மதிக்காததற்கு மரியாதை..!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: November 28, 2020
பார்வையிட்டோர்: 6,739 
 

மடியில் ஐந்து மாத பெண் குழந்தையுடன் கூனிக் குறுகி அந்த காவல் நிலையத்தின் மூலையில் அமர்ந்து கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தாள் பத்மினி.

எல்லாம் விதி. ஒரு பாவமும் அறியாத அவளை…..விடுதி சோதனைக்கு வந்த காவலர்கள்…’தப்பானவள்’என்று கருதி இழுத்து வந்து விட்டார்கள்.

லாட்ஜ் பொறுப்பாளரும் அறை வாடகை கொடுக்க வக்கில்லாதவள் இடத்தைக் காலி செய்தால் போதுமென்று விட்டுவிட்டார்.

இரவு 10 .00 மணிக்கு வந்தவளுக்கு மணி 2.00. ஆகியும் தூக்கம் பிடிக்கவில்லை.

எப்படிப் பிடிக்கும்…?

பிடித்த காவலர்களாவது இவளைச் சும்மா விட்டுச் சென்றார்களா..?

அதுதான் இல்லை.

“ஏட்டய்யா..! இவளைப் பத்தரமா பார்த்துக்கோங்க. நாங்க ரோந்துக்குப் போறோம்..”என்று அவரை இவளுக்குக் காவல் வைத்து விட்டுச் சென்றுவிட்டார்கள்.

காவல் நிலையத்தில் ஏட்டு, இவள். வெளிச்சத்திற்கு மின் விளக்குகள். மற்றப்படி ஒரு நாதிகள் இல்லை.

காவல் நிலையத்தில் கற்பழிப்பு !- இவள் நினைக்காமலேயே நெஞ்சில் நினைவு வந்தது. பயம் ! இவளுக்குள்…. திக்.. திக். திகில் .

சிறிது நேரத்தில் இவள் அருகில் காலடிச் சத்தம்.

தலை கவிழ்ந்து அமர்ந்திருந்தவள் திடுக்கிட்டு நிமிர்ந்து பார்த்தாள்.

ஏட்டு இனியன். வயசு 50.

மிரட்சியுடன் பார்த்தாள்.

“பயப்படாதே ! உன்னைப் பார்த்தா நல்லவளாய்த் தெரியுது” என்றவர் …..

“நான் சொல்றபடி செய்யிறீயா…?” கேட்டார்.

“எ…. என்ன…?” திகிலில் இவளுக்கு மூச்சு முட்டியது. வார்த்தைகள் தடுமாறியது.

“கையில மடியில இருக்கிற காசாக் குடுத்துட்டுப் போ. நான் உன்னை இங்கே கொண்டுவந்தவனுங்களுக்குக் குடுத்த சமாளிச்சுக்கிறேன் !” சொன்னார்.

இருந்திருந்தால் இவள் ஏன் அறை வாடகை கொடுக்க வக்கில்லாமல் அங்கே அடைந்து கிடக்கிறாள்..?

“இ….இல்லே சார்..” அவரைப் பரிதாபமாகப் பார்த்தாள் .

“ரோந்துக்குப் போன பசங்க ரொம்ப மோசம்மா…”

“சார். நான் அப்படிப்பட்டவள் இல்லே..” கெஞ்சினாள்.

“நான் குடும்பப் பெண்ணுன்னு நீ அங்கே கெஞ்சியும் உன்னை ஏன் இங்கே அழைச்சு வந்திருக்கானுங்க தெரியுமா..? உன்னிடம் பணம் காசு பிடுங்கிறது மட்டும் நோக்கமில்லே. நீ அழகா வேற இருக்கே, நாதியத்தும் வேற இருக்கிறே என்கிறதுனாலேயும்தான்!”

அவர் சொன்னதின் அர்த்தம் புரிய பத்மினிக்கு அடிவயிற்றில் அமிலம் சுரந்தது.

“ஐ…ஐயா..!”மறுபடியும் கெஞ்சலாகப் பார்த்தாள்.

“நீ சொன்னதை நான் நம்பறேன் பத்மினி. ஊரைச் சுத்திக் காட்டுறேன்னு அழைச்சி வந்து, அறையில் தங்க வச்சி, நகை, பணத்தை எல்லாம் பிடுங்கி, ஆளை நிற்கதியாய் விட்டுட்டுப் போய்ட்டான் உன் புருசன்ன்னு நீ சொன்னதை நான் நம்பறேன். ஆனா… ரோந்துக்குப் போயிருக்கிற பசங்க நம்பலை. வந்து கவனிச்சிக்கிறோம்ன்னு சொல்லாம சொல்லி உன் மேல ஒரு கண்ணு வச்சிப் போயிருக்கானுங்க. இன்ஸ்பெக்டர் வேற இல்லே. விடுப்புல வெளியூர் போயிருக்கார். அவனுங்க ரோந்து முடிச்சி வந்து உன்னிடம் வம்பு பண்ணினால் நான் ஒத்தை ஆளு. என் சொல் பேச்சையும் கேட்க மாட்டானுங்க. போலீஸ்காரனுங்களே கிரிமினலுங்க. அதான் நீங்க இப்போ அடிக்கடிப் பார்க்கிறீங்களே… ஆய் ஊய்ன்னா குற்றவாளிங்களை அழைச்சுப் போய் கைக் காலை உடைச்சி மாவு கட்டு போட வச்சி… கழிவறையில் வழுக்கி விழுந்துட்டான்னு கூசாம சொல்றானுங்களே. அப்படி தான் மாட்டிக்காதது மாதிரி எதுவேணுமின்னாலும் செய்வானுங்க. அதான் நீ காசு கொடுத்தே… நான் விட்டுட்டேன்னு சொல்லுவேன்.”சொன்னார்.

கேட்ட பத்மினிக்கு வயிற்றில் புளியைக் கரைத்தது. கூடவே…

‘இவர் சாதாரண போலீஸ் இல்லை. ஏட்டு. ! ரோந்து சென்றிருப்பவர்கள் இவர் அதிகாரத்திற்கு உட்பட்டவர்கள். பேச்சு, சொல்லுக்குக் கட்டுப்படவேண்டியவர்கள். உண்மையிலேயே தன் மேல் கரிசனம் இருந்தால்.. ஓடு கழுதை ! துரத்தி அனுப்பி விட்டு…எக்காரணம் கொண்டும் இரவில் ஒரு பெண்ணைக் காவல் நிலையத்தில் வைத்திருப்பது சட்டப்படி தப்பு. அனுப்பிவிட்டேன். சொல்லலாம்… மாறாக… பணம் கொடு சமாளிக்கிறேன் என்று சொன்னால் என்ன அர்த்தம்..? -இவளுக்குள் யோசனை ஓடியது.

“என்னம்மா பார்க்கிறே..? எனக்கு பைசா வேணாம். எல்லாம் அவனுங்களுக்குத்தான். ஆள்தான் கிடைக்கலை. காசாவது கிடைச்சுதேன்னு திருப்திப் படுவானுங்க..”சொன்னார்.

‘நியாயம். கையில் காசில்லையே..!!’

“உன்னை அழைச்சு வந்தவன் ஒரு நாள்ன்னு சொல்லி முன் பணம் கொடுத்து அறை வாடகை எடுத்தான். பத்து நாள் பைசா கொடுக்காம தங்கி இருக்கே. கேட்டால்… முதல் நாள் வந்து போன புருசன் எல்லாம் எடுத்துக் போயிருக்கான். இப்போ வருவான் அப்போ வருவான்னு சேதி சொல்றே. போனவன் வர்றா மாதிரி தெரியல. உன்கிட்ட கொடுக்க வழியும் இல்லே. வேறா வழியாத்தான் வசூலிக்கனும் போலிருக்கு..” என்று கட்டிட பொறுப்பாளர் இவள் வயிற்றில் கலவரத்தை ஏற்படுத்தி சென்ற இரவுதான்….

‘ரைடு’ என்று சொல்லி போலீஸ் காப்பாற்றியது என்று நினைத்தால்…இப்போது அதுவே எமனாக வந்து நின்று… புலியிடம் தப்பி சிங்கத்திடம் மாட்டிக் கதையாய்….நினைக்க இவளுக்கு நெஞ்சு படபடத்தது.

கடவுளே..! என்னைக் காப்பாற்று ! நெஞ்சில் கை வைத்தாள்.

தாலி தட்டுப்பட்டது.

மனைவி என்று மதிக்காமல், கையில் தன் வாரிசு – குழந்தை இருப்பது என்று கூட நினைக்காமல், பொறுப்பற்று…. எதற்கோ தன்னிடம் இருப்பதை எல்லாம் சுருட்டிக்கொண்டு ஓடினானே… அவன் பெயர் சொல்ல எதற்கு இது…? வெறும் ஆபரணம்! வேண்டாம்! மானம்தான் முக்கியம் ! – என்ற முடிவிற்கு வந்த..பத்மினி… சட்டென்று அதைக் கழற்றினாள்.

“என்னம்மா பண்றே..?” ஏட்டு பதறினார்.

“மானம் காக்க இதுதான்ய்யா இருக்கு. என்னை விட்டுடுங்க..!”என்று சொல்லி அவர் காலடியில் வைத்துவிட்டு குழந்தையுடன் வெளியே நடந்தாள்.

ஏட்டு இனியன் செய்வதறியாமல் திகைத்து…. அப்படியே ஆணி அடித்தாற்போல் நின்றார்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *