தவறுகள், குற்றங்கள் அல்ல…!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: October 3, 2012
பார்வையிட்டோர்: 108,887 
 

தெரஸா கூறிய வார்த்தைகள் ஒன்றுகூடக் கடுமையானதல்ல. அவற்றைச் சொல்லும்போது அவள் குரல்கூடக் கடினமாக இல்லை.

மென்மையான சுபாவமுடைய தெரஸாவின் மிருதுவான குரலில் வெளிவந்த அந்த வார்த்தைகளில் இன்னும் கூட மரியாதை கலந்திருந்தது. அவரைப் பற்றி அவளுக்கு வருத்தம்தான் மிகுந்திருந்ததே தவிர, அவரை அவமதிக்கவேண்டும் என்ற எண்ணமோ, விரோதமோ அவள் முகபாவத்தில் தெரியவில்லை.

‘சீ’ என்று அவள் காறித் துப்பியோ அல்லது ‘யூ டாமிட்’ என்று கத்தியோ தன்னை அவமதித்திருந்தால் கூடத் தேவலாம் போலிருந்தது நாகராஜனுக்கு. அவ்வித அனுபவங்கள் அவருக்கு ஏற்பட்டதுண்டு.

அது மாதிரி சந்தர்ப்பங்களில் தன்னை எப்படிக் காப்பாற்றிக்கொள்வது என்று நாகராஜனுக்குத் தெரியும். அவருடைய அதிகாரம், செல்வாக்கு, தோரணை, வயது, சமூக அந்தஸ்து இவை எல்லாமோ, அல்லது இவற்றில் ஏதாவது ஒன்றோ அவருக்குத் துணை நிற்கும். ‘என்ன நின்று என்ன? பட்ட அவமானம்

பட்டதுதானே! எவ்வளவு பட்டும் எனக்குப் புத்தி வரவில்லையே!’ என்று தன்னையே தன் மனத்துள் கடிந்துகொண்டபோது, அவரது கண்கள் வெட்கமற்றுக் கலங்கின. அவர் அவமானத்தாலும், தன் மீதே ஏற்பட்ட அருவருப் பாலும் தலைகுனிந்து உட்கார்ந்து, தன்னைப் பற்றிக் கசப்புடன் யோசித்தார்.

‘சீ..! நான் என்ன மனுஷன்! வயது ஐம்பது ஆகப் போகிறது. தலைக்கு உயர்ந்த பிள்ளையும், கல்லூரியில் படிக்கும் பெண்ணும்… அவர்களுக்குக் கல்யாணம் செய்து வைத்திருந்தால் இந்நேரம் நான்கு பேரக் குழந்தைகளுக்குத் தாத்தாவாகி இருப் பேன்! சீ..! நான் என்ன மனுஷன்?’என்று பல்லைக் கடித்துக்கொண்டார். இரண்டு கைகளையும் கோட்டுப் பாக்கெட்டுக் குள் நுழைத்து, விரல்களை நெரித்துக்கொண்டார். கண்களை இறுக மூடி, நாற்காலியில் அப்படியே சாய்ந்து, தன்னை அறி யாமல், ‘வாட் எ ஷேம்!’ என்று முனகியவாறே, தலையை இடமும் வல மும் உருட்டினார். அவ ருக்கு என்ன செய்வது என்று புரியவில்லை.

தெரஸாவின் அந்த முகமே அவர் நினைவில் வந்து வந்து நின்றது.

சற்று முன்…

ரத்தமாகச் சிவந்து, நெற்றியில் சிகை புரள, உதடுகள் தீப்பட்டவை போல் சிவப்புச் சாயம் கலைந்து துடிதுடிக்க, கண்களிலிருந்து கலங்கிச் சுரந்த கண்ணீருடன், ”ப்ளீஸ்… லீவ் மீ! ஐ ரிக்ரெட்… ஃபார் எவ்ரிதிங்…” என்று அவரிடமிருந்து திமிறி விலகிச் சென்று, உடல் முழுவதும் நடுநடுங்க அவள் நின்ற தோற்றம்…

அவள் கண்களிலிருந்து பெருகிய நீர், அவள் தனது ஸ்கர்ட் பாக்கெட்டிலிருந்து கர்ச்சீப்பை எடுத்துத் துடைப்பதற்குள் ‘பொட்’டென்று அவரது டேபிளின் மீது… இந்தக் கண் ணாடி விரிப்பின் மேல் விழுந்து, இதோ இன்னும் உலராமல்சிதறிக் கிடக்கிற இரண்டு நீர் முத்துக் கள்…

அவர் எதிரே நின்று தான் அழுதுவிட்ட நாகரிகமற்ற செயலுக்கு வருந்தி, ”…ஆம் ஸாரி” என்று தனக்குள்ளேயே விக்கியவாறு, கர்ச்சீப்பில் முகம் புதைத்துக் கொண்டு அங்கிருந்து தனது அறைக்கு ஓடினாளே… அதோ, அவளது ஸ்லிப்பர் சப்தம் இப்போதுதான் ஓய்ந்து, ‘பொத்’தென அவள் நாற்காலியில் விழுகிற ஓசை…

அவர் காதில் அவளது வார்த்தைகளும்… அவர் நினைவில், அவமானமும் துயரமும்கொண்டு ஓடினாளே அந்தக் காட்சியும்தான் இந்தச் சில நிமிஷங்களில் திரும் பத் திரும்ப வந்து நிற்கின்றன.

அவள் எவ்வளவு பெருந்தன்மையானவள்! எவ்வளவு உயர்ந்த, மென்மையான இயல்புகள் கொண்டவள் என்பதை உணர் கையில் அவருக்கு நெஞ்செல்லாம் வலிக்கிறது.

‘நான் அவளிடம் இப்படி நடந்துகொள்வேன் என்று அவள் கனவுகூடக் கண்டிருக்க மாட் டாள்’ என்பது புரிகையில், தன்னைத்தானே இரு கூறாகப் பிளந்துகொள்ளலாம் போலிருக்கிறது அவருக்கு. ஒரு நிமிஷத்தில் தான் அடைந்துவிட்ட வீழ்ச்சியை எண்ணி எண்ணி அவர் நெஞ்சைப் பிசைந்துகொள்கிறார்.

‘தெரஸாவுக்கு எப்படிச் சமா தானம் கூறுவது? இந்த மாசை எப்படித் துடைப்பது? மறுபடியும் அவள் மனதில் தனது பழைய கௌரவத்தை எவ்விதம் நிலை நிறுத்துவது?’

‘ம்..! அவ்வளவுதான். எல்லாம் போச்சு! கொட்டிக் கவிழ்த்தாகி விட்டது! எவ்வளவு பெரிய நஷ்டம்?’ – நாகராஜன் நினைத்து நினைத்துப் பெருமூச்சு விடுகிறார். நெற்றி வியர்க்க வியர்க்கத் துடைத்துக்கொள்கிறார். எங்கா வது போய் அழலாம் போல் தோன்றுகிறது.

தான் சில நாட்களாகவே அவள்பால்கொண்ட சபலங்களுக்கு அவளது நடவடிக்கைகள், புன்சிரிப்பு, உபசரிப்பு… எல்லாவற் றுக்கும் மேலாகத் தனது வயதை யும், தான் அவளிடம் காட்டுகிற பரிவையும் உத்தேசித்து ஒரு தகப்பனிடம் தெரிவிப்பதுபோல் அவள் தனது வாழ்க்கையின் அவலங்களையும் ஏமாற்றங்களை யும் கூறி மனம் கலங்கியது முதலிய வற்றைச் சாதகமாகக்கொண்டு, அவளுக்குத் தன் மீது நாட்டம் என்று நம்பிய தனது கேவலத்தை எண்ண எண்ண, உள்ளமெல்லாம் குமட்டுகிறது அவருக்கு.

அப்படியரு அசட்டு நம்பிக்கையில்தான், அவள் தடுக்கமாட்டாள் என்ற தைரியத்தில் அவர் அவளிடம் அப்படி நடந்துகொண்டார்.

இந்தப் பத்து நாட்களாய், வழக்கமாகச் சாப்பாடு பரிமாற வருகிற அந்தக் கன்னையா சொல்லிக்கொள்ளாமல் ஓடிப் போனானே, அந்தத் தேதியிலிருந்து ஒவ்வொரு நாளும் ‘லஞ்ச்’ டயத்தில் தெரஸாவும் நாகராஜ னும் ஒன்றாகத்தான் உட்கார்ந்து சாப்பிடுகிறார்கள்.

மத்தியானத்தில் ஆபீஸிலேயே சாப்பிடுகிற வழக்கத்தை உண்டாக்கியவன் கன்னையாதான். அவன் அவர் வீட்டோடு வந்து சேருவதற்கு முன்… இரண்டு வருஷத்துக்கு முன்னால் வரை, அவர் லஞ்ச்சுக்கு மத்தியானத்தில் வீட்டுக்குப் போய்த்தான் வரு வார். ஆனால், வீட்டுக்குப் போனால் ‘சாப்பிட்டோம், வந் தோம்’ என்று முடிகிறதா? கொஞ்சம் இளைப்பாற வேண்டும்; படுக்க வேண்டும்; சிறு தூக்கம் போட வேண்டும். திரும்ப ஆபீஸ§க்கு வர, நாலு மணி ஆகிவிடுகிறது.

நாகராஜன் எத்தனை மணிக்கு வேண்டுமானாலும் ஆபீஸ§க்கு வரலாம்; போகலாம். அவரை யாரும் கேட்க மாட்டார்கள். அந்தக் கம்பெனியின் முதலாளிக்கு அடுத்தபடி அதிகாரம் உள்ளவர் அவர்தான். சில விஷயங்களில் முதலாளிக்கும் கொஞ்சம் மேலே என்று சொல்லுகிற அளவுக்குப் பொறுப்பும் உடையவர். இருபத்தைந்து வருஷ காலமாக இந்தத் தலைமை ஆபீஸில் இருந்துகொண்டே மாகாணம் முழுவதும் பல கிளைகளைத் தோற்றுவித்து, இன்றிருக்கும் நிலைக்கு இந்த ஸ்தாபனத்தை உயர்த்தியவர் நாகராஜன் என்றால், அவர் அந்த அளவுக்குப் பொறுப்பும், முதலாளிகளின் நம்பிக்கையையும் பெற்றிருப்பதனால்தானே முடிந் திருக்கிறது!

கன்னையா தன் வீட்டோடு வந்த பிறகு, ஆபீஸ§க்குச் சாப்பாடு கொண்டுவந்து, தானே அவருக் குப் பரிமாறிவிட்டுப் போக ஆரம்பித்தான். அவர் முக்கியமாக வீட்டுக்குப் போய்ச் சாப்பிடுவதற் கான காரணம், தானே போட்டுக் கொண்டு சாப்பிடப் பழகாதது தான். அது அவருக்குப் பிடிப்பது இல்லை.

கன்னையா, நாகராஜன் வீட்டு வேலைக்காரனோ சமையற் காரனோ என்றுதான் எல்லோரும் நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள். ஆனால், அவன் அவரது சொந்த அத்தை மகன் என்பதும், சம வயதுடைய பால்ய கால நண்பன் என்பதும் ரொம்பப் பேருக்குத் தெரியாது. தெரியும்படி அவன் நடந்துகொள்ளவும் மாட் டான்.

அவனுக்குக் குடும்பம், கல்யாணம், வீடு, உறவு என்றெல்லாம் ஒன்றுமே ஏற்படவில்லை. சொந்தக்காரர்கள் வீடுகளில்… அவனைச் சொந்தக்காரன் என ஏற்றுக்கொள்கிற வீடுகளில் வந்து கொஞ்ச நாள் தங்குவான். தங்கி இருக்கிற காலத்தில், அந்த வீட்டுக்கு அவன் ஒரு பலமாக விளங்குவான். குழந்தைகளுக்குத் தாதி மாதிரியும், கூப்பிட்ட குர லுக்கு ஓடி வரும் சேவகனாகவும் இருப்பான். தோட்டங்கள் கொத் துவான்; துணி துவைப்பான்; கடைக்குப் போவான்; கட்டை பிளப்பான்; சுமை தூக்குவான்; சுவையாகப் பேசிக்கொண்டும் இருப்பான்.

‘சொல்லிக்கொள்ளாமல்கூட ஓடிப் போனானே அந்த ராஸ்கல்!’ என்று இப்போது பற்களைக் கடிக்கின்ற நாகராஜன், சற்று முன்னால், தான் செய்த காரியத்துக்குக்கூட அவன்தான் பொறுப்பு என்று சுற்றி வளைத்துப் பழியை அவன் தலையில் சுமத்த முயல்கிறார்.

‘அந்தப் பயல் ஒழுங்காக வந்து மீல்ஸ் ஸெர்வ் பண்ணி இருந்தால், இவள் இவ்வளவு நெருக்கமாக வந்திருக்க மாட்டாளே!’ என்று நினைத்தபோது, கன்னையாவைப் பற்றிய நினைவுகள் அவருக்கு மிகுந்தன.

இரண்டு வருடங்களுக்கு முன்பு, ஒரு நாள் இரவு எட்டு மணிக்கு வீட்டுக்குத் திரும்பிய நாகராஜன், காரை ஷெட்டில் நிறுத்துவதற்காகத் திரும்பியபோது, ஷெட்டின் ஒரு மூலையில் தாடியும் மீசையுமாய் ஒரு பரட்டைத் தலையன் எழுந்து நிற்பதைப் பார்த்து, கார் விளக்கை அணைக்காமல் வெளியே தலை நீட்டி, ”யாரது, அங்கே?” என்று மிரட்டுகிற தோரணையில் கேட்டார்.

அவன் அருகில் ஓடிவந்து, ”நான்தான் கன்னையா. என்னைத் தெரியலியா மாப்பிளே?” என்று ரகசியம் போல் அறிமுகப்படுத்திக்கொண்டபோது, நாக ராஜனுக்கு மனசை என்னவோ செய்தது.

”என்னடா இது கோலம்? வா… வா!” என்று அழைத்து வந்து, வீட்டில் உள்ளவர்களுக்குப் பரிச்சயம் செய்து வைத்து, அங்கேயே தங்கி இருக்கச் சொன்னார். கொஞ்ச நாட்களில் அவரது குடும்பத்துக்கு அவன் மிகவும் தேவைப்பட்ட மனிதனாக மாறி இருந்தான்.

ஆரம்பத்தில், அவனை வீட்டில் சேர்த்துக்கொண்டதற்காக மற்ற உறவினர்கள் எல்லாம் நாகராஜனையும் அவன் குடும்பத் தினரையும் மிகவும் எச்சரிக்கை செய்தவாறு இருந்தனர். ஆனால், நாகராஜன் அவற்றைப் பொருட்படுத்தவில்லை. அவனைச் சேர்த் துக்கொள்வது தனது கடமை என்று அவர் நினைத்தார். எனினும், அந்தக் காரணங்களை அவர் யாரிடத்தும் இதுவரை பகிரங்கப்படுத்திக்கொண்டது இல்லை.

அந்தப் பழைய பால்ய அனுபவங்களின் நினைவுகளை, எப்போதாவது தனியாக இருக்கையில் அவனோடு பகிர்ந்துகொண்டு மகிழ்வார் நாகராஜன்.

அந்தக் காலத்தில் இந்தக் கன்னையா ரொம்ப நல்ல பிள்ளை யாக இருந்தான். ஒன்றுமே தெரி யாத அவனை புகை பிடிக்கப் பழக்கியதும், மதுவருந்தச் செய்த தும், அந்த மாதிரியான விளை யாட்டுகளில் ஈடுபடுத்தியதும் நாகராஜன்தான். அவற்றை அவர் மறக்கவில்லை. அதன் பிறகு, அவை யாவும் ஏதோ ஒரு பருவத் தின் கோளாறு என்று ஒதுக்கி – அல்லது, உண்மையிலே ஒரு பருவத்தின் கோளாறுகளாக அவை இவரிடமிருந்து நீங்கிய பின், இவரால் பழக்கப்படுத்தப் பட்ட அந்தக் கன்னையன் அவற்றிலேயே வீழ்ந்து அழுந்தி மூழ்கிக்கொண்டு இருப்பதாகக் கேள்விப்பட்ட காலங்களில், நாகராஜன் குற்ற உணர்வினால் உறுத்தப்பட்டிருக்கிறார்.

நாகராஜனைப் பொறுத்தவரை அந்தப் பழக்கங்கள் யாவும் மகா பாவங்கள் என்று கருதுகிற ஒழுக் கக் கண்ணோட்டம் எதனாலும் அவனுக்காக அவர் வருந்த வில்லை. இந்தப் பழக்கங்களுக்கு அடிமையாகி ஒருவன் வாழ்க்கை யின் சகல மரியாதைகளையும் இழப்பது பரிதாபகரமான வீழ்ச்சி என்பதனால், அவனிடம் அவர் அனுதாபம்கொண்டார்.

இப்போதும்கூட நாகராஜன் எப்போதாவது பார்ட்டிகளிலும், சில சமயங்களில் வீட்டிலேயேகூட மது அருந்துவது உண்டு. அது யாருக்கும் தெரியாது. நாகராஜ னும் புகை பிடிக்கிறார்; பெண் களை இச்சையோடு பார்க்கிறார். எல்லாவற்றுக்கும் ஒரு அத்தும் அளவும் இல்லாதபோதுதானே மனிதன் தலைகுப்புற வீழ்ந்து விடுகிறான்!

அப்படி வீழ்ந்துவிட்டவன் கன் னையா. அவன் அப்படி விழக் காரணம், ஏதோ ஒரு வகையில் தானே என்று நினைக்கையில், அவனைப் பார்த்துப் பெருமூச் செறிவார் நாகராஜன்.

பிறர் பார்வையிலும் சமூக அந்தஸ்திலும் அவன் வீழ்ந்து விட்டவன்தான் என்றாலும்கூட, அவனைத் தனது அந்தரங்கத்தில் சமமாகவே பாவித்தார் நாக ராஜன். அவனும் அதே மாதிரி அந்த எல்லை மீறாது அவரோடு சமத்துவம்கொண்டான்.

எப்போதாவது, தான் மது அருந்தும்போது அவனையும் அழைத்து, அவனுக்கும் கொடுப்பார். தனக்கு மகுடாபிஷேகம் நடந்த மாதிரி களி கொள்வான் அவன். அப்போதும்கூட மிகவும் வெட்கத்தோடு, கையில் தம்ளருடன் ஒரு மூலையில் போய்த் திரும்பி நின்றுகொண்டு, மறை வாகக் குடிப்பான். ”போதும்… போதும்” என்று சொல்லித் தம்ளரை வைத்துவிட்டு ஓடி விடுவான். கேட்டால், ”நமக்கு இந்தச் சரக்கெல்லாம் சரிப்பட்டு வராது. ரெண்டு ரூபா பணம் குடு மாப்பிளே, எதுக்கு இதெ வேஸ்ட் பண்றே?” என்று பணத்தை வாங்கிக்கொண்டு போனால், இரவில் எந்நேரம் வந்து அவன் ஷெட்டில் படுத்துக்கொள்கிறான் என்று யாருக்கும் தெரியாது.

யாருக்கும் தெரியாமல் அந்தச் செலவுக்காக வாரத்தில் இரண்டொரு தடவை அவர் அவனுக்குப் பணமும் கொடுப்பார்.

அவன் சாப்பாடு பரிமாறிச் சாப்பிடுவது, அவருக்கு எப்போ தும் ரொம்பத் திருப்தியாக இருக்கும். வீட்டில் இருக்கும்போது கூடச் சில சமயங்களில் அவன்தான் அவருக்குப் பரிமாறுவான். நாகராஜனின் மனைவி ஸ்தூல சரீரி. அவளுக்கு உடம்புக்கு நோய் வந்துவிடும். ஈஸிசேரிலிருந்து அவளை எழுந்து வரச் செய்வதைக் கூடியவரை தவிர்க்கவே விரும்புவார் அவர்.

சில சமயங்களில் டிரைவர் இல்லாதபோது, கன்னையாவோடு தனியே காரில் செல்கையில், அவனோடு தமாஷாகச் சமத்துவமாய் பழைய காலம் மாதிரி பேசி மகிழ்வார் நாகராஜன். அது மாதிரிச் சமயங்களில் அவனும் தன்னை மறந்து ‘டா’ போட்டுக் கூடப் பேசுவான். அது ரொம்ப இயல்பாக, சுருதி பிசகாமல் இருக்கும்.

”டேய், கன்னையா..! நம்ம செக்ரட்டரி அம்மா எப்படி இருக்கா?” – புடவை கட்டாத அந்தச் சட்டைக்காரி எதிர்ப்படும்போது, அவன் நாணிக்கோணி நிற்பதை அவர் பல தடவை கண்டிருக்கிறார். அதனால்தான் கேட்டார். அந்த மாதிரிச் சந்தர்ப்பங்களில் முதலில் அவன் சிரிப்பான்.

”சொல்லு, உனக்கு என்ன தோணுது அவளைப் பார்த்தா?”

”எனக்கு என்ன தோணுது?” – மார்பில் முகவாய் படிகிற மாதிரி தலை குனிந்துகொண்டான் கன்னையா. கொஞ்சம் நேரம் கழித்து ஒரு அசட்டுச் சிரிப்புடன், ”நீ விட்டு வெச்சிருப்பியா மாப்பிளே! எனக்குத் தெரியும்டா!” என்று முழங்கையால் இடித்துக் கொண்டு, கிளுகிளுத்துச் சிரித் தான்.

”சீ… சீ! அதெல்லாம் இல்லை. நீ முன்ன மாதிரியே என்னை நெனைச்சிக்கிட்டு இருக்கியா? வயசாச்சே!” என்பார் நாக ராஜன்.

”அப்படின்னா அவளுக்கு உம்மேலே ஒரு கண்ணு இருக்குது. அது தெரியுது!” என்று கண்களைச் சிமிட்டி, அவரைக் குஷிப்படுத்தினான் அவன்.

‘அந்தப் பாவிதான் இந்த எண்ணத்துக்கு முதல் பொறி வைத்தவனோ?’

இவ்வளவும் அந்தரங்கமாய்ப் பேசுவானே தவிர, அவள் முன்னிலையில் இடுப்பில் கட்டிய துண்டை அவிழ்க்காமல், தலை நிமிர்ந்து பார்க்காமல், அவருக்குச் சாப்பாடு பரிமாறுவான். தட்டைப் பார்த்து, எது வாய்க்கு ருசிக்கிறது என்று அறிந்து, கேட்குமுன் பரிமாறுவான்.

அவன் பரிமாறுவதையும், அவருக்குப் பணிவிடை புரிவதையும் தெரஸா பார்த்திருக்கிறாள்.

அதனால்தான், அவன் வராமல் அன்று அந்த டிரைவரே அவருக்குப் பரிமாறத் தெரியாமல், இவர் போட்ட சத்தத்தில் பயந்து, கையில் உள்ளதைக் கீழே போட்டு, இவர் ஒன்றுமே சாப்பிடாமல் ‘எடுத்துக்கொண்டு போ!’ என்று கத்திவிட்டு, அன்று ஓட்டலில் இருந்து டிபன் வரவழைத்துச் சாப்பிட்டதை எல்லாம் கவனித்த தெரஸா, அடுத்த நாள் மத்தியானம் அவர் தானே பரிமாறிக்கொள்ள முனைகையில்…

”உங்களுக்கு ஆட்சேபனை இல்லையென்றால், நான் பரிமாறலாமா?” என்று விநயத்துடன் ஆங்கிலத்தில் கேட்டாள்.

அப்போது நாகராஜனுக்குக் கன்னையா நினைவு வந்தது. ‘அவளுக்கு உம்மேலே ஒரு கண்ணு இருக்குது. அது எனக்குத் தெரியுது!’

– ஜெயகாந்தன் சிறுகதைகள் – முதற்பதிப்பு 1973 – நேஷனல் புக் டிரஸ்ட், இந்தியா

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *