கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: சரித்திரக் கதை
கதைப்பதிவு: July 22, 2023
பார்வையிட்டோர்: 1,827 
 
 

(ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 1 – 5 | அத்தியாயம் 6 – 10 | அத்தியாயம் 11 – 15

6.மகிழ மரத்தின் அடியில் 

மஹாயனர் பேச்சும் போக்கும் சிறிதும் புரியாததாலும் எதிரே நின்ற வண்ணச்சிலை புன்முறுவலே பூத்துக் கொண் டிருந்ததாலும் நிலைகுலைந்த சோழ நாட்டு வாலிபனான முகுந்தன், மஹாயனரையும் அந்தப் பெண்ணையும் மாறி மாறிப் பார்த்தான். பளிங்கு மண்டபத் தரையில் பிரதி பலித்த தன் தலை மறைந்து விட்டதற்குக் காரணம் அந்தப் பெண்ணின் தலை நிழல் அதில் பட்டதே யென்பதை அறிந்து கொண்ட வாலிபத் துறவி, தலை நிமிர்ந்த சமயத்தி லும் அவள் அற்புத அழகால் தனது தலை நிதானமிழந்து வறந்து கொண்டிருப்பதை நினைத்துச் சிறிது சினத்தின் வசப்படவும் செய்தான். சினம் அவனை மேலும் அவளைப் பார்க்கவே தூண்டியதே யல்லாமல் விழிகளை அப்புறம் திருப்பச் சக்தியற்றதாயிற்று. 

அத்தனை ஒய்யாரமாக நின்று கொண்டிருந்தாள் மாதவி. “சிலப்பதிகாரத்தின் மாதவி எத்தனை அழகாயிருந் திருப்பாளோ தெரியாது. ஆனால் இந்த மாதவி அவள் அழகுக்குக் குறைந்தவளல்லள்” என்று தனக்குள் சொல் லிக் கொண்டான் வாலிபத் துறவி. அவள் சுருண்ட குழல் முடியும், முகத்தில் தொங்கிய சுட்டியும், அப்பொழுதும் பளிங்கு மண்டபப் பிராந்தியத்தை நறுமண மயமாக அடித்த அவள் தலையில் சூடியிருந்த காஞ்சி மல்லிகை வாசனையும், கூந்தலின் கறுமைக்கு வெண்மையூட்டிய அதன் வர்ண விலாசமும் துறவியின் உள்ளத்தை அள்ளிச் சென்றன. அவள் விசால வதனமும், கரிய பெரிய வண்டு விழிகளும், செம்பருத்தி உதடுகளில் விளையாடிய மென்மைச் சிரிப்பும். சற்றே அளவுடன் எழுந்த மார்பும், பொய்யோ எனும் இடையும், சேலைக்குக் கீழே தெரிந்த செங்கமலப் பாதங்களும் அவளைத் தெய்வப்பிறவியாகக் காட்டினாலும், அவள் மனிதத் தன்மைக்கு அறிகுறியாக கண்களில் விரிந்த கருணை உள்ளத்தின் தூய்மைக்குச் சான்று கூறவே செய்தது. இப்படிப் பளிங்கு மண்டபச் சிலைகளில் இன்னொரு சிலையாக நின்ற மாதவியை அதிக மாக அலசுவதோ பார்ப்பதோ முறை கெட்ட செய்கை என்று எண்ணியதால் வாலிபத் துறவி குருநாதர் மீதே டசியில் கண்களைத் திருப்பினான். ‘நீங்கள் சொல்வது எனக்கு விளங்கவில்லை’ என்றும் கூறினான். 

மஹாயனரின் சலனமற்ற கண்கள் அவனை உற்று நோக்கின. ‘உன் மூட்டையிலிருக்கும் முத்திரை ஓலையை எடு’ என்று மட்டும் கூறினார். 

மூட்டையைத் தரையில் வைத்துத் தானும் உட்கார்ந்து. பிரித்து ஒலையை எடுத்த முகுந்தன் “பெண்ணே! இதைக் குருநாதரிடம் கொடு” என்று கூறினான். 

மாதவியும் குனிந்து அவன் கையிலிருந்த ஓலையை வாங்கிக்கொண்டு மஹாயனரை நோக்கினாள். ‘முத்தி ரையை நீயே உடைத்துப் படி மாதவி” என்ற மஹாய னரை முகுந்தன் இடைமறித்து, “தங்களைத் தவிர வேறு யாரும் இதைப் படிக்கக்கூடாது என்று என் தந்தை சொல்லி யிருக்கிறார்” என்று தடுக்க முயன்றான். 

“மாதவி வேறு, நான் வேறல்ல. அவளுக்குத் தெரியாத ரகசியம் எதுவும் இந்தக் காஞ்சியில் கிடையாது” என்ற மஹாயனர், “சரி, படி மகளே” என்று மாதவிக்கு உத்தரவும் இட்டார். 

மாதவி முத்திரைகளை உடைத்து இரைந்தே படித்தாள், 

“குருநாதர் ம்ஹாயனருக்கு, சோழர் குலக் கிளை மன்னன் சென்னி வணக்கத்துடன் எழுதுவது. இந்த ஓலை யைக் கொண்டுவரும் என் மகனுக்கு வில்வித்தையும் வாள் வித்தையும் நன்றாகத் தெரியும். காஞ்சி இருக்கும் நிலைமை யில் இவன் உங்களுக்கு உதவுவான் என்று நம்பி அனுப்பு கிறேன். இவன் துறவியாகி விட்டான். அப்படியே நின்று விடவும் விரும்புகிறான். இந்தப் பைத்திய நிலையிலிருந்து. தாங்கள்தான் இவனை மீட்க வேண்டும். துறவறத்துக்கும் ஒரு வயது உண்டு என்பது தாங்கள் அறியாததல்ல. தங் களுக்குத் தெரிந்த வித்தைகளில், சாஸ்திரங்களில், ஏதா வது ஒரு திவலையாவது இவனுக்கு வருமானால் நான் பெரும் நிம்மதியுடன் இருப்பேன். இவனை ஆட்கொண்டு திருப்ப வேண்டியது தங்கள் பொறுப்பு” என்று படித்தாள் மாதவி ஓலையை. 

மஹாயனர் இதழ்களில் புன்னகை விரிந்தது. “கேட் டாயா முகுந்தா உன் தந்தையின் விருப்பத்தை?” என்று வினவினார் மஹாயனர் அந்தப் புன்முறுவலின் ஊடே. 

முகுந்தன் உடனடியாகப் பதில் சொல்லவில்லை. ‘இத்தகைய ஒரு கடிதத்தை தந்தை எழுதுவார் என்று நான் எதிர்பார்க்கவில்லை” என்றான் சில விநாடிகளுக்குப் பிறகு… 

“இப்பொழுது என்ன செய்ய உத்தேசம்?” மஹாயனர் கேள்வி திடத்துடன் எழுந்தது. 

“தாங்கள் சொல்வதைக் கேட்பதாக ஆணையிட்டு வந் திருக்கிறேன் தந்தையிடம். காஞ்சி மிக ஆபத்திலிருக்கிற தென்றும் அதற்கு என் வாள் பயன்பட வேண்டுமென்றும் தந்தை ஆணையிட்டிருக்கிறார். அதைத் தவிர தங்களிடம் நான் விரும்பும் வேதாந்த பாடத்தையும் கேட்கலாமென்று சொன்னார். என் நிலை இப்படியிருக்கிறது” என்று சொன்ன முகுந்தன் சொற்களில் துன்பம் ஊடுருவி நின்றது. 

அதை மஹாயனரும் கவனித்தார். மாதவியும் கவனித் தாள். அவர்களிருவரும் பரஸ்பரம் பார்த்துக்கொள்ளவும் செய்தனர், ஒரு விநாடி பிறகு மஹாயனர் சொன்னார்: ”முகுந்தா! உனக்கு வேதாந்த பாடம் மாதவி சொல்லு வாள். அதில் அவள் கற்ற அளவுக்கு இந்த நகரில் வேறு யாரும் கற்றது கிடையாது. போர்ப் பயிற்சி மட்டும் நானே அளிக்கிறேன். அதுவரை இங்கேயே தங்கியிரு” என்று. அத்துடன் மாதவியையும் நோக்கி, “மாதவி! இவன் என் மகனுக்கு சமானம். ஆகையால் வேதாந்த விசாரம், தர்க்கம் எதையும் ஒளிக்காமல் விபரமாகச் சொல்” என்று உத்தரவிட்டார். 

மாதவி தலை குனிந்தாள், மஹாயனரை நோக்கி, ‘இவர் துறவி உடை.. என்று தடுமாற்றத்துடன் சொன்னாள். 

“ஆம், ஆம். அதை மறந்து விட்டேன்” என்ற மஹாயனர், “முகுந்தா! இந்தத் துறவியின் உடைகளைக் களைந்து விடு. வேறு உடைகளை அணிந்துகொள். மாதவி அதற்கு ஏற்பாடு செய்வாள்” என்று கூறினார் வாலிபத் துறவியை நோக்கி. 

“துறவறம் என் சொந்த விஷயம். அதை யாரும் மாற்ற முடியாது. மஹாயனரே! அந்த விஷயத்தில் தங்கள் உத்தரவைக்கூட நான் மீற நேரிடும்” என்றான் முகுந்தன். 

“துறவறம் ஆடையை மட்டும் பொறுத்ததல்ல”- மஹாயனர் குரலில் சினம் இருந்தது. 

“ஆம்.” முகுந்தன் பதிலிலும் சினம் ஒலித்தது.

“இந்தத் துறவி வேடத்தைத் துறந்தும் நீ துறவியாய் இருக்கலாம்.”

“இது வெறும் வேடமல்ல, உள்ளத்தின் வெளி அத்தாட்சி.” 

“இரண்டுக்கும் பொருள் ஒன்று தான். உள்ளத்தில் காவியிருந்தால் அதை ஆடை மூலம் வெளி உலகத்துக்குப் பறைசாற்ற அவசியமில்லை”. 

இதற்கு என்ன பதில் சொல்வதென்று விளங்கவில்லை முகுந்தனுக்கு. 

“சொன்னபடி செய் முகுந்தா. இதற்கெல்லாம் காரணம் உனக்குப் பின்னால் தெரியும். இப்பொழுது எதையும் கேட்காதே. நாளை உன்னைச் சந்திக்கிறேன்” என்ற மஹயனர் “நான் வருகிறேன் மாதவி” என்று கூறிவிட்டு உட்புறம் சென்றுவிட்டார். 

மடத்துக்குப் போக வேண்டியவர் அந்த மாளிகையின் உட்புறம் செல்ல வேண்டிய அவசியமென்ன என்று சிந்தித்த வாலிபத் துறவி மேலும் என்ன விசித்திரந்தான் இந்த இரவில் நடக்கிறது பார்ப்போம் என்று தனக்குள் சொல்லிக்கொண்டு ஓலை மூட்டையை மீண்டும்கட்டி தடியில் கோத்துக் கொண்டு எழுந்து நின்றான். பளிங்குத் தரையி லிருந்து, அதுவரை சிலையென நின்ற மாதவி அவனைத் தன்னுடன் வர சைகை செய்து முன் சென்றாள். அவளைத் தொடர்ந்த முகுந்தன் சிறிய முகப்புள்ள அந்த வீடு உள்ளே பெரிய அரண்மனை என்பதைப் புரிந்துகொண்டான். சுமார் மூன்று பெரிய கட்டுகளைத் தாண்டி மாதவி அவனை அழைத்துச் சென்றாள். அந்தக் கட்டிலும் யாரும் அவனது கண்களுக்குத் தெரியவில்லையானாலும் ஆங்காங்கு தென்பட்ட அறைகளுக்குள் இருந்து பல கண்கள் தன்னைப் பார்ப்பதை உள்ளூற உணரவே செய்தான் அந்த வாலிபத் துறவி. அப்படி உணர்ந்ததால் ‘பார்ப்பவர் யாராக இருக்கக்கூடும்? ஆண்களா பெண்களா?’ என்ற பவவித மாக எண்ணம் ஊடுருவச் சென்ற முகுந்தனை நான்காவது கட்டு வந்ததும் மேற்புறம் ஓடிய ஒரு மாடிப்படிக்கு அழைத்து வந்தாள் மாதவி. “இந்தப் படிகளில் ஏறிச் சென்றால் இரண்டு அறைகள் இருக்கும். அதில் இரண்டா வது அறையில் தங்குங்கள். தங்களுக்குப் பணிவிடை புரிய ஆள் அனுப்புகிறேன்” என்று கூறிவிட்டு மாதவி வந்த வழியே சென்றுவிட்டாள். 

அவள் சொன்ன மாடிப்படிகளில் ஏறி இரண்டாவது அறைக்கு வந்ததும் அதன் கதவின் வேலைப்பாட்டைக் கண்டே அசந்துவிட்ட முகுந்தன் கதவைத் தள்ளித் திறந்து உள்ளே சென்றதும் இன்னும் அதிகப் பிரமிப்புக்கு உள்ளா னான். அந்த அறையின் உட்புறத்தில் ராஜபோகத்துக்கான சகல வசதிகளும் இருந்தன. பெரிய கட்டில், உயர்ந்த பஞ்சணை, ஒரு மூலையில் பல துணிமணிகள், சுவர்களில் துணிகளைப் போட மான் கொம்புகள், இத்தனையும் கண் டான் முகுந்தன். அறையின் ஓர் ஓரத்திலிருந்த பெரிய குத்து விளக்கின் வேலைப்பாடு கூடப் பிரமிக்கும்படியாக இருந்தது.ஆனால் அந்தக் குத்து விளக்கின் அமைப்பும் அதை ஏந்தி நின்ற பதுமையின் முகமும் தான் எங்கோ பார்த்த முகமாயிருக்கவே சிறிது சிந்தித்தான் முகுந்தன். ஆனால் விஷயம் ஏதும் புத்திக்கு வராது போகவே அதைப் பற்றிய சிந்தனையை அகற்றினான். 

பிறகு பயண அலுப்பினாலும் இரவு வெகு நேரம் ஆகி யிருக்க வேண்டுமென்ற பிரமிப்பாலும் சீக்கிரம் படுக்க வேண்டுமென்ற எண்ணத்தாலும் தன் மேலுடையை மட்டும் களைந்துவிட்டு அந்த அறைச் சாளரத்தின் மூலம் தலையை வெளியே நீட்டினான். வெளியே விரிந்தது ஒரு பிரமையான உலகம். எட்ட வெள்ளை வெளேரென்று மண லுடன் தெரிந்தது வேகவதி நதி. அதை அடுத்து அதன் அக்கரையில் எழுந்தது பிரம்மாண்டமான புத்த விஹாரம். ஆகாயத்தில் சந்திரன் மங்கிக்கொண்டிருந்தான் மெதுவாக. வெள்ளி முளைக்கும் நேரம் ஆகவில்லையென்றாலும் நள்ளிரவு கடந்து நீண்ட நேரம் ஆகிவிட்டதென்பதை ஒன்றிரண்டா கத் தெரிந்த விண்மீன்களிலிருந்து புரிந்துகொண்டான் அந்த வாலிபன். “சரி படுப்போம்’ என்று கூறிக் கொண்டே சாளரத்திலிருந்து தலையை உள்ளே இழுக்கத் தொடங்கிய முகுந்தன் சட்டென்று தலையைக் கீழே குனிந் தான். அந்த மாளிகைச் சுவரின் அருகில் இருந்த ஒரு மகிழ மரத்தின் அடியில் மாதவி நின்றிருந்தாள். அவளை நோக்கிப் புரவியில் வந்த ஒரு மனிதன் தரையில் குதித்து அவளைத் தழுவிக் கொண்டான். பிறகு அவள் தலைமயிரைக் கோதியும் கொடுத்தான். 

என்ன காரணத்தாலோ வாலிபத் துறவியின் மனம் கொதித்தது. சட்டென்று. சாளரக் கதவை மூடிக்கொண்டு பஞ்சணையில் போய் விழுந்தான். அந்த சமயத்தில் அவன் அறைக் கதவு மெள்ளத் திறந்தது. மாதவி உள்ளே நுழைந் தாள் ஒரு குவளையுடன். பைத்தியம் பிடித்துவிடும் நிலைக்கு வந்தான் வாலிபத் துறவி. அதற்குள் இங்கு எப்படி வந்தாய்” என்று சீறினான் முகுந்தன். 

குழப்பமடைந்த முகத்துடன் மாதவி அவனை நோக்கினாள்.  “என்ன உளறுகிறீர்கள்?” என்றும் வினவினாள் வியப்பு மண்டிய குரலில். 

7.அவள் ஓதிய மந்திரம் 

வாலிபத் துறவி கேட்ட கேள்வியால் மாதவி வியப் படைந்தாளே தவிர திகிலடையவில்லையென்பதை அவள் அழகிய முகத்தின்மீது விழுந்த அறை வெளிச்சம் திட்ட வட்டமாக அறிவித்தது. என்ன உளறுகிறீர்கள்?” என்று அவள் தொடுத்த கேள்வியும் அதே நிலையை வலியு றுத்தவே துறவி சிறிது குழம்பவே செய்தான். பிறகு நிதா னித்துக் கொண்டு, ‘நான் ஒரு கேள்வி கேட்டேன்” என்று சொன்னான், குழப்பம் குரலிலும் ஒலிக்க. 

மாதவி முறுவல் செய்தாள். “ஆம்; கேட்டீர்கள் ஓர் அர்த்தமற்ற கேள்வி” ஏன்றும் கூறினாள். 

“அர்த்தமற்றதா?” துறவி எழுந்து உட்கார்ந்து கொண்டு மாதவியை உற்று நோக்கினான். 

“ஆம்” மாதவியின் பதில் திட்டமாகவும் அலட்சிய மாகவும் இருந்தது. 

‘எப்படி அர்த்தமற்றது?” 

“அதற்குள் இங்கு எப்படி வந்தாய் என்று கேட்டீர்கள்”. 

“ஆம்.”

“எதற்குள் என்பதை விளக்கவில்லை. வேறு எந்த இடத்தைக் குறிப்பிடுகிறீர்கள் என்பதும் தெரியவில்லை.” 

இந்தப் பதிலைக்கேட்ட முகுந்தன், மாதவி மாயக் காரியா பசப்பு வார்த்தைகளால் தன்னை ஏமாற்ற முயலும் மோசக்காரியா என்று தன்னுள் கேட்டுக்கொண்டே படுக் கையில் மௌனமாக ஒரு விநாடி உட்கார்ந்துகொண்டான். பிறகு சொன்னான்: “சற்று முன்பு உன்னை மகிழ மரத்தடி யில் பார்த்தேன்” என்று. 

மாதவி அதற்குப் பதிலேதும் சொல்லவில்லை. மேலும் அவன் பேசட்டும் என்று காத்திருந்தாள். துறவியே பேசினான்: “பார்த்துத் திரும்பி படுக்கையில் படுத்தேன்; நீ கதவைத் தட்டி உள்ளே வந்தாய். அது எப்படி முடியும்” என்று. 

“முடியாதென்பது புரிகிறதல்லவா?” என்று மாதவி கேட்டாள். 

“புரிகிறது” என்றான் துறவி. 

“அப்படியானால் நீங்கள் பார்த்தது நானல்லவென்று விளங்கியிருக்கவேண்டும் உங்களுக்கு,” 

“ஏன்” 

“இரண்டு இடங்களில் ஒரே இடத்தில் நான் இருக்க முடியாது என்ற காரணத்தால்”. 

இதைக்கேட்ட வாலிபன் மீண்டும் குழம்பினான். பிறகு மறுபடியும் கேட்டான். “அப்படியானால் நான் பார்த்தது யார்” என்று. 

பதிலுக்கு மாதவி ‘களுக்’ என்று நகைத்தாள். “நீங்கள் பார்த்தது யாரென்பதைச் சொல்ல நான் ஜோஸ்யமா படித்திருக்கிறேன்?” என்றும் கேட்டாள் நகைப்பின் ஊடே. 

துறவியும் தன் பிடிவாதத்தைவிடவில்லை. “நான் பார்த் தது நீதான். சந்தேகமில்லை” என்றான் திடமான குரலில். 

“நல்லது” என்றாள் மாதவி. 

துறவி நிதானத்தை இழந்தான். “எது நல்லது? மகிழ மரத்தடியில் நின்றது நல்லதா? அல்லது உன் காதலனைக் கட்டியணைத்தது நல்லதா?” என்று வினவினான் முகுந்தன், மிகுந்த சீற்றத்துடன் கட்டிலிலிருந்து இறங்கித் தரையில் நின்று. 

அவன் இறங்கிய வேகத்தில் மாதவிக்கு வெகு அருகில் வந்து நின்றான். அவள் சமீபம், இணையற்ற அழகு! எழுந்து தொட்டு விடுவனபோல் தோன்றிய இரட்டை பிம்பங்கள், அப்பொழுதும் புன்சிரிப்பை உதிர்த்துக் கொண்டிருந்த பவழ உதடுகள் துறவியை என்னவோ செய்யத்தொடங் கின. “இப்படித்தான் விசுவாமித்திரன் மேனகையிடம் துறவறத்தைப் பறி கொடுத்திருப்பான்” என்று தனக்குள் சொல்லிக் கொண்டான் சோழநாட்டு வாலிபன். 

அவன் இறங்கிய வேகத்தையும் தன்னருகில் வந்து நின்ற நிதானமற்ற நிலையையும் மாதவி கவனிக்கவே செய்தாளானாலும் அதைப்பற்றி அவள் கவலைப்படவே இல்லை. கையிலிருந்த குவளையை அவனை நோக்கி நீட்டி, இதில் பாலிருக்கிறது அருந்துங்கள்’ என்று கூறினாள். 

துறவி அவள் கையிலிருந்த குவளையை வாங்கி அதை ஒரு முறை விளக்கு வெளிச்சத்தில் நோக்கிவிட்டு, “அப்பட்டமான தங்கம்” என்று முணுமுணுத்தான். 

“உள்ளிருப்பதும் அப்பட்டமான பால்” என்றாள் மாதவி. 

அதை அந்த வாலிபத் துறவி காதில் வாங்கிக் கொள்ளாமல் குவளையை எடுத்துக்கொண்டு அறையின் ஒரு மூலைக்குச் சென்று அங்கிருந்த சாளரத்தில் வைத்துவிட்டுத் திரும்பவும் மாதவியிடம் வந்தான். “மாதவி இந்த மாளிகையின் விவகாரங்கள் பெரிய மர்மமாயிருக்கின்றன. எனக்கு ஏதுமே புரியவில்லை. நான் மேற்கொண்டுள்ள விரதத்துக்கும் இந்த மாளிகை விவகாரத்துக்கும் சற்றும் பொருத்தமில்லாதிருக்கிறது. நான் துறவி. இந்த அரண் மனையோ கேளிக்கை விலாசத்துக்கு ஏற்பட்டதாகத் தெரி கிறது. சாஸ்திரம் படிக்க, வாள் வித்தை, வேல் வித்தை. பயில மஹாயனரிடம் வந்தேன். உன்னிடம் படிக்கச் சொல்லிவிட்டு அவர் போய்விட்டார். நட்ட நடுஇரவில் சாளரத்தின் வெளியே பார்க்கிறேன். நீ யாரையோ கட்டித் தழுவுகிறாய். அடுத்த விநாடி இங்கு காட்சியளிக்கிறாய் என்று கூறிய துறவி, “சற்று முன்பு கீழே வந்தவன் யார்?’ என்று கேட்டான். 

மாதவி கேட்டாள் “யாராயிருந்தால் உங்களுக்கென்ன?” என்று. 

துறவி அதுவரையில் காட்டிய நிதானத்தை இழந் தான். ஓலை மூட்டையைக் கட்டிய மேல் துணியில்லாததால் அவன் மார்பில் முரட்டு மயிர் படர்ந்திருந்ததாலும் குறுந் தாடியும் அரும்பு மீசையும் தலையின் சுருள் மயிரும் காட்சி யளித்ததாலும் காட்டுமிராண்டி போல் காட்சியளித்த அந்த வாலிபன் மாதவியின் இரு தோள்களையும் பிடித்து அழுத்தினான் பலமாக. ‘மாதவி! யாரவன் சொல்! சொல்” என்றும் சீறினான். 

மாதவி மட்டும் சிறிதும் நிதானம் தவறவில்லை. “யாராயிருந்தால் உங்களுக்கென்ன?” என்று இரண்டாம் முறை பழைய கேள்வியைத் திருப்பினாள். 

“நீ என் குரு” என்றான் வாலிபன் கோபத்துடன். 

“ஆம். மஹாயனர் சொன்னார் சாஸ்திரம் போதிக்கும் படி” என்றாள். 

“எந்த சாஸ்திரம்? மகிழ மரத்தடியின் சாஸ்திரமா?” வாலிபன் சீற்றமும் மிகுந்தது, கைப்பிடியும் அவள் தோள்களில் இறுகியது. 

“அதைப்பற்றி எனக்குத் தெரியாது. நீங்கள்தான் சொன்னீர்கள், அப்படி ஏதாவது நிகழ்ந்திருந்தால் அதுவும் சாஸ்திரந்தான்” என்ற மாதவி அவன் பிடியிலிருந்து விலக முயன்றாள். 

ஆனால் துறவியின் பிடி இரும்புப் பிடியாயிருந்தது. அவள் சமீபம், அவள் பேச்சு எல்லாமே அவனுக்கு வறியை ஏற்றியிருந்தன. அவன் கைகள் அவளைச் சட் டென்று குழந்தையைத் தூக்குவது போல் தூக்கிப் பஞ்சணை யில் முரட்டுத்தனமாக எறிந்தன. பிறகு துறவி அறை மூலைக்குச் சென்று குவளையை எடுத்து வந்தான். “மாதவி! குடி பாலை” என்று அவள் உதட்டில் குவளையின் நுனியை அழுத்தினான். அவள் எந்த எதிர்ப்பையும் காட்டவில்லை. வாயை லேசாகத் திறந்து இரண்டு வாய் பாலைக் குடித் தாள். பிறகு கையால் குவளையை அகற்றி “போதும் மீதியை நீங்கள் அருந்துங்கள்” என்றாள். 

துறவி சிலையென நின்றான் கட்டிலுக்கு அருகில் அவளை நோக்கிக் கொண்டு சில விநாடிகள் “உன் எச்சிலை என்னைக் குடிக்கச் சொல்கிறாயா?” என்று சீறினான் முடிவில். 

“ஆம்” மாதவி முணுமுணுத்தாள். 

“உன் திமிர் மிகவும் அதிகம்” என்றான் துறவி. 

“ஆம்” 

“எச்சிலை நான் அருந்தலாமா?”

“எச்சில் நினைவிலிருந்து விலகிவிடும் சமயங்கள் உண்டு” 

“அதில் இது ஒரு சமயமா?”

“அப்படித்தான் நினைக்கிறேன்.” 

“நான் துறவியென்பதை மறந்துவிட்டாய்.” 

“மறந்தது நானல்ல. நீங்கள்” என்ற மாதவி புன் முறுவல் கொண்டாள். 

துறவி அறை மூலைக்குச் சென்று பால் குவளையை வைத்துவிட்டுத் திரும்பிவந்து கட்டிலின் முனையில் உட்கார்ந்துகொண்டு. தான் எப்படிப் போட்டானோ அப்படியே பஞ்சணையில் படுத்துக்கொண்டிருந்த அந்த அழகுப் பாவையைக் கூர்ந்து நோக்கினான். விளக்கொளி அவள் உடலுக்குப் பலவித இந்திர ஜாலங்களை விளைத்துக் கொண்டிருந்தது. மல்லாந்து கிடந்த அவள் உடல் லாவண்யங்கள் தொடுத்த மலர்க் கணைகள் முகுந்தனின் உள்ளத்தைச் சுக்கு நூறாய் உடைத்துக் கொண்டிருந்தன. துறவறம் தன்னை விட்டுப் பலமாகப் பறப்பதை உணர்ந் தான் வாலிபத் துறவி. என்ன உணர்ந்தும் தன்னைக் கட்டுப் படுத்திக் கொள்ள முடியாமல் தன் ஒரு கையை அவளுக் குக் குறுக்கே போட்டான். மாதவி தடை ஏதும் சொல்ல வில்லை. ‘குனியுங்கள்” என்றாள் மெதுவாக. 

குனிந்த துறவியின் காதில் “அறைக் கதவைத் தாழிட மறந்து விட்டீர்கள்” என்று மந்திரம் ஓதினாள். 

8. விஷ்ணுகோபன் 

சோழ நாட்டிலிருந்து சாஸ்திரமும் சஸ்திர வித்தை யும் பயில வந்த வாலிபத் துறவிக்கு, அன்றிரவு பஞ்சணை முகப்பில் உட்கார்ந்த சமயத்தில் பல விஷயங்கள் புரிய வில்லை. அவள் தன்னைக் குனியுங்கள் என்று சொன்னதும் தான் ஏன் குனிந்தான், கதவைத் தாழிட மறந்து விட்டீர் கள் என்று அவள் ரகசியமாக ஓதியதைக் காதில் வாங்கி னான். காதில் வாங்கிய பின்பும் சுய நிலைக்கு வராமல் ஏன் மதுவுண்ட வண்டுபோல் மயங்கியிருந்தான் என்ற எதுவுமே புரியவில்லை முகுந்தனுக்கு. அறைக்கதவைத் தாழிடாதது தான் செய்த பெரும் குற்றமோ என்றுகூடத் தோன்றிய தால் அவளை அவன் வெறித்துப் பார்த்துக்கொண்டே உட்கார்ந்திருந்தான். 

இதழில் லேசாக அரும்பிய புன்முறுவல் காந்தம்போல் அவன் இதழ்களை இழுக்க கண்களின் அரைகுறைப் பார்வை அவன் கண்களையும் இதயத்தையும் ஒருங்கே கவ்வ, சாதாரணமாக விட்ட மூச்சுகூட அவள் மார்பகத்தைத் தன் மார்புக்கு எதிராக எழவும் தாழவும் செய்து தனது உணர்ச்சிகளை நிலை குலையச் செய்ய, பஞ்சணையில் கிடந்த அந்தப் பாவையை, வைத்த கண் வாங்காமல் பார்த்த வாலிபத் துறவி நீண்ட நேரம் உட் கார்ந்த நிலையிலேயே இருந்தான். உறுதியான தன் மனத்தை யாரும் உலுக்கிவிட முடியாதென்ற நினைப்புக்கு, அன்று அழிவுகாலம் நெருங்கி விட்டதை முகுந்தன் சந்தேகமற உணர்ந்துகொண்டதால் அவன் பெருமூச்சு விட்டான். காரணமில்லாமல் இருமுறை கூடாது கூடாது என்பதற்கு அறிகுறியாகத் தலையை இப்புறமும் அப்புற மும் ஆட்டினான், பிறகு மாதவியை நோக்கி “இது சரியல்ல” என்றும் சொன்னான். 

மாதவியின் இதழ்கள் அரைகுறையாக விரிந்தன. “எது?” என்ற கேள்வி மிக மெதுவாக வெளிவந்தது செம்பருத்தி இதழ்களிலிருந்து. 

“இந்த நிலையில் நாம் இருப்பது” என்றான் முகுந்தன். 

“இந்த நிலையை விளைவித்தது யார்?” கேள்வியை மதுரமாகக் கேட்ட மாதவி மதுரமாகப் புன்முறுவலும் செய்தாள்.

வாலிபத் துறவி லேசாகச் சினத்தைக் காட்டினான் முகத்தில்.”நீ சொல்வது புரியவில்லை” என்றான். 

அவள் மெல்லச் சொன்னாள், “இந்தக் கட்டிலில் என்னைத் தூக்கி முரட்டுத்தனமாகப் போட்டது நீங்கள்” என்று. வாசகத்தை அவள் முடிக்காமல் பாதி விழுங்கிய திலேயே பொருள் அதிகமாகப் புதைந்து கிடந்தது. 

வாலிபத் துறவிக்குப் பதில் ஏதும் சொல்லத் தெரியாததால், “உன்னை யார் இந்த அறைக்கு வரச் சொன்னது?” என்று கேட்டான். 

மாதவி நகைத்தாள். மெதுவாக, “சோழ நாட்டில் இப்படித்தான் பழக்கமா?” என்றும் கேட்டாள். 

“என்ன பழக்கம்?” துறவி மூர்க்கமாக வினவினான்.

“அறைக்குள் வரும் பெண்களைப் பஞ்சணையில் தூக்கிப் போடுவது….” 

”போடுவது?” 

“பிறகு அவர்கள் உடலுக்குக் குறுக்கே கையைப் போடுவது?” 

“நிறுத்து போதும்” என்று சீறிய முகுந்தன் பஞ்சணையைவிட்டு எழுந்து நின்றான் . 

மாதவி வாய்விட்டுக் ‘களுக்’கென்று நகைத்தாள். அத்துடன் கேட்டாள், “ஒன்று தெரியுமா உங்களுக்கு?’ என்று. 

“எது?” துறவியர் எறிந்து விழுந்தார். 

“இது என் அறை” என்ற மாதவி மீண்டும் நகைத்தாள்.  

வாலிபத் துறவி அசைவற்று நின்றான். பிறகு அவளை யும் பார்த்து அறைக் கதவையும் நோக்கினான், அடுத்தபடி சாளரத்தண்டை சென்று மீண்டும் வெளியே நோக்கினான். மகிழ மரம் அவனைப் பார்த்து நகைப்பது போலத் தனது சின்னஞ்சிறு மலர்களை பொலபொலவென உதிர்த்தது. அதன் நறுமணம் அவன் நாசியில் புகுந்து சிந்தனையை ஏதேதோ செய்தது. முகுந்தன் மகிழ மரத்தை வெறித்து நோக்கினான். “மாதவி! இங்குதானே நீ அவனைத் நீ தழுவினாய் இறுக்க” என்று உள்ளே சொல்லிக்கொண்டான். அந்த நினைப்பு அவனுக்கு மீண்டும் வெறியை மூட்டியது. “மாதவி யார், தான் யார்? அவளை எவன் கட்டியணைத்தால் தனக்கென்ன?’ என்று சிந்திக்கும் சக்தியை அவன் அறவே இழந்து கிடந்தான். ஆகவே சட் டென்று திரும்பி அறைக் கதவை நோக்கி நடந்து அதை முரட்டுத்தனமாகத் தாழிட்டு அதில் முதுகைச் சார்த்திக் கொண்டு அங்கிருந்தே மாதவியை நோக்கினான். மாதவி பஞ்சணையில் லேசாக நெளிந்து சற்று வளைந்து படுத்தாள், அகஸ்மாத்தாக எரியப்பட்ட புஷ்ப மாலையைப் போல், அவள் கண்கள் மீண்டும் அவனை நோக்கின. 

வாலிபத் துறவி வாலிபத்தை மட்டும் மனத்தில் தேக்கிக் கொண்டு துறவிப் பதத்தைத் தியாகம் செய்தான், அதன் விளைவாக வேகமாக நடந்து பஞ்சணையை நோக்கி வந்தான். மாதவி துறவியின் வருகையைக் கண்டு அஞ்சவுமில்லை.நாணத்தை அதிகமாகக் காட்டவும் இல்லை. அவன் பழையபடி உட்கார இடம்விட்டு நகர்ந்து படுத்தாள். 

துறவி வந்து பழையபடி பஞ்சணை முகப்பில் உட் கார்ந்து தனது கையையும் அவள் உடலுக்குக் குறுக்கே போட்டான். போட்டதுடன் நிற்காமல் அவள் பூவுடலைத் தன்னை நோக்கி இழுக்கவும் செய்தான். அவள் அவனுக்கு அதிகமாக சிரமம் கொடுக்க விரும்பாததால் அவனை நோக்கித் தன் உடலைத் தானே நகர்த்தினாள். அப்படியே நிலைமை நீண்டிருந்தால் என்ன விபரீதம் நேரிட்டிருக்குமோ சொல்ல முடியாது. அந்தச் சமயத்தில் அறைக் கதவு லேசாகத் தட்டப்பட்டது. 

மாதவியை இழுத்து அவளை நோக்கி குனியப்போன வாலிபத் துறவி சட்டென்று நெட்டுக்குத்தாக நிமிர்ந்து உட்கார்ந்தான். மீண்டும் இருமுறை லேசாகக் கதவு தட்டப்பட்டது. விழித்தான் வாலிபத் துறவி. “யாரது?” என்று கேட்கவும் செய்தான். 

பதிலில்லாததால் மாதவியை நோக்கினான். அவள் எந்தவித உணர்ச்சியுமின்றி படுத்திருந்தாள். அந்த நிலையில் அவள் தனது உதவிக்கு வருவாளென்று துறவி எதிர்பார்த்திருந்ததால் ஏமாந்தே போனான். அவள் இதழைலவலேசமும் அசைக்காமல் ஏதும் பேசாமல் இருந்த தால் ‘இப்பொழுது என்ன செய்யட்டும்?” என்று கேட்டான். 

“எது வேண்டுமானாலும் செய்யுங்கள்” என்றாள் மாதவி. 

“கதவு தட்டப்படுகிறது.” உக்கிரமாகப் பேசினான் துறவி. 

“ஆம்.” சர்வ சாதாரணமாயிருந்தது மாதவியின் பதில். 

“ஒன்று அதைத் திறக்க வேண்டும் அல்லது பேசாமல் இருந்துவிட வேண்டும்” என்றான் வாலிபத் துறவி. 

“ஆம்.”

அந்த ‘ஆம்’ அவனுக்கு எரிச்சலைக் கொடுத்ததால் “நான் கதவைத் திறந்தால் உன் பெயர் கெட்டுப்போகும்” என்றான் முகுந்தன். 

“உங்கள் பெயர்?’ என்று அவள் கேட்டாள் பதிலுக்கு. வாலிபத் துறவிக்குக் கோபம் அதிகமாகிவிடவே அவன், சட்டென்று எழுந்து சென்று கதவின் தாழை வேகமாக அகற்றினான். கதவையும் நன்றாகத் திறந்தான். திறந்த வன் ஏதோ பாம்பை மிதித்தது போலப் பின்னடைந்தான். இன்னொரு மாதவி கதவுக்குள் நுழைந்து வந்தாள். அவளை உள்ளே நுழையவிட்டுப் பின்னடைந்து நின்ற வாலிபத் துறவி வந்தவளையும் நோக்கி கட்டிலில் கிடந்த மாதவியை யும் மாறி மாறி நோக்கினான். 

அறையில், நின்ற திருக்கோலமும் படுத்த திருக்கோல மும் லவலேசமும் வித்தியாசமில்லாமல் இருந்தன. ஒரே அச்சில் வார்த்த இரு சொர்ண பிம்பங்கள்! இரண்டையும் பார்த்த வாலிபத் துறவியின் மனத்தில் மகிழ்ச்சியும் படர்ந் தது. மகிழ மரத்தடியில் மற்றொருவனைக் கட்டியணைத்த காரிகை மாதவியல்லள் என்ற நினைப்பால். 

அந்த இரு பெண்கள் நிலையில் மாறுதல் ஏதுமில்லை. இருவரும் ஒருவரை யொருவர் பார்த்து நகைத்துக்கொண் டார்கள். “தேவகி! அவர் என்ன செய்கிறார்?” என்று மாதவியே முதலில் வினவினாள். 

‘”ராடப் போயிருக்கிறார். பாவம்! நீண்ட பயணத்தால் களைத்திருக்கிறார்” என்றாள் தேவகி. அவள் சொற்களில் துன்பம் சொட்டியது. பிறகு கேட்டாள் வாலிபத் துறவியை சுட்டிக்காட்டி, “இவர் என்ன செய்கிறார்” என்று. 

“அவரையே கேள் தேவகி” என்றாள் மாதவி. 

தேவகி முகுந்தனை நோக்கினாள் தன் துயர விழிகளால். ”ஆமாம் துறவியாரே! நீங்கள் என்ன செய்கிறீர்கள்?” என்று வினவினாள் தேவகி. 

வாலிபத் துறவி விழித்தான். “தவறாக நினைத்து விட்டேன்” என்று சொன்னான் சிறிது நேரத்திற்குப் பிறகு. 

“எதைத் தவறாக நினைத்துவிட்டீர்கள்?” தேவகியின் கேள்வி குழப்பத்துடன் வெளிவந்தது. 

“உங்களை மாதவியென்று நினைத்துவிட்டேன்”. 

“அதனால்?” 

இந்த இடத்தில் மாதவி குறுக்கிட்டு “என்னைத் தூக்கிப் படுக்கையில் போட்டார்” என்று சொன்னாள். 

தேவகியின் கண்களில் சீற்றம் மிதமிஞ்சித் தோன்றியது. “என் தங்கையைத் தொட உமக்கு என்ன துணிச்சல்?” என்று சீறினாள். 

“மாதவி உங்கள் தங்கையென்று தெரியாது. இரண்டு பேரும் ஒரே மாதிரியிருக்கிறீர்கள்….” சங்கடத்துடன் இழுத்தான் வாலிபத் துறவி. 

“உம்.” 

“அதுமட்டுமல்ல.” 

“வேறென்ன”

“மகிழ மரத்தடியையும் பார்த்தேன்”. 

இதைக் கேட்ட தேவகி மௌனம் சாதித்தாள். துறவியே தொடர்ந்தான், “அங்கிருந்தது மாதவியென்று தவறா நினைத்து விட்டேன்” என்று. 

திடீரென்று உதித்த உணர்ச்சிகளைத் தேவகி அடக்கிக் காண்டாள். அதற்கும் மாதவியை நீர் தொட்டுத் தூக்கிக் கட்டிலில் போட்டதற்கும் என்ன சம்பந்தம்? மாதவியை உங்களுக்கு முன்பின் தெரியுமா?” என்று கேட்டாள். 

“தெரியாது” வருத்தத்துடன் பதில் கூறினான் வாலிபத் துறவி. 

“அப்படியிருக்க ஒரு பெண்ணைத் துறவியான நீர் தொடலாமா?” என்று கேட்ட தேவகி “நீர் இங்கு வந்தது சாஸ்திரம் படிக்கத்தானே?’ என்றும் வினவினாள். 

மாதவி கட்டிலில் எழுந்து உட்கார்ந்தாள். “அப்படித் தான் சொன்னார் அக்கா” என்றும் கூறினாள். 

இதைக் கேட்ட தேவகி நகைத்தாள். மாதவியும் அதில் கலந்து கொண்டாள். துறவி அவ்விருவரையும் நோக்கி ஏ தும் அறியாமல் விழித்தான். அந்த மாளிகையை ஏதோ பெரும் மர்மம் சூழ்ந்திருக்கிறது என்று மட்டும் புரிந்து கொண்டான். அந்த இரு மாதர்களோ அவனை உற்று நோக்கினார்கள். 

இப்படி மூவரும் தங்களையே நோக்கிக் கொண்டிருந்த தால் மற்றொருவன் அந்த அறைக்குள் நுழைந்ததையோ, கதவுக்கருகில் சிலை போல நின்றதையோ கவனிக்கவில்லை. மூவரில் அவனை முதலில் கவனித்த மாதவி கட்டிலிலிருந்து கீழேகுதித்து “அக்கா! அவர்….” என்று அச்சத்துடன் உதிர்த்தாள் சொற்களை. அதைக் கேட்ட தேவகி சட் டென்று திரும்பினாள். மாதவி துறவியின் அருகில் வந்து “உம்! ஏன் நிற்கிறீர்கள், மண்டியிட்டு வணங்குங்கள்” என்று அவனைத் தள்ளினாள் வந்த மனிதன் எதிரே. சொன்னது மட்டுமின்றி தான் முதலில் சென்று வணங் கினாள். காரணம் ஏதும் தெரியாவிட்டாலும் வாலிபத் துறவியும் அவளுடன் சேர்ந்து வணங்கி எழுந்திருந்து வந்தவனை நோக்கினான். 

வந்தவன் ஆஜானுபாகு வாயிருந்தான். அவன் முகத் தில் வீரக்களை சொட்டிக்கொண்டு இருந்தது. கறுத்து அடர்ந்த சீராக வெட்டப்பட்டிருந்த முரட்டுக் குழல்கள் தலை யிலிருந்து இறங்கிக் கன்னங்களை வளைத்து நின்றன. அவன் ஆபரணங்கள் ஏதும் அணியவில்லை. அவற்றுக்கும் பதில் பல தழும்புகள் அவன் மார்பிலும் கைகளிலும் தெரிந்தன. அவன் இடையில் சாதாரண உடையே அணிந் திருந்தான். தோளில் மட்டும் ஒரு சரிகை அங்கவஸ்திரம் துலங்கி தொடை வரையில் தொங்கிக் கொண்டிருந்தது. அவன் கண்கள் மிகத் தீட்சண்யமாயிருந்தன. அவனைச் சில விநாடிகள் அளவெடுத்து ஒரு மகாவீரன் முன்னிலையில் தான் நிற்பதைப் புரிந்து கொண்டான் முகுந்தன். ஆகவே. கேட்டான் வந்தவனை நோக்கி ”தாங்கள் யார்?” என்று. 

வந்தவன் பதில் கூறவில்லை. மாதவியே பதில் கூறினாள். ‘“உங்கள் முன்னிருப்பவர் விஷ்ணுகோப மகாராஜா” என்று பக்தியுடன் சொற்களை உதிர்த்தாள். 

முகுந்தன் விழிகளில் பயமும் பக்தியும் கலந்து விரிந் தன .தலை தானாக மீண்டும் தாழ்ந்தது. 

‘நீதான் சென்னியின் புதல்வனா” என்று விஷ்ணு கோபன் வினவினான். அவன் குரலில் அன்பு கொட்டியது. “ஆம், மகாராஜா” என்ற துறவியின் பதில் பக்தி பிரவாகித்தது. 

விஷ்ணுகோபன் வாலிபத் துறவியைத் துன்பம் நிறைந்த விழிகளால் நோக்கினான். ‘சென்னியின் புதல்வனே! நீ எத்தகைய ஆபத்தில் சிக்கியிருக்கிறாய். தெரியுமா?” என்று கேட்கவும் செய்தான். 

“தெரியாது மகாராஜா?” என்ற துறவியின் குரலில் குழப்பம் இருந்தது. 

ஆபத்தை மகாராஜா விவரித்தார். துறவியின் திகில் எல்லை மீறியது. 

9. அவனைச் சூழ்ந்த ஆபத்து 

வாலிபத் துறவியை நோக்கி அவன் சிக்கியிருக்கும் ஆபத்தை விவரிக்கும் முன்பாக மகாராஜ விஷ்ணுகோபன் தன் சீரிய கண்களால் மாதவியையும் தேவகியையும் நோக் கினார் சில விநாடிகள். “இந்த வீரனைச் சூழ்ந்திருக்கும் ஆபத்து எத்தன்மையுடையது என்பது உங்களில் இருவரில் யாருக்காவது தெரியுமா?” என்று தேவகியையும் மாதவியையும் வினவினார். 

“தெரியாது” என்றாள் மாதவி. தங்கையுடன் சேர்ந்து, “ஆம் தெரியாது” என்று தேவகியும் ஒத்துப் பாடினாள். 

“அப்படியானால் நீங்கள் மூவருமே அதைப் புரிந்து கொள்வது நல்லது” என்ற மகாராஜா மெல்லக் கம்பீர மாகச் சாளரத்துக்கு நடந்து சென்று வெளியே தமது கண் களை 

ஓடவிட்டார். பிறகு அதிலிருந்து சற்று விலகி உள்ளே வந்து “வீரனே, நீயும் சாளரத்தின் மூலம் வெளியே பார்” என்று உத்தரவிட வாலிபத் துறவியும் எட்டி வெளியே நோக்கினான். சற்று முன்பு விஷ்ணுகோப மகாராஜா தேவகியைக் கட்டியணைத்த அதே மகிழ மரத் தடியில் சற்று பருமனான ஒரு மனிதன் நின்றிருந்தான். துறவி தலையை நீட்டியதும் மகிழ மரத்து மறைவில் பதுங் கிக் கொண்டான். 

அந்த மனிதன் யாரென்பது புரிந்ததால் சீற்றத்தின் வசப்பட்ட முகுந்தன் சட்டென்று திரும்பி தன் மூட்டை யிடம் சென்று நாக சர்ப்பத்தைக் கையலெடுத்துக்கொண்டு அறையைவிட்டு ஓட முற்பட்டான். அவன் கையைத் தமது கையால் பிடித்த மகாராஜா ‘முகுந்தா! அவசரத்தினாலோ ஆத்திரத்தினாலோ எந்த காரியமும் சாதிக்கப்படுவதில்லை” என்று கூறி அவனைத் தடுத்ததன்றி “உனக்கு அவனை நான் காட்டியதன் காரணமே உன் ஆபத்தை விளக்கத் தான்’ என்றும் விளக்கினார். 

“இந்தக் குடிகாரன்தான் என்னைச் சத்திரத்தில் சண்டைக்கிழுத்தான்” என்ற முகுந்தன் முகத்தில் கோபம் பெரிதும் தாண்டவமாடியது. 

“ஆம்.” மகாராஜா சர்வ சாதாரணமாக ஒப்புக் கொண்டார். 

“சத்திரத்து விஷயம் தங்களுக்குத் தெரியுமா?” வாலிபன் கேள்வியில் வியப்பு ஒலித்தது. 

‘“தெரியும்’” என்றார் மகாராஜா. 

இந்தச் சமயத்தில் தேவகியும் இடைப் புகுந்து, ‘மகா ராஜாவுக்குத் தெரியாமல் இந்த மாநகரத்தில் துரும்புகூட அசைய முடியாது. என்று பெருமையுடன் கூறினாள். அவள் குரலிலிருந்த பெருமையிலிருந்தும் பிரேமை யிலிருந்தும் அவளுக்கும் மகாராஜாவுக்குமிருந்த அந் நியோன்யம் மிகத் தெளிவாகத் தெரிந்தது வாலிபத் துறவிக்கு. ‘மகாராஜாவுக்காக இவள் உயிரைக்கூட விடுவாள்” என்று துறவி தனக்குள் சொல்லிக் கொண் டான். நினைவு அந்தத் திசையில் ஓடியதால் உடனடியாக அவன் உரையாடலைத் தொடங்கவில்லை. மாதவியே அவனை ஊக்கத் தொடங்கி, “மேலே சந்தேகம் ஏதாவதிருந்தால் மகாராஜாவைக் கேட்டுவிடுங்கள்” என்று கூறினாள். 

வாலிபத் துறவி மகாராஜாவை நோக்கினான் பல விநா டிகள் ஏதும் பேசாமல். பிறகு பேசத் தொடங்கிய போது அவன் சொற்கள் வியப்பு, கவலை ஆகிய இரண்டு உணர்ச்சி களையும் கலந்து தாங்கியே வெளிவந்தன. ‘மகாராஜா இந்தக் காஞ்சியின் மர்மம் எனக்குப் புரியவில்லை. இது பாரதத்தின் மிகப் பெரிய நகரம். வித்தியார்த்திகளுக்குச் சிறந்த கல்விக் கோயில், கலைக்கு இருப்பிடம் என்றெல் லாம் கேள்விப்பட்டிருக்கிறேன். இது அளிக்கும் கல்வியைப் பெறவே தந்தையிடம் அனுமதி கேட்டேன். அவரும் ஓலை எழுதி முத்திரையிட்டுக் கொடுத்தார். அதில் என்ன எழுதி யிருந்தாரென்பது தெரியாமலே இங்கு வந்தேன். மாதவி ஓலையைப் படித்த பின்புதான் இங்கு நான் சாஸ்திர சஸ்திர வித்தைகள் பயில மட்டுமின்றிக் காஞ்சிக்காகப் போராட வும் வந்திருக்கிறேனென்பதைப் புரிந்து கொண்டேன். நான் வந்தது. இங்கு புகுந்தது, பிறகு நடந்தது எல்லா வற்றினும் பெரிய மர்மங்கள் புதைந்திருப்பதை நான் இப் பொழுது உணருகிறேன். இவற்றுக்கு என்ன காரணம்?’ மெள்ளவும் உறுதியாகவும் பேசினான் துறவி. 

மகாராஜாவின் கருணைக்கண்கள் அவன் மீது பதிந்தன. உன் அவசரந்தான் உன்னைக் காட்டிக் கொடுத்தது முகுந்தா’ என்றார் மகாராஜா கருணை தமது குரலிலும் துலங்க. 

துறவி தன் கூரிய விழிகளை மகாராஜாவின்மீது நிலைக்க விட்டான். “என் அவசரமா?” என்றும் வினவினான் மிகுந்த பணிவுடன். 

“ஆம்,முகுந்தா.”

“விளங்கவில்லை மகாராஜா”. 

”முகுந்தா! நீ காஞ்சியின் பெருவாயிலை அடைந்த போது கதவுகள் அடைக்கப் பட்டன.”

“ஆம்.” 

“மூடப் பட்ட கதவுகளையும் மீறிக் காஞ்சியின் பெரும் மதில் சுவரில் ஏறி உள்ளே வந்தாய்….” 

“உண்மை மகாராஜா….”

“அதற்காகக் கயிற்றைக் கீழே தொங்கவிடும்படி மதில் மீதிருந்த காவலரை நோக்கிக் கூவினாய்”. 

இதற்குப் பதில் சொல்லுமுன் சிறிது சிந்தித்தான் முகுந் தன். ‘இத்தனையும் மகாராஜாவுக்கு இதற்குள் எப்படித் தெரியவந்தது? மாதவி சொல்லியிருப்பாளா? இருக்காது. வந்ததிலிருந்து மாதவிதான் என்னை விட்டு அகலவே இல்லையே. தேவகி சொல்லியிருப்பாளா? அவள் என்னைப் பார்க்கவே இல்லையே. மஹாயனர் சொல்லியிருப்பாரா? இருக்காது; அவரும் மகாராஜாவும் சந்திக்க அவகாசம் இல்லையே.அப்படியானால் இத்தனையும் மகாராஜாவுக்கு எப்படித் தெரிந்தது?” 

இப்படிப் பல கேள்விகளை உள்ளூரக்கேட்டுக்கொண்ட முகுந்தனை நோக்கிப் புன்முறுவல் காட்டினார் மகாராஜா. ‘முகுந்தா! இன்று மாலை நீ இந்நகருக்குள் நுழையாது வெளியில் தங்கி நாளை வந்திருந்தால் உன்னைப்பற்றிக் காஞ்சியில் அதிகமாக எதுவும் தெரிந்திருக்காது. ஆனால் உன் அவசரம், நீ அநாயசமாக மதில் மீது ஏறிய திறன் இவை உன் வரவைப் பறைசாற்றி விட்டன”, என்ற மகாராஜா கேட்டார் “ஆமாம் முகுந்தா! நீ கேட்டதும் மதில் மீதிருந்த காவலன் கயிற்றைத் தொங்கவிட்டானே. அவனை உனக்கு முன்பே தெரியுமா?” என்று. 

“எப்படித் தெரியும்? நான் இங்கு ஊருக்குப் புதியவனாயிற்றே” என்று கேட்டான் முகுந்தன். மகாராஜாவின் கேள்வியின் பொருள் அவனுக்குப் பளிச்சென்று புரிந்ததால் சிறிது குழம்பவும் செய்தான். 

“உன்னைக் காவலுனுக்குத் தெரியாது. நீ துறவி, நாடோடியாகத் தெரிகிறாய். போகிற வருகிற நாடோடிகளுக்கெல்லாம் நகரப்பெருவாயிலைத் திறக்கும் அளவுக்குக் காஞ்சியின் காவலர் இழிபட்டு விட்டார்களென்று நினைக் கிருயா முகுந்தா?” என்று வினவினார் மகாராஜா. 

“அப்படியானால் என்னைக் காவலன் அனுமதித்தது…. எனக்குக் கயிறு வீசியது….” என்று இழுத்தான் முகுந்தன். 

“வேறொருவன் உத்தரவால். நீ ஓடி வருவதை அவன் கவனித்தலும் கவனிக்காதது போலிருந்தான். கதவு மூடப் பட்டதும் நகருக்குள் சொல்லாமல் கதவின் மறு பக்கத்தில் நின்றான். உன் குரல் கேட்டதும் நிதானித்தான். பிறகு காவலர்களுக்குச் சைகை செய்து போய்விட்டான். அதனால் தான் காஞ்சிக்குள் நீ விளக்கு வைத்து புகமுடிந்தது. அந்தி வேளைக்குப் பிறகு ஈ காக்காய் கூடப் புகமுடியாத காஞ்சிக்குள் நீ புக முடிந்ததன் காரணம் காவலன் கருணை யல்ல. நீ உள்ளே வர இன்னொருவன் ஆசைப்பட்டான்.” 

மகாராஜாவின் விவரம் துறவியை சிந்தனையில் ஆழ்த் தியது. அதுவரை புரியாத பல விஷயங்கள் புரியலாயின. ஆனால் அப்படித்தன்னைக் கண்காணித்தவன் யாரென் பதைத் தெரிந்து கொள்ள மகாராஜாவை நோக்கிக் கேட் டான், அந்த மனிதன் யாரென்பதை நான் அறிய லாமா?’ என்று. 

மகாராஜா முகுந்தனை உற்று நோக்கினார். “முகுந்தா! உனக்கு முன்பு காஞ்சியில் யார் நுழைந்தது?” என்றும் வினவினார். 

“புரவி வீரர் கூட்டம்” என்றான் முகுந்தான். 

அந்தக் கூட்டம் உன்னைக் கடந்துதான் வந்திருக்க வேண்டும்.” 

‘”ம் மகாராஜா! புரவிகளுக்குச் சமமாக என்னால் ஓட முடியுமா?” 

“முடியாது.முடியாது அதனால் அந்தக் கூட்டம் உன்னை தாண்டிச் சென்றது உனக்கு முன்பு உள்ளேயும் நுழைந்து விட்டது, அந்தக் கூட்டத்திற்கு ஒரு தலைவன் இருந்தான்….” மகாராஜாவாசகத்தை முடிக்காமல்விட்டார். 

“ஆம் மகாராஜா! உபதளபதி போல் உடையணிந்திருந்தான்.” என்றான் முகுந்தன். 

“அவன் உப தளபதிதான். காஞ்சியைக் காக்கும் பொறுப்பு அவனிடம் ஒப்படைக்கப் பட்டிருக்கிறது” என்று மகாராஜா சுட்டிக் காட்டினார். 

“புரிந்ததற்கு அறிகுறியாகத் தலையாட்டிய முகுந்தன் ‘அதனால்?’ ஏதோ கேள்வி கேட்க வேண்டுமென்பதற் காகக் கேட்டான். 

“உன்னை வழியிலேயே கண்ட புரவி வீரர் தலைவன் காஞ்சிக்குள் புகுந்ததும் உடனடியாக இருப்பிடம் செல்ல வில்லை. கதவுக்கு அப்புறம் புரவியிலேயே காத்திருந் தான். உன்னை உள்ளேவிடச் சைகையும் செய்துவிட்டுப் போய்விட்டான். பிறகு நடந்ததெல்லாம் தற்செயலாக நடந்ததல்ல” என்று மகாராஜா கூறினார். 

”அவன் பெயர்?” சினத்துடன் வினவினான் முகுந்தன். “பலபத்திரன், வீரபத்திரன் தம்பி’ என்றார் மகாராஜா. 

“அப்படியானால் வீரபத்திரன் சத்திரத்துக்குக் குடித்து விட்டு வந்தது, என்னைச் சண்டைக்கிழுத்தது எல்லாம்….” 

‘முன்னேற்பாடு. காஞ்சியின் பெருமதிளை ஏறி, மாலைக் குப் பின் நகருக்குள் யாரும் புகக்கூடாதென்ற உத்தர வையும் மீறி, ஒருவன் இந்த நகருக்குள் புகுந்தாள் அவனை ஒற்றர்கள், அதுவும் பலபத்திரன் ஒற்றர்கள் கண்காணிக் காமல் இருப்பார்களென்று நினைக்கிறாயா? அப்படி எல்லோ ரும் இஷ்டப்படி இந்நகருக்குள் நுழைவதானால் இதன் கதி அதோ கதியாகி மாதம் ஆறு ஆகியிருக்கும்” என்று விளக் கிய மகாராஜா, “முகுந்தா! உன் வரவை நீயே பறை சாற்றி விட்டாய். அதனால் உன் திறமையைச் சோதிக்க வீரபத்திரன் யதேச்சையாகத் தோன்றினான். சத்திரத்தில் உன்னைக்காக்க மஹாயனரும் விரைந்தார். உன்னைப் பிடித்த நல்ல காலம் நீ இங்கிருக்கிறாய், உன்னைக் கொல்ல வந்த வீரபத்திரன் அதோ மகிழ மரத்தடியில் நிற்கிறான்” என்று மன்னர் விளக்கினார். 

“ஆம் பார்த்தேன் அவனை-” என்றான் முகுந்தன். 

“அதனால் அவனைக் கொல்ல நாக சர்ப்பத்தை எடுத் துக் கொண்டு ஓட முனைந்தாய்?” 

“ஆம் மகாராஜா!” 

“மஹாயனர் அவனைச் சிறைக்கு அனுப்பவில்லையா?”

“அனுப்பினார்.” 

“அப்படியானால் அவன் மகிழ மரத்தடிக்கு எப்படி வந்தான்?”

“பலபத்திரன் விடுவித்து விட்டானா?” 

“ஆம்”. 

“மஹாயனர் உத்தரவையும் மீறியா?”

“மஹாயனருக்குத் தெரியாது” 

“இத்தனையும் பலபத்திரன் செய்யக் காரணம்?” மகாராஜா நிதானித்தார். பிறகு மாதவியைப் பார்த்தார்.  

“நீயே சொல் மாதவி” என்றார். 

அதுவரை ஏதும் பேசாமல், இமையைக்கூட கொட்டா மல் முகுந்தனைப் பார்த்துக்கொண்டிருந்த மாதவி சொன்னாள். துறவியாரே! பலபத்திரன் உங்களை நாளைக்குள் தீர்த்துக் கட்டப் பார்க்கிறான். இந்த மாளிகையைவிட்டு வெளியே சென்றால் உங்கள் உயிர் செல்லாக் காசு பெறாது” என்று. 

முகுந்தன் விழித்தான் ஏதும் புரியாமல் என்னை ஏன் பலபத்திரன் கொல்ல வேண்டும்?” என்று வினவினான். நீங்கள் சென்னியின் மகன் என்பதால்” என்றாள் மாதவி. 

10.காஞ்சியின் துரோகி 

மாதவியின் சொற்கள் முகுந்தனை மிதமிஞ்சிய வியப்புக் குள் ஆழ்த்தியதால் அவன் சொன்னான் மாதவியை நோக்கி “மாதவி! முன்னுக்குப் பின் முரணாகப் பேசுகிறாயே” என்று. 

அதனால் விழித்துக்கொண்ட மாதவியின் திடமனம்கூட அப்பொழுது குழம்பியதால் அந்தக் குழப்பச் சாயை முகத்திலும் விரிய விஷ்ணுகோப பல்லவனை நோக்கினாள்.அதைக் கண்ட மகாராஜா மெல்ல நகைத்தார். “மாதவி! ஆபத்தான காலத்தில் இருப்பவர்கள், ஆபத்தான அரசியலில் கலப்பவர்கள் பேச்சில் மிக எச்சரிக்கையாகயிருக்க வேண் டும்” என்று நகைப்பின் ஊடே கூறிய மன்னர், “இவளை நோக்கியிருக்கும் ஆபத்து இன்னதென்று தெரியாது என்று முதலில் கூறிய நீயே அந்த ஆபத்தைப் பின்னால் விவரித் தாய்” என்றும் விளக்கிக் காட்டினார். மாதவி நடந் ததை யெல்லாம் உனக்கு மஹயானர் சொல்லியிருப்பார் என்பதில் எனக்குச் சந்தேகமில்லை. தமது அந்தரங்கத்தை அவர் உன் ஒருத்தியிடம்தான் கொட்டுகிறார் என்பது எனக்கு நன்றாகத் தெரியும், ஆகையால்தான்….” என்று மேலும் ஏதோ சொல்லப்போன மகாராஜாவின் சொற்களை இடையில் வெட்டிய மாதவி, கதையைச் சொல்லிக் கொண்டே போய் திடீரென ‘நீயே சொல் மாதவி’ என்று திருப்பி விட்டீர்கள். நீங்கள் பேசிய உணர்ச்சிவசப்பில் மயங்கியிருந்த நானும் உளறிவிட்டேன்” என்று கூறித் தனது சகோதரியையும் பார்த்து துறவியையும் நோக்கினாள். 

தேவகியின் கண்கள் வியப்புடன் நோக்கின மாதவியை. “மாதவி என்னிடமிருந்து இதுவரை நீ எதையுமே மறைத்த தில்லையே” என்றும் குற்றம் சாட்டும் குரலில் கூறினாள் தேவகி. 

மாதவி சொன்னாள், “நான் என்ன செய்வது அக்கா? குருநாதர் கட்டளை. 

அந்தக்கட்டளையையும் மீறி என்னைப் பேச வைத்துவிட்டார் மகாராஜா, நான் அயர்ந்திருந்த சமயத்தில்” என்று. 

சகோதரிகளின் சண்டையைத் தீர்க்க மகாராஜாவே முன் வந்தார். “தேவி மாதவி என்ன செய்வாள்? பல்லவ ராஜ்யத்தின் பெரும் சுமையை மஹயானர் அவள் தலைமீது ஏற்றி வைத்திருக்கிறார். அவள் இன்றுவரை வாயைத் திறக்கவில்லை. ஆனால் யானைக்கும் அடி சறுக்குமல்லவா?” என்று கூறிய மகாராஜா “உன்னிடம் சகலத்தையும் சொல்ல நானிருக்கிறேனே?” என்றார். 

தேவகியின் வசீகரக் கண்கள் பல்லவனை விழுங்கிவிடு போல் பார்த்தன. “என்ன சொல்லிவிட்டீர்கள் அப்படி?இந்தத் துறவியைப் பற்றிச் சொன்னீர்களா?’ என்று அன்பு கலந்து, ஆனால் வருத்தம் ஒலித்த குரலில். 

மகாராஜா அவளருகில் சென்று முதுகில் ஆதரவுடன் கையை வைத்தார். “என் பிற்கால ராணிக்கு வேதனை அளித்து அவள் உள்ளத்தையோ, உடலையோ, அழகையோ குலைக்க நான் விரும்பவில்லை’ என்று மிகுந்த வாஞ்சையுடன் பேசினார். 

தேவகியின் உள்ளம் அதில் சாந்தியடையவில்லை. மஹாயனரோ, மகாராஜாவோ மாதவியை நம்பும் அளவுக் குத் தன்னை நம்பவில்லை என்பதைப் புரிந்து கொண்டதால் மனம் வெதும்பினாள். “இந்த அரசியலின் தலைவேதனை எனக்கு எதற்கு? நான் போகிறேன் வெளியே” என்று கூறி வெளியே செல்லவும் கிளம்பினாள். 

“இருங்கள் தேவி! உங்களை நான் நம்புகிறேன்” என்று துறவி அவளைத் தடுத்தான். 

தேவகி அவனை அநுதாபம் நிரம்பிய கண்களால் நோக்கினாள். “துறவி உமக்கும் எதுவும் தெரியாது. எனக்கும் எதுவும் தெரியாது. சகலமும் தெரிந்த இந்த இருவரிடமும் நமக்கென்ன வேலை? நீங்களும் வாருங்கள் போவோம்” என்று இகழ்ச்சி ததும்பிய குரலில் அவனையும் அழைத்தாள். 

வாலிபத் துறவியின் முகத்தில் புன்முறுவல் தெரிந்தது. ‘“தெரியாததைத் தெரிந்து கொள்வது அவசியமல்லவா?'” என்று வினவினான் ஏளனம் ஒலித்த குரலில். 

“எனக்கு அவசியமில்லை” என்றாள் தேவகி. 

“எனக்கு அவசியமிருக்கிறது” என்றான் துறவி. “என்ன அப்பேர்ப்பட்ட அவசியம்?” தேவகியின் கேள்வியில் சினம் தொனித்தது. 

“தலையைப் பற்றியது”

“தலையைப் பற்றியதா?” 

“ஆம் என் தலை போகுமென்று இவர்கள் இருவரும் சொல்லவில்லையா?” என்று மாதவியையும் மகாராஜாவையும் சுட்டிக் காட்டினான் துறவி. 

இவர்கள் இருவரையும் என்று அவர்களைச் சேர்த்துத் துறவி கூறியது வேப்பங்காயாக இருந்தது தேவகிக்கு. 

“ஆமாம்! இருவரும் ரகசியக்காரர்கள். அவர்களைத் தனியே விடுவது நல்லதல்லவா?” என்றுகேட்டாள் அவள்”. 

“அந்த ரகசியம் என் உயிரைப்பற்றி இல்லாமலிருந் தால் நானும் உங்களுடன் வருவேன். இப்பொழுது நானிருக்கிற நிலைமையில் எதையும் பூர்ணமாக அறிந்து கொள்ள வேண்டுமல்லவா?” என்று கேட்ட துறவி “தேவகி! இந்தச் சதிகாரர்கள் சொல்வதை முழுவதும் கேட்போம்” என்றான். 

அதுவரை மெளனமே சாதித்த மாதவி “சதிகாரர்கள் என்று யாரைக் குறிப்பிடுகிறீர்கள்?” என்று வினவினாள். அவள் குரலில் சீற்றம் மிதமிஞ்சிக் கிடந்தது. 

துறவி நகைத்தான். அவள் கோபத்தைக் ‘கண்டு, “ஒளிவு மறைவாக நான் ஏதும் சொல்லவில்லையே?” என்று கூறினான். 

“மகாராஜாவைச் சதிகாரர் என்று குற்றம் சாட்டிய தற்கே மரண தண்டனை உண்டு” என்று சுட்டிக் காட்டினாள் மாதவி. 

“மாதவி” அன்புடன் அழைத்தான் துறவி. 

“என்ன?” கேள்வி சுடுசொல்லாக வந்தது மாதவியிடமிருந்து. 

“என்னை யார் கொன்றாலென்ன? பலபத்திரன் கொன்றா லென்ன? குற்றம் சாட்டியதற்காக மகாராஜா கொன்றால் என்ன? இரண்டிலும் முடிவு ஒன்றுதானே?” என்ற முகுந்தன் சோழநாட்டுத் துணிச்சலைக் காட்டலானான். “மாதவி! என் உயிர் அவ்வளவு அற்பமானதன்று. அதைக் கொண்டு போகு முன்பு பலர் எனக்கு முன்பாகப் போய் சொர்க்கத்தில் காத்திருப்பார்கள். சொர்க்கம் என்று தவறிச் சொல்லிவிட்டேன். சிலர் நரகத்திற்கும் போவார்கள். இங்குள்ள மர்மத்தைப் பார்த்தால் நாணயமான எந்த மனிதனும் காஞ்சியில் நடமாட முடியாது போலிருக்கிறது” என்றான். 

மாதவியின் கண்கள் நெருப்பைக் கக்கின. “அதிகமாகப் பேசுகிறீர்கள். குற்றம் வளர்ந்துகொண்டே. போகிறது” என்று கூறினாள் அவள். 

‘குற்றத்தைத் துவக்கியது நானல்ல மாதவி. அதை வளர்ப்பதும் நானல்ல. நான் படிக்க வந்தேன் இந்த நகருக்கு. ஆத்திர மிகுதியால் சுவரேறி வந்தேன், ஆனால் ஒரு வீரனின் அவசரத்தில் பல சிக்கல்கள் ஏற்படு மென்பதை இன்றுதான் உணர்ந்தேன். அது கிடக்கட்டும், பலபத்திரன் என்னை ஏன் கொல்ல வேண்டும்? நான் சென்னியின் மகனாயிருந்தால் என்ன?” என்று கேட்டான் துறவி. 

மாதவி மகாராஜாவைப் பார்த்தாள். மகாராஜா சொல் என்பதற்கு அறிகுறியாகத் தலையை ஆட்டினார். மாதவி சொன்னாள், ‘வீரரே! உங்கள் தந்தை படைகளை நடத்து வதில், போரில், வாள் சுழற்றுவதில் இணையிலா வீரர் என்பது பிரசித்தம். அப்பேர்ப்பட்டவரின் மகன் காஞ்சி வருகிறான். வீரர்கள் போர்க்காலத்தில் ஏறுவது கூடக் கஷ்டமான காஞ்சி மதிள்மீது அநாயசமாக ஏறுகிறான். நாக சர்ப்பத்தைக் காட்டி யாரும் அஞ்சும் வீரபத்திரனைக் காயப்படுத்துகிறான். இதையெல்லாம் திரட்டிப் பார்த்தால் முடிவு என்ன?’ என்று. 

“மேலும் நீங்களே விவரித்து விடலாம்” என்றான் துறவி. 

“இந்த நகரத்தைப் பாதுகாக்க வேறொரு தளபதியை, சென்னியின் புதல்வரைக்கொண்டு வந்திருக்கிறார் மகா ராஜா என்பதுதான் முடிவு” என்று மாதவி விளக்கினாள். 

இதை வாலிபத் துறவியின் கூரிய புத்தி ஏற்கனவே ஊகித்திருந்தாலும் அதைப் புதிதாகக் கேட்பவன் போல் கேட்டுக் கொண்டான். ‘நியாயம்” என்று ஒற்றைச் சொல்லில் பதிலும் சொன்னான். 

“எது நியாயம்?” 

“எல்லோரும் என்னை ஏமாற்றியது”.

“யார் ஏமாற்றினார்கள்?” 

“முதலில் என் தந்தை. காஞ்சிக்குப் படிக்கப் போ என்றார். ஓலையில் போருக்கு இவனை உபயோகப்படுத்த லாம் என்று குறிப்பிட்டார். நான் சோழ மன்னன் மகனென் பதை வழியில் பலபத்திரன் பார்த்தும் பார்க்காதது போலப் போகிறான்.உள்ளே அனுமதித்துத் தீர்த்துக் கட்டப் பார்க் கிறான். நான் அவன் பதவிக்குப் போட்டியென்று நினைக் கிறான். இதை மஹாயனர் என்னிடம் சொல்லாமல் உன் னிடம் சொல்லிவிட்டுப் போகிறார். திடீரென மகாராஜா வருகிறார். விஷயத்தை விவரிக்கிறார். இதில் நான் எப்படி நடந்துகொள்ள வேண்டுமென்பது எனக்குப் புரியவில்லை. மாதவியாரே! நீங்களே சொல்லிவிடுங்கள்” என்று மிக விஷமமாகப் பேசினான் துறவி. 

இத்தனையும் கேட்டும் அவன் குரலில் இம்மியளவும் அச்சமில்லாததைக் கவனித்த மகாராஜா பெருமூச்செறிந்தார். “இவனும் இந்தக் காஞ்சியும் ஒன்று” என்று கூறினார் பெருமூச்சின் ஊடே. 

துறவி மன்னனை நோக்கினான். “எப்படி மகாராஜா” என்று வினவினான். 

மகாராஜா உடனடியாகப் பதில் சொல்லவில்லை. அறையில் இருமுறை அங்கும் இங்கும் நடந்தார். அவர் முகத்தில் தீர்க்க சிந்தனை படர்ந்து கிடந்தது. அவர் பேசிய போது அதில் சோகமும் ஓரளவு கலந்து கிடந்தது. ”காஞ்சி இன்று மிகவும் ஆபத்தான நிலைமையிலிருக்கிறது. ஆத்திரத்தில் ஏற்பட்டிருக்கும் எதிரி படையெடுப்பு இங்கு இன்னும் இரண்டு மாதங்களுக்குள் வரும். வந்தால் காஞ்சி அழியும். காஞ்சி அழிந்தால் அதன் கலைக்கூடங்கள் அழியும், மதக் கூடங்கள் வித்யாகூடங்கள் அழியும். அப்பொழுது காஞ்சி உருக்குலைந்து போகும். அந்த உருக்குலைவிற்கு காரண கர்த்தாக்கள் காஞ்சிக்குள்ளும் இருக்கிறார்கள். ஆகவே காஞ்சியை நீ காப்பாற்ற முனைந்தால் உன்னையும் அழிக்க சம்பந்தப்பட்டவர்கள் அஞ்சமாட்டார்கள். நீ இதைக் காக்க வந்திருப்பதாக பலர் நினைக்கிறார்கள். அவர் களில் பலபத்திரனும் ஒருவன்’ என்று விளக்கிய மகா ராஜா, “சென்னியின் மகனே, காஞ்சியும் நீயும் இனி ஒன்று. காஞ்சிக்கு உள்ள ஆபத்து உனக்கும் உண்டு. அதன் அழிவில் ஆசையுள்ளவர்கள் உன்னையும் அழிப்பார்கள்” என்றார். 

“பலபத்திரன் காஞ்சிக்குத் துரோகியா?” என்று துறவி கேட்டான். 

நிச்சயமாகச் சொல்ல முடியாது” என்றார் மகாராஜா. ” 

“இத்தனை நேரம் நீங்கள் சொன்னதெல்லாம் என்ன?”

“பலபத்திரன் நேர்முக எதிரியல்ல. வேறு ஒருவரின் ஆயுதம்”. 

“அவர் யார்?” 

“அதுதான் தெரியவில்லை எனக்கு.” 

“நாட்டை அழிக்க ஆயுதமாயிருப்பவனும் துரோகி தானே?” 

“ஆம்.” 

“அப்படியானால் அவனைச் சிறை செய்தாலென்ன?”

“எந்தச் சிறையிலும் அவன் ஒரு நாளைக்குமேல் இருக்க மாட்டான்.” 

“ஏன்?” 

“அவனை உபயோகிப்பவர் வெளியே விட்டுவிடுவார்.”

”அவர் யாரென்பது தெரியுமா?”

“திட்டமாகத் தெரியாது. ஆனால் ஓரளவு ஊகிக்கிறேன்.” 

“சந்தேகத்தில் சிறை செய்யலாமே.” 

“அது அவ்வளவு எளிதல்ல. அவரை நாம் தொட முடியாது. தவிர அவரைத் தொட்டால் எதிரியின் கடல் போன்ற படை ஒரே வாரத்தில் காஞ்சியில் நுழைந்து விடும்.” 

வாலிபத் துறவி சிந்தனையில் இறங்கினான். “என்னிடம் உங்கள் ஊகத்தைச் சொன்னால் என்ன?” என்று கேட்டான் நீண்ட நேரத்திற்குப் பிறகு. 

“பயனளிக்காது” என்றார் மகாராஜா திட்டவட்டமாக. மீண்டும் சிந்தனையில் இறங்கினான் துறவி. அவன் முடிவாகப் பேசியபோது அவன் குரலில் உறுதியிருந்தது. “மகாராஜா! இந்தப் பலபத்திரனை நான் பார்க்க வேண்டும்” என்றான். 

“எதற்காக?”

“காஞ்சியின் காவலனே அஞ்சும் உபதளபதியைப் பார்க்க வேண்டுமென்ற ஆசைதான்.” 

“பொறுப்பது நல்லது” என்று மகாராஜா புத்தி கூறினார். 

ஆனால் பொறுப்பதற்கு அவசியமில்லாது போயிற்று. அந்தச் சமயத்தில் வாயிற்படியில் வந்துநின்ற பணிப் பெண், “மகாராஜா! பலபத்திரர் உங்களைக் காண வந்திருக்கிறார்” என்று அறிவித்தாள்.

– தொடரும்…

– மாதவியின் மனம் (நாவல்), பாரதி பதிப்பகம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *