குளத்தங்கரை அரசமரம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: December 29, 2013
பார்வையிட்டோர்: 30,797 
 

இதுவே தமிழின் முதல் சிறுகதை என்றும் கருதப்படுகிறது. குளத்தங்கரை அரசமரம் என்ற ‘ஒரு சிறிய கதை’ முதலில் ஸூ.பாக்யலக்ஷ்மி அம்மாள் என்பவர் பெயரில், 1915 ஆம் ஆண்டு ‘விவேக போதினி’, செப்டம்பர், அக்டோபர் மாத இதழ்களில் இரு பகுதிகளாக (ஒரு சிறிய கதை) என அடைப்புக் குறிகளுடன் THE PEEPUL TREE NEAR THE TANK (A SHORT STORY) என்ற துணைத் தலைப்புகளுடன் வெளியானது.

பார்க்கப்போனால் நான் மரந்தான். ஆனால் என் மனஸிலுள்ளதையெல்லாம் சொல்லுகிறதானால் இன்னைக்கெல்லாம் சொன்னாலும் தீராது. இந்த அயுஸுக்குள் கண்ணாலே எத்தனை பார்த்திருக்கிறேன். காதாலே எத்தனை கேட்டிருக்கிறேன். உங்கள் பாட்டிகளுக்குப் பாட்டிகள் தவுந்து விளையாடுவதை இந்தக் கண்ணாலே பார்த்திருக்கிறேன். சிரிக்கிறீர்கள். ஆனால் நான் சொல்லுகிறதிலே எள்ளளவேணும் பொய்யில்லை. நான் பழைய நாளத்து மரம். இப்போ தொண்ணூறு நூறு வருஷமிருக்கும். உங்கள் கொள்ளுப்பாட்டிகளின் பாட்டிகளெல்லாம் நம்ம குளத்தங்கரைக்குத்தான் குடமுங் கையுமாக வருவார்கள். சில பேர் குழந்தைகளையுங் கூடக் கூட்டிக் கொண்டு வருவார்கள். பட்டுப் பட்டாயிருக்கும் குழந்தைகள். அதுகளைக் கரையில் விட்டுவிட்டுப் புடவைகளை அழுக்குப் போகத் தோய்த்து, மஞ்சள் பூசிக் கொண்டு அழகாக ஸ்நாநம் பண்ணுவார்கள். குழந்தைகளெல்லாம் ராஜகோபாலன் போலத்தவுந்து கொண்டு மல்லிகைச் செடியண்டே போய் மல்லிகை மொக்குகளைப் பார்த்துச் சிரிக்கும். அந்தக் காலத்திலே ஒரு பவள மல்லிகைச் செடி, முத்து முத்தாய்ப் பூத்துக் கொண்டு அந்த ஓரத்திலிருந்து குளத்தங்கரை, யெல்லாம் கம் என்று மணம் வீசும். இப்பொழுது ஆதரிப்பாரில்லால் பட்டுப் போய்விட்டது. கொஞ்சம் பெரிய குழந்தைகள் அதன் புஷ்பங்களைப் பொறுக்கி ஆசையுடன் மோந்துப் பார்க்கும்… ஆ! அந்த நாளையெல்லாம் நினைத்தால் என்ன ஆசையாயிருக்கிறது!

ஆனால் இப்போது நான் உங்களுக்கு அந்தக் காலத்துக் கதை ஒன்றும் சொல்லுவதாக இல்லை. மனசு சந்தோஷமாகயிருக்கும் போது சொல்லுகிறேன். ஏழெட்டு நாளாய் எனக்கு ருக்மிணியின் ஞாபகமாகவே இருக்கிறது. பதினஞ்சு வருஷமாச்சு. ஆனால் எனக்கு நேற்றுப் போலிருக்கிறது. உங்களில் ஒருவருக்கும் ருக்மிணியைத் தெரியாது. பார்த்தால் சுவர்ண விக்கிரகம் போலிருப்பாள் குழந்தை. அவளுடைய சிரிச்ச முகத்தை நினைச்சால் நெத்தியில் அழகை இன்னைக்கெல்லாம் பார்த்துக் கொண்டிருக்கலாம். நல்ல உயரமாக இருப்பாள். அவள் கையும்காலும் தாமரைத்தண்டுகள் மாதிரி நீளமாயிருக்கும். அவள் சரீரமோ மல்லிகைப் புஷ்பம் போல் மிருதுவாக இருக்கும். ஆனால் அவள்அழகெல்லாம் கண்ணிலேதான். என்ன விலாசம்! என்ன தெளிவு! என்ன அறிவு! களங்கமத்த நீல ஆகாசம் ஞாபத்துக்கு வரும். அவள் நீரோடையைப் பார்ப்பது போலிருக்கும். பார்வையிலுந்தான் எத்தனை அன்பு! எத்தனை பரிவு! ஸோம வார அமாவாசைகளில் பரமாத்வைப் பூஜிக்கிறதற்காக என்னைப் பிரதஷிணம் செய்வாள். அப்போது அவள் என்னைப் பார்க்கும் பார்வையிலிருக்கும் அன்பை என்னவென்று சொல்லுவேன்! என்னுடைய காய்ந்துபோன கப்புகளுங்கூட அவளுடைய பிரேமையான பார்வை பட்டதும் துளிர்த்துவிடுமே! ஐயோ, என் ருக்மணித் தங்கமே! எப்போ காண்பேன் இனிமேல் உன்னைப் போலக் குழந்தையை?

அவள் குழந்தைப் பருவம் முதல், அவளுடைய கடைசி நாள் வரையில், இங்கே வராத நாளே கிடையாது. அஞ்சாறு வயஸின் போதெல்லாம் ஸதா ஸர்வ காலமும் இங்கேயேதான் விளையாடிக் கொண்டிருப்பாள். அவளைப் பார்த்ததும் வாரியெடுத்து முத்தங் கொடுக்க வேணுமென்று நினையாதவர் இல்லை. எத்தனை அவசரமான காரியமிருந்தாலும் சரி, நம்ம வேணுகோபால சாஸ்திரி இருந்தாரே, அவர் காலமே ஸ்நாநஞ் செய்துவிட்டு, குழந்தை கை நிறைய மல்லிகைப் பூப்பறித்துக் கொடுத்துவிட்டுதான் போவார். நம்மூர் மாடு கன்றுகள் கூட, எத்தனை முரடாக இருந்தாலும் சரி, அவளைக் கண்டதும் உடனே முரட்டுத் தனத்தையெல்லாம் விட்டுவிட்டு, அவளுடைய சிறிய கைகளால் தடவிக் கொடுக்க வேணுமென்று அவள் பக்கத்திலேயே போய்க் காத்துக் கொண்டிருக்கும்.
குழந்தைகள் என்றால் எனக்கு எப்பொழுமே ஆசை. ஆனால் அவள் வந்துவிட்டால் போதும். மெய்மறந்து போய்விடுவேன். அவள் பேரில் துளி வெயில் படக்கூடாது. அவள் கொஞ்சம் ஒதுங்கியிருந்தால்கூட என் கைகளை நீட்டி அவளுக்குக் குடை பிடிப்பேன். என்னுடைய நாதனான சூரியனுடைய முகத்தைக் காலமே ஆசை பயபக்தியோடு தரிசனம் செய்தானதும் எனக்குக் குழந்தை ருக்மணியின் ஞாபகம் வந்துவிடும். அவள் வரவை ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டேயிருப்பேன். அவள் வந்ததும் எனக்குள் அடங்காத ஆனந்தம் பிறந்துவிடும். குழந்தைகளுக்குள் பேதம் பாராட்டக்கூடாதுதான். ஆனால் மற்ற யார் வந்தாலும் எனக்கு அவள் வருகிறது போல் இருப்பதில்லை. நான் மாத்திரமா? ஊரிலுள்ள மற்ற குழந்தைகள்கூட அவள் வந்த பிறகுதான் பூரணமான ஆனந்தத்துடன் விளையாடும். அவள்தான் அவர்களுக்குள்ளே ராணி. அத்தனை காந்த சக்தியிருந்தது அவளிடத்தில்.

அப்போதெல்லாம் அவள் அப்பா காமேசுவரையர் நல்ல ஸ்திதியில் இருக்கிறார். குழந்தை பேரில் அவருக்கு மிகுந்த பிரேமை. அவளுக்குச் செய்வதற்கு என்றால் அவருக்கு சலிக்கிறதே இல்லை. கடை வீதியில் பட்டுத்தினுசுகள் புதுசாக வந்திருப்பது ஏதாவது பார்த்தால் ‘நம்ம ருக்மிணி அணிந்து கொண்டால் அழகாக இருக்கும்’ என்று உடனே வாங்கிக் கொண்டு வந்துவிடுவார். முதல் தரமான வைரமும் சிவப்பும் இழைத்து அவளுக்கு நிறைய நகைகள் செய்திருந்தார். அவளுக்குப் பத்து வயசாயிருந்தபோது கோலாட்ட ஜோத்ரைக்கு என்று ஒரு பாவாடையும் தாவணியும் வாங்கியிருந்தார். அந்த நிலாவுக்கு அவளுடைய அலங்காரத்துக்கும் அவளுடைய அழகுக்கும் என்ன ஏர்வை! என்ன ஏர்வை! கண்கொள்ளாக் காட்சியாயிருந்தது எனக்கு! அவள் குரலைப் பற்றி உங்களுக்குச் சொல்ல மறந்து போய்விட்டேன். குயில் என்னத்துக்கு ஆச்சு! தங்கக்கம்பி போல இழையும் அவள் சாரீரம். இன்னைக்கெல்லாம் கேட்டுக் கொண்டிருந்தாலும் சலிக்காது. ஜோத்ரைகளின் போதுதான் அவள் பாட்டை நான் கேட்டிருக்கிறேன். ஆனால், இப்போது நினைச்சாலுங்கூட அவளுடைய குரல் அதே இனிமையுடனும் நயத்துடனும் என் மனசில் கேட்கிறது.

அவளுக்கு வயசாக ஆக, அவளுடைய அன்பு வளர்ந்த அழகை என்ன என்று சொல்லுவேன்? குழந்தையாக இருக்கும் போதே யாரிடத்திலும் ஒட்டுதலாக இருப்பாள். இந்தக் குணம் நாளுக்கு நாள் விருத்தியாய்க் கொண்டே வந்தது. தோழிகள் வேறு, தான்வேறு என்கிற எண்ணமே அவளுக்கு இராது. ஏழை வீட்டுப் பெண்ணாயிருந்தாலும் சரி, பணக்காரர் வீட்டுப் பெண்ணாயிருந்தாலும் சரி, அவளுக்கு எல்லாத் தோழிகள் பேரிலும் ஒரே பயந்தான். இன்னும் பார்க்கப்போனால் ஏழைக் குழந்தைகள் பேரில் மற்றவர்கள் பேரில்விட அதிகமான பக்ஷம் பாராட்டுவாள். பிச்சைக்காரர்கள் வந்தால் கை நிறைய அரிசி கொண்டு வந்து போடுவாள் கண் பொட்டையான பிச்சைக்காலர்களைப் பார்க்கும் போது அவளை அறியாமலே அவள் கண்ணில் தாரை தாரையாய்க் கண்ணீர் பெருகுவதை எத்தனை தடவைகளில் எட்டிப் பார்த்திருக்கிறேன்! அவர்களுக்கு மற்றவர்களுக்குப் போடுவதைவிட அதிகமாகவே பிச்சை போடுவாள். இப்படி அளவு கடந்த தயையும் இரக்கமும் அவளுக்கு இருந்ததனால்தான் அவளை நினைக்கும் போதெல்லாம் எனக்குக் கடினமான கோடைக்குப் பிறகு நல்ல மழை பெய்யும்போது உண்டாகுமே, அந்த நிரதிசயமான ஆனந்தம் உண்டாகிறது.

இவ்விதம் கண்ணுக்குக் கண்ணாய் நான் பாவித்துவந்த என் அருமைக் குழந்தையின் கதி இப்படியா போகணும்! நான் பாவி வைச்ச ஆசை பழுதாய்ப் போகணுமா! பிரும்ம தேவனுக்குக் கொஞ்சங்கூடக் கண்ணில்லாமல் போய்விட்டதே! ஆனால் பிரும்மதேவன் என்ன பண்ணுவான், மனுஷாள் செய்யும் அக்கிரமத்துக்கு?

ருக்மணிக்குப் பன்னிரண்டு வயசானதும் அவள் அப்பா அவளை நம்மூர் மணியம் ராமசுவாமி ஐயர் குமாரன் நாகராஜனுக்குக் கன்னிகாதானமாகக் கொடுத்தார். கல்யாணம் வெகு விமரிசையாக நடந்தது. தோழிப் பொங்கலன்னிக்கும், ஊர்கோலத்தன்னிக்கும் அவள் ஸர்வாலங்காரத்துடனும் கிராமப் பிரதஷிணம் வருவதைப் பார்த்தேன். கண்பட்டுவிடும். அத்தனை அழகாயிருந்தது! அவள் தோழிகளுக்கு மத்தியில் இருந்ததைப் பார்க்கும்போது மின்னற் கொடிகளெல்லாம் சேவித்து நிற்க மின்னரசு ஜொலிக்குமே. அந்த மாதிரியே தான் இருந்தது.

காமேசுவரையர் ருக்மிணிக்குக் கல்யாணப் பந்தலில் நிறையச் சீரும் செனத்தியும் செய்திருந்தார். ருக்மிணியின் மாமியாருக்கும் மாமனாருக்கும் ரொம்பத் திருப்தியாயிருந்தது. கல்யாணத்துக்குப் பிறகு மாமியார் அவளை அடிக்கடி அழைச்சுக் கொண்டு போய் அகத்திலேயே வைச்சுக் கொள்ளுவாள். ஆசையோடு அவளுக்குத் தலை பின்னிப் பூச்சூட்டுவாள். தன் பந்துக்களைப் பார்க்கப்போகும்போது அவளை அழைச்சுக்கொண்டு போகாமல் போகவே மாட்டாள். இப்படி சகலவிதமாகவும் ஜானகி, (அதுதான் ருக்மணி மாமியார் பேர்) தனக்கு ருக்மிணியின் பேரிலுள்ள அபினமாத்தைக் காட்டி வந்தாள். மாப்பிளை நாகராஜனும் நல்ல புத்திசாலி. அவனும் ருக்மணியின் பேரில் மிகவும் பிரியமாய் இருப்பான். கிராமத்தில் அவர்கள் இருவருந்தான் ரூபத்திலும் புத்தியிலும் செல்வத்திலும் சரியான இணை என்று நினைக்காதவர், பேசிக் கொள்ளாதவர் கிடையாது.

இப்படி மூணு வருஷ காலம் சென்றது. அந்த மூணு வருஷத்துக்குள் எத்தனை மாறுபாடுகள்! காமேசுவரையருக்குக் கையிளைச்சிப் போய்விட்டது. ரொக்க ஐவேஜியெல்லாம் ஏதோ அருபத்து நாட்டுக் கம்பெனியாம். அதில் வட்டிக்குப் போட்டிருந்தார். நம்மூர்ப் பணம் நாலுகோடி ரூபாயையும் முழுங்கிவிட்டு அது ஏப்பம் விட்டுவிடவே, காமேசுவரையர் ஒரு நாளில் ஸர்வ ஏழையாய்ப் போய்விட்டார். ருக்மணியின் தாயார் மீனாட்சியம்மாள் உடம்பிலிருந்த நகைகள் தான் அவருக்கு மிச்சம். பூர்வீக சொத்தான வீட்டையும் நிலங்களையும் வித்துத்தான் அவர் கொடுக்க வேண்டிய கடன்களைத் தீர்க்க வேண்டியாதாயிருந்தது. இப்போ குப்புசாமி ஐயர் இருக்காரே வாய்க்காங்கரையோரத்திலே, அந்த வீட்டில் வந்து அவர் குடியிருக்கலானார். மீனாட்சியும் பார்க்கிறதுக்கு மஹாலட்சுமி மாதிரி இருப்பாள். அவளுடைய சாந்தத்துக்கு எல்லையே இல்லை. எத்தனை பெரிய கஷ்டம் வந்துவிட்டதே. இருந்தாலும் அவள் மனம் கொஞ்சமேனும் இடியவில்லை. “”””ஏதோ இத்தனை நாள் சுகமாக வாழ்ந்தோம். யாரைக் கேட்டுக்கொண்டு ஸ்வாமி கொடுத்தார்! அவர் கொடுத்ததை அவரே எடுத்துக் கொண்டு விட்டார். இதனாலே என்ன இப்போ? அவாளும் ருக்மணியும் ஆயுஸோடு இருக்கிற வரையில் எனக்கு ஒரு குறைச்சலுமில்லை. இந்தத் தை மாஸத்திலே ருக்மிணிக்கு சாந்தி முகூர்த்தம் பண்ணப் புக்காத்துக்கு அனுப்பிவிட்டால் அப்புறம் எங்களுக்கு நிர்விசாரம். கஞ்சியோ கூழோ சாப்பிட்டுக் கொண்டு வழக்கம் போல் பகவத்தியானம் பண்ணிக் கொண்டே எங்கள் காலத்தைக் கழித்து விடுகிறோம்”” என்று சொல்லுவாள். ஐயோ பாவம், நடக்கப் போகிற சங்கதியை அவள் எப்படி அறிஞ்சிருப்பாள்?

காமேசுவரையர் ஐவேஜியில் கொஞ்சமேனும் தேறாது என்று ஏற்பட்டது ராசுவாமி ஐயருக்கு அவருடனிருந்த சிநேகம் குளிர ஆரம்பித்துவிட்டது. இதற்கு முன்னெல்லாம் அவர் காமசுவரையர் அகத்துக்கு அடிக்கடி வருவார். வழியில் அவரைக் கண்டால் பத்து நிமிஷம் நின்று பேசாமல் போகவே மாட்டார். இப்பொழுதோ காமேசுவரையர் தூர வருகிறதைக் கண்டுவிட்டால், ஏதோ அவசர காரியமாகப் போகிறது போல இன்னொரு பக்கம் திரும்பி வேகமாகப் போய்விடுவார். இப்படி செய்பவர், அவர் வீட்டுக்கு வருவதை நிறுத்திவிட்டார் என்று நான் சொல்லாமலே நீங்கள் நினைத்துக் கொண்டு விடுவீர்கள். அவர் சம்சாரம் ஜானகியும் அதே மாதிரி மீனாட்சியம்மாளிடம் நெருங்குவதை நிறுத்திவிட்டாள். ஆனாள் இதையெல்லாம் மீனாட்சியம்மாளும் காமேசுவரையரும் ஒரு பொருட்டாக நினைக்கவில்லை. செல்வமுள்ளபோது, உறவு கொண்டாடுகிறது ; அது போய் விட்டபோது வேத்து மனுஷாள் போலப் போய் விடுகிறது. இதெல்லாம் ஒரு சிநேகத்தோடு சேர்த்தியா?

ஆனால் அவர்கள் ருக்மிணி விஷயத்திலுங்கூட வேத்துமை பாராட்ட ஆரம்பித்துவிட்டார்கள். அறுபத்து நாட்டு உடைகிறதற்கு முந்தி சில மாதங்களாக ஜானகி பிரதி வெள்ளிக்கிழமையும் சாப்பிடானதும், ருக்மணியை அழைத்துக்கொண்டு வரும்படி வேலைக்காரியை அனுப்பி விடுவாள். அன்னைக்கு, அவளுக்குத் தலைபின்னை, மைச்சாந்திட்டு, சிங்காரிச்சு, அகிலாண்டேசுவரி கோவிலுக்குக் கூட்டிக்கொண்டு போய்த் தரிசனம் பண்ணிட்டு, அன்னைக்கு ராத்திரி முழுவதும் தங்கள் அகத்திலேயே வைத்துக் கொண்டிருந்து அடுத்தநாள் காலமேதான் அவளை அகத்துக்கு அனுப்புவாள். ஆனால் அறுபத்துநாட்டில் போனது போனதுதான் என்று ஏற்பட்டுவிட்ட பிறகு வந்த முதல் வெள்ளிக் கிழமையன்னைக்கே, ‘எனக்கு ஆத்தில் இன்னைக்கு ரொம்ப வேலையாக இருக்கும்’ என்பாள் அடுத்த வெள்ளிக்கிழமை முதல் அவ்விதம் சொல்லியனுப்புவதைக் கூட நிறுத்தி விட்டாள். இது மீனாட்சிக்கும் காமேசுவரையருக்கம் மிகுந்த துக்கத்தைத் தந்தது. ருக்மிணியும், நம்மை இவ்வளவு இளக்காரம் செய்கிறாள் பார்த்தாயா! நம்ப மாமியார் கூட என்று மிகவும் வருத்தப்பட்டாள்.

இப்படிக்கொஞ்ச நாளாச்சு. ஊரெல்லாம் ‘குசுகுசு’ என்று பேசிக் கொண்டிருப்பார்கள். எல்லா ரகசியங்களும் குளத்தங்கரையிலே தான். ஆனால் அரை வார்த்தையுங் குறை வார்த்தையுமாகத்தான் என் காதில் விழுமேயொழிய முட்ட முழுக்க ஒரு பேச்சும் எனக்கு எட்டாது. ஊரிலே இப்படி எப்போதும் இருந்ததில்லை. எனக்கு மனசு குறுகுறுத்துக் கொண்டேயிருந்தது. என்னவோ கெடுதலுக்குத்தான் இத்தனை ரகசியம் வந்திருக்கிறது என்று எனக்கு அப்பொழுதே தோன்றிவிட்டது. ஆனால் யாருக்கு, என்ன, என்று மாத்திரம் தெரியவில்லை.

கடைசியாக அப்படியும் இப்படியுமாய், அத்தையும் இத்ததையும் கூட்டிச் சேர்த்துப் பார்க்கப் பார்க்க, கொஞ்சங் கொஞ்சமாய்ச் சமாசாரம் என் மனசுக்கு அத்துப் படியாச்சு. ராமசாமி ஐயரும் ஜானகியும் ருக்மிணியை வாழாதே பண்ணிவிட்டு நாகராஜனுக்கு வேறு கல்யாணம் செய்து வைக்க நிச்சயித்து விட்டார்கள்! என்ன பண்ணுவேன்! என் மனசு இடிஞ்சு போய்விட்டது. குழந்தை ருக்மிணியைத் தள்ளிவைக்கத் துணியுமா மனுஷாளுக்கு? அடிபாவி! உன்னைப் போலே அதுவும் ஒரு பெண்ணில்லையா! என்ன பண்ணத்து அது உன்னை! அதைக் கண்ணாலே பார்த்தால் கல்லும் இரங்குமே! கல்லையும் விட அழுத்தமா உன் நெஞ்சு! காமேசுவரையருக்கும் மீனாட்சிக்கும் முகத்திலே ஈ ஆடாது, எனக்கே இப்படி இருந்தபோது, பெத்த தாயார் தகப்பானாருக்குக் கேட்கணுமா?””

இனிமேல் நாகராஜனைப் பற்றி ஏதாவது நம்பிக்கை வைத்தால்தான் உண்டு! அவன் பட்டணத்தில் படித்துக் கொண்டிருந்தான். மார்கழி பிறந்துவிட்டது. அவன் வருகிற நாளை எண்ணிக்கொண்டே இருந்தேன். கடைசியாக வந்து சேர்ந்தான். வந்த அன்னைக்குக் காலமே அவன் முகத்தில் சிரிப்பும் விளையாட்டுமாக இருந்தது. சந்தோஷம் மாறி வேறாகி விட்டது. தாயார் தகப்பனார் அவன் மனதைக் கலைக்க ஆரம்பித்துவிட்டார்கள். நாளுக்கு நாள் முகத்தில் கலக்கம் அதிகரித்துக் கொண்டே வந்தது. கரைப்பார் கரைச்சால் கல்லுங் கரையும் என்பார்கள். அவன் கலங்கின முகத்தைப் பார்க்கும் போதெல்லாம் எனக்கு வயித்திலே பகீர் என்னும். ‘இனிமேல் ஏது? இந்த ஆசை இருந்தது. அதுவும் போய்விட்டது. ருக்மிணியின் கெதி அதோகதிதான்’ என்று நினைத்து விட்டேன்.

தை பிறந்தது. வெளிப்படையாகப் பேச ஆரம்பித்துவிட்டார்கள். ஏதோ கிழக்கத்திப் பெண்ணாம். தகப்பானருக்கு நாலு லட்ச ரூபாய்க்கு பூஸ்திதியாம். பிள்ளை கிடையாதாம். இந்தப் பெண்ணைத் தவிர இன்னும் ஒரே ஒரு பெண்தானாம். காலாக்கிரமத்தில் ராமசாமிஐயர் குடும்பத்துக்கு இரண்டு லட்ச ரூபாய் சொத்துச் சேர்த்துவிடுமாம். இதெல்லாம் எனக்குக் கர்ணகடூரமாக இருக்கும். ஆனால் என்ன செய்கிறது? தலைவிதியே என்று கேட்டுக் கொண்டிருப்பேன்.

இந்தப் பேச்சுப் புறப்பட்டது முதல், மீனாட்சி பகலில் வெளியிலேயே வருகிறதில்லை. சூரியயோதயத்து முன்னேயே குளத்துக்கு வந்து ஸ்நாநம் செய்துவிட்டுத் தீர்த்தம் எடுத்துக் கொண்டு போய்விடுவாள். அவள் முகத்தைப் பார்த்தால் கண்ட்ராவியாயிருக்கம். சரியான தூக்கமேது? சாப்பாடேது? ஓஹோ என்று வாழ்ந்துவிட்டு, இந்தக் கதிக்கு ஆளானாமே என்கிற ஏக்கம் அவள் அழகை அழித்துவிட்டது. வீடுவாசல் போய்விட்டதே என்றாவது, நகை நட்டெல்லாம் போய், வெறும் உரிசல் தாலியை மாத்திரம் கட்டிக் கொண்டிருக்கும் படியாகிவிட்டதே என்றாவது அவள் வருத்தப்படவில்லை. கிளிபோல் குழந்தை அகத்திலிருக்க, ஜானகி அதன்பேரில் கொஞ்சமேனும் இரக்கம் வைக்கமால் கண்ணுக்கெதிராகவே பிள்ளைக்கு வேறு விவாகம் பண்ணி வைக்க நினைத்துவிட்டாள் பார்த்தாயா என்னும் ஏக்கந்தான் அவளுக்கு இரவு பகலெல்லாம். அவள் முகத்தைப் பார்த்தால் ஜானகிக்குக் கூட மனசு உருகிப் போய்விடும். ஆனால் ராணி, அவளெங்கே பார்ப்பாள்!

அப்போதெல்லாம் ருக்மிணி எப்படி இருந்தாளோ, என்ன நினைத்தாளோ, எனக்கொண்ணுந் தெரியாது. அறியாத குழந்தை அது என்ன நினைத்திருக்குமோ! ஒருவேளை மாமியார் நம்மைக் கட்டோடே கெடுத்துவிடமாட்டாள் என்று நினைத்தாளோ? அல்லது மாமியார் என்ன நினைத்தாலும், நாகராஜன் சம்மதிக்க மாட்டான் என்று நினைத்தாளோ? இன்னும் முட்ட முழுக்க ஐந்து வருஷமாகவில்லையே அவர்களிருவரும் ஜோடியாய் நம்ம குளத்தங்கரையில் விளையாடி! கல்யாணமான பிறகுங்கூட ஒருவருக்குந் தெரியாமல் எத்தனை தடைவ பார்த்துப் பழைய நாள் போலவே அன்பும் ஆதரவுமாக நாகராஜன் அவளோடு பேசியிருக்கிறான்! அவன் கைவிடமாட்டான் என்றேதான் ருக்மிணி நினைத்திருப்பாள்.

ஆனால் நாளாக ஆக நாகராஜனுடைய கல்யாணப் பேச்சு முத்திக்கொண்டே வந்தது. நாகராஜன் மனதில் மாத்திலம் இன்னது இருக்கிறது என்று யாருக்கும் தெரியாது. பட்டணத்திலிருந்து வந்த அன்று, மாமனாரையும் மாமியாரையும் நமஸ்காலம் செய்வதற்காக அகத்துக்கு வந்தானே அவ்வளவுதான். பிறகு ருக்மிணியை அவன் ஸ்மரித்தான் என்பதற்கு எள்ளளவுகூட அடையாளமில்லை. ஆனால் முகத்தைவிட்டு முதனாள் போன உல்லாஸக்குறி மறுபடியும் திரும்பி வரவேயில்லை. யாருடனும் பேசாமல் எப்பொழுதும் சுளித்த முகமாயிருப்பான்.

கடைசியாக, நாள் வைத்தாகிவிட்டது. பெண் அகத்துக்காலர் வந்து லக்கினப் பத்திரிகையும் வாசித்து விட்டுப் போய்விட்டார்கள். ஐயோ! அன்னைக்கு மேளச் சத்தத்தைக் கேட்க என் பஞ்சப் பிராணனும் துடித்தது. காமேசுவர ஐயருக்கு எப்படி இருந்திருக்குமோ! மீனாட்சிக்கு மனசு எப்படித் துடித்ததோ! ருக்மிணி எப்படிச் சகித்தாளோ? எல்லாம் ஈசுவரனுக்குத்தான் தெரியும்.

நாகராஜனுக்குக் கூடத் துளி இரக்கம் பச்சாத்தாபமில்லாமற் போய்விட்டது. பார்த்தையா என்று நான் அழாத நாள் கிடையாது. சில வேளைகளில், இப்படியெல்லாம் பண்ணினால் இவன் மாத்திரம் நன்றாக இருப்பானா என்றுகூடச் சொல்லிவிடுவேன்… இப்படி என் மனசு தளும்பித் தத்தளித்துக் கொண்டிருக்கிறபோது, ஒரு நாள் வயித்திலே பால் வார்த்தாப்போல ஒரு சங்கதி என் காதில் விழுந்தது. நாகராஜனோடு கூடப் படித்துக் கொண்டு இருந்தவனாம் ஸ்ரீநிவாசன் என்ற ஒரு பையன். அவன் நாகராஜனைப் பார்க்கிறதற்கென்று வந்தான். அவர்களுக்கெல்லாம் ரகசியமாகப் பேச இடம் வேறெங்கே? நம்ம குளத்தங்கரை தானே?

ஒரு நாள் சாயங்காலம் ஏழெட்டு மணிக்கு எல்லோரும் போய்விட்ட பிறகு இவர்கள் இரண்டு பேரும் இங்கே வந்தார்கள். ஸ்ரீநிவாசன் ரொம்ப நல்லவன். அவன் ஊர் ஐம்பது அறுபது கல்லுக்கந்தண்டை இருக்கிறது. நாகராஜன், பெண்ணருக்க, வேறு பெண் கல்யாணம் பண்ணக் கொள்ளப் போகிறான் என்று யாரோ அவனுக்கு எழுதி விட்டார்களாக்கும். உடனே தபால் வண்டி மாதிரி ஓடிவந்து விட்டான். குளத்தங்கரைக்கு வந்ததும், தான் கேள்விப்பட்டதைச் சொல்லி இதெல்லாம் வாஷ்தவந்தானா என்று அவன் நாகராஜனைக் கேட்டான். நாகராஜனும், “”””அம்மாவும் அப்பாவும் சேர்ந்து நிச்சயம் செய்துவிட் போது நான் மாட்டேன் என்று சொன்னால் தான் தீரப் போகிறதா? தவிர, பெண்ணும் லட்சணமாக இருக்கிறதாம். அவள் தகப்பனார், லட்சரூபாய் ஆஸ்தி அவள் பேருக்கு எழுதி வைத்திருக்கிறாராம். அவருக்குப் பிற்காலத்தில் இன்னொரு லட்சரூபாய் சொத்துச் சேருமாம். இப்படி, தானே வருகிற சீதேவியை எதற்கு வேண்டாமென்று சொல்லுகிறது?”” என்று சொன்னான்.

இந்த வார்த்தையெல்லாம் சொல்லும்போது ஸ்ரீநிவாசன் முகம் போன போக்கை என்ன என்று சொல்லுவது? நாகராஜன் நிறுத்தினதும் அரைமணி தேசகாலம் ஸ்ரீநிவாசன் அவனுக்கு, “”””எத்தனை லட்சந்தான் வரட்டுமே, ஒரு பெண் பாவத்தைக் கட்டிக் கொள்ளலாமா? கல்யாணப் பந்தலில் மந்திர ரூபமாகச் செய்த பிரமாணத்தையெல்லாம் அழித்துவிடலாமா”” என்று நானாவிதமாய்த் தர்மத்தையும் நியாயத்தையும் எடுத்துச் சொல்லி, கல்லுங் கரையும்படியாக ருக்மிணிகாகப் பரிஞ்சு பேசினான். அவன் நன்றாக இருக்க வேணும். க்ஷேமமாக இருக்க வேணும், ஒரு குறைவுமில்லாமல் வாழ வேணும் என்று நிமிஷத்துக்கு நிமிஷம் நான் வாழ்த்திக்கொண்டே இருந்தேன்.

ஆனால் அவன் பேசியானதும் நாகராஜன் அவனைப் பார்த்து, ‘ஸ்ரீநிவாசா, உன்னிடம் இதுவரை சொன்னதெல்லாம்’ விளையாட்டாக்கும். நான் காசுக்காக இவ்வளவு அற்பமாகப் போய்விடுவேன் என்று நினைக்கிறாயா? நான் யாருக்கும் தெரியமால் வைத்துக் கொண்டிருக்க வேணும் என்றிருந்தேன். ஆனால் எப்போ இவ்வளவு தூரம் பேசிவிட்டோமோ, இனிமேல் உனக்குத் தெரியாமல் வைக்கிறதில் காரியமில்லை என்று நினைத்துவிட்டேன். ஆனால் ஒன்று மாத்திரம் இதை நீ யாருக்கும் சொல்லக்கூடாது, இவர்களெல்லாம் ஆரியத் தன்மையை விட்டு மிலேச்சத்தனமாய் நடக்க உத்தேசித்திருக்கிறபடியால், இவர்களை நன்றாக அவமானம் செய்துவிட வேண்டியதென்று நிச்சயித்துவிட்டேன். நான் எத்தனை மறுத்தும் அப்பாவும் அம்மாவும் ஒரே பிடிவாதமாக இருக்கிறார்கள. ஆகையால் மன்னார்கோவிலுக்கே போகிறேன். அங்கே போயும் மாட்டேனென்றே சொல்லுவேன். ஆனால் கட்டாயப் படுத்தத்தான் போகிறார்கள். முகூர்த்தப் பந்தலிலும் உட்காருவேன். ஆனால் என்ன இருந்தாலும் திருமங்கலியத்தில் நான் தானே முடிச்சப் போடவேணும்? வேறு ஒருவரும் போட முடியாதே. அந்த சமயத்தில் கண்டிப்பாக மாட்டேனென்று சொல்லிவிடப் போகிறேன். எல்லோரும் இஞ்சிதின்ற குரங்கு போலே விழிக்கட்டும். ருக்மிணியைத் தொட்டகையினாலே இன்னொரு பெண்ணையும் நான் தொடுவேன் என்றிருக்கிறாயா? என்று சொல்லி முடித்தான்.

“”””ஆனால் நீ விவாகரத்துக்கென்று போகுங் காலத்தில், ருக்மிணி, அவள் அப்பா அம்மா மனதெல்லாம் எப்படியிருக்கும் என்று யோசித்துப் பார்த்தாயா?”” என்று ஸ்ரீவாசன் கேட்டான். அதற்கு நாகராஜன், “”””யோசித்தேன் ; ஆனால் எல்லாம் போய்விட்டதென்று அவர்கள். நிராசையாய்த் தவித்துக் கொண்டிருக்கும் சமயத்தில், திடீரென்று நான் ஓடிவந்து மாமியார் மாமனாரை வணங்கி, துயரப்படாதீர்கள்! என் ருக்மிணியை நான் ஒரு நாளும் கைவிட மாட்டேன்! பணத்தாசை பிடித்தவர்கனையெல்லாம் மணப் பந்தலில் மானபங்கம் செய்துவிட்டு இங்கே வந்துவிட்டேன் என்று நான் சொல்லுங் காலத்தில் அவர்களுக்கு எத்தனை ஆனந்தமாக இருக்கும்! அதைப் பார்த்து அனுபவிக்க விரும்புகிறேன்”” என்றான்.

“”””அந்த நாள் வரையில் அவர்கள் மனசு எப்படி அடித்துக் கொண்டிருக்கும்? நினைத்துப்பார்”” என்றான் ஸ்ரீநிவாசன். அதற்கு நாகராஜன், இன்னும் ஐந்து நாளில்லை ; இன்று வெள்ளிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை இவ்விடமிருந்து எல்லோரும் புறப்படப் போகிறோம். அடுத்த நாள் முகூர்த்தம் அன்றைக்கே புறப்பட்டு அடுத்த நாள் காலையில் இங்கே திரும்பிவிடுவேன். இத்தனை நாள் பொறுக்க மாட்டார்களா? என்றேன். ‘என்னவோ அப்பா, எனக்கு இது சரியில்லை’ என்று தோன்றுகிறது”” என்று ஸ்ரீநிவாசன் பேசிக் கொண்டிருக்கும் போதே இருவரும் நகர ஆரம்பித்து விட்டார்கள். எனக்கு மேலே ஒன்றும் கேட்கவில்லை.

அன்னைக்கு ராத்தியெல்லாம் எனக்குத் தூக்கமே வரவில்லை. பார்த்தையா, நாகராஜனை வையக்கூட செய்தேனே பாவி, ‘அவனைப் போலே ஸ்த்புத்திரன் உண்டா உலகத்திலே’ என்று சொல்லிக்கொண்டேன். ‘இனிமேல் பயமில்லை ; அஞ்ச நாளென்ன, பத்து நாளென்ன? நாகராஜன் பிடிவாதக்காரன் ; சொன்னபடியே செய்து விடுவான். ருக்மிணிக்கு இனிமேல் ஒரு குறைச்சலுமில்லையென்று பூரித்துப் போய்விட்டேன்.

ஞாயிற்றுக் கிழமை ; இவர்களெல்லாம் மன்னார் கோவிலுக்குப் புறப்படுகிறார்களென்று ஊரெல்லாம் அல்லோலகல்லோலப்பட்டது. ராமஸ்வாமி ஐயரையும் ஜானகியையும் வையாதவர்கள் கிடையாது. ஆனால் அவர்களைக் கூப்பிட்டு நல்ல புத்தி சொல்லுவதற்கு மாத்திரம் ஒருவரும் இல்லை. அப்படியே யாரேனும் சொன்னாலும் அவர் கட்டுப்படுகிறவர்களும் இல்லை.

அவர்கள் புறப்படுகிற அன்னைக்கு ஊரிலிருந்து கண்ணாலே பார்த்தால் இன்னுங் கொஞ்சம் வயித்தெரிச்சல் தானே அதிகமாகுமென்று நினைத்து, காமேசுவரையாரும் மீனாட்சியும் சனிக்கிழமை மத்தியானமே புறப்பட்டு மணப்பாறைக்குப் போய்விட்டார்கள். அகத்தில் ருக்மிணிக்கு அவள் அத்தை சுப்புலட்சுமி அம்மாள் தான் துணை.

சனிக்கிழமை ராத்திரியாச்சு. ஊரடங்க ஆரம்பித்துவிட்டது. ஒன்பது ஒன்பதரை மணி இருக்கும். நாகராஜன் தனியாகக் குளத்தங்கரைக்கு வந்தான். வந்து வேப்பமரத்தடியில் உட்கார்ந்து கொண்டு ஏதோ யோசித்துக் கொண்டிருந்தான். சில நாழிக்கெல்லாம் தூரத்தில் ஒரு பெண் உருவம் தென்பட்டது. அது குளத்தங் கரைப் பக்கம் வந்து கொண்டிருந்தது. ஆனால் அடிக்கொரு தடவை பின் பக்கம் பார்த்துக் கொண்டே வந்து, கடைசியாக நாகராஜன் உட்கார்ந்து கொண்டிருந்த இடத்தில் வந்து நிற்கும் போதுதான் அது ருக்மிணி என்று நான் அறிந்து கொண்டேன். எனக்குத் தூக்கி வாரிப் போட்டது. ஆனால் உடனே தெளிஞ்சு கொண்டு என்ன நடக்கிறது பார்க்கலாம் என்று கண்ணைத் துடைத்துக் கொண்டு உன்னிப்பாய்க் கவனிக்கலானேன்.

ஐந்து நிமிஷம் வரையில் நாகராஜன் கவனிக்கவேயில்லை. ஆழ்ந்த யோசனையில்
இருந்தான். ருக்மிணி அசைவற்று அப்படியே நின்று கொண்டிருந்தாள்.

எதிர்ச்சையாய் நாகராஜன் தலையைத் தூக்கினான். ருக்மிணியைப் பார்த்தான். பார்த்ததும் அவனும் திடுக்கிட்டுப் போய்விட்டான். ஆனால் உடனே நிதானித்துக் கொண்டு, “”””ருக்மிணி, இத்தனை நாழிகைக்கு மேலே தனியாக இங்கே வரலாமோ நீ?”” என்று கேட்டான். “”””நீங்கள் இருக்கிற இடத்தில தனியாக நான் இருக்க வேண்டிய நாள் இன்னும் வரவில்லையே!”” என்று பதில் சொல்லிவிட்டு ருக்மிணி நின்றாள். இரண்டு பேர் மனதும் குழம்பிக் கொண்டிருந்தது. ஆனால் எப்படி ஆரம்பிக்கிறது, என்ன பேசுகிறது என்று அவர்களுக்கு ஒன்றுந் தோன்றவில்லை.

கடைசியில் நாகராஜன், “”””இந்த வேளையில் நாம் இங்கேயிருப்பது தெரிந்தால் ஊரில் ஏதாவது சொல்லுவார்கள் ; வா, அகத்துக்குப் போய்விடலாம்”” என்றான். அதற்கு ருக்மிணி, “”””உங்களிடத்தில் சில வார்த்தைகள் சொல்ல வேணுமென்று இந்த ஒரு மாதமாய்ப் பார்த்துக் கொண்டிருந்தேன். இன்னைக்குத்தான் நேர்ந்திருக்கிறது ; அதைச் சொல்ல உத்தரவு கொடுக்க வேணும்”” என்றாள். “”””சொல்லேன்”” என்று நாகராஜன் சொல்ல, ருக்மிணி பேசலானாள் :
“”””எனக்கு உங்களிடத்தில் என்ன சொல்லுகிறது என்று தெரியவில்லை. இந்த மூணு மாசமாய் மனசு படுகிறபாடு அந்த அகிலாண்டேசுவரிக்குத் தான் தெரியுமேயொழிய மனுஷியாளுக்குத் தெரியாது. நீங்கள் பட்டணத்திலேயிருந்து வந்தவுடன் என் கலக்கமெல்லாம் போய்விடும் என்றிருந்தேன். மாமாவும் மாமியும் என்ன செய்தாலும் நீங்களும் என்னைக் கைவிட்டு விட்டால் அப்புறம் எதை நம்பிக்கொண்டு நான் வாழ்வேன்? வேலியே பயிரை அழித்துவிட ஆரம்பித்தால், பயிரின் கதி என்னவாகும்? இது வரையில் நடந்ததெல்லாம் என் மனசை உடைத்துவிட்டது. நீங்கள் அதைச் சேர்த்து வைத்தால் உண்டு, இல்லையானால் என் ஆயுசு இவ்வளவுதான், அதில் சந்தேகமில்லை.””

இந்த வார்த்தையைப் பேசும் போது ருக்மிணியின் கண்களில் ஜலம் வந்துவிட்டது. அத்தோடு நின்றுவிட்டாள். நாகராஜன் பேசவில்லை. ருக்மணியும் சில நாழி வரைக்கும் பார்த்துவிட்டு, “”””நாளைக்குப் பயணம் வைத்திருக்காப் போலிருக்கிறதே ; நீங்கள் போகத்தானே போகிறீர்கள்?”” என்று கேட்டாள். கொஞ்ச நாழி யோசித்துவிட்டு நாகராஜன் “”””ஆமாம், போகலாம் என்று தான் இருக்கிறேன்”” என்றான் ; அப்படி அவன் சொன்னதும் ருக்மணிக்கு நெஞ்சை அடைத்துக் கொண்டு துக்கம் வந்துவிட்டது. உடம்பு கிடுகிடு என்று நடுங்கியது. கண்ணில் ஜலம் ததும்பிவிட்டது. ஆனால் பல்லைக் கடித்துக் கொண்டு அதையெல்லாம் வெளியில் காட்டிக் கொள்ளாமல் “”””அப்படியானால் நீங்கள் என்னைக் கைவிட்டு விட்டீர்கள்தானே?”” என்று கேட்டாள். அதற்கு நாகராஜன், “”””உன்னை நான் கைவிடுவேனா ருக்மிணி?”” ஒரு நாளும் விடமாட்டேன். ஆனால் “”””அம்மா அப்பாவைத் திருப்தி பண்ணி வைக்க வேண்டியதும் கடமை தானே? அதற்காகத்தான் அவர் பேச்சைத் தட்டாமல் புறப்படுகிறேன். ஆனால் நீ கவலைப்படாதே, உன்னை ஒருநாளும் தள்ளிவிட மாட்டேன்”” என்றான். ருக்மிணிக்குப் பொறுக்கவில்லை. “”””நீங்கள் மறுவிவாகம் பண்ணிக் கொண்டுவிடுகிறது! நான் கவலைப்படாமலிக்கிறது! என்னை ஒரு நாளும் கைவிட மாட்டீர்கள்! ஆனால் அம்மா அப்பா சொல்லுகிறதை இது விஷயத்தில் தட்டமாட்டீர்கள்! நான் சொல்லக்கூடியது இனிமேல் என்ன இருக்கு? என் கதி இத்தனைதானாக்கும்!”” என்று சொல்லிக்கொண்டு அப்படியே உட்கார்ந்துவிட்டாள்.

நாகராஜன் ஒன்றும் பேசவில்லை. கல்யாணத்தை நிறுத்திவிடுகிறேன் என்கிற ஒரு வார்த்தையைத் தவிர வேறே எந்த வார்த்தை சொன்னால் தான் ருக்மிணியின் மனதைத் தேத்தலாம்? அந்த வார்த்தையை இப்போது சொல்லவோ அவனுக்கு சம்மதமில்லை. ஆகையால் அவன் வாயால் ஒண்ணும் பேசாமல் தன் மனதிலுள்ள அன்பையும் ஆதரவையும் சமிக்கினையினால் மாத்திரம் அவளுக்கு ஒரு மாதிரி காட்டினான். அவள் கையைத் தன்னுடைய கைகளால் வாரி எடுத்து மடியில் வைத்துக் கொண்டு மிருதுவாய்ப் பிடித்தான். குழந்தையைத் தட்டி கொடுத்துத் தேத்துவது போல், முதுகில் ஆதரவோடு தடவினான். அப்பொழுது அவள் தலைமயிர் அவன் கையில் பட்டது. உடனே திடுக்கிட்டுப் போய், “”””என்ன ருக்மிணி, தலை சடையாய்ப் போய்விட்டதே ; இப்படித்தானா பண்ணிக் கொள்ளுகிறது? உன்னை இந்த அலங்கோலத்தில் பார்க்க என் மனசு சகிக்கவில்லையே! எங்கே, உன் முகத்தைப் பார்ப்போம்! ஐயோ, கண்ணெல்லாம் செக்கச் செவேர் என்று சிவந்து போயிருக்கிறதே! முகத்தின் ஒளியெல்லாம் போய்விட்டதே! என் கண்ணே இப்படி இருக்காதே, உன்னை நான் கைவிடமாட்டேன் என்று சத்தியமாய் நம்பு. உன் மனசில் கொஞ்சங்கூட அதைரியப்படாதே. என் ஹிருதய பூர்வமாகச் சொல்லுகிறேன்; எனக்குப் பொறுக்கவில்லை உன்னை இந்த ஸ்திதியில் பார்க்க, சின்ன வயது முதல் நாமிருந்த அன்னியோன்யத்தை மறந்துவிட்டேன் என்று கனவில்கூட நீ நினையாதே. வா, போகலாம், நாழிகையாகிவிட்டது ; இனிமேல் நாம் இங்கே இருக்கக்கூடாது”” என்று சொல்லி முடித்தான்.

ருக்மிணி எழுந்திருக்கவில்லை. ஏக்கம் பிடித்தவள் போல் உட்கார்ந்திருந்தாள். அதைப் பார்த்ததும் நாகராஜனுக்குக் கண்ணில் ஜலம் ததும்பிவிட்டது. அந்தச் சமயத்தில் தன் மனதிலுள்ள ரகசியத்தைச் சொல்லித்தான் விடலாமே என்று அவன் புத்தியில் தோன்றியது போலிருந்தது. அவனுடைய விளையாட்டுத்தான் பெரிதாய்ப் பட்டது. ஆகையினாலே அதை மாத்திரம் அவன் வாய்விடவில்லை. ஆனால் அவனுக்குத்தான் எப்படித் தெரியும். இப்படியெல்லாம் வரும் என்று? அத்தனை வயசாகி எனக்கே தெரியவில்லையே, அந்தச் சமயத்திலே, அவனுக்கு எங்கே தெரிந்திருக்கப் போகிறது குழந்தைக்கு?

அப்படி நினைத்துபோய் உட்கார்ந்திருந்த ருக்மிணியை நாகராஜன் மெல்லப் பூத்தாப் போலே தூக்கி மார்போடே அணைத்துக் கொண்டு, “”””என்ன ஒன்றும் பேசமாட்டேன் என்கிறாயே ருக்மிணி. நான் என்ன செய்யட்டும்?”” என்ற கருணையோடு இரங்கிச் சொன்னான். ருக்மிணி தலை நிமிர்ந்து அவனை ஏறிட்டுப் பார்த்தாள். அந்தப் பார்வையின் குறிப்பை உங்களுக்கு எப்படிச் சொல்லுவேன்? பிரவாகத்தில் அகப்பட்டுக் கை அலுத்துப் போய் ஆத்தோடு போகிற ஒருவனுக்கு தூரத்தில் கட்டை ஒன்று மிதந்து போவது போலே தென்பட, அவனும் பதைபதைத்துக் கொண்டு ஆசையும் ஆவலுமாய் அதன் பக்கம் நீந்திக் கொண்டு போய், அப்பா பிழைத்தோம்டான்னு சொல்லிக்கொண்டு அதைப் போய்த் தொடும்போது, ஐயோ பாவம், அது கட்டையாக இராமல், வெறும் குப்பை செத்தையாக இருந்துவிட்டால் அவன் மனசு எப்படி விண்டுவிடும். அவன் முகம் எப்படியாகிவிடும். அப்படி இருந்தது ருக்மிணியின் முகமும், அந்த முகத்தில் பிரதிபிம்பித்துக் காட்டிய அவள் மனசும்.

எல்லையில்லாத துன்பம். எல்லையில்லாத கஷ்டம். அந்தப் பார்வையில் இருந்தது. அதைக் கண்டும் நாகராஜன் மௌனமாக இருப்பதைப் பார்த்து ருக்மிணி மெல்ல ஒதுங்கிக் கொண்டு நான் சொல்லக்கூடியது இனிமேல் ஒண்ணுமில்லை. மன்னார்க்கோவிலுக்குப் போகிறதில்லை என்கிற வார்த்தையை நீங்கள் எனக்குச் சொல்லமாட்டேன்… என்கிறீர்கள் ; இன்றோடு என தலைவிதி முடிந்தது. நீங்கள் எப்போது என்னை இவ்விதம் விடத் துணிந்தீர்களோ, நான் இனிமேல் எதை நம்பிக் கொண்டு யாருக்காக, உயிரை வைத்துக் கொண்டிருப்பது? உங்கள் மீது எனக்கு வருத்தமில்லை. உங்கள் மனது இந்தக் காரியத்துக்குச் சம்மதியாது. என்னுடைய விதிவசம், என் அப்பா அம்மாவுடைய கஷ்டம். உங்களை இப்படியெல்லாம் செய்யச் சொல்லுகிறது. இனிமேல் ருக்மிணி என்று ஒருத்தி இருந்தாள் ; அவள் நம்பேரில் எல்லையில்லாத அன்பு வைத்திருந்தாள், பிராணனை விடுகிற போதுகூட நம்மையே நினைத்துக் கொண்டு தான் பிராணனை விட்டாளென்று எப்பொழுதாவது நினைத்துக் கொள்ளுங்கள். இதுதான் நான் உங்களிடம் கடைசியாகக்கேட்டுக் கொள்வது”” என்று சொல்லிக் கொண்டு நாகராஜன் காலில் விழுந்து காலைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு தேம்பிதேம்பி அழுதாள். நாகராஜன் உடனே அவளைத் தரையிலிருந்து தூக்கியெடுத்து, “”””பைத்தியமே, அப்படி ஒன்றும் பண்ணிவைத்து விடாதே, நீ போய் விட்டால் என் ஆவியே போய்விடும். அப்புறம் யார் யாரை நினைக்கிறது? மழைத்தூற்றல் போடுகிறது. வானமெல்லாம் கறுங்கும்மென்றாகிவிட்டது. இன்னும் சற்றுப்போனால் சந்தரத்தாரையாய்க் கொட்டும் போலிருக்கிறது ; வா அகத்துக்குப் போகலாம்”” என்று அவள் கையைப் பிடித்துக் கொண்டு ரெண்டடி எடுத்துவைத்தான்.

ஆகாயத்தில் சந்திரன், நட்சத்திரம் ஒன்றும் தெரியவில்லை. எங்கே பார்த்தாலும் ஒரே அந்தகாரம். சித்தைக்கொருதரம் மேகத்தை வாளால் வெட்டுகிற போலே மின்னல் கொடிகள் ஜொலிக்கும். ஆனால் அடுத்த நிமிஷம் முன்னிலும் அதிகமான காடாந்தகாரமாகிவிடும். பூமியெல்லாம் கிடுகிடு என்ற நடுங்க ஆகாயத்தையே பிளந்துவிடும் போலே இடி இடிக்கும். காற்று ஒன்று சண்டமாருதம் போல அடித்துக் கொண்டிருந்தது.

தூரத்தில் பிரமாதமாக மழை பெய்து கொண்டிருந்த இரைச்சல் அதிகமாகவே நெருங்கிக் கொண்டு வந்தது. இந்தப் பிரளய காலத்தைப் போல இருந்த அரவத்தில் ருக்மிணியும் நாகராஜனும் பேசிக்கொண்டு போன வார்த்தைகள் என் காதில் சரிவரப்படவில்லை. அவர்களும் அகத்துப்பக்கம் வேகமாகச் சென்று கொண்டிருந்தார்கள். ஒரு மின்னல் மின்னும்போது ருக்மிணி வீட்டுக்குப் போக மனமில்லாமல் பின் வாங்குவதும், ஆனால் நாகராஜன் தடுத்து முன்னால் அழைத்துச் செல்வது மாத்திரம் கண்ணுக்குத் தென்பட்டது. அவர்கள் வார்த்தையும் ஒண்ணும் ரெண்டுமாகத்தான் என் காதில் பட்டது. “”””…பிராணன் நிற்காது… அம்மாவுடைய ஹிருதயம் திருப்தி… வெள்ளிக்கிழமை காலமே… ஸ்திரீர்களின்… உடைந்துவிடும்… சொல்லாதே… கொடுத்து வைத்துதானே… அந்தப் பெண்ணை யாவது நன்றாய் வைத்துக் கொள்ளுங்கள்… மனப்பூர்த்தியாக வாழ்த்துகிறேன்… அன்றைக்குத் தெரிந்துகொள்ளுவாய்… கடைசி நமஸ்காரம்… வரையில் பொறுத்துக் கொள்…”” இந்த வார்த்தைகள் தான் இடி முழக்கத்திலும், காற்றின் அமலையிலும், மழை இரைச்சலிலும் எனக்குக் கேட்டது. மழை தாரை தாரையாகக் கொட்ட ஆராம்பித்துவிட்டது. ருக்மிணியும் நாகராஜனும் என் கண்ணுக்கு மறைந்து போய்விட்டார்கள்.

ஆச்சு, அடுத்த நாள் காலமே விடிந்தது, மழை நின்றுவிட்டது.

ஆனால் ஆகாயத்திலே தெளிவு வரவில்லை. மேகங்களின் கருக்கல் வாங்கவில்லை. காற்று, ஸமாதானஞ் செய்ய மனுஷியாள் இல்லாத குழந்தைபோல, ஓயாமல், கதறிக்கொண்டேயிருந்தது. என் மனசிலும் குழப்பம் சொல்லி முடியாது. எப்படி நிதானித்துக் கொண்டாலும் மனசுக்குச் சமாதானம் வரவில்லை. என்னடா இது, என்னைக்கும் இல்லாத துக்கம் இன்னைக்கு மனசில் அடைத்துக் கொண்டுவருகிறது.

காரணம் ஒண்ணும் தெரியவில்லையே என்று நான் எனக்குள் யோசித்துக் கொண்டேயிருக்கும் போது மீனா, “”””என்னடியம்மா, இங்கே ஒரு புடைவை மிதக்கிறது?”” என்று கத்தினாள். உடனே பதட்டம் பதட்டமாய், அந்தப் பக்கம் திரும்பினேன். குளத்திலே குளித்துக் கொண்டிருந்த பெண்களெல்லோரும் அப்படியே திரும்பிப் பார்த்தார்கள். பார்த்துவிட்டு என்னவோ காதோடு காதாய் ரகசியம் பேச ஆரம்பித்துவிட்டார்கள். எனக்குப் பஞ்சப் பிராணனும் போய்விட்டது. புடைவையைப் பார்த்தால் காமாஷியம்மாள் புடவை போல் இருந்தது. சரி, அம்மா, அப்பா தலையிலே கல்லைக் தூக்கிப் போட்டுவிட்டு ருக்மிணிதான் மறுபடியும் வந்து குளத்திலே விழுந்துவிட்டாள் என்று நினைத்தேன் அதுதான் தெரியும். அப்படியே மூர்ச்சை போய்விட்டேன்.

அப்புறம் சித்த நாழி கழித்து எனக்குப் பிரக்கினை வந்தது. அதற்குள்ளே குளத்தங்கரையெல்லாம் கும்பலாய்க் கூடிப் போய்விட்டது. ஜானகியையும் ராமசுவாமி ஐயரையும் வையாதவர் இல்லை. இனிமேல் வைதாலென்ன, வையாதே போனாலென்ன? ஊரின் சோபையையும் தாயார் தகப்பனார் ஜீவனையும், என்னுடைய சந்தோஷத்தையும் எல்லாம் ஒண்ணாய்ச் சேர்த்துக் கட்டிக் கொண்டு ஒரு நிமிஷத்தில் பறந்து போய்விட்டாளே என் ருக்மிணி! கீழே, அந்த மல்லிகைக்கொடி ஓரத்திலேதான் அவளை விட்டிருந்தார்கள். எத்தனை தடைவ அந்த மல்லிகை மொக்குகளைப் பறித்திருக்கிறார்கள் அவள் பொன்னான கையாலே! குளத்தங்களையெல்லாம், அவள் குழந்தையாயிருக்கிற போது அவள் பாதம் படாத இடம் ஏது, அவள் தொடா மரமேது, செடியேது! ஐயோ, நினைக்க மனம் குமுறுகிறது. அந்த அழகான கைகள், அந்த அழகிய பாதங்கள், எல்லாம் துவண்டு, தோஞ்சு போய்விட்டன. ஆனால் அவள் முகத்தின் களை மாத்திரம் மாறவே இல்லை. பழைய துக்கக் குறிப்பெல்லாம், போய் முகத்தில் ஒருவித அத்தியாச்சரியமான சாந்தம் வியாபித்திருந்தது!

இதையெல்லாம் கொஞ்சந்தான் கவனிக்கப்போது இருந்தது. அதற்குள்ளே, “”””நாகராஜன் வறான், நாகராஜன் வறான்”” என்ற ஆரவாரம் கூட்டத்தில் பிறந்தது. ஆமாம் நிசந்தான். அவன் தான் தலைகால் தெரியாமல் பதைக்கப் பதைக்க ஓடி வந்து கொண்டருந்தான். வந்துவிட்டான். மல்லிகைச் செடியண்டை வந்ததும், கும்பலையாவது, கும்பலில் இருந்த தாயார் தகப்பனாரையாவது கவனிக்காமல், “”””ருக்மிணி, என்ன பண்ணிவிட்டாய் ருக்மிணி!”” என்று கதறிக் கொண்டு கீழே மரம் போல சாய்ந்துவிட்டான். கூட்டத்தில் சத்தம், கப் என்று அடங்கிப்போய்விட்டது. எல்லோரும் நாகராஜனையே பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

ரொம்ப நாழி வரைக்கும் அவன் தரையில் மூர்ச்சை போட்டே கிடந்தான். ராமசுவாமி ஐயர் பயந்து போய் அவன் முகத்திலே ஜலத்தைத் தெளித்து, விசிறியால் விசிறிக்கொண்டிருக்கையில் அவனுக்குக் கடைசியாய்பிரக்கினை வந்தது. கண்ணை முழித்தான். ஆனால் தகப்பனாரிடத்திலே ஒரு வார்த்தைக் கூடப் பேசவில்லை. ருக்மிணியின் உயிரற்ற சரீரத்தைப் பார்த்து, “”””என்னுடைய எண்ணமத்தனையும் பாழாக்கிவிட்டு ஜூலியெத் மாதிரி பறந்தோடிப் போய்விட்டாயே ருக்மிணி! ஸ்ரீநிவாசன் சொன்னது சரியாய்ப் போய்விட்டதே! பாவி என்னால்தான் நீ உயிரை விட்டாய், நான் தான் உன்னைக் கொலை செய்த பாதகன்! நேற்று நான் உன்னிடம் ரகசியம் முழுவதையும் சொல்லியிருந்தால் இந்தக் கதி நமக்கு இன்று வந்திருக்காதே! “”””குஸும ஸத்ருசன்… ஸத்ய : பாதி ப்ரணயி ஹருதயம்”” என்கிற ஆழமான வாக்கியத்தை வேடிக்கையாக மாத்திரந்தான் படித்தேனேயொழிய அதன் சத்தியத்தை நான் உணரவில்லையே! இனிமேல் எனக்கென்ன இருக்கிறது? ருக்மிணி! நீயோ அவசரப்பட்டு என்னை விட்டுவிட்டுப் போய்விட்டாய். எனக்கு இனிமேல் சம்சார வாழ்க்கை வேண்டாம். இதோ சன்னியாசம் வாங்கிக் கொள்ளுகிறேன்!”” என்று சொல்லிக்கொண்டே யாரும் தடுப்பதற்கு முந்தித்தான் உடுத்தியிருந்த வேஷ்டியையும் உத்தரீயத்தையும் அப்படியே தாறாய்க் கிழித்துவிட்டான். அவன் தாயார் தகப்பனார் ஒருவரும் வாய் பேசவில்லை. நாகராஜனும் அவர்கள் திடுக்கிட்டதிலிருந்து சுதாரிச்சுக் கொள்ளுகிறதற்குள்ளே அவர்கள் காலில் சாஷ்டாங்கமாய் விழுந்து, நமஸ்காரம் பண்ணிவிட்டு யாருடனும் பேசாமல் கௌபீனதாரியாய்ப் புறப்பட்டுப் போய்விட்டான்.

இப்படி முடிந்தது என் ருக்மிணியின் கதை! என் அருமைக் குழந்தைகளே! பெண்கள் மனசு நோகும்படி ஏதாவது செய்யத் தோணும்போது இனிமேல் இந்தக் கதையை நினைத்துப் பார்த்துக் கொள்ளுங்கள். விளையாட்டுக்காகக் கூடப் பெண்ணாய்ப் பிறந்தவர்களின் மனதைக் கசக்க வேண்டாம். எந்த விளையாட்டு என்ன வினைக்குக் கொண்டு விடும் என்று யாரால் சொல்ல முடியும்?

பின் குறிப்பு:

இதுவே தமிழின் முதல் சிறுகதை என்றும் கருதப்படுகிறது.

வ.வே.சு.ஐயரின் எட்டுக் கதைகளடங்கிய நூலில் இலக்கிய விமர்சகர்களால் அதிகம் பாராட்டப்பெற்ற கதை குளத்தங்கரை அரசமரம் என்னும் சிறுகதை ஆகும். இக்கதை இலக்கிய விமர்சகர்களால் வரலாற்று ஆசிரியர்களாலும் சிறுகதையின் சிகரம் எனக் கொண்டாடப்பட்டது.

நாடகச் சுவை ததும்ப ஆரம்பித்து நிகழ்ச்சியாகக் காண்பிப்பதுதான் ஐயரின் சிறுகதை உத்தி ஆகும்.இக்கதை வெளிவந்த இதழ் விவேக போதினி. இந்த இதழ் மாத இதழாக வெளிவந்தது. குளத்தங்கரை அரசமரம், ஒரு சிறிய கதை என்று தமிழிலும் “The Peepul tree near Tank [Ashort Story]” என்று ஆங்கிலத்திலும் தலைப்புகள் இடப்பட்டன. கவிஞர் தாகூரின் காடேர் கதா (படித்துறையின் கதை) என்பது அற்புதமான சிறுகதையாகும். இக்கதையில் உருவம் உள்ளடக்கம் இரண்டும் பெருமளவு செல்வாக்குச் செலுத்தியுள்ளன. இச்சிறுகதையை வங்க மொழியில் இருந்து அமரர் த.நா.குமாரசாமி தமிழில் படித்துறையின் கதை என்று மொழிபெயர்த்துள்ளார். வா.வே.சு.ஐயர் இக்கதையில் இருந்து உத்தியை மட்டும் எடுத்துக் கொண்டு குளத்தங்கரை அரசமரம் என்ற பெயரில் வடித்துள்ளார். படித்துறையின் கதையின் குஸ“மா, குளத்தங்கரை அரசமரத்தின் ருக்மணி இருவர் பாத்திரப்படைப்பும் முறையே, படித்துறை அரசமரம் இவற்றின் பாசத்துடன் படைக்கப்பட்டுள்ளனர். குளத்தங்கரை அரசமரத்தில் ஒரு மரம் கதை கூறும் உத்தி எடுத்தாளப்பட்டுள்ளது. மேலும் நிஜாமி என்னும் பாரசீகக் கவிஞர் (1141-1202) எழுதிய பல கவிதைகளில் லைலா மஜ்னும் ஒன்று. இக்கதையைத் தழுவல் சிறுகதையாக எழுதியுள்ளார்.

நன்றி: தமிழ்ப் புத்திலக்கியம்

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *