காலை நேரப் பாடங்களை முடித்துக் கொண்டு மதிய உணவிற்குத் தயாராகிக் கொண்டிருந்த சீடர்களைப் பார்த்துக் குரு கேட்டார்,
“நீங்கள் மனிதர்களைப் போல் சாப்பிட விரும்புகிறீர்களா? அல்லது மிருகங்களைப் போலவா?’ என்றார்.
இதென்ன கேள்வி? நாங்கள் மனிதர்கள். விலங்குகளைப் போல் ஏன் சாப்பிட வேண்டும்?
“மனிதர்களைப்போல்தான்!’ என்று பதிலளித்தனர்.
“உங்கள் பதில் தவறு’ என்றார் குரு. சீடர்கள் திகைத்துப் போய் அவரிடமே விளக்கம் கேட்டனர். அதற்கு குரு, “ஒரு மிருகம், சிங்கம் என்று வைத்துக் கொள்ளலாம். ஒரு மானை வேட்டையாடுகிறது. தனக்கு வேண்டிய அளவு மட்டும் சாப்பிட்டுவிட்டு மீதி இரையை அங்கேயே விட்டு விட்டுப் போய்விடுகிறது.
மறுநாளைக்குக்கூடச் சேமித்து வைப்பதில்லை. அதன் பிறகு ஓநாய், நரி போன்ற விலங்குகள் வந்து சாப்பிடுகின்றன.
ஒவ்வொரு விலங்கும் தன் தேவைக்கு மட்டும் தின்றுவிட்டு மீதியை அப்படியே விட்டுச் செல்கிறது.
கடைசியில் எறும்பு போன்ற பூச்சிகள் மிச்சமுள்ள உணவைப் புசிக்கின்றன.
ஆனால், நாம்? பசியில்லாதபோதும் ருசிக்காகச் சாப்பிடுகிறோம்; வேண்டாதவற்றை வயிற்றில் திணிக்கிறோம்!’ சொல்லி முடித்தார் குரு.
சீடர்கள் உணவை வீணாக்குவது மகாபாவம் என்று உணர்ந்து தெளிவடைந்தனர்.
– கே. நிருபமா, பெங்களூரு (மார்ச் 2014)