வினோதன் என்கிற மெண்டல்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: July 7, 2012
பார்வையிட்டோர்: 8,803 
 

எழுதப்பட்டிருப்பது கில்லியா?, தில்லியா? என இமைகள் சுருங்க உற்றுப்பார்த்தார் சண்முகம்.

கில்லி என்று தான் எழுதப்பட்டிருந்தது. புது தில்லி என்பதற்கு தில்லி என்று எழுதியிருந்தால் போனாப்போகுதென்று ஒரு மதிப்பெண் கொடுக்கலாம். இவன் கில்லி என்றல்லவா எழுதியிருக்கிறான். கில்லிக்கும் தில்லிக்கும் ஏணி வச்சாலும் எட்டாது. எழுத்துப் பிழைக்காக ஒரு மதிப்பெண் குறைப்பதைத் தவிர வேறு வழியில்லையென்று கில்லியில் ஒரு சுழி சுழித்தார்.

சண்முகம் சுந்தம்பட்டி உயர்நிலைப்பள்ளியின் அறிவியல் ஆசிரியர். சராசரி உயரத்தை விடச் சற்று உயரமான உருவம். நிரம்பித் ததும்பும் ஊருணி போல படர்ந்த முகம். மாணவர்களிடம் சிரிக்கச் சிரிக்கப் பேசுவார். அவர் பாடம் நடத்தத் தொடங்கி விட்டால் மாணவர்கள் கண் கொத்திப் பாம்பாகப் பாடத்தைக் கவனிக்கத் தொடங்குவார்கள். கற்பித்தலும் தேர்வு நடத்துதலும் அவருடைய இரு கண்கள் . கற்பித்தலை விட அலாதியான சுகம் விடைத்தாள் திருத்துவதில்தான் இருக்கு என்பதை ரம்யமாக அறிந்து கொண்டவர் . பதில்களை, என்பது என தொடங்கி எனப்படும் என முடிப்பது மாணவர்களுக்கே உரித்தான அசூசை குணம். ஆனால் அவர் மாணவர்களிடம் எதிர்ப்பார்ப்பது அதுவல்ல . அவனது பேச்சு வழக்கில் அதுவும் அவனுக்கே புரியும் படி எழுத வைத்து விடுவதில்தான் அவரது மொத்த உழைப்பும் இருந்து கொண்டிருக்கிறது. எதாவது ஒரு பேப்பரில் எதார்த்தமான பதில்கள் எழுதப்பட்டிருக்காதா? என பேப்பரை விரித்து வைத்துக் கொண்டு அதில் மூழ்குவார். அப்படி மூழ்கையில் தான் ஒரு கேள்விக்கான பதில் புது தில்லி என்பது தில்லியாகச் சுருங்கி கில்லியாக கைக்கால் ஒடிந்து முத்து முத்தாக எழுதப்பட்டிருக்கிறது.

“ யாருடைய பேப்பராக இருக்கும்?“ என தேர்வு எண்ணை ஒருகணம் புரட்டிப் பார்த்துவிட்டு ஊர்ஜித்தார். “ ஆம் …..இது வினோதனுடையது“.

வினோதன் அரும்பு மீசை முளைத்து வயது மீறியவன். என்ஸைம்களின் அதீத சுரப்பால் வேகமாக வளர்ந்து முதுகு வளைந்து போன பத்தாம் வகுப்பு மாணவன். மரக்கன்று வளர்ப்பது, தண்ணீர் பாய்ச்சுவது, புதிய ரகக் கன்றுகளை உருவாக்குவது என்பதில்தான் அவனுடைய மொத்தக் கவனமும் இருக்கும். பள்ளிக்கு வருவது என்னவோ பெற்றோர்களின் வார்த்தைக் கொப்பளிப்புக்குப் பயந்துதான். கடைசிப் பெஞ்சில் அசௌகரியமாகவே அமர்ந்திருப்பான். ஆசிரியர் வகுப்புக்கு வராத நேரத்தில் எதாவது ஒரு படத்தின் கதையை அளந்து கொண்டிருப்பான். எந்த நடிகனுக்கென்றும் அவன் தனிப்பட்ட ரசிகன் இல்லையென்றாலும் ஒரு படம் பத்து நாளைக்குப் பேசப்பட்டால் அந்த நடிகரின் முடி , உடை அலங்காரம் அவனிடம் வந்து ஒட்டிக் கொள்ளும். கறுப்புக் கயிற்றில் ஏதேனும் ஒரு வகை விதைகளை வரிசையாக கோர்த்திருப்பான். அதில் அந்த நேர பிரபலமான நடிகரின் டாலரை தொங்க விட்டுக் கொள்வான். கண்டிப்பான ஆசிரியர்கள் வந்தால் ஒழிய ஒரு போதும் அந்த டாலரை மறைத்துக் கொள்ள மாட்டான்.

பூச்சி பிடித்த கீரையைப் போல கண்டு கொள்ளாமலிருந்த வினோதன் சண்முகத்திற்கு பரிச்சயமானது இப்படித்தான். வேறொரு பள்ளியிலிருந்து மாறுதலாகி அந்தப் பள்ளியில் பணி அமர்த்தப்பட்ட அன்று ஒன்பதாம் வகுப்பிற்குள் நுழைந்தார் சண்முகம். திரையரங்குகளில் நிகழும் விளம்பர நேரத்திற்கு பிறகான நிசப்தம் அந்த வகுப்பறையில் நிழவியது. புது ஆசிரியரின் வருகையால் வகுப்பறையில் குதூகலம் . ஆசிரியரின் அறிமுகம் முடிந்த உடன் ஒவ்வொரு மாணவனும் எழுந்து ஒப்புக்கு ஒரு லட்சியத்தை சொல்லிவிட்டு உடைத்த தேங்காயைப் போல வெணீரென சிரித்துக் கொண்டிருந்தனர்.

அந்த வரிசையில் வினோதன் சொன்னது “ நான் மெண்டலாக விரும்புறேன் சார்“ .

மாணவர்கள் கடலலையைப் போல எழுந்து கெலிப்பதும் குதிப்பதுமாக இருந்தனர். அவர்களை அமைதிப்படுத்த குச்சி எடுப்பதைத் தவிர அவருக்கு வேறு வழி தெரியவில்லை. குச்சியால் மேஜையில் ரெண்டு தட்டுத் தட்ட குண்டூசி விழும் சத்தம் கேட்குமளவிற்கு வகுப்பறையில் அமைதி நிலவியது. அதற்குப்பிறகு அவனை எல்லாரும் அழைப்பது மென்டல் என்றுதான்.

பின்னொரு நாள் அவர் “ ஒவ்வொரு ஆளாக எழுந்து ஒரு விஞ்ஞானி பெயரையும் அவர் கண்டுப்பிடித்த ஒரு கண்டுப்பிடிப்பையும் சொல்லுங்கள் பார்க்கலாம்“ என்றவுடன் மொத்தத் தலையும் ஒடிந்து தொங்கி விட்டன. பிறகு வேறு வழியில்லாமல் அவரே சொன்னார் “ நான் ஒரு விஞ்ஞானி பெயரை சொல்கிறேன். அவரது கண்டுப்பிடிப்பை நீங்கள் சொல்லுங்கள்“ என்றவுடன் ஒடிந்த தலைகள் நிமிர்ந்தன.

“ அலெக்ஸாண்டர் கிரகாம்பெல்“

அவர் சொன்னவுடன் பாதிக்கு மேல் மாணவர்கள் சட்டென்று கையை உயர்த்தினார்கள். சில மாணவர்கள் கையை உயர்த்துவதைப் போல தலையை சொறிந்து கொண்டிருந்தனர். அதில் உயர்ந்த கை வினோதனுடையது.

“ வினோதன் நீ சொல்லு. அலெக்ஸாண்டர் கிரகாம்பெல் என்ன கண்டுப்பிடிச்சார் ?“

மெல்ல எழுந்தவன் “ பெல்“ என்றான்.

வகுப்பறையில் உக்கிரமான சிரிப்பொலி. நையாண்டி , மேளதாளம் என சகலமுமாக நிறைந்திருந்தது. சண்முகம் வினோதனை ஒரு கேலிப்பொருளாகவே பார்த்துக் கொண்டிருந்தார்.

“ வினோதன் நீ சொல்லுவதைப் பார்த்தால், நியுலாண்ட் கண்டு பிடிச்சது புதிய நிலம். மார்க்கோணி கண்டுப்பிடிச்சது கோணிப்பை அப்படித்தானே?“

என்ன பதில் சொல்லணுமென்று அவனுக்கு அப்போதைக்கு தெரியவில்லை. எதற்கும் “இல்லை“ யென்று பொத்தம் பொதுவாக தலையை ஆட்டி வைத்தான்.

இதற்கு முன்பு அவர் காலாண்டு அறிவியல் பேப்பரை திருத்திக் கொண்டிருக்கும் போது சிவப்பு மை பேனா எதேச்சையாக ஒரு இடத்தில் வந்து நின்றது. முப்பதாவது கேள்விக்கு சூர்யா மின்கலம் என்று எழுதியிருந்தான். வேறு வழியில்லாமல் “யா“ வை ஒட்டியுள்ள துணையெழுத்தை சுழித்துவிட்டு ஒரு மதிப்பெண் கொடுத்துவிட்டார்.

முயலின் காதுகளை தூக்கிப் பிடித்து அதன் எடையை கணித்து விடுவதைப்போல பரீட்சை பேப்பரின் நூலைத் தூக்கி முப்பது மதிப்பெண்களே தேறும் என ஊர்ஜித்தார். கூட்டிப் பார்க்கையில் முப்பத்து ஐந்து மதிப்பெண்கள் வந்திருந்தன. பேப்பரை வினோதன் வாங்கும் போது அவனது கழுத்தில் சூர்யா டாலர் தொங்கிக்கொண்டிருந்தது.

தில்லி கில்லியாக மாறியிருப்பது எதேச்சையானதா? இல்லை சின்னப்பிள்ளைத்தனமா? என்பதை அவன் கழுத்தில் தொங்கிக் கொண்டிருக்கும் டாலரை வைத்து திடமான முடிவுக்கு வந்திட முடியும் என்ற தன்னிலை விளக்கத்திற்கு பிறகு மற்ற பேப்பரை திருத்தத் தொடங்கினார்.

அரையாண்டு விடுமுறை முடிந்து பள்ளி திறக்கப்பட்டதும் அவர் முதல் வேலையாக வினோதனை சைகையால் அழைத்தார். அவன் எங்கிருந்தோ வேருடன் பிடிங்கி வந்திருந்த பட்டாணி செடியில் தன்னை கரைத்துக் கொண்டிருந்தான்.

“ டேய் மென்டல் ……. உன்னை சார் அழைக்கிறாங்க “ என சக மாணவர்கள் சொல்ல அவன் திடுக்கிட்டு அவர் முன் வந்து நின்றான்.

அவனது கழுத்தில் விஜய் டாலர் தொங்கிக் கொண்டிருந்தது. கவனிப்பதை சட்டென கணித்த அவன் கயிற்றை வெடுக்கென அறுத்து சட்டைப் பைக்குள் திணித்துக் கொண்டான்.

பத்தாம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வு நடந்து முடிந்திருந்தது. மறுநாள் வழியனுப்பும் விதமாக மாணவர்களை அழைத்திருந்தார் சண்முகம். ஒவ்வொருவராக எழுந்து, தான் எதிர் நோக்கியிருக்கும் மதிப்பெண்களையும் எதிர்கால கனவு படிப்புகளையும் வணக்கத்துடன் தொடங்கி நன்றிக்கு உரித்தாக்கிக் கொண்டிருந்தனர். கடைசி நபராக வினோதன் எழுந்தான். “ எனக்கு எப்படியும் நானூற்று ஐம்பது மார்க் வரும் சார் “ என்றதும் கொஞ்சப்பேர் கடனுக்கு சிரித்து வைத்தார்கள். “ சார் … உங்கப் பாடத்தில் தொண்ணூறு வரும் “ என்றதும் அங்கொன்றும் இங்கொன்றுமாக சிரித்தார்கள். “ இத்துடன் என் வாழ்க்கையை முடித்துக் கொள்கிறேன்.நன்றி வணக்கம்“ என்றதும் வகுப்பறையே குதூகலம் கண்டது.

சண்முகம் அவனை பரிதாபத்தோடுதான் பார்த்தார். உரையை முடித்துக் கொள்கிறேன் என்பதைத்தான் தவறுதலாக வாழ்க்கையை முடித்துக் கொள்கிறேன் என சொல்லிருக்கிறான் என்றாலும் அவன் அப்படி சொன்னதும் அவருக்கு கொஞ்சம் நெருடலை கொடுத்தது. கடைசியில் ஆசிரியரிடம் கை கொடுத்தப்படி மொத்த மாணவர்களும் விடைபெற வினோதனை மட்டும் அவர் மறையும் வரை பார்த்துக் கொண்டேயிருந்தார்.

பள்ளி தேர்வு முடிவு எதிர்பார்த்தப்படி வந்திருந்தது. வினோதனும் எதிர்பாராத விதமாக தேர்ச்சிப்பெற்று பள்ளிக்கு அதிர்ச்சி கொடுத்திருந்தான். பள்ளி அளவில் மிகக்குறைந்த மதிப்பெண் வரிசையில் முதலிடம் அவன்தான். டீசி வாங்குவதும் , ஆசிரியர்களுக்கு மிட்டாய் கொடுப்பதும் , வணக்கம் வைப்பதும் ,தோழிகளுக்கு டாட்டா சொல்வதுமாக இருந்த மாணவர்களிடம் சண்முகம்தான் கேட்டார். “ எங்கடா வினோதன்…………….?“

எதிரே வந்து நின்று கைக்கட்டியபடி சொன்னான் ஒருவன் “ அண்ணா பண்ணையில வேலை பார்க்கிறான் சார்“

“ என்ன வேலை பார்க்கிறான்?“

“ மரக்கன்னுக்கு பாக்கெட் போடுறான் சார்“

“ அவனை இங்கே அழைச்சிக்கிட்டு வாடா “ என அவர் சொன்னதும் கையில் வைத்திருந்த சான்றிதழ்களை அவரிடமே கொடுத்து விட்டு மூன்று மாணவர்கள் ஓட்டமெடுத்தனர்.

சுவற்றில் மோதி திரும்பும் பந்து போல போன வேகத்தில் திரும்பிவந்த அவர்கள் “ உங்கள் பாடத்தில் சொன்ன மதிப்பெண் அவனால எடுக்க முடியலையாம் சார். அதனாலே உங்க முன் நிற்க வெக்கப்பட்டுக்கிட்டு வர முடியாதுனு சொல்றான் சார்“

தேர்வு முடிவுக்குப் பிறகு வினோதன் இதுநாள் வரைக்கும் பள்ளிக்கு வராததால் கவலையில் அமிழ்ந்து போயிருந்தார் சண்முகம். என்ன செய்வதென்று ஒரு கணம் யோசித்த அவர் ஒரு மாணவனிடம் சைக்கிள் ஒன்று வாங்கிக் கொண்டு வேகு வேகுவென மிதித்து பண்ணை போய் சேர்ந்தவர் அவனிடம் பத்து நிமிடங்கள் பேசி கையோடு அழைத்து வந்து அருகிலுள்ள மேல்நிலைப்பள்ளியில் சேர்த்து விட்டார். வினோதன் அங்கேயும் “ மென்டல் “ என்றே அழைக்கப்பட்டு வந்தான்.

அந்த வருடம், ஒரு நாள் ஆண்டு விழா மிக விமர்ச்சையாக நடைபெற்றது. கடந்த வருடம் முதல் மதிப்பெண் பெற்ற ஒரு மாணவிக்கு பலத்த கைத்தட்டலுடன் பரிசு வழங்கப்பட்டதன் பிறகு “ இப்போது வினோதன் எனும் மெண்டலை மேடைக்கு அழைக்கிறோம் “ என ஆசிரியர் சண்முகம் அழைத்ததும் முன்னால் மாணவர்கள் மத்தியில் எகத்தாளம் , கும்மாளம். . இருக்காதா பின்னே ! இதுவரைக்கும் அவனை அவர் அப்படி அழைத்ததில்லையே.

மேடைக்கு வந்தான் வினோதன். அவன் கையில் ஒரு செடி இருந்தது. சண்முகம்தான் அவனை அறிமுகப்படுத்தி பேசினார் “ மாணவர்களே நம் பள்ளியில் படித்த முன்னால் மாணவன் வினோதன் தேசிய அறிவியல் தொழில் நுட்பத்தால் இளம் விஞ்ஞானி எனும் அங்கீகாரத்தை பெற்றிருக்கிறான். இவன் கண்டுப்பிடித்த ஒரு ஒட்டு வேம்பு பாலைவனத்தில் கூட வளரக்கூடிய தகவமைப்பை பெற்றதாக உள்ளது. காற்றிலுள்ள மிகக் குறைந்த அளவு ஈரப்பதத்தை மட்டுமே எடுத்துக்கொண்டு செழிப்பாக வளரக்கூடிய இந்த வேம்பு எதிர்கால பாரதத்தை பசுமையான பாரதமாக மாற்றும் என்பதில் ஐயமில்லை. நான் இப்பள்ளிக்கு மாறுதலாகி வரும் போது என் ஆசை மெண்டலாவதுதான் என்றான். ஆனால் அவன் சொன்னதை மற்ற மாணவர்கள் மென்டலாகவும் கேலியாகவும் எடுத்துக்கொண்டனர். ஆனால் வினோதன் அதை கேலியாக சொல்லவில்லை. ”

வினோதன் தலை குனிந்து அடக்கமாக நின்று கொண்டிருந்தான். சண்முகம் மேலும் தொடர்ந்தார். “ வினோதன் கழுத்தில் எப்போதும் ஒரு டாலர் தொங்கிக் கொண்டிருக்கும். அது நடிகனாகவோ அல்லது ஒரு கிரிக்கெட் பிளேயராகவோ இருக்கக்கூடும். இனி அவனுடைய கழுத்தில் எப்போதும் ஒரே டாலர் தான் தொங்கும். அந்த டாலர் மெண்டல். பட்டாணியில் கலப்பினத்தை உண்டாக்கிய தாவரவியல் விஞ்ஞானி கிரிகோர் ஜோகன் மெண்டல்”

டாலரை விழாத் தலைவர்கள் கூடி நின்று அவனுக்கு அணிவித்தனர். பரட்டை தலையுடனும் கூனிப்போன முதுகுடனும் அவன் மேடையை விட்டு கீழே இறங்க மாணவப் பட்டாளம் அவனைச்சுற்றி மொய்க்க நாலாபுறமும் திரும்பி கை கொடுத்த படி நடையை கூட்டிக் கொண்டிருந்தான்.

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு வினோதன் ஒரு நாள் ஒட்டு ரக மரக்கன்றுடன் சண்முகம் வீட்டிற்கு வந்திருந்தான். அவனைக் கண்ட சண்முகம் “ வாப்பா மெண்டல் “ என அலங்கார புன்னகையுடன் அழைத்தார்.

பதிலுக்கு அவனும் பிளாஸ்டிக் ரக புன்னகையால் ஆமோதித்தான்.

“ சார்…….பள்ளி ஆண்டு விழாவில் நீங்க என்னை அந்தளவிற்கு கௌரவப்படுத்திருக்க வேண்டியதில்லை சார். அதுவும் விஞ்ஞானி மெண்டல் முகம் பதித்த இந்த டாலரை எனக்கு நீங்க மாட்டி விட்டிருக்கக் கூடாதுன்னு நான் நினைக்கிறேன் சார் “

அவன் அப்படி சொன்னதும் ஒரு வித கிலி அவரை பற்றிக்கொண்டது.

“ ஏன் ! என்னாச்சுப்பா?“

துளிர்த்திருந்த கண்ணீரை லாவகமாக மறைந்துக் கொண்டு சொன்னான் “அதற்கு பிறகு யாரும் என்னிடம் பேசுவதுமில்லை, கேலியாக மென்டல்னு கூப்பிடுறதும் இல்ல சார்“

பெரிய கலவரம் நிகழ்ந்து ஓய்ந்ததைப் போல உணர்ந்தார் சண்முகம். பிறகு தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு கேட்டார். “ வினோதன்…… நீ நான்கு வருடத்திற்கு முன்பு நீ என்னிடம் சொன்னது மென்டலா ? மெண்டலா?“

“ மெண்டல் சார்“ என சொல்லிவிட்டு எங்கேயோ ஓடிப் போய் ஒழிந்து போன சிரிப்பை மீட்டு வந்து முகத்தில் காட்டிக் கொண்டிருந்தான்.

அவனது அந்த ரம்மியமான சிரிப்பு அவரைப் பொறுத்தவரை தேசிய விருது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *