போரும் நீரும்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சரித்திரக் கதை
கதைப்பதிவு: November 13, 2022
பார்வையிட்டோர்: 3,162 
 

(1959ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

இளமைக் காலத்திலே பட்டத்தைப் பெற்றவன் பாண்டியன் நெடுஞ்செழியன். சூழ இருந்த சிற்றரசர் களும் பேரரசர்களும் பாண்டி நாட்டின்மேல் எப் போதும் ஒரு கண் வைத்திருந்தார்கள். ஐந்து வகை யான நிலங்களும் விரவியுள்ள நாடு அது. தமிழுக்குச் சிறந்த பிரதேசம். செந்தமிழ் நாடு என்ற சிறப்புப் பெயரைப் பெற்றதல்லவா பாண்டி நாடு ?

நெடுஞ்செழியனை இளம்பிள்ளை யென்று எண்ணிய பகைவர்கள் அவளுேடு பொருது வென்றுவிடலாம் என்று நினைத்தார்கள். முக்கியமாக யானைக்கட் சேய் மாந்தரஞ் சேரல் இரும்பொறை என்ற சேர அரசனுக்குத்தான் இந்த எண்ணம் அதிகமாக இருந் தது. “இப்போதுதான் இவன் பட்டத்துக்கு வந்திருக்கிறான். சின்னஞ் சிறுவன். இவனுக்கு அடங்கி நடக்கும் அமைச்சரோ படைத் தலைவரோ அதிகமாக இருக்கமாட்டார்கள். நாம் சில மன்னர்களையும் துணையாகக் கொண்டு போருக்கு எழுந்தால் மிக எளிதில் வெற்றி பெறலாம்” என்று அவன் மனக் கோட்டை கட்டினான். தன் கருத்தை மெல்லப் பரவ விட்டான். “இவ்வளவு பெரிய அரசன் போருக்குப் புறப்பட்டால் வெற்றி கிடைப்பதற்கு என்ன தடை? நாம் இவனுடன் சேர்வதால் இவனுக்குத் துணைவலி மிகுதியாகும் என்பதைக் காட்டிலும், கிடைக்கும் வெற்றியில் நமக்கும் பங்கு கிடைக்கும் என்பதுதான் உண்மை. தக்க சந்தர்ப்பத்தை நழுவ விடக்கூடாது” என்று எண்ணிய வேற்று அரசர் சிலர் அவனுடைய கருத்தைப் பாராட்டினர்கள்; தாங்களும் அவனுடன் போருக்கு எழுவதாக உறுதி மொழியும் கூறிஞர்கள்.

அவர்கள் படைகளைச் சேர்த்தார்கள். போருக்கும் எழுந்தனர். நெடுஞ்செழியன் இளையவன்தான். ஆனாலும் வீரத்திற் சிறந்த பேரரசர் பரம்பரையிலே தோன்றியவன். குட்டியானாலும் பாம்பு பாம்புதானே?

பகையரசர் கூடிப் பொர வருவதைக் கேள்வியுற்று அவன் சீறிஞன். “ஓஹோ இவர்கள் என்னை இளம் பிராயத்தை உடையவனென்று எண்ணி விட்டார்களோ? இவர்களை அடியோடு ஒழித்துவிடாமல் வேறு காரியம் பார்ப்பதில்லை” என்று உறுதி பூண்டான்.

ஒற்றன் ஒருவன் வந்தான்; “அரசே, சேர நாட்டிலும் மற்ற இடங்களிலும் இந்த நாட்டுப் பெருமை தெரியாமல் பலர் பிதற்றிக்கொண்டிருக்கிருர்கள். இந்த அரசனுடைய நாட்டின் பெருமையைப் பெரிதாக உயர்த்திக் கூறுபவர்களைப் பார்த்தால் சிரிப்புத் தான் வருகிறது. அதைக் கண்டு நாம் ஏமாந்து போக மாட்டோம். சின்னஞ் சிறு பிள்ளையாகிய அரசனுக்கு என்ன தெரியப் போகிறது? என்று பேசிக்கொள் கிறார்கள்” என்றான்.

அரசன் சற்று மனம் உளைந்தான். “அவர்களுடைய படைகள் எத்தகையவை?” என்று ஒற்றனைக் கேட்டான்.

“யானை, தேர், குதிரை, வீரர் என்னும் நால் வகைப் படைகளையும் தொகுத்துக் கொண்டிருக்கிறார்கள். சேர நாட்டு யானைகளை நானே பார்த்தேன்” என்றான் ஒற்றன்.

“இருக்கட்டும் ; அதனால் என்ன? மணி ஒலிக்கும் பெரிய யானைகளும் தேரும் குதிரையும் படைக்கலங்களையுடைய மற்றவர்களும் இருக்கிறார்களென்று அவர்களுக்குச் செருக்கு உண்டாகியிருக்கிறது. பகையுணர்ச்சி மூண்ட உள்ளத்தில் நிதானம் இராது. என்னுடைய படைப் பலத்தை அவர்கள் கருதவில்லை. அதனை நினைந்து அஞ்சாமல், சினம் மிகுந்து சின்னத்தனமான வார்த்தைகளைச் சொல்லித் திரிகிறார்கள். கிடக்கட்டும். அதற்குப் பதில் சொல்லிக்கொண்டிருப்பதில் பயன் இல்லை.”

அரசன் யோசனையில் ஆழ்ந்தான். படைத் தலைவரையும், மந்திரிமாரையும் வருவித்தான். ஆலோசனை செய்தான். “போர் செய்ய ஆயத்தமாயிருக்க வேண்டும். நம்முடைய நாட்டின் எல்லைக்குள்ளே அவர்கள் வருவதற்குமுன் நாம் எதிர்சென்று போராட வேண்டும்” என்று நெடுஞ்செழியன் வீரம் ததும்பக் கூறினான். படைத் தலைவர் உடம்பட்டார். மந்திரிமார் பின்னும் யோசனை செய்தனர்.

“இனி யோசனைக்கு நேரம் இல்லை. சிறு சொல் சொல்லிய வேந்தரைச் சிதையும்படி அருஞ்சமத்தில் தாக்கி அவர்களை அவர்களுடைய முரசத்தோடு ஒருங்கே சிறைப்படுத்துவதாக உறுதி கொண்டு விட்டேன். அப்படிச் செய்யாவிட்டால், இதோ ஆணை யிடுகிறேன், கேளுங்கள். அவர்களைச் சிறை செய்யா விட்டால், என்னுடைய குடை நிழலில் வாழ்பவர் யாவரும் புகலிடம் காணாமல் வருந்தி, எம் அரசன் கொடுங்கோலன் என்று கண்ணிருடன் நின்று பழிதுற்றும் பாவி ஆகக் கடவேன்”.

அரசன் முகம் சிவந்தது. அவனுடைய இளமை யழகிலே இப்போது வீரமுறுக்குத் தெளிவாகத் தெரிந்தது. மந்திரிமார் வியப்புடன் அவனை உற்று நோக்கினர். “பரம்பரைக்கு ஏற்ற வீரம்!” என்ற நினைவு அவர்கள் உள்ளத்தில் தோன்றியது.

“இந்தப் பாண்டிய நாடு தமிழ் வளர்ந்த இடம். பாண்டிய அரசர் புலவரைப் போற்றித் தமிழை வளர்த்தார்கள். மிகச் சிறப்புற்ற புலவர்கள் இந்த நாட்டையும் எங்கள் மரபினரையும் புகழ்ந்து பாடியிருக்கிருர்கள். நான் போர் செய்ய அஞ்சினேனானால் அந்தப் புகழ் என்னாவது? பகைவரை வெல்லாமற் போவேனானால் ஓங்கிய சிறப்பும் உயர்ந்த கேள்வியும் உடைய மாங்குடி மருதனார் முதலிய புகழ்பெற்ற புலவர் என் நாட்டைப் பாடாமல் ஒதுக்கும் நிலை வருவதாகுக! என்னுடைய குடிமக்களும், சுற்றத்தாரும் துன்புற்று வாட, என்னிடம் வந்து இரப்பவர்களுக்குக் கொடுக்க முடியாத வறுமை என்னை வந்து அடையட்டும்! இந்த வஞ்சினத்தைப் பாண்டிய அரசர் வழி வந்தவன் என்ற உணர்ச்சியோடு நான் சொல்லுகிறேன்.”

அரசன் வஞ்சினம் கூறும்போது சிங்கம் முழங்கு வதுபோல இருந்தது. உடன் இருந்தோர் அஞ்சி நடுங்கினர். அரசன் தோள் துடித்தது; கண்கள் சிவந்தன; வார்த்தை ஒவ்வொன்றும் அழுத்தமாக வந்தது. இனி “இந்த உலகமே எதிர் நின்றாலும் போரை நிறுத்த முடியாது” என்று மந்திரிமார் உணர்ந்து கொண்டனர்.

போருக்கு வேண்டியவற்றை யெல்லாம் செய்யலாயினர்.

2

போர் மூண்டுவிட்டது. அரசனே நேரில் சென்று போரிடத் தொடங்கினன். “இத்தனை சிறுபிள்ளை போர்க்களத்துக்குப் போயிருக்கிருனே!” என்று அச்சமும் வியப்பும் கொண்டனர் மக்கள்.

“நேற்று வரையில் கிண்கிணி கட்டியிருந்த இளங்கால் அது; இன்று போர் வந்ததென்று அதில் வீரக் கழலைக் கட்டிக்கொண்டான். முதல் முறையாகக் குடுமி களைந்த விழா சில நாட்களுக்கு முன்தான் நடந்தது. அந்தத் தலையில்குலத்துக்குரிய அடையாளமாகிய வேம்பையும் போர்ப் பூவாகிய உழிஞையையும் அணிந்து கொண்டான். சிறு வளைகளை அணிந்திருந்த கை, இப்போது வில்லைப் பற்றிக்கொண்டது. சிங்கக்குட்டி தாவுவதுபோலத் தேரில் ஏறி நிற்கிறானே; இப்படியும் வீரத் திருக்குழந்தை உலகத்தில் உண்டா? அவன் மாலை வாழட்டும் அவன் பெருமை வாழட்டும்!” என்று புலவர்கள் வாழ்த்தினர்கள்.

போரில் பகைவராக வந்தவர் ஒருவர் இருவர் அல்லர். சேரனும் சோழனும் அவர்களுடன் ஐந்து சிற்றரசர்களும் சேர்ந்துகொண்டனர். தலையாலங் கானம் என்ற இடத்தில் போர் மிகக் கடுமையாக நடந்தது. இரண்டு பக்கத்திலும் படைப் பலம் மிகுதியாகவே இருந்தது.

இடைக்குன்றுார் கிழார் என்ற புலவர் இதைக் கேள்வியுற்றார், தலையாலங்கானத்துக்கும் சென்று பார்த்து வந்தார். பாண்டிய மன்னனுடைய வீரத்தை எண்ணி அவர் பிரமித்துப் போனர். “இந்த உலகத்தில் எத்தனையோ போர்கள் நடந்திருக்கின்றன. அவற்றைப்பற்றிக் கேட்டிருக்கிறோம். ஒரு மன்னனை மற்றொரு மன்னன் எதிர்த்துப் போர் செய்தலும் அதில் ஒருவன் தோல்வியுறுதலும் உலக இயற்கை. ஆனால் இந்தமாதிரி நாம் கேட்டதே இல்லை. நெடுஞ்செழியனுடைய பெருமையையும் பலத்தையும் அறியாத ஏழு பேர் கூடிக்கொண்டு அவனை எதிர்க்கிறார்கள். அவனே சலியாமல் முரசு முழங்க மேற்சென்று அடுகின்ருன். இதைக் கதையிலும் கேட்டதில்லையே!” என்று வியந்து பாடினர்.

போர் நாளுக்கு நாள் மிகுதியாயிற்று. சிற்றரசர்களுக்குப் போரில் எதிர்த்து நிற்கும் ஆற்றல் இல்லை. சிலர் போரில் இறந்தனர். சிலர் பின் வாங்கினர். கடைசியில் யாவரும் கைவிடவே, சேர மன்னன் பலம் இழந்து சிறைப்பட்டான். நெடுஞ்செழியன் செய்த கன்னிப் போரில் இத்தகைய வெற்றி கிடைத்ததைக் குறித்துப் பாண்டிய நாடே குதுாகலித்தது.

இளமையில் போரில் ஈடுபட்டு விட்டமையால் அரசனுக்கு மேலும் மேலும் போரைப்பற்றிய சிந்தனை மிகுதியாயிற்று. படைகளைத் திரட்டிக்கொண்டே இருந்தான்.

3

அரசன் தன் பருவத்துக்கு மிஞ்சிய வெற்றி மிடுக்கினால் பூரித்திருந்தான். பெரும்போர் நிகழ்ந்ததால் நாட்டின் விளைபொருளுக்கு அதிகச் செலவு ஏற்பட்டது. போர் நின்றவுடன் நாட்டு வளம் பெருகும் துறையில் அரசன் கவனம் செலுத்தவில்லை. அரியணை ஏறியவுடன் வில்லைப் பிடிக்க வேண்டி நேர்ந்தமையால் நாட்டைப்பற்றி அப்போது சிந்திக்க இயலவில்லை. போருக்குப்பின் அதில் கிடைத்த வெற்றியிலே மயங்யிருந்தமையால் பின்பும் அதைப்பற்றிய நினைவு எழவில்லை.

ஏரிகளும், குளங்களும் மேடிட்டிருந்தன; கரைகள் உடைந்து பயனில்லாமல் கிடந்தன. சில நீர் வளம் இல்லாமையால் நிலவளம் குறைந்தது. விளைவு குறைந்தது. பஞ்சம் வந்துவிடுமே என்ற அச்சம் பாண்டி நாட்டு மக்கள் உள்ளத்தே எழுந்தது.

அரசன் படை சேர்ப்பதை விட்டு, வீர விளையாட்டை நிறுத்தி, நாட்டின் நிலையை உணர்ந்து வளம்படுத்த வேண்டும் என்று சொல்வார் யாரும் இல்லை. மந்திரிமார் சொல்ல அஞ்சினர். இளம் பருவம் உடையவனானாலும் கோபத்திலும் வீரத்திலும் மிக மிக ஓங்கி நிற்பவன் என்பதை அவர்கள் தம் கண்முன்னே பார்த்தவர்கள்.

இந்த நிலை நீடித்தால் பாண்டிய நாட்டில் நிச்சயமாகப் பஞ்சம் வந்துவிடும் என்பதை அறிந்தனர் மந்திரிமார். அரசனுக்கு யோசனை கூறவோ அஞ்சினர். என்ன செய்வது என்று ஏங்கி நின்ற தறுவாயில் சமயசஞ்சீவி போல ஒரு புலவர் வந்தார். குடபுல வியனார் என்பது அவர்பெயர். தமிழ்ப்புலவர்கள் பொதுவாகவே யாருக்கும் அஞ்சாதவர்கள்; நியாயத்தையே எடுத்துரைப்பவர்கள். அவருள்ளும் குடபுலவியனார் நயமாக எடுத்துரைக்கும் ஆற்றல் பெற்றவர். அவரிடம் அமைச்சர்கள் தம் கருத்தைக் கூறி, “எப்படியேனும் நீங்கள் மனம் வைத்து அரசரை வழிக்குக் கொண்டுவரவேண்டும்” என்று வேண்டிக்கொண்டார்கள். “என்னால் இயன்றதைச் செய்வேன்” என்று அவர் உடம்பட்டார்.

4

“தலையாலங்கானத்துச் செருவைப்பற்றி இன்று உலகத்தில் பாராட்டாத புலவர்களே இல்லை” என்றார் குடபுலவியனார்.

“ஆம். பெரிய போர்தான். நான் பட்டத்துக்கு வந்தவுடன் முதல் வேலை இந்தப் போரில் வெற்றி பெறுவதாகி விட்டது” என்றான் நெடுஞ்செழியன்.

“எல்லாம் உங்கள் குலத்தின் பெருமை. நாவலந் தீவு முழுவதும் ஒரு குடைக்கீழ் ஆண்ட உரவோர் பாண்டிய மன்னர். அவர்களுடைய மரபில் வந்த அரசர்பிரான் கோடி கோடி ஆண்டுகள் வாழ வேண்டும்.”

“அவர்கள் பெருமையே பெருமை பாண்டி நாட்டின் பெருமை வேறு எந்த நாட்டுக்கு இருக்கிறது? மதுரை மாநகரின் சிறப்பை வேறு எங்கே பார்க்க முடியும்? பகையரசர் என்னதான் முயன்றாலும் இந்த நகருக்குள்ளே புக முடியுமா?”

“ஆழமான அகழியையும் உயரமான மதில்களையும் பெரியோர்கள் அமைத்திருக்கிருர்கள். இத்தகைய வளம் பெற்ற பழைய நகரம் வேறு எங்கும் இல்லை என்பது உண்மை. இந்த நகரில் வாழ்ந்த அரசர்களெல்லாம் இம்மை மறுமைப் பயன்களைக் குறைவின்றிப் பெற்றவர்கள், வீரத்திலே சிறந்தவர்கள். அதனால் புகழைப் பெற்றவர்கள்.”

“அவர்கள் சென்ற நெறியிலே நானும் செல்ல வேண்டுமென்று ஆசைப்படுகிறேன்.”

“அப்படியே ஆகட்டும். புண்ணியமும் வெற்றியும் புகழும் ஒருங்கே கிடைப்பதற்கு மூலகாரணம் ஒன்று உண்டு. அதனை உடையவர்கள் மறுமையுல கத்துச் செல்வமும், அரசரை வென்று நிற்கும் திறனும், நல்லிசையும் பெறுவார்கள்.”

“படைப் பலத்தையா சொல்கிறீர்கள்?”

“அல்ல, அல்ல. யானை முதலிய படைகள் அல்ல; வேருெரு படை உழுபடை, படைகளுக்கெல்லாம் உணவளிக்காவிட்டால் அவை போரிட முடியுமா? உடம்பிலே உயிர் தங்கி இருக்கும்படி செய்தாலல்லவா போரிட முடியும்?”

“நான் படை வீரர்களுக்கு வேண்டிய உணவைக் கொடுத்தேன். அவர்களுக்கு இனியும் குறைவின்றிக் கொடுக்கக் கட்டளை பிறப்பித்திருக்கிறேன்.”

“நல்ல காரியந்தான். உண்டி கொடுத்தவரே உயிர் கொடுத்தவராகிறார்கள். உணவு இல்லாவிட்டால் உடலும் இல்லை. ஆனல் அந்த உணவு எப்படி வருகிறது? அது தானே கிடைத்துவிடாது. நிலமும் நீரும் சேர்ந்தால் உணவு கிடைக்கும்; உணவுப் பொருள் விளையும். அந்த இரண்டையும் சேர்ப்பவர்களே உடம்பையும் உயிரையும் படைத்தவர்கள் ஆகிறார்கள்.”

“நம்முடைய நாட்டில் விளைநிலத்துக்குக் குறை வில்லையே?”

“உண்மைதான். ஆனாலும் நிலம் மாத்திரம் இருந்தால் போதுமா? எவ்வளவுதான் பரந்த நிலங்கள் இருந்தாலும், விதைத்துவிட்டு வானத்தைப் பார்க்கும்படியாக இருந்தால் அந்த நிலங்களால் உடையவனுக்கு என்ன பயன்? அரசே, சற்றுக் கவனிக்கவேண்டும். படை இருக்கலாம்; ஆனல் அதற்கு என்றும் கொடுத்துவர உணவு வேண்டும். நிலம் இருக்கலாம்; ஆனால் அதை விளையும்படிச் செய்ய நீர் வேண்டும். வானத்திலே நீர் இருக்கிறதென்று நம்பியிருந்தால் நமக்கு வேண்டியபொழுது அது வழங்காது. அது வழங்கும்போது நாம் சேமித்து வைக்க வேண்டும். நிலம் பள்ளமாகக் குழிந்திருக்கும் இடங்களில் வேண்டிய கரை கட்டியும், ஏரி குளங்களைக் கரை திருத்தியும் பாதுகாக்க வேண்டும். அப்படி நீரைத் தடுத்தால் நாடு வளம் பெறும். நீரைத் தேக்கினவர் யாரோ அவரே புகழையும் தேக்குவார்.”

அரசன் சிந்தனையில் ஆழ்ந்தான். ஏரி குளங்களைச் சீர்திருத்தவேண்டும் என்று எப்பொழுதோ யாரோ சொல்லிக் காதில் விழுந்ததாக நினைவு வந்தது. அமைச்சர் சொன்னதைத்தான் பராமுகமாகக் கேட்டிருந்தான். இப்போது அதையே அழுத்தந்திருத்தமாகப் புலவர் சொன்னர்; படிப்படியாகச் சொன்னார். அவன் மனத்தில் அது உறைத்தது.

“உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோர். நீரையும் நிலத்தையும் சேர்த்தவர்களால்தான் உடம்பையும் உயிரையும் சேர்த்து வைக்கமுடியும். வானம் நம்முடைய விருப்பப்படி பெய்யாது. “நீரைத் தேக்கினவர்களே புகழைத் தேக்குவார்”. இந்தப் பொன்னை வாக்கியங்கள் ஒவ்வொன்ருக அவன் உள்ளத்தில் கணிர் கணிர் என்று மணியடிப்பதுபோல் மீட்டும் ஒலித்தன.

“புலவர் பெருமானே, நானும் நீரைத் தேக்கிப் புகழைத் தேக்க முயல்வேன்” என்ற வார்த்தைகள் அரசன் வாயிலிருந்து வந்தபோது, அங்கிருந்த அமைச்சர்களின் முகங்கள் என்றும் இல்லாத மலர்ச்சியைப் பெற்றன.

– எல்லாம் தமிழ், அமுத நிலயம் பிரைவேட் லிமிடெட், சென்னை-18, எட்டாம் பகிப்பு : ஜூன், 1959

இலக்கிய ஆதாரங்கள்

பாண்டியன் நெடுஞ்செழியனே பாடிய தாக வரும் புறநானூற்றுப் பாடல் (72) இங்குள்ள செய்திக்கு ஆதாரம்.

(தினை – காஞ்சி; துறை – வஞ்சினக் காஞ்சி)

நகுதக் கனரே நாடுமீக் கூறுநர்!
இளையன் இவனென உளையக் கூறிப்
படுமணி இரட்டும் பாவடிப் பணத்தாள்
நெடுநல் யானையுந் தேரும் மாவும்
படையமை மறவரும் உடையம் யாமென்று
உறுதுப் பஞ்சாது உடல்சினஞ் செருக்கிச்
சிறுசொல் சொல்லிய சினங்கெழு வேந்தரை
அருஞ்சமஞ் சிதையத் தாக்கி முரசமொடு
ஒருங்ககப் படேஎ னாயின், பொருந்திய
என்நிழல் வாழ்நர் செல்நிழற் காணாது,
‘கொடியன்எம் இறை’ எனக் கண்ணிர் பரப்பிக்
குடிபழி தூற்றுங்கோலேன் ஆகுக !
ஓங்கிய சிறப்பின் உயர்ந்த கேள்வி
மாங்குடி மருதன் தலைவனாக
உலகமொடு நிலைஇய பலர்புகழ் சிறப்பிற்
புலவர் பாடாது வரைகளின் நிலவரை!
புரப்போர் புன்கண் கூர
இரப்போர்க் கீயா இன்மையான் உறவே!

நெடுஞ்செழியனது போர்க்கோலம் கண்டு புலவர் பாடிய பாடல்கள் வருவாறு :

கிண்கிணி களைந்தகால் ஒண்கழல் தொட்டுக்
குடுமி களைந்தநுதல் வேம்பின் ஒண்தளிர்
நெடுங்கொடி உழிஞைப் பவரொடு மிலந்து
குறுந்தொடி கழித்தகைச் சாபம் பற்றி
நெடுந்தேர்க் கொடுஞ்சி பொலிய நின்றோன்
யார்கொல்? வாழ்கஅவன் கண்ணி!
-புறநானூறு, 77, இடைக்குன்றுார் கிழார் பாடியது.

ஒருவனை ஒருவன் அடுதலும் தொலைதலும்
புதுவ தன் றிவ் வுலகத் தியற்கை :
இன்றி னுாங்கோ கேளலம்: திரள் அரை
மன்ற வேம்பின் மாச்சினை ஒண்டளிர்
நெடுங்கொடி உழிஞைப் பவரொடு மிடைந்து
செறியத் தொடுத்த தேம்பாய் கண்ணி
ஒலியல் மாலையொடு பொலியச் சூடிப்
பாடின் தெண்கினை கறங்கக் காண்டக
நாடுகெழு திருவிற் பசும்பூட் செழியன்
பீடும் செம்மலும் அறியார் கூடிப்
பொருதும் என்று தன்றலை வந்த
புனைகழல் எழுவர் நல்வலம் அடங்க
ஒருதான் ஆகிப் பொருதுகளத் தடலே!
-புறநானூறு, 76, இடைக்குன்றுார் கிழார் பாடல்.

குடபுல வியஞர் பாண்டியன் நெடுஞ்செழியனுக்கு அறிவுறுத்திக் கூறிய பாட்டு வருமாறு:

முழங்கு முந்நீர் முழுவதும் வளைஇப்
பரந்துபட்ட வியன்ஞாலம்
தாளிற் றந்து தம்புகழ் நிறீஇ
ஒரு தாம் ஆகிய உரவோர் உம்பல்,
ஒன்றுபத் தடுக்கிய கோடிகடை இரீஇய
பெருமைத் தாகநின் ஆயுள் தானே!
நீர்த்தாழ்ந்த குறுங்காஞ்சிப்
பூக்கதூஉம் இனவாளை
நுண்ணுரற் பருவராற்
குரூஉக்கெடிற்ற குண்டகழி
வான் உட்கும் வடிநீண்மதில்
மல்லல்மூதூர் வயவேந்தே,
செல்லும் உலகத்துச் செல்வம் வேண்டினும்
ஞாலம் காவலர் தோல்வலி முருக்கி
ஒரு நீ யாகல் வேண்டினும் மற்றதன்
தகுதி கேள்இனி : மிகுதி யாள,
நீரின் றமையா யாக்கைக் கெல்லாம்
உண்டி கொடுத்தோர் உயிர்கொடுத் தோரே;
உண்டி முதற்றே உணவின் பிண்டம்;
உணவெனப் படுவது நிலத்தொடு நீரே;
நீரும் நிலனும் புணரி யோர்ஈண்டு
உடம்பும் உயிரும் படைத்திசி னேரே;
வித்திவான் நோக்கும் புன்புலம் கண்ணகன்
வைப்பிற் றாயினும், நண்ணி ஆளும்
இறைவன் தாட்குத் வாதே; அதனால்,
அடுபோர்ச் செழிய, இகழாது வல்லே
நிலன்நெளி மருங்கில் நீர்நிலை பெருகத்
தட்டோர் அம்ம் இவ்ண்தட் டோரே;
தள்ளா தோர்இவண் தள்ளா தோரே.
– புறநானூறு, 18.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *