கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு: சமூக நீதி  
கதைப்பதிவு: February 19, 2023
பார்வையிட்டோர்: 2,941 
 

அத்தியாயம் 21 – 22 | அத்தியாயம் 23 – 24 | அத்தியாயம் 25 – 26

அத்தியாயம் – 23

“அகிலாண்டக் கிழவியோடு நீண்ட நேரம் பேசினான் கலியன்.

அவன் மிகவும் குழம்பிப் போயிருந்தான் .

‘மாதய்யா இறந்த நாளில் கலியன் வந்து போனது பசுமையாக ஞாபகம் வந்தது கிழவிக்கு.

மூச்சிரைக்க, முகம் வியர்க்க, அவசர அவசரமாக “ஆத்தா…! ஆத்தா…!!” என்றபடி வந்தான்.

“அய்யாவை அடக்கம் பண்ணிட்டாங்களா கலியா…?”

“வாகனம் போயிக்கிட்டு இருக்கு ஆத்தா…!”

“வாகனம் போகக்குள்ள நீ எதுக்கு இங்கண வந்தே…?”

ஒன்னால அவசரமா ஒரு ஒதவி ஆவணும் ஆத்தா…!”

“என்னாடா இந்த ஒப்பாரிக்கிளவிக்கிட்ட வந்து ஒதவி கிதவிங்கிறே…! சொல்லுடா கலியா என்னா சேதி…?”

சில மணித்துளிகளில் எல்லாவற்றையும் சுருக்கமாகச் சொன்னான்.

“அய்யாவின் கடைசீ ஆசைய நிறைவேத்த வழி சொல்லு தாயி…!

ரொம்ப அவரசம் தாயி…!”

இறைஞ்சினான்.

‘கொடுத்த வாக்கைக் காப்பாற்ற வேண்டும்…!’

என்கிற உள்ளக்கிடக்கையை, அவன் கண்கள் தெளிவாக எடுத்துக் காட்டின.

சாங்கியங்கள் எல்லாம் நன்றாகத் தெரிந்தவளல்லவா…!

அவசரமாய் பளிச்சென்று வழிமுறைகளைச் சொன்னாள் அப்போது.

ஆனால் இப்பொழுது…?

நிதானமாய் யோசிக்கையில்…

‘அன்றைய முடிவு முற்றிலும் தவறு…’ என்று பட்டது அவளுக்கு.

“உணர்ச்சி வசப்பட்டுப், பின் விளைவுகளை யோசிக்காமல் தவறான வழியைக் காட்டிவிட்டோமே….?’

கழிவிரக்கம் வந்தது.

“நான் தப்புப் பண்ணிட்டேன் கலியா…!”

“என்னா சொல்றே…?”

“ஆமாம்யா…! நடமுறைக்கு ஒத்துவராத ஒரு யோசனையை உனக்குச் சொல்லி உன்னைக் குளப்பிட்டேன்ய்யா…!”

“ஏன் ஆத்தா…? இப்படியெல்லாம் பேசுற…!”

இயலாமையும், அதிர்ச்சியும் கலந்த கவலை ரேகைகள் படர்ந்தன கலியன் முகத்தில்.

“நான் சொன்னதாலத்தான், இதுங்களை நீயும் கொண்டாந்துட்டே. ஆனாப் பாரு, பாடைல வெச்சிக் கட்டித், தார-தப்பட்டையோட ஊர்வலம் கொண்டு போயி மயானத்துல எரிக்கறது நடக்கற காரியமா…?”

“அப்படி ஒரு சாங்கியம் இருக்குன்னு நீதானே சொன்னே ஆத்தா…?”

“எலேய்…! யோசனையே கிடையாதா உனக்கு…?”

“… … … … … … … … …”

கலியன் முகம் அதிர்ந்து சுருங்கியது.

ரெப்பைகள் இடுங்கிக்கொண்டது.

கண்ணீரைப் பிழிந்து வெளித் தள்ளியது.

‘ஏன் அப்படிக் கேக்கறே ஆத்தா…? என்னாதான் சொல்ல வார…?”

குரல் கிணற்றிற்குள்ளிருந்து வருவது போல வந்தது.

“உன் அப்பனோட கடைசீ ஆசைனு சாங்கியம் செஞ்சா ஊர் ஒலகம் ஒத்துக்கும்…!”

“… … … … … … … … …”

மீதியைச் சொல்லாமலேக் கலியன் புரிந்துகொண்டான்.

“இப்ப வௌங்குது ஆத்தா. என்னதான் தாயாப் புள்ளையாப் பளகினாலும் ஊரு உலகம் இதை ஒத்துக்காதுதான்…!”

“கடைசீ ஆசைய நிச்சயமா நிறைவேத்துவேன்…!” னு அய்யாக்கிட்டே வாக்கு கொடுத்திருக்கேனே ஆத்தா…”

“… … … … … … … … …”

அமைதியாக உட்கார்ந்திருந்தாள்.

“வேற எதுனா வளி இருக்காப் பாரு ஆத்தா…!”

மஞ்சள் பையை கையில் எடுத்து நெஞ்சோடு அழுத்திப் பிடித்தபடிக் கேட்டான் கலியன்.

இப்போது, கலியனைப் பார்த்தாள்.

கிழவியின் கண்களில் பிரகாசம் கூடியது.

முகம் பிரசன்னமானது.

“இரு வாரேன்…!”

குடிசைக்குள் ஓடினாள்.

வெளியே வந்தபோது அவள் கையில் ஒருத் தாயத்து இருந்தது.

கிழவிச் சொன்னபடி, நகத்துணுக்குகளையும், தலைமுடியையும் திணித்துத் தாயத்தைக் கொப்பியால் அழுந்த மூடினான்.

அரணாக் கொடியை தாயத்தின் காதில் நுழைத்தான்.

கழுத்தில் ஆரமாய்த் தொங்கவிட்டுக்கொண்டான்.

அந்தக் கனம் முதல், மாதய்யாவை நெஞ்சுக்குள் மட்டுமின்றி, நெஞ்சுக்கு வெளியேயும் விசுவாசத்துடன் சுமக்கத் தொடங்கினான் கலியன்.

“ரெண்டு நாள்ல போகியல் வருது. போகியலும் அதுவுமா உச்சிமோடு பிச்சிக்கிட்டு, வானம் பாக்கற வூட்ல இருப்பியா…?”

உரிமையோடு கோபித்துக்கொண்டான் பந்தல் சரவணன்.

மொத்தமாகப் பிரித்தான்.

புதுக் கால்கள் நட்டான்.

கழிகள் மாற்றிக் கட்டி, புதிதாகவே கூரைப் போட்டுவிட்டான் சரவணன்.

புதுக்கீற்றிட்டு மூன்று நாட்கள் கூட ஆகாத்தால்,. ஈர நைப்புக் காயாதக் கீற்று, குடிசைக்குள் குளுகுளுப்பை நிறைத்தது..

‘போகிப் பண்டிகை’ என்பது கூட நினைவில் இல்லை கலியனுக்கு. கயிற்றுக் கட்டிலில் சுகமாய்த் தூங்கிக் கொண்டிருந்தான்.

மாதய்யா இருந்தவரை, பொங்கலுக்கு முதல்நாள், போகியன்று இப்படியாப் படுத்துக் கிடப்பான் கலியன்…?

“கலியா…! கொடாப்பு பிரிச்சி வாழைப்பழம் எடுக்க வேண்டாமா…?”

கேள்வி எழுப்புவார்.

“… … … … … … … … …”

‘சரி.. வா பிரிப்போம்…!’

மாதய்யாவும் கலியனும் கொடாப்புச்-சார்ப்புக்குப் போவார்கள்.

மூட்டம் பிரிக்கத் தோது சொல்வார்.

சீப்பரியும்போதே சூம்பல், குருடு, நரங்கல், நசுங்கல், இரட்டை, காயம்பட்டது, வெடித்தது, நுனிசீப்பு… என அனைத்தையும் ஒதுக்கிவிடவேண்டும் என்பார் மாதய்யா.

பார்த்துப் பார்த்துப் பவுன் போல வைத்து ஊதுவதால், கொடாப்புப் பிரிக்கும்போது ஒரேச் சீராகப் பழுத்து பார்வையாக இருக்கும் பழங்கள்.

எப்படி வைக்கிறோமோ, அப்படித்தானே எடுக்க முடியும்…

கொடாப்புக் கொட்டகையிலிருந்தே விநியோகம் தொடங்கிவிடுவார் மாதய்யா.

“இதை குருக்கள் வூட்டுல கொடுத்துட்டு வா…!”

“இது பட்டாபி வீட்டுக்கு…!”

“பஜனை மடத்துக்கு இந்த ரெண்டும்…!”

சில இடங்களுக்கு வாழைப் பழங்கள் மட்டும்…;

வாழைச் சீப்போடு, கரும்பும், இஞ்சி மஞ்சளும் சேரும் சில வீடுகளுக்கு …;

ஓரிருக் குடும்பங்களுக்குத் தேங்காய்களும் கூட உலுப்பையோடுப் போகும்.

அது மட்டுமா…!

குருத்து-மட்டை ஏகமாய் வெட்டச் சொல்வார்.

நூற்றுக் கணக்கில் தோரணம் முடைய வேண்டும் அவருக்கு.

மாதய்யா தென்னங்-குருத்தில், கிளி, நட்சத்திரம், காற்றாடி, குருவி, தாமரைப்பூ என்று வகை வகையாய்ப் பின்னுவார்.

ஓலையில் உங்கரம், கைக்கடிகாரம் எல்லாம் செய்து மாட்டிக்கொள்வான் கலியன். மீன் பின்னுவான், தாமரைப்பூ செய்வான்.

கிளி பின்னப் பலமுறைச் சொல்லிக் கொடுத்துவிட்டார் அவனுக்கு.

அது மட்டும் கலியனுக்கு வரவே இல்லை.

‘சுளீர்’ என்று குறுத்தோலை பிய்த்த மட்டைக் குச்சியால் அன்று அடித்த அடியை இன்று நினைத்தாலும் கலியனுக்கு வலிக்கும்.

அடுத்த பாட்டம் விநியோகம் தொடரும்.

பரங்கிகீத்து, பூசனிக் கீத்து, பச்சரிசி, விறகு …;

இது மட்டுமில்லை, மாவிலைக் கொத்துகள், தோரணங்கள்…;

மாடு-கன்று உள்ள வீடுகளுக்குப் பட்டிக் கட்டப், பீளைப்பூ, நெல்லி இலை, வேப்பிலை…;

எல்லாம் கொடுத்தனுப்புவார்.

ஓடும் பிள்ளையாய், அக்ரஹாரம் தெரு முழுதும் அய்யா சொல்லும் வீடுகளுக்குக் கொண்டுப் போய்க் கொடுத்துத் கொடுத்தே கலியனுக்குக் கையும் காலும் சோர்ந்துப் போகும்.

அப்போதுக் கலியனுக்கு ஆறு ஏழு வயது இருக்கும்.

வழக்கம்போல, போகியலுக்கு முதல் நாள் வண்டிக்காரனிடம் மொத்தமாகக் கரும்புப் கட்டு வாங்கிப் போட்டார் மாதய்யா.

“அய்யா…! நமக்குத்தான் ஏகப்பட்டக் காணி இருக்கே, ஒரு காணீல கரும்புப் பயிர் செஞ்சா, நம்ம வயல்லயே வெட்டிக்கலாமில்ல…?”

இயல்பாய்க் கேட்டான் சிறுவன் கலியன்.

“கரும்பு என்ன…!, துவரை, மொச்சைன்னு போட்டுக் கண்டுமுதல் எடுத்தாக்கூட வசதிதான்…! ஆனாக் காணி மொத்தமும் ஒரே ஊர்ல இருக்கே. ஜில்லாவுக்கு ஒரு காணியா இருந்தா அந்தந்த ஊர்ல விளையறப் பயிரைப் போட்டு எடுக்கலாம்.”

சிரித்துக்கொண்டேச் சொன்னார்.

அன்றுதான் கலியன் புரிந்துகொண்டான்.

‘உலகம் பூராவும் மண் இறைந்துக் கிடந்தாலும், ஒவ்வொரு ஊர் மண்ணும் ஒரு சில பயிரைத்தான் சிறப்பாக வளர்த்துக் கொடுக்கும் என்கிற ரசவாதத்தை.

“சும்மா… அது இதுன்னு ஏதாவது கேட்டுத் தொணதொணக்காம, வேலையப் பாருடா கலியா…!”

தொப்ளான் கலியனைக் கண்டித்தான்.

“அவனை ஏன் அடக்கறே…? கேள்விக் கேட்கவேண்டிய வயசு. தெரிஞ்சிக்க வேண்டிய வயசு. அவன் என்கிட்டேக் கேக்கறான். நான் சொல்லப்போறேன்…!”

தொப்ளானை அடக்கினார் மாதய்யா.

“நீ எதுனா கேளுடா கலியா. நான் எனக்குத் தெரிஞ்சதச் சொல்றேன்…”

கலியனைப் பார்த்துப் பாசத்தோடு சொன்னார்.

“அய்யா, அது வந்து…!”

ஏதோச் சமாதானம் பேச வந்தத் தொப்ளானை அடக்கினார்.

“நீ தோரணம் மொடையற வேலைய மட்டும் பாரு…!”

கடுமையாகவே எச்சரித்தார்.

மாதய்யா எந்த அளவுக்குப் பிரியமாய்ப் பேசுவாரோ, அந்த அளவுக்குக் கோபக்காரரும் கூட.

எதையும் முழுமையாகப் புரிந்து கொள்ள வேண்டும் என்று வற்புறுத்துவார்.

அரையும் குறையுமாகச் செய்யும் எந்த வேலையையும் அனுமதிக்கவே மாட்டார் அவர்.

அறியாமையால் எத்தனைப் பெரியக் குற்றம் செய்தாலும் அதை முழுமையாக மன்னித்துவிடுவார்.

அலட்சியமாய்ச் சின்னப் பிழைச் செய்தாலும் பொறுக்கவே மாட்டார்.

பொறுப்பில்லாமல் செய்யப்பட்ட எந்த வேலையாக இருப்பினும் ரௌத்ரமாகிவிடுவார்.

கலியனின் வயசுதான் துரைராமனுக்கும்.

ஆரம்பத்தில் கலியனைப் போலத் துரைராமனும் மாதய்யாவிடம் “அதென்ன…?, இதென்ன…?” என்று நிறைய்யக் கேட்டவன்தான்.

துரை கேட்டக் கேள்விகளுக்கெல்லாம் பொறுப்பாக ‘அந்த வயதுக்கு உரிய’ பதில் சொன்னவர்தான் மாதய்யா.

விவசாயம், உத்தியோகம் என்று எந்தப் பொறுப்பும் இல்லாமல், மாட்டுத் தரகு, வீட்டுத்தரகு என ஏமாளிகளை எத்திப்பிழைபவர் கிட்டாவய்யா.

பொழுதுக்கும் தெருத் திண்ணையில் உட்கார்ந்து, வெட்டிக் கூட்டத்தைச் சேர்த்துக் கொண்டுச் சீட்டாடுவார்.

பெரிதாகச் சிரிப்பார்.

அவரது கள்ளச் சிரிப்பின் பசையில் பதிந்து ஒட்டிக்கொண்டான் துரை..

தன் வலையில் விழுந்தவற்றைப் பிடித்து விழுங்கிவிடும் சிலந்திப் பூச்சியின் வலையில் விழுந்தான்.

தேனீயைப் போல உண்மையாய் உழைக்கும் மாதய்யாவின் அருமை தெரியவில்லை துரைக்கு.

ஒரு நாள் துரையின் கேள்விக்கு அறிவு பூர்வமாய் பதில் சொல்லி முடித்தார் மாதய்யா.

அந்த விளக்கத்தை அலட்சியப்படுத்தி, அசட்டுத்தனமான ஒரு விளக்கத்தைத் சொன்னான் துரை.

அறியாமல்தான் அப்படிச் சொல்வதாகத்தான் நினைத்தார் மாதய்யா.

அவன் பதிலைத் தொடர்ந்து, “கிட்டா மாமா இப்படிச் சொன்னார்ப்பா…!”

என்று சொல்லித் துரை இளித்தபோதுதான் மாதய்யா ரௌத்ரமானார்.

“இனிமே என் மூஞ்சீல முழிக்காதே, அந்தக் கிட்டாவையே கட்டிண்டு அழு…!”

கோபத்தில் கத்தினார்.

அன்று விட்டுப்போனதுதான்.

துரைக்கு எல்லாமும் ஆகிப் போனார் கிட்டா.

சாகும் வரை அப்பாவுக்கும் மகனுக்கும் பேச்சு வார்த்தையே அற்றுவிட்டது.

‘சின்னக் குழந்தைதானே…!’ என்று மாதய்யா, விட்டுக்கொடுத்திருக்கலாம்.’

நாக்கில் ஜன்ம சனி இருந்ததோ என்னவோ. இப்படி ஆகிவிட்டது.

‘இருக்கப்பட்டவனுக்கு போகியல்…!’

இந்தச் சொலவடையை அடிக்கடிச் சொல்வார் மாதய்யா.

“போகியல் அன்னிக்குப் பளசுப்-பட்டெல்லாம் போட்டுக் கொளுத்துறாங்களே…? ஏன்யா…?”

சிறுவன் கலியன் கேட்டான்.

‘குப்பையிலாமப் பயிர்விளையுமா…?

‘குப்பைப் போட்டு வளத்த பயிரைத்தான், உப்பைப் போட்டு ஆக்கித் திங்கறோம்.’

‘குப்பையே மாணிக்கம்…’

இப்படியெல்லாம் சொலவடையே இருக்கு கலியா…!”

கலியன் ‘ஆ’வென வாய்பிளந்துக் கேட்டான்.

“குப்பைய வீட்டுல வெச்சிருந்தா என்னாவும்?” கலியலிடம் கேட்டார் மாதய்யா.

“வீடு அசிங்கமா இருக்கும்…”

“அதைத் தூக்கி ஊரு ஒதுக்குப்புறமா போட்டா…?”

“வீடு சுத்தமாயிரும்…”

“… … … … … … … … …”

ஊரு ஒதுக்குப்புறம் மட்டும் அசிங்கமா இருக்கலாமாங்கய்யா…?”

கலியனின் சூட்சுமமான கேள்வியைக் காதில் வாங்கினார் மாதய்யா.

மகிழ்ந்தார்.

“அதனாலத்தான் அதைக் கொளுத்திச் சாம்பலாக்கிடறோம். அந்தச் சாம்பலை அள்ளிப் போய் வயக்காட்டுல தெளிச்சா, பயிருக்கு இயற்கையான சாம்பல் சத்து கிடைச்சுடுதே…!”

பொங்கலண்ணிக்குக் விடைகாலைல போகிச் சாம்பலக் கொண்டு போயி வயக்காட்டுல தூவிட்டு வந்துதான் வீட்டுல பொங்க வைப்பாங்க. அந்தச் சாங்கியம் தெரியுமில்ல…?”

“தெரியும்…!”

வீட்டுக் குப்பை, ஊர்க்குப்பை எல்லாத்தையும், ‘(நெல்) மணியா” மாத்திக்குடு சூரிய பகவானே’’னு பிரார்த்தனைப் பண்ணிக்கிட்டுத் தூவணும்…!”

“… … … … … … … … …”

“நாம என்னா செய்யறோம்…? போகியலண்ணிக்குச் சமைச்ச அடுப்புச் சாம்பலை கொண்டுபோயி கொட்டுறோம்…”

சொல்லிவிட்டுச் சிரித்தார் மாதய்யா.

அவர் சொன்னச் சாங்கியத்தின் உட்பொருள் பற்றிச் சிந்தித்தான் சிறுவன் கலியன்.

“கலியா, போகியலண்ணிக்கு குப்பைகூளத்தையெல்லாம் வீட்டை விட்டு வெளியேத்துறோம்தானே…”

“ஆமாம்…!”

“அந்த குப்பைங்களோட லட்சுமிதேவியும் வீட்டுக்கு வெளியே போயிடறாளாம்.”

“அய்யோயோ…! அட பாவத்தே…!”

“அதனாலத்தான் வீட்டுக்கு வெளீல போயிட்ட லட்சுமிதேவிக்குத், தெருவுல அடுப்புக் கட்டிப் பொங்க வைக்கறோம்.”

“… … … … … … … … …”

“பொங்கலோ பொங்கல்’ன்னு உற்சாகமாக் கூவி, வெட்ட வெளீல பொங்கிப் படைக்கறதுனால சூரிய பகவான் எக்கச்சக்கமாத் தின்னுப்புடறாரு… அதனால…!”

“அதனால…?”

விழி விரியக் கேள்வி வந்தது கலியனிடமிருந்து.

“குருத்தோலை முடைஞ்சிக்கிட்டேக் கேளு. சொல்றேன்…!”

கலியன் கைக் குருத்தோலைப் பின்னும்.

காதும் கண்களும் மாதய்யாவிடம் இருக்கும்.

இந்தக் காட்சியைக் அடிக்கடிக் காண்பாள் குந்தலாம்பாள்.

அகமகிழ்வாள்.

அதேச் சமயம், பெற்ற மகன் துரை இப்படி அவரிடம் ஒட்டுதலாய் இல்லையே என்ற ஆற்றாமையும் அவ்வப்போது எழும் அவளுக்கு.

மீண்டும் கதைத் தொடங்கியதும் கதைக் கேட்கும் ஆர்வத்தில் தோரணம் பின்னுதல் நின்றுவிடும்.

மீண்டும் ஏதாவது ஓரிடத்தில் ‘சஸ்பென்ஸ்’ வைத்துக் கதையை நிறுத்துவார்.

“ஓலை பின்னக்கிட்டேக் கேளு…!”

கலியனுக்கு நினைவட்டுவார் மாதய்யா.

அய்யா, எக்கச்சக்கமாப் பொங்கத் தின்ன சூரிய பகவானுக்கு என்ன ஆவும்…? சொல்லுங்கய்யா…!”

பரபரப்பான் கலியன்.

“நாம அளவுக்கு அதிகமாத் தின்னா என்னா ஆகும்…?”

“வயிறு நோவும்.”

“அப்பறம்…?”

“மேக்கால தோப்புக்கு ஓடி ஒதுங்குவோம்…!”

எல்லோரும் சிரித்துவிடுவார்கள்.

“அதேபோலத்தான், சூரிய பகவானுக்கும் வயிறு நோவு வந்துரும். மேற்கால போயி மறைஞ்சிடுவாரு.”

அப்போ வீட்டை விட்டு வெளியேப் போன லட்சுமி தேவி என்ன ஆவாங்க…?”

“அப்படிக் கேளு…!” லட்சுமிதேவிக்கு இருட்டுன்னா பயம்…!”

“எனக்கும்தான் பயம்…!” என்றான் கலியன்.

“சாயங்காலத்துல வாசல் பிறைலயும் சாமி மாடத்துல விளக்கேத்தி வைக்கறோமில்லையா…?”

“ம்..”

“அந்த வெளிச்சத்தைக் கண்டு, ‘டக்”குன்னு உள்ளே வந்துடறா லச்சுமிதேவி.

சின்ன வயசில் விளையாட்டாகவும், விளக்கமாகவும் மாதய்யாச் சொன்னவை எல்லாம் கட்டிலில் படுத்துக் கிடந்த கலியனுக்கு இப்போது சொல்வதுபோல ஒலித்தது.

‘ஏன் அய்யா வீட்டுக்குப் போகாம , இப்படி அடைஞ்சி கிடக்கறோம்…?’

தனக்கத்தானே கேட்டுக்கொண்டான்.

அந்தனூரில், மாதய்யா வீட்டு மாட்டுப் பொங்கல் கொண்டாட்டம் தான் மிகவும் பிரசித்தம்.

மாவிலைத் தோரணங்களால் சிரத்தையாக மாட்டுத் தொழுவத்தை அலங்கரிப்பார் மாதய்யா.

தொழுவம் முழுக்க, சின்னதும் பெசிசுமாய், வெள்ளையும், கறுப்பும், பழுப்பில் வெள்ளைப் பூத்துத் சிதறியும், இளங்கிடேரிகளும், சினைப் பசுக்களுமாய் வதவதவென்று நின்ற மாட்டுத் தொழுவத்தில் இன்று ஒரே ஒரு வண்டி மாடு மட்டும்…!

தொழுவமே ‘ஹோ’ வென வெறிச்சோடிக்கிடக்கே…?’

இப்படி நினைத்தவனுக்கு அப்பன் தொப்ளான் இருந்தபோது நடந்த ஒரு சம்பவம் ஞாபகம் வந்தது.

வயலில் கால்வைத்தார்கள் விவசாயக் கூலிகள்.

அதிகக் கூலி கேட்டார்கள்.

முதல் நாள் அறுவடையானவை அரி காய்ச்சலுக்காக வயலில் கிடந்ததைக் “கட்ட மாட்டோம்…!” என்றார்கள்.

வேலை நிறுத்தம் செய்தார்கள்.

‘இவர்கள் அம்புகள்தான்…!’

என்பது மாதய்யாவுக்குத் தெரியாதா என்ன?…

“சரி. நீங்க கட்ட வேண்டாம். நான் பாத்துக்கறேன்…”

தொப்ளானும் மாதய்யாவுமாக சின்னச் சின்னதாகக் கட்டுக்கள் கட்டிக் கொண்டுவந்து களத்தில் போட்டு கண்டுமுதல் எடுத்தனர்.

“லாபம்… ஒண்ணு… ரெண்டு… என்று எண்ணி அன்றைய கண்டுமுதலான பத்து மரக்கால் நெல்லில் கோவிலுக்கு இரண்டு மரக்காலும், வண்ணாண், நாவிதன், வெட்டியான் மூவரும்கு தலா ஒரு மரக்காலும் மானியம் அளந்து கொடுத்துவிட்டு, மீதியை கையடக்கமான கட்டாய்க் கட்டி வண்டியில் ஏற்றச் சொன்னார் மாதய்யா.

தொப்ளான் கண்ணீர் விட்டு அழுதுவிட்டான்.

“முன்னூறு கலம் நானூறு கலம் கட்டற களத்துல அஞ்சு மரக்கா கண்டுமுதலு ஏத்தச் சொல்றீங்களே…! மனசு தாங்கலா இருக்குய்யா…!”

“… … … … … … … … …”

மாதய்யா ஏதும் பேசவில்லை.

“நன்றியில்லாப் பசங்களைத் தலைமுளுவிட்டு கீளத்தெரு ஆளுங்களை வெச்சி கட்டியாரச் சொல்றேன்னு சொன்னேன். வேண்டாம்னுட்டீங்களேய்யா…!”

தொப்ளானின் நாக்குத் தழுதழுத்தது.

“தொப்ளா… கண்டுமொத வண்டீல ஏத்துறபோது கண் கலங்கலாமா…?

அஞ்சு பறையா இருந்தா என்ன, அஞ்சு மரக்காலா இருந்தா என்ன…? அஞ்சு படியோ, ஆழாக்குதான் இருக்கட்டுமே… அவ்வளவு ஏன்…? அஞ்சே அஞ்சு குந்துமணியாத்தான் இருந்தா என்னவேய்…! கண்டுமொத கண்டுமொத்தானேவேய்.”

“… … … … … … … … …”

“அவனுவதான் மொறைத் தப்பிப் பாதி வேலைல ஆட்டங்காட்டறானுவன்னா, நாமளும் மொறை பிசகலாமா…? கூடாதுவேய். வேற ஆளுவள விட்டோம்னு வெச்சிக்க. நாங்க தொட்ட வேலைய நீ எப்படித் தொட்டெ’ன்னு சட்டம் பேசுவானுவ…!”

“… … … … … … … … …”

தொப்ளன் பதிலேதும் சொல்லவில்லை.

“அதைத் தூண்டிவிட்டு குளிர்காயவும்தான் செய்வாங்க. அது சரீ…! அப்படி அவுசரமா கட்டித்தான் ஆவுணும்னு என்ன இருக்கு.. இன்னும் ஒரு ரெண்டு நாள் அரிகாச்சக் கெடந்தாக்கூட நல்லதுதானே…”

தெருச்சண்டைக்கெல்லாம் வழி வைக்காம, இன்னிக்கு நாமளே வேலை முடிச்சிட்டோம். இப்ப, அவனுவ வேலை அறுந்துபோச்சு…!”

‘இதுபோல சாதுரியமான முடிவெடுக்க மாதய்யாவால் மட்டுமே முடியும்…!’

நினைத்துக்கொண்டான் தொப்ளான்.

“நாளைக்கு கட்டுக் கட்ட கீளத்தெரு ஆளுவளைச் சொல்லிரவாய்யா…?”

“அவசரப்படாதே. நாமளே கட்டுக் கட்டி கண்டுமொத ஏத்தி அறுத்துவிட்டதைப் பாத்துட்ட இவனுவளே நாளைக்கு படிஞ்சிருவானுங்க…!”

“நாளைக்கு வரட்டும்…! அவனுவத் தலைலச் சாணி கரைச்சிக் கொட்டுறேன்…”

“ஆத்தரப்படாத தொப்ளா. அறியாமப் பண்ணிட்டானுவ. நல்லவன்-கெட்டவன் தெரியாம நடத்துக்கிட்டானுவ. விடு. வந்தா நீ எதுவும் பேச வேணாம். என்கிட்டே அனுப்பு நான் பேசிக்கிடறேன்…”

வழக்கமாக வண்டி பூராவும் பாரமேற்றியபின் உச்சியில் உட்கார்ந்துகொண்டு வருவான் சிறுவன் கலியன். அவனுக்குக் கூட இந்த ஐந்து மரக்கால் மூட்டையின் மீது உட்கார்ந்து சவாரி செய்வது சங்கடமாய்தான் இருந்தது.

“அறுப்பறுத்துக் கட்டுக் கட்டி
அடியடிச்சித் தூத்திப் போட்டு,
அம்பட்டன், வெட்டியான்னு
அஞ்சு கலம் அளந்துப்புட்டு
குதிர் நிறையக் கோவிலுக்குக்
குலுங்கக் குலுங்க அள்ளிப்போட்டு
களங்கூட்டிக்கு அஞ்சு கலம் அளந்துவிட்டு
பாரவண்டி நிப்பாட்டி
அஞ்சு மரக்கா நெல்லேத்தி
அசைஞ்சாடி அசைஞ்சாடிப்
போவுதுடா கண்டுமொத…!”

மேலத்தெருவான் ஒருத்தன் பகடி பாடினான்.

வண்டி ஓட்டிக்கொண்டிருந்த தொப்ளனுக்கு கோபம் உச்சிக்கு ஏறியது.

“தொப்ளா… வாயி தொறக்காம வண்டிய ஓட்டு…”

எச்சரித்தார் பின்னால் வில் வண்டியில் வந்த மாதய்யா.

வண்டி மெதுவாகப் போய்க்கொண்டிருந்தது.

தொண்டையைக் கனைத்துக் கொண்டார் மாதய்யா.

“அறுத்துப் போட்டக் கருதுங்களை
கட்டுக் கட்ட பயந்துக்கிட்டு
பொல்லாதான் சொல்கேட்டுப்
பொறம்போக்குப் போனவரே…
பாண்டவரு அஞ்சு பேரு…
பஞ்ச பூதம் அஞ்சுத்தான்…
அஞ்சோட அருமை ஆயிரம் இருக்குலே…
அஞ்சு ஒண்ணும் குத்தமில்லே
தெரிஞ்சிக்கோங்க வஞ்சகரே…!”

எதிர் பாட்டுக் கட்டினார் மாதய்யா…

குடி போதையில் மருதை, மாதய்யாவிடம் வம்பு செய்கிறான் என்பது தெரிந்து மேலத்தெருவாசிகள் நேரில் வந்து மாதய்யாவிடம் மன்னிப்புக் கேட்டனர்.

கிட்டாவய்யாவின் தூண்டுதலால்தான் செய்ததாகவும் ஒப்புக்கொண்டனர்.

வண்டி நிறுத்திக், கண்டு முதலை கொண்டு போய் கூடத்தில், குத்து விளக்கு ஒளிர்ந்துகொண்டிருந்த ஸ்வாமி மாடத்தின் முன் வைத்தான் தொப்ளான்.

தொடர்ந்து குந்தலாம்பாள் சாம்பிராணிப் புகை போட்டாள்.

தான்ய லெக்ஷ்மி ஸ்லோகம் சொன்னாள்.

தொப்ளனுக்கும், மாதய்யாவுக்கும் சூடாகக் காப்பி கொண்டு வந்து வைத்தாள்.

தொப்ளன் வண்டி நுகத்தடியில் வைத்து காப்பி குடித்து முடித்தான்.

மாதய்யாவின் உத்தரவுப்படி “கடப்பாரை, மம்முட்டி இதுகளை வண்டியில் எடுத்துப் போட்டுக்கொண்டான்.”

வண்டி கிட்டாவய்யாவின் புஞ்சை நோக்கிச் சென்றது.

கிட்டாவய்யா செய்தி அறிந்து வந்து பார்த்தபோது, கருப்புட்டிக்காரத்தெரு ஜனங்கள் அங்கே கும்பலாக நின்றிருந்தார்கள்.

தன்னுடைய காணியில் பொதுப்பாதை செதுக்கப்பட்டிருந்தது.

தெரு ஜனங்களுக்கு இடைஞ்சலாக இருந்ததால் கிட்டாவய்யா ஆக்ரமித்திருந்த சமுதாய இடத்தைத்தான் தெருக்கூடி மீட்டதாக ஊர் பேசியது.

இரண்டடிதான் ஆக்ரமிப்பு என்றும் ஐந்தடியை எடுத்துக்கொண்டதாகவும் கணக்குப்பிள்ளைக்கு மனு கொடுத்தார் கிட்டாவய்யா.

கிட்டாவய்யா, சொற்ப பணம் பெற்றுக்கொண்டு தன் நிலத்தை ஊருக்கு விட்டுத் தருமளவுக்கு சிக்கலைப் பெரிது படுத்திவிட்டார் கணக்கப்பிள்ளை.

“ஊர் பொது நன்மைக்காக நாம சட்டம் பேசணும்;

மோடு முட்டித்தனமாக்கூட நடந்துக்கலாம் தப்பில்லே;

ஊருக்கு தொண்ணூத்தொம்பது லாபம், தனி மனிசனுக்கு ஒண்ணே ஒண்ணுதான் நட்டம்னு வரும்போது பொது நன்மைக்காக எவர் முகத்தையும் முறிச்சிக்கலாம்டா…!

ஜெயிச்சிக் காட்டணும்டா..”

அன்று மாதய்யா தொப்ளானுக்குச் சொன்ன வாக்கு.

இன்று தனக்குச் சொல்வதாக உணர்ந்தான் கலியன்.

“ஜெயிச்சிக் காட்ணும்டா…!”

வாசகம் பொட்டில் அடிக்கிறாற்போல இருந்தது கலியனுக்கு.

மனதில் ஒரு வைராக்யத்தோடும், முடிவான முடிவோடும் அக்ரஹாரத் தெருவை நோக்கிச் நடந்தான் கலியன்.

காளவாய்க் கனவுப் பொடிப்பொடியாய்த் தகர்ந்துபோனதை விடக், கலியன் ஆறுதல் சொல்லுமளவுக்கு ஆகிவிட்ட நிலை, துரைராமனை மிகவும் பாதித்தது.

புயலால் உருத்தெரியாமல் போன சம்பாக்காணி கண்முன்னே வந்து வந்துக் காயப்படுத்தியது.

“கலியனை சும்மா விடக்கூடாது…!”

கருவினான் துரைராமன்.

‘முதுகுக்குப் பின்னால் நம்மைப் பார்த்துச் சிரிக்கும் அளவுக்கு ஆகிவிட்ட நிலை அவனை நிலைகுலைய வைத்தது.

ஆபீசில் சாட்சி போட்டு வாங்கிக் கொடுத்த கடனுக்கு வட்டியும் அசலுமாக சம்பளத்தில் பிடித்துக்கொண்டார்கள்.

மறு பக்கம், கடன் கொடுத்த ஃபைனான்ஸியர் பணத்துக்கு நெருக்கினான்.

சமாளிக்க முடியாமல் திணறினான் துரைராமன்.

பயித்தியம் பிடித்தாற்போல் புலம்பினான்.

பிரமை பிடித்தாற்போல் நடந்துகொண்டான்.

ஆறுதல் சொன்னாள் மனைவி மோகனா.

“என்னந்நா… ஏதோ காசு நஷ்டத்தோட போச்சேனு விடுங்கோ… மனசுல போட்டுக் குமையாதேள்…”

அக்கரையோடுதான் சொன்னான்.

அப்போது இருந்த மனநிலையில் அது ஆறுதலாகப் படவில்லை துரைக்கு.

‘நான் ஆரம்பத்துலயே சொன்னேனே, கேட்டியா, இப்போ இப்படி அழிச்சிட்டு வந்து நிக்கறியே…?”

என்று மனைவி குத்திக் காட்டுவதுப் போலஙப பட்டது துரைராமனுக்கு.

“தப்பு என்மேலதான். நான் தப்புதான் பண்ணிட்டேன்..தப்பு… தப்பு… எல்லாமே தப்பு…!”

மனைவி ஏதோ பேச வர அடக்கினான்.

குழந்தை ரஞ்சனி அப்பாவைப் பார்க்கவே பயந்ள்.

இப்படியெல்லாம் புலம்பியவன் டக்’கென்று வீட்டை விட்டு வெளியே வந்தான்.

மோகனா எது சொன்னாலும் விபரீதமாகிவிடும் என்பதால் பகவானை வேண்டிக்கொண்டாள்.

ரூபாய் நாணயம் எடுத்துச் சுவாமி ஒரு சின்னத் துணியில் முடிந்து ஸ்வாமி மேடையில் வைத்தாள்.

எல்லாப் பிரச்சனையும் சமனமாகணும் ஸ்வாமி…!”

வேண்டிக்கொண்டாள்.

சுங்குவார் தெருவில் இருந்து கிளம்பியவன் மவுண்ட் ரோடு பஸ் ஸ்டாப்பில் நின்றான்.

கபாலீஸ்வரர் கோவிலுக்குப் போய் வந்தால் தேவலை எனத் தோன்றியது.

நின்று நின்று பார்த்தான்.

மயிலாப்பூர் பஸ் வருவதாகத் தெரியவில்லை.

நீண்ட நேரம் நிற்கவும் பொறுமையில்லை அவனுக்கு.

கெல்லட் பள்ளி தாண்டி, மனம் போன போக்கில் நடந்தான். பார்த்தசாரதி கோவில் கொடிக்கம்பத்துக்கு முன் சிறிது நேரம் உட்கார்ந்தான்.

வாய் “தப்பு…! தப்பு…!! எல்லாமேத் தப்பு…!!!” என்று முனகிக் கொண்டிருந்தது.

தன் அறியாமை, அறிவின்மைப் பற்றி நினைத்து நினைத்து மருகினான்.

தன் அறியாமையை மற்றவன் பயன்படுத்திக் கொள்வதை மட்டும் எவராலும் தாங்கிக் கொள்ள முடியாதுதானே…

அறியாமைக்குக் காரணம் என்ன…?

மனம் கேட்க புத்தி விழித்தது.

“ நீ அறிந்துகொள்ளவில்லை.” என்றது.

“இல்லை…! என்னை அறிந்துகொள்ள விடாமல் தடுத்தது கலியன்தான்…”

குற்றம் சாட்டியது மனம்.

புத்தியும் மனமும் தர்க்கம் செய்துகொண்டன.

பார்த்தசாரதி சந்நிதிக்குள் சென்றான்.

தெய்வத்திடம் மனம் செல்லவில்லை.

புத்தி அவனை அங்கிருந்து வெளியேறச் சொல்லியது.

இலக்கின்றி நடந்தான்.

முத்துக்காளத்தித் தெரு வழியாக பைக்கிராப்ட்ஸ் ரோடு வந்தான்.

பிளாட்ஃபாரம் பூராவும் பரத்தப்பட்டிருந்த பழைய புத்தகக்கடைகளைப் பார்த்தான்.

எல்லாப் புத்தகங்களும் அவன் அறியாமையைக் குத்திக்காட்டுவதுபோலத் தோன்றியது அவனுக்கு.

கண்ணகி சிலை கடந்து கடற்கரையில் சென்று உட்கார்ந்தான்.

“நீங்க துரைராமன்தானே…?”

“ஆமாம்…”

கேட்டவனை யாரென நினைவுக்குக் கொண்டு வரச் சிறிது நேரம் யோசித்தான்.

“ஹாய்…! ராமநாதனா…? நீ மெட்ராஸ்லதான் இருக்கியா…?”

ஆறாம் வகுப்பில் உன்னால நான் கெட்டேன் என்னால நீ கெட்டே என்று தோப்புக்கரணம் போட்ட நண்பர்கள;

கால ஓட்டத்தில் இப்போது மெரீனா பீச் கண்ணகி சிலை அருகில் சந்தித்துக்கொண்டார்கள்.

“நீ மெட்ராஸ்ல செட்டில் ஆயிட்டியா ராமநாதா?”

“ம்…!”

“திருச்சீல ஏஜன்ஸி வெச்சிக் கொடுத்தாரே உன்… காட்ஃபாதர்…!”

“அவரை விட்டுட்டு வந்துட்டேன் நான்…!”

“ஏண்டா..?”

“என் காட் ஃபாதர், சிந்தாமணி கோபு சார் ரொம்ப நல்லவர்டா. நான் அவர்கிட்டே ஒட்டிக்கிட்டிருந்ததால, என்னோடத்தான் எப்பவும் இருப்பார்.”

“…”

“என்ன ஆச்சோ ஏது ஆச்சோ தெரியலை.. ஒரு நாள் நானும் அவரும் வாசல் திண்ணைல உட்கார்ந்திருந்தோம்;

பெத்த மகன் வந்தான்;

அப்பா, இந்த வீட்ல நான் இருக்கணும் இல்லே இந்த ராமனாதன் இருக்கணும்…!” என்றான்.

தூக்கி வாரிப் போட்டது எனக்கு..

“ஏண்டா…! ராமனாதன் உனக்கு என்ன செஞ்சான்…? ஏன் இப்படியெல்லாம் பேசறே…?”

பாவமாய்க் கேட்டார் அவர்.

“ஒண்ணு நான்… இல்லே அவன்..!”

“…”

“மீண்டும் மீண்டும் அதையேச் சொன்னானே ஒழிய காரணம் சொல்லவேயில்லை.”

“உனக்குக் காரணம் சொல்ல வேண்டிய அவசியமில்லை…”

என்ற பிடிவாதம் அவன் பேச்சில் இருந்தது.

‘நம்மால் எதுக்குச் சங்கடம்,’ னு தோணிடுச்சு.

சொல்லாமல் கொள்ளாமல் கெட்டும் பட்டணம் சேந்தேன்.

***

அதற்குப் பின் ராமனாதன் சொன்ன எதுவும் துரைராமன் மனதில் ஏறவே இல்லை.

சிந்தாமணி கோபு சார் மகனைப் போல,

‘ஒண்ணு நான் இருக்கணும், இல்லே இந்தக் கலியன் இருக்கணும் இந்த வீட்ல…!’ என்று நான் ஏன் சொல்லவில்லை.

“அப்படிச் சொல்லாததுதான் நான் செய்த முதல் தப்போ…? முதல் தப்பு முற்றிலும் தப்பாகிவிட்டதோ…?”

“என்னடா துரை அப்படி யோசிக்கறே..? ஏதாவது பிரச்சனையா உனக்கு…

சொன்னான். ஆதியோடந்தமாக எல்லாவற்றையும் சொன்னான்.

துரையின் பார்வை ராமநாதன் மீதும் இல்லை. வெளியிலும் இல்லை. இரண்டுக்கும் மத்தியில் எங்கோப் பார்த்தபடிப் பேசினான்.

“சமாளிக்கத் தெரியாம கிட்டாவய்யாவிடம் தப்பி வந்த கனத்தை நினைக்க நினைக்க வெட்கமா இருக்கு ராமனாதா…!”

தலையைக் குனிந்துகொண்டான். புழுங்கினான் துரை.

“வெட்கம் வர்றது நல்ல விஷயம்தான். தப்புத் தப்பா ஏதும் ரியாக்ட பண்ணாம வெட்கத்தை சகிச்சிக்கிட்டது ரொம்ப சிறப்பான விஷயம்தான் துரை.

சமாதானம் சொன்னான் ராமனாதன்.

“ஏற்கெனவே நடந்து போனது போனதுதான். ஃப்யூச்சர்லயாவது என்னால சாத்தியமானதைச் செய்யணும் ராமநாதா…!”

“செய்…!”

“உன் ஹெல்ப் வேணுமே…!”

“சொல்லு, முடிஞ்சதச் செய்யிறேன்…!”

“சிவில் வக்கீல் யாராவது பழக்கமுண்டா…?”

“எதுக்குடா…?”

“எங்கப்பாவுக்குப் பிறகு, அவரோட சொத்துக்கு நான்தான் ஒரே வாரிசு. குத்தகைக்கு விட்ட நிலங்களை நான் பொஸஷன் எடுக்கணும். அதுக்கு யோசனை கேக்கணும். திருச்சீல எந்த வக்கீலைப் பாத்தாலும் செய்தி லீக் ஆயிடும்…!”

“இதென்ன பிரமாதம்…!” என்றான் ராமனாதன்.

***

அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் வக்கீல் வாதிராஜன் முன் துரைராமனைக் கொண்டுபோய் நிறுத்தினான்.

“என் க்ளாஸ்மேட்…!”

என்று சொல்லி அறிமுகப்படுத்தினான்.

“சரி இந்தா என் விசிட்டிங் கார்டு…! நேரம் கிடைக்கற போது வா…!”

சொல்லிவிட்டு, வக்கீலோடு பேசுபவனுக்குத் தடையாக இருக்கக் கூடாது என்று நினைத்தவன் போல் கிளம்பினான் ராமனாதன்.

“பத்து நிமிஷம் வெய்ட் பண்ணுங்க…!”

சொல்லிவிட்டு ஏற்கெனவே இருந்த கிளையண்ட்டோடு லா பாயிண்ட்ஸ் பேசிக்கொண்டிருந்தார் வக்கீல்.

வக்கீலிடம் எப்படிப் பேச்சை ஆரம்பிப்பது என்பதை மனதில் ஒத்திகை பார்த்துக் கொண்டு பார்வையாளர்கள் அறையில் உட்கார்ந்திருந்தான் துரை.

அத்தியாயம் – 24

அட்வகேட் வாதிராஜன் அலுவலகத்தில் பார்வையாளர்கள் அமருவதற்கான ‘வெயிட்டிங் ரூம்’ மிகவும் நேர்தியாக இருந்தது.

சுவற்றில் தொங்கிய காலண்டர்.

அதற்குக் கீழே தரையில் குவித்த ஆற்று மணல் மேல் குடிநீர்ப் பானை.

எதிரெதிரேக் கிடந்த இரண்டு குஷன் நாற்காலிகள்.

பக்கவாட்டில் கிடந்த டீப்பாய்.

அறையைச் சுத்தம் செய்யும்போது இழுத்து விட்டாற்போல இருந்தது.

டீப்பாய் மேல் ஒரேப் பத்திரிகை நிறுவனம் வெளியிடும் ஆங்கில மற்றும் தமிழ் தினசரிகள் இருந்தன.

துரை சுத்தமான அந்த அறையை வியப்புடன் பார்த்தான்.

‘இவ்வளவு சுத்தமா இந்த அறையை வெச்சிருக்கற அட்வகேட், ஏன் அவர் புழங்கற ஆபீஸ் ரூமை இப்படி அடைசலா வெச்சிருக்காரு…?”

வாழ்வில் சுவாரசியத்தைக் கூட்டும், இரு துருவங்களின் இன்றியமையாமைப் பற்றியப் புரிதல் இல்லாத துரைக்குள் இப்படிப் பட்டக் கேள்வி எழுவது இயல்புதானே.

***

நாற்காலி கிடந்த வாட்டத்திலேயே துரை உட்கார்ந்தான்.

மின் விசிறிக்குக் கீழே டீபாயை மையப்படுத்தி இழுத்து வைத்து, நாற்காலிகளை முறையாய், இருபுறமும் நேர்த்தியாய்ப் போட்டுவிட்டு, உட்கார அது என்ன அவன் சொந்த வீடா என்ன?

சற்றே எட்டத்தில் கிடந்த டீபாயில் இருந்தச் செய்தித்தாள், அவன் கவனத்தை ஈர்க்கவில்லை.

அட்வகேட்டிடம் சொல்ல வேண்டிய விவகாரங்களை மனதில் வரிசைப் படுத்திக் கொண்டான்;

தெரிந்து கொள்ளவேண்டியச் செய்திகளை சிந்தித்துக் கொண்டிருந்தான்.

அறைக்குள் மற்றொரு கிளையண்ட் வந்தார்.

புதுமுகம் பாராமல் துரையைப் பார்த்துக் கைக் கூப்பி “வணக்கம்…!” என்றார்.

புன்னகைத்தார்.

பேசினார்.

“மாஜிஸ்ட்ரேட் கோர்ட்டுல, இன்னிக்குக் ‘ஃபோர்நூன்-சிட்டிங்லதான் தீர்ப்பாச்சு. மதியம் ‘டிக்ரி’ கைல வந்துடும். சாயங்காலமா வாங்கிக்கிடலாம்ன்னார் அட்வகேட். அதான் வந்தேன்.” என்றார்.

“அப்படியா…?”

அசடு வழிந்தான் துரை.

எதிர் நாற்காலியில் உட்கார்ந்தார்.

டீபாயில் கிடந்த செய்தித்தாளை எடுக்க கையை நீட்டினார்.

அப்போது வக்கீல் குமாஸ்தா உள்ளே வந்தார்.

“ஒங்களை வரச் சொன்னாங்க…!”

‘டிக்ரி’ வாங்க வந்தவரைப் பார்த்துச் சொன்னார்.

‘வேற்று முகம் பாராது, கல கலவென்று சகஜமாய்த் தன்னிடம் பேசிய அந்த நபரை எப்படிச் சமாளிப்பது…?’

தடுமாறிக்கொண்டிருந்த நேரத்தில், அந்த ஆள் எழுந்து போனது ரிலீஃப் ஆக இருந்தது துரைக்கு.

***

“டெனட்டை வெகேட் பண்ண வைக்கணும்;

அதானே…!” நேரடியாகப் பளிச் என்று விஷயத்துக்கு வந்தார் வக்கீல் வாதிராஜன்.

“ஆமாம் சார்…”

“குத்தகை நெல்லு சரியா அளக்காம பிரச்சனை பண்றானா டெனண்ட்…?

“அதுலெல்லாம் குறையே வைச்சதில்லை அவன்…!”

“அளந்ததுக்கு நீங்க அக்னாலெட்ஜ்மெண்ட் கொடுப்பீங்கதானே…?”

“உடனே கொடுத்துருவோம்…!”

“…”

சில கனங்கள் யோசித்தார் அட்வகேட்.

“நீங்கச் சொல்றக் கண்டிஷன்ல, டெனட்டைச் சட்டப் பூர்வமா வெளியேத்தவே முடியாதுங்களே…!”

சிதறு-தேங்காய் உடைத்தாற் போல “படார்…!” ரென்று சொல்லிவிட்டார்.

“…”

இப்படி ஒரு கருத்தை அட்வகேட்டிடம் எதிரேப் பார்க்காத துரை வாயடைத்துப் போனான்.

வக்கீலேத் தொடர்ந்தார்.

“கேக்கறேனேனு நினைக்காதீங்க…! நீங்க வெவரம் தெரிஞ்ச நாள்லேந்து மெட்ராஸ்லதான் இருக்கீங்களா…?”

“ஆமாம் சார்…! நாளு-கிழமைன்னா கிராமத்துக்குப் போவேன்…!”

“ஓ…! நான் நினைச்சதுச் சரிதான்…! கிராமத்துலக் குப்பைக் கொட்டினவன் எவனும் டெனண்ட்டை வெகேட் பண்ணக் கோர்ட்டுக்கு வரமாட்டான்..;

மேட்டை வெட்டிப் பள்ளத்துலப் போட்டு, எறங்கி ஏறி மேக்கரிச்சி மேஞ்சிச் செஞ்சிடுவான் வெச்சி. ”

“அப்படீன்னா…?”

கிராமத்து அனுபவமே மருந்துக்குக் கூட இல்லாத துரைராமனை நினைத்துப் பரிதாபப் பட்டார் அட்வகேட்.

கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டாற்போல், திரு திரு வென்று முழித்துக் கொண்டிருந்தான் துரை.

“…”

சிரித்துக் கொண்டார் அட்வகேட்.

கிளையண்ட், தப்பாக நினைத்துவிடக்கூடாது, என்பதற்காக துரையைப் பார்த்துப் பேசினார்.

“கிராமத்துலயேக் கொட்டைப் போட்டவங்க இது போலச் பிரச்சனைங்களை வேற மாதிரி சமாளிப்பாங்க;

ஒரு சில பேர் ஒங்கள மாதிரி கேஸாடுறதும் உண்டு;

ஆனாப் பாருங்க…, வருஷக்கணக்குல வாய்தா வாங்கி வாய்தா வாங்கி ;

அலைஞ்சித் திரிஞ்சிக், காசையும் தண்ணியாச் செலவுப் பண்ணி, நிம்மதியில்லாம அலையுவாங்க;

எவ்ளோக் கேசுப் பாக்கறேன் நான்…!”

இயல்பாகப் பேசினார்.

கேஸ் பிடிக்கவேண்டும் என்று வாய்ச் சவடால் பேசாமல், யதார்த்தத்தைப் பேசினார் வக்கீல்.

***

வக்கீல் வாதிராஜன் நடுத்தர உயரமுள்ளவர். பளிச்சென்ற நிறம். நெற்றியில் லேசாகத் தெரியும் குங்குமம், அடிக்கடி வெற்றிலைப் போட்டுக் குதப்பிப் குதப்பிக் கடைவாயில் மைனா-வாய் போல, நிரந்தமாகத் தங்கிவிட்ட பிளவு. நரையும் செம்பட்டையும் சரிவிகிதத்தில் கலந்து கட்டிய கேசம். முன் வழுக்கையை மறைக்க, மேலே ஏற்றி வாரியத் தலைமுடி.

அவருடைய இருக்கைக்கு பின்னால், அலமாரியில் குறிப்பெடுத்துவிட்டோ, எடுப்பதற்காகவோ, ‘புக் மார்க்’ செருகப்பட்டிருந்தச் சட்டப் புத்தகங்கள்.

புத்தக வரிசை கலைந்தும், சிதைந்தும் இருந்தன.

வசதிக்காகப் பீனல் கோடுகளைக் குறித்து வைத்திருக்கும் குறிப்பு டைரிகள்..

சைக்ளோஸ்டைல் மிஷின்.

டிம்மிப் பேப்பரை நெடுக்கு வசத்தில் மடித்தாற்போல் கேஸ் கட்டுக்கள்.

ரப்பர் ஸ்டாம்ப் ஒத்தவும், இடது கை பெருவிரல் ரேகை அழுத்தவும் வசதியாக ஸ்டாம்ப் பேடு.

பல்குத்தும் குச்சி, நெய்ல் கட்டர். காதுக் குரும்பை, இங்க் பாட்டில், கோந்து பாட்டில், பேனாக்கள், ஸ்டாப்ளர், குண்டூசி டப்பா, பேப்பர் வெயிட், கத்தரிக் கோல், ஊசி நூல்… இத்யாதிகள்

கண்ணாடிக் கதவிட்ட பீரோ இருந்த அடுத்த அங்கனம் சற்றே சுத்தமாக இருந்தது.. பீரோவின் அருகில் சன்னல். சன்னலுக்குக் கீழ் ஒரு அரை நாற்காலியில் சதுரவடிவில் இல்லாமல், வட்ட வடிவில் கீ போர்டு வைத்த ‘ஹால்டா’ டைப்ரைட்டர்.

தமிழா ஆங்கிலமா என்று அனுமானிக்க முடியவில்லை.

காரணம், கீ போர்டில் எழுத்துக்கள் எல்லாம் விரல் முனைப் பட்டுப் பட்டுத் தேய்ந்து, அழிந்திருந்தன.

அந்த ஹால்டா உபயோகத்தில் இருப்பதாகத் தெரியவில்லை.

***

ஆபீஸ் அறை இருந்த நிலையைப் பார்த்தபோதே

‘பிஸியான அட்வகேட்…’ என்பது தெரிந்தது.

அறையின் கீழக் கோடியில் மூன்றுக்கு இரண்டு சைஸில், சட்டமிட்டு மாட்டப்பட்டப் புகைப்படம்.

பார்ப்பதற்கு அச்சு அசல் அப்படியே வாதிராஜனைப் போலவே இருந்தது.

‘வாதிராஜனின் அப்பாவாகத்தான் இருக்கவேண்டும்…!’

அந்தப் படத்தின் மேல் தொங்கியதுக் காய்ந்த மாலை.

சென்றப் பிறந்தநாளன்றோ, நினைவு நாளன்ளோ போடப்பட்டிருக்கவேண்டும். காய்ந்த மாலையில்ப் படிந்திருந்த தூசுகளும், நூலாம்படைகளும் பார்க்கும்போது, எப்படியும் நான்கு மாதத்திற்கு முன் போடப்பட்ட மாலையாகத் தோன்றியது.

துரையின் மனதில் அப்பாவின் நினைவு வர வலுக்கட்டாயமாக கண்களை வேறுபுறம் நகர்த்தினான்.

அடர்த்தியாய் அகலமாய் சுவற்றின் மூலையில் விரித்திருந்த தன் எச்சில் கூட்டில் விழுந்த ஈசலை பிடித்துக் கொன்றுகொண்டிருந்த சிலந்தி துரையின் கண்ணில் பட்டது.

***

வக்கீல் வாதிராஜன் துரைராமனைத் தீர்க்கமாகப் பார்த்தார்.

‘ஹோ…ஹ்…ஹோ… ஹோ…!’

புகையிலைச் சாறுச் சிந்திவிடாமல் கழுத்தை அன்னாந்துக்கொண்டு வாய்விட்டுச் சிரித்தார்.

ஆங்கிலத்தையும், தாய்மொழியையும் கலந்து, புரியாதப் பீனல்கோடுகளையும் கலைச் சொற்களையும், சொல்லி விளக்கி, தங்கள் பாண்டித்தியத்தைக் காட்டிக்கொள்ளும் வக்கீல்களைப் இல்லாமல், பாமரனுக்கும் புரியும் வண்ணம் எளிதாகப் பேசினார் அட்வகேட்.

***

வாய்திறந்துப் பேசாமல் யோசனையில் ஆழ்ந்திருந்த துரையிடம் வெள்ளந்தியாகக் கேட்டார்.

“டெனண்ட்’ முறையா, சரியா அளக்கறான்கறேள். என்னத்துக்கு அவனை காலிபண்றேள்…!;

உடனடியா பொஸஷன் எடுக்க வேண்டிய நிர்பந்தம் என்ன…?;

சொல்லுங்கோ…?”

‘என்ன பதில் சொல்வது…?’

யோசித்து வைத்திருக்கவில்லை துரை.

வகுப்பறையில், ஆசிரியர் கேட்கும் கேள்விக்குப் பதில் தெரியாத மாணவன், தெரிந்த பதிலைக் கூற யோசிப்பதைப் போல நடிப்பானல்லவா…;

அதுப் போல, ஒன்றும் சொல்லாமல், ஏதோச் சொல்ல வருபவன் போலத் தலையை ஏற்றுவதும் இறக்குவதுமாக நடித்தான் துரை.

‘கிளையண்டிடமிருந்து பதில்வராது…!’

உறுதியாய் அறிந்த வாதிராஜன், சிறு இடைவெளிக்குப் பிறகுக் கேட்டார்.

“சொந்தமா சாகுபடி பண்ற ஐடியாவா?, சேல்ஸ் பண்ண உத்தேசமா…?”

“சேல்ஸ் பண்றதுதான்.”

“உள்ளூர்ல ஒசந்தக் கையா, பிராபல்யமா இருக்கற ஆசாமிக் கிட்டேக் கொடுத்துட்டா, அவா எல்லாத்தையும் மேக்கரிச்சுடுவாளே…!”

“முறைப்படிப் பொஸஷன் எடுத்தப் பிறகு வித்தா விலைப் போகுமேனு…!”

“அதுவும் சரிதான். ஊதி ஊதிப் பெரிசாக்கிப் பிரதிவாதியைச் சுத்தல்ல விடலாம்னா அவன் பக்கம் சின்னச் சறுக்கல் கூட இல்லியே…!”

முகவாய்க் கட்டையில் கை வைத்தபடி யோசனையில் ஆழ்ந்தார் வாதிராஜன்.

***

“வக்கீல் சார் எனக்கு ஒரு சந்தேகம்.”

“கேளுங்கோ…!”

“சரியா அளக்காத டெனண்ட்டுன்னா, உடனே வெகேட் பண்ணச் சொல்லி, உத்தரவு போட்ருமா சார் கோர்ட்டு…!”

“ஹ…ஹ…ஹ…ஹ…!”

உலக மகா நகைச்சுவையைக் கேட்டதைப் போலச் சிரித்தார் வக்கீல்.

“மிஸ்டர் துரைராமன்…!,கிணத்துத் தவளையாவே இருக்கீரே…! ஒரு குந்துமணி கூட அளக்கலேன்னாலும், டெனண்ட்டைக் கோர்ட் வெகேட் பண்ணவேச் சொல்லாது…!”

“அய்யய்யோ…! அப்பறம்…?”

அதிர்ந்தான் துரை.

“இனிமே சரியா அளக்கணும்…! ஏற்கெனவே அளக்காததை ஒரு கலம் ரெண்டு கலமாகவாவது அளந்து நாளாவட்டத்துல சரிகட்டிடணும்னு தீர்ப்பு வரும்.”

“அடக் கடவுளே…!”

“இதுக்கே அதிர்ந்தா எப்படி…? இன்னும் எவ்ளோ இருக்கு…!”

சிரித்தார்.

‘பூனைக்கு பிரதம ஆகாரம் , எலிக்குப் பிராண சங்கடம்…’

அட்வகேட்டுக்குத் தொழில்.

துரைக்குப் பிரச்சனை.

துரைக்கு சிரிப்பு வரவில்லை.

துக்கம் வந்தது.

மேலும் சொன்னார் அட்வகேட்.

“குந்துமணி விளைச்சல் கூட இல்லை’னு கோர்ட்டுல வாதாடுவார் டெனண்ட் தரப்பு வக்கீல்;

புயல், வெள்ளம், வரட்சி, வெட்டுக்கிளி, காத்து, கருப்பு, நோய் நொடின்னு காரணமும் சொல்வார்.

டெனண்ட் கூண்டுல ஏறுவான்.

மேஜிஸ்ட்ரேட் முன்னாலப் பிழியப் பிழிய அழுவான்;

“அஞ்சு வருஷமா வயித்துல ஈரத்துணி கட்டிண்டுதான் குடும்பம் முழுக்கச் சமாளிக்கறோம்னு கதறுவான்;

மொத்தக் கோர்ட்டுமேக் கண் கலங்கி நிக்கும்;

நான் என்னத்த உன் பக்கம் பேசறது…?”

நடைமுறையை, அனுபவத்தை ரசமாகச் சொன்னார் வக்கீல் வாதிராஜன்.

“இனிமே நீங்கதான் முடிவெடுக்கணும் மிஸ்டர் துரைராமன்.”

பந்தை துரைராமன் பக்கம் தள்ளிவிட்டார் அட்வகேட்.

***

“இப்படிச் செய்யலாமானு ஒரு யோசனை தோண்றது சார்….?”

“சொல்லுங்கோ! ஐடியா எஃப்பெக்டிவா இருந்தா, செயல்படுத்தலாம்…!”

“எல்லாத்தையும் வித்துட்டு, மெட்ராஸோட செட்டில் ஆகணும்னு உண்மையைச் சொல்லி கேஸாடலாமா சார்.”

“நல்ல ஐடியாத்தான். அதுக்குக் கேஸாடுவானேன். அவன் கேக்கறதை விட்டுக் குடுத்துட்டுக் காம்ப்ரமைஸாப் போயிடுமேன்…!”

“ஏன் அப்படிச் சொல்றேள்…?”

“நீங்கச் சொல்றாப்ல உண்மைமையைச் சொல்லிக் கேஸ் ஃபைல் பண்ணினா உடனே வெகேட் பண்ண ஆர்டர் கொடுத்துடுவா…… ஆனா…?”

“ஆனா… என்ன சார்…?”

“சிக்ஸ்டி. ஃபார்ட்டி 60:40 ரேஷியோ போட்டுத் தீர்ப்பாகும்.”

“டெனண்டுக்கு ஆறு பங்கும், ஓனருக்கு நாலு பங்கும் பிரிச்சிக் கொடுக்கும் கோர்ட்டு.”

“…”

“பார்ட்டி கொஞ்சம் ‘விடேன் கொடேன்’னு இருந்தா ஃபிப்டி ஃபிப்டினு முடிவாகும்.”

“அய்யய்யே….!”

“அதனாலத்தான் சொன்னேன். கிராமத்துல பஞ்சாயத்து வெச்சோ, நைச்சியமாப் பேசியோ, அகடவிகடம் பண்ணியோ, மேக்கரிச்சோ, ட்ரஸ்பாஸ் பண்ணியோ வெகேட் பண்ணினா, ஓரளவுக்கு விட்டுக் கொடுத்துட்டு மத்ததை பத்திக்கலாம்… இதுல கேஸாடற செலவாவது மிச்சமாகும் ஓய்…!”

“…”

சிறிது நேரம் அமைதியாய் யோசித்து மனதில் வாங்கினான். பிறகு வாய்திறந்தான்.

“நீங்க சொன்ன மாதிரி காம்ப்ரமைஸ்க்கு முயற்சி பண்றேன் சார்….?”

“பண்ணிப் பாருங்கோ… நூத்துக்கு தொண்ணூத்தொம்பது, ஓனருக்குத்தான் சாதகமா முடிஞ்சிருக்கு நான் பார்த்த வரைல..”

“சாட்சிக்காரனுக்கு ஆயிரமாயிரமாப் ஃபீஸ் அழறதைவிட, சண்டைக்காரனுக்கு சந்தோஷமாப் பிரிச்சிக் கொடுங்கோ…!”

***

அட்வகேட்டின் அட்வைஸை உடனடியாக நண்பன் ராமனாதனிடம் கலந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் துரைக்கு.

அவன் கொடுத்த விசிட்டிங் கார்ட்டு எடுத்துப் பார்த்தான்.

மீர் பக்ஷி அலி தெருதான். நடந்து போனால் அரைமணி நேரமாகிவிடும்.

பஸ் ஏறினான்.

அட்வகேட்டிடம் பேசிய விஷயங்களையும், அவரின் யோசனையையும் ராமனாதனிடம் சொன்னான்.

காம்ப்ரமைஸ் ஐடியாவில் சிறிதும் சம்மதமில்லை ராமனாதனுக்கு.

“விவரமா நாளைக்குப் பேசுவோம். நாம கலந்துப் பேசி ஒரு முடிவுக்கு வருவோம். பிறகு வக்கீலையும் பாப்போம்.”

சொல்லி துரையை அனுப்பினான் ராமனாதன்.

***

“இன்னிக்கு இந்தியா ஆஸ்திரேலியா ஒன்டே மேட்ச். ரெண்டு பாஸ் கிடைச்சது எனக்கு.”

துரையைக் கண்டதும் சந்தோஷமாகச் சொன்னான் ராமனாதன்.

“சரி ராமனாதா, நீ போ. நான் நாளைக்கு உன்னைப் பாக்கறேன்…”

“ஏய்… துரை நாம ரெண்டுபேரும்தான் போறோம்.”

ஸ்டேடியத்தில் அதிகக் கூட்டமில்லாத பகுதியில் இருவரும் உட்கார்ந்து கொண்டார்கள்.

கைத்தட்டலும், ஆரவாரமும், விசில் சத்தமுமாக கிரிக்கெட் ரசிகர்கள் பிஸியாக இருந்தார்கள்.

ராமனாதனும், துரைராமனும் நிறைய நிறையப் பேசினார்கள்.

மூன்று மணிக்கெல்லாம் ஸ்டேடியத்திலிருந்து வெளியேறி, அட்வகேட் வீட்டுக்கு வந்தார்கள்.

***

“கலியன்கிட்டே குத்தகைக்கு இருக்கற நிலத்துல லட்ச ரூபாய் செலவு பண்ணி செங்கல் காளவாப் போட கல்லறுத்து நஷ்டப்பட்டிருக்கான் சார் துரை..”

ராமனாதன் சொல்லும் செய்தி புதியதாக இருந்தது வக்கீல் வாதிராஜனுக்கு.

மிகக் கவனமாகக் காதில் வாங்கினார்.

“அடுப்புக் கட்டி அடுக்கிக் கொளுத்தறதுக்கு முன்னே போன மாசம் வந்த புயல் வெள்ளத்துல மொத்தமாக் கறைஞ்சி…!”

ராமனாதனை கையமர்த்தினார் வக்கீல். துரையிடம் சொன்னார்.

“மிஸ்டர் துரைராமன், நீங்க நடந்ததை நடந்தபடி சொல்லுங்க. ஏதாவது ஜோடிக்க முடியுமா பாப்போம்.”

வாதிராஜன் ஆர்வமானார்.

“அவன் சொன்னாப்பலதான் ஆயிடுச்சு. சுட்டு எடுக்கறதுக்குள்ளே, புயல் மழைல எல்லாம் கரைஞ்சி குண்டும் குழியுமா, மலையும் மடுவுமா கிடக்கு சார் காணி.”

“அடடே. ஸ்ட்ராங் எவிடன்ஸ் ஆச்சே இது.”

நல்ல பாயிண்ட் கிடைத்த மகிழ்ச்சியில் துள்ளி எழுந்தார் வாதிராஜன்.

“நான் கல்லறுத்ததுக்கும் கலியனுக்கும் எந்தச் சம்பந்தமும் கிடையாது. நான் வேற ஆளுங்களை வெச்சித்தான் செஞ்சேன்.”

“நீங்க இல்லை ஓய். அவன்தான் செஞ்சான்…;

கோர்ட்டு கேசுனுன்னு வந்துட்டா, தர்ம ஞாயத்தையெல்லாம் எட்ட ஒதுக்கி வெச்சிரணும்…;

முதல் கட்டமா, குத்தகைதார் கலியன் பேர்ல ‘இன்ஜுரி’ ஜோடிப்போம்;

கிரிமினல் கேஸ் ஃபைல் பண்ணி, நஷ்ட ஈடு கேட்போம்.”

அதைத் தொடர்ந்து…; கிரிமினல் கோர்டுப் ப்ரொசிஜர், டிக்ரி, டைரக்‌ஷன் எல்லாத்தையும் ஆதாரமா வெச்சி, சிவில் கோர்ட்டுல சூட் ஃபைல் பண்ணிப் பூரா நெலத்தையும் திருப்பிடலாம்.”

கேஸ் ஜெயித்து டிக்ரி வாங்கி விட்டதைப் போல இருந்தது வாதிராஜனின் பேச்சு.

***

“இன்ஜூரின்னா…?”

கேட்டான் துரை.

அவன் கேள்விக்கு நேரடியாக பதில் சொல்லவில்லை அட்வகேட்.

“குத்தகைக்கு விட்டிருக்கறது சாகுபடி பண்றதுக்குதானே…?”

“ஆமாம்…”

“சாகுபடி பண்ணாம, கொட்டாய் கட்டிண்டு குடியிருக்கறது;

சிமிண்டு பைப்பு, ஜாலி ஒர்க்கு’னு எதாவது தொழில் பண்றது;

வேற ஒருத்தனுக்கு உள் குத்தகை விட்டுச் சம்பாதிக்கறது;

ஓனர் அனுமதி இல்லாம போர் எறக்கிப் பம்ப் செட்டு போடறது;

காளவா போடறது;

கண்காட்சி, பொருட்காட்சினு நடத்திச் சம்பாதிக்கறது;

இப்படி நிறைய காஸ் ஆஃப் இன்ஜூரீஸ் சொல்லியிருக்கா பீனல் கோட்ல…!”

‘லா’ படிக்கும் மாணவனுக்குப் பாடம் நடத்துவதுபோல எளிமையாகச் சட்ட நுணுக்கங்களைப் பேசினார் வாதிராஜன்.

“…”

தேர்வின்போது, படித்த பாடத்தை ரீகர்ஸல் செய்யும் மாணவன் போல அமைதியாக அனைத்தையும் அசைபோட்டான் துரை.

***

“அது சரீ… கலியன்கிட்டே குத்தகைக்கு இருக்கும்போது நீங்க எப்படிக் காளவாப் போட்டீங்க….? இடிக்குதே…!”

“காளவா போடணும்ன்னேன். உங்க வய நீங்க எதுனா செய்யுங்கனுட்டான்.”

“அப்ஜெக்‌ஷன் எதுவுமே சொல்லாம உடனே செரின்னு சொல்லிட்டானா…?”

“ஆமாம்.! கேட்ட அடுத்த நிமிஷம் சரினுட்டான்…!”

“மிஸ்டர் துரைராமன். உங்க டெனண்ட் ரொம்ப புத்திசாலித்தனமா காயை நகத்தியிருக்கான். காளவாப் போட உங்களை அனுமதிச்சதுக்கு ஏதாவது எழுத்து பூர்வமா ஆவணம் இருக்கா உங்ககிட்ட…?”

“அதெல்லாம் எதுவும் இல்லே. வாய் வார்த்தைதான்.”

“கல்லறுக்க எவ்ளோ செலவாச்சு…?”

“அதையேன் கேக்கறீங்க…! ஏகப்பட்ட நஷ்டம் சார்.”

“நீங்க இப்ப சொன்னதும்தான் தெரியுது. டெனண்ட், ‘சின்ன மீனைப் போட்டு பெரிய மீனைப் பிடிக்கற’ திட்டத்தோட ஏதோ செஞ்சதாத் தெரியுது…”

“…”

சிறிது நேரம் அமைதியாக நகர்ந்தது.

*****-

“கவனமாக் கேட்டுக்கங்க துரை.”

தொடங்கினார் வாதிராஜன்.

“உங்க தகப்பனார் இறந்தபிறகு, நீங்க உங்கம்மாவோட மெட்ராஸ் வந்துடறீங்க.”

“இல்ல சார் அம்மா அங்கதான் இருக்காங்க…!”

குறுக்கிட்டான் துரை.

“குறுக்கப் பேசாம கேளுங்க மிஸ்டர் துரைராமன். நான் ஸ்கெட்ச் போடறேன்…!”

புரிந்தது துரைராமனுக்கு.

“ஓகே…! ஓகே…! சார்…!”

கவனமாகக் கேட்டான்.

“அம்மா மெட்ராஸ்ல உங்களோட செட்டிலாயிடறாங்க;

ஆறு மாசத்துக்கு ஒருமுறை கிராமத்துக்குப் போறீங்க;

வீடு, வாசல், தோப்பு, தொறவு எல்லாம் பாக்கறதும், பராமரிக்கறதும், குத்தகைக் கணக்குத் தீக்கறதும் உங்க ஷெட்யூல்;

அப்படி ஒரு சமயம் ரெகுலர் விசிட் போனப்போதான் உங்க வயல்ல பயிர்ச் சாகுபடி செய்யறதுக்குப் பதிலாக் காளவாய்க்குக் கல் அறுத்து நிலத்தைப் பாழடிச்சிட்டதைப் பாக்கறீங்க…;

அதிர்ச்சி ஆயிடறீங்க…

……………………;

இப்படிக் கேஸ் ஜோடிச்சிடுவோம்;

ஊர்ல ரெண்டு பேரை சாட்சி போடச்சொல்லுங்க;

ஃபைல் பண்ணிருவோம்;

விள்ளல் விரிசல் இல்லாம எல்லாத்தையும் திருப்பிருவோம்;

டெனண்ட்டுக்கு ஒரு அங்குலம் விட்டுத் தரவேண்டியதில்லே…!”

துருப்புச் சீட்டு கிடைத்தததைப் போல இருந்தது துரைராமனுக்கு.

***

‘யாரைச் சாட்சி போடலாம்…!’

யோசித்தான்.

“மிஸ்டர் துரைராமன், ஒரு விஷயம்…! ரெண்டாம் பேருக்குத் தெரியாமக் கமுக்கமா ஜோடிக்கணும். ஞாபகம் வெச்சிக்கோங்க;

வக்கீல் நோட்டீஸ் அவன் கைக்குப் போய் சேருகிற வரைக்கும் விஷயம் அவனுக்குத் தெரியக்கூடாது;

ஜோடிக்கற விஷயம் அவனுக்குத் தெரிஞ்சிதோ அநத்தம்தான்…!”

“அப்படித் தெரிஞ்சிட்டா…?”

“என்கிட்டேக் குத்தகைக்கு விட்டுட்டு, ட்ரஸ்பாஸ் பண்ணி கல்லறுத்து நஷ்டம் உண்டாக்கிட்டார்’னு உங்க மேலே கேஸை திருப்பிடுவான்;

ட்ரஸ்பாஸ் பண்ணின கிரிமினல் குற்றத்துக்காக. நீங்க கடுமையான அபராதம் கட்டறமாதிரி ஆயிடும்.”

என்ன செய்வது ஏது செய்வது எனக் குழம்பிப் போயிருந்த துரைராமனின் குழப்பத்தை அவன் முகம் பிரதிபலித்தது.

“ரொம்ப கன்ஃபியூஸ் பண்ணிக்காதீங்க துரைராமன். எல்லாம் நல்லா நடக்கும்… வாங்கோ…!”

வழியனுப்பினார் வாதிராஜன்.

“நாயுடுகாரு, பாக உன்னாரா…?”

கேட்டபடியே அடுத்த கிளையண்ட் உள்ளே வந்தார்.

ஃபீஸ் தருவதற்காக பர்ஸை எடுத்தான் துரைராமன்.

“இப்போ எதுவும் தரவேண்டாம். பிற்பாடு பாத்துப்போம். உங்க ஆபீஸ் அக்கவுண்டண்ட் விஜயராகவலுகிட்டே அடுத்த மாச ஹியரிங்ல அநேகமா தள்ளுபடியாயிரும்னு சொல்லுங்க. அவருக்கு விவரம் புரியும்…”

கைக் கூப்பினார்.

***

பொங்கலுக்குப் போயிட்டு வரும்போது அத்தையை இங்கே அழைச்சிண்டு வந்துடணும்நா…”

கிராமத்துக்குக் கிளம்புவதற்காக துணிமணிகளையெல்லாம் ‘பேக்’ செய்து கொண்டே சொன்னாள் மோகனா.

“போனமாசமே என்னோட வந்துடுனு கம்பல் பண்ணினேன் அம்மாவை. பொங்கலுக்கு வருவியோன்னோ அப்போ பேசிக்கலாம்னு அப்போதைக்குத் தள்ளிப் போட்டுட்டா அம்மா;

அதைச் சொல்லியே இந்த முறை அம்மாவை அழைச்சிண்டு வந்துடுவோம் மோகனா.”

“அதுதான் சரி. அப்படித்தான் மடக்கி இழுந்துண்டு வந்துடணும்…!”

“போன மாசம் உடம்புக்குச் சரியில்லாம படுத்த படுக்கையாக் கிடந்து பொழைப்பமா’னு அவஸ்தைப் பட்டு மறு ஜன்ம்மா தப்பிச்சப் பிறகும், நம்ம கூட வந்து இருக்கமாட்டேன்னு பிடிவாதம் பிடிக்கறாளே அத்தை…!”

“இந்த முறை விடப்படாது. வலுக்கட்டாயமா இழுந்துண்டு வந்துரணும்…”

துரைராமனின் வார்த்தைகளில் உறுதி இருந்தது.

***

சென்றமாதம் அம்மாவுக்கு உடல் நலமில்லை என்று தந்தி வந்தது.

பரபரப்புடன் கிளம்பிப்போனான் துரை.

அம்மா, படுத்தப் படுக்கையாகக் கிடந்தாள்.

துரை போன போது டாக்டர் அருணகிரி குந்தலாம்பாளுக்குச் சிகிச்சையளித்துக் கொண்டிருந்தார்.

தனியாக டாக்டரிடம் அம்மாவின் நிலையைக் கேட்டான் துரை.

“துரை…! ஏற்கெனவே ஒரு தடவை இப்படி ஸிம்டம்ஸ் இருந்துதுன்னு சொல்றா உங்கம்மா;

அம்மா சொல்றதை வெச்சிப் பார்த்தா இது இரண்டாவது அட்டாக்கா இருக்கும்னு தோணுது;

மருத்து மாத்திரை கொடுத்திருக்கேன். அம்மாவை டென்ஷன் இல்லாமப் பாத்துக்கணும்.”

கரிசனத்தோடு சொன்னார்.

துரைராமன் எவ்வளவு சொன்னபோதும், குந்தலாம்பாள் அவனோடு சென்னைக்குச் செல்ல உறுதியாக மறுத்துவிட்டாள்.

“அம்மா…! இப்படிப் பிடிவாதம் பண்ணினா என்ன பண்றது. இங்கேயே இரு வேண்டாங்கலே. வேளாவேளைக்கு ஏதாவது வயித்துக்குப் போட்டுண்டு ராமா கிருஷ்ணானு இருந்து ரெஸ்ட் எடுத்துண்டாத் தேவலை…!”

நொந்துகொண்டான் துரை.

“…”

குந்தலாம்பாள் எதுவும் பேசவில்லை.

“குத்தகைக்கு விட்டுட்டு, ஏதோ சொந்த சாகுபடி பண்றமாதிரி வயலுக்கும் வாய்க்காலுக்கும் அலைஞ்சி திரிஞ்சிண்டு உடம்பைப் போட்டு இப்படிப் பாழடிச்சிக்கறியேம்மா..;

அதனாலத்தான் சொல்றேன். என் கூட மெட்ராஸ் வான்னு…!”

“பொங்கலுக்கு வரயோன்னோ…?”

பேச்சை மாற்றினாள் குந்தலாம்பாள்.

‘இப்போது மேலே மேலே வற்புறுத்த வேண்டாம். பொங்கலுக்கு வரும்போது பார்த்துக் கொள்வோம்…!’

முடிவெடுத்தான் துரைராமன்.

***-

போகிப்பொங்கல்.

அடுப்பில் கொதித்துக் கொண்டிருந்த போகி ஸ்பெஷல் கதம்ப சாம்பார் வீடு முழுதும் கம்மென்ற மணம் பரப்பியது.

மோகனா சமையலறையில் வளைய வந்து கொண்டிருந்தாள்.

“பொங்கல் முடிஞ்சதும், எங்களோட மெட்ராஸ் வந்துடுங்கோ அத்தை…”

மெதுவாகப் பேச்சுக் கொடுத்தாள் மோகனா.

“அதுக்கென்ன… வந்தாப் போச்சு…!”

“இங்கே ஏன் அத்தே நீங்க ஒண்டியாக் கிடந்து திண்டாடணும்… மெட்ராஸ்ல வந்து எங்களோடயே இருக்கணும் நீங்க…!”

சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளைப் போல துரைராமன் சொல்லிக் கொடுத்ததை அப்படியே மனப்பாடச் செய்யுள் போல அடி பிறழாமல் ஒப்பித்தாள் மோகனா.

“மெட்ராஸ் வாசம் எனக்கு ஒவ்வாது. வேணா பத்து நாள் இருந்துட்டு வரலாம். புறாக்கூண்டு மாதிரி ஜாகை எனக்கு சரிவராது மோகனா…!”

அம்மா மோகனாவிடம் பேசியதைக் காதில் வாங்கியபடியே வந்தான் துரை.

“புறாக்கூண்டு போல உள்ள ஜாகையை நாம நினைச்சா மாத்திடலாம்…!”

“…”

‘துரை என்ன சொல்லவருகிறான்…!’

குழப்பமாய்ப் பார்த்தாள் குந்தலாம்பாள்.

“இங்கே இருக்கற சொத்துப் பத்து எல்லாத்தையும் டிஸ்போஸ் பண்ணிட்டு, மெட்ராஸ்ல ப்ளாட் வாங்கி பங்களா கட்டிண்டு இருக்கலாமே…!”

நாடகத்தில் முக்கியக் கதாபாத்திரம் உட்புகுந்து பேசும்போது, அவசியமில்லாத கதா பாத்திரம் ‘ஏதோ அவசர வேலையாய், அந்த இடத்தை விட்டு இயல்பாக நழுவமே’;

அதுபோல, துரை வந்ததும், மோகனா அங்கிருந்து நழுவினாள்.

“…”

குந்தலாம்பாள் பதில் ஏதும் பேசவில்லை.

‘கலியன் ஏன் இன்னும் வரலை…? போகி பண்டிகை நாள்ல ‘டாண்’னு ஆறு ஆறரைக்கெல்லாம் வந்து நிப்பானே. அவன் உடம்புக்கு ஏதும் சரியில்லாம இருக்கானா…?’

குந்தலாம்பாள் மனசு முழுக்க கலியனைச் சுற்றியே இருந்தது.

துரைராமனுக்கு என்னவோபோல் ஆகிவிட்டது. அம்மா தன் கருத்தை ஆதரித்தும் பேசாமல், எதிர்க்கவும் செய்யாமல், மய்யமாக ஏதேனும் கருத்தும் சொல்லாமல், அமைதி காத்ததால் அடுத்து என்ன பேசுவது, எப்படிப் பேசுவது என்பது தெரியாமல் தவித்தான் துரைராமன்.

“துரை. சமையல் ரெடி.” என்றாள் குந்தலாம்பாள்.

தொடர்ந்து “கலியன் வரக்காணோமே…? வழக்கமா போகிப் பண்டிகையண்ணிக்கு கருக்கல்லயே வந்து ‘உலுப்பை’ வைப்பான். “மாடு கன்’ குளிப்பாட்டுவான். உடம்புக்கு ஏதும் முடியாம இருக்கானோ…?”

சொல்லிக்கொண்டே சமையல் ஐட்டங்களை பங்கிடாக பட்டகசாலையில் வைத்தாள்.

அந்த நேரத்தில் உள்ளே வந்த மோகனா, இலை போட்டு தண்ணீர் வைத்து சாப்பிடுவதற்காக ஆயத்தம் செய்ய வந்தாள்.

“இதை நான் பாத்துக்கறேன் மோகனா, நீ ரஞ்சனியை ரெடிபண்ணி அழைச்சிண்டு வா, போ.”

“சரி அத்தை..”

கலியனைப் பற்றிப் பேச இதுதான் சரியான சமயமாகத் தோன்றியது துரைராமனுக்கு.

“அம்மா… நான் சொல்றேன்னு நினைக்காதே. கலியனுக்கு நீ ரொம்பத்தான் இடம் தரே. கலியன் உடம்புக்கு எந்த நோவும் இல்லே. நல்லாத்தான் இருக்கான். நேத்துச் சாயந்தரம் கூட அவனை சாலைக்கரை டீக்கடைல பாத்தேனே நான்.”

“நேத்து நல்லா இருந்திருக்கலாம். இன்னிக்கு தலைவலி, வயித்து வலி வந்திருக்கலாமில்லையா…? அப்படியெல்லாம் சொல்லாதே…!”

வெடுக்கென்று சொன்னாள்.

‘கலியனுக்குத் தூது விட்டதையும், தூது போனவனிடம் கலியன் சொன்னவைகளையும், சொன்னால் அம்மா நம்மப்போவதில்லை…’

என்பதை உணர்ந்தான் துரை.

“அம்மா…! நீ நம்பற அளவுக்கு அவன் விசுவாசமானவன் இல்லேம்மா…!” என்றான்.

“அதை விடு. இப்போ சாப்பிட வா. ரஞ்சனி எவ்ளோ சமத்தா சாப்பிட வந்துட்டாப்பாரு…!”

பட்டுப் பாவாடையுடன், கொலுசு கலகலக்க ரஞ்சனியின் குறும்புகளும், மழலையும் சுவை கூட்ட, போகி விருந்துக் களைக் கட்டியது.

சாப்பிட்டு, தாம்பூலம் தரித்து, ஊஞ்சல் பலகையில் வந்து உட்கார்ந்த நேரத்தில் கலியன் வந்து நின்றான்.

***

“வாடாப்பா, கலியா. இப்போதான் பொழுது விடிஞ்சிதா உனக்கு…?”

ஈரக் கையைத் இடுப்பில் செருகிய துண்டில் துடைத்தபடியே இயல்பாகவும், உரிமையோடும் கேட்டுக்கொண்டே வந்தாள் குந்தலாம்பாள்.

கலியன் கண் கலங்கினான்.

“ஏண்டா கலியா, உடம்புக்கு ஏதும் சுகமில்லையா… மூஞ்சியே சரியில்லையே உனக்கு…?”

“அம்மா அய்யா என் கனவுல வந்தாரும்மா…!”

தான் கண்ட கனவையும், அதைத் தொடர்ந்து அவன் செய்த காரியத்தையும் சொன்னான்.

சிதை பிரித்து எடுத்த மாதய்யாவின் நகத்துண்டுகள், தலை முடி, அவரது வேட்டியிலிருந்து உருவியெடுத்த நூல் அனைத்தையும் தாயத்துக்குள் வைத்து, அய்யாவின் அரணாக் கொடியைத் தாயத்தில் நுழைத்து, அதைக் கழுத்தில் மாட்டியிருந்த கலியனைப் பார்த்து, குந்தலாம்பாளின் கண்கள் கலங்கின.

மேலும், துரைராமன் தனக்கு தூது விட்ட விபரத்தையும், அதற்கு அவன் சொன்ன பதிலையும் கூடச் சுருக்கமாகச் சொன்னான் கலியன்.

“நீ சொன்னதுதான் சரி கலியா…! நீ இதுப் போலவே கடைசீ வரைக்கும் இரு. கொஞ்சம் கூட இறங்கி வராதே. நான் இருகேன்னு பார்க்காதே…!”

கலியனுக்கு நம்பிக்கையளித்தாள்.

“துரை உன் கிட்டே நேரடியாப் பேசணும்னு சொல்லிண்டிருந்தான். அவனை அழைக்கறேன். கொஞ்சம் கூட பணிவு காட்டாம காட்டமாவேப் பேசு…!”

தைரியம் அளித்தாள்.

“இன்னொண்ணும் சொல்றேன் கலியா. நான் துரைராமனுக்கு சாதகமாத்தான் பேசுவேன். நான் உன்னண்ட எது பேசினாலும் என்னையும் எதிர்த்துப் பேசு. என்னடா அம்மாவை இப்படிப் பேசறோமேனு கவலையேப்படாதே…! சட்டமாப் பேசு…!”

ஊக்கமளித்தாள்.

“அய்யாவோட ஆசைக்காக, அவர் ஆன்மா சாந்தியடைய நான் எது வேணா செய்வேன்மா…!”

கலியன் சொன்னபோது அவன் வலது கை கழுத்தில் தொங்கிய தாயத்தை பக்தியோடு பிடித்துக்கொண்டிருந்தது.

***

“கலியா, சாப்பாடு போடறேன் சாப்பிடறயா…?”

பலமாகக் கேட்டாள் குந்தலாம்பாள்.

காமரா உள்ளில் ஓய்வெடுத்துக்கொண்டிருந்த துரைராமன் காதுகளில் குந்தலாம்பாள் கலியனுக்கு செய்யும் உபசார வார்த்தைகள் காதில் விழுந்தன.

எழுந்து பட்டகசாலைக்கு வந்தான்.

ஊஞ்சலில் அமர்ந்தான்.

அவனாகச் சென்று கலியனிடம் பேசப் பிடிக்கவில்லை துரைக்கு.

‘அம்மா அழைத்தால் போய்ப்பேசலாம்…!’

கலியன் வந்தது தெரியாதது போல இயல்பாக, ஊஞ்சலாடியபடி உட்கார்ந்திருந்தான் துரை.

அவன் எதிர்பார்ப்பு வீண் போகவில்லை.

அம்மா அழைத்தாள்.

துரை அங்கேச் சென்றான்.

“கலியனுக்கு உடப்புக்கு சரியில்லையாம்;

பூசாரிக்கிட்டேப் போயி தாயத்து கட்டிக்கிட்டு வந்தானாம்… வாயேன்…”

குழந்தையை ஏற்கனவே கிள்ளி விட்ட குந்தலாம்பாள், இப்போது தொட்டிலையும் ஆட்டினாள்.

கலியனையும் துரையையும் பூட்டிவிட்டுவிட்டு, ஏதோ அவசரமான காரியம் இருப்பதைப் போலக் காட்டிக்கொண்டு உள்ளே சென்றும் விட்டாள்.

“…”

கலியனும், துரையும் ஏதும் பேசிக்கொள்ளாமல் ஒரு அமைதி அந்த இடத்தை ஆக்ரமித்திருந்தது.

ஜல்லிக்கட்டுக் காளையாய் கூராய் கொம்பு சீவிக்கொண்டு பாய்ச்சலுக்குத் தயாராய் நின்றான் துரைராமன்.

அதை எப்படி அடக்க வேண்டும் என்று நோக்கம் பார்த்தபடி காளையை அடக்கும் வீரனாய்க் காத்திருந்தான் கலியன்.

– தொடரும்…

விகடன் மின் இதழான மை விகடன் இதழில், 02.05.2022 அன்று கலியன் மதவு என்ற சமூக நாவல் தொடங்கித் தொடர்ந்து 28.01.2023 ல் அதை நிறைவு செய்யும் வரை, அதைச் சிறப்பாக வெளியிட்டு ஊக்குவித்த ஆனந்த விகடன் ஆசிரியர், மற்றும் ஆசிரியர் குழுவினருக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் – ஜூனியர் தேஜ்

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *