கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு: சமூக நீதி  
கதைப்பதிவு: February 21, 2023
பார்வையிட்டோர்: 3,154 
 

அத்தியாயம் 23 – 24 | அத்தியாயம் 25 – 26 | அத்தியாயம் 27 – 28

அத்தியாயம் – 25

கலியனைப் பார்க்கப் பார்க்க ஆத்திரம் ஆத்திரமாக வந்தது துரைராமனுக்கு.

ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டல்லவா…!

கோபம், பாபம், சண்டாளமாயிற்றே…!

கோபத்தில் காரியம் செய்பவனும், கடும் புயலில் கப்பல் விடுபவனும் மீளமுடியாதே…!

நிதானத்தை இழக்கச் செய்துத் தவறிழைக்கத் தூண்டி, இறுதியில் தலை குனிய வைத்துவிடுமே ஆத்திரம்…!

தீராக் கோபம் போராய் அல்லவா முடியும்…!

‘பொங்கலோப் பொங்கல்…!’

குடும்பத்துடன் கூடிக் குலாவிக் களித்துக் கூவிக் குலவையிட்டு, மகிழ்ச்சியின் உச்சத்தில், கைக்கொட்டி, பல்வேறு பாத்திரிங்களைத் தட்டி ஓசையெழுப்பிப், பொங்கலோப் பொங்கல் என கூட்டாய் ஒலி எழுப்பிக், குதூகலமாய்க் கொண்டாடினார்கள் பொங்கல் பண்டிகை.

பக்திப் பரவசத்துடன் படையலிட்டுச், சூரிய பகவானைத் திருப்திப்படுத்தியதன் மூலம், முழுத் திருப்தியடையந்தார்கள்.

உறவும் நட்பும் சூழ அமர்ந்து விருந்துண்டுக் களித்து மகிழும் பொன்னாள் அல்லவா பொங்கல் திருநாள்.!

சூரியன்தானே அண்ட சராசரம் அனைத்துக்கும் ஆதாரம்!

விண்ணிலும் மண்ணிலும் பல்வகை வண்ணச் சித்திரங்களைத் தீட்டுதற்கு மூலாதாரமாய் விளங்கும் பரம்பொருளின் முதல் அம்சமல்லவா சூரியன்!

சூரியனும், மழையும் அனைவருக்கும் பொதுவானதாயிற்றே!

என் சூரியன், உன் சூரியன் என்று உரிமை கொண்டாட முடியாதே!
‘ஞாயிறு போற்றுதும்! ஞாயிறு போற்றுதும்!-
காவிரி நாடன் திகிரிபோல், பொன் கோட்டு
மேரு வலம் திரிதலான்.’
என்று பரிதி’யைப் போற்றுகிறது சிலம்பு!

‘சூர்ய ஆத்மா ஜகதஸ் தஸ்துஷச்ச’.!

தாவரம், ஜங்கமம் என்னும் அனைத்தின் ஆன்மாவே சூரியன்! என்றும்,

‘மித்ரோ ஜனான் யாதயதி ப்ருவாணோ

மித்ரோ தாதார ப்ருதிவீமுத த்யாம்.’

அண்ட சராசரங்களுக்கெல்லாம் ஆதார அச்சாய் நின்று (மித்திரன்) உயிர் நண்பனாய் விளங்குகிறான் பரிதி.!’ என்று கூறுகிறது வேதம்.

‘கதிரவன் குணதிசைச் சிகரம் வந்தடைந்தான்…!’

பிரபந்தத்தின், திருப்பள்ளியெழுச்சிக் கூறும் யதார்த்தம் இது…!

சூரியன் தன் உயிர்க் கிரணங்களைச் (ஒரு செல் அமீபா முதல் ஆறறிவு மனிதன் ஈறாக) செலுத்தி, தன் ரசவாத்த்தால், பிரபஞ்சத்தையே உயிர்ப்புடன் இயக்கும் அதிசயமே, இயற்கையின் அற்புதம்.

மகிழ்ச்சியின் உச்சத்தில் மனிதர்கள் இருக்கும்போது, ‘செரட்டோனின், டொபேமின், ஆக்ஸிடோசின், என்டோபின்…’ போன்ற ‘மகிழ்ச்சி ஹார்மோன்கள்’ மூளையில் சுரத்தலென்பது அறிவியில் பூர்வமாக நிரூபிக்கப்பட்ட உண்மையல்லவா…!

இந்த ரசவாதத்தைப், பொங்கல் பண்டிகையன்றுதான் விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருப்பார்களோ…?”

பால்-பொங்கலை ரசித்து, ருசித்து வயிறு முட்ட உண்ட பின், பால் மணத்தோடு, வெளிப்படும் ஏப்பத்தோடு, நன்றியறிதலும் வெளிப்படுகிறது.

நன்றியறிதல் தமிழனின் தலையாய குணமல்லவா…!

பால் தரும் கால்நடைகளின் மீதான பாசத்தையும் நேசத்தையும் வெளியுலகிற்குப் பறைச் சாற்றிப் போற்றி மகிழும் நோக்கத்துடன்தான் தொடங்கப்பட்டது மாட்டுப் பொங்கல் எனும் மகத்தானத் திருநாள்.

பசு, எறுமை…;

கிடேரி, காளை…;

இளங்கன்றுகள்…;

நாட்டு மாடு, சீமை மாடு…;

தடி, தோசு, சோனி, சோதா, சப்பாணி, மோளை…;

சினைப் பசு, இளம் பசு, மரப் பசு…;

வகை-வயையாய், வண்ண-வண்ணமாய்…;

பல்வேறு பல் பட்ட மாடுகள். கன்றுகள்

கத்தியால் சீவிச் சீவி, பட்டைச்-சீலை வைத்துத் தேய்த்துத் தேய்த்துக் கூராக்கி, வர்ணம் பூசப்பட்ட கூர் முனைக் கொம்புகளோடும், கழுத்தில் அணிவிக்கப்பட்ட நெட்டி மாலையோடும், மணிச் சத்தமெழுப்பியபடி மந்தைக்கரைக்கு வந்து சேரும் ஆவினங்கள்.

கீதோபதேசக் களம்போல் மாடுகள் சுற்றிலும் அணி வகுத்து நிற்க, நட்ட நடுவில் பெருமாள் காட்சியளிப்பார்.

அருச்சுனன் போல் பக்திச் சிரத்தையுடன், முறையாகப் பட்டிக் கட்டுவார் மந்தைத் தலையாரிக் கோனார்;

பீளைப்பூ,, வேப்பிலை, மாவிலை, நெல்லி… ஈக்குகளைக் கொத்தாய்க் கட்டி, பட்டிப் பத்தையின் முகப்பில் கிரீடம் போலச் செருகுவார்;

செருகும் அழுத்த்த்தில் சிதையும, ஈரமானப் பட்டிப் பத்தையின் சிறு வெடிப்பை வழித்து விடுவார்;

பட்டிக் குழிவில் மஞ்சள் நீர் ஊற்றுவார்;

கைக் கூப்பி, கண்மூடிப் பிரார்த்தனை செய்வார்; தலைமைக் கோனார்.

எதிரே, கோபால கிருஷ்ணாகக் காட்சி தரும், பூமிதேவி, நீளாதேவி சமேத வரதராஜப் பெருமாள், கையில் சாட்டை, இடுப்பில் வெண்ணைத்தாழி ஏந்தி சர்வாலங்கார பூஷனாக எழுந்தருளி சேவை சாதிப்பார்.

குதிரை வாகனத்தில் கம்பீரமாய் அமர்ந்தபடி பெருமாள் சேவை சாதிப்பதுக் கண்கொள்ளாக் காட்சி.

காஞ்சீபுரம் வரதராஜப் பெருமாள் கோவிலில் தடபுடலாக நடத்தப்படும், பிரசித்தி பெற்றக் ‘கனு பாரி வேட்டை’க்கு இணையாக இருக்கும் அந்தனூர்ப் பாரி வேட்டை.

மாடில்லா வீடே கிடையாது அந்தனூரில்.

அனைத்து மாடுகளும் மந்தைக்கரைக்கு வர வேண்டும்

இது ஊர் கட்டுப்பாடு.

பெருமாள் கோவிலுக்கு முன் மாடுகள் சந்தை போலக் கூடிவிடும்.

பெருமாள் முன்பாக, காளைகளும், பசுக்களும் கன்றுகளுமாகப், புழுதி கிளம்பக் கூட்டமாய்ச் செல்லும்.

‘ஆமருவி நிரை மேய்த்த அமரர் கோமான்…’

தன் பிரியமான பசுக்களின் பாததூளியை ஸ்பரிசித்தபடி பின் தொடர்வார் பெருமாள்.

விதவிதமான சலங்கை ஒலிகள்;

ஆவினங்களின் கன்றுகளின் குரல்கள்;

பாஞ்சஜன்யமாய் பாகவதர் ஒலிக்கும் சங்கொலி; மற்ற மற்ற வாத்தியங்களின் இசையொலிகள்;

வரதராஜா, கோவிந்தா… என்ற பரவசக் கூவல்… ;

அனைத்தும் கலந்து மந்தைக் கரையைப் பரவசப்படுத்தும்.

குதிரை வாகத்தில் சேவை சாதிக்கும் எம்பெருமானை வலம் வந்தபடி காராம்பசுவையும், கன்றையும் பரமன் முன்னே நிறுத்துவார் தலைக் கோனார்.

கோ பூஜை நடக்கும்.

தவில், நாதஸ்வரம், கொம்பு, எக்காளம் என எல்லா மங்கல வாத்தியங்களும் கெட்டியாய் முழங்கும்.

பெருமாள் கழுத்து மாலையைக் கழற்றி பசுவுக்கும் கன்றுக்கும் சார்த்துவார்.

ஐந்து முக தீபாராதனைக் காட்டுவார் பட்டாச்சாரியார்.

அடுத்த கணம் தலைக்-கோனார் பட்டி உடைப்பார். கண் கொள்ளாச் காட்சியது.

அவன் அருள் இருந்தால் மட்டுமே அவன் தாள் வணங்குதல் சாத்தியமாகும்.

மந்தைக் கரையில் பட்டி உடைப்பட்டதும், தலைக் கயிற்றை அவிழ்த்துக் கொண்டு சர்வ சுதந்திரமாக ஆவினங்களை அனுமதிப்போர் வெகு சிலரே…

இந்த நாளில் கூடச் சாங்கியம் முடிந்ததும் கொட்டிலில் இழுத்து கட்டுவோரேப் பெரும்பான்மை.

எங்கெங்கு காணினும்…

ஜனங்கள்…! ஜனங்கள்…! ஜனங்கள்…!

இருந்தாலும், பயிற்சிப் பெற்றச் சிப்பாய்கள் மட்டும்தானேப் போர் முனையில் போராடுகிறார்கள்…?

அதுபோலவே, எருது, காளை, ஆண் மாடு, வண்டி மாடு, உழவு மாடுகள், என்றெல்லாம் இருந்தாலும், முறையாகப் பயிற்சிப் பெற்ற, வலுவுள்ள, போராடத் திறமையுள்ளப் பொலிக் காளைகள் மட்டுமே போர்முனைக்குச் சமமான வாடி வாசலுக்கு வந்துசேரும்.

‘அதிர ஓடினால் முதிர விளையும்’…

எப்படி என்கிறீர்களா?

அறுபட்ட தாள்கள், அதிர ஓடும் கால்நடைகளின் குளம்புகளில் சிக்கும், சிதறும், சிதையும், சின்னாபின்னமாகும், அறும், அழுந்தும், அழுகும், மடியும், மட்கும், மண்ணுக்கு வீரியம் சேர்க்கும்….!

முத்து முத்தாய்ப் பயிர் விளையும்.

களஞ்சியங்கள் நிரம்பி வழியும்

அறுவடை முடிந்த வயல்களில் அடுத்த பாட்டம் விவசாயம் வரை கால்நடைகள் ஆட்சி செய்யும்.

மனிதனுக்கு உணவிட்ட நிலம், வாங்கற் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்களுக்கு மேய்ச்சல் நிலமாகும்.

மேய்ச்சல் நிலத்தில் பசுக்கள் காலாறும் போது, காளைகள், துள்ளிக் குதியாட்டம் போடும்.

ஆட்டம் காட்டி கிடேரியை ஈர்க்கும்.

துள்ளும் காளைகளை எதிர்க் கொண்டு விளையாட்டாய் அடக்குவான் இள மேய்ப்பன்.

ஆயர் மங்கை, ஆயனிடம் மயங்குவாள்.

வீரம் கண்டு வியத்தல், சாதனை கண்டு ‘ஆ…!’ வென வாய்ப் பிளத்தல், விழிவிரித்து வீரனை விழுங்கல்… எல்லாம் மகளிர் இயல்பல்லவா…!

விழி விரிப்பவளை விழ வைக்க விழைவான் இளைஞன்.

கிடேரி துரத்தும் காளையைக் காட்டுவான்.

அவள் வெட்கி அவன் தோள்மேல் நெற்றி தாங்குவாள்.

மங்கையரை மயக்கும் வீர விளையாட்டாய் காளைகளை அடக்கல், அறிமுகமானது.

கிடேரி முன் அடங்க மறுத்து ஆரவாரிக்கும் காளைகளை அடக்க வீரத்தை நிரூபித்தல் கலாச்சாரமானது.

மாறாத ஒன்று மாற்றம்தானே…!

‘கொல்லேற்றுக் கோடஞ்சுவானை மறுமையும்
புல்லாளே ஆய மகள்’

கூடிக் கொல்லுகின்ற ஏறு எனும் கொம்புடைய காளைக்கு அஞ்சுபவனை மறுபிறப்பிலும் விரும்பமாட்டாள் பெண்’ என்கிறது கலித்தொகை.

அதற்குக் கல்வெட்டுகளும், கருங்கல் சிலைகளும், புடைப்புச் சிற்பங்களும். ஓவியங்களும்கட்டியம் கூறுகின்றன.

உண்மைதானே. எந்தப் பெண்ணாவது சோப்ளாங்கியை விரும்புவாளா…?

காலம் மாற மாறக் காட்சிகளில் மாற்றம் வந்தன.

“நீ வீரனா இருந்தா என் வீட்டுப் பொலி காளையை அடக்குப் பாப்போம்…!”

கலித்தொகைக் காலத்தில் கன்னியர் கவித்துவத்துடன் மொழிந்தார்கள்.

இன்றைய கன்னியர், கடைக்கண் சிமிட்டிச் கலாய்க்கிறார்கள்…

‘கண்ணின் கடைப்பார்வை காதலியர் காட்டிவிட மாமலைலே ஓர் கடுகாய்’ இருக்கும்போது, மயிலைக் காளை எம்மாத்திரம்..

சீறி வரும் காளையை, சிங்கத்துக்கு நிகராய்ப் நெஞ்சு நிமிர்த்திப் பாய்ந்து, அடக்கி ஏறு தழுவினான்.

சவால் விட்டக் கன்னியோ, வீரம் வியந்து அவனைக் தழுவினாள்.

ஏறுதழுவல், மஞ்சுவிரட்டு, ஜல்லிகட்டு என்பதெல்லாம், வெவ்வேறு பெயர்களில் போற்றப்படும் தமிழகத்தின் தனிப் பெரும் சொத்துக்களல்லவா.!

உலகமே வியக்கும் தமிழனின் அடையாளங்களல்லவா.!

பழந்தமிழ் இலக்கியங்கள் காட்டும், நடைமுறைப்படி எல்லா இடங்களிலும், எல்லா நேரங்களிலும் ஜல்லிக்கட்டு நடந்ததுமில்லை, நடப்பதுமில்லை.

திடலில் அவிழ்த்துவிடப்பட்டக் காளைகள் எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் ஓடும்போது, அவற்றை இளைஞர்கள் விரட்டும் ‘வேலி-ஜல்லிக்கட்டு’

வாடி வாசல் மூலம் வெளியேற்றப்படும் பொலிகாளைகளைத் தொடர்ந்து விரட்டி அதன் திமில் தழுவித் தொங்கியபடி குறிப்பிட்ட தூரம் செல்லும் ‘வாடிவாசல் ஜல்லிக்கட்டு’.

இருபது அடி நீளக் கயிற்றால் கட்டப்பட்ட பொலி காளையைக், குழுவினர் இழுத்துப்பிடிக்க, குழுவில் ஒருவன், காளை முன் பாய்ந்துக் கொம்பில் சுற்றிய பரிசுப் பணத்தை வெல்கிற ‘வடம் ஜல்லிக்கட்டு’

இப்படி நீளமான வரலாறு கொண்டதல்லவா ஜல்லிக்கட்டு.

இடத்துக்குத் தகுந்தாற்போல், காலத்தின் அடிப்படையில் பல்வேறு மாற்றங்கள் வந்தாலும், அடிப்படை ஒன்றுதானே!

அஞ்சுக்கும் ஆறுக்கும் நடுவேப் போட்டாப் போட்டி.

ஆறாவது அறிவான பகுத்தறிவின் வெளிப்பாடாய், அனுமானமும், சாணக்கியமும் மிக்க மனிதர்கள் ஒருபுறம்.

ஐந்தறிவேக் கொண்ட முரட்டுக் குணமும், மூர்க்கமும் கொண்ட காளைகள் மறுபுறம்.

இயற்கையிலேயே உடல் வலிவும், முரட்டுத்தனமும், மிருக குணமும் கொண்ட ஐந்தறிவுக் காளைகளை போஷித்து வளர்ப்பது , ஒருக் காலத்தில் சமூக கௌரவமாகக் கருதப்பட்டது.

பெற்ற மகனுக்கோ மகளுக்கோக் கூடக் கிடைக்காத செல்லமும், போஷிப்பும் இந்தக் காளைகளுக்குக் கிடைக்கும்.

காளை வளர்ப்புக்காகச் சொத்து சுகங்களை அழித்தப் பண்ணையார்கள் கூட உண்டு.

காளையின் வலிவு, வளர்ப்பவன் வரலாறு, பயிற்சி கொடுத்தவனின் திறமை, பரிசுப் பொருளின் மதிப்பு… என பல்வேறுக் கூறுகளையும் அனுமானித்து பலப் பரீட்சையில் இறங்குவான் இளைஞன்.

தீட்டிய மரத்தில் கூறு பார்ப்பதைப்போல, மனிதர்கள் முன் சவாலாய்ப் பாயும் காளைகள்.

எதிர்ச் சவாலிட்டு மோதி, மனிதன் ஜெயித்துக் காட்டுவது வீர விளையாட்டானது.

ஐந்தறிவையும் ஆறறிவையும் மோதவிட்டு நடத்தும் வாழ்வாச் சாவாப் போரைக் கைத்தட்டி ஆராவாரிப்பதும், கண்டு களிப்பதும் பொழுது போக்கானது.

வாடி வாசலைக் கலக்கியெடுக்கும், முறையாகப் பயிற்றுவிக்கப்பட்டக், காளையிடம் எதிர்ச் சவால் விட வீரனுக்குப் போதுமானப் பயிற்சி வேண்டும்.

பயிற்சி பெற்ற சுத்த வீரர்கள் எப்பேர்ப்பட்ட காளையையும்அடக்கிவிடுவார்கள்.

அடக்கவே முடியாத கட்டத்தில், காளையின் கூரிய கொம்புகளால் குத்திக் கிழிக்கப்பட்டுக் குருதி கொட்டி, வீரமரணம் அடையவும் தயாராக இருக்கும் வீரர்கள்..

விஞ்ஞானம் வளர்ந்தது

வீர விளையாட்டுக்கள் முறைப்படுத்தப்பட்டன.

விதி முறைகள் வகுக்கப்பட்டன.

ஸ்தாபிதப்படுத்தப்பட்டன.

விதி மீறல்கள் சுலபமாகின.

சூதாட்டத்தின் சாயைப் படிந்தது.

ஐந்தறிவுக் காளைக்குக் கபடு, சூது கற்பித்தது ஆறறிவு.

காளைக்கும் ஊக்க மருந்து ஏற்றுமளவுக்கு எண்ணங்கள் மலிந்தன.

இயல்பாய் இருப்பதை ஸ்தாபிதப் படுத்தும்போது ஏற்படும் அனைத்து எதிர்மறை வழிகளும் அரங்கேறின.

ஆலம்பாடி, புளிகுளம், உம்பளஞ்சேரி, பருகூர், மலைமாடு, காங்கேயம்…

இப்படியான, காளைகளில் பட்டியலில் ஆலம்பாடிக் காளைகள் அருகிவிட்டன.

மலைமாடுகள் மலையேறிவிட்டன.

காங்கேயம் காளைகள் காணாமல் போனபடி உள்ளன.

வண்ணங்களும், வடிவங்களும், நோக்கங்களும், பார்வைகளும், முறைகளும்… மாறிவிட்டன.

காளைகளுக்கும், வீரர்களுக்கும், குருதிச் சோதனை செய்வது காலத்தின் கட்டாயமாகிவிட்டது.

விதி முறைகளில் பல்வேறு புதுமைகள் புகுந்தாலும்,

‘வீர விளையாட்டு…!’ என்ற அடிப்படை மட்டும் என்றென்றும் மாறாதல்லவா…!

துரைராமன் வலுவான, கபடம் நிறைந்த, மிருகத்தனம் கூடிய முரட்டு மாடாக கலியன் முன் நின்றான்.

கலியனை முறைத்தான்.

கலியன் அமைதியாய்ச் சூழலைக் கணித்தான்.

வீரம் (bravery, courage, valour).

துணிவான ஒரு உணர்வு.

சந்திக்கும் எவ்வொரு சவாலையும் நேரடியாய்ச் சந்திக்கும் உறுதி.

வலி, ஆபத்து, எதிர்பாரா நிகழ்வுகள், எதிர்ப்பு……….

பலவற்றையும் துணிவுடன் கடந்து வெற்றி காணும் விழைவு.

சரியெனப் பட்டதை யார்த் தடுத்தாலும் சிரம் தாழ்த்தாதுச் செய்து முடிப்பது.

முறையாக முழுமையாகப் பயிற்சி பெற்ற சுத்த வீரன் அவசரப்படுவதில்லை.

எளிதில் உணர்ச்சி வசப்படுவதில்லை.

நிதானம்தான் வீரனின் வெற்றிக்கு மூலாதாரம்.

எதிராளியின் அனைத்துக் கூறுகளையும் ஆராய்ந்தறிந்து, உறுதி செய்து கொண்ட பின்னர் முறையாக அணுகுவதே சுந்த வீரனின் பண்பு.

தேவை ஏற்பட்டால், காளையின் போக்குத் தெரிந்து பின்வாங்கக்கூடத் தயங்க மாட்டான் சுத்த வீரன்.

வீரன் புறமுதுகு காட்டி ஓடுவதைக் கண்டதும், நுட்பமான காளைகள் சுதாரிக்கும்.

அந்த வகைக் காளைகளை அடக்கத்தான் வீரன் மிகவும் சிரமப்படவேண்டியிருக்கும்.

புறமுதுகிட்டு ஓடுபவனை அலட்சியப்படுத்தும் காளைகள் சுலபமாக அடக்கப்பட்டுவிடும்.

சுத்த வீரன்

“ப்ச்…!”

உதடு கோணி ஒலியெழுப்பி அலட்சியப் படுத்துவதில்லை.

“பட்… பட்…!”

தோள் தட்டி ஆரவாரிப்பதில்லை.

‘அடக்கறேன் பார்…!’

ஆங்காரமாய்ப் பீற்றிக்கொள்வதில்லை.

‘இப்பப் பாரு…!’

முண்டா தடவிக் கொக்கரிப்பதில்லை.

போகிற போக்கில் ஜெயித்துவிட்டு, அமைதியாகச் சென்றுவிடுவான்.

துரைராமன் தொடர்ந்து முறைத்தான்.

குந்தலாம்பாள் சமையல்கட்டில்தான் இருந்தாள்.

இருப்பினும், அவள் கண்களும், காதுகளும், மனதும் போர்க்களத்தில்தான் இருந்தன.

போரின் முடிவு அவளுக்குத் தெரிந்ததுதான்.

என்றாலும், போரின் போரின் போக்கையும் ஜாடையாய் கவனித்தாள்.

“சின்னய்யா…!”

துரையின், முகம் பாராமல், அழைத்தான் கலியன்.

“… … … … … … … … …”

பதில் ஏதுமில்லை.

“என்னண்ட ஏதோ பேசணும்னு விருப்பப்பட்டீங்களாம்…!”

இழுத்தாற்போல் கேட்டான் கலியன்.

“… … … … … … … … …”

அமைதியாய் அலட்சியம் காட்டினான் துரை.

“அப்ப நான் போவட்டுங்களா சின்னய்யா…?”

இப்போதும் துரையின் முகத்தையோக் கண்களையோப் பார்க்கவில்லை கலியன்.

“… … … … … … … … …”

இதற்கும் பதில் இல்லை துரையிடம்.

“அம்மாவை வரச்சொல்லுங்க சின்னய்ய…! சொல்லிக்கிட்டுக் கிளம்புறேன்…!”

சுத்த வீரன் நாடி பிடித்துப் பார்க்கிறான்.

இதற்கும் மௌனம்தான் பதில் என்றால்……..

வீரன் தோற்பது உறுதி.

காளை ஜெயித்துவிடும்.

சுத்த வீரன் தோற்றதாய் வரலாறில்லை.

“உண்ட வீட்டுக்கு இரண்டகம் நினைக்கற துரோகி…!”

ஆத்திரமாய்க் கத்தினான் துரைராமன்.

‘கோபம்’ – பேசுகிறபோது;

‘அறிவு’ – முக்காடு போட்டுக் கொள்கிறது…!’

காளை, அலட்டல் இல்லாத வீரனை அலட்சியப்படுத்துகிறது.

குனித்த தலையைப் பார்த்துக் குறைத்து மதிப்பிடுகிறது.

புற முதுகு காட்டுகிறானென்றுக் புஸ்’ஸெனச் சீறுகிறது.

கொம்பை சிலுப்புகிறது.

துடிக்கிறது.

துள்ளுகிறது.

‘துள்ளின மாடு பொதி சுமக்கும்.’

இனி வீரன் ஜெயிப்பது உறுதி.

துரைராமனின் கத்தலுக்கு கிஞ்சித்தும் வருத்தமோ, ஆத்திரமோப் படவில்லை கலியன்.

மௌனமாக நின்றான்.

“ஊமை மாதிரி நின்னா என்ன அர்த்தம்…?”

துரைராமன் மீண்டும் உறுமினான்.

“சின்னய்யா, என் முடிவுல எதுவும் மாத்தமில்லீங்க…! நீங்க தூதுவிட்ட ஆசாமிங்கக்கிட்டேயே நான் உறுதியாச் சொல்லிட்டேனுங்களே…!”

“ஓ! அப்படிங்களா…? துரையின் குரலில் எகத்தாளம் இருந்தது.

“… … … … … … … … …”

உன் முடிவுல எதும் மாத்தமில்லே…! அப்படித்தானே…?’ கலியனைச் சீண்டிப் பார்த்தான்.

“ஆமாங்க…!”

“கலியா, எங்கப்பா மாதிரி என்னை நினைக்காதே, எனக்குச் சுப்ரீம் கோர்டு வரைக்கும் ஆளு இருக்கு. உன்னைக் கோர்ட்டுக்கு இழுத்து நார அடிச்சிருவேன். என்னைப் பத்திச் சாதாரணமா நினைக்காதே சொல்லிட்டேன்…!” உணர்ச்சிவசப்பட்டுக் கத்தினான் துரை.

“சரிங்க…! நினைக்கலிங்க…!”

“நய்யாண்டி பண்றியா நீ…?”

“… … … … … … … … …”

“எங்கப்பா அப்படி என்னடா எழுதிக் கொடுத்துட்டாரு உன்கிட்டே…?”

“எனக்கு எளுதப் படிக்கத் தெரியாதுங்க…!”

“எழுதப் படிக்கத் தெரியாத உனக்கே இவ்ளோ இருந்தா, எனக்கு எவ்ளோ இருக்கும்… ம்…!”

“… … … … … … … … …”

உணர்ச்சி வசப்பட்டுப் பேசும்போது எதிர்த் தரப்புக் காட்டும் மௌனம் மிகக் கொடுமையானது.

கோபத்தையும், ஆத்திரத்தையும் எய்தவன் மீதே திரும்பிவிடும் யுக்தியை லாகவமாய்ப் பிரயோகித்தான் கலியன்.

கலியன் மாதய்யாவால் பயிற்றுவிக்கப் பட்டவன். குந்தலாம்பாளால் மெருகேறுபவன்.

கலியனின் மௌனத்தில் பணிவு இல்லை.

அலட்சியப்படுத்துகிற மௌனம் அது.

ஆத்திரத்தைத் தூண்டும் மௌனம் அது.

எறிகிற கொள்ளியில் எண்ணெய் ஊற்றியதைப் போல துரைராமனின் ஆத்திரத்தை குபீரென்று பற்ற வைத்தது அந்த மௌனம்.

“நீ ரொம்பத்தான் தெனாவெட்டா இருக்கே, உன்னை எப்படி கவனிக்கணுமோ அப்படி கவனிக்கறேன். இனிமே என் முகத்துல முழிக்காதே . நீ போ…!”

கோபமாகக் கத்தினான். துண்டை உதறித் தோளில் போட்டான். எழுந்து உள்ளே சென்றுவிட்டான் துரைராமன்.

புலி பதுங்குவது, குறி பார்த்துத் தாக்க, எலி பதுங்குவது தப்பிக்க.

துரைராமன் புலி போலப் பதுங்கவில்லை..

“சின்னய்யா கூட பேசிட்டியா கலியா…?” கேட்டுக் கொண்டே வந்தாள் குந்தலாம்பாள்.

“பேசிட்டேன். நான் போட்டுங்களா?”

“சரி போ…! நாளைக்கு பொங்கலும் அதுவுமா இதுபோல லேட்டா வராதே. சீக்கிரமாக் கிளம்பி வந்து…!”

முடிப்பதற்குள் கலியன் குறுக்கே பேசினான்.

“நாளைக்கும் என்னால வரமுடியாதும்மா. நாளை மறுநாளும் நான் வரமாட்டேன்.”

கலியன் இப்படி “பட்… படார்…” என்று, வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டாகச் சொன்னதைக் கேட்டக் குந்தலாம்பாள், தனக்குப் பின்புறம் துரைராமன் நிற்கிறான் என்பதை, திரும்பிப் பாராமலேத் தெரிந்துகொண்டாள்.

“… … … … … … … … …”

“மாட்டுப்பொங்க’ அன்னிக்கு காளிமுத்துவை அனுப்பறேன். மந்தைக்கரைக்கு வீரன் காளைய கொண்டு போவான்…!”

“கலியா, என்ன பேச்சு பேசறே நீ?”

“சொன்னா வருத்தப்படாதீங்க. அடுத்த போகத்துல எப்பவும் போல அளக்க முடியாதுங்க. கொஞ்சம் குறைவாத்தான் அளப்பேன். இப்பவேச் சொல்லிட்டேன்…!”

“நீ…! மனசாட்சியோடத்தான் பேசறியா கலியா? ம்…!”

“மனசாட்சி இருக்கறதுனாலத்தான் இப்படியெல்லாம் பேச வேண்டியிருக்கும்மா…!”

கலியனின் வலது கை நெஞ்சுக்கு நேராய்த் தொங்கிய தாயத்தைப் பிடித்துக்கொண்டிருந்தது.

“கலியன் பேசினதை கேட்டியோன்னோ துரை…?”

பின்னால் திரும்பி துரைராமனிடம் கேட்டாள் குந்தலாம்பாள்.

“கேக்காம என்ன…?”

“எனக்கு கலியன் கிட்டே இருந்த நம்பிக்கை போயிடுத்துத் துரை…!”

“உனக்குச் சமீபமாத்தான் அவனோட சுயரூபம் தெரிஞ்சிருக்கு. நான் எப்பவோத் தெரிஞ்சினுட்டேன்;

அவனுக்குப் பேச்சுச் சுத்தமோ, விசுவாசமோக் கிடையாதுன்னு எனக்கு முன்னமேத் தெரியும்;

நீயும் அப்பாவும்தான் ‘கலியன்… கலியன்…’னு அவனை உச்சிக் கொம்புல ஒக்கார வெச்சேள்…!”

துரை எரிச்சலோடு குற்றம் சாட்டினான்.

“அம்மா…! நான் அப்படி என்னம்மா பேச்சு மாத்திப் பேசிப்புட்டேன்…!”

கலியன் வருந்தும் குரலில் பேசினான்.

“காளவாக்கு அறுத்து வெச்சப் பச்சைக் கல்லுங்கக் கரைஞ்சி, கரடும், கரளையுமா ஆகிப் போச்சு;

கோவிலு சம்பாக் காணி மேடும் பள்ளமுமா தரிசாக் கெடக்கு;

ஏகமா கை நட்டம் வேற எனக்கு.”

“நிறுத்து கலியா…! அய்யா இருந்தவரை கூழக்கும்பிடு போட்டே. இப்போ கை நட்டம் கால் நட்டம்னு பேசுறது கொஞ்சமும் சரியில்லே. ஞாயமாப் பேசு…!”

“அம்மா…!”

தாயத்தைப் பிடித்தபடி ஏதோ சொல்ல வாயெடுத்தான் கலியன்

எதுவும் பேச விடவிடாமல் அவசரமாகத் தடுத்தாள் குந்தலாம்பாள்.

“கலியா, நாளைக்கு வான்னு சொன்னேன்;

வரமாட்டேன்னு முகத்துல அடிக்கறமாதிரி மறுத்துட்டே நீ;

நீ வரவே வேண்டாம்;

எனக்கு எந்த ஒத்தாசையும் செய்யவும் வேண்டாம்.”

“அம்மா…!”

பரபரத்த கலியன் முன், உள்ளங்கையை நிமிர்த்திக் காட்டி அமர்த்தினாள்.

கலியன் வாய் மூடினான்.

“மாட்டுப் பொங்கல் அன்னிக்கு காளிமுத்துவையும் அனுப்ப வேண்டாம்;

ஒத்தை வண்டி-மாடு மட்டும் தானே இருக்கு, நான் பாத்துக்கறேன் வீரனை..!”

“… … … … … … … … …”

கலியன் அமைதியாகப் புறப்பட்டான்.

“கலியா, நாளைக்கு பொங்கப் பண்டிகை முடிஞ்ச பிறகு உனக்கு நேரம் ஒழிஞ்சா, வா. சில பலதைப் பேசித் தீத்துக்கலாம். வரமுடியாதுன்னா சொல்லிடு. நீ சொல்ற இடத்துக்கு நானும் துரையும் வரோம்…!”

“என்னம்மா இப்படியெல்லாம் பேசறீங்க…! இந்த வீட்டு உப்பு தின்னு வளந்தவன்மா நான்…!”

கலியன் சொல்லவருவதைக் கேட்க குந்தலாம்பாள் அங்கு இல்லை.

அவளைத் தொடர்ந்து துரைராமனும் உள்ளே சென்று விட்டான்.

கலியன் கழுத்தில் தொங்கிய தாயத்தைத் தொட்டுக் கண்களில் ஒற்றிக்கொண்டான்.

‘அய்யா, பெத்த மகனா என்னை நேசிக்கற அம்மாவை, இப்படியெல்லாம் மரியாதைக்குறைவா பேசவேண்டியிருக்கே…!”

தாயத்துடன் பேசிக்கொண்டே திரும்பிச் சென்றான் அவன்.

கலியன் பேசிவிட்டுத் திரும்பிப் போனதிலிருந்து புயலுக்குப் பின்னே அமைதி போல வீடு நிசப்தமாக இருந்தது.

ராத்திரி எட்டு மணிக்குள் பலகாரம் சாப்பிட்டாகி விட்டது.

கிட்டாவய்யரின் யோக்கியதை வெட்ட வெளிச்சமாகத் தெரிந்துவிட்டதால், துரைராமன் அங்கு செல்வதில்லை.

வீட்டோடுதான் முடங்கிக் கிடந்தான்.

நாள் முழுவதும், சொப்பு வைத்து விளையாடியும்;

தரையில் மாக்கல்லால் கோலம் போட்டுப் பொழுது போக்கியும்;

அடித்து குவித்த ஆற்று மணலில் கிளிக்கூண்டு கட்டியும், கோட்டை நிர்மாணித்தும;

தென்னங்குரும்பைகளில் ஈர்க்கு செருகி தேர் இழுத்தும்;

இரு பக்கமும் அவளேயாக உட்காந்துப் பல்லாங்குழியும் பரமபதமும் விளையாடியும்;

களைத்துப் போனாள் ரஞ்சனி.

ஏழு மணிக்கெல்லாம் பசியாறிவிட்டுத் தூங்கிவிட்டாள்.

குந்தலாம்பாளும், ரஞ்சனியும் சமையல்கட்டில் இருந்தார்கள்.

கலியனின் நடவடிக்கைகளால் மனசு வெகுவாக பாதித்த துரை, ஊஞ்சலில் உட்காந்து கொண்டு ஏதோ யோசித்தபடி இருந்தான்.

“ஏண்டா தொரை, நாளைக்குக் கலியன் வந்தா என்ன பேசறது…?”

“அம்மா…! எல்லாம் உன்னாலத்தான் வந்தது;

அப்பா காலமான உடனே எல்லாத்தையும் திரும்பி வாங்கியிருக்கணும்;

இப்போ அவனுக்குத் துளுத்துப் போச்சு.”

“அவனை எப்படியாவது சமாளிச்சித்தானே ஆகணும் துரை…!”

“அவனைச் சும்மா விடக்கூடாதும்மா. ஒழிச்சிக் கட்டினாத்தான் என் மனசு ஆறும்… அவனை…”

கருவினான் துரை.

“ஏந்நா… அவன் இவ்வளவு துணிச்சலாப் பேசறான்’னா அவனுக்கு ஏதோ வலுவான பின்பலம் இருக்குன்னு புரிஞ்சிக்கோங்க. நீங்க இப்படி அவசரமும் ஆத்திரமும் பட்டா முடிவு அவனுக்குச் சாதகமாத்தான் அமையும்…!”

வலுவில் வந்து, சண்டைக்கு அழைத்தான் சுக்ரீவன்.

வாலி ‘விருட்’ எனச் சண்டைக்குக் கிளம்பினான்.

மாவீரன் வாலிக்கு, அவன் பத்தினி ‘தாரை’ சொன்ன எச்சரிக்கைபோல இருந்தது; மோகனா துரைக்குச் சொன்னது.

“நீ இதுல தலையிடாதே. உனக்கு இந்த ஊர் விவகாரமெல்லாம் புரியாது. வாயை மூடிண்டு சும்மா இரு.”

மனைவியை வாயடைத்தான்.

‘ஆமாம்…! இவன் ரொம்பத்தான் ஊர் விவகாரம் எல்லாம் தெரிஞ்சவன்…!’

மனதுக்குள் நினைத்துக் கொண்டாள் குந்தலாம்பாள்.

“அம்மா…! கோர்ட்டு கேசுன்னு இழுத்து அவனைச் சந்தி-சிரிக்க அடிச்சாத்தான் வழிக்கு வருவான்…!”

பலத்த குரலில் கத்தினான் துரை.

“… … … … … … … … …”

“அம்மா, கலியன் அடிக்கடி கிட்டாவய்யாகிட்டேப் போய் மணிக்கணக்காப் பேசறதாக் கேள்விப்பட்டேன்;

காளவாப் போட்டுத்தரேன்னு என்னை மோசம் பண்ணின அவர்தான் கலியனை ஏவி விட்டு இடைஞ்சல் பண்றாரோன்னு தோணறதும்மா…!”

குந்தலாம்பாள் இதற்கும் பதில் ஏதும் சொல்லவில்லை.

“அந்தத் துரோகி கிட்டாவய்யாவையும் சும்மா விடக் கூடாதும்மா…!”

கிட்டாவய்யரின் மேல் கடுமையான கோபத்தைக் காட்டிய துரைராமனைக் கை அமர்த்தினாள் குந்தலாம்பாள்.

“கிட்டாவை பழிவாங்ககறது அப்பறம் ஆகட்டும். கலியன் நாளைக்கு வந்தா எப்படிப் பேச்சுக் கொடுத்து சமாளிக்கறதுன்னு மொதல்ல சொல்லு…”

“அப்பா எதுவோ எழுதிக் கொடுத்திருக்கார். ஸ்ட்ராங் எவிடன்ஸ் கலியனண்ட இருக்கு. அதனாலத்தான் அவன் இவ்வளவு தெனாவெட்டாப் பேசறான்…!”

கதை சொல்லுகிற போது, சின்னக் குழந்தைகள் ஆர்வத்தை அடக்க மாட்டாமல்,

“கடைசியா என்ன ஆச்சு…?”

ஆச்சர்யத்தோடும் அப்பாவித் தனமாகவும் கேட்குமல்லவா…;

அதுபோல முகத்தைச் சீரியஸாய் வைத்துக்கொண்டு.

“இதுக்கு என்னதான் முடிவு…?”

துரையைக் கேட்டாள் குந்தலாம்பாள்.

கிராமத்துப் பிரச்சனைகளில் முடிவெடுத்தல், ஒரு தனிக் கலை.

விஷயம் பஞ்சாயத்துக்கு வந்துவிடாமல் முடிப்பது புத்திசாலித்தனம்.

ஊர் ஜனங்களுக்கு தன் சாதி, மதம், இனம் எல்லாமே இரண்டாம் பட்சம்தான்.

ஊரில் எவருக்கேனும் பிரச்சனை, பஞ்சாயத்து என்றால் அப்படி ஒரு அசாத்தியமான ஈடுபாடு வந்துவிடும் அவர்களுக்கு.

சுவாரசியமாகப் பொழுது போகும் அவர்களுக்கு.

இரண்டு இடங்களிலும் தட்டி விடுவார்கள்.

விளைவுகளைக் கண்டு ரசித்துப் பேசிச் சிரித்துப் மகிழ்வார்கள்.

தடியெடுத்தவன் எல்லாம் தண்டல் செய்வான்கள்.

நடைமுறைக்குச் சாத்தியமே இல்லாத யோசனைகளை அவிழ்த்து விடுவார்கள்.

கோபத்தைக் கிளப்பிவிடுவார்கள்.

தன்மானத்தைத் தட்டி எழுப்புவார்கள்.

பதில் சொல்லாமல் அமைதி காத்தால் அவ்வளவுதான்.

‘பயந்தாரி’, ‘கோழை’, ‘முதுகெலும்பில்லாதவன்’, ‘சோப்ளாங்கி’

இப்படியெல்லாம் முத்திரை பதிப்பார்கள்.

பேசிவிட்டாலோ,

‘என்ன தெனாவெட்டு பாரு…!’

தூற்றுவார்கள்.

“ஏகப்பட்டது இருக்கில்ல, நாலு ஏக்கரை அவனுக்கு விட்டுக் கொடுத்தாத்தான் என்ன…?”

ஒன்றுக்கும் உதவாத ஒரு சோம்பேறி பஞ்சாயத்துப் பேசுவான்.

“வயல்ல கிடந்து அல்லாடறது ஒருத்தன். அனுபவிக்கறது ஒருத்தனாக்கும்…!”

சமூக நீதியை அள்ளி விடுவான் ஒருவன்.

“ஊர் புறம்போக்கு பூரா ஆக்ரமிச்சி வெச்சிருக்கற இவன் பேசிறாம் பாரு சமூக நீதி…?”

அவனைப் பற்றிப் பின்புறம்தான் பேசுவார்கள்.

சபையில் அவனை ஆதரித்து ஊக்கப் படுத்துவார்கள்.

எது நடந்தாலும் மேக்கரித்துப் பேசி பஞ்சாயத்தார் கண்களில் விரல் விட்டு ஆட்டுவோரும் கிராமங்களில் உண்டு.

ஊர் பொதுப் பஞ்சாயத்துகளில் மேக்கரித்துப் பேசிச் சாதிக்க யோக்யதை வேண்டும்.

ஊர் நன்மைக்காக உழைத்திருக்க வேண்டும்;

மனோ பலம் (ஆன்ம பலம்) அவசியம்;

பண பலம், ஆள் பலம், அரசியல் பலம் இவையெல்லாம் பக்க பலமாய் மட்டுமே இருக்க முடியும்.

எல்லா பலங்களிலும் அனுபவ பலமே அற்புதங்களை நிகழ்த்தும்.

பட்டறிவுதான் பலன் தரும்.

அனுபவத்திற்கு, நிறைய விலை கொடுத்திருக்க வேண்டும்.

நிறைய இழந்திருக்க வேண்டும்.

துரைராமன் சென்னையே கதி என்று கிடந்தவன்.

அந்தனூர்பற்றி அறிவு குறைவு அவனுக்கு.

கிட்டாவய்யாவையே மலைபோல நம்பி ஏமாந்தவன்.

இப்போது கிட்டா இருப்பது எதிரணியில்.

இடியாப்பச் சிக்கலாய் சுற்றிக்கொண்டது பிரச்சனை.

பிரிக்க முடியாமல் ஒட்டிக்கொண்டுக் குவியலாய் அவன் முன் கிடக்கும் சிக்கல்களை எப்படி அணுகுவது என்பதைப் பற்றி, சிறிதளவுக் கூட ஞானம் இல்லாத துரைக்கு விழி பிதுங்கியது.

எதுவும் சொல்லத் தோன்றவில்லை.

“மேற்கொண்டு என்ன செய்யணும் துரை; எப்படிச் சமாளிக்கணும்…?”

அவனைப் பார்த்துக் கேட்கிறாள் அம்மா.

துரை இப்போதுக் குடும்பத்தலைவன்.

முடிவெடுக்க வேண்டியது அவன் கடமை.

சுயமரியாதை இடித்தது துரைக்கு.

ஏதாவது சொல்லித்தான் ஆக வேண்டும்.

அனுபவத்தில் பழுத்த குந்தலாம்பாள் எதை எதிர் பார்த்தாளோ அதைச் சொன்னான் துரை.

“நாளைக்கு வான்னு சொன்னது நீதானேம்மா. நீயே முடிவு சொல்லு நான் கேட்டுக்கறேன்…!”

அவள் கை விரல்களை எடுத்து அவள் கண்களில் குத்தும் செயல்.

கீழ்த்தரமான தப்பித்தல் குணம்.

கையாலாகாதவனின் மொக்கையான ஆயுதம்.

‘தாய் அறியாத சூல் உண்டா…?’

குந்தலாம்பாளுக்குத் துரைராமனின் இயலாமையும், பயமும், குழப்பமும், கையாலாகாத்தனமும் தெரியாதா என்ன?

இருந்தாலும் பெற்ற மகனை மருமகள் முன் விட்டுத்தர முடியாதல்லவா…!’

தொண்டையைச் செருமிக்கொண்டாள் குந்தலா. ஆழ்ந்து யோசிப்பதாகக் காட்டிக்கொண்டாள்.

ஒரு முடிவுக்கு வந்தவள் மாதிரிப் பேசினாள்.

“கலியன் பிரச்சரனையை ரொம்ப ஜாக்கிரதையா அணுகணும் துரை;

உங்க அப்பா புத்திசாலிதான். எதுலயும் சிக்கக் கூடியவரில்லை அவர்;

‘ஸ்ட்ராங்கா’ எதுவும் எழுதிக் கொடுத்திருப்பார்னு எனக்குத் தோணலை;

பொருத்திருந்து பார்ப்போம்… ஆண்டவன் விட்ட வழி…!”

நாடகத்தில் தன்னுடைய பாத்திரத்தை நேர்த்தியாகச் செய்து முடித்தாள் குந்தலாம்பாள்.

‘பெற்ற மகனிடமே நடிக்கவேண்டியிருக்கிறதே…!’

மனசு வியாகூலப்பட்டது.

‘ஊர் பொது நன்மைக்காகத்தானே…!”

சமாதானமும் செய்துகொண்டாள்.

துரைராமன் எதையோ மனதில் குழப்பிக் கொள்வதுத் தெளிவாக முகத்தில் பிரதிபலித்தது.

“துரை…! வக்கீல் யாரையாவது கலந்துப்போமானு தோணறது எனக்கு…!’’

நூல் விட்டுப் பார்த்தாள் குந்தலாம்பாள்.

உனக்கு இப்பத்தான் அந்த ஐடியா தோணறது. எனக்கு ஏற்கெனவே தோணியாச்சு. ஒரு வக்கீலையும் பாத்துட்டேன்…!”

“அப்படியா…! என்ன சொல்றார் வக்கீல்…?”

“காலத்துல குத்தகை நெல்லு சரியா அளந்து, நாம அவன் அளந்ததுக்கு கை ரசீது எழுதிக் கொடுத்திருந்தா சட்டப்படி காலி பண்ண முடியாதுன்னுட்டார் வக்கீல்.”

“அப்பறம்…?”

“அப்பறமென்ன… அவன் பேர்ல பொய்ப் பிராது ஜோடிச்சி கேஸ் ஃபைல் பண்ணித்தான் வெகேட் பண்ணியாகணும்.”

“பொய் கேஸ் ஜோடிக்கறது தப்பில்லையோ தொரை…?”

“முள்ளை முள்ளாலதான் எடுக்கணும்மா. கலியன் விஷயத்துல தர்ம ஞாயம் பார்த்தா, தலைல துண்டு போட்டுக்க வேண்டியதுதான்…!”

“பொய் கேஸ் ஜோடிக்கறது அப்படி ஒண்ணும் சுலபமான விஷயமில்லே துரை. தெருவுல நமக்குச் சாதகமா ஒருத்தர் கூடக் கிடையாது;

உபகாரம் பண்ண இல்லேன்னாலும அபகாரம் பண்ண, குழீல பிடிச்சித் தள்ளத்தான் நிறைய ஆசாமிகள் இருக்கா நமக்கு. அதையெல்லாம் யோசிக்கணும்…!”

சற்றேப் பேச்சை நிறுத்திவிட்டு, துரையின் மனதில் நிகழும் ரசாயன மாற்றத்தை உற்றுக் கவனித்தாள்.

துரையின் மனக்குழப்பம் முகத்தில் பளிச்சிட்டது.

குந்தலாம்பாளே தொடர்ந்தாள்.

“தொரை, காசு பணம் கனிசமாக் கொடுத்து நாமப் பொய்ச் சாட்சிக்கு ஜோடிச்சிக் கேஸாடினவா இந்த ஊர்ல உண்டு. கை நீட்டி காசு வாங்கினவன், சாட்சி சொல்ல கோர்டுப் பக்கம் வராம கம்பி நீட்டிட்டான்;

கேஸாடின சேஷய்யா, கருப்புப் பிச்சை, ஞானசேகரம் பிள்ளை யாருமே கேஸ்ல ஜெயிக்கலை;

விட்டுக் கொடுத்துத்தான் விலகியிருக்கா…;

நல்லது-கெட்டது எல்லாத்தையும் ஞாபகம் வெச்சிண்டு காரியத்துல எறங்கணும்;

தத்துப்பித்துன்னு ஆழம் தெரியாம காலை விட்டுட்டு அவஸ்தைப் படக்கூடாது…!”

அம்மா சொல்கிற அனைத்து யதார்த்தங்களையும் உள் வாங்கிய துரைக்குத் தலையைச் சுற்றியது.

நிதானமில்லாமல் தவித்தான்.

‘சிறிது நேரம் தவிக்கட்டும்…!’

என விட்டாள் குந்தலாம்பாள்.

“எனக்கு வேறு ஒரு யோசனை தோணறது தொரை. சொல்லட்டுமா…?”

பிரச்சனையைத் தீர்க்க வழி தெரியாமல், தவிப்பான நிலையில், யார், எதைச் சொன்னாலும் ஆர்வமுடன் கேட்பார்களல்லவா…?

‘எத்தைத் தின்றால் பித்தம் தெளியும்…!’ என்ற நிலையில் இருந்தான் துரைராமன்.

“சொல்லும்மா…?”

விழிவிரித்து உன்னிப்பாய், ஆர்வமாகக் காது கொடுத்தான்.

“கொஞ்சம் ஆறப்போட்டு அப்பறமாப் பேசினா என்ன?”

‘அம்மா ஏதோ புதுமையான யோசனை சொல்லப் போகிறாள்…!’

எதிர்பார்த்து ஆவலாய்க் காத்திருந்தவனுக்கு இந்த யோசனைப் பயித்தியக்காரத்தனமாகப் பட்டது.

“அம்மா…! என்ன பேசறே நீ…! நீ சொல்றது சுத்தப் பயித்தியக்காரத்தனம்…!”

“இதுல என்ன பயித்தியக்காரத்தனம் இருக்கு. ‘எடுத்தேன் கவுத்தேன்’ னு ஒரு காரியம் செய்யப்படாது துரை…!”

“கலியன் விஷயத்துல உன் யோசனை தப்பும்மா. சூட்டோட சூடா முடிக்காம வளரவிட்டோம்னா, அது ‘ஆறின கஞ்சி பழங்கஞ்சி’ன்னு ஆயிடும். அவன் இன்னும் தன் எவிடன்ஸை ஸ்ட்ராங் பண்ணிக்க நாமே இடம் கொடுத்துட்டதா ஆயிடும்.”

“இந்தக் கோணத்துல நான் யோசிக்கலை. நீ சொல்றதும் ஒரு விதத்துல சரிதான்.”

தன் கருத்துக்களை மற்றவர் ஆமோதிக்கும்போது, கருத்துச் சொன்னவருக்குத் தன்னம்பிக்கை வருகிறது.

தன்னம்பிக்கையோடுத் தன் முடிவைச் சொன்னான். துரைராமன்.

“அம்மா… சாட்சிக்காரன் கால்ல விழறதைவிட சண்டைக்காரன் கால்ல விழறது புத்திசாலித்தனம் சொல்லுவாளே. அதுபோல நாமே கலியன் கிட்டே இத்தனை காணி உனக்கு விட்டுத்தரோம்னு ஒரு டீல் பேசி காதும் காதும வெச்சாப்ல முடிச்சிடலாமேம்மா…!”.

‘மகன் வாயிலிருந்து எந்த முடிவு வந்தே தீருமென்று…!’

மாதய்யா இருந்தவரை நம்பினாரோ;

எது வரவேண்டும் என்று, இப்போது குந்தலாம்பாள் எதிர்பார்த்தாளோ…

அது துரைராமன் வாயிலிருந்து வந்துவிட்டது.

“… … … … … … … … …”

குந்தலாம்பாள் இதற்கு பதிலேதும் சொல்லாமல் அமைதியாக அமர்ந்திருந்தாள்.

சில யோசனைளை உடனே ஒத்துக்கொண்டால் மதிப்பிருப்பதில்லை.

ஒத்தி ஒத்திப் போடும்போது, யோசனையின் கனம் அதிகரிக்கிறது;

ஒரு கட்டத்தில் அதுதான் சரியான யோசனை என்கிற தீவிரம் வருகிறது.

“தொரை…!”

“சொல்லும்மா…!”

“நீ சொல்றது எனக்குச் சரியாத்தான் படறது;

வக்கீலையும் நன்னாக் கலந்துக்கோ தொரை;

அவாளுக்குத்தான் சட்ட நுணுக்கம் தெரியும்;

நல்லது-கெட்டது எடுத்துச் சொல்லுவா…!”

“எத்தனை வக்கீலைப் பார்த்தாலும் இதையேத்தான் சொல்லுவாம்மா.

ஒக்காந்து திங்கற நமக்குச் சாதகமா சட்டங்கள் கிடையாது. உழுது உழைக்கறவனுக்குத்தான் சட்டமும் சாதகம் பண்ணும்…!”

“அதுதானே தர்மம். அதுதானே சமூக நீதி…!”

என்றாள் குந்தலாம்பாள்.

அவள் குரலில் கம்பீரம் இருந்தது.

குந்தலாம்பாள் சொன்னது, துரையின் யோசனைக்கு மேலும் வலு சேர்த்தது.

“கோர்ட்டு கேசுன்னு போனா பத்துல ஆறு (6/10) பங்கு நிலம் அவனுக்கு விட்டுத் தரச்சொல்லித் தீர்ப்பாகும்;

நாமா பேசித் தீத்துனுட்டா நமக்கு லாபம்தான்;

ஆனா ஒண்ணு, அவன் இதுக்கு ஒத்துக்கணும்;

கிட்டாவய்யா மாதிரி யாராவது கலியனைக் கலைக்காம இருக்கணும்…!”

முடித்தான் துரை.

பெற்ற தந்தையின் கடைசீ ஆசையை பிரேதத்தின் முன்னால் எடுத்துச் சொல்லிக் கதறியபோது, அலட்சியம் செய்தவன்;

அப்பாவின் தலைத்திவசத்தின்போது நயா பைசா செலவுக்குத் தராமல் இருந்தவன்;

சாகும் வரை அப்பாவிடம் முகம் கொடுத்துப் பேசாதவன்;

இப்போது அப்பா விட்டுப்போன சொத்துக்களின் மூலம் கிடைக்கும் வருமானத்திற்காக அலைகிறான்.

இப்படிப்பட்டச் சுயநலக்காரனை பத்து மாதம் வயிற்றில் சுமந்த்தற்காக தன்னையே நொந்துகொண்டாள் குந்தலாம்பாள்.

அவனைநினைக்க நினைக்க வெறுப்பாக இருந்தது;

வெறுப்பை விட அருவருப்பாக உணர்ந்தாள் குந்தலாம்பாள்.

தான் லாபம் அடைய வேண்டும் என்று பொய்க் கேஸ் ஜோடிக்கத் துணிந்தத் துரைராமன் மேல் அசூயை வந்தது.

குமுறி வந்த எரிச்சலை வெளியில் காட்டிக் கொள்ளாமல் அடக்கிக் கொண்டாள்.

“ஈஸ்வரோ ரக்ஷது’

வாய்விட்டுச் சொன்னாள் குந்தலாம்பாள்.

“படுத்துத் தூங்கு துரை, விடிஞ்சா பொங்கல் பண்டிகை. நிறைய வேலை இருக்கு…”

கட்டிலில் சாய்ந்தாள் குந்தலாம்பாள்.

அத்தியாயம் – 26

சாயாதேவி சமேதராக சூரிய பகவான் பிம்பத்தை மனைப் பலகையிலோ, தரையிலோப் போட்டுச் செம்மண் இட்டு ஆவாகனம் செய்வார்கள்.

“தமிழர் திருநாள்…!”

உலகெங்ககும் விரவிப் பரவியுள்ளத் தமிழ் நெஞ்சங்களின் பொன்னான்.

நன்றியுணர்வு, தோழமை, களிப்பு, மகிழ்ச்சி…

அனைத்து நல்லுணர்வுகளும் நுண்ணுணர்வுகளும் எங்கெங்கும் வீசிப் பரவி நிறைக்கும் நன்னாள்.

அசந்து-மறந்த நேரம், பால் பொங்கி வழிந்து விட்டால், சுணங்குவார்கள் இல்லத்தரசிகள்.

அதே மகளிர் இந்த நன்னாளில் வலிந்து எரியூட்டிப் பாலைப் பொங்கி வழியவிட்டுச், சுற்றமும் நட்பும் சூழ மகிழ்வதும், அனைவரையும் மகிழ்விப்பதுமான ஒரே நந்நாள், இந்தத் தமிழர் திருநாள்.

மாக்கோலத்தால் அலங்கரித்தப் புதுப்பானையின் கழுத்தில் இஞ்சி, மஞ்சள் கொத்துக்களை ஆரமாய் அணிவித்து, இல்லத்தின் முகப்பில் கட்டப்பட்ட அலங்கார மரைப்பில் ஆனந்தமாய்க் கொண்டாடும் அற்புதப் பண்டிகை.

அனைத்து ஜீவராசிகளுக்கும் முதல் உணவு, பால்தானே.

பண்டிகையின் முதல் நிகழ்வாகப், புனிதமான அந்தப் பாலைப் பக்தியுடன் அலங்கரிக்கப்பட்டப் புதுப் பானையில் இட்டுக் காய்ச்சிப் பொங்கி வழியவிட்டு, அக்னிதேவனுக்கு ஆகுதியாக்கப்படுகிறது.

தைத்திங்கள், அக்னி தேவன் ஆனந்தப் பரவசம் அடையும் நாள்.

சந்தோஷமாய்த் தனக்குப் பால் வார்க்கும் மகளிர் முன்னே, அடுப்பிலிருந்து எழும்பி எழும்பித் ஆனந்த நர்த்தனம் புரிகிறான்…

தீ…!

தன் நாக்கை நாற்புறமும் சுழற்றி, எகிறி, உயர்ந்து, ஆவிரி ஆவிரியாகப் பறந்துப் பறந்துப் பானையிலிருந்துப் பொங்கி வழியும் பாலைச் சுவைத்து மகிழ்கிறான்.

‘பொங்கலோப் பொங்கல்…’

எங்கெங்கும் எகிறி ஒலிக்கிறது மகிழ்ச்சிக் கூவல்கள்.

தட்டுக்கள், தாளங்கள், வெண்கலப் பானை, உருளி…

பாத்திரங்களின் உள்ளும் புறமுமாய், கரண்டிகளால் தட்டி எழுப்பும் ஒலி பக்க வாத்தியமாய் ஒலிக்கிறது.

எகிறி எகிறி நாக்கை நீட்டிச் சப்புக் கொட்டிக் கொண்டு பால் ‘பொங்கலை’ ருசிக்கும் தீ நாக்குகளின் (அக்னிதேவனின்) ஆசீர்வாதத்தைப் பெறப் பெண்டிர் கைக் கூப்பி வணங்கி, நமஸ்கரித்துப் பிரார்த்தனைகள் செய்தல், தமிழினத்தின் தலையாய சாங்கியம் ஆயிற்றே.

முதன் முதலில் தோன்றிய வேதமான ‘ரிக்’ வேதமே அக்னியைத் போற்றித் தானேத் தொடங்குகிறது.

அக்னிமீடே புரோஹிதம்
யஜ்ஞஸ்ய தேவம் ரித்விஜம்
ஹோதாரம் ரத்னதாதமம்

கண்கண்ட தெய்வமான அக்னி பகவானை வணங்குகிறேன்.

அக்ன ஆயாஹி வீதயே
க்ருணானோ ஹவ்யதாதயே
நி ஹோதா ஸத்ஸி பர்ஹிஷி

அழகிய அங்கங்களை உடைய அக்னி தேவனே
இங்கே எழுந்தருள்வீராக. வேள்வியில் சமர்ப்பிக்கும் பொருட்களைப் ஏற்றுக் கொள்வீராக!

பானையில் பசும்பால் ஊற்றிப் பொங்கச் செய்து, வேள்வித் தீக்குச் சமர்ப்பித்து, அக்னி பகவானைத் திருப்தி செய்தாகி விட்டது.

அடுத்து, அக்னியின் மூலாதாரமான சூரிய தேவனுக்குப் நிவேதனம் தயாராகும்.

வெண்மைப் புரட்சியின் அடையாளமல்லவாப் ‘பால்’.

பால் பொங்கி வழியும்போது, பசுமைப் புரட்சியின் குறியீடான ‘பச்சரிசி’யைக் களைந்து, அதில் இடும் தமிழனின் தத்துவம் கண்டு உலகமே வியந்துப் போற்றுகிறது.

உயிரினங்களின் வாழ்வாதாரமான வெண்மை மற்றும் பசுமைப் புரட்சிகளின் இணைப்புப் பாலமாய் மிளிர்கிறதுப் பொங்கல் பண்டிகை.

கற்கண்டு, வெள்ளைச் சர்க்கரை, கரும்பு வெல்லம்… எனக் ,குடும்ப வழக்கப்படிக் கிண்டும் பொங்கல் மணம் காற்றில் கலந்து நறுமணம் பரப்பும்.

நெய், முந்திரி, திராட்சை, பாதாம், பிஸ்தா… என அவரவர் வசதிக்குத் தக்கபடிப் போட்டுக் கிண்டி இறக்கப்படும்.

சூரியன் நேரடியாகப் படும் முற்றத்தில்தான் பெரும்பாலும் சூரிய பூஜை செய்வது வழக்கம்.

சாயாதேவி சமேதராக சூரிய பகவான் பிம்பத்தை மனைப் பலகையிலோ, தரையிலோப் போட்டுச் செம்மண் இட்டு ஆவாகனம் செய்வார்கள்.

ஊர் உலகம் பூராவும் அன்புடன் அளித்த பொங்கலைச் சூரிய-பகவான் வயிறு புடைக்க உண்டு வழக்கம் போல் பிரபஞ்சத்தை ஆசீர்வதித்தான்.

உச்சிக்கு வந்துவிட்டான் சூரியன்.

கலியன் வந்து நின்றான்.

“… … … … … … … … …”

நேருக்கு நேர் கலியனைப் பார்த்தாலும் கண்டு கொள்ளாமல் அலட்சியப் படுத்தினான் துரை.

முகத்தைத் திருப்பிக்கொண்டான்.

கலியனை வெறுப்பேற்றினான்.

“… … … … … … … … …”

கலியன் எந்த எதிரிவினையும் காட்டாமல் நின்றான்.

‘ஊர் பொது நன்மைக்காக சில அவமானங்களைத் தாங்கவேண்டியிருக்கும் கலியா…!’;

ஊர் நன்மையை உத்தேசித்து, சொந்த சாகுபடி செய்துவந்த மாதய்யா, குத்தகைப் பத்திரம் ஒன்று தயார் செய்து, கலியன் கையில் கொடுத்த நாளில் சொன்னது;

‘பசுமரத்தாணிப் போல..’ பதிந்திருந்தது.

மாதய்யாவின் அடையாளமாய்க் கழுத்தில் தொங்கும் தாயத்தைத் தொட்டுக்கொண்டான்.

உணர்ச்சி வசப்படாமல் அவமானத்தை ஜீரணித்தான் கலியன்.

“விசுவாசம்னா வீசை என்ன விலை?’ னு கேக்கறக் காலமா இருக்கு…!”

உரத்து முணுமுணுத்தான் துரை.

துரைராமனின் குத்தல் பேச்சைக் காதில் வாங்கிக் கொண்டே வந்தாள் குந்தலாம்பாள்.

“கலியனா…! வா..!”

வாய் நிறைய அழைத்தாள்.

“பொங்க நல்லாப் போச்சா…?”

மனசு நிறைய விசாரித்தாள்.

“போச்சும்மா…!”

“அய்யா இருந்தாக்க, இந்நேரம் வீட்ல பண்டிகை தொடங்கியாவது இருக்குமா…?”

மாதய்யாவின் நினைவை முன்னிறுத்திப் பேச்சைத் தொடங்கினாள்.

“இப்பத்தான் கொடாப்புக் கொட்டாயில ஒக்காந்து, மூட்டம் கலைச்சி வாழைப்பழம் எடுப்பாங்க;

நான் வூடு வூடாக் கொண்டுகோய்க் கொடுத்துட்டு ஓடியாருவேன்;

அய்யா ரொம்பவேப் பெரும்போக்கும்மா…!”

நெஞ்சின் மேல் கிடந்தத், தாயத்தைத் தொட்டபடி நினைவுக் கூர்ந்தான் கலியன்.

“கடைசியா அய்யா இருந்து கொண்டாடினப் பொங்கப் பண்டிகை நெனப்பிருக்காக் கலியா…?”

“அதை மறக்கத்தான் முடியுமாம்மா…!” கலியனின் கண்கள் பனித்தன.

“… … … … … … … … …”

‘அம்மா ஏன் இப்படிக் கலியன்கிட்டே சம்பந்தாச் சம்பந்தமில்லாமப் பேசறா…?’

துரைராமனுக்குள் எழுந்தக் கேள்வியை, அவன் கண்கள் பிரதிபலித்தன.

“… … … … … … … … …”

‘அம்மாவுக்கு அனுபவம் ஜாஸ்தி. ஏதோக் காரணத்தோடதான் இப்படிப் பேசறா…!’

கண்களையும் காதுகளையும் விரியத் திறந்துகொண்டு வாயை அழுத்தமாய் மூடியபடி உரையாடல்களின் போக்கைக் கூர்ந்துக் கவனித்தான் துரை.

“ஏதோ விசயம் பேசணும்னு வரச் சொன்னீங்களேம்மா. அதுக்குத்தான் வந்தேன்…!”

இயந்திரகதியில், காரியார்த்தமாய் இருந்தது கலியனின் தொனி.

“… … … … … … … … …”

ஒரு கணம் அமைதியானாள் குந்தலாம்பாள்.

தற்போதையச் சூழலைச் சமாளிக்கத் தக்க வழி முறைகளை யோசிப்பதைப் போல இருந்தது; சிந்தனை வயப்பட்ட அவள் முகம்.

“நீங்க ஏதோப் பழையக் கதையப் பேசறீங்க…!” கலியனின் குரலில் கசப்பு தூக்கலாய்த் தெரிந்தது.

“ஓ…! ஆமாம்ல…! நான் ஏதோ சகஜமா நெனைச்சுப் பேசிட்டேன்… தப்புதான்…!”

குந்தலாம்பாளின் குரல் உடைந்து ஒலித்தது.

“எதுக்காக என்னை அளைச்சீங்களோ, அந்த விசயத்தை வெரசாச் சொல்லுங்க. ஏகப்பட்ட வேல கெடக்கு எனக்கு. நான் போவணும்.”

“… … … … … … … … …”

அமைதியாக இருந்தாள் குந்தலாம்பாள்.

மௌனத்தை சம்மதமாக எடுத்துக்கொண்டான் கலியன்.

“அப்ப நான் பொறப்படறேம்மா…!”

திரும்பினான்.

ஒரு அடி பின்னே எடுத்து வைத்தான்.

இந்தக் காட்சிகைளை எல்லாம் பார்த்துக்கொண்டே நின்றான் துரை.

“கலியா…!”

குந்தலாம்பாளின் அழைப்பில் அழுத்தம் தெரிந்தது.

அழுத்தமானக் குரலுக்குக் கொஞ்சமும் குறையாமல் கலியன் பார்வையும் அழுந்தமாய் வீசியது.

“கலியா, நீ முந்தி போல இல்லே…!;

ரொம்பத்தான் மாறிட்டே…!”

“எதைக் கண்டு அப்படிச் சொல்றீங்கம்மா…?”

‘வெட்டு ஒண்ணு, துண்டு ரெண்டு’ன்னு, கறாராப் பேசறே…!”

“நான் எப்பேயும் போலத்தான் இருக்கேன். எதுக்கும் வாயத் திறக்காம இருந்தது ஒரு காலம். என்னைக் கறாராப் பேச வெச்சதே நீங்கதானே…!”

கலியனின் குரலில் உறுதி இருந்தது.

‘வழக்கமா அம்மாக்கிட்டேப் பணிவாப் பேசுவானே…?;

இன்னிக்குத் தெனாவெட்டாப் பேசுறானே?’

யோசித்தான் துரை.

“… … … … … … … … …”

‘அம்மாகிட்டேயே இப்படிப் பேசறவன், என்கிட்டே எப்படிப் பேசுவானோ…?’

தனக்குத் தானேக் கேட்டுக்கொண்டான்.

உள்ளூர ஒரு நெருடல் வந்தது துரைக்கு.

“கலியா…! நீ மனசுல என்னதான் நினைச்சிருக்கே…?”

அதட்டலாய்க் கேட்டாள் குந்தலாம்பாள்.

சில நேரங்களில் அதட்டலாய் கேட்பது, உரிமையாய்க் கேட்பது போல உருமாறும்.

இணக்கமான சூழ்நிலையைத் தோற்றுவிக்கும்.

கெஞ்சினால் மிஞ்சுவதும், மிஞ்சினால் கெஞ்சுவதும் ஒரு வழி முறை.

மனித உறவுகளில், தவிர்க்க முடியாத கட்டங்களில் இவையெல்லாம் தேவையாகத்தான் இருக்கின்றன.

கலியன் குந்தலாம்பாளின் அதட்டலை, சகஜமாக எடுத்துக் கொள்ளவில்லை.

“நான் ஒண்ணும் நெனைக்கலைம்மா…!”

ஆக்ரோஷமாக வந்தது பதில்.

அதோடு நிறுத்தவில்லைக் கலியன்.

“சொன்னா வருத்தப் படாதீங்கம்மா… “நீங்க என்னை வெட்டிவிடத் திட்டம் போடுறீங்க;

என் குடி கெடுக்க நினைக்கறீங்க;

என்னைச் சந்தீல நிறுத்தப் பாக்கறீங்க…!”

“… … … … … … … … …”

“அபாண்டமாப் பேசாதே கலியா…!

கலியனைத் தொடர்ந்துப் பேசவிடாமல் குறுக்கேப் புகுந்தாள் குந்தலாம்பாள்.

“… … … … … … … … …”

அமைதியாய் நின்றான் கலியன்.

“வேண்டாம்னு முடிவு பண்ணிப்பிட்டா என்னவேணாலும் பேசிடப்படாது கலியா…!;

நான் இப்ப வரைக்கும் உன்னை ஏதாவது தப்பாப் பேசியிருப்பேனா…;

நெஞ்சைத் தொட்டுச் சொல்லு…?”

“ஒங்களையோ, அய்யாவையோ அப்படி நினைச்சா வாய் வெந்து போயிரும் தாயி. நீங்க என்மேலே வெச்சிருந்த பாசமும், அக்கரையும், சின்ன அய்யாவுக்கு துளிக்கூட இல்லீங்களே…!”

துரைராமன் பேச வாயெடுத்தான்.

“… … … … … … … … …”

‘பேசத் தெரியாமல் எதையாவதுப் பேசிச் சூழ்நிலையை மேலும் இறுக்கமாக்கிவிடுவான் துரை’

என்பதை உணர்ந்தாள் குந்தலாம்பாள்.

‘எதுவும் பேச வேண்டாம்.’

துரைக்கு ஜாடை காட்டினாள்.

“என் மகனைப் பத்தி என்கிட்டேயேக் குறை சொல்றியோ…?”

“அம்மா… அது வந்து…!”

பேசத் தொடங்கியக் கலியனை அடக்கினாள் குந்தலாம்பாள்.

“கலியா, நீ நல்லது கெட்டதுத் தெரியாம எதுவும் பேசாதே;

ஒண்ணு மட்டும் நல்லாத் தெரிஞ்சிக்கோ…!

என்னையும் அய்யாவையும் விடத் துரை உன்பேர்ல எவ்ளோ பிரியம் வெச்சிருக்கான்னு தெரிஞ்சா நீ இப்படிப் பேச மாட்டே…!”

பூசி மெழுகினாள் குந்தலாம்பாள்.

“… … … … … … … … …”

கலியன் இதற்கு பதிலேதும் சொல்லவில்லை.

“துரை காளவாப் போட்டானே, அப்போ நான் என்ன சொன்னேன் தெரியுமா…?”

“… … … … … … … … …”

கல்லறுக்கறப் பொறுப்பைக் கலியனண்ட விடுன்னேன்;

அப்போ அவன் என்ன சொன்னான் தெரியுமா…?”

“… … … … … … … … …”

துரைராமனுக்கு அம்மாவின் பேச்சுக் குழப்பமாக இருந்தது.

‘அம்மா ஏதோக் குட்டையக் குழப்பறாளே…?;

என்ன சொல்வாளோ, ஏது சொல்வாளோ… தெரியலையே…!’

தவிப்பாய் தவித்தான் துரை.

‘துரை என்ன சொல்லியிருப்பான்…?’

குந்தலாம்பாள் வாயிலிருந்து வருவதை அறிவதற்காக காத்திருப்பதுப் போல் நடித்தன, கலியனின் காதுகள்.

கூடவேத், துரையின் முக விகாரத்தையும் நோட்டமிட்டன அவன் கண்கள்.

“பாவம்மா கலியன். நாள் பூரா வயல் வரப்புன்னு அலையறவனுக்கு மேலே மேலே சிரமம் தரக்கூடாது’ ன்னு உன் மேல இரக்கப்பட்டுக் கரிசனத்தோடத்தான் சொன்னான்;

சொன்னதோட இல்லை. வேற ஆளுங்களை ஏற்பாடுப் பண்ணித்தானே கல்லும் அறுத்தான். அது உனக்கேத் தெரியுமில்ல…!”

“… … … … … … … … …”

பதிலேதும் சொல்லாமல் நின்றான் கலியன்.

“இவ்வளவு கரிசனம் உன்மேல் வெச்சிப் பேசின துரைராமனைப் புரிஞ்சிக்காம நீ இப்படிப் பேசறதுதான் மனசுக்குக் கஷ்டமா இருக்கு கலியா…!”

“அது… வந்து…!”

“பேச வேண்டாம் நீ;

உனக்குப் பேராசை வந்துடுத்து;

ஆண்டவன் புண்ணியத்துல, என் மகன் மெட்ராஸ்ல உத்யோகம் பார்த்துச் சம்பாதிக்கறான்;

பகவான் சாப்பாட்டுக்குக் குறைவைக்கலை.”

“… … … … … … … … …”

குனிந்தத் தலை நிமிரவில்லை கலியன்.

“இதோ எதிர்லதான் நிக்கறான் துரை. அவனைக் கையெழுத்துப் போடச்சொல்றேன். சொத்துப்-பத்து எல்லாத்தையும் நீயே எடுத்துக்கோ…!”

குந்தலாம்பாளுக்கு மூச்சு வாங்கியது.

“அம்மா அப்படியெல்லாம் சொல்லாதீங்கம்மா…!”

கெஞ்சுவது போல இருந்தது கலியனின் குரல்.

“வேற எப்படிச் சொல்ல;

அடுத்தப் போகம் சாகுபடிலக் குறைச்சித்தான் அளப்பேன்னுச் சொன்னியே, அப்படிச் சொல்லலாமா நீ…?;

குறைச்சி அளக்கறதென்ன…!;

குந்துமணி நெல்லுக் கூட அளக்க வேண்டாம்…;

இப்பச் சந்தோஷம்தானே…?”

“அம்மா, என்னை அவ்வளவுக் கேவலமா நினைக்காதீங்க;

உங்க வயவெளிய மட்டுமே நம்பி இருக்கற என்னை நட்டாத்துல விட்டுடாதீங்கனுதானே கேட்டேன்;

என் சீவனத்துக்கு ஏதாவது கொடுத்து என்னைக் காபந்து பண்ணுங்கன்னு கேட்கறேன்;

இது தப்புங்களா…?”

“… … … … … … … … …”

குந்தலாம்பாள் அமைதியாக ஓரக்கண்ணால் துரையின் எதிர்வினையைப் பார்த்தாள்.

“… … … … … … … … …”

துரைராமனோ, தலைக் குனிந்து, தரையைப் பார்த்தான்.

கிராமத்து விவகாரங்களை அணுகத் தெரியாதது இருக்கட்டும்; அதை உள்வாங்கக்கூடத் திராணியில்லாதத் துரையின் அறியாமையைக் கண்ட பெற்றத் தாய்க்கு மனசுத் தாங்கலாக இருந்தது;

துரையின் மேல், கோபத்திற்குப் பதில் அனுதாபமே விஞ்சி நின்றது.

“… … … … … … … … …”

நீதி மன்றத்தில் ஒரு தரப்பு வாதம் முடிந்ததும், அடுத்த தரப்பு வாதம் தொடங்குவதற்கு முன் ஒரு சிறு இடைவெளி இருக்குமே…

அப்படிச் சிறிது நேரம் கடந்தது.

“நீ எக்கேடு கெட்டும் போடா’னு சொல்லிருங்க;

எல்லாத்தையும் உங்ககிட்டே ஒப்படைச்சிடறேன்;

அரளி விதையை அரைச்சித் தின்னுட்டு செத்துடறேன்…!”

தன் வாதத்தைச் சீராக எடுத்துரைக்காமல், எடுத்த எடுப்பிலேயே உச்சம் தொட்டு, எதிர்த்தரப்பைக் கதிகலங்க அடிக்கும் அனுபவமிக்கக் கிரிமினல் லாயரைப் போல இருந்தது கலியனின் பேச்சு.”

“இந்தக் குடும்பத்துக்குக் கொலை பாதகம் வேற வரணும்னு நினைக்கறியா…?;

ஈவு இரக்கம் இல்லாத ராட்சசக் கூட்டம்னு எங்களை நினைக்கறியா…?”

‘ஜூனியர் வக்கீலான உனக்கே இவ்வளவுன்னா, சுப்ரீம் கோர்ட் சீனியர் வக்கீலான எனக்கு எவ்வளவு தெரியும்…!’

என்பதுபோல இருந்தது குந்தலாம்பாளின் பதில்.

“… … … … … … … … …”

கலியன் தலை குனிந்து நின்றான்.

தன் கட்சிக்காரரின் ஒருப் பக்க வாதத்தை மட்டும் சிறப்பாக வாதிட்டுப் பல வழக்குகளில் ஜெயித்து, மாஜிஸ்ட்ரேட்டாக பதவி உயர்வு பெற்ற பின் முதல் முதலில் ஒரு சிக்கலான வழக்கின் இரு பக்க வாதங்களையும் கேட்கும் நீதிபதியின் நிலையில் இருந்தான் துரைராமன்.

“கலியா…! நீ ஒண்ணு புரிஞ்சிக்கணும்;

எங்க வயல்வெளிகளை மட்டுமே நம்பி இருக்கற உன்னை அம்போன்னு நட்டாத்துல விட்டுட்டு நாங்க மட்டும் நல்லா இருக்கற பரம்பரை இல்லே எங்களுது;

இத்தனை வருஷம் எங்கக் குடுப்பத்தோட பழகியிருக்கே;

யாரு… எப்படி… ன்னு எடைப் போடத் தெரியல்ல உனக்கு.”

“உங்க மனசு தொட்டுச் சொல்லுங்கம்மா. இது வரைக்கும் ஒரு குந்துமணி நெல்லாவது குறைவா அளந்திருப்பேனா…? ;

சட்டம் பேசியதுண்டா…?;

தப்பு தண்டாவா நடந்திருப்பேனா…?;

இப்போ மட்டும் ஏன் இப்படிப் பேசறேன் இதுபோல நடந்துக்கறேன்…?”

“… … … … … … … … …”

சற்றே நிறுத்தினான் கலியன்.

“ஏன் பேசறியாம் அதையும் சொல்லிப்புடு…!”

“வயித்தெரிச்சம்மா…! வயித்தெரிச்ச…!”

“நீ வயிறு எறியறமாதிரி நாங்க அப்படி என்னத்தான் தீங்கு பண்ணிட்டோம் உனக்கு…?;

அபாண்டமாப் பேசாதே கலியா…”

“கோயிலு சம்பாக் காணீல காளவாப் போட்டது யாரும்மா…?”

வெள்ளந்தியான குரலில் கேட்டான் கலியன்.

“என் மகன் துரைதான் . அதுல என்ன சந்தேகம்…?”

“… … … … … … … … …”

“அவனோட கெட்ட நேரம், புயல் மழைல கரைஞ்சி நட்டமாயிருச்சு;

கையச் சுட்டுக்கிட்டு நிக்கறான்…!”

“காளவாப் போட்டதுல எனக்கு எதும் சம்பந்தம் உண்டுங்களாம்மா…?”

“இல்ல…! அதுக்கென்ன இப்ப. நீ சம்பந்தப்பட்டதா இங்கே யாரும் சொல்லலியே…!”

யதார்த்தமாகச் சொல்வதுபோல் சொன்னாள் குந்தலாம்பாள். அவ்வப்போது துரையின் முகக் குறிப்பையும் கவனிக்கத் தவறவில்லை அவள்.

“என்கிட்டே குத்தகைக்கு இருக்கற வயதானேம்மா அது.”

“ஆமாம்.. யாரு இல்லேன்னது…!”

“என் குத்தகைல இருந்தாலும் உடையவங்களை மதிச்சி காளவா போட்டுக்க விட்டுக் கொடுத்ததுக்கு , எனக்கு இப்படி தண்டனைங்களாம்மா..!.”

“தண்டணை தண்டணைனு எதை சொல்றேனு புரியலை… விவரமாத்தான் சொல்லேன் கலியா…!”

“விட்டுக் கொடுத்தவன் கெட்டதில்லைனு சொல்லுவாங்க;

ஆனா விட்டுக் கொடுத்துட்டு நான் கெட்டு நிக்கறேன்…”

“… … … … … … … … …”

ஒன்றும் புரியாதது போல முகம் வைத்திருந்தாள் குந்தலாம்பாள்.

குற்ற உணர்வால் விகாரமானது துரைராமனின் முகம்.

“எதுவா இருந்தாலும் மனசு விட்டுச் சொல்லு கலியா…!”

அதை எப்படிம்மா என் வாயால உங்களுக்குச் சொல்வேன்;

சின்னய்யா இவ்வளவு கிராதகத்தனமா நடந்துக்குவாருன்னு நான் கனவுல கூட நினைக்கலைம்மா…!”

“… … … … … … … … …”

எனக்கு எதுவுமே பேசப் பிடிக்கலைம்மா. என்னை விடுங்க. நான் போறேன்…!”

கலியன் வருத்தத்துடன் கிளம்பினான்.

“கலியா, பேச்சை இப்படிப் பாதீல விட்டுட்டுட்டுப் போறதுதான் முறையா…?;

சொல்ல வந்ததை முழுக்கச் சொல்லு…!;

பேச்சு வார்த்தைல தீராத பிரச்சனையும் உண்டா இந்த உலகத்துல.”

குந்தலாம்பாள் பொதுவாகப் பேசினாள்.

ஒருப் பிரச்சனைப் பற்றிப் பேசிப் பேசிச் சலித்துப் போன நேரத்தில் இப்படி ஏதாவது ஒரு பொது விஷயம் பேசி மடை மாற்றிய பின் பிரச்சனைக்குள் வருவது கூட ஒரு நடை முறைதான்.

தயங்கித் தயங்கிச் சொல்வதைப் போலச் சொன்னான் கலியன்.

“சாகுபடிக்குன்னு குத்தகைக்கு எடுத்த வயல்ல காளவாப் போட்டு வயலை மலையும் மடுவுமா ஆக்கி விணடிச்சிட்டேனாம்.”

“யாருடா அப்படிச் சொன்னா…?”

சற்றே தயங்கி “சின்னய்யாத்தான்மா… என் பேர்ல கேஸ் ஜோடிச்சி, செயில்ல தள்ளப்போறதா திட்டம் போட்டிருக்காரும்மா…!”

அதிர்ச்சியோடு பார்ப்பதைப் போல துரையைப் பார்த்தாள் குந்தலாம்பாள்.

உத்தமமான ஒரு தகப்பனுக்கு இப்படி ஒரு மகனா… மனம் நொந்தாள்.

“… … … … … … … … …”

“உங்க வீட்டுக்கு உண்மையா உழைச்ச எனக்கு செயில் தண்டணைதான் தகும்’னு நீங்க நினைச்சா அதையே செய்யுங்க…!”

“… … … … … … … … …”

“அபாண்டமா என் மேல பழி சுமத்தறாங்கனு தெரிஞ்சதும், கோபத்துல நானும் கொஞ்சம் எக்குத் தப்பா பேசிட்டேன். என்னை மன்னிச்சிருங்கம்மா…!”

“… … … … … … … … …”

குந்தலாம்பாளிடம் தொடர்ந்த அமைதி, துரையை அமைதியிழக்கச் செய்தது.

குற்ற உணர்வில் குமைந்தான்.

முகம் வெளிறியது.

துரையினுள் ஏற்படும் எல்லா ரசாயன மாற்றங்களையும் துல்லியமாகப் பார்த்தாள் குந்தலாம்பாள்.

“அம்மா, நீங்க அமைதியா இருக்கறதப் பாத்தா…;

சின்னய்யாச் செஞ்சது சரி’னு சொல்ற மாதிரியில்ல இருக்கு…!”

“இதோப் பாருக் கலியா. என் புள்ளை அப்படிச் சொல்லியிருந்தாத் தப்புதான்.. சொல்லிட்டான். வாய் வார்த்தை வாயில இருக்கும்போது நீ எகிரிப் பேசுறதுத் தப்பு.!”

பூசி மெழுகினாள்.

சின்னய்யா இப்படிப் பேசுதுன்னு என்கிட்டே வந்து சொல்லியிருந்தா, அதை எப்படிச் சமாளிக்கணுமோ அப்படிச் சமாளிச்சிருப்பேன்…!”

மென்று விழுங்கினாற்போல் பேசினாள். தர்ம சங்கடமான உணர்வை முகத்தால் உணர்த்தினாள்.

“… … … … … … … … …”

“சொல்லியிருக்கலாம்தான். தப்புதான்மா…!”

“கலியா..”

“சொல்லுங்கம்மா…!”

“நான் சொல்றேன். இதுவரைக்கும் நடந்தது எதையும் மனசுல வெச்சிக்காதே…;

எனக்கும் வயசாச்சு. எப்போவேணாலும் போய்ச் சேந்துருவேன்;

எனக்குப் பிறகு நிலம் நீச்செல்லாம் பாத்துக்கப்போறது சின்னய்யாதான்.”

“நாளுங் கிளமையுமா அச்சானியமாப் பேசாதீங்க தாயி…!”

“நெருப்புன்னா வாய் வெந்துடாது கலியா;

எனக்குப் பிறகும் நீ பொறுப்பா இருந்து நிலத்தை விக்காம கொள்ளாம விவசாயம் பார்த்துக்குவேனு நினைச்சேன்;

நான் இருக்கும்பேதே நீ இப்படி நடந்துக்கறதைப் பார்த்தா…!”

“திரும்பத் திரும்ப அபசகுனமாப் பேசாதீங்கம்மா…!;

என் உசுரு உள்ள வரைக்கும் உங்க வயலை நான் சாகுபடி பண்ணித் தரேன்மா… போதுமா…?”

“போதுண்டாப்பா… போதும்!”

கையெடுத்துக் கும்பிட்டாள்.

“நீ இந்தக் குடும்பத்துக்கு ரொம்ப விசுவாசமாயிருந்தா, என் பேச்சுக்கு மதிப்புக் கொடுக்கறவனாயிருந்தா நான் சொல்றபடி கேளு..”

“… … … … … … … … …”

மூச்சிரைத்தது குந்தலாம்பாளுக்கு.

“என் பேச்சுக்கு எதிரா எதாவது திட்டம் உன்கிட்டே இருந்தா, இப்போ என்னண்ட சொல்லவே வேண்டாம். என்ன வேணாலும் செஞ்சிக்கோ. நாங்க எதுக்கும் தயார்.”

அம்மாவின் தீர்ப்புக்காக கலியன் நிதானமாகவும். துரை பரபரப்பாகவும் காத்திருந்தனர்.

“கோவில் சம்பாக் காணியை நீ எடுத்துக்கோ கலியா.”

“… … … … … … … … …”

“அந்த மூணு ஏக்கர் நிலத்தையும் சீர் பண்ணிச் சாகுபடி பண்ணிக்கோ. மத்ததை விட்டுக்கொடுத்துடு…!”

“… … … … … … … … …”

கலியன் எந்த பதிலும் சொல்லவில்லை.

குந்தலாம்பாளே தொடர்ந்தாள்.

“விட்டுக் கொடுத்தாலும் சின்னய்யா இந்த கிராமத்துல வந்து உட்காந்து விவசாயம் பண்ணப் போறதில்லை;

நஞ்சை புஞ்சைங்களை, நல்ல கிராக்கியா வந்தா ஊர்ல குழி என்ன விலை விக்குதோ அந்த விலைக்கு வித்துப் கொடுத்துடணும். செய்வியா ? ”

குந்தலாம்பாளின் குரலில் கண்டிப்புத் தெரிந்தது.

“விக்கப்போறது தெரிஞ்சா, வாங்க நிறைய பேர் இருக்காங்கம்மா. கையில காசு வாயில தோசைனு வித்துக் கொடுத்துடலாம். ஒரு விசயம் சொல்லலாமுங்களா…?”

“சொல்லு…”

“… … … … … … … … …”

கலியன் என்னதான் சொல்லப் போகிறான் என்பதை அறியக் காதைத் தீட்டினான் துரை.

துரையின் முகக் குறிப்பைப் படிக்கத் தன்னை தயார் செய்து கொண்டாள் குந்தலாம்பாள்.

“கோவில் சம்பாக் காணியை என் பேருக்குச் பட்டாப் பண்ணிக் கொடுக்கறதாச் சொல்றீங்க, சரி;

ஒண்ணு யோசிச்சீங்களா அம்மணி…! அந்தக் காணி இப்போ உடனடியா விவசாயம் செய்யற மாதிரியா இருக்கு?”

“… … … … … … … … …”

“கல்லறுப்புக்கு நோண்டின பள்ளம், அல்லியும் ஆகாயத் தாமரையுமா மண்டிக் குளமாய்க் கிடக்கு;

கொளத்துல மீன் பிடிச்சிப் பொழைச்சிக்கடாக் கலியானு சொல்றீங்களாம்மா…?”

“இதோ பாரு கலியா, என் மனசுலப் பட்டதைச் சொல்லிட்டேன். வேற என்னதான் எதிர்பார்க்கறே நீ…?”

“சம்பாக் காணியை நான் சீர் பண்ணிக்கறேம்மா;

கூலி ஆளு படைகளை விட்டு சரி பண்ற அளவுக்கு என்கிட்டே பணம் காசு கிடையாது, உங்களுக்கேத் தெரியும்;

சல்லிக் காசு சேமிச்சி வெச்சிக்கலை நான்.”

“காணியை நிரவித் தரச்சொல்றியா..? இல்லே, அதை நிரவ காசு பணம் எதிர்பார்க்கறியா…?”

“பணம் காசு வேண்டாம்மா. இன்னும் ஒரு வருசம்;

ஒரே ஒரு வருசம்…, அடுத்த பொங்க வரைக்கும் எல்லாக் காணீலயும் நானே நட்டு சாகுபடி பண்ணிக்க அனுமதி கொடுங்கம்மா;

அதுல வர்ற வருமானத்தை வெச்சி இதை துத்துக்கறேம்மா…!”

“… … … … … … … … …”

குந்தலாம்பாள் சற்று நேரம் அமைதி காத்தாள்.

துரை அம்மாவின் முகத்தைப் பார்த்தான்.

“என்னடா துரை. அவன் கேக்கறது எனக்கு ஞாயமாப் படறது. என்ன செய்யலாம்னு நீதான் சொல்லணும்…!”

“டெனண்ட்கிட்டே, காம்ப்ரமைஸ் பேசும்போது வீட்டு மூத்தவங்கள வெச்சிக்கிட்டு வீட்டுக்குள்ளேயே வெச்சிப் பேசி முடிக்கப் பாருங்க;

விஷயம் பொதுவெளிக்கு வந்து பஞ்சாயத்துனு வந்துட்டா சிக்கலாயிரும்…!”

அட்வகேட் வாதிராஜன் சொன்ன அட்வைஸ் துரைராமன் மனதில் பளிச்சிட்டது.

“சரிம்மா… உன் இஷ்டம்…” என்றான் துரைராமன்.

துரைராமன் இப்போது நேருக்கு நேர் கலியனோடு பேச வந்து நின்றான்.

“கலியா, சம்பாக் காணியை உன் பேருக்கு ரிஜிஸ்டர் பண்ணிக் கொடுத்தபிறகு அய்யா எழுதிக் கொடுத்த குத்தகைச் சீட்டை என் கைல கொடுத்துடணும் சரியா…!”

கோவில் திருவிழாவிற்குத் தர்மம் செய்யும் பண்ணையார்கள், பணம் கொடுக்கும் முன் கண்டிஷன் போடுவார்களல்லவா

அப்படி இருந்தது துரைராமனின் அணுகுமுறை.

“அடுத்த வருஷம் போகியல் நாள்ல, அதுங்களை உங்க கண்ல காட்டிட்டு, உங்க கண் எதிர்லயே போகித் தீயில போட்டு எரிச்சிருவேன் சின்னய்யா…!”

“கலியா நீ வார்த்தை மாறிடமாட்டேன்னு நம்பறேன் …!”-

நடுவில் வலிந்துத் தன் கருத்தைத் திணித்தாள் குந்தலாம்பாள்.

“உங்க நம்பிக்கை வீண்போகாதும்மா…!”

என்றான் கலியன்.

சொல்லும்போது அவன் வலது கை தாயத்தைத் தொட்டுக்கொண்டிருந்தது.

கலியன் புறப்பட்டுச் சென்றபிறகு, துரைராமன் குந்தலாம்பாளிடம் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தான்.

“ஏம்மா… நாம இந்த மூணு ஏக்கரை விட்டுக் கொடுத்தா அடங்கிடுவான் கலியன்னு நினைக்கறியா…?”

“தொரை…! எல்லாமே நம்பிக்கைலதான் ஓடறது. எனக்குத் தெரிஞ்சி, ஒருத்தரை அழிக்க, பொய் வழக்கு போடறது, நம்பிக்கைத் துரோகம் பண்ணறது இதெல்லாம் கலியன் கிட்டே கிடையாதுன்னு தோணறது…”

தன் விரலையே எடுத்துத் தன் கண்ணில் குத்திய அம்மாவிடம் ஏதும் எதிர் வாதம் செய்ய முடியவில்லை துரைராமனால்.

இதற்கு மேல் பேசினால் ரசாபாசமாகிவிடும் என்பதால் எழுந்துக் காமரா உள்ளுக்குள் சென்று கதவைச் சாத்திக்கொண்டான் துரைராமன்.

“மாமி… பொங்கல் ஆச்சா…!”

கம்பீரமாய் வந்தது குரல்

‘யாரது…?’

மனசு கேட்க, வலது கையை புருவத்துக்கு மேல் உயர்த்தி உபரி வெளிச்சத்தை மறைத்துக் கொண்டு, பார்த்தாள் குந்தலாம்பாள்.

கேள்விக் குறிகளால் குந்தலாம்பாளின் முகத்தில் உருவான மடிப்புகள், சந்தோஷ ரேகைகளாக உறுமாறின.

“திருநா…! வாம்மா… எவ்ளோ நாளாச்சு உன்னைப் பார்த்து…!’

சந்தோஷமாக வரவேற்றாள்.

வாங்கி வந்த பழங்களை மஞ்சள் பையுடன் குந்தலாம்பாள் கையில் கொடுத்தார் திருநாவுக்கரசு.

“மாமி… உங்க ஆசீர்வாதம் வேணும்…!”

குனிந்து நமஸ்கரித்தார்.

“என் பரிபூரண ஆசீர்வாதம் உண்டு உனக்கு. அவர் இருந்த வரைக்கும், நீ எல்லையம்மன் கோவில் பிரகாரத்துக்கு கருங்கல் தளவரிசை போட்டுத் தந்த அழகை மெச்சிண்டே இருப்பார். எல்லையம்மா அருளால நீ அமோகமா இருப்பேடா கொழந்தே…!”

ஒக்காரு…!

ஊஞ்சலைக் காட்டினாள்.

சமையற்கட்டுக்குள் சென்ற குந்தலாம்பாள் டிபன் தட்டில் பால் பொங்கலும், இரண்டு வடைகளும் வைத்துக் கொண்டு வந்து கொடுத்தாள்.

குந்தலாம்பாள் வீட்டிலிருந்து கிளம்பிய கலியன் நேரே வீட்டுக்குச் செல்லவில்லை.

எல்லையம்மன் கோவிலுக்குச் சென்றான்.

‘காளவாய் போடுகிறேன் பேர்வழி’ என்று துரைராமன் காணியில் காலெடுத்து வைத்த நாள் அந்தத் திக்கில் கூடத் தலை வைத்துப் படுக்கவில்லை கலியன்.

இன்று அந்தக் காணியை அவனுக்கு விட்டுத்தருவதாய் மகனுக்கு முன்னால் அய்யாம்மா வாக்குக் கொடுத்த பிறகு, அனிச்சையாய்க் அவன் கால்கள் சம்பாக் காணிக்கு அழைத்து வந்தன.

என்னதான் நடிப்பாக இருந்தாலும்… தாறுமாறாக அய்யாம்மாவைப் பேசுவது மனதில் உறுத்திலாகத்தான் இருந்தது கலியனுக்கு.

கோவில் வளாகத்திலிருந்து அந்தக் காணியையே பார்த்தபடி நின்றான் கலியன்.

‘இந்தக் காணி அய்யா நினைச்சது போல ஊர் ஜனங்களுக்கு உபயோகமா ஆவணும் எல்லையம்மா…!’

மனமுருகி வேண்டிக்கொண்டான்.

கோவில் பிரகாரத்துக் கருங்கல் களத்தில் துண்டு விரித்துப் படுத்தான் கலியன்.

“மாமி, எங்க தாத்தா வீட்டை நான் வாங்கிட்டேன்…!”

“அடடே…! ரெண்டு நா முன்னேதான் யாரோச் சொன்னா, ‘வாஞ்சியாம் கிரயம் ஆயிடுத்துன்னு.’ நீதான் வாங்கியிருக்கியா…? ரொம்ப சந்தோஷம் திருநா…!”

‘கூடத்தில் அம்மா யாருடன் பேசுகிறாள்…!’

அறியும் ஆர்வத்தில் காமரா உள் கதவை துரை லேசாகத் திறந்தான் துரை.

காமரா உள்ளுக்கு எதிர் திசையைப் பார்த்து ஊஞ்சலில் உட்கார்ந்திருந்தார் திருநா.

திருநாவைப் பார்த்தபடி நின்ற குந்தலாம்பாள் ,காமரா உள் கதவைத் திறத்த துரையைப் பார்த்தாள்.

“பூர்வீகமா கிராமத்துல இருக்கற ப்ராபர்டியை வித்துட்டு சிட்டீல போய் செட்டில் ஆகணும்னு நினைக்கறவா நடுவுல, தாத்தா வித்த வீட்டை வாங்கிப் புதுப்பிக்கணும்னு நினைக்கறையே திருநா…! ஒசந்த மனசு ஒனக்கு. உன் மனசு போலவே ஒசந்தே இருப்பே நீ…!”

துரைக்கு, அம்மாவின் அடுத்தக் குத்து…

மீண்டும் காமரா உள்ளுக்குள்ளேயே பதுங்கிவிட்டான் துரை.

“நான் உங்க குடும்பத்துக்கு ரொம்ப கடமைப் பட்டிருக்கேன் மாமி…”

இஞ்சினியர் திருநாவுக்கரசின் குரலில் நன்றி இருந்தது.

“எதுக்கு திருநா…! நாங்க என்ன செஞ்சோம் உனக்கு…?”

“சுப்பாமணி மாமாத்தான் ஆரம்பத்துலேந்து பேசி இந்த இடத்தை எனக்கு முடிச்சிக் கொடுத்தார் மாமி…!”

“அப்படியா… சுப்பாமணி சொல்லவே இல்லையே…! எப்படியோ, விட்ட கொரை தொட்ட கொரைனு சொல்றாப்ல திருப்பவும் அந்தனூர் வாசியாயிட்டே…! க்ஷேமமா இரு…!”

வாய்நிறைய திருநாவை வாழ்த்தி அனுப்பினாள் குந்தலாம்பாள்.

சுப்பாமணி மாமா பஸ் இறங்கி வந்து கொண்டிருந்தார்.

எல்லையம்மன் கோவில் அருகில் கலியனைப் பார்த்தார்.

“கலியா… இந்த நேரத்துல இங்க…?’

காலை முதல் நடந்த அனைத்தையும் விவரமாகச் சுப்பாமணியிடம் சொன்னான் கலியன்.

“அய்யா எனக்கு மனசு ரொம்ப கஷ்டமா இருக்குங்கய்யா…?”

“எதுக்கு…?”

“இன்னிக்கு வரைக்கும், பெரியய்யாப் போனபிறகும் சொந்த சாகுபடிதான் நடக்குது நம்ம வீட்ல. ஆனா, எங்க அப்பாக் காலத்துலேந்து குத்தகைக்கு இருக்கறதா ஒரு பேச்சு ஊரு முச்சூடும் பரவிடுச்சுங்கய்யா…!”

நல்ல நிர்வாகி அதிகம் பேசமாட்டான். பிறர் சொல்வதற்கு முழுமையாகக் காது கொடுப்பான்.

கலெக்டர் பி ஏ அல்லவா.

மாவட்ட நிர்வாகமே பார்ப்பவர் அல்லவா சுப்பாமணி.

அமைதியாய்க் கலியன் சொல்வதற்குக் காது கொடுத்தார்.

அவன் பிரச்சனை என்ன என்பதைக் காதில் வாங்கினார் சுப்பாமணி.

மலையும் மடுவுமாகக் கிடக்கும் கோவில் சம்பாக் காணியைக் கைக் காட்டினான் கலியன்.

இந்தக் காணீல ஊர்ப் பொதுப் பாதைப் போடணும்னு பெரிய்யாவுக்குத் தீராத ஆசை;

அந்த ஆசையை என் மூலமாத் தீத்துக்கத்தான் ஒரே நாள்ல நிறைய குத்தகைப் பத்தரங்களா எளுதி எளுதிக் தள்ளினாரு;

ஒரு சில கடுதாசிங்கள்ல என்னை விட்டு ‘தொப்ளான்’னு என் அப்பாப் பேரை எளுதச் சொன்னாரு;

என் பேரை எளுதச் சொன்னாரு சில கடுதாசிங்கள்ல…!;

ஆனா இதெல்லாம் ஊரானுங்களுக்குத் தெரியாதுங்களே…”

“ஊரானுக்கு எல்லாம் தெரியணும்னு என்ன இருக்கு…?”

சுப்பாமணி அதிராமல் கேட்டார்.

“இது வரைக்கும் ரெண்டு மூணு முறை கணக்குப் பிள்ளை வூடு தேடி வந்துட்டாரு. குத்தகைச் சீட்டுங்களைக் குடு.. ஆர் டி ஆர் ல உன் பேர் பதிஞ்சி தரேன்…” னு நச்சுப் பிடிக்கறாரு;

சமயத்துல உண்மையை ஒடைச்சிச் சொல்லிரணும்னு தோணுது. ஆனா பெரியய்யாவோட ஆசைய நிறைவேத்தணும்னு பல்லக் கடிச்சிக்கிட்டு இருக்கேன்.”

தன் கழுத்தில் தொங்கிய தாயத்தைத் தொட்டுக் காட்டினான்.

கலியனின் விசுவாசமும், உண்மையும், நேர்மையும், பாசமும், கடமை உணர்ச்சியும் சுப்பாமணியை நெகிழ வைத்தன.

“வேற யாரும் எதுனா சொன்னாங்களா…?”

“கிட்டாவய்யா ரெண்டு மூணு முறை என்னை அளைச்சி “ ஏமாந்துராதே கலியா…!” னு எச்சரிச்சாரு. அந்த கடுதாசிங்களை கொண்டாந்து கொடுன்னு கேட்டாரு…!”

இப்போது சுப்பாமணி கலியனுக்குப் பதில் சொன்னார்.

“கலியா… உன்னை அழைச்சி யாரு எது சொன்னாலும், சரி அப்பிடியே செஞ்சிடறேன்னு சொல்லிரு. பேப்பர் கேட்டாங்கன்னா, என் கிட்டே கொடுத்து வெச்சிருக்கறதாச் சொல்லு.”

குழப்பத்தில் இருந்த கலியனுக்கு ஒரு தெளிவு கிடைத்தது.

“ஏண்டா சுப்பாமணி, வாஞ்சி’ வீட்டைத், திருநாவுக்கு முடிச்சிக் கொடுத்தியாமே…! சொல்லவே இல்லியே நீ…! அந்தப் புள்ளாண்டான் வந்தான். சத்தான பிள்ளை அது…!”

சாப்பாடு போட்டுக் கொண்டே, தம்பி சுப்பாமணியிடம் செய்தி வைத்தாள் குந்தலாம்பாள்.

“சொல்லக்கூடாதுனு இல்லே கொந்தலா… ஏதோ மறந்து போச்சு…!”

“வாங்கோ மாமா…!”

காமரா உள் கதவைத் திறந்து கொண்டு வந்தான் துரை.

“கலியன் வந்தான் மாமா…!”

துரை தொடங்க குந்தலாம்பளும் துரையுமாக அனைத்தையும் சொன்னார்கள்.

கோவிலில் கலியன் சொன்ன விஷயங்களை மீண்டும் ஒரு முறை குந்தலாம்பாள் மூலம் அறிந்து தெளிந்தார் சுப்பாமணி.

அமாவாசை.

நிறைந்த நாள்.

பத்திரப்பதிவு அலுவலகத்தில் முறையாகப் பதியப்பட்டது.

விலைக் கொடுத்துக் கலியன் வாங்கியதாகக் கிரய சாசனம் செய்துப் பதியப்பட்டது.

கலெக்டர் பி ஏ சுப்பாமணியே நேரில் வந்ததால், நேரம் காலம் வளர்த்தாமல் சீக்கிரமாகவேப் பதிவு முடிந்தது.

இஞ்சினியர் திருநாவுக்கரசை வரச்சொல்லி, சாட்சிக் கையொப்பம் இடச் சொன்னார் சுப்பாமணி.

“கலியா… நான் ஒரு யோசனை சொன்னா செய்வியா?”

“சொல்லுங்கய்யா…?”

“இவரைத் தெரியுமில்லே…”

திருநாவுக்கரசைக் காட்டிக் கேட்டார் சுப்பாமணி.

“நல்லாவேத் தெரியும்யா…!”

“இவரு கிட்டே இப்ப பதிஞ்ச பத்திரத்தையும், பழைய கடுதாசிங்களையும் கொடுத்து வை. பத்திரமா வெச்சிப்பாரு…!”

“சரிங்கய்யா…!”

“இந்த இஞ்சினியர் கிட்டே சிலது சொல்லியிருக்கேன். அந்தக் காணீல என்னல்லாம் செய்யணுமோ எல்லாம் செய்து தருவாரு;

அவர் கிட்டே எல்லாத்தையும் சொல்லு. எல்லாத்துக்கும் அவர் ஏற்பாடு பண்ணுவாரு…”

நன்றியுடன் இருவரையும் பார்த்தான் கலியன்.

கிராமங்களில் எதையும் மறைத்துச் செய்ய முடியாது.

எது செய்தாலும் எப்படியாவது யாருக்காவதுத் தெரிந்துவிடும்.

அந்த வகையில் கலியனுக்கு மூன்று ஏக்கர் நிலத்தைப் பத்திரப்பதிவு செய்து கொடுத்திருக்கும் செய்தி, ஊர் முழுதும் பரவிவிட்டது.

“விவசாயக் கூலியா இருந்தவன் இப்போ மூணு ஏக்கருக்கு அதிபதியா…?”

“அன்னாடக் காச்சியாஅலைஞ்சவனுக்கு அதிர்ஷ்டம் பாருடா…”

மூணு வேளை சோத்துக்குக் காஞ்சவனுக்கு மூணு ஏக்கர் நெலம் ரொம்ப அதிகம்டா…”

இப்படியெல்லாம் ஒரு புறம் பேசினார்கள்.

“நாய்க்கு எலும்புத் துண்டுப் போட்டாப்ல போட்ருக்கான் அந்த பட்டணத்துத் துரை. இந்தக் கலியனும் ஏமாளியா நிக்கிறான்…”

இந்தக் கருத்தை அங்கங்கே பரவவிட்டுக் கொண்டே இருந்தார் கிட்டாவய்யா.

பத்திரப் பதிவு முடித்துக் கொண்டு தஸ்தாவேஜூகளோடு வந்த கலியன் எல்லையம்மன் சந்நிதிப் படிக்கட்டில் வைத்தான்.

மனப்பூர்வமாய் வேண்டிக் கொண்டு வெளியே வந்தான்.

“கலியா…! நீ புத்திசாலினு நினைச்சேன். சரியான ஏமாளியா இருக்கியே…?”

திடீரெனக் குரல் வரத் திரும்பினான் கலியன்.

எதிரே நின்றார் கிட்டாவய்யா.

– தொடரும்…

விகடன் மின் இதழான மை விகடன் இதழில், 02.05.2022 அன்று கலியன் மதவு என்ற சமூக நாவல் தொடங்கித் தொடர்ந்து 28.01.2023 ல் அதை நிறைவு செய்யும் வரை, அதைச் சிறப்பாக வெளியிட்டு ஊக்குவித்த ஆனந்த விகடன் ஆசிரியர், மற்றும் ஆசிரியர் குழுவினருக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் – ஜூனியர் தேஜ்

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *