ராம்குமார் வித்தியாசமானவன்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: January 19, 2019
பார்வையிட்டோர்: 5,259 
 

இரவு மணி பத்து மணிக்கு மேல் இருக்கும், பேருந்து நிலையத்துக்கு அருகில் உள்ள மருந்தகத்தில் மருந்து வாங்கிய ராம் குமார் , ஏதேச்சையாக திரும்பி பார்க்க அந்த நேரத்தில் ஒரு பெண் கையில் பெட்டியுடன் விழித்துக்கொண்டிருந்தாள். வயது இருபத்தி மூன்று அல்லது நான்கு மதிக்கலாம், சிவந்த நிறத்துடன் நாகா¢கமாய் காணப்பட்டாள்.இந்த நேரத்தில் இந்த பெண் ஏன் இங்கே நிற்கிறாள்? மனது ஒரு பக்கம் கேள்வியை எழுப்பினாலும் யார் நின்றால் நமக்கென்ன? என்ற விட்டேற்றியாய் இன்னொரு மனம் சொன்னது.

பேருந்து நிலையம் என்று சொன்னாலும் அது நிறுத்தம் என்று சொன்னால்தான் சரியாக இருக்கும். கோவையிலிருந்து அவினாசி செல்லும் தடத்தில் அங்கிருந்து சில நகர பேருந்துக்கள் அவினாசிக்கும், சில நகர பேருந்துக்கள் கோவைக்கும் செல்லும்.

தொலை தூர பேருந்துகள் இந்த இடத்தில் நின்று செல்லும்.இந்த பேருந்து நிலையத்தை சுற்றி இருந்த கிராமங்கள் நகரமாக வளர்ந்துள்ளது.

அப்படி வளர்ந்த சக்தி நகா¢ல், நாளை ஒரு இண்டர்வியூவிற்கு தயார் படுத்தி கொண்டிருந்தவன், கடும் தலைவலி காரணமாக, மாத்திரை வாங்கலாம், என்று வந்தவன் மாத்திரை வாங்கியபின் திரும்பும் பொழுது இந்த பெண்ணை பார்க்கிறான். இவளை இதுவரை எங்காவது பார்த்திருக்கிறோமா என்று யோசனை செய்து பார்த்தான். ஹ¥ஹ¥ம் பார்த்த ஞாபகம் வரவேயில்லை. சரி விடு என்று வண்டி நிறுத்துமிடம் வந்து வண்டியை ஸ்டார்ட் செய்தவன் அனிச்சையாய் அந்த பெண்ணை பார்த்தான்.அந்த பெண் அவனிடம் ஏதோ சொல்ல நினைப்பது போல் நின்று கொண்டிருந்தாள். முகத்தில் அவன் எங்கே கிளம்பிவிடுவானோ என்ற துடிப்பும் தெரிந்தது. இவனுக்கு தர்ம சங்கடமாகிவிட்டது. இப்பொழுது அப்படியே வண்டியை எடுத்து சென்று விடலாமா? அப்புறம் இரவு முழுக்க மனசாட்சி உறுத்திக்கொண்டே இருக்கும். அதற்காக அந்த பெண்ணிடம் பேச்சு கொடுத்து அவள் பாட்டுக்கு அவனுடன் கிளம்பி விட்டால் அதை விட பெரிய தொல்லை ஏதுமில்லை. இறுதலை கொள்ளி எறும்பு போல ஆளானான்.

இப்பொழுது அந்த பெண் மெல்ல நகர்ந்து அவனிடம் வருவது புரிந்தது. இவனுக்கு என்ன செய்வது என்று திகைத்து அவன் வண்டியில் உட்கார்ந்த நிலையிலேயே இருந்தான்.
சார்…என்று அழைத்த அந்த பெண் நான் கோயமுத்தூர் போக வேண்டும், தெரியாமல் இதுதான் கோயமுத்தூர் என்று இறங்கி விட்டேன். இறங்கிய பின்னால்தான் தெரிகிறது
கோயமுத்தூருக்கு இன்னும் இருபததஞ்சு கிலோ மீட்டர் இருக்குதுன்னு. இந்த இடம் எனக்கு புதுசு. அதுவுமில்லாம இந்நேரத்தில் இங்க நின்னுகிட்டிருந்தா எல்லோரும் தப்பா நினைச்சுக்குவாங்க.

அதுக்கு நான் இப்ப என்ன பண்ணனும்னு நினைக்கிறீங்க? மெல்ல கேட்டவனின் குரல் நடுங்கியது. பயப்படாதீங்க, கொஞ்சம் யோசிச்சு பாருங்க, தனியா ஒரு பொண்ணு எந்த இடம்னு தெரியாம இந்த இராத்திரி வேலையில இப்படி நின்னா பாக்கறவ்ங்க என்ன நினைப்பாங்க?

அடுத்த பஸ் வர்ற வரைக்குமாவது எங்கூட நின்னுட்டு போங்க அப்படீன்னுதான் கேக்கறேன்.

இவனுக்கு என்ன பதில் சொல்வது என்று புரியவில்லை. அவள் சொன்னது உண்மைதான்.ஆட்கள் நடமாட்டம் குறைய குறைய இந்த பெண்ணின் பாடு திண்டாட்டம்தான். என்ன செய்வது? அதற்காக இவளுடன் இந்த இடத்தில் நிற்பதற்கும் சங்கடமாக இருந்தது. கொஞ்சம் நில்லுங்க என்று தன் கை பேசியை எடுத்தவன் வீட்டுக்கு போன் அடித்தான்.அவன் அப்பாதான் எடுத்தார். அப்பா.. என்று இழுத்தான். என்னடா இந்த நேரத்துல வெளியில என்ன பண்றே? நாளைக்கு இண்டர்வியூக்கு போகணுன்னு சொல்லிட்டிருந்த, நேரத்துல வந்து படுத்தாதானே காலையில ரெடியாக முடியும். சொல்லிக்கொண்டே போனார். அப்பா..என்று இழுத்தான். என்னடா என்று கேட்டார். என் பிரண்டோட சிஸ்டர் நாளைக்கு இண்டர்வியூவுக்கு அதே கம்பெனிக்கு போறவங்க, இங்க வந்து இறங்கிட்டாங்க, அவங்களை நம்ம வீட்டுக்கு கூட்டி வரட்டுமா? கொஞ்சம் நேரம் மெளனம், அம்மாவிடம் ஏதோ பேசுவது கேட்டது. அம்மா கொடுங்க போனை என்று கேட்பது தெரிந்தது. ஏண்டா, அந்த பொண்ணு இங்க வரும்ணு இது வரைக்கும் ஏண்டா சொல்லலை, இல்லேம்மா, இப்பத்தான் பிரண்டு போன் பண்ணி சொன்னான்.இறங்கி நம்ம வீட்டுல தங்கிட்டு காலையில போயிடுவா அப்படீன்னு சொன்னான், அதான் உங்கிட்ட சொல்லிட்டு கூப்பிட்டு வரலாம்னு..என்று இழுக்க, சரி சரி பத்திரமா கூட்டிட்டு வந்து சேரு, அம்மா போனை அணைத்தாள்.

அப்பா என்று மூச்சு வாங்கியவன், எங்க பேரண்ட்ஸ் கிட்ட சொல்லிட்டேங்க, நீங்க எங்க வீட்டுல இன்னைக்கு தங்கிட்டு காலையில போயிடுங்க, உங்களுக்கு நாளைக்கு கோயமுத்தூருல இண்டர்வியூ அப்படீன்னு சொல்லியிருக்கேன், நீங்க எங்க வீட்டுல கேட்டாங்கன்னா அதையே சொல்லிடுங்க,

இவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போதே நானைகந்து பேர் இவர்களை சுற்றி நோட்டமிட ஆரம்பித்து விட்டனர். இனிமேல் இங்கிருந்தால் தேவையில்லாத குழப்பம் வரும் என்று
நினைத்தவன் சரி ஏறுங்க என்று அவளை ஏற்றிக்கொண்டு விரைந்தான். அந்தப்பெண் சற்று நிம்மதி அடைந்தவள் போல் இருந்தாள்.

வாசலிலேயே அப்பாவும் அம்மாவும் நின்று கொண்டிருந்தனர்.வாம்மா என்று அழைத்த அம்மா, அடுத்த நொடியே ஏம்மா நேரத்துலயே கிளம்பி வரமாட்டியா? வயசுப்பொண்ணு
இந்நேரத்துக்கு வந்து இறங்கினா பாக்கறவங்க என்ன நினைப்பாங்க என்று ஆரம்பித்து விட்டாள். அப்பா, சரி சரி அந்த பொண்ணு சாபிட்டிருக்கமாட்டா ! சாப்பிட வச்சு சீக்கிரம் படுங்க நாளைக்கு இண்டர்வியூ இருக்கு, சொல்லிவிட்டு தன் அறைக்குள் சென்று விட்டார்.ராம் குமார் நீங்க என் ரூமல் படுத்துங்குங்க என்று சொல்லிவிட்டு முன்னறை ஹாலில் வந்து படுக்கையை விரித்து படுத்துக்கொண்டான். அவனது தலை வலி மாத்திரை போடாமலேயே காணாமல் போயிருந்தது. படுத்தவன் ஆச்சர்யப்பட்டுக்கொண்டான், அரை மணி நேரத்தில் என்னவெல்லாம் நடந்து விடுகிறது. இந்த பெண் யாரென்றே தெரியாது,அரை மணி நேரம் முன்னால் தனக்கு இப்படி ஒரு அனுபவம் கிடைக்கும் என்று தெரியாது. எப்படியோ அந்த பெண்ணை அந்த இக்கட்டிலிருந்து காப்பாற்றி விட்டோம் என்ற திருப்தியுடன் உறங்கிப்போனான்.

காலையில் இருவருமே ஒன்றாக கோவை செல்லும் பேருந்தில் ஏறினர். இவனே இருவருக்கும் பயணச்சீட்டு எடுத்துக்கொள்வதாக சொல்லி பின்புறம் ஏறி கொண்டான்.கோயமுத்தூர் வந்தவுடன் அந்த பெண் நன்றி கூறி விடை பெற்றாள். அவளை பற்றிய மேலும் விவரங்களை கேட்க ராம்குமாருக்கு இண்டர்வியூ செல்வதால் நேரமில்லாமல் போய்விட்டது. போன பின் நினைத்தான் அடடா போன் நம்பராவது வாங்கியிருக்கலாம்.

இண்டர்வியூ நடக்கும் கம்பெனிக்குள் நுழைந்தவுடன் அனைத்தும் மறந்து விட்டான். இவன் அழைப்பிதழ் காட்டியவுடன் முன்னால் உட்கார சொன்னார்கள். பேரை கூப்பிடும்போது வந்தால் போதும். என்று சொல்லி விட்டார்கள். காத்திருக்க ஆரம்பித்தான்.

அவனுடன் இப்பொழுது பத்து பேருக்கு மேல் வந்து சேர்ந்து விட்டனர். நேரம் ஓடிக்கொண்டிருந்தது. ஒவ்வொருவராக கூப்பிட ஆரம்பித்தார்கள். இவன் உள்ளே சென்றவன் ஆச்சர்யப்பட்டான். கேள்வி கேட்பதற்காக உட்கார்ந்திருந்த மூவரில் நேற்று இரவு இவன் வீட்டில் தங்கிய பெண் உட்கார்ந்திருந்தாள். மனதை பதில் சொல்ல தயார் படுத்தி கொண்டான். கேள்விகள் மூவரிடமிருந்தும் வர முடிந்தவரை பதில் தந்தான்.

எல்லோரையும் காத்திருக்க சொன்னார்கள். ராம்குமார் உட்பட மூவர் தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவித்தார்கள். தேர்வு பெற்றவர்களில் ராம் குமாரை தவிர மற்றவர்கள் சந்தோசப்பட்டன்ர். ராம்குமார் மெல்ல எழுந்து தேர்வு பெற்றவர்கள் பெயரை வாசித்தவரிடம் சென்று சார் தயவு செய்து தவறாக நினைத்து கொள்ளாதீர்கள், எனக்கு இங்கு வேலை செய்ய முடியாத நிலையில் இருக்கிறேன் என்றான். அவர் வியப்புடன் என்ன சார் உங்களை விட மத்தவங்க நல்லா பண்ணியும், உங்களைத்தான் எடுக்கணும்னு அகல்யா மேடம் ரொம்ப வற்புறுத்தினாங்க, நீங்க என்னடான்னா வேண்டாங்கறீங்க.அவங்களுக்கு என்னோட நன்றியை தெரிவிச்சுக்கறேன் சார், வர்றேன் சார். சுற்றியுள்ளோர் அவனை யார் இவன்? பைத்தியக்காரனாய் இருக்கிறான் என்பது போல் பார்த்தார்கள்.

அவன் செய்தது சரியா தவறா? என்பது அவனுக்கு புரியவில்லை, ஆனால் மனது மட்டும் கம்பீரமாய் உணர்ந்தது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *