வாழ்க்கை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: October 6, 2021
பார்வையிட்டோர்: 3,848 
 

மஹாபாரதப் போருக்கு முன், கர்ணன் கிருஷ்ணரைச் சென்று சந்தித்தான்.

அவரிடம் மிகுந்த வேதனையுடன் “என் தாயார் நான் பிறந்த நேரத்தில் என்னை ஆற்றில் விட்டு விட்டார். என்னை முறை தவறிப் பிறந்த குழந்தை என்றார்கள்… இது என் தவறா கிருஷ்ணா?

“நான் சத்ரியன் அல்ல என்று கூறி துரோணாச்சாரியார் எனக்கு கல்வியைக் கற்றுத் தரவில்லை… இது என் தவறா?

“பரசுராமர் எனக்கு நிறைய கற்றுக் கொடுத்தார். ஆனால் நான் சத்ரியன் எனக் கூறி, நான் படித்த எல்லாவற்றையும் மறக்க எனக்கு சாபம் கொடுத்தார்… இது என் தவறா கிருஷ்ணா?

“ஒரு கறவைப் பசு தற்செயலாக என் அம்பு மூலம் தாக்கப் பட்டது. அதன் உரிமையாளர் என்னுடைய தவறுக்காக என்னைச் சபித்தார். திரெளபதியின் சுயம்வரத்தின் போது, நான் ஒரு தேரோட்டியின் மகன் என்பதற்காக நான் அவமானப் படுத்தப் பட்டேன்…

“குந்திகூட இறுதியாக தன் மற்ற மகன்களைக் காப்பாற்ற மட்டுமே என்னைத் தேடி வந்தார். இப்படிச் சுற்றி இருப்பவர்கள் அனைவராலும் வஞ்சிக்கப்பட்ட போது, துரியோதனின் அன்பு மூலமாகவே எனக்கு எல்லாம் கிடைத்தது…

“ஆகையால் அவன் பக்கம் நான் நிற்பது எப்படித் தவறாகும் கிருஷ்ணா?”

அதற்கு கிருஷ்ணன், “கர்ணா நீயாவது பரவாயில்லை, ஆனால் நான் ஒரு சிறையில் பிறந்தேன். என் பிறப்புக்கு முன்பே எனக்கு மரணம் காத்திருந்தது.. நான் பிறந்த இரவு அன்றே என் பெற்றோரிடமிருந்து நான் பிரிக்கப்பட்டேன்…

“நீ சிறு வயதிலிருந்து வாள், ரதங்கள், குதிரைகள், வில், அம்புகள் ஆகியவற்றின் இரைச்சலை மட்டுமே கேள்விப் பட்டிருப்பாய். ஆனால், நானோ மாடு, கொட்டில், சாணம், வைக்கோல் இவைகளுக்கு இடையே வளர்ந்தேன். நான் நடக்க ஆரம்பிக்கும் முன்னே என்னைக் கொல்ல பல சதிகள் நடந்தன…

“எனக்கு நல்ல கல்வி இல்லை, ராணுவப் பயிற்சி கிஞ்சித்தும் இல்லை. ஆனால் எல்லோரும் நான்தான் நடக்கும் பிரச்சினைகளுக்கு எல்லாம் காரணம் என்கிறார்கள். நீங்கள் ஆசிரியர்களால் மதிக்கப் படுகிறபோது நான் எந்தக் கல்வியும் பெறவில்லை. நான் என்னுடைய பதினாறாவது வயதில்தான் ரிஷி சாண்திபனியின் குருகுலத்தில் சேர்ந்தேன்!

“நீங்கள் விரும்பிய ஒரு பெண்ணை தேர்வு செய்து திருமணம் செய்து கொண்டீர்கள். ஆனால் நானோ நான் விரும்பிய பெண்ணை திருமணம் செய்யாமல், என்னை நேசித்த பெண்களை, மேலும் கொடியவர்களிடம் இருந்து நான் காப்பாற்றிய பெண்களைத் திருமணம் செய்து கொண்டேன்.

“ஜராசந்த்திடமிருந்து என் மக்களைக் காப்பாற்றுவதற்காக, யமுனா நதிக்கரையிலிருந்து, கடலிலிருந்து, தூரத்திலிருந்து என்னுடைய முழு சமூகத்தையும் நகர்த்த வேண்டி இருந்தது. நான் ஓடிப்போன ஒரு கோழை!

“துரியோதனன் போரில் வெற்றி பெற்றால் உனக்கு நிறைய பொருள், நாடு, சேனை, கெளரவம் எல்லாம் கிடைக்கும். ஆனால் நான் பஞ்ச பாண்டவர்களுடன் சேர்ந்து யுத்தம் செய்தால் எனக்கு என்ன கிடைக்கும்? கண்ணன்தான் இந்தப் போருக்கு காரணம் என்ற குற்றச்சாட்டு மட்டுமே மிஞ்சும்.

“ஒன்றை மட்டும் நினைவில் கொள்ளுங்கள்… ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில் சவால்கள் உள்ளன. வாழ்க்கை எப்போதுமே நாம் விரும்புகிற மாதிரி இலகுவாகவும், எளிதாகவும் இருப்பதில்லை. போராட்டமே வாழ்க்கை…

“ஆனால் மனசாட்சிப் படி, தர்மத்தின் பால் நிற்பதே சரியானதாகும். எத்தனை முறை நாம் ஏமாற்றப் பட்டோம்; எத்தனை முறை நாம் அவமானப் படுத்தப் பட்டோம்; எத்தனை முறை நாம் வீழ்ச்சி அடைந்தோம் என்பது முக்கியமானது அல்ல. மாறாக, எல்லாவற்றையும் தாண்டி அந்த நேரத்தில் நாம் எப்படி மீண்டு எழுந்தோம் என்பதே முக்கியமானது…

“நம் வாழ்க்கையில் நடக்கும் தவறுகள் நம்மைத் தவறான பாதையில் போவதற்கான உரிமையைக் கொடுக்கவில்லை. எப்போதும் ஒன்றை நினைவில் கொள். வாழ்க்கை என்பது நமக்கான ஒரு பாதை. சில நேரங்களில் அது கரடுமுரடாக இருக்கலாம். அதைக் கடப்பது நம் காலணிகளால் அல்ல. நாம் எடுத்து வைக்கும் மிகக் கவனமான அடிகள் மூலமே…”

எதோ புரிகிற மாதிரி இருக்கே என்று கர்ணன் ஆழ்ந்து சிந்திக்க ஆரம்பித்தான்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *