட்டு என்னை நிம்மதியாய் இருக்கச் சொல்லி வற்புறுத்துகிறார்கள். இன்னொரு முறை அத்தகைய முட்டாள்த் தனத்தைச் செய்ய நான் ஒன்றும் அத்தனை அறிவிலி அல்லவே! இதோ அதோ என்று தான் இதமாய்த் தள்ளிப் போடுகிறேன்.

தன் மனைவிக்குப் பத்து வருடங்களாகியும் பிள்ளை பிறக்கவில்லை என்ற போது தான் தந்தைக்கு மக்களின் நினைவு வந்திருக்கிறது என்று வெகு சீக்கிரமே புரிந்த போது என் உணர்ச்சிகளை என்னாலேயே புரிந்து கொள்ள முடியவில்லை. அவளுக்குப் பிள்ளை பிறந்திருக்குமானால், நாங்கள் இருக்கிறோமா, செத்தோமா என்ற நினைப்பேயில்லாமல் இருந்திருப்பான். அவனைத் தகப்பன் என்று சொல்லக் கூட நாக்கூசுகிறது. பெற்று விட்டால் மட்டும் தந்தையாகிவிட முடியாதென்று ஏனோ யோசித்துப் பழகிய மனம் உரக்கக் கத்துகிறது. நான் பட்ட வேதனைகள் அவனுக்கு அவனுடைய இரண்டாம் மனைவி மூலம் வாரிசில்லாமல் செய்து விட்டதோ என்று கூட நினைத்ததுண்டு. மனமறிந்து ஒரு முறைகூட சபித்ததாய் நினைவில்லை எனக்கு.

சட்டப்படி எளிதாய் மணவிலக்கு ஆனதும் அவன் கொடுக்கவிருந்த மாதாந்திரப் பொருளுதவியை வீராப்பாய் மறுத்து முழுக்க முழுக்க சொந்த முயற்சியில் பிள்ளைகளை வளர்க்க எண்ணி, பிறகு திணறி ஒரு வழியாய் சாதித்தும் விட்டேன்.

தன் ஆசைக்காக பணமாகவும் பொருளாகவும் காலம் கடந்து வீட்டில் கொண்டு வந்து கொட்டிப் பிள்ளைகளையும் என்னையும் மகிழ்விக்க எண்ணி பல கோமாளித் தனங்கள் செய்தான். பிள்ளைகளுக்கு வேண்டுமானால், அவன் செயல்கள் மகிழ்ச்சியைக் கொடுத்திருக்கலாம். எதிர்பாராமல் சந்திக்க நேர்ந்தாலே புழுவைப் பார்ப்பதைப் போல ஒதுங்கும் எனக்கு அவனுடைய பணமும் பகட்டும் பொருளும் மண்ணுக்குச் சமமாயிருந்தது. தங்களுக்கு அவன் அளித்த பரிசுப் பொருள்களையும் கூடப் பிள்ளைகள் பயந்த படியே தான் என்னிடம் காட்டுவர். அவனின் செய்கைகள் அவனுடைய குற்றவுணர்விற்கும் மனசாட்சியின் குதறலுக்கும் மருந்தாய் அமைந்ததோ என்னவோ. ஒரு பிராயச்சித்தமாய் நினைத்தான் போலும்.

ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து மடியையே கடிக்க வந்தது போல பிரகாஷின் சிறுநீரகத்திற்கே அடிபோடுகிறானே என்று எனக்கு ஒரே எரிச்சலாய் இருந்தது. பிரகாஷின் சொந்த யோசனையோ இல்லை அவன் கேட்டுத் தான் இவன் இதில் இறங்குகிறானோ என்றறியேன்.

“அம்மா, அதோ பிரகாஷ் வெளிய வந்துட்டான்”, பார்த்திபன் கூற, நான் அவசரமாய் எழுந்து அவனை நோக்கி நடந்து சென்று, “என்னப்பா, என்ன சொன்னாரு டாக்டர்? பொருந்துதா?”, என்று கேட்கிறேன், மனதிற்குள் பொருந்தக் கூடாதே ஆண்டவனே என்று வேண்டியபடி. “ஐயோ அம்மா, இப்பவே தெரியாதும்மா. கொறஞ்சது நாலு நாளாவது ஆகும். எனக்குத் தெரியப்படுத்துவாங்க. நீங்க ஏம்மா இவ்வளவு கவலப்படறீங்க. வாங்க வீட்டுக்குப் போகலாம். பிரவீணா, நீயும் வீட்டுக்குத் தானே,.?.”, என்று கூறியபடி சிரித்துக் கொண்டே என் தோளை ஆதரவுடன் அணைத்துக் கொண்டு நடக்கிறான்.

வீட்டில் அவரவர், வேலை, படிப்பு, நண்பர்கள் வட்டம் என்பன பற்றி படு உற்சாகமாகப் பேசிய படியே உணவருந்துகிறார்கள். நான் மட்டும் அதில் சேராமல் அமைதியாய் உண்கிறேன். என் அமைதியின் பின்னால் உள்ள கவலை அவர்களுக்குப் புரியும் என்று நான் அறிவேன். அதனால் தானோ என்னவோ எனக்கு உணர்ச்சி வசப்படவே சந்தர்ப்பம் தராது லொடலொடவென்று பேசித் தீர்க்கிறார்கள். அவர்களை நான் அறிந்த அளவிற்கு அவர்களும் என்னைக் கணித்துத் தானே வைத்திருந்தார்கள்.

அவரவர் அலுவல்களில் ஒரு வாரம் சீக்கிரமே பறந்து விடுகிறது. மூவரும் கூடிக் கூடிப் பேசுவதும், என்னைக் கண்டதும் நிறுத்துவதும் என்னையும் என் கவனத்தையும் கவர்கிறது. எனக்குத் தனித்து விடப்பட்ட உணர்வு.

அன்று சனிக்கிழமை. சற்றும் எதிர் பாராமல், பெற்று விட்டதால் மட்டுமே தந்தையான அந்தச் சுயநலவாதியும், உடன் உடன் அவன் மனைவியும் மாலையில் வந்து விடுகின்றனர். எப்படிச் சமாளிப்பதென்ற குழப்பத்தில் எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. பிரகாஷ் மெள்ள என்னிடம் வந்து, “அம்மா, நீங்க கிளம்பிச் சட்னு வெளிய போயிடாதீங்கம்மா. முக்கியமா உங்க கிட்ட தான் பேச வந்திருக்காங்க.” என் முறைப்பைக் கவனித்தபடி, “கோபப் படாதீங்கம்மா. என்னோட சிறுநீரகம் பொருந்துது. நேத்திக்கே தெரிஞ்சிடுச்சி. சொன்னவொடனேயே அப்பா மறுத்துட்டாரு. அவங்க மனைவி தான் கெஞ்சினாங்க. அப்புறமா, எல்லோரும் பேசி, நீங்க ஒத்துக் கிட்டா மட்டும் தான் மேல் கொண்டு பேசலாம்னு அப்பா சொல்லிட்டாரு”, தொடர்த்து கூறி முடித்தும் விடுகிறான். என் கண்கள் கண்ணீரால் நிறைந்து அவன் முகம் கூடச் சரிவரத் திரியவில்லை எனக்கு.

என் நிலையை உணர்ந்த பிரகாஷ் என் கைகளைப் பற்றி ஆசுவாசப் படுத்திக் கூட்டிச் சென்று கூடத்து இருக்கையில் உட்கார வைக்கிறான். உடன் வந்திருந்த மனைவியையும், அடையாளம் தெரியாமல் மெலிந்து இருந்த சக்கர நாற்காலியில் அமர்ந்த உருவத்தையும் பார்க்கிறேன். ஏனோ அவளிடம் வெறுப்பே ஏற்படவில்லை எனக்கு. மாறாக, அவள் முகத்தில் இருந்த கவலை என் கன்னெஞ்சையும் உருக்கி விடுமோவென்று தான் நான் பயந்து கொண்டிருந்தேன். அந்த ஆள் செய்த தவறுக்கு அவளை என்ன சொல்வது.

என் கைகளை நீட்டியும் மடக்கியும், புதிதாய் விரல்களைப் பார்ப்பது போல பார்த்தபடி, என் முகத்தின் கடுமையைக் குறைக்காமல் அமர்ந்திருந்தேன். முதலில் அந்த ஆள், “க்கும்,.. இதுல எனக்குக் கொஞ்சங் கூட இஷ்டமில்ல. ம், அருகதையும் கூட இல்ல தான். ஆனா, இவ தான் ரொம்ப வற்புறுத்தறா. பிரகாஷுக்கும் உடன்பாடு தான். உன்னோட சம்மதம் இல்லாம செய்யக் கூடாதுன்னு மட்டும் நா தீர்மானமாவே சொல்லிட்டேன்”, கஷ்டப்பட்டு இருமல்களுக்கிடையே சொல்லி முடித்தான்.

அவள் தொடர்ந்து, “பழைய நினைவுகளை மனசுல வச்சிக்கிட்டு தயவு செஞ்சு மறுத்துடாதீங்க. இந்த உதவிய வாழ்நாள் முழுவதும் மறக்க மாட்டேன். உங்க மகன் சிறு வயசு. ஒரு பிரச்சனையும் வராதுன்னு டாக்டர் சொன்னாரு. இதுக்கு மேல எனக்குச் சொல்ல ஒண்ணுமில்ல”, என்று கேவல்களுக்கிடையே சொன்னாள். என் கோபத்திற்கு பயந்தோ என்னவோ உடனே கிளம்பிப் போய் விடுகிறார்கள்.

வாயிற் கதவை அடைத்து விட்டு பிரகாஷ் ஆழ்ந்து யோசித்தபடி என்னிடம் அமர்கிறான். அவன் முகத்தையே பார்த்தபடி சிறிது நேரம் உட்கார்ந்திருந்த நான் அடக்க முடியாமல் திடீரென்று குலுங்கிக் குலுங்கி அழுகிறேன். “ஏம்மா, அம்மா, ஏம்மா அழறீங்க. அழாதீங்கம்மா”, தரவாய்த் தோளைத் தட்டி ஆசுவாசப் படுத்துகிறான். பேச முடியாமல் அழுத என்னை அழுது ஓயட்டும் என்று விடுகிறான்.

அழுகை அடங்கியபின், “பிரகாஷ், இது வேண்டாமே ப்ளீஸ். பிரகாஷ், எனக்குப் பிடிக்கல்ல. இப்ப தான் உன்னோட வாழ்க்கையே ஆரம்பிக்கப் போகுது. இப்போப் போயி இதெல்லாம் எதுக்கு? வாழ்ந்து முடிச்ச அந்த ஆளுக்கு என்ன, வேற வெளியில கிட்னி கிடைக்காதா என்ன? எனக்கு இதுல சம்மதமில்ல”, என்று அவனிடம் கூறி விடுகிறேன். என்னை என் அறைக்கு அழைத்துச் செல்கிறான்.

“பழைய நினைவுகளையெல்லாம் மறக்க முயற்சிங்கம்மா. அது உங்களுக்கும் ரொம்ப நல்லது. அப்பா செஞ்ச தப்புக்கு அவருக்குத் தண்டனை கொடுக்க மட்டும் நினைக்காதீங்க. முன்பின் தெரியாத ஒரு ஆளா இருந்தா எப்படி நினைப்பீங்களோ, அப்படி நினைச்சுக்கோங்க. அடிபட்ட பூனை நாய்க்குக் கூடப் பரிதாபப் படறவங்க நீங்களும் நானும். எத்தனையோ பேருக்கு உதவற நாம அப்பாவுக்குச் செய்யலேன்னா எப்படிம்மா. அவரு மேல இருக்கற வெறுப்புல நீங்க மறுக்கறத மட்டும் என்னால ஏத்துக்க முடியாது. என் மேல உள்ள பாசமும் ஒரு காரணம்னு எனக்குத் தெரியும். எனக்கு ஒண்ணும் ஆகாதும்மா. கவலையே படாம, மனசுல ஒரு தெளிவு ஏற்படற வரைக்கும் யோசிங்க. அப்புறம் நல்லாத் தூங்குங்க. உங்க முடிவு சரி’ ன்னா நாளைக்குக் காலையில மஞ்சச் சேலை உடுத்துங்க. இல்லைன்னா, கருப்புப் புடவை கட்டுங்க. உங்க முடிவுக்கு எதிரா மட்டும் நான் செய்யவே மாட்டேன். நல்லாத் தூங்குங்கம்மா, குட் நைட்.”

பொறுப்பை என்னிடம் விட்டு புன்னகையுடன் என் கைகளை வழக்கம் போல அழுத்தி விட்டுத் தன் அறைக்குப் போய் விடுகிறான். மனதில் பலவிதக் குழப்பங்கள், தர்க்கம், விவாதம், போராட்டம். பல வருடங்களுக்குப் பிறகு முழு இரவையும் கண்கள் மூடாமலேயே கழிக்கிறேன். வானமும் எனக்காக என் கூடவே இரவு முழுவதும் அழுது தீர்க்கிறது.

எழுந்து குளிர்ந்த நீரில் குளித்துக் கொண்டே மறுபடியும் யோசித்து ‘மஞ்சளா, கருப்பா’ என்று குழம்பம். சன்னல் வழியே பார்க்கிறேன். வானம் தெளிந்து நீலம் காட்டியது. புதிதாய்ப் பூத்த பூவாய் இருந்தது அந்த நாள். அமைதியாயிருந்த வீட்டில், என்னைத் தவிர ஒருவரும் எழவில்லை. பிரகாஷின் அறையைத் திறந்து, அவனைத் தொட்டெழுப்பி, “நான் கோவிலுக்குப் போயிட்டு சீக்கிரமே வந்துடறேம்பா. உங்களுக்கெல்லாம் காப்பி ரெடியா போட்டு வச்சிட்டேன், சரியா”, என்று கூறியபடி வெளியேறுகிறேன்.

தூக்கக் கலக்கத்தில், முதலில் சாதாரணமாய் என்னைப் பார்த்த பிரகாஷின் கண்கள் விசையை அழுத்திய வேகத்தில் எரியும் விளக்காய் பிரகாசமாயின. வாய் பேசாத ஆயிரம் வார்த்தைகளை அவன் கண்கள் என் மஞ்சள் புடைவைப் பார்த்துப் பேசின.

– தமிழ் முரசு 27-09-03 திண்ணை.காம் 6-11-03, 8-11-1998 – ஒலி மற்றும் சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகம் இணைந்து ஜீ ஜீ எஸ் புத்தகக் கடை ஆதரவில் நடத்திய சிறுகதைப் போட்டியில் ஆறுதல் பரிசு. வானொலியில் வாசிக்கப்பட்டது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *