கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி  
கதைப்பதிவு: September 23, 2012
பார்வையிட்டோர்: 10,348 
 

திருவல்லிக்கேணி டீக் கடைகளில் ஒன்றில் காலை ஏழு மணிவாக்கில் சிங்கிள் டீ குடிப்பது வாழ்வின் மறக்க முடியாத சங்கதி இல்லைதான். ஆனால், என் வாழ்வில் அப்படி நேர்ந்துவிட்டது. ஏனெனில், அது 2000-ம் ஆண்டு. எனது பிறந்த தினம் அன்று. அப்போது, அங்கே நான் ராமநாதனைச் சந்தித்தேன்.

அன்றைக்கு எனது இருபத்து ஐந்தாவது பிறந்த தினம். நான் பிறந்த அன்று, இந்தியாவில் அவசர நிலைப் பிரகடனம் செய்யப்பட்டதென்று அப்பா சொன்னார். தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்டு, பத்திரிகைகள் தணிக்கைக்கு உட்பட்டனவாம். ஏசு கிறிஸ்துவுக்கு அப்புறம்

இவ்வாறு ஏகப்பட்ட சமிக்ஞைகளுடன் பிறந்திருந்தாலும், நான் ஒரு சராசரி, சாமான்ய, பேச்சிலராக திருவல்லிக்கேணியில் ஏழு அறைகளுக்கு ஒரு கக்கூஸ் என்ற விகிதத்தில் காலைப் பொழுதுகளைக் கழித்துக்கொண்டு இருந்தேன். அதன்படி அன்று பேப்பரின் கடைசிப் பக்கத்தில் கிரிக்கெட் செய்தி படித்தவாறே மூன்றாவது டீயைக் குடிக்கும்போது, அந்த நபர் எதிரே வந்து நின்று என்னையே பார்த்தார். இரக்கத்தைத் தட்டியெழுப்பும், யாசகம் கேட்கும் பார்வை.

‘‘ஒரு டீ சொல்றீங்களா? ப்ளீஸ்’’ என்றார். ஓரிரு விநாடி யோசனைக்குப் பிறகு, நான் நாயரிடம் அவருக்கும் டீ சொன்னேன். உடனே, அருகில் அமர்ந்து என் கையிலிருந்த பேப்பரையும் படிக்கத் துவங்கிவிட்டார். பிறகு, தன் பேச்சைக் கிரிக்கெட்டில் இருந்து துவங்கி நிறையப் பேசினார். சுவாரஸ்யமாகப் பேசினார். பேச்சினிடையே அவரைக் கவனித்தேன். வயது நாற்பது, நாற்பத்தைந்து இருக்கலாம். ஏறிய நெற்றியும், சின்னக் கண்களும், தெளிவான உச்சரிப்பும், பார்க்கிற எவரையும் அவரைப் பற்றி குறைச்சலாக எண்ண வைக்காது.

கிளம்பும்போது ‘தேங்க்ஸ்’ சொன்னார். நான் அன்று எனது பிறந்த நாள் என்று சொன்னதும் கைகுலுக்கி வாழ்த்து சொன்னார். மறுபடியும் சந்திப்போம் என்று சொல்லிப் போனார்.

சொன்னது போலவே அடுத்த நாள் நான் டீ குடிக்கும்போது வந்து நின்றார். இப்போது அவர் கேட்காமலேயே டீ சொன்னேன். அதற்கடுத்த நாளும் அது போலவே நிகழ்ந்தது. ஒரு சில தினங்களில் அவர் தன்னைப் பற்றி நிறையவே சொல்லிவிட்டார். வசதியான குடும்பத்தில் பிறந்தது, எஸ்.எஸ்.எல்.சி. வரை படித்தது, அப்பாவின் நடவடிக்கைகளால் சொத்துகள் அழிந்தது, இவருக்கு உருப்படியாக எந்த வேலையும் கிடைக்காமல் அல்லாடுவது என்று அது ஒரு ‘அவார்ட் சினிமா’ லெவலுக்கு இருந்தது.

‘‘கொஞ்ச நாளா ஒரு பிரஸ்ல ப்ரூஃப் பாக்குறேன். பத்து நாள் முன்னாடி பிரஸ்ஸை மூடிட்டாங்க. கைல பைசா இல்லை. தெரிஞ்சவர் ரூம்ல ஒட்டிக்கிட்டு இருந்தேன். அவருக் கும் இப்ப டிரான்ஸ்ஃபர் வந்துடுச்சு. அடுத்து அநேகமா மெரீனா பீச்னு நினைக்கிறேன்!’’ – சொல்லிவிட்டுக் குழந்தை போல் சிரித்தார். எனக்குள் பரிதாபம் சுரந்தது.

‘‘ஏன் சார் இப்படிப் பேசறீங்க? வேணா என் ரூம்ல தங்கிக்கங்க… நோ பிராப்ளம்!’’

‘‘எதுக்குத் தம்பி சிரமம்… ஏற்கெனவே தினம் தெரு நாய்க்குப் பொறை வாங்கிப் போடுற மாதிரி டீ வாங்கித் தர்றீங்க.’’

‘‘என்ன சார் பேச்சு இது? நான் உங்களை ஒரு ஃப்ரெண்டாதான் நினைக்கிறேன்.’’

‘‘ரொம்ப தேங்க்ஸ் தம்பி. அப்ப நான் நிஜமாவே உங்க ரூம்ல தங்கிக்கலாமா?’’

இப்படித்தான் ராமநாதன் என் அறையில் பாதியானார்.

மேன்ஷன் அறைக்குப் புதிதாக ஒருவர் வந்தாரெனில் அது மேலும் குப்பையாகவும், அழுக்காகவும் மாறும் என்பதே பொது விதி. ஆனால், ராம நாதன் வந்த பிறகு அறை பளிச்சென்று ஆகிவிட்டது. நான் வேலைக்குப் போய்விட்டு (பத்திரிகை நிருபராக இருந்தேன்) ஒரு நாள் நள்ளிரவு அறைக் கதவைத் திறந்தபோது எப்போதும் மூக்கில் நுழையும் நெடி கலந்த நாற்றத்துக்குப் பதிலாக மல்லிகைப் பூ வாசம் வீசியது. பதறி லைட்டைப் போட்டேன்.

ஆ! கொடியின் துணிகள் ஷெல்ஃபில் அழகாக அயர்ன் பண்ணி மடித்து வைக்கப்பட்டு இருந்தன. சுவரோரம் நான் காலால் ஒதுக்கிவிடும் அழுக்குத் துணிகள் ஓர் அட்டைப் பெட்டியில் ஒழுங்காக வைக்கப்பட்டு இருந்தன. தாறுமாறாகக் கிடந்த பத்திரிகைகளும், புத்தகங்களும் பேப்பர் மாற்றிய ஷெல்ஃபில் அடுக்கப்பட்டு, அந்துருண்டை வாசம் அடித்தது. அறை சுத்தமாக இருந்தது.

‘‘ரூமையே மாத்திட்டிங்களே சார், விக்ரமன் படத்துல வர்ற மாதிரி! நீங்க இவ்வளவு பெரிய சீர்திருத்தவாதியா இருப்பீங்கன்னு நினைக்கவே இல்லை!’’ என்றதும் சிரித்தார். ‘‘கச்சடான்னு இருக்கிற ரூமைச் சுத்தம் பண்ணிக் குடியேறுறதுதானே நம்ம கல்ச்சர்.’’

‘‘சாதாரணமா இருக்கிற ரூமை, நாம குடியேறி கச்சடாவா மாத்தறதுதான் திருவல்லிக்-கேணி பேச்சிலரோட கல்ச்சர் சார்!’’ என்றேன்.

‘‘அதுக்குக் காரணம் உன் வயசா இருக்கலாம். எனக்கு நாப்பத்தாறு!’’

‘‘ஏன் சார், இன்னும் கல்யாணம் பண்ணிக்கலை?’’

‘‘நானா வேணாம்னு சொன்னேன்? அல்லாடிட்டே இருக்கிறவன்கூட எவ வந்து சேருவா? எனக்கும் இப்படி நிரந்தரமில்லாத லைஃப்ல கூட ஒருத்தியைக் கூட்டி வந்து அவளையும் கஷ்டப்படுத்த விருப்பமில்லை. அதான்…’’ அவர் குரலில் எதையோ பெரிதாக இழந்த துயரத்தைக் காண முடிந்தது.

‘‘உங்களுக்கு எப்ப தம்பி கல்யாணம்?’’

பர்ஸைத் திறந்து போட்டோவைக் காட்டினேன். ‘‘இவதான் சார். பேரு செல்வி. மூணு வருஷமா உயிருக்குயிரா லவ் பண்றோம். அநேகமா இன்னும் ஒண்ணு ரெண்டு வருஷத்துல பண்ணிப்போம்.’’

‘‘வீட்ல ஒப்புக்கிட்டாங்களா?’’

‘‘அவளுக்கு அம்மா மட்டும்தான். அவங்க அவளோட இஷ்டத்துக்கு விட்டுட்டாங்க. என் வீட்லதான் சொல்லணும்.’’

அவர் கைகுலுக்கினார். ‘‘ஆல் தி பெஸ்ட் தம்பி! கல்யாண வேலையெல்லாம் நான் முன்ன நின்னு பாக்கறேன். சரியா?’’

‘‘தேங்க் யூ சார்!’’ என்றேன். நெகிழ்ச்சியாக இருந்தது.

அடிக்கடி என் கல்யாணம் பற்றி, செல்வி பற்றியெல்லாம் நிறையப் பேசிப் பகிர்ந்துகொண்டேன். இப்படி யரு ரூம் மேட் கிடைக்கக் கொடுத்துவைத்திருக்க வேண்டும் என்றுதான் நினைத்தேன். ஆனால், நடந்தது வேறு. பத்துப் பதினைந்து நாட்கள் கழித்துதான் சில விஷயங்களைக் கவனித்தேன். சில்லறைக் காசுகள் அவ்வப்போது குறைந்தன. நான் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை. ஒரு முறை அவரிடம் ‘பார்த்தீங்களா?’ என்று கேட்டேன்.

‘‘இல்லையே தம்பி! எங்கியாவது தவறவிட்டிருப்பீங்க’’ என்றார். உறுத்தியது. அதன் பிறகு ஒரு நாள் வேண்டுமென்றே அலமாரியில் சம்பளப் பணத்தை வைத்துவிட்டு வெளியே போய் திரும்பி வந்து, பாத்ரூமுக்குள் போய் எண்ணிப் பார்த்ததில் ஒரே ஒரு நூறு ரூபாய் நோட்டு மட்டும் குறைந் தது.

‘‘சார்… தப்பா எடுத்துக்க வேணாம். பணம் வேணும்னா கேளுங்க. சொல்லாம எடுக்காதீங்க. என்ன?’’

‘‘என்ன தம்பி இது, நான் எடுக்கலை.’’

‘‘பொய் சொல்லாதீங்க சார்’’ என்றேன். ‘‘அதான், மறுபடி பிரஸ்ல வேலைக்குப் போறீங்கள்ல? உங்ககிட்ட நான் வாடகை கேக்கலை. ஃப்ரீயா தங்கறீங்க. இதுக்கு மேல என்கிட்ட நீங்க என்ன எதிர்பார்க்கறீங்க?’’

‘‘நிஜமாவே நான் எடுக்கலை தம்பி’’ என்றார். அவர் கண் கலங்கி இருந்தது. அதன் பிறகு கொஞ்ச நாள் பணம் எல்லாம் ஒழுங்காக இருந்தது.

ஒரு நாள் அறையிலிருந்த நியூஸ் பேப்பர்களைக் காணோம்.

‘‘எங்க சார் பேப்பர்?’’

‘‘பேப்பர், பீர் பாட்டில் எல்லாத்தையும் பழைய பேப்பர்காரன்கிட்ட போட்டேன்.’’

‘‘எவ்வளவுக்குப் போச்சு? காசு எங்கே?’’

‘‘இருபது ரூபாய்க்குத்தான் போச்சு. செலவு பண்ணிட்டேன். அடுத்த மாசம் தந்துர்றேன்.’’

எனக்கு எரிச்சலாக வந்தது. நிச்சயம் ஐம்பது ரூபாய்க்குக் குறையாமல் கிடைத்திருக்கும். சரியான ஃப்ராடாக இருக்கிறானே இந்த ஆள். ‘‘கேட்காம இது மாதிரியெல்லாம் பண்ணாதீங்க சார்! இதென்ன என் ரூமைச் சுத்தமா வெச்சுக்கிறதுக்குக் கூலியா?’’ என்றேன் கடுமையான பார்வையுடன்.

அவர் கூனிக்குறுகி நின்றார். எதுவும் பேசவில்லை.

அதன் பின்னர் ஒரு மாதம் போயிருக்கும்… ஆபீஸ் வேலையாக வெளியூர் போய்விட்டு நாலு நாள் கழித்து வந்தேன். ஒரு மதிய நேரம் மேன்ஷனை அடைந்தபோது, ராமநாதன் இல்லை. நல்ல வெயில்… சாப்பிடலாம் என்று கிளம்பியபோது எதிர் அறை ரெப்ரெசன்டேடிவ் ஒருத்தன் என்னுடன் வந்தான்.

‘‘ஊருக்குப் போயிருந்தீங்களா தோஸ்து?’’

‘‘ஆமா… ஒரு அஸைன்மென்ட். தஞ்சாவூர் போனேன்.’’

‘‘உங்க ரூம்ல இருக்காரே ஒரு பெரிசு. அவரு ஆள் சரியில்லை தோஸ்து… அனுப்பிடுங்க.’’

‘‘ஏன்?’’ என்றேன் கலக்கத்துடன்.

‘‘உங்க அயர்ன் பாக்ஸ்தான்னு நினைக்கிறேன். தெருமுனையில ஒரு மிக்ஸி சர்வீஸ் பண்ற கடை இருக்கில்ல! அங்க கொண்டுபோய் விலை பேசி விக்கிறாரு. நான் பாத்ததை அவர் கவனிக்கலை.’’

எனக்குக் கோபம் வயிற்றில் பொங்கியது. ரூமில் போய்ப் பார்த்தேன். அயர்ன் பாக்ஸ் இல்லை.

ராத்திரி அவர் கோயிலுக்குப் போய் விபூதி, குங்குமம் எல்லாம் இட்டுக்கொண்டு உள்ளே நுழைந்தார்.

‘‘இந்தா தம்பி… இன்னிக்குக் கோயில்ல விசேஷம்!’’

‘‘எங்க சார் இங்கிருந்த அயர்ன் பாக்ஸைக் காணோம்?’’ என்றேன் காட்டிக்கொள்ளாமல்.

‘‘தெரியலையே! நீங்க ஊருக்கு எடுத்துட்டுப் போகலையா?’’

‘‘எந்தக் கேனையன் சார் அயர்ன் பாக்ஸை ஊருக்கு எடுத்துட்டுப் போவான்?’’ என்று நான் பதில் சொன்ன தொனியில் அவருக்கு ஏதோ பிடிபட்டிருக்க வேண்டும்.

தலை குனிந்து யோசித்தார்.

‘‘நான் என்னிக்காவது உங்களை அடிச்சிருவேன்னு நினைக்கிறேங்க. வயசுல பெரிய ஆளா இருக்கீங்க. ஆனா, இனிமே அதைக்கூட பார்க்கக் கூடாது போலிருக்கு’’ என்றேன்.

அவர் கண்கள் கலங்கி ஓர் ஓரமாக உட்கார்ந்து லேசாக விசும்பினார்.

‘‘என்ன, டிராமா போடறீங்களா? என்கிட்ட பத்தாயிரம் ரொக்கமா இருந்தா, என்னைக் கொன்னுட்டு எடுத்துட்டுப் போயிடுவீங்க போலிருக்கே?’’

‘‘தம்பி…’’

‘‘இதைப் பண்ற ஆள் அதைப் பண்ண எவ்வளவு நேரமாகும்?’’

அவர் அழுதபடியே அமர்ந்திருந்தார்.

அடுத்த நாள் அவரைக் காணவில்லை. ஒரு லெட்டர் எழுதிவைத்திருந்தார்.

‘…சந்தர்ப்பமும், வறுமையும்தான் நான் பண்ண தப்புகளுக்குக் காரணம். ஒவ்வொரு முறையும் தப்புப் பண்ணிட்டு நான் மனசுக்குள்ள அசிங்கப்பட்டதை எல்லாம் விளக்கிச் சொன்னாலும், உங்க கோபம் நியாயமானது. மன்னிச்சிருங்க தம்பி!’’

கடிதத்தைப் படித்த பிறகும் எனக் குக் கோபம் குறையவில்லை. யாரையும் நம்பக் கூடாது என்று தோன்றியது. கிட்டத்தட்ட ஆறு மாதம் உடன் இருந்துவிட்டுப் போன அவரை அதன் பின்பு ஏழு ஆண்டுகள் கழித்து போன மாதம்தான் சந்தித்தேன்.

ஒரு வேலையாக பெங்களூரு சென்றிருந்தபோது, அல்சூர் பகுதியில் ஒரு மாலை வேளை. டீ குடிக்கலாம் என்று கடைக்குள் நுழைந்தால் கல்லாவில் ராமநாதன் உட்கார்ந்திருந்தார். ரொம்பச் சின்னக் கடை. என்னைப் பார்த்ததும் எழுந்தார்.

‘‘தம்பி! நீங்களா? நல்லா இருக்கீங்களா?’’

‘‘ம்’’ என்று தலையாட்டினேன். அவர் முகத்தில் தெரிந்த சந்தோஷம் எனக்கு வியப்பளித்தது. எனக்கு சற்றே ஆச்சர்யம், அவ்வளவுதான்!

‘‘வாங்க, வாங்க… ஏய், கடையைப் பாத்துக்க. இவரு நம்ம ஃப்ரெண்டு.’’

நாற்பத்தைந்து வயது மதிக்கத்தக்க பெண் வந்து கல்லாவில் அமர்ந்துகொள்ள, நாங்கள் வெளியே வந்தோம். கடைக்குச் சற்றுத் தள்ளி நின்றோம். ஒரு பையன் வந்து டீ கொடுத்தான்.

‘‘எப்படி சார் இங்கே?’’ என்றேன்.

‘‘உங்க ரூம்ல இருந்து கிளம்பி ரயில் ஏறி கைல பைசா இல்லாம எப்டியோ இங்க வந்துட்டேன். அங்க இங்க அலைஞ்சு இந்த டீக் கடையில எடுபிடி வேலைக்குச் சேர்ந்தேன். கல்லாவுல இருக்கே, அது கடைதான் இது. புருஷன் செத்ததும் என்னைச் சேர்த்துக்கிருச்சு. அப்படியே வண்டி ஓடுது…’’

‘‘ம்… ஒருவழியா செட்டில் ஆயிட்டீங்க’’ என்றேன் லேசான இகழ்ச்சியுடன்!

‘‘ம்’’ என்று புன்னகைத்தார். ‘‘அப்புறம் தம்பி, கல்யாணம் ஆயிருச்சில்ல?’’

‘‘ஆயிருச்சு.’’

‘‘செல்வி எப்படி இருக்காப்ல?’’

எனக்கு ‘சுருக்’கென்றது. அவள் பெயரை இன்னும் மறக்காமல் இருக்கிறார்.

‘‘என்னை மறந்துட்டீங்களா?’’ என்று கண்ணீருடன் செல்வி கேட்டதும், நான் வெட்கித் தலைகுனிந்ததும் நினைவு வந்தது. இந்த ராமநாதன்கூட அன்று அது போல்தான் என் முன் தலைகுனிந்தார்.

‘‘என்ன தம்பி… பேசாம இருக்கீங்க?’’

‘‘நான் செல்வியைக் கல்யாணம் பண்ணிக்கலை, சார்!’’

அவர் என்னைப் பார்த்த பார்வை புதிதாக இருந்தது. அற்பமான பார்வை!

– 07th நவம்பர் 2007

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *