டைரக்டர் ரமேஷ், நந்திதாவிடம், “இங்கப்பாருங்க மேடம்! இந்தக்காட்சிப்படிநீங்க ரெண்டு நாள் சாப்பாடு கிடைக்காமப் பட்டினியா இருக்கீங்க.
அதுக்குப்பிறகு தப்பிச்சு வந்து இங்க இவங்க கொடுக்கிற சாப்பாட்டை சாப்பிடுறீங்க…அந்த ரெண்டு நாள் பசியோடு இருக்கிறவ எப்படி சாப்பிடுவாளோ அதேமாதிரி சாப்பிடுங்க.
நீங்க சாப்பிடுற சீனை குளோஸ்-அப் ஷாட்ல எடுக்கணும். பசியோட ஏக்கம் உங்க கண்ல நல்லாத் தெரியணும். நீங்க சாப்பிடுறதப் பாத்தா, பசியோட சாப்பிடுற மாதிரி தெரியல! ஏதோ சும்மா கொறிக்கிற மாதிரி இருக்கு!
அடுத்த ஷாட்டாவது சரியா பண்ணுங்க மேடம்! ‘ கெஞ்சல் பாதியும், கோபம் பாதியுமாக கலந்து சொல்ல, அடுத்த டேக்கில் ஷூட் ஓ.கே. ஆனது.
“இந்த சித்தி, சாப்பிட்டால் உடம்பு ஏறிடும் என்று தினமும் வேக வைச்ச காய்கறியையும், ஏதாவது ஜூஸையும் சாப்பிடக் கொடுக்குது!
இன்னைக்கு முத ஷாட்லேயே நல்லா நடிச்சிருந்தா, அடுத்த தடவை சாப்பாடு கிடைச்சிருக்காது. அதுதான் வேணும்னே ரெண்டு சீன்ல சொதப்பினேன்.
யப்பா… ! ரொம்ப நாள் கழிச்சு வயிறு நிறைய நமக்கு பிடிச்ச கருவாட்டுக் கொழம்பை ஒரு வெட்டு வெட்டியாச்சு’ என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டாள்,
ஒரு படத்திற்கு பலகோடி சம்பளம் வாங்கினாலும், சித்தியிடம் மாட்டிக்கொண்டு சாப்பிட முடியாமல் தவிக்கும் நடிகை நந்திதா.
– எஸ்.செல்வசுந்தரி (மார்ச் 2014)