கதையாசிரியர்:
தின/வார இதழ்: பாக்யா
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: October 6, 2014
பார்வையிட்டோர்: 12,532 
 

நாலரை மணிக்கு கடைசி மணி அடித்தார்கள் . முத்துசாமி வேக வேகமாக புத்தகங்களை பைக்குள் திணித்துக் கொண்டு வெளியே வந்தான். வழக்கமாகவே பள்ளி முடிந்தவுடன் அடிக்கப்படும் கடைசி மணி அவனுக்கு சந்தோஷம் கொடுக்கும் . அன்று வழக்கத்தை விட அதிக சந்தோஷமாக இருந்தது . பள்ளியின் தேசிய சேவை இயக்கத்தில் அவன் உறுப்பினன் . ஒவ்வொரு வாரமும் ஐந்து பேர்களைத் தேர்ந்தெடுத்து , நகரத்தின் ஒரு பகுதியில் உள்ள டிராபிக் போலீஸ்காரரோடு நிற்க வைத்து , போக்குவரத்து விதிகளையும் , போக்குவரத்தைக் கட்டுப் படுத்தும் முறைகளையும் கற்றுக் கொடுப்பது இயக்கத்தின் செயல்களில் ஒன்றாகும். அந்த வாரம் முத்துசாமியும் ஒருவன் .

வகுப்பை விட்டு வெளியே வந்தவன் , பைக்குள் இருந்த பாட்ஜை எடுத்து மாட்டிக் கொண்டான் . அவனுக்கு ஒதுக்கப் பட்டிருந்த இடம் பக்கத்தில்தான் . பள்ளியில் இருந்து பத்து நிமிட நடைதான் . ஐந்து மணிக்குதான் அங்கு இருக்க வேண்டும் . முத்துசாமி நிதானமாக நடந்தான். மனம் ஒருவித உற்சாகத்தில் திளைத்திருந்தது .

சாலைகளில் அங்கங்கே நின்று , போக்குவரத்தைக் கட்டுப்படுத்தும் போலீஸ்காரர்களை அவன் எப்போதுமே ஒருவித ஆச்சரியத்தோடு பார்ப்பான். அவர்களது கை அசைவிற்கு பஸ்களும் , கார்களும் , லாரிகளும் நிற்பதும் , போவதும் அவனுக்கு பிரமிப்பை உண்டாக்கும் .

தானும் அதைப் போலவே எல்லா வாகனங்களையும் கட்டுப் படுத்தப் போகிறோம் என்ற எண்ணம் அவன் மனதினுள் பிரமாண்டமான சந்தோஷத்தை உருவாக்கியிருந்தது .

பதினைந்து நிமிட நடையில் அவன் அந்த இடத்தை அடைந்து விட்டான் . அது நான்கு சாலைகள் இணையும் இடம் . நடுவில் சற்று உயரமாக இருந்த வட்ட வடிவமான மேடை . அதன் மீது ஏற சின்ன இரும்பு ஏணி . நடுவில் பெரிய இரும்புக் குடை .

நகரத்தின் அரிமா சங்கம் ஏற்படுத்திக் கொடுத்த அமைப்பு அது . அவ்வப்போது சுத்தம் செய்து வர்ணம் அடித்து பராமரித்து வந்ததால் பளிச்சென்று இருந்தது .

மேடையின் மேல் அந்த போலீஸ்காரர் நின்று கொண்டிருந்தார் . தெற்குப் புறச் சாலையில் வரும் வாகனங்களை நிறுத்தி வைத்து , மற்ற வாகனங்களைப் போக விட்டுக் கொண்டிருந்தார் .

வாகனப் போக்குவரத்து அதிகமாக இருந்ததால் , நடைபாதையிலேயே நின்றான் முத்துசாமி . சிறிது நேரத்தில் சாலை ஓய்ந்து விட்டது . வேகமாக சாலையைக் கடந்து மேடையின் அருகில் போய் நின்றான் .

“ என்ன தம்பி ? “ போலீஸ்காரரின் குரல் கரகரவென்றிருந்தது .

அவன் பாட்ஜைக் காண்பித்தான் .

“ ஓஹோ , நீதானா ! வா , வா . ஏணியிலே ஏறி மேல வா . “

அவன் ஏறி மேலே வந்தான் . பையை ஓரமாக வைத்தான் . அதற்குள் இரண்டு புறமும் இருந்து வாகனங்கள் நிறைய வர , போலீஸ்காரர் தன் கையைக் காட்டி போக்குவரத்தை சீராக்க ஆரம்பித்தார்.

இன்னும் சிறிது நேரத்தில் தானும் அதைப் போலச் செய்யப் போகிறோம் என்ற எண்ணம் பிரமிப்பை ஏற்படுத்த , நின்று கொண்டிருந்தான் முத்துசாமி . அந்த இடத்தில் இருந்து சாலைகளையும் , அவற்றில் ஓடும் வாகனங்களையும் பார்ப்பது ஆனந்தமான அனுபவமாக இருந்தது .

“ தம்பி பேரென்ன ? “

“ முத்துசாமி . நல்லசாமி மேல்நிலைப் பள்ளியில ஏழாவது படிக்கிறேன் . “

“ சந்தோஷம் . இன்னும் கொஞ்ச நேரத்தில் டிராபிக் ஹெவியாயிடும் . நான் செய்யற மாதிரியெல்லாம் செய்யணும் . நான் அப்பப்ப சொல்ற விஷயங்களை எல்லாம் கவனமாக கேட்டுக்கணும் . சரியா ? “

வாகனங்கள் அவ்வளவாக இல்லாதபோது போலீஸ்காரர் சாலை விதிகளை அவனுக்கு கற்றுக் கொடுத்தார் . சாலையில் வாகனங்கள் எந்தப் பக்கமாக போக வேண்டும் , எப்படித் திரும்ப வேண்டும் , எப்போது நின்று போக வேண்டும் என்று கொஞ்சம் கொஞ்சமாக சொல்லிக் கொடுத்தார் .

அவ்வப்போது சந்தேகங்கள் வந்தபோது அவன் கேட்ட கேள்விகளுக்கு விரிவாக பதில் கொடுத்தார் . அவன் புரிந்து கொண்டிருக்கிறானா என்று பார்க்க , அவ்வப்போது கேள்விகள் கேட்டார் . அவன் சரியாக பதில் சொன்னதைப் பாராட்டினார் .

இடையிடையே அவர் கைகளை வெவ்வேறு விதமாக ஆட்டி அசைக்கும் போதெல்லாம் , தானும் அதைப் போலவே செய்தான் .

போலீஸ்காரர் சொன்னதைப் போலவே சிறிது நேரத்தில் வாகனப் போக்குவரத்து அதிகரித்து விட்டது . அலுவலகங்கள் முடியும் நேரமாதலால் பஸ்களும் , கார்களும் , ஸ்கூட்டர்களும் நான்கு புறங்களில் இருந்தும் விரைந்தன . போலீஸ்காரர் பேசுவதை நிறுத்தி விட்டு சுறுசுறுப்பானார் . அவனும் அவர் செய்வதைப் போலவே செய்து கொண்டிருந்தான் .

போக்குவரத்து சற்று குறைந்த போது , அவர் கையைக் காட்டுவதைக் கவனியாமல் கோட்டைக் கடந்து ஒரு மோட்டார் சைக்கிள் வந்து விட்டது . போலீஸ்காரர் சட்டென்று விஸிலை வாயில் வைத்து ஒலியெழுப்பியதும் , தன் தவறையுணர்ந்து , மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டார் அந்த மனிதர். கையைக் காட்டி மேடையருகில் அழைக்கப்பட்டதும் மோட்டார் சைக்கிளை உருட்டியவாறே மேடையருகில் வந்து நின்றார் . போலீஸ்காரர் அவர் பெயர் , முகவரி எல்லாம் கேட்டு நோட்டில் குறித்துக் கொண்டார் .

“ தெரியாம வந்துட்டேன் சார் . கவனிக்கலே . மன்னிச்சு விட்ருங்க சார் “ அந்த மனிதர் மெல்லிய குரலில் கேட்டார் .

“ எப்படிய்யா விட முடியும் ? இந்தா , இதில ஒரு கையெழுத்துப் போடு . சம்மன் வரும் . கோர்ட்டில வந்து ஃபைன் கட்டிட்டுப் போ . “

அந்த மனிதர் கையெழுத்துப் போட்டு விட்டு மீண்டும் மோட்டார் சைக்கிளில் ஏறிப் போய் விட்டார் .

“ எப்படி கேஸ் புக் பண்றதுன்னு பார்த்துட்டியா ? அந்த ஆளு நிற்காமப் போயிருந்தான்னா வண்டி நம்பரைக் குறிச்சுக்கிட்டு கேஸ் புக் பண்ணிடலாம் .“

முத்துசாமியின் மனதில் வருங்காலம் பற்றிய கற்பனைகள் நிறைய உண்டு . டாக்டராக வேண்டும் , வாத்தியாராக வேண்டும் , வக்கீலாக வேண்டும் … புதிதாக ஒரு ஆசையும் சேர்ந்து கொண்டது . டிராபிக் போலீஸாக வேண்டும் .

அவரது கையசைவுகளினால் எவ்வளவு விபத்துகள் தவிர்க்கப் படுகின்றன ! அது ஒரு பெரிய சமூக சேவை என்று நினைத்துக் கொண்டான் .

ஆறரை மணிக்கு போக்குவரத்து குறைய ஆரம்பித்து விட்டது .

“ சரி தம்பி , இன்னைக்குப் போதும் . இருட்டிடும் . நீ கெளம்பு ” என்றார் போலீஸ்காரர் .

முத்துசாமிக்கு மனம் கஷ்டமாக இருந்தது . அங்கேயே நின்று கொண்டு இருக்க வேண்டும் போலிருந்தது . மனமில்லாமல் பாட்ஜைக் கழற்றினான் .

“ கெட்டிக்காரனா இருக்கே . சட்னு புரிஞ்சுக்குறே . நாளைக்கும் வந்துடு “ அவரது பாராட்டுகள் உற்சாகத்தை அதிகப் படுத்தின .ஏணி வழியாக இறங்கத் தொடங்கினான் .

அப்போதுதான் அது நிகழ்ந்தது . கிழக்குப் புறச் சாலையில் வந்த வெள்ளை நிறக் கார் ஒன்று சட்டென்று வலது கைப்புறம் திரும்பி வடபுறச் சாலையில் சென்றது .

பார்த்த மாத்திரத்திலேயே அந்தக் கார் சாலை விதிகளை மீறி விட்டது புரிந்தது . கிழக்குப்புறச் சாலையில் இருந்து வடபுறச் சாலைக்கு வர வேண்டுமானால் மேடையைச் சுற்றி வந்து மீண்டும் வடபுறச் சாலையின் இடது கைப் பக்கமாகத்தான் போயிருக்க வேண்டும் .

போலீஸ்காரர் வண்டியை நிறுத்துவார் என்ற எதிர்பார்ப்போடு நின்று விட்டான் முத்துசாமி . ஆனால் போலீஸ்காரர் விஸில் அடிக்கவில்லை . அவரும் அதைப் பார்த்தார் . அப்புறம் ஏன் நிறுத்தவில்லை ?

மீண்டும் மேடைக்கு ஏறினான் .

“ ஸார் , அந்தக் கார் சாலை விதிகளை மீறிப் போச்சே , அப்புறம் ஏன் நிறுத்தலை சார் ? நான் நம்பரை நோட் பண்ணிட்டேன் . “

போலீஸ்காரர் லேசாகச் சிரித்தார் .

“ அது யார் கார்னு தம்பிக்குத் தெரியாதா ? நம்ம லோக்கல் எம்.எல். ஏ. காரு . அதை புக் பண்ணா அவரு மேலதிகாரிங்க கிட்டச் சொல்லி என்னை ஒரு வழி பண்ணிருவாரு . எதுக்கு வம்பு ? “ மிக நிதானமாகச் சொன்னார் .

“ சட்டம்னா எல்லோருக்கும் ஒண்ணுதானே சார் ? “ அவன் குரலில் கோபம் தெரிந்தது .

“ அதெல்லாம் உனக்கு இப்ப புரியாது . சரி , நீ கெளம்பு . இருட்டிடும் . “

அவன் கீழே இறங்கினான் . போலீஸ்காரரைப் பற்றியிருந்த நல்ல எண்ணங்களும் இறங்கி விட்டன .

போலீஸ்காரர் நடந்து கொண்ட விதம் அவனுக்குப் புரியவில்லை ; பிடிக்கவும் இல்லை .நாளைக்கு வரக் கூடாது என்று முடிவெடுத்தவாறே நடக்கத் தொடங்கினான் .

விதிகளையும் , கட்டுப்பாடுகளையும் கற்றுக் கொள்ள வந்த அந்த இளைய தலைமுறைக்கு , சட்டங்களை உருவாக்குபவர்களே அவற்றை உடைத்துக் கொண்டிருக்கும் நிலைமையையும் , அதனைப் பார்த்துக் கொண்டு சும்மா இருக்கும் ஒருவித கையாலாகாத்தனத்தையும் கற்றுக் கொடுத்து விட்டு தன் கடமையில் கவனம் செலுத்த ஆரம்பித்தார் அந்த போலீஸ்காரர் .

நாட்டின் வளர்ச்சியையே பாதித்துக் கொண்டிருக்கும் ஒருவித மனோபாவத்தின் விதை அந்த இளம் நெஞ்சில் ஊன்றப் பட்டு விட்டதை உணரும் பக்குவம் அவருக்குக் கிடையாது .

விதைக்கப் பட்ட விதை முளைத்து அதற்குரிய விஷ விருட்சமாக வளரப் போகின்றதா , அல்லது அந்த விதை அழுகி அழிந்து போய் , வேறு நல்ல விதை ஊன்றப் பட்டு அழகிய மரமாக வளரப் போகின்றதா என்ற கேள்விக்கு காலம் மட்டுமே பதில் சொல்ல முடியும் .

– பாக்யா வார இதழ் . அக்டோபர் 19 – 25 , 1990ல் வெளியானது

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *